Showing posts with label தேவாலயச் சீர்திருத்த முறை. Show all posts
Showing posts with label தேவாலயச் சீர்திருத்த முறை. Show all posts

Thursday, September 3, 2020

 

தேவாலயச் சீர்திருத்த முறை

 

தேவாலயங்களை நாம் கோக்குவோமாயின், அவற்றினமைப்பு, நமது சரீரத்தின் அமைப்பை ஒத்திருக்கின்ற தென்பதை யறிவோம். ஏலருக்கும காரண சரீரங்கள், அன்னமயம் பிராணமயம் மனோமயம் விஞ்ஞானமயம் ஆனந்தமயம் என்னும் பஞ்சகோசங்கள், இதயம், இதயக்குகையாகிய தகராகாயம் முதலிய உடலமைப்பைத் தழுவியே ஆலயங்கஎமைக்கப்பட்டிருக்கின்றன. இவ்வுடலிற்குள் ஆன்ம சொரூபத்தைத் தரிசிக்கு மிடங்கள் அவ்விடத்துள்ள ஆன்மா முதலியவற்றைக் காட்டுவதற்கே-சித்திரித்துக் காட்டுவதற்கே-ஓர் ஓவியமாகப் பெரியோரால் பெருங்கருணையோடு மிக்க ஆராய்ச்சியின்மேல் அமைக்கப்பட்டன. ஆகவே, பக்தி மார்க்கத்தைக் கற்பிப்பதைப் பொது நோக்கமாகவும் தத்துவஞானத்தைக் கற்பிப்பதை முக்கிய நோக்கமாகவும் கொண்டு மிளிர்கின்றன நமது தேவாலயங்கள் என்பது ஆன்றோ ரனைவராலும் அங்கீகரிக்கப்பட்ட சுருதி சம்மதமான-விஷயமாம். உதாரணமாக ஒரு சிறு விஷயத்தைக் காட்டுகின்றோம்.

 

ஆலயங்களில் சாதாரணமாக மூன்று பிராகாரங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. சில பெரிய ஆலயங்களில் ஐந்து முண்டு. மூன்று பிராகாரங்கள் மூன்று சரீரங்களையும், ஐந்து பஞ்சகோசங்களையும் குறிக்கும். இவற்றைச் சுற்றிவந்த பிறகே சுவாமியைத் தரிசிக்கச் செல்லுதல் வேண்டும் என்பது நியதி; இது மூன்று சரீரங்களையும், அல்லது மூன்று சரீரமாகவுள்ள பஞ்சகோசங்களையும் கடந்த பிறகே ஆன்மதரிசனஞ் செய்தல் வேண்டுமென்பதைக் காட்டும். பலிபீடமானது "துள்ளுமறியா மனது பலி கொடுத்தேன்" எனத் தாயுமானப் பெருந்தகையார் சாற்றியபடி காமக்குரோதாதி துர்க்குணங்களை யெல்லாம் பலிகொடுத்த பின்னரே உள் செல்லுதல் வேண்டுமென்பதனை விளக்கா நிற்கும். மூலஸ்தானம் என்னும் சுவாமி யிருக்குமிடம் இதயத்தைக் குறிக்கும். அங்குள்ள இருள் மாயையைக் குறிப்பதாகும். மாயை யென்னுந் திரைநீக்கி நின்னையா ரறியவல்லார்' என்றபடி, அந்தகாரத்தைக் கடந்து சென்றோரே ஆன்மதரிசனஞ் செய்தலியலும் என்பதையே அவ்விடம் அறிவிக்கின்றது. அந்த இருளோ (மாயை) பிறவிக்குக் காரணமானது என்பது அந்த இடத்திற்கு இடப்பட்டுள்ள கர்ப்பக் கிருகம் என்னும் பெயரே உணர்த்துதல் காண்க. காரண சரீரம் என்று வேதங்கசால் கூறப்படுவதும் இதுவே.

இன்னும் இதுபோன்ற பல தத்துவங்களை யுணர்த்துங் கழகமாக ஆலயங்கள் அமைந்திருக்கின்றன. எடுத்துக்கொண்ட விஷயம் வேறாகலின் இதனை இவ்வளவோடு விடுத்து மேலே செல்வோம்.

