Showing posts with label விநாயக முகூர்த்தம். Show all posts
Showing posts with label விநாயக முகூர்த்தம். Show all posts

Monday, September 7, 2020

 விநாயக முகூர்த்தம்

கணேசர் துதி.


 அகரமென அறிவாகி உலகமெங்கும்

அமர்ந்து அகர உகர மகரங்கள் தம்மால்
 பகரும் ஒரு முசலாகி வேறுமாகிப்

பல்வேறு திருமேனி தரித்துக்கொண்டு
 புகரில் பொருள் நான்கினையும் இடர்தீர்ந் தெய்தப்

போற்றுநர்க்கு அறக்கருணை புரிந்தெல்லோர்க்கும்
 நிகரில் அருள் சுரந்து உலகம் தன்னைக்காக்கும்

நிருமலனைக் கணபதியை நினைந்து வாழ்வாம்.


 ஆனைமுகன் ஆறு முகன் அம்பிகை பொன்னம் பலவன்
 ஞான குரு வாணியை உள்நாடு.

 

கன்னியாகுமரி முதல் இமயம்வரை யாண்டு சென்றாலும் நமது பரதநாடு முழுதும் இந்து மக்களின் ஆராதனைக்கு முதற்ரெய்வமாக விளங்குவது விநாயக முகூர்த்தமேயாகும். சிவன் கோவில்களிலும் விஷ்ணுகோவில்களிலும் பெருமாள் கோவில்களிலும் தண்ணீர்த் துறைகளிலும், மரத்தடிகளிலும், வீதிகள் தோறும், கிராமங்களின் முகப்பிலும் இன்னும் இது போன்ற முக்கிய இடங்களிலும் இம்மூர்த்தியைக் காணலாம். இம் முகூர்த்தத்தை கற்களாலும் உலோகங்களாலும் மரங்களாலும் விக்கிரகங்களாகவும், மா, மண், சாணம் மஞ்சள் முதலியவைகளால் லிங்க வடிவமாகவும் அமைக்கப்பெற்று வணங்கப்பெற்று வருகிறது.

 

இந்து நன் மக்கள் எந்தக்காரியத்தைத் தொடங்கினாலும் முதவில் விநாயகரை வணங்குவது வழக்கம். அதை அநுசரிது, நாமும் நமது ஆனந்தபோதினி மாதப்ப திரிகையைத் துவக்கம்போது அவரை வணக்கஞ் செய்து, அவருடைய தந்துவங்களைப் பற்றிச் சிறிது ஆராய்ந்து அவருடைய உண்மைகளை வெளிபடுத்துவோம்.

 

விநாயகரைப் பற்றிய விரிந்த தத்துவங்களை யெல்லாம் ஆராய்ந்து கொண்டு போக இப்பொழுது உத்தேசிக்கவில்லை. ஆயினும் இந்து மதத்தின் உண்மைகளை அறியர் பார் அவருடைய பிறப்பைப்பற்றி புராணங்களில் கூறியவற்றை ஆபாசமாகப் பொருள் கற்பித்தும் அவருடைய சொரூபத்தின் தத்துவங்களை உணர ஆற்றலற்றவர்களாக தத்தமக்குத் தோன்றியவாறெல்லாம் கூறிக்கொண்டு வருவதால் தற்கால இளைஞர்கள் தெய்வபக்தி குன்றினவர்களாய் விட்டார்கள். அது அவர்கள் மேல் பிசகில்லை. அதன் உண்மையை உணர்த்துவதற்குப் போதிய சாதனங்களில்லாத குறைவேயாகும். சில பத்திரிகைகள் கூட இம்மாதிரி தத்துவ உண்மைகளை ஆராய்வதற்கு இடங்கொடாததால் அவைகளை உணர்த்த முன்வந்துள்ளவர்களும் வேறு வகையி இடம் பொருள் ஏவலின்றித் தவிக்கன்றனர். ஆகையால் ஆனந்தபோதினி வாயிலாக சிலவற்றைக் கூறி அக்குறையையும் நீக்கலாமென்று கருதுகிறோம். சமயம் வாய்ந்தபோது இதர அம்சங்களையும் ஆராய்வோம்.

 

"தத்துவம் எங்குண்டு தத்துவன் அங்குண்டு, தத்துவம் எங்கில்லை தத்துவன் அங்கில்லை, தத்துவ ஞானத்தின் தன்மை அறிந்தபின், தத்துவன் அங்கே தலைப்படுவான் தானே'' என்று திருமூலர் கூறியுள்ளார். விநாயகப் பெருமானுக்கு, நாமங்கள் அனந்தம். அவைகள் ஒவ்வொன்றிற்கும், காரணங்களும் செயல்களும் புராணங்களில் கூறப்பட்டிருக்கின்றன. விநாயகர் புராண மென்ற தனிப்புராணம் ஒன்றுமுள்ளது. அவைகள் ஒவ்வொன்றுக்கும் காரண காரியங்கள் கூறலாம். அவைகளையும் இப்போது தொடங்கல் உசிதமில்லை.

