வள்ளுவர் உள்ளம்
வள்ளுவர் குரளை முதன்
முதல் கருத்தை யூன்றி வாசிப்பவர்கட்கு அவர் உலகில் காணுகின்ற உயிர்களிடத்து வைத்திருக்கும்
கரைகடந்த அன்பும் அருளும் தோன்றாமற்போகா. எவ்விடத்தும் அவர்தம் உள்ளம்
அருள் நிறைந்த உள்ளமாயும், அன்பு கனிந்த உள்ளமாயும் வளங்கக் காண்கின்றோம். அவர் வாய்மையின்
இலக்கணம் அமைக்கப் புகுமிடத்து,
"வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை யிலாத சொலல் "
எனக் கூறி யிருக்கிறார்.
சாதாரணமாக நம் நாட்டறிஞரிடம்,
வாய்மை எனப்படுவது யாது என்று கேட்போமேயானால் உள்ளதை உள்ளவாறு சொல்லுதல் என்று சுருக்கமாய்க்
கூறிவிடுவர். உள்ளதை உள்ளவாறு சொல்லுதல் என்றால் கண்டதைக் கண்ட படி சொல்லுதல் கேட்டதைக்
கேட்ட படி சொல்லுதல் உணர்ந்ததை உணாந்தபடி சொல்லுதல் ஆகும். ஆனால் நம பொய்யில் புலவர்
உள்ளதை உள்ளவாறு சொல்லுதல் வாய்மை யென்றும் உள்ளதை இல்லாதவாறு சொல்லுதல் பொய்மை என்றும்
இலக்கணம் கற்பிக்க ஒருப்பட்டாரில்லை. இவ்விடத்து அவர் தம் கருத்து வேறாக நற்கக் காண்கின்றோம்.
உள்ளதை உள்ளவாறு சொல்லுதல் மட்டும் வாய்மையன் இலக்கணம் என்றும் உள்ளதை இல்லாதவாறு சொல்லுதல்
மட்டுமே பொய்மையன் இலக்கணம் என்றும் கொள்ளுதல் தகாது என்பதை வலியறுத்துவதுடன் தான்
சொல்லுகின்ற சொல்லால் பிறர்க்கு யாதொரு திமையும் ஏற்படாதிருக்குமாயின் அதுவே வாய்மை
எனப்படும் என்று கூறினார். உள்ளதை உள்ளவாறு சொல்லுவதால் ஏதாவது ஒரு தீமை ஏற்படுமாயன்
அதுவாய்மையின் மாற்படாது. இதே போல உள்ளதை இல்லாதவாறு சொல்லுவதால் குற்றமற்ற ஓர் நன்மை
ஏற்படுமானால் அது பொய்மையன்று; அதுவும் வாய்மையாகக் கொள்ளப்படும் என்ற உண்மையை,
''பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின்''
என்பதனால் நன்கு விளக்கி யிருக்கின்றார்.
உதாரணமாக வலியிலும்
செல்வத்திலும் எளியான் ஒருவனை வலியான் ஒருவன் துரத்திச் செக்கிறான் என்று வைத்துக்
கொள்வோம்; சிறிது தூரம் செல்ல ஓரிடத்தில் இரண்டு பாதைகள் பிரிகின்றன. முன் சென்ற எளியான்
ஒரு பாதை வழியே ஓடுகிறான். பின் சென்ற வலியான் இரண்டு பாதைகள் பிரியும் இடத்திற்கு
வந்து அங்கு நின்றிருந்த ஒருவனை நோக்கி இதற்கு முன் அவ்விடம் வந்த ஒருவன் எவ்வழிச்
செல்கின்றான் என்று கேட்கின்றான். இவன்றன் தன்மையை உணர்ந்த அன்னியன் அவன் சென்ற வழியைக்
காட்டாது இவ்வழிச் சென்றான் என்று தவறான வழியைக் காட்டுகின்றான். இவன் இவ்விதம் சொன்னது
வாய்மையின் பாற்படுமோ? அல்லது பொய்மையின் பாற்படுமோ? வள்ளுவப் பெரியார் முன் இவ்வழக்கு
வருமானால் அவர் இது வாய்மையிடத்ததே என்று கூறிவிடுவார். வள்ளுவர் உலகில் நிலவுகின்ற
மக்களிடத்துக் கனிந்த அன்பு வாய்க்கப் பெற்றவரானதாலே அம்மக்களுக்கு வாய்மையின் பெயராலும்
யாதொரு தீங்கும் ஏற்படலாகாது என்றதோர் அருள் நிறைந்த கருத்துடையவராய் விளங்குகின்றார்.
