Showing posts with label சீர்திருத்தத்திற்கு அடிப்படை. Show all posts
Showing posts with label சீர்திருத்தத்திற்கு அடிப்படை. Show all posts

Monday, August 31, 2020

 

சீர்திருத்தத்திற்கு அடிப்படை

மு. வரதராசன், B. O L., M. 0. L.

 

மூட நம்பிக்கைகளும் கண்மூடிப் பழக்க வழக்கங்களும் எல்லா நாட்டு மக்களிடத்திலும் காணப்படுகின்றன. அவற்றை ஒழித்தல் வேண்டும் என்று அந்த அந்த நாட்டு அறிஞர்களும் முயன்று வந்திருக்கின்றார்கள். ஆனால் எந்த அளவில் வெற்றி பெற்றிருக்கின்றார்கள் என்று ஆராயும் போது, முயற்சிக்கு ஏற்ற பயனில்லை என்று கூற வேண்டியுள்ளது. இதனால் மூட நம்பிக்கைகளையும் கண்மூடிப் பழக்க வழக்கங்களையும் ஒழித்தல் இயலாது என்பது கருத்தாகக் கொள்வதற் கில்லை.

 

உலகத்தில் தோன்றிய உயிர் வகைகளுள் கர்க்கை குருவி முதலானவற்றின் பறக்கும் ஆற்றலிலோ ஒலிக்கும் முறையிலோ ஒரு முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதர்கக் காணவில்லை. உலகவரலாற்றிற்கு எட்டிய மிகப் பழங்காலத்தில் அவை பறந்த அவ்வாறே இன்னும் பறக்கின்றன; அன்று ஒலித்தவாறே இன்றும் ஒலிக்கின்றன. யானை, மான் முதலிய விலங்குகள் அன்று வாழ்ந்த வாறே இன்றும் வாழ்கின்றன. இவ்வாறே மற்ற உயிர் வகைக ளிடத்தும் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக முன்னேற்றம் ஒன்றும் காணவில்லை. ஆனால் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்று இன்று மக்கள் வாழவில்லை. அன்றிருந்த கருவிகள் வேறு; இன்றுள்ள கருவிகள் வேறு; அன்றிருந்த உடல் நிலை வேறு; இன்றுள்ள உடல் நிலை வேறு. அன்றிருந்த மன நிலை வேறு; இன்றுள்ள மன நிலை வேறு. ஆதலின், மக்கள் சீர்திருத்தத்திற்கு உரியவர்கள்; வளர்ச்சியும் முன்னேற்றமும் இல்லாமல் தேங்கும் உயிர்வகை அல்லர். சீர்திருத்த நோக்கம் கொண்ட பெரியோர் முயற்சி பயன் படாமற் போகவில்லை; பயன்பட்டே வந்திருக்கின்றது. ஆனால் அவர்கள் முயற்சி பெரிது; 'பயன் சிறிது எனக் கூறலாம்.

 

சீர்திருத்தத்தினைத் தொடங்கும் பெரியோர் சிலர். அதனைத் தொடர்ந்து நடத்துவோர் பலர். தொடங்கியவர் காலத்தில் இருந்த பயன் தொடர்ந்து நடத்தியவர் காலத்தில் மாறிவிடுகின்றது. புத்தர், ஏசுநாதர், முதலானவர் வாழ்க்கையில் இந்த உண்மையை உணரலாம். தொடங்கும் பெரியோர் பரந்த தூய அன்பு உடைய்வர்கள். தொடர்ந்து நடத்துவோர் அத்தகைய அன்பு கொள்வதில்லை; அவர்கள் தங்கள் முயற்சிக்கு அடிப்படையாக வேண்டுவது தூய அன்பு என்பதை உணராமல் தவறுகின்றார்கள்.

 

மூட நம்பிக்கைகளை ஒழிக்க வேண்டும் என்ற சீர் திருத்த உள்ளம் வாய்க்கப் பெற்றவர்கள், இன்றும் எவ்வளவேர் முயற்சி செய்கின்றார்கள். அவர்களில் பரந்த நோக்கம் உடைய்வரும் உள்ளனர். குறுகிய நோக்கம் உடையவரும் உள்ளனர். இவர்கள் நோக்கத்தில் ' உள்ள வேறுபாட்டை எவ்வாறு அறிதல் கூடும்! இருவரும் செய்யும் முயற்சியில் தக்க வெற்றி பெறுவது இல்லை. அவர்கள் செய்யும் சீர் திருத்தத்தை உலகம் விரைந்து ஏற்றுக் கொள்ளுவதில்லை. தங்கள் முயற்சி வீணாவது கண்டு மனமாற்றம் அடைகின்றார்கள். அந்த மனமாற்றத்தால் தான் அவர்கள் நோக்கங்களின் வேறுபாட்டை உணரலாம்.

