Sunday, September 6, 2020

 

முதலுக்கே மோசம்

 

நமது அன்பார்ந்த இந்து சகோதர சகோதரிகளே! இந்த விஷயத்தைத் தயவு செய்து சிரத்தையோடு வாசிக்க வேண்டுமாய் உங்களைப் பிரார்த்திக்கிறோம். நமது வியாசத்தின் தலைப் பெயரைக் காணும் போது "ஏ என்ன அப்படிப்பட்ட பிரமாதம் - விபரீதம் – நேர்ந்து விடப் போகிறது? " என்று கருதுவீர்கள். ஆனால் அவ்வார்த்தைகள் அளவு மீறியாவது கொஞ்சத்தை யதிகமாகவாவது கூறுகிறவை யல்ல. இந்துக்களாகிய நமக்கு அதனினும் பிரமாதமான தும் விபரீதமானதும் வேறொன்று மில்லை.

 

இந்துக்களாகிய நமக்கு எது யாவற்றினும் - உயிரினும் - சிறந்தது? நமது முன்னோர்கள் தங்கள் சொத்து, சுதந்திரம், பிராணன், எவைபோவதாயினும் திரணமாக மதித்து எந்த ஒன்றை மட்டும் விடாமல் காப்பாற்றினார் கள்? மதத்தையே என்று சிறு குழந்தையும் கூறும். மதமே நமக்குக் காணி பூமி பொருள் உயிர் யாவற்றினும் சிறந்தது. என்றும் அழியமுடியாத இயற்கையான சத்தியத்தையுடையதும், உலகில் இப்போதுள்ளவும், இனித்தோன்றக் கூடியனவுமாகிய எல்லா மதங்களுக்கும் அஸ்திவாரத்தையுடையதும் இந்து மதமே. இதில் விவரிக்கப்படாத ஒரு மதம் உலகில் இல்லை. இனியிருக்கவு முடியாது. ஒப்புயர்வற்ற நமது மதமே நமது ஒற்றுமைக்கு முதல் ஆதாரமாக விருக்கிறது. இந்துக்கள் இவ்வுலக போக பாக்கியங்களை இகழ்ச்சியாகக் கருதி, ஆன்மார்த்தத்தையே அடைய வேண்டிய அவசியப் பயனாகக் கருதுவோர். ஆன்மலாபத்தின் முன் மூவுலகையும் ஏகசக்கிராதிபதியாய் ஒரு குடைக்கீழ் ஆளும் இராஜ போகத்தையும், பொன்னாட்டிற்கிறையாகிய இந்திரன் போகத்தையும் ஒரு துரும்பாக மதிப்பவர்கள்.

                                                        

''சங்கநிதி பத்மநிதி இரண்டுந் தந்து

தரணியொடு வானாளத் தருவ ரேனும்
மங்குவா ரவர்செல்வ மதிப்போ மல்லேம்
*      *      *      *     ''

என்ற மனவுறுதி யுடையவர்கள்.

 

இந்துக்களாகிய நமக்கு யாவற்றினும் முக்கியமானதான நமது மதத்திற்கே மோசம் வரும் போலிருக்கிற தென்பதே இப்போது நாம் எழுதத் துணிந்த விஷயம். நமது நாட்டிலுள்ள தாழ்ந்த வகுப்பாரில் அனேகர் அன்னிய மதக் குழியில் விழுந்து விட்டார்கள் என்பது யாவரு மறிந்த விஷயம் நாமோ நமது மதத்தை யொருவர்க்கும் வலியப் போதித்து நமது மதத்தில் வந்து சேரும்படி அழைப்பதில்லை. பிறரோ பொருட் செலவு செய்து, பலவித உலக ஆசைகளைக் காட்டி நம்மவரை மயக்கித் தங்கள் மார்க்கத்திற்கு இழுத்துக் கொள்ளும் வேலையில் மிக்கசிரத்தை யெடுத்துக் கொள்கிறார்கள். அத்தொழில் நமது நாட்டில் ஏறக்குறைய எங்கும் ஒரு நிதானமாக நடந்து வருகிறது.