 

இவ்வளவு அரும்பொருள் கொண்டு அமைக்கப்பட்டுள்ள ஆலயங்கள் தற்போது சீர்கேடுற்றுக் கிடத்தலைக்கண்டு அறிவுடையோர் வருந்தாமலிரார். 'உயிரைக் காக்கவல்ல அருமருந்து அவ்வுயிரைப் போக்கவல்ல நஞ்சாக மாற்றப்பட்டது' என்னும் உபமானத்திற்கு, இவ்வாலயங்களை உபமேயமாகப்பொருத்துவது பிழைபாடுடைய தாகாது. மிக்க விபரீதமான முறையில் எல்லாக் காரியங்களும் கடைபெறுகின்றன. எந்த ஆலயமும் ஆதியில் ஆடம்பரத்துடன் அமைக்கப்பட்டன வல்ல. ஆலயமுறை யமைத்த ஆன்றோரின் நோக்கமும் அது வன்று. பூர்வகாலத்தில் இருடிகளால் அமைக்கப்பட்ட ஆலயங்களனைத்தும் விருட்சங்களே. விருட்சங்களி னடியை ஆலயமாகக் கொண்டே முனிவர்கள் கடவுளை வழிபட்டு வந்தனர். ஒவ்வோராலயத்திலுமுள்ள தல விருட்சங்களே இதற்குத் தக்க சான்று பகர்வனவாம். உதாரணமாகக் காஞ்சியில் உமாதேவி மாவினடியில் மணலால் சிவலிங்க மமைத்துப் பூசித்து வந்தனரென்று அவ்வாலய வரலாறு அறிவிக்கின்றது. தேவியார் ஏன் அவ்வாறு பூசித்தனர். அம்மையாருக்குப் பிரியமானால் சங்கற்ப மாத்திரத்தில் எத்துணை பெரிய ஆலயத்தை யமைத்திருக்கலாம்! ஏன் அவ்வாறு செய்யவில்லை? என்று ஆலோசித்துப் பார்த்தால் உண்மை விளங்காமற் போகாது. இத்தகைய ஆலயங்களில் தற்போது நிகழும் முறைகளென்ன? கண்காட்சிச் சாலையாகவும், கூத்தாட் டவைக்களமாகவும், வியாபார ஸ்தலமாசவும், திரவியந்தேடும் தொழிற்சாலையாகவு மன்றோ மாறிக்கிடக்கின்றன. ஐம்புலச் சேட்டைகளை யடக்கு நெறியைக் காட்ட வேண்டிய ஆலயங்கள் அவற்றை யதிகப் படுத்துவனவாய் மாறிவிட்டன.

 