இதுமட்டுமன்று; உலகில்
நிலவுகின்ற ஆற்றிவுடைய மக்கள் மாட்டுத்தானா இவ்வளவு அருளாளராய் விளங்குகின்றார்? இல்லை
இல்லை! – மற்றைய எண்ணில் கோடி சராசரப் பொருள்கள் மீதும் அவரது அன்பு கனிந்து இலங்கக் காண்கின்றோம்
"அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர் செகுத்து உண்ணாமை நன்று "
என்னும் அழகிய குறளில், "பரி மகம் நூறு இயற்றி வாணாசு, கன்னற் சுவைபோல்'' பெறுவதிலும்
ஒரு உயிரின் உயிரைக் கொள்ளுதல் தகாது என்பதை எவ்வளவு உறுதியாக வலியறுத்துகின்றார்.
இதுவன்றோ ஆழ்ந்த அருள்! ஆதவன்றோ கனிந்த அன்பு! இது மாத்திரமன்று; உலகம் போற்றும் பெரியரான
கிறிஸ்து பெருமான் " ஒருவன் உனது வலது கன்னத்தில் அடித்தால் உனது இடது கன்னத்தை
திருப்பிக்காட்டு' என்று கூறியிருப்பதை நம் கிறிஸ்தவ சகோதரர்கள் பெரிதும் பாராட்டுகின்றார்கள்.
உண்மையே. ஆனால் தமிழ் மகனான நான் என்ன சொல்லுகின்றே னென்றால் நமது பொய்யில் புலவர்,
"ஒருவன் உனது வலது கன்னத்தில் அடித்தால் அவனுக்கு உனது இடது கனைத்தை திருப்பிக்
காட்டி மறுபடியும் அடிக்கச் சொல்லி அவனது கை நோவும் படி செய்யாதே; அவன் அவ்விதம் ஒருகன்னத்தில்
அடித்தால் அவனது அடித்த கையை எடுத்து ஐயோ! கை நோவுமே! என்று தடவிக் கொடுத்து அக்கைக்கு
உன் அன்பான முத்தமிடு'' என்று கூறியிருக்கின்றார் என்று கூறுகின்றேன்.
"இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்துவிடல்''
என்ற அருமைத் திருக்குறளுக்கு இதைவிட வேறு என்ன பொருள் சொல்லக் கூடும்? இதுவன்றோ கனிந்த
அன்பு!
இதுகாறுங் கூறியவாற்றால்
எவ்வாறு வள்ளுவரது உண்மை அருள்நிறைந்த தாயும் அன்பு கனிந்ததாயும் விளங்குகின்றது என்று
பார்த்தோம். நிற்க, இனிமேல் அவர் அறம் நிரம்பி மறங்கடிந்த உள்ளம் வாய்ந்த பெருந்தகையாளராய்
விளங்குந் தன்மையை ஆராய்வாம்.
நன்னெறி போற்றித்
தீநெறி யகற்றி மக்கள் வாழவேண்டு மென்பதே பொய்யா மொழியாரின் கருத்தாகும். இதைப் பலவிடங்களில்
தம்முடையநூலுள் சுட்டிக் கூறியிருக்கிறார். தீயின் வெம்மையை விட தீயகாரியங்களின் கொடுமை
சகித்தற் கரியது என்பார்.
“தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப்படும்"
இது ஒன்றே வள்ளுவரின்
உள்ளப் போக்கைத் தெள்ளிதில் விளக்கும். வள்ளுவனாரின் வாழ்க்கை வரலாறே இவர் மறங்கடிந்த
மனத்தினர் என்பதற்குச் சாட்சியாகும். மனம் ஒன்றே எவ்விதக்காரிய நிகழ்ச்சிக்கும் நிலைக்களன்
ஆதலால்,
"மனத்துக்கண் மாசிலனாதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற."
என்று வலியுறுத்துகிறார்.
இதனால் மனத்துக்கண்
மாசின்மையே அறம் என்றும், மாசுடைமையே மறமென்றும் நன்கு உணரப்படுவதோடு இவரது அறம் நிரம்பிய
உள்ளத்தகைமையும் தெரிகிறது. அறம் என்பதின் இலக்கணம் யாது என்று புலவர்திருமகனை வினாவினால்,
விரைவில் மனமாசின்மையே அறம் என்று கூறிவிடுவார். அதற்கு விளக்கமாக.
"அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல்
நான்கும்
இழுக்கா வியன்றது அறம் "
என்று கூறினார்.