இப்போது அமெரிகாவிலுள்ள புரொடஸ்டான்ட் பாதிரிமார்களெல்லாம் கூட்டம் கூடி பெருந் தொகையான பணத்தைச் செலவு செய்து ஐந்து வருடங்களுக்குள் இந்தியாவிலுள்ள இந்துக்கள், புத்தர், சமணர், மகம்மதியர் முதலிய எல்லாரையும், இன்னும் உலக முழுமையுமே, கிறிஸ்தவர்களாக்கிவிடத் தீர்மானித்து அதற்காகப் பெருமுயற்சி எடுத்துக் கொள்கிறார்களென்று அறிகிறோம். இச் சென்னையில் வசிக்கும் செல்வச்சீமானாகிய லாட் கோவிந்ததாஸ் அவர்கள் இவ்விஷயத்தை யறிந்து மனந்தாளாது உடனே அது விஷயமாகத் தக்க ஜாக்கிரதை யெடுத்துக் கொள்ளும்படி ஹிந்து பத்திரிகையின் மூலமாக நம்மவர்க்கு அறிவிக்கிறார். ஜூலை மாதம் 13 வெளிவந்த ஹிந்து பத்திரிகையில் அவர் எழுதியுள்ள விஷயத்தை அதன் தலையங்கத்தோடு சுருக்கி இங்கு வரைகிறோம்: -
          

“இந்து மதத்திற்குப் பெரிய ஆபத்து"

 

உலகத்திலுள்ள எல்லா மதத்தினரையும் கிருஸ்தவர்களாக்கிவிட வேண்டுமென்று அமெரிக்காவில் பிரமாதமான முயற்சி செய்யப்பட்டு வருகிறதென்றும், அதற்காக அங்கிருந்து ஒரு பெருங் கூட்டமான பாதிரிமார் இந்தியாவிற்கு வரப்போகிறார்களென்றும் கொஞ்ச நாட்களுக்கு முன் பத்திரிகைகளில் கூறப்பட்டிருந்த விஷயத்தைப் பொறுப் பாளிகளான இந்துக்கள் உணர்ந்தார்களோ வென்று நான் வியப்படைகிறேன். உலகிலுள்ள எல்லா மதஸ்தர்களையும் ஐந்து வருடங்களுக்குள் கிருஸ்தவர்களாக்கி விடவே பெரும் போர் போன்ற ஒரு முயற்சி அமரிகப் பாதிரிமார்களால் செய்யப்படுகிற தென்றும், அதற்காக வேலை செய்ய 30 வகுப்புகளைச் சேர்ந்த 1 கோடி 95 இலட்சம் கிருஸ்தவர்கள் தங்கள் முயற்சிகளை யொன்று சேர்த்து இதற்கு உழைக்கப் போகிறார்களென்றும் கூறப்படுகிறது. வேலை செய்யும் முறைமையும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறதாம். இதற்காக இருபது கோடி அறுபது லட்சம் ரூபாய் செலவிற்கென்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தியாவிலுள்ள இந்துக்களை மட்டு மல்ல, மஹம்மதியர், புத்தர், சமணர், யூதர், ஸொராஸ்ட்ரியர் (அக்னி யுபாசகர்) யாவரையும் கிருஸ்தவராக்கத் தீர்மானித் திருக்கிறார்கள்.

 

நம்மவரில் அனேகர் இந்த ஆபத்தை யறியாமலே யிருக்கிறார்களென்பது விசனிக்கத் தக்கதாக விருக்கிறது. அது நேரிடும் போது அதைத் தடுக்கவும் நாம் ஆயத்தமாக இருப்பதில்லை. அதைத் தடுப்பதற்கு நாம் கொஞ்சங்கூட ஆயத்தமாக இல்லாத வரையில் பாதிரிகள் செய்யும் இப்பிரம்மாண்டமான முயற்சி அஞ்சத்தக்கதே யென்று நான் கருதுகிறேன் தாழ்ந்த வகுப்பைச் சார்ந்த கல்வியில்லாத ஜனங்களுக்குப் பெருந்தன்மை வாய்ந்த நமது மதக்கொள்கைகள் தெரியாமலிருப்பதால் அவர்களை நமது மதத்தை விட்டு இழுத்துக் கொள்வது பாதிரிமார்களுக்குச் சுலபமாகும். இந்து மதம் ஒவ்வொரு இந்துவுக்கும் விலை மதிப்பில்லாத ஒரு சிறந்த பொக்கிஷமாகும். இந்துக்களுக்கு அவர்கள் மதமே மற்ற யாவற்றினும் சிறந்தது

 