பரந்த நோக்கம் உடையவர்கள் மனம் எவ்வாறு மாறுகின்றது? உலக நன்மைக்காக உலகத்தைத் திருத்தவேண்டும் என்ற முயற்சி பயன்படாமல் போகவே அவர்கள் சோர்வடைகின்றார்கள். "எவ்வளவு பாடுபட்டும், எவ்வளவு நல்ல முறையில் பல உண்மைகளை எடுத்துச் சொல்லியும் மக்கள் கேட்க வில்லையே. நம் சுற்றத்தார் மனத்தையும் திருப்ப முடியவில்லையே. எந்தக் காலத்தில் எந்த முறையில் தான் இவர்களைத் திருத்துவது? உலகம் இப்படித்தான் இருக்கும் என்று சும்மா இருத்தலும் முடியவில்லையே" என்று சோர்ந்து நிற்கின்றார்கள். சமயம் வாய்த்த போதெல்லாம் சீர்திருத்தத் தொண்டைத் தொடர்ந்து செய்கின்றார்கள்.

 

குறுகிய நோக்கம் உடையவர்கள் மனமோ வேறு வகையாக மர் றுகின்றது. “நாம் இவ்வளவு சொல்லியும் இவர்கள் மூட நம்பிக்கைகளை விட்டபாடில்லை. இவ்வாறு நல்ல முறையில் சொல்வதால் ஒரு பயனும் இல்லையென்று தெரிகிறது. இனி இவர்களை இகழ்ந்து பேசவேண்டும். இவர்கள் வாழ்விற்கு உதவி செய்தல் கூடர்து. வேண்டியபோது இடையூறும் செய்தல் வேண்டும். இவர்களைச் சார்ந்தவர்களுக்கும் நன்மை செய்தல் கூடாது இவர்களோடு சார்ந்து வாழ்தலும் தகாது. இவர்களை ஒதுக்கித் தள்ளல் வேண்டும்" என்று தமக்குள் பேசி, பிறகு பேசியவாறே அன்பின்றி வெறுப்பு மிக்கு வாழவும் முற்படுகின்றார்கள்.

 

பரந்த நோக்கம் உடையவர்கள் தங்கள் முயற்சி நிறைவேறாத போது சோர்ந்து நிற்கின்றார்கள்; பெர் மக்கள் நிலையைக் குறித்து இரங்குகின்றார்கள்; சோர்வுக்கு இடையே இயன்ற வரைக்கும் தொண்டும் செய்கிறார்கள். ஆனால் குறுகிய நோக்கம் உடையவர்களோ வெறுப்புக் கொள்ளுகின்றார்கள். மக்களைப் பற்றிய நல்ல எண்ணத்தை இழக்கின்றார்கள். அவர்கள் வாழ்க்கையை இகழ்ந்து எள்ளுகின்றார்கள். முன்னவர் இறுதி வரைக்கும் மக்களிடத்தில் அனபு கொண்டிருக்க, பின்னவர் மனமோ அந்த அன்பைக் கைவிடுகின்றது. மக்களிடத்தில் அன்புகொண்டு தன்னலம் அற்றுத் தொண்டு செய்தலே முதலி லிருந்து நோக்கமாகக் கொண்டவர்கள் முன்னவர். இறுதி வரைக்கும் தன்னலம் அற்ற அந்த அன்பு நிலைக்கின்றது. ஆனால் தன்னலத்தால் பிறந்த அன்போ குறுகிய எல்லை புடையது; தான் விரித்த வலைக்குள் தானே கட்டுண்டு மாயும் தன்மையது;
 ஆதலால் பரந்த நோக்க மில்லாதவர் தொடங்கிய தொண்டு வெறுப்பியக்கமாக முடிகின்றது.