பிறர் ஆக்கங்கண்டு
மனம் பொறாமையாகிய அழுக்காறு, பிறரை வஞ்சித்து, அவர் பொருளைக் கரவால் கைப்பற்றக் கருதும்
அவா, தகாத காரணங்களால் மனத்தின் கண்ணே நிகழும் வெகுளி, இம்மூன்று தீய எண்ணங்களையும்
வெளிப்படுத்தும் தீச்சொல், இவற்றின் பயனாக எழும் தீச்செயல்கள் என்ற முறையில் மன மாசுடைமை
அமைந்திருக்கிறதென்றும், அம்மாசுடைமை நீக்கி, அறநெறியாம் பெருநெறி பிடித்தொழுகுவார்
உள்ளமே அறமுடைய உள்ளமாய் கருதப்படும் என்பதும் இவரது கொள்கை. பொய், கொலை, களவு, கள்,
காமம் என்ற ஐம்பெருந் தீமைகளைக் குறித்து அவர் எழுதும் காலத்து, அவரிடம் என்றுமில்லாத்
தனிவீரமும் தீரமும் விளங்கக்காண்கின்றோம்.
"பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று'
என்ற குறளில்,
பொய்யாமை என்றதோர்
செயல் செய்து விட்டால் வேறு அறம் செய்யத் தேவையில்லை என்று கூறிப் பொய்யாமை சிறந்த
அறம் என்று வலியுறுத்துகின்றார். இவ்விதம் பொய்யாமை என்னும் அறத்திற்கு ஓர் உயர்ந்த
நிலை கற்பித்து அதை ஓர் உன்னத பீடத்தில் அமைத்து வைக்கிறார். இதன் பின் கொல்லாமையை
வலியுறுத்த வேண்டி.
“ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று''
என்று கூறுகின்றார்.
பொய்யாமையே சிறந்த
அறம் என்று கூறி அதற்கு ஓர் உயரிய நிலை கொடுத்த பெரியார், அதன் பின் கொல்லாமையின் உயர்வை
நிலை நிறுத்த, கொல்லாமை ஒன்றே சீரிய அறமாகும்; அதற்கு அடுத்தபடியாகவே பொய்யாமையைக்
கொள்ள வேண்டும் என்று கூறுகின்றார். இதனால் அவர் முன்சொன்னதற்கும் பின் சொல்வதற்கும்
முரண்படுகின்றார் என்று கொள்ளற்க. அவர் உயிர்கள் மாட்டுக் கனிந்த அன்புடையாராதலின்,
கொல்லாமையே சிறந்த அறம் எனக்கொண்டார். பின்னும் கள்ளாமை என்பதை,
"உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறர் பொருளைக்
கள்ளத்தாற் கள்வே மெனல்”
என்று கூறி களவு என்பதை உள்ளத்தில் நினைத்தாலும் கூடத் தீது என்று அழுத்தமாக வலுயுறுத்துகின்றார்.
இதன் பின் கள்ளுண்ணாமை என்பதை,
''உண்ணற்க கள்ளை, உணில் உண்க சான்றோரால்
எண்ணப்பட வேண்டாதார்"
என்று கூறுகின்றார்.
இதில் இவர் காட்டுகின்ற
சொல் நயம் மிக மிகப் போற்றத்தக்கது. கள்ளை உண்ணற்க; என் வார்த்தையை மீறி உண்பீர்களானால்
உண்ணுங்கள்; ஆனால் பெரியோரால் எண்ணப்பட மாட்டீர்கள் என்று கூறுகின்றார்'' உலகம் என்பது
உயர்ந்தோர் மாட்டே " என்பது விதி. பெரியோரால் வண்ணப்படவேண்டாதார் என்பதால், நீங்கள்
உலகத்தாரால் இகழப்படுவீர்கள் என்றார். இவ்விதம் அறிவூட்டிய பின்னரும், எம் மகன் தான்
கள்ளுண்ணச் செல்வான்? இவ்விதம் வள்ளுவப் பெரியார் மறை பொருளுடன் மக்கள் மனது சிறிதும்
நோகாதபடி அவர்கட்கு அறிவுறுத்துகன வெல்லாம், அவர் மக்கள் மாட்டு வைத்திருக்கும் அன்பையன்றி
வேறெதை விளக்கும். இனி ஐம் பெரும்பாதகங்களிலும் கடையாய காமத்தின் காரணமாகப் பிறனில்
விழைதலை அவர் வெறுக்கின்ற தன்மையும், பிறனில் விழையாமையால் சான்றோர் அடையும் புகழையும்
"பிறர்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு.''
என்று கூறுகின்றார்.
அன்னியனுடைய மனைவியை
மனத்தினும் நினையாத பேராண்மை அறிவுடையோருக்குத் தருமம் ஆகும்; அம்மட்டோ? நிறைந்த நல்லொழுக்கமுமாகும்
என்று கூறும் அவரது சொல் நயம் வெகு அழகாய் அமைந்திருக்கின்றது.