ஆயினும் மதத்தைப் பரவச் செய்ய அவ்வளவு பணம் என்னத்திற்கு என்பது நமக்கு விளங்கவில்லை. மதம் மனப் பூர்வமான பிரியத்தையும், சத்தியமான நம்பிக்கையையும், பக்தியும் சன்மார்க்கக் கொள்கைகளும் பொருந்திய மனப்பற்றையும் முழுதும் பொறுத்தது. நமது இந்து மதம் பணசம்பந்தத்தை வேண்டாத பெருந்தகைமை வாய்ந்தது. நமது மதவிஷயத்தில் பண சம்பந்தமான விவகாரமே கிடையாது. ஆகையால் நமது மதத்திற்கு 20 கோடி பைசாக்கள் கூட வேண்டுவதின்றாம். நமது மதத்திற்கு வேண்டியது மனிதனுடைய ஆன்மலாபத்திற்கு அவசிமான மெய்ப்பக்தியும், மனப் பூர்வமான நம்பிக்கையும், உலக சம்பந்தமான இழிவான இச்சைக் கலப்பில்லாத அன்புமே யாகும்.

 

ஒருசமயம் பலவிதமான (ஆசை காட்டும்) தூண்டுதல்களால் 5 - கோடி பஞ்சமர்கள் தங்கள் மதத்தை விட்டுக் கிருஸ்து மதத்தில் சேரும்படி போதிக்கப்படலாகும். ஆனால் பஞ்சமர்களுடைய மனச்சாக்ஷியில் தங்கள் பூர்வீக மதமான பரிசுத்த இந்து மதத்தின் சுடர் பிரகாசிக்கும்படி தூண்டி விடப்பட்ட போது, தாங்களும் இந்துக்கள் என்ற ஒரு பெரிய உன்னதமான ஜாதியைச் சேர்ந்தவர்களே யென்று அவர்கள் உணரத் தொடங்கியபோது, ஒரு பக்கம் பிராமணரும் கூடிய மற்ற இந்துக்கள் கல்வியால் அவர்களை உயர்த்தி இலௌகீகத்தில் மேலான நிலைமைக்குக் கொண்டுவரப் பிடிவாதத்தோடு முயற்சி யெடுத்துக் கொண்டு உழைக்கும் போது, மற்றொரு பக்கம் அவர்களுக்கு மத போதனையும் ஞான போதனையும் செய்ய முன் வந் திருக்கும் இக்காலத்தில், அற்ப ஆசைகளாகிய தூண்டுதல்களுக்கு மயங்கி ஒப்புயர்வற்ற தங்கள் மூதாதைகளின் அனாதி மதத்தை அவர்கள் கைவிடத்துணியமாட்டார்க ளென்பது நிச்சய மென்று நம்புகிறோம். சுத்த அனாதைகள், தீநெறியால் ஜனசமூகத்தினின்று விலக்கப்பட்டவர்கள், எதற்கு முதவாப் பயனிலிகள், இத்தகையோர் சிலர் தம்மதத்தை விட்டுச் சென்றால் செல்லலாகும்.

 

பஞ்சம சகோதரர்களில் பலர் இப்போது கல்வியிற் றேர்ச்சி யடைந்து துரைத்தனத்தில் பொறுப்பான பதவிகளை வகித்திருப்பதோடு, நகரச்சங்கங்களிலும் (முனிஸிபாலிடி) தாலூக் போர்ட், ஜில்லா போர்ட், சட்டசபை (லெஜிஸ் லெடிவ் கௌன்ஸில்) களிலும், அவயவிகளாயிருந்து வருகிறார்கள். பூரண சுயாதீனமான வழியில் ஜீவிக்கும் அத்தகையோர் இந்தப் பாதிரிமார்களின் போதனைக்குச் செவி கொடுக்கும் அவ்வளவு மன வுறுதியற்றவர்களாய் ஒரு போதுமிரார்கள். அதோடு தம்மினத்தைச் சேர்ந்த மற்ற சகோதர சகோதரிகள் அன்னிய மதக் குழியில் விழாமல் இருக்கும் வண்ணம் தக்க ஜாக்கிரதை யெடுத்துக் கொள்வார்கள். இந்து சமுகத்தார் பாதிரிமார்கள் இந்து மதத்திற்கு இடையூறு செய்வதைத் தடுத்து அதற்கு இடங்கொடாமல் இருப்பதற்கு வேண்டிய முயற்சிகளை யெடுத்துக்கொள்ள வேண்டும்.