உற்சவ முறைகளைப் பார்ப்போம்.  வாணவேடிக்கைளும் தாசிகள் நடனங்களும் மேளவாத்தியங்களும் அலங்கார வகைகளும் ஐம்புலவேடரின் வேட்டைக் கோட்டங்க ளல்லவோ. இவை எந்த வகையில் பக்தியையூட்ட வல்லனவெனக் கேட்கின்றோம். இவற்றிற்காக ஆயிரக்கணக்கிற் பணத்தைச் செலவிடுவது நியாயமாகுமா? 'சுவாமிக்கு மனைவி யொருத்தி; வைப்பாட்டி யொருத்தி; மனைவியைவிட வைப்பாட்டி யிடத்தில் அவருக்கு மெத்தப் பிரிய முண்டு. சுவாமி வைப்பாட்டி வீட்டிற்குப்போய் வந்தாரென் றெண்ணி மனைவி அவரை உள்ளே விடாமல் வழி மறித்துக்கொண்டு, அவருக் குடர்தையா யிருந்தவர்களெனக் கருதி உடன் வந்தோரைத் தோழிகளைக்கொண்டு அடிக்கச் செய்கிறார். (இதற்குப் பட்டையடி உற்சவமென்று பெயர். வாழைப்பட்டையா லடிப்பார்கள்.) சுவாமி மனைவியோடு சயனித்துக் கொள்ளுகின்றார்; படுக்கை யறையை நன்றா யலங்கரித்துக் கட்டி லொன்றில் சுவாமியையும் அம்மனையும் படுக்க வைப்பது ஒரு உற்சவம்.' இவ்வாறு பொருத்தமற்ற உற்சவங்களெல்லாம் மாந்தர்க்குப் பக்தி யுண்டாக்க வல்லவையோ! கூட்டமாகக் கூடும் சனங்கள் வேடிக்கைக்காக வருகின்றார்களா? அல்லது பக்தியின் பொருட்டு வருகின்றார்களா? வேடிக்கை காமக்குரோதாதி துர்க்குணங்களை யகற்று வனவோ? வளர்ப்பனவோ? சுவாமிக்கு முன்னால் 'வரிவிழி கொண்டு சுழியவெறிந்து மாமயில்போல்' நடித்துச் செல்லும் தாசிகளைச் சூழ்ந்து, சுவாமியுடன் செல்வோரினும் பதின்மடங் கதிகமாகச் செல்லும் மாந்தர்க் குளதாவது சாமி பக்தியோ காமி பக்தியோ? தஞ்சாவூர் தங்கநாத சுரத்தைச் சூழ்ந்து செல்வோர்க்கு நாதசுரம் எவ்வளவு பக்தியைப் புகட்ம்? ஆகாய பாணங்களும் அதிர் வெடிகளும் அவுட்டுகளும் மத்தாப்புகளும் மாந்தர்க்கு எந்த வகையில் நன்மை புரியும்? வேடிக்கை காட்டும் விஷயத்திலா பக்தி பூட்டும் விஷயத்திலா? கண்களைப் பறிக்கத்தக்கதாக அலங்கரிக்கப்பட்ட பத்துகஜ சுற்றளவுள்ள பிரபையின் நடுவில், யானைகளுக்குப் போடத்தக்க பருமனாகவுள்ள பருத்த மலர்மாலைகள் போடப்பட்டு, பொன்னரிமாலை மதாணி முதலிய வாபரணங்களா லலங்கரிக்கப்பட்டுள்ள, சாதாரண எலுமிச்சம்பழ வளவுள்ள சுவாமியின் வதனத்தைக் கண்டு, அவரை நினைவு கூர்ந்து பக்திப்பெருக்கி வாழ்ந்து அவரைத் தியானிப்பது சாத்தியமாவ தெப்படி? சுவாமியைப் பார்க்க விரும்பும் மெய்ப்பக்தர்களின் பார்வையையும் தன் பக்கலிழுத்து 'ஆஆ! இந்த அலங்கரிப்பு என்ன நேர்த்தியாயிருக்கின்ற' தென்று வியக்குமாறு அவர் தம் மனோ வெழுச்சியைத் தூண்டி, சுவாமியினிடத்துச் செல்லாவாறு தடுக்கத் தக்கனவான அலங்காரங்கள் ஏனோ?' 'சுவாமி என்ன அழகா யிருக்கின்றார்?' எனச் சனங்கள் சொன்னால், அம் மொழி, அலங்காரத்தைப் பற்றியேயன்றி சுவாமியைபற்றிய தன்று.

 

சாதாரணமாகவே சிற்றறிவினனாகவுள்ள மனிதன், அறிவை மயக்கும் மதுவை யுண்டு, அறிவையும் போக்கிக் கொள்ளுந் தன்மை போல சிறிதும் கட் இக் கடங்காமல் விஷயங்களி லோடித்திரியும் பொறிகளை, அவை வெகு கன்றாக ஓடித் திரியும் பொருட்டுப் பற்றுக்கோடுகளாகப் பல விஷயங்களைக் கொடுப்பது அவற்றைக் கெடுப்பதாகு மன்றோ! வெறும் வாயை கிறவனுக்கு அவல் கிடைத்தால் சொல்ல வேண்டியதேயில்லை. ஐம்புலனடக்கிய அருந்தவரும் அவை மீண்டும் தம்மைப்பற்றி வருத்தப்படுத்தாதபடி எசசரிக்கையா யிருக்கக் கடமைப்பட்டிருக்கின்றன ரென்னின் ஏனையோரைப் பற்றி இயம்புவதென்ன?

 