நிற்க இவ்விதம்,
தீய செயல்களை வெறுக்க அதிகாரத் தலைப்பில் கூட, பொய் சொல்லல், கொலை செய்தல், களவு செய்தல்,
கள்ளுண்ணல், பிறர் மனை நயத்தல் என்ற பிரயோகங்களைக் கூட காணவில்லை. அவர் அறம் நிரம்பிய
உள்ளத்தாராயும், மறம் கடிந்த உள்ளத்தாராயும் விளங்குதலாலே தான் இப்பாதகங்களை நினைவுறுத்தும்
சொற்களைக் கூடச் சொல்லாமல், பொய்யாமை, கொல்லாமை, கள்ளாமை, கள்ளுண்ணாமை, பிறர்மனை விழையாமை,
என்று அறத்தின் சார்பாகக் கூறி, அவரது அறம் நிரம்பிய உள்ளத்தை மக்கட்கு எடுத்துக் காட்டுகின்றார்.
"என்னை முன் நில்லன்மின் தெவ்விர்
பலர் என்னை
முன்னின்று கல்நின்ற வர்''
என்ற குறளால் வள்ளுவரது வீரத்தன்மை உணர்ந்து மகிழ்தற்பாலது.
ஒருசேனாவீரன் பகைவர் தம் சேனையுட் புகுந்து, அங்குள்ள படைத்தலைவன்முன்னே, ''பகைவனே!
என்னுடைய தலைவனெதிரே போரேற்று நின்று அவன் வேல்பட்டு வீழ்ந்து கல்லினிடத்தே நின்ற வீரர்
பலராவர். நீர் அக்கல்லிலே நில்லாமல், உம்முடலிலே நிற்றலை விரும்பினால், என்னுடைய தலைவனெதிரே
போரேற்று நில்லாதே செல்லுங்கள்'' என்பது இதனாற் போந்த பொருள். இதுவன்றோ சிறந்த வீரம்!
கல்லினிடந்து நிற்றலாவது போரில் இறந்துபோன வீரர் உருவத்தைக் கல்லில் செதுக்கி வைத்தல்)
மற்றும்.
“கைவேல்
கள் நறொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்''
என்ற குறளால் வள்ளுவரது தீரத்தன்மை நன்கு புலனாகிறது. ''ஓர் படைவல்லான் தன் கையிலுள்ள
ஆயுதமாகிய வேலைத் தன்னை எதிர்த்து வந்த யானை மேல் எறிந்து விட்டு வருகின்ற யானைக்கு
வேல் தேடித் திரிபவன் பகைவரால் எறியப்பட்டுத் தன் மார்பிலுள்ள வேலைக் கண்டு மகிழ்ச்சியுற்று,
அவ்வேலைப் பிடுங்கி அவற்றின் மேல் பாய்வான்'' என்பது இதன் கருத்து. எனவே தன் மார்பில்
பகைவர் எறிந்த வேலிருப்பதைக் கூட அறியாமல், மிக்க கோபதோடு
திரிந்தானென்பது பெறப்பட்டது. இதுவன்றோ தீரம்!
''பேராண்மை என்ப தறுகண் ஒன்று உற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகு.''
பகைவர் மேல் மிக்க வலிமையோடு போர் செய்தல் ஆண்மையேயாயினும்,
மாற்றரசனுக்கு தாழ்வு வந்த விடத்து அவன் மீது இரக்கம் காட்டுதலே ஆண்மைக்கு அணியாகும்.
இத்தகைய ஆண்மையையும் அருளையும், கவியாசாகிய கம்பர் பெருமான், புவியரசாகிய இராமனிடத்துக்
காட்டுகின்றார். தன் படைக்கல மிழந்து தனியனாய் அகப்பட்ட இலங்கையர் கோனது வலியற்ற நிலையைக்
கண்ட இராமன், பகைவன் மீது பெருங்கருணை கொண்டு சொல்லிய பெருந்தன்மையைக் கம்பர் –
"ஆளையா உனக்கமைந்தன மாருதமறைந்த -
பூளையாயின கண்டனை யின்றுபோய்ப் போர்க்க
நாளைவாவென நல்கினனாகிளங் கமுகின்
வாளை தாவுறு கோசலை நாடுடை வள்ளல்''
என்று அழகாக எடுத்தமைத்தார். இதுவே மாண்ட அற நெறி! இதுவே அறப் போர்! இதுவே ஆண்மை! இதுவே
அருள்!