 

நான் இதை யெழுதும் போது இந்து பத்திரிகையில் ஒரு ரோமன் காதலிக் பாதிரியார் மேற்கண்ட அமெரிக புரொடஸ்டான்ட் பாதிரிமார்களின் செய்கையை ஆக்ஷேபித்துக் கூறும் ஒரு வியாசத்தைக் காண மிக்க சந்தோஷ மடைகிறேன். அவர் இந்தியாவின் தென்னாட்டில் அத்தகைய கிருஸ்துமத குருமார்களின் ஆக்ஷியைத் தாபிப்பதால் இங்குள்ள ரோமன் மார்க்கத்திற்கு மிக்க இடையூறுண்டாகும் என்ற காரணத்தால் அதைக் கண்டித்துக் கூறுகிறார்.

 

இவ்வாறு யாவரையும் கிருஸ்தவராக்கும் பொறுப்பை யேற்றுக்கொள்வது ஆகாதகாரியம் என்று அவர் கூறுகிறார்.

 

நண்பர்களே சகோதர சகோதரிகளே! இவ்விஷயத்தைப் பற்றி மனம் பதைத்து நம்மனைவர்க்கும் அறிவுறுத்தும் ஸ்ரீமான், லாட். கோவிந்த தாஸ் அவர்களுக்கு நாம் மிக்க நன்றியோடு வந்தன மளிக்க வேண்டும். இனி இதற்கு நாம் என்ன செய்ய வேண்டு மென்பதைச் சிந்திப்போம்.

 

நமது மதத்திலிருந்து அன்னிய மதத்திற்குச் செல்வோர் நமது மதத்தில் மோஷமார்க்கம் இல்லையென்றும் அந்த அந்நிய மதத்தில் தான் உண்மையுண்டென்றும் உணர்ந்து செல்வதில்லை யென்பது பிரத்யாகூ அனுபவம் நம்மவர்க்கு சுயமதக் கல்வியில்லாததால் அவர்கள் சரியை கிரியைகளின் அந்தரங்கம் தெரியாதவர்களாய் இருக்கிறார்கள். அந்தநிலையிலுள்ள பாமாருக்கு "நீங்கள் கல், செம்பு இவற்றால் மனிதன் செய்த உருவங்களைக் கும்பிடுகிறீர்கள். அவைபேசுமா? நாம் கூறும் பிரார்த்தனைகளைக் கேட்குமா? கடவுளும் நம்மைப்போல் மனைவியை யுடைத்தா யிருக்கலாமா? * * '' என்பது முதலான வீண்வார்த்தைகளைக் கூறினால் அவர்கள் நம்மதத்தில் ஒருவிதத்தாழ்வு அபிப்பிராயங் கொள்ளும் மயக்கத்திற் குள்ளாகிறார்கள். அவ்வளவே உள்ள விஷயம். நமது மதத்தில் உண்மையில்லை, அந்தியமதத்தில் உண்மை யிருக்கிறது என்று உணரக்கூடிய மனோ வல்லமை யவர்களுக்கில்லை. அவ்வளவு அறிவிருந்தால், ''அய்யா குருவே! நீரும் எங்களைப்போல் மனைவி மக்களோடு கூடி உலகத்தில் எதிலும் வெறுப்புன திருக்கிறீரே; உமக்கே ஆண்டவன் தரிசனம் கிடைக்காதே; நீர் எங்களுக்கெப்படிக் காட்டுவீர். உலக அற்பசுகங்களில் எதை வெறுத்தீர்? " என்று கேட்பார்களல்லலா

 