 

தன்னலக்காரர் தங்கள் குறையை உணர்வது இல்லை போலும். நெருங்கிப் பழகினால் அவர்களிடம் நுண்ணிய மூடநம்பிக்கைகள் குடிகொண்டிருத்தலைக் காணலாம். ஒரு காரணமும் இல்லாமல் ஒரு நிறத்தைப் போற்றுதல் மூட நமபிக்கை அன்றோ? அவ்வாறே குறித்த ஓர் இடத்தைப் புகழ்ந்து அதனையே விரும்புதல் மூட நம்பிக்கையன்றோ? இதுபோன்ற சிறுசிறு மூட நம்பிக்கைகள் எண்ணிறந்தவற்றை அவர்களிடத்தில் காணலாம். 'இரும்புப் பிடியுள்ள குடையைப் பார்த்தாலும் எனக்கு வெறுப்புத் தோன்றுகின்றது.'' என்பார் ஒருவர். “செருப் பணிந்து நடக்கின்ற ஒலியைக் கேட்பதற்கும் எனக்குப் பிடிப்பதில்லை'' என்பார் மற்றொருவர். "காது வெளுத்த நாய் கனவிலும் வேண்டாம்" என்பார். மற்றொருவர். “உண்ணும் வேளையில் காக்கை கரைதலைக் கேட்டால் எனக்கு எப்படியோ இருக்கிற" தென்பார் இன்னொருவர். இவர்களுள் ஒவ்வொருவரும் பிறர் மனப்பான்மையை வெறுத்துப் பழிக்கின்றனர்.

கருத்து வேறுபாட்டுக்கு இடம் தருதல் நாகரிகம். ஆனால் தாம் சொல்லும் கருத்தைப் பிறர் ஏற்றுக் கொள்ளாவிடில் அவர் மேல் சினங் கொண்டு பகை வளர்க்கும் மனப்பான்மை நாகரிகம் ஆகுமோ? எல்லா நாடுகளிலும் சீர் திருத்தம் செய்ய முனைகின்ற இளைஞர்கள் அத்தகைய மனப்பான்மை உடையவர்களாகவே இருக்கின்றார்கள். தாங்கள் சொல்லுவதை உலகம் கேட்க வேண்டும் என்ற ஆர்வத்தால், உலகத்தில் கருத்து வேற்றுமை உண்மையையே மறந்து விடுகின்றார்கள். தங்கள் சொல்லைக் கேட்டு ஆம் என்று தலை அசைக்காதவர்களை மூடர்கள் என்றும் கோழைகள் என்றும் தூற்றுகின்றார்கள். இவர்கள் கருத்துலகத்தில் சீர் திருத்தம் பெறாத இளைஞர்கள் மூட நம்பிக்கை இவர்களிடத்தில் வேறு வடிவில் வீற்றிருக்கின்றது. இவர்களிடத்தில் அடிக்கடி வழங்குகின்ற சில சொற்களும் பயில்கின்ற சில செயல்களும் நாளடைவில் இவர்கள் மனத்தில் செல்வாக்குப் பெறுகின்றன. அந்தச் சொற்களையும் செயல்களையும் கேட்டபோதும் கண்ட போதும் இவர்களுக்கு ஒருவகை மகிழ்ச்சி; எழுச்சி. அவற்றைக் கேளாத போதும் காணாத போதும் ஒருவகை வெறுப்பு; சோர்வு. இறுதியில் அவை என்ன ஆகின்றன? அந்தச் சொற்கள் மந்திரங்களாக, அந்தச் செயல்கள் சடங்குகளாக அவ்வளவு போற்றப்படுகின்றன. ஆனால், மந்திரங்கள் என்றும் சடங்குகள் என்றும் அவற்றிற்குப் பெயரிடுவது இல்லை. இது தான் வேறுபாடு.

 

கருத்து வேற்றுமையை மதித்தலே பெரிய சீர் திருத்தம். இச் சீர்திருத்தம் செய்துகொள்ள அறிஞர்கள் பலரால் இன்னும் இயலவில்லையானல், அறியாமை நிறைந்த மக்கள் வாழ்க்கையை சீர் திருத்துவது எங்கே? அறிந்தவர் அறியாதார் என்னும் இருவகையா ரிடத்திலும் உள்ள தன்னலமே சீர் திருத்தத்திற்குத் தடையாக நிற்பது. தன்னலம் அற்றால் மூட நம்பிக்கை ஒழியும்; சீர் திருத்தம் வரும். தன்னலமே மூட நம்பிக்கையின் அடிப்படை. பரந்த அன்பே சீர் திருத்தத்தின் அடிப்படை.

 

ஆனந்த போதினி – 1944 ௵ - அக்டோபர் ௴