இனி வள்ளுவரது உள்ளம்,
எவ்விதம் காதல் கனிந்த உள்ளமாய் விளங்குகின்றது என்று ஆராய்வோம். பிணி மூப்பு
இவையின்றி, எப்பொழுதும் ஒரு தன்மையராய் உருவும், திருவும், குலமும், குணமும், பருவமும்,
அன்பும் ஒத்தவராய தலை மகனும் தலைமகளும், பிறர் கொடுப்பவும் அடுப்பவுமின்றி ஊழ்வினைப்
பயனாய்த் தாமே எதிர்ப்பட்டு காதலித்துக் கலக்கும் முறையையே களவியல்
என்றும், இங்கனம் கலந்த தலை மகனும் தலை மகளும் முறைப்படி மணம் புரிந்து இல்லறமாகிய
நல்லறத்தை இனிது நடத்தி இன்பம் துய்த்துப் பின் இவ்வுலக வாழ்வின் நிலையாமையைக் கண்டு
வீடுபெற முயல்வதைக் கற்பியல் என்றும் கூறும் தமிழ் நூல் வழக்குப்பற்றி, அகத்துறைக்
கருத்தைப் பெரிதும் விளக்குகின்றார். இவ்விதம் கூறுவதில், காதலர் கண்டு களித்தல், தலைமகன் காதல்
உரைத்தல், ஒருவருக்கொருவர் குறிப்புணர்தல், தலைமகள் உடம்படுதல், பிரிவுழி வருந்துதல்,
இல்லறம் நடத்தல், ஊடி உவகை பெறுதல் முதலிய செயல்களை அவர் செய்விய சொற்களில் அமைத்திருக்கும்
தன்மையே அவரிடம் காதல் எவ்வளவு கனிவு பெற்றிருக்கின்ற தென்பதைப் பெரிதும் காட்டுகின்றது.
உதாரணமாக ஒருசில செய்யுட்களைச் சொல்லுதல் மிகை யாகாது.
“யானோக்கும் காலை
நில நோக்கும் நோக்காக்கால்
தான்
நோக்கி மெல்ல நகும்''
"எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட விடத்து''
"செல்லாமை யுண்டேல் எனக்குரை மற்றுநின்
நல்வரவு வாழ்வார்க் குரை''
முதலிய குறள்கள் எவ்வளவு இன்பம் பயப்பனவா யிருக்கின்றன! இவற்றின் பொருளை விரிக்கிற்
பெருகும். நிற்க,
அவரது உள்ளம் சாதி,
சமயம் முதலில் சழக்கற்ற சால்புடை உள்ளமாய் விளங்குகின்றது. பிறப்புக் காரணமாக ஏற்றத்தாழ்வும்
வேற்றுமையுமில்லை என்னும் சிறந்த கருத்தை
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்''
என்ற அழகிய குறளால் நன்கு விளக்குகின்றார். மற்றும்,
“அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்''
என்ற குறளில் அந்தணர் என்பவர், பிறப்பால் உயர்வு கற்பித்துக் கொள்ளும் பார்ப்பனர் அல்லர்;
முப்புரி நூல் பூண்ட இரு பிறப்பாளரல்லர்; மனு ஸ்மிருதியில் உயர்ந்தோராகக் கூறப்படும்
பிராமணர் அல்லர் என்றும், அந்தணத்தன்மை பிறப்பினால் வருவதன்றென்றும், ஒவ்வொருவருடைய
குணத்தாலும் நடையாலும் வருவதென்றும் அழகாகக் கூறியிருக்கின்றார்.
வள்ளுவர் உள்ளம்
சமரச சன்மார்க்கம் ததும்பியது. சைவசமயப் பெரியோர்களெல்லாம் "எண்குணத்தான்'' முதலிய
சொற்பிரயோகங்களைக் காட்டி அவரைச் சைவர் என்பர். வைஷ்ணவர், "தாமரைக்கண்ணானுலகு",
“அடியளந்தான்'', “திரு'' என்னும் சொற் பிரயோகங்களைக் காட்டி அவரை வைணவர் என்பர். சமணரோ
"மலர்மிசை ஏகினான்'' என்பதனையும் “அவிசொரிந்து'' என்ற குறளையும் எடுத்துக் காட்டி
அவரைச் சமணர் மற்றும் கிறிஸ்தவரும் முஸ்லிம்களுங்கூட அவரைக் கிறிஸ்தவர் என்றும், மகம்மதியர்
என்றும் கூறும் காலம் கிட்டி விட்டது. ஆகவே, அவர் எம்மதத்தினர்? “எம்மதமும் சம்மதித்தினர்''
என்பதே சால்பு. (இதை விரிவாய் அறிய விரும்புவோர், ஆனந்தபோதினி 9 - ம் தொகுதியில் என்னால்
எழுதப் பெற்ற "திருவள்ளுவர் மத ஆராய்ச்சி'' என்னும் கட்டுரையை ஊன்றிப்
படித்துணர்வார்களாக.)