மேல்கூறிய மயங்க தலையில் கொண்டுவாப்பட்டிருப்பார்களுக்கு உலக போகமான ஆசைகளைக் காட்டினால் அவர்கள் அடியோடு மயங்கி விடுகிறார்கள். இப்படி மயங்கிய கன்னிகையையோ வாலியனையோ கள்ளத்தனமாக அவர்கள் குடும்பத்திலிருந்து பிரித்து எங்கேனும் அழைத்துக் கொண்டு போய் இரகசியமாக அன்னியரைத் தங்கள் மதத்தில் சேர்த்துக்கொள்ளும் சடங்கைச் செய்துவிடுகிறார்கள். இடையில் பெற்றோர் முதலியோர் அறிந்து தங்கள் பெண்ணையையோ பிள்ளையையோ காட்ட வேண்டு மென்றால் "அவர்கள் உங்களைக் காணப் பிரியப்பட வில்லை'' என்பது முதலிய கள்ளச் சாக்குகளைக் கூறி அவர்களைக் காணவொட்டாமலே செய்து விடுவார்கள். இந்தச் சூதான கள்ள விவகாரங்களாலேயே, இவர்கள் சத்தியமாக மதத்தை அவர்கள் விரும்பும்படி செய்து அவர்களே பிரியப்பட்டு வந்தால் சேர்த்துக்கொள்ளுகிறார்கள் என்பது அடியோடு பொய்யென்று அங்கை நெல்லி போல் விளங்குகிறது. மேல் கண்டவாறு பல திருட்டாந்தங்கள் நடந்திருப்பது யாவருமறிந்ததே. ஹிந்து மதத்தில் மோக்ஷமார்க்கம் இல்லை என்று அவர்க்கு நிரூபித்து அவர்களைத் தங்கள் மதத்திற்கு வரும்படி போதிப்பதே கிடையாது. அப்படி நிரூபிக்க யாரால் முடியும்? உள்ளதை இல்லையென்று நிரூபிக்க எவனால் தரம்? அவ்வாறு கள்ளத்தனமாக அழைத்துக் கொண்டு போகப்பட்டவர்களுக்கு விவகாரதசை வந்துவிட்டால் அவர்கள் பிரியப்பட்டுவந்து விடார்கள் என்று கூறக்கூடிய சட்டத்திலுள்ள சாக்கு இவர்களுக்கு உதவியாயிருக்கிறது. இன்றேல் இவர்கள் இன்னொருவர் பெற்றோர் அல்லது புருடன் - ஆதரணை, அல்லது பாதுகாப்பில் இருக்கும் வாலிபன் அல்லது ஸ்திரீயைக் கள்ளத்தனமாய் அழைத்துக்கொண்டு போவதற்காக அரசரின் தண்டனைக் குள்ளாக்க வேண்டியவர்களே. நம் துரைத்தனத்தாரோ மதவிஷயத்தில் பிரவேசிப்பதில்லை. ஆயினும் சிலர் நமது மதத்தையடியோ டழிப்பதாகத் துசங்கட்டிக்கொண்டு நம் நாட்டிக்கு வந்து நமக்கு உயிரினும் சிறந்த பொக்கிஷத்தையபகரித்துக் கொள்ள முயலும் போது, நமது அரசர் அதைத் தடுத்து நமக்கு உதவி செய்யவேண்டியது அவசியமேயாகும். ஆனால் அதற்கு முன் நம்மாலானவரை நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ளத்தகுந்த ஏற்பாடுகளைச் செய்யவேண்டுவது நமது கடமை. பொதுவாக நம்மவர் அன்னிய மதத்திற் போய் விழாவண்ணம் அவர்களைக் காப்பாற்ற என்ன செய்யவேண்டு மென்பதைப்பற்றி முன்பே நாம் சஞ்சிகையில் வரைந்திருக்கிறோம். ஆயினும் நாம் இப்போது கூறுவதைத் தயை செய்து கவனித்து நமது மதத்தைக் காப்பாற்ற முயல்வீர்களென்று பூரணமாக நம்புகிறேன். இனியும், உடனே தக்க முயற்சி யெடுத்துக் கொள்ளா மல், கதையைப்போல் இதை வாசித்துவிட்டுப் பேசாதிருந்தால் நாம் "பெரும்பாபத்திற் காளாவோம்; ஹிந்துக்கள் என்ற பெயருக் கருகராகமாட்டோம். அநாதிகாலம் தொட்டு நம்பாரத நாட்டில் பொருந்தி யிருக்கும் தெய்வத்தன்மை நம்மேலிட்ட கொடுஞ்சாபமாக மாறிவிடும்'' என்பது உண்மை. இப்போது நாம், செய்யவேண்டிய முயற்சிகள் இன்னின்ன வென்பதைச் சுருக்கமாகக் கூறுகிறோம்.

 

1. நமது மக்களுக்குத் தாய்ப்பாஷையில் மதிக்கல்வியை ஆரம்பத்திலேயே போதிக்கவேண்டும்.

 

2. தாய்ப்பாவையைப் பாடசாலைகளில் கட்டாய பாடமாகப் போதிக்கும்படிக்கு ஏற்பாடு செய்யவேண்டும்.