 

அவருடைய உருவம் யானை முகம் போன்றதென்பது எவரும் அறிந்ததொன்று. விநாயகருக்கு 'பிரணவப் பொருள்' என்று பெயருண்டு. பிரபஞ்சமானது " ஓம்'' என்ற பிரணவப் பொருளினின்று அகண்டமாயுள்ளது. என்று உபநிடதம் சொல்லுகின்றது. யானை முக மென்பது, பிரணவ வடிவமாகும் வேதங்கள் கூறும் வாசக இலக்கணமான பிரம்மம். இப்பிரபஞ்ச வியக்த்தத்துள் அப்பிரணவமே ஆதிநாதமாகும். அவ்வேகாக்ஷர ஆதாரத்தைக் கொண்டே வேதங்கள் பிரகாசிக்கின்றன; அப்பிரணவத்தின் அவ்வியக்த பிராண சக்தியினின்றே பஞ்சபூதங்களும், அவற்றின் பரிணாமமாகிய அண்ட கோடிகளும் ஜீவகோடிகளும் பிரதிபலிக்கின்றன. அண்ட கோடிகளை அடக்கிக் கொண்டிருக்கும் அறிகுறியாக உருண்டு திரண்டு செறிந்த தொந்தியும், இன்னோரன்ன பரமார்த்திக தத்துவங்கள் நிறைந்து வாய்ந்த உருவகமுமுள்ள முகூர்த்தமாக விளங்கி அன்பர்கட்குக் காட்சியளிக்கின்றார்.

 

பூலோகத்தில் நமது புறக் கண்ணால் காணக்கூடிய சகலதோற்றங்களும் அகக்கண்ணால் காணக்கூடியவைகளும், கடவுளின் தோற்றம் என்றும் அவைகளில் குறைந்த உண்மைகளும் நிறைந்த உண்மைகளும் கடவுளின் உணர்ச்சிப் பாகுபாடுகள் என்றும் ஏற்படும் பொழுதும், அத்தோற்றங்களிலும் அவ்வுணர்ச்சிகளிலும் வேற்றுமைகளும் விபரீத ரூபங்களும் இயற்கையாயிருக்கின்ற போதும் விநாயகப் பெருமானின் உருவகம் என்று கூறத் துணியலாமோ? அன்பர்கள் நன்கு சிந்திப்பார்களாக.

 
 ஆனைகள் ஐந்தும் அடக்கி அறிவென்னும்
 ஞானத்கிரியைக் கொளுவி அதனுள் புக்கு
 ஊனை இருள் அறநோக்கும் ஒருவருக்கு
 வான் அகம் ஏற வழி எளி தாமே.


என்று திருமூலர் மனதின் தொடர்ந்த இந்திரியங்களை ஆனை என்று சொல்லுகிறார். ஆதனால் மனதிற்கும் ஆனைக்கும் ஒரு ஒற்றுமையான உணர்வுண்டு. மனது என்ற தத்துவ இருப்புக்கு நமது மண்டையில் யானை மத்தகம் என்ற இரண்டு மூளைகளும் அதன் மத்தியில் கீழ் நோக்காய் தொங்கும் ஓர் நரம்பும் யானை முகத்தை ஒத்த தாய் அமைந்திருக்கிறது. எதையும் முதலில் நினைக்கும் மனத்தின் இருப்பிடம் அவ்வாறு அமைந்திருப்பதால் முதற்றெய்வமாய் வணங்கக் கூடிய விநாயக உருவகமும் அவ்வாறு அமைந்துளது. அண்டத்திலுள்ளது பிண்டத்திலும் என்ற தத்துவம் இதில் நன்கு புலனாகின்றது.

 

உலகம் இன்று நேற்றுத் தோன்றியதல்ல. அதன் முடிவை ஆராயமனித ஆயுள் போதாது. எத்தனையோ மன்வந்திரங்கள் யுகப்பிரளயங்கள் ஏற்பட்டுள்ளன. ஜீவகோடிகளின் பரம்பரா வாசனைகளில் தோன்றும் ஜென்மங்களில் எத்தனையோ மாறுபாடுகள் விளைந்து கொண் டிருக்கின்றன. இதுகால் ஆங்கிலேயர்களுடைய ஆராய்ச்சிகள், முன் நம்நாட்டில் இருந்துமறைந்த பல உண்மைகளுக்கு அணிகலனாயிருக்கின்றன. இன்னும் நம்முன்னோர்கள் கண்ட சூக்ஷமநிலையில் ஆராய்ச்சிகள் எய்தப்படவில்லை. தூலக்கருவிகளாலேயே ஆராயப்படுகின்றன. இத்தனை மாறுதல்களில் அந்தந்த மன்வந்திரங்களிலும் யுகப்பிரளயங்களிலும் விநாயக உபாசனாத் தெய்வத்தின் உற்பவங்களும் பலதிறப்பட்டதாயிருப்பதில் என்ன ஆச்சிரியம்! அவைகளில் அன்பர்கள் வீண்காலம் போக்குவது முதலிய ஆபாசக்கற்பனைகளை விட்டுவிட்டு உண்மைகாண முயல வேண்டும். அவ்வாறு காண ஆங்கிலேயர்கள் கையாள்வது பற்றி திருப்தி யடைய வேண்டும்.
 