இன்னும் அவரது உள்ளம்
பாவலர் போற்றும் பண்புடை உள்ளமாகவும் அமைந்து கிடக்கின்றது. திருவள்ளுவர் காலத்தும்,
அதற்குப் பின்னும் எழுந்த பெருநூலியற்றிய ஆசிரியர்கள் எல்லாரும் நம் ஆசிரியர் பெருமானின்
வாக்கைப் பொன்னே போல் போற்றி 'அவர்தம் சொல்லையும் பொருளையம் தத்தம் நூலில் அழகுற அமைத்து
இன்புறுவாராயினர். மணிமேகலை என்னும் அணிகெழுநூலை யியற்றிய சீத்தலைச் சாத்தனாரென்ன!
நந்தாப் பொருண்மை மிகுந்த சிந்தாமணி யியற்றிய திருத்தக்கதேவர் என்ன! செம்பொருளின்பமே
தன் கவியின் இலக்கணமாம் எனக் கொண்ட கம்பர் பெருமானென்ன! இம்மாபெரும் புலவர்களனை வரும்,
நம் வள்ளுவப் பெருந்தகையாரின் சொல்லையும் பொருளையும் பொன்னே போல் போற்றியிருக்கின்றனரென்றால்
பிறபுலவர்கள் பொற்றுவதற்கு ஓர் ஐயமுண்டோ?
''தெய்வந் தொழா அள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை'' என்னும் குறளை,
''தெய்வம் தொழா அள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் பெருமழை என்றவப்
பொய்யில் பலவன் பொருளுரை தேராய்''
என்று
மணிமேகலை ஆசிரியர் அப்படியே எடுத்தாள்வதும்,
''வேட்ட பொழுதில் அவை அவை போலுமே
தோட்டார் கதுப்பினார் தோள்''
என்னும் குறளை,
''வேட்டார்க்கு வேட்டனவே போன்றினிய வேய்மென்றோள்
பூட்டார் சிலைநுதலாள் புல்லா தொழிவேனோ''
என்று சிந்தாமணியாசிரியர் எடுத்தாள்வதும்,
மற்றும்
"கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம்
உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்''
என்ற குறளை,
“எடுத்தொருவ ருக்கொருவர் ஈவதனின் முன்னே
தடுப்பது நினக்கழகி தோதகைவில் வெள்ளி
கொடுப்பதுவி லக்குகொடி யோயுனது சுற்றம்
உடுப்பதுவும் உண்பதுவும் இன்றிவிடு கின்றாய்''
என்றும்,
"நல்லா றெனினுங் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று''
என்ற குறளை,
"வெள்ளியை யாதல் விளம்பினை மேலோர்
வள்ளிய ராக வழங்குவ தல்லால்
எள்ளுவ என் சில இன்னுயி ரேனும்
கொள்ளுதல் தீது கொடுப்பது நன்றல்"
என்றும் கம்பர் பெருமான் எடுத்தாளுந்தன்மை நாம் மகிழ்வதற்குரியதாகும்.
இதுவரை கூறியவாற்றால்,
அவரது உள்ளம் ஒருவாறு விளங்குவதாகும். இத்தகைய பெரியார் எத்தகைய உயரிய நிலையில் இருந்திருக்க
வேண்டும் என்பதைச் சற்றே சிந்திமின்! ஆனால் அவர் தம்மை என்னிலையில் அமைத்திருக்கின்றார்
என்பது அவரது நூலே நன்கு விளக்கும். அவர் ஓரிடத்துச் சிறந்த அரசனாக விளங்குகின்றார்.
பின்னர் உயர்ந்த அமைச்சனாக விளங்குகின்றார். சிறந்த சேனாவீரராக விளங்குகின்ற அவர்,
தூய தன்மையுடைய தூதுவனாகவும் ஒப்பற்ற ஒற்றனாகவும் விளங்குகின்றார். ஓரிடத்துச் சிறந்த
உழவராக விளங்குகின்ற அவர், பிறிதோரிடத்து மாபெரும் மருத்துவனாக விளங்குகின்றார். காவலர்
உள்ளம் பாவலர் உள்ளமாக மாறுகின்றது. காதலர் உள்ளம் துறவியின் உள்ளமாக மாறுகின்றது.
இவ்விதமாக அவரது உள்ளம் பற்பல துறையிலும் சிறந்து கிடக்கும் தன்மை பெரிதும் போற்றத்தக்கது.