 

3. தாழ்ந்த வகுப்பாரை இழிவாக நடத்துவதை அடியோடு விட்டொழித்து அவர்களை விசுவாசத்தோடு நடத்த வேண்டும். இவ்விஷ யத்தைப் பற்றி மிக்க விரிவாகக் கூறவேண்டியிருக்கிறது. ஆனால் இவ்வமயத்தில் அவ்வாறு கூற இடமில்லை யேனும் இரண்டொரு விஷயங்களைப் பற்றியேனும் கூறவேண்டியது அவசியமாகிறது. இப்போது நாம் மதவித்தியாசத்தைக் கவனித்தல்ல அவர்களைத் தாழ்மையாக நடத்துவது. அவர்கள் நமது மதஸ்தரே. நமது மதம் நமக்கு எவ்வளவு சொந்தமோ அவ்வளவு சொந்தம் அவர்களுக்கும் உண்டு. சத்தியோன் முத்திமார்க்கமாகிய ஞானமார்க்கம் தீண்டாதவர்க ளென்று கருதப்படுபவர்களுக்கும் சொந்தமானதே. நமது மதத்திலிருக்கும் போது நாம் அவர்களை இழிவாக நடத்தி, அவர்களே கிருஸ்துமதத்தில் சேர்ந்து விட்டால், அப்போது அவர்கட்குச் சமமரியாதை யளிக்கிறோம். அப்போது மதத்தைக்கருதியா அப்படிச் செய்கிறோம்? ஒருகாலு மில்லை கிருஸ்து மதத்தில் சேர்ந்தபின அவர்கள் சுத்தமான உடையுடுத்தி நாணயமாக ஒழுகக் கற்பிக்கப் படுவதோடு கல்விப்பயிற்சியு மடைகிறார்கள். இதுதான் அப்போது நாம் அவர்களை மரியாதையாக நடத்துவதற்குக் காரணம். இபபோது கொஞ்சங்கூடக் கல்வியாவது நாகரீகமாவது இல்லாததால் "எங்கள் மதத்தில் சேர்ந்து விட்டால் நாங்கள் யாவரையும் சமமாக நடத்துவோம். கோயிலில் யாரும் வந்து துதிக்கலாம். சாதி வித்தியாசமேயில்லை'' என்று கூறுவதையப்படியே யுண்மை யென்று நம்பிக்கொள்கிறார்கள். உண்மையில் நமக்குள் ஜாதியில் உயர்வு தாழ்வு பாராட்டப்பட்டால் அவர்களுக்குள் கேவலம் அங்த்தியமான பொருள், அந்தஸ்தால் வித்தியாசம் பாராட்டப்படுநிறது. திருட்டாந்தமாக ஐரோப்பியர் செல்லும் ஆலயத்தில், ஈஸ்ட் இந்தியர் (நாம் சட்டைக்காரர் என்று கூறுகிறவர்கள்) சேர்க்கப்படுவதில்லை; அவர்கள் கோயிலில் இந்திய கிருஸ்துவர் சேர்க்கப்படுவதில்லை. இவர்களுக்குள் சமபோஜனம் முதலிய ஒன்றுமே கிடையாது. விரிக்கிற்பெருக்கும். அந்தோ நமது நாட்டுக் கீழ்ஜாதியாருக்கு நாமேயேன் நாகரீகத்தையும் கல்வியையும் போதித்து அவர்களை அன்போடும் தக்க மரியாதையோடும் நடத்தலாகாது? இனியேனும் நம்மவர்கள் அவ்வாறு செய்யவேண்டியது அவசியம். தீண்டாதவர்களல்லாத மற்றவர்களில் தாழ்ந்த ஜாதியாரைக்கூட சற்று மேல் ஜாதியாகிய ஹிந்துக்கள் தங்கள் கோயிலுக்கு வராது தடுத்தல், அவர்களைக் கல்வி கற்கவொட்டாமலும் நாகரீகமாக ஒழுக வொட்டாமலும் தடுத்துக் கட்டுப்பாடு செய்தல் இத்தகைய பெரிய அக்கிரமச் செயல்களை யுடனே யடியோடொழிக்க வேண்டும். இப்போது அம்மட்டோடு நிறுத்தி இவ்விஷயத்தைப்பற்றிப் பின்னால் விரிவாகக் கூறுவாம்.