இவ்வாறு எல்லாப்படியாலு மெண்ணினால் எவர்க்கும் எள்ளளவு நன்மையும் நல்குதலில்லா இந்நாடக வுற்சவங்களைச் சுவாமியின் பெயரால் மதத்தின் பெயரால் நடத்துவது எவ்வளவு பெரிய அநியாயம்! இவற்றிற்காகச் செலவிடப்படும் தொகை எவ்வளவு! கோயிலார் செலவிடும் கோடிக்கணக்கான பணம் ஒருபுற மிருக்க, எழை மாந்தர்கள் உண்மை யறியாமல் கடனுடன்பட்டு சிறிதும் உபயோகமற்ற வழியில் செலவிடும் திரவியம் எவ்வளவு? அவர்கள் படும் பாடுக ளெவ்வளவு. இவ்வளவும் வீண் - முழுவதும் வீண்-கடலிற் கரைத்த பெருங்காயம் - ஆற்றிற்கரைத்த புளி - என்று அவர்கள் உணர்வதில்லை. உணர்ந்தாலும் கூட்டத்தைச் சேர்க்கக் கோயில்காரர்கள் செய்யும் ஆர்ப்பாட்டங்கள் அவர்களைக் கண்ணிழக்க செய்கின்றன. ஆகவே, ஆலயங்களில் உற்சவ காலங்களில் செய்யப்படுவன வனைத்தும் மீன்களைப் பிடிக்கத் தூண்டிலிலிடும் உணவுப் பொருள்களே. காஞ்சிபுரத்து உற்சவத்திற்குச் சென்னையிலிருந்து போகும் ஒருவரை இக்கேள்வி கேட்போம். 'ஐயா! பக்தரே! காஞ்சிபுரத்திலுள்ள வரதராஜப்பெருமான் அங்கே எப்பொழுதும் இருக்கிறாரா? அல்லது தம்மைக் கொண்டாடப் போகிறார்களென்றெண்ணி இவ்வுற்சவத்திற்கு மாத்திரம் அங்கு வரப்போகிறாரா? எப்போதும் அங்கே யிருப்பவராயின் இதற்கு முன்னர் உற்சவம் நடவாத காலத்தில் அவரைப்போய் தரிசியாம லிருந்ததேன்? போகட்டும், சென்னை திருவல்லிக் கேணியிலுள்ள ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமானுக்கும் வருதராஜப் பெருமானுக்கும் ஏதேனும் ஏற்றத்தாழ்வுண்டோ? வரதராஜப்பெருமாள் தரும் நன்மையைப் பார்த்தசாரதி தரமாட்டாரோ? தருவதாயின் காஞ்சிபுரத்திற்குப்போவதேன்? அதிலும் உற்சவகாலத்திற் போவதேன்?' இக்கேள்விக்கு அவரிறுக்கத்தக்க விடை யாது? 'சுவாமிகளில் பேதமில்லை; இருவரும் ஒருவர்தான். உற்சவகாலத்தில் தான் போக வேண்டுமென்பது அவசியமன்று. சுவாமி எப்பொழுதுந்தா னிருக்கிறார். ஆனால், இப்பொழுது போனால் வேடிக்கையாயிருக்கும்; அந்த வேடிக்கை பார்க்கத்தான் போவது' இதுதான் விடை. இதைத் தவிர வேறேதேனும் சொல்ல இடமுண்டோ? உண்மை யிவ்வளவுதானே.

 

உற்சவஞ் செய்வோரும் கூட்டத்தைத் திரட்டுவதற்காகவே இவ்வேடிக்கைகளை யியற்றுகின்றனரே யன்றிப் பக்திப் பெருக்கால் செய்வதாகச் சொல்லச் சிறிதும் துணிவு பிறக்கவில்லை. ஆகவே, இதுகாறும் இச்சிறு ஆராய்ச்சியால் ஆலயங்களில் நடக்கும் உற்சவக்கிரமங்கள் கிரமமானவைகளாயிராமல் யாதொரு பயனும் பயவாமற் போவதுமன்றி தீமையே பயக்கும் அக்கிரமமான நெறிகளில் நடைபெறுகின்றன வென்பது வெள்ளிடைமலை.

 

பக்தியை - கடவுள் கொள்கையை - - யாவருள்ளத்திலும் பதியச் செய்ய வேண்டுமென்னும் சிரத்தை ஆலய உற்சவங்களில் சம்பந்த முடையோருக்கிருக்கின்ற துண்மையாயின், அவர்கள் அனேக வாண்டுகளாக நடந்துவரும் இவ்வற்சவங்களால் ஏதேனும் நன்மை யுண்டா யிருப்பதாக வறிந்திருப்பார்களாயின், இனியும் அவற்றைத் தொடர்ந்து நடத்தட்டும். இதுகாறும் கவனிக்கவில்லை யெனின் இனியேனும் ஆராய்ந்து பார்க்கட்டும். ஒன்றும் பயனில்லை யென்பதை அவர்தம் மனச்சாட்சியே அவர்களுக்கு மாண்பா யுரைக்கும் இல்லை யென்பதை யவர்களுணர்வார்களாயின் இவ்வாறு செய்யட்டும். எவ்வாறெனின்: -