இது வரை வள்ளுவர்
உள்ளத்தை ஆராய்ந்த நாம் அவர் பிறமக்களின் உள்ளத்தை எவ்வாறு உணர்ந்திருக்கின்றர் என்பதும்
அதை நூலில் எவ்வாறு அமைத்துக் கூறுகின்றார் என்பதும் ஆராய்வாம். பிறர் உள்ளத்தை உணர்ந்து
அதன் தன்மையை உள்ளவாறே அவர் குறளில் அமைக்கும்பெற்றி, ஒரு பொருள் அல்லது ஒரு உயிர்
இவைகளின் உருவத்தைச் சித்திரிக்கும் சித்திரீகனின் அரும் பெரும் தினைவிட ஒப்புயர்வற்றதாய்
விளங்குகின்றது. இல்லறமாகிய நல்லறத்தில், மக்கட்பேறு என்றதோர் சிறந்த பேறு இல்லாவிட்டால், அவ்வில்லறம்
நல்லறமாகாது. அம்மக்கட்பேறு வாய்க்கப் பெறாத நம் பொய்யில் புலவர் அமைத்திருக்கும்.
"குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச் சொல் கேளா தவர் "
''அமிழ்தினு மாற்ற வினிதே தம்மக்கள்
சிறுகை அளாவிய கூழ்''
என்னுங் குறள்களால் வள்ளுவர் மக்களின் மனப்பான்மையை எவ்வாறு உணர்ந்து அழகாக எடுத்துரைக்கின்றார்
என்பது பெரிதும் நோக்கத் தக்கது. இக்கருத்தையே புறநானூற்றில்,
"படைப்புப் பலபடைத்துப் பலரோடு உண்ணு
முடைப்பெருஞ் செல்வ ராயினும் இடைப்படக்
குறு குறு நடந்து சிறுகை நீட்டி
இட்டுந் தொட்டும் கவ்வியும் துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்து
மயக்குறுமக்களை இல்லோர்க்குப்
பயக்குறை யில்லைத்தாம் வாழு நாளே''
என்பதால் விளங்கக் காண்கிறோம். ஆகவே இப்பொய்யில் புலவர், தாமே உணர்ந்து அனுபவியாதிருந்தாலும்,
மக்கள் உள்ளத்தை உணர்ந்து எவ்விதம்தெற்றென விளக்கும் ஆற்பல் வாய்ந்தவராயிருக்கின்றார்
என்பது வெள்ளிடை மலையாகும். இனி காதல் வயத்தனாய் ஒரு தலைவன், ஒரு தலைவியின் முன் எதிர்ப்பட்ட
காலத்து தலைவன் அவளை நோக்கி எவ்விதம் ஐயுறுகின்றான் என்பதை.
"அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும் என் நெஞ்சு''
என்று அழகாகக் கூறுகிறார். இது சாதாரணமாக காதல் வயத்தராய இருவர் மனத்திடை நிகழும் ஓர்
உணர்ச்சியே யன்றோ? அதிவீரராம பாண்டியன் நைடதத்தில்,
"வடிவமை நூலிற் கூறும் வனப்பெலா மமைத்து வேதன்
கடிமலர்ச் செங்கை வண்ணம் காட்டிய உருவு கொல்லோ
அடுகணை வேனிவான் இன்னமுது கோல் தோய்த்துத்
தீட்டும்
படிவமோ - பாவைதன் வடிவந்தானே"
என்று நளன், தமயந்தியைக் கண்டு ஐயுறுவதாக அமைத்திருக்கின்றார். மற்றும், இவ்விரு காதலரும்
ஒருவரை ஒருவர் நோக்கும் போது அவர்கள் கண்கள் ஒன்றை ஒன்று கவ்வுதலையும் அதனால் காதலர்
இருவரும் கருத்தொருமித்து ஆதரவு படுகின்றதையும் எவ்வளவு அழகாய் உணர்ந்து
"கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனு மில''
என்று கூறுகின்றார். இக்குறளை, காதல் வயத்தாராய பதிய தலைவனும் தலைவியும் என்றும் மறக்கும்
தினத்தினரோ? இதையே கவியரசாகிய கம்பரும்.
"எண்ணரு நலத்தினாளினைய நின்றுழி
கண்ணொடு கண்ணினை கவ்வி ஒன்றையொன்று
உண்ன வும் நின் பெறாது உணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்.”
என்று அமைத்திருக்கின்றார். ஆகவே கம்பர் பெருமான் இராமனிடத்தும் சீதையிடத்தும் விளக்குகின்ற
உள்ளத்தின் உயர்வை, நம்புலவர் பெருமகன், எவ்வாறு அருமையாய் உணர்ந்து அதை அழகாய்த் தமது
நூலில் அமைத்திருக்கின்றார் என்பது பெற்றாம். இவிடத்துச் சாதாரணமாக மக்களிடையே வழங்கப்பட்டு
வரும் ஓர் சிறு கதை ஞாபகத்துக்கு வருகின்றது.