 

ஆனால் இந்த மூன்று விஷயங்களும் ஒரே நாளில் நிறைவேறிவிடத் தக்கவையல்ல. இவற்றைச் செய்து முடிக்கக் கொஞ்சம் காலம் செல்லும். இதை மட்டும் செய்து கொண்டு வந்தால் இப்போது வரப்போகும் ஆபத்தைத் தடுக்க முடியாது. ஆகையால் அதைத் தடுக்க உடனே செய்து முடிக்க வேண்டிய வேலைகள் இரண்டொன்றிருக்கின்றன. அவை நம்மவரில் வாசாகயிங்கரியமாகப் பேசுவது மட்டிலிராமல், அப்படியே சிரத்தை யெடுத்துங் கொள்ளத்தக்க உண்மையான, உறுதியான தேசபக்தி மதப்பற்று இவற்றை யுடையோர் உடனே முயற்சி யெடுத்துக் கொண்டால் செய்து முடிக்கத்தக்கவைகளே யாகும். நமக்கு மதமே யாவற்றினும் சிறந்தது. முன்னோர்களாகிய தெய்வீகத்தன்மை பொருந்திய மகான்களின் இரத்தம் நம் தேகத்தில் துளியேனும் ஓடிக்கொண் டிருக்கிறது. ஆகையால் நாம் இல்விஷயத்தில் கவனத்தைச் செலுத்தி நமது மதத்தைப் பாதுகாக்கா விடின் நாம் கடையரினும் கடையார்வோம். இதைச் செய்ய மன உறுதியேயன்றிக் காசு பணம் தேவையில்லை.

 

முதலாவதாக: - வெளிப்பகட்டில் மயங்கி நமது மக்களை, கட்டாயம் பெண்மக்களை அன்னிய மதஸ்தர் பாடசாலைகளுக் கனுப்பவே கூடாது. அன்னிய மதஸ்தரை நம் வீட்டிற்கு வந்து நமது பெண்களுக்குக் கல்வி போதிக்கும்படியாவது, தையல் முதலியவை கற்பிக்கும்படியாவது, பேசும்படியாவது ஒரு விநாடி கூட விடக்கூடாது. அவர்கள் " புத்தகங்கள், தையல் சாமான்கள் யாவும் நாங்களே இலவசமாக அளித்து பூநூலால் உயர்ந்த வேலை யெல்லாம் கற்பித்துத் தருகிறோம் " என்று கூறுவார்கள் பணம் கூடத் தருகிறோம் உடை கூடத் தருகிறோம் என்பார்கள். இவற்றிற் காசைவைத்து அவர்களை வீட்டிற்கு வரும்படி அனுமதி யளித்தீர்களோ பிறகு மரண மட்டும் துக்கத்தை யனுபவிக்க நேரிடும். பெண்மக்களை உயிரோடு பறிகொடுக்க நேரிடும். மாதர்கள் சுலபத்தில் மயங்கி விடுவார்களாதலால் ஆடவர் இது விஷயத்தில் அவசியம் கண்ணோக்கம் வைத்து அப்படி நேரிடாதபடிக் கண் டிப்பான கட்டளை யிடவேண்டும்.

 