 

முதன் முதலாக இப்போது கூலிக்கு மாரடிப்போர்போல கூலிக்குச் சுவாமி பூசை செய்வோராகவும், பூசைத் தொழிலை பரம்பரைத் தொழிலென்று பாத்தியதை கொண்டாடிப் பூசை செய்வோராகவும் இருப்போரை விலக்கி, ஒழுக்கம் கல்வி பக்தி முதலியவற்றில் தலைசிறந்து விளங்கும் மெய்யடியார்களை - தமக்கென உண்மைப் பக்தியோடு பூசை செய்வோரா யிருப்பவர்களை-தேடி யமர்த்துதல் வேண்டும். குறிப்பிட்ட பூசா காலங்களில் அவர்கள் பூசை செய்தல் வேண்டும். இப்பொழுதும் அவ்வாறு நடைபெறுகின்ற தெனினும் இது கூலியின் பொருட்டுச் செய்யப்படுவது.


“கையொன்று செய்ய விழியொன்று நாடக் கருத்தொன் றெண்ணப்

பொய்யொன்று வஞ்சக நாவொன்று பேசப் புலால் கமழும்

மெய்யொன்று சாரச் செவியொன்று கேட்க'' விரும்புவோர்
செய்கின்ற பூசை யிது.”

 

இந்த முறை அறவே மாற்றப்பட்டுத் தம் சொந்த சிரத்தையோடு செய்யப்படுவதா யிருத்தல் வேண்டும். கவனிக்கவும் சுவாமியைத்தரிசிக்கவும் அக்காலத்தில் வருவோர் பூசை முடியும் வரையில் அமைதியாயிருந்து பகவத்தியானஞ் செய்து கொண்டிருத்த லவசியம். பூசையின் முடிவில் பகவத்தியான மதிமையையும் ஒழுக்கத்தின் உயர்வையும் இன்னோரன்ன பிறவற்றையுங் குறித்துப் பூசை செய்வோராகிய அவ்வடியார் சுருக்கமானதோர் பிரசங்கஞ் செய்து தீபாராதனையுடன் பூசையை முடித்தல் வேண்டும். பெரிய தேவஸ்தானங்களில் இவர் போன்ற பல அடியார்களிருத்த லவசியம். பூசை செய்யும் இரண்டொருவர் தவிர ஏனையோர் அவ்வூர்களிலும் அவற்றைச் சேர்ந்த கிராமங்களிலும் சென்று அவ்வூராருக்குச் சௌகரியமான காலங்களில் ஒழுக்கத்தையும் பக்தியையும் உண்டாக்கத்தக்க சன்மார்க்க போதங்களைச் செய்து வருதல் வேண்டும். கூடுமாயின் ஆண்டிற் கொரு முறையேனும் இருமுறையேனும் மகாநாடுகள் கூட்டி தக்க பெரியோர்களைக் கொண்டு மத ஒழுக்க சம்பந்தமான சொற்பொழிவுகளை நிகழ்த்தச் செய்தல் வேண்டும். மத சம்பந்தமான கல்விகளைக் கற்பிக்கவும், ஒழுக்கங்களை வற்புறுத்திப் பசுமரத் தாணிபோல் மனத்திற் பதிப்பிக்கவும், தக்க கல்விச்சாலைகளை நிறுவுதல் வேண்டும். இத்தகைய நெறிகளில் தேவஸ்தானங்கள் தொண்டாற்றி வருவதாயின் இந்நாடு எந்காட்டினுஞ் சிறந்த பொன்னாடாகத் திகமுமே. புண்ணியசாடு என்னும் தன் பண்டைப் பெயரைப் புதுப்பித்துக்கொண்டு பொலியுமே.

 

ஆண்டு விழாக்கள் இப்பொழுது நிகழ்த்தப்படும் முறைபோல், வீண்ஆடம்பரங்களின்றி, பொருளற்ற வாகனங்களின்றி, சுவாமிக்குப் பொய்க்கால்கள் போலிக்கரங்கள் வைத்து எலுமிச்சம்பழ வளவுள்ள வதனத்தையுடைய விக்கிரகத்திற்கு இரண்டு முழக் கரங்களையும், மூன்று முழக் கால்களையும் வைத்தல் போன்ற ஆபாசச் செயல்களும் இல்லாமல் செய்வது நலமாகும்.