திருக்குறளானது மதுரைக்
கடைச்சங்கத்தில் அரங்கேறிய தென்பதும், அக்காலத்து வள்ளுவரைச் சங்கப்புலவர்கள் எள்ளியதும்,
பின்னால் பொற்றாமரையிலிருந்த சங்கப்பலகை வள்ளுவர் குறளை மட்டுந் தன்னகத்தே கொண்டு எனைய
நூல்களை ஏற்காது திகழ்ந்ததும். பின்னர் சங்கப் புலவர் நாற்பத்தொன்பதின் பரும் சாற்றுக்
கவிகள் கொடுத்ததும் நாம் கர்ண பரம்பரையாய் அறிந்ததோர் கதையாகும். நிற்க இவ்விதம் வள்ளுவர்
நூல் அரங்கேறுங் காலையில், வள்ளுவர்,
''பாலொடு தேன் கலந்தற்றே பனிமொழி
வாலெயி றூறிய நீர்”
என்ற குறள் வந்தது. அப்போழ்து எல்லாம் வல்ல இறைவன் கவிக்கும் குற்றம் கற்பித்த பரமச்சரிய
விரதம் பூண்டிருந்த நக்கீரர் "இது சரியன்று; கேவலம்! ஒரு பெண்ணின் உமிழ் நீருக்கு
இவ்வளவு பெருமையா? இது யான் ஒப்பும் திறத்தின தன்று. இது கவிஞர் கூற்றே"
என்று எள்ளினார். இதையுணர்ந்த நம் செந்நாப்போதர் இதன் உண்மையை நக்கீரருக்கு உணர்த்தவேண்டி,
மதுரை நகரிலிருந்த பண்டாரவல்லி என்னும் தாசியிடம் சென்று இவரது குறையிரந்து நிற்கவும்,
அத்தாசியும் இவரது சொல்லை மெய்ப்பித்துத் தருவதாக வாக்களித்தனள். சில நாளில் பண்டாரவல்லியின்
சூழ்ச்சியால் நக்கீரரும் அவள் தன் மோக வலையில் வீழ்ந்து, காமக் கடலில் திளைத்து இன்புறுவாராயினர்.
பின்னர் பல நாட் செல்ல, சங்கப்புலவர்களை நினைந்து நக்கீரர் புரப்படவும், அப்போது, பண்டாரவல்லி
தன் பேரில் ஒரு கவியியற்றித் தரும்படி வேண்ட கீரர் அதற்கிசைந்து,
''வண்டுமொய்த் தனைய கூந்தல் மதனபண் டார வல்லி
கெண்டையோடொத்த கண்ணாள் கிளிமொழி வாயினுறல்
கண்டு சர்க்கரையோ தேனோ கனியொடு கலந்த பாகோ
அண்டர்மா முனிவர்க்கெல்லாம் அமுதமென் றளிக்கலாமே"
என்றதோர் செய்யுளை இயற்றி, தன் கைச்சாத்திட்டுக் கொடுத்தார்.
அதை வள்ளுவர் அவளிடம் பெற்று வந்து சங்கப் புலவர்களிடம் காட்டி தான் கூறிய குறளின்
உண்மையை நிலை நிறுத்தினார் என்று கூறுப. இக்கதை உண்மை யென்று யான் கூற முன்வரவில்லை.
எனினும், இக்கதை, நம் வள்ளுவப் பெரியார் மக்கள் உள்ளத்தை யின்னவாறு உணர்ந்திருக்கின்றார்
என்பதை நாம் அறிய ஓர் சிறந்த சான்றாக அமைகின்றது. கதையைக் கொள்ளுவார் கொள்ளுக தள்ளுவார்
தள்ளுக.
இதுவரை கூறியவற்றால்,
வள்ளுவரது உள்ளம் எத்தன்மையில் அமையப் பெற்றிருக்கிறதென்பதும், மற்றும் அவர் மக்கள்
மன நிலையையே தன் கவி நலமாகக் கொண்டு நூலியற்றும் பெற்றி வாய்ந்தவரென்பதும் பெற்றாம்.
ஆகவே நான் எடுத்துக் கொண்ட வள்ளுவர் உள்ளமென்னும் பொருள்ஒரு சிறிது விளக்கமுறுவதாகும்.
இன்னும், பெரியார் பலரும் அவரது நூலைத் துருவி ஆராய்வார்களாயின் அதில் புதுப்புதுக்
கருத்துக்கள் பொன்னே போல் புதைந்து கிடக்கக் காண்பார்கள் என்று கூறி என் பணியை முடிக்கின்றேன்.
(தொ. மு. பாஸ்கரன்.)
ஆனந்த போதினி – 1928, 1929 ௵ -
நவம்பர், டிசம்பர், மார்ச்சு, ௴
No comments:
Post a Comment