சகுணமாய் உபாசிக்கும் பக்தர்களுக்கு இதை விட இன்னும் புராணங்களில் பல இலக்கணங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. ஞானிகளுக்கு சகுண சொரூபம் நிர்க்குண நிலையில் நிர்விகற்பமாய் தத்துவங் கடந்ததாய் இருக்கின்றது. யோகிகளுக்குத் தியானிக்கப்படும் சுகமாய் உலககாரணமாய் குண்டலியாய் சுயஞ்சோதியாய் சோர்விலா சாத்வீக நிலையாய் சதா நிட்டையருள் கணேசராய் விளங்கிக் கொண்டிருக்கிறார்.


தியானம்

 

விநாயக முகூர்த்தத்தை பிரத்தியட்சப் படுத்தி அடைவதற்கு சில மந்திரங்களும் பெரியோர்களால் வகுக்கப்பட்டிருக்கின்றன. மந்திரங்கள் என்பது சில தெய்வீக மொழிகள். தெய்வாம்சமுள்ள முகூர்த்தங்களை பரிசுத்தமான நிலையங்களில் ஸ்தூலமாகவோ சூட்சுமமாகவோ பிரதிஷ்டை செய்து சில நியமங்களுக்குட்பட்டு அத்தெய்வீக மொழிகளை உச்சரிக்க வேண்டும். இக்காலத்திலும் அவ்வித உச்சரிப்பால் சித்திகள் அடைந்தவர்களுளர். ஆனால் அது பூரணமாயில்லை. அதற்குக்காரணம் உச்சரிக்கப்படும் அட்சரங்களின் வாக்கியக் கர்த்தாவாகிய விநாயகக் கடவுளின் தெய்வாம்ச உண்மை நிலையை சரிவர உணராது அட்சரம் உச்சரிக்கப்படுவதேயாகும். அன்றியும் அவர்கள் கணேசனை அட்சர தியானஞ் செய்து கிடைத்த சக்திகளை இழிவான காரியங்களில் உபயோகப்படுத்தி பொருள் திரட்ட எண்ணங் கொண்டு செய்பவர்கள். ஆதலால் பூரண சித்தியை யடைவதற்கில்லை. அட்சரதியான மந்திரங்களின் விசேடப்பயன் யாதெனில் பிராரப்த ஆகாமியப் பிரதிபந்தங்கள் நசித்துச் சாரூப பதவியை யடைவதற்காகும்.

 

உண்மையில் மனிதனுடைய சக்திக்கு எல்லையில்லை. மனித சக்தியும் மந்திரசக்தியும் மிகவும் அபாரமானது. (அவைகளைப் பற்றி ஆனந்தபோதினி'யில் தனிக்கட்டுரையாக எழுதி விளக்கலாம்) அட்சரத்தியானத்தால் பரிசுத்த தெய்வீக சக்திகளை ஆத்மார்த்தச் சிந்தனையுடனும் பயன் கருதாமலும் பாமரர்களுக்கும் அதிலும் தாழ்வுற்ற பஞ்சமர்களுக்கும் அளிக்க வேண்டும். அட்சரத்தியானத்தால் விநாயகக் கடவுளின் தன்வயமாகவும் மயமாகவும் அடைந்த மந்திர திருஷ்டர்கள் எளியவர்களுடைய பிரபந்தங்களை நிவர்த்திப்பதால் தங்களது சுயநிலையும் அவர்களது சுயநிலையும் ஐக்கிய முற்று தெய் வாம்ஸமானது முற்றும் பிரதிபலிக்கும் தன்மைகள் வாய்க்கும். பொருளையோ கீர்த்தியையோ விரும்பி இச்சக்திகளை இதரர்களுக்கு விநியோகிப்பதால் மந்திர அப்பியாச பிரயத்தினத்தால் கிடைத்த தெய்வாமிசக் களஞ்சியம் வெறுந்திடலாவதுடன் புதிய பிரபந்தங்களுக்கும் ஆளாகிறார்கள்.

 

ஆனந்த போதினி – 1929 ௵ - மார்ச்சு ௴