 

பூசா காலங்களில் - தொழுகைக் காலங்களில் - தியான காலங்களில் பிறமதத்தினர் நிசப்தமா யிருப்பது வழக்கமாக நமது ஆலயங்களில் மாத்திரம் மேளம் வாசிக்கப் படுவதற்கு முக்கிய காரண மொன்றுண்டு. அது யாதெனில்: - இந்துக்கள் நாதத்தை முக்கியமாகக் கொண்டவர்கள். நாதம் ஈசுவர சொரூபமெனவும், நாதத்தினின்று சகலமுந் தோன்றின வெனவும் நூல்கள் துவலும். பிரணவமும் நாதவடிவமே. சிவம், சத்தி, நாதம், விந்து சதாசிவன், மகேசுரன், உருத்திரன், விட்டுணு, பிரமன் பிரமன் என ஈசுர பேதம் ஒன்பது வகையாகக் கூறப்பட்டிருத்தலுங் காண்க. ‘நாதபிந்து கலாதீநமோ நம:' எனத் துதிக்கிறார் அருணகிரியாரும். 'விண்ணாதியாம் பூதமே நாதமே' யெனக் கூறுகின்றார் தாயுமானவரும். மேலும், நாதம் ஓர் வகைத்தத்துவமாகவும் சாற்றப்படுகிறது. பிருதிவி முதல் நாதம் இறுவாயுள்ள தத்துவங்கள் முப்பத்தா றென்பர். இதைத் தாயுமானவர் 'ஐந்து வகை யாகின்ற பூதமுதல் நாதமும்' என்கின்றார்.

 

அன்றியும், சமாதி யப்பியாச காலத்தில் பிரஹ்மரந்திரத்தினின்றும் தசவித நாதங்களுண்டாகும் என யோக நூல்கள் கூறுகின்றன. அவற்றுள் முதலாவது கருவண்டின் சப்தம் போல் கண்ணென்றிருக்கும் இவ்வாறு முறையே தண்டு, சங்கம், மணி, தாளம், புல்லாங்குழல், பேரிகை, மிருதங்கம், இடி, மேக வொலி இவற்றை யொத்திருக்கு மொலிகள் தோன்று மென்பர் பெரியோர். ஆகவே, ஆலயங்களில் இவற்றி னுண்மையைக் குறிக்கவே மணிசல்லரி பேரிகை சங்கு முதலிய வாத்தியங்கள் அமைக்கப்பட்டிருக்கின் றன. தவிர, 

 

மனோலயத்திற்கும் வாத்தியவொலி அனுகூலமான தென்று பெரியோர் அனுபவ வாயிலாய்க்கண்ட பின்னரே அதனை யமைத்தனர். தியானிப்போனுடைய மனம் அந்த நாதத்துடன் கலந்து விடுமாயின், மதுவுண்ட வண்டு போல் பகவானது திருவடிக் கமலத்தில் ஒடுங்கி நிற்கும். இத்தியாதி உண்மைகளை யோராது ஐந்நூறும் அறுநூறும் செலவிட்டு வாத்தியக்காரரை யமைப்பது அறிவுடைமை யாகாதே.

ஆகவே, அறிவுடையோரும் பக்திமான்களுமாகிய 'ஆனந்தன்' வாசகநண்பர், விரிவஞ்சி சுருங்க வரைந்த இக் கட்டுரையைக் கவனித்து வாசித்து, இதிற் கூறப்பட்டுள்ள விஷயங்களையும் கூறாமல் விடப்பட்ட விஷயங்களுளவாபின் அவற்றையுங் கூட்டி யாராய்ந்து, ஆலயங்களில் தற்காலத்தில் மதத்தின் பேராலும் சாமியின் பேராலும் நடக்கும் அக்கிரமச் செயல்களை யகற்றி, நம்முன்னோரின் கொள்கைக்கேற்ற பெற்றியின் நடைபெறச் செய்தல்வேண்டுமென்னு முறுதியை யுள்ளத்துய்த்துத், தாங்கள் இம்முறைகளுக் குட்படாமலிருத்தலோடு பிறர்க்கு மிதைப் போதித்துத் தக்க முயற்சி செய்து பண்டைக்காலமுறையை நிலைநாட்டப் பாடுபடுவராயின் மதத்திற்கும் தேசத்திற்கும் பெரிய உதவி செய்தவராவர் என்பதை வற்புறுத்துகின்றோம்.


ஆனந்த போதினி – 1932 ௵ - மே ௴