இரண்டாவது: - இவ்விஷயமும் மிக முக்கியமானது. நமது மதத்தை விட்டு அன்னிய மதத்தில் போய்ச் சேருகிறவர்கள் மத உண்மையையறிந்து செல்பவர்களல்ல என்பதைப்பற்றி முன்னமே கூறியிருக்கிறோம். இதனால் அதில் போய்ச் சேருபவர்களில் முக்கால் பங்கிற் கதிகமாகப் பின்னால் பெருந்துக்க மடைகிறார்கள். தூரத்தில் சூரியப்பிரகாசத்தால் ஜொலிக்கும் கிளிஞ்சிலைக்காணும் ஒருவன், அச்சமயம் அது வெள்ளியே யென்று மயங்கி ஆவலோடு ஓடிப்போய் அதை யெடுத்துக் கொள்கிறான். அதன்பிறகே 'அடடா! மோசம் போனோம்" என்று உணர்ந்து அவமானமும் துக்கமும் அடைகிறான். அப்படி அன்னிய மதத்தில் சேர்ந்தபின் தாங்கள் செய்தது மூடத்தனம் என்று உணர்ந்து வருந்தும் நம்மவர் கதியென்ன? அந்தோ நாம் அவர்களை மறுபடி சேர்த்துக் கொள்ளாமல் விட்டு விடுகிறோம். இதுவே நம்மவரில் பெரும்பாலார் அன்னிய மதத்திலேயே நிலைத்திருப்பதற்குக் காரணம். இதற்குப் பிராயச்சித்தம் செய்து சேர்த்துக் கொள்ள நமது சாத்திரங்களில் மார்க்க முண்டு. ஆனால் அம்மார்க்கம் மிக்க பணச்செலவுடையதும், கஷ்டமானதுமாக விருக்கிறது. மகம்மதியமஸ்த்தன் ஒருவன் அன்னிமதத்தில் சேர்ந்து திரும்பி வருவதாயின் கோயிலில் ஒரு சடங்கு செய்து உடனே மறுபடி தமது மதத்தில் அவனைச் சேர்த்துக் கொள்கிறார்கள்
சடங்கு பிரதான மேயன்றி பணச்செலவு பிரதானமல்ல. "பழயன கழிதலும் புதியன புகுதலும் வழவலகால வகையினானே'' என்பதை யாதாரங்காட்டி, நமக்கு அனாவசியமான அன்னிய நாட்டு ஆசாரங்களை யெல்லாம் பின்பற்றுகிறவர்கள், அந்தோ! இப்போது வரும் ஆபத்தைக்கருதி கஷ்டமும் மிக்க பொருட்செலவும் வேண்டிய பிராயச்சித்த விதிகளை நீக்கி, மிக்க சுலபமாகச் சொல்ப செலவில் பிராயச்சித்தச் சடங்கைச் செய்து சேர்த்துக் கொள்ளும்படியான விதியை யேற்படுத்த வேண்டியது அவசியம். எண்ணிக்கையற்ற சிஷ்யர்களையும் ஏராளமான வரும்படியையுமுடைய சைவ மடாதிபதிகள், வைஷ்ணவ மட ஜீயர்கள், இவர்கள், காலத்தையனுசரித்து இத்தகைய முயற்சி எடுத்துக்கொண்டு நமது மதத்தைக் காப்பாற்றாவிட்டால், ஐயோ! கொஞ்சகாலத்திற்குள் இவர்கள் பதவிகளே எக்கதி யடையும்? இதைக் கருதியேனும் இவர்கள் ஒன்றுகூடி பிராயச்சித்த விதிகளை மிக்க சுலபமாக அற்பசெலவில் நிறைவேறும் வண்ணம் செய்ய வேண்டியது அவசியமல்லவோ? கிருஸ்துவப் பாதிரிமார் தங்கள் மதத்தை விர்த்திசெய்வதற்காகச் செய்யும் முயற்சிகளைக் கண்டும் இவர்கள் இன்னும் தங்கள் கடமையைச் செய்யாதிருந்தால் ஆண்டவன் தண்டனைக்குத் தப்புவார்களோ? நமது மதத்தைக் காப்பாற்ற வேண்டியது இவர்கள் கடமையல்லவோ! இனியேனும் ஞானவான்களாகிய இப்பெரியோர்கள் உடனே நமது ஒப்புயர்வற்ற உத்தம மதத்தைக் காப்பாற்ற முன்வந்து அவசியமான காரியங்களைச் செய்ய வேண்டுமாய்ப் பிரார்த்திக்கிறோம்.

 

காரைக்குடியில் தாபிக்கப்பட்டிருக்கும் ஹிந்து மதாபிமான சங்கத்தின் மூன்றாவது வருட அறிக்கைப்பத்திரம் வரப்பெற்று மிக்க மகிழ்வடைந்தோம். தற்காலம் நமது நாட்டிற்ரு இத்தகைய சங்கங்கள் இன்றியமையாதன வாகும். இத்தகையசங்கம் இப்போது நமது மதத்தைப் பாதுகாக்கத் தகுதியான முயற்சி யெடுத்துக்கொள்ள வேண்டியது அதன் கடமையாகும். இச்சங்க அவயவிகள் சபை கூடி நாம் எழுதியுள்ள விஷயங்களை வாசித்துப்பார்த்து, முக்கியமாய்க் கடைசி இரண்டு விஷயங்களாவது சீக்கிரத்தில் நிறைவேறச் செய்வதற்கான முயற்சி யெடுத்துக் கொள்வார்களென்று பூரணமாக நம்புவதோடு, அவர்களை மனப்பூர்வமாகப் பிரார்த்தித்து வேண்டிக் கொள்கிறோம். இதைவிடப் பரமசிவத்திற்கு நாம் செய்யத்தக்க தொண்டு வேறில்லையாகும். அகண்ட பரிபூரண சச்சிதானந்த பரம்பொருள் இவ்விஷயத்தில் நமக்கு அருள் புரியுமாறு பிரார்த்திப்போமாக.


       "ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென்
       னால வாயி லுறையுமெம் மாதியே"

 
                                   ஆனந்த போதினி – 1920 ௵

ஆகஸ்ட், செப்டம்பர் ௴

 

 

 

 

No comments:

Post a Comment