Showing posts with label சந்நியாசமும் பொறுமையும். Show all posts
Showing posts with label சந்நியாசமும் பொறுமையும். Show all posts

Monday, August 31, 2020

 

சந்நியாசமும் பொறுமையும்

 

 கடந்த மாதச் சஞ்சிகையில் பிரம்மஸ்ரீ சிவானந்தசாகர யோகீஸ்வரரவர்கள் வரைந்த சந்நியாசம் - துறவு என்ற விஷயத்தில் சந்நியாசத்தைப்பற்றி விரிவாய் வரைந்துள்ளார்கள். அதையே சுருக்கமாய் இக்கால அநுபவத்தோடு ஒத்திட்டு வரையக் கருதினோம்.

 

சாதாரணமாக பிரம்மசரியம், இல்லறம் இந்த இரண்டு ஆசிர மங்களிலும் விதிப்படி யொழுகிய பின்னரே ஒருவன் சந்நியாச ஆசிரமத்தைக் கைக்கொள்ள வேண்டுமென்பது விதி. ஏனெனில் பிரமசரிய ஆசிரமத்திலிருக்கும்போது குரு முன்னிலையில் சாத்திர விசாரணை செய்து பரோக்ஷமாக வேனும் நித்தியா நித்திய வஸ்து விவேகம் பெற்றிருக்கிறான். ஆயினும் பூர்வவாசனையால் உலகபோக விச்சை யொழியாது. ஒருசமயம் பாலிய பருவத்தில் விராகம் தோன்றினும் அது மந்தவிராகமாக விருக்குமேயன்றி நிலைத்திராது. யௌவன பருவம் வந்த காலத்து உலகபோக வாசை யெழும்.

 

ஆதலின் அக்காலத்தில் தனக்குத் தகுதியான ஒரு குலக்கன்னிகையை வரித்துக்கொண்டு இல்லறம் விதிப்படி நடத்துவதால் நிஷ்காம புண்ணிய கர்மத்துவாரா சித்தசுத்தியுண்டாகிறது. அதோடு உலகபோகங்களை யனுபவிப்பதால் “சே! இன்னும் எவ்வளவு காலம் அனுபவித்தாலும் இவ்வளவுதானே. இப்படி எண்ணிறந்த ஜன்மங்களில் அனுபவித்தே யிருக்கிறோம், ஒன்றே னும் நிலைத்திலது. முடிவில் இவையாவும் அநித்தியமே. இந்த அநித்தியமான அற்ப போகத்திற் கிச்சை வைப்பதால் பலவித துன்பங்களை யனுபவிக்க நேர்கிறது. பிறவிப்பிணியோ ஒழிந் திலது. சீ சீ இனி யிதைவிட்டு அழியாத பேரின்பத்தை யடைய முயலவேண்டும்" என்ற இவ்விதச் சிந்தனைகளால் விராகம் ஜனிக்கிறது. இச்சை யொழிகிறது. இச்சை யொழியவே மனோலயம் எளிதில் சித்திக்கிறது. அப்போதுதான் ஏகாந்தத்திலிருந்து நிட்டை சாதித்து ஆன்ம சாட்சாத்காரத்தை யடையத் தகுதி யான பக்குவம் வாய்க்கிறது. ஆகையால் அதுதான் சந்நியாசம் பெறற்குரிய காலம் என்று விதிக்கப்பட்டது.

 

அத்தகைய சந்நியாசிக்கு மறுபடி உலகபோக இச்சை யெழாது. அவன் அப்போகங்களை வாந்தியசனம்போல் கருது வான். மற்றபடி சாதாரணமாக உலகபோகங்களை யொருவன் எவ்வளவு காலம். அனுபவித்தாலும் அதில் விரக்தி யுண்டாவ தில்லை. வயோதிகம் வந்தவனுக்கும். போகங்களை யனுபவிக்கும் சக்தியில்லை யெனினும் ஆசை மட்டும் ஒழிவதில்லை.

 

சந்நியாசத்திற்கு விராகம் அதாவது இகலோக பரலோக போகங்களில் வெறுப்பு ஒன்று தான் காரணம். அதன்றி காஷா யம், உருத்திராக்கம், தண்டு, கமண்டலம் முதலிய சின்னங்கள் காரணமல்ல. அதாவது உலகபோக ஆசை மனதைவிட் டகலா திருக்க சந்நியாசிவேட மட்டு மணிந்துகொள்வது பெரும் பாதக மாகும். சாதாரண மனிதர் போகங்களை யனுபவிப்பதால் கர் மத்தை யீட்டுகிறார்கள். ஆனால் போக இச்சையுடைய சந்தியாசிக்கோ கொடிய நரகம் பிராப்தமாகும்.

 

இக்காரணங்களாற்றான் நம் நாட்டில் ஒருவன் சந்நியாசியாவ தெனின் தக்க குருவினிடமே அதைப் பெறவேண்டும் என்ற விதி யுண்டு. அவர் அவன் இந்திரியங்களைச் செயித்தவனா? மனவொடுக் கம் வந்தவனா? இகபரவிராகம் பெற்றவனா என்று சோதித்து தகு தியுடையவன் என்று அறிந்தபின்பே அவனுக்குச் சந்நியாசமளிப்பார். ஒரு சந்நியாசியை நோக்கி “உனக்கு யார் சந்நியாசமளித்தது?'' என்று கேட்டால் அவன் அக்குரு இன்னாரென்று கூறுவான். அதன்மேல் அவன் சரியான சந்நியாசியாகத்தான் இருப்பான் என்று உணர்வார்கள்.

 

இக்காலத்திலோ எல்லாம் தலை தடுமாற்றமாகவே யிருக்கிறது. இக்காலத்தில் வித்வான், வெண்பாப்புலி, அஷ்டாவதா னம், சதாவதானம் என்று அவரவர்களே பட்டம் சூட்டிக்கொள்வதுபோல் சந்நியாசிகளும் நமது நாட்டில் மலிந்துவிட்டார்கள். சரியாக இருபது வயது கூட ஆகாதவர்களும் உயர்ந்த மல்லை ஜாப்ரா விரையில் சாயம் தோய்த்துக் கட்டிக்கொண்டவுடன் சந்நியாசிகளாகிவிடுகிறார்கள். சிரசை முண்டனம் செய்துகொள்வதும் கரஷாயமும் கழுத்தில் ஒரு உருத்திராக்கமும் அணிந்து கொள்வதுமே சந்நியாசம் பெறுவதற்கு வேண்டிய யோக்கியதை யென்று கருதுகிறார்கள்.

 

ஒருவனுக்குப் பூர்வ ஜன்மத்தின் விட்ட குறையால் ஆரம் பத்திலேயே விரக்தி ஜனிக்கலாகும்; ஏன், ஞானமே உதிக்க லாகும். அத்தகையோர் சந்நியாசம் பெறற்குக் காலவரையே யில்லை. அவன் எச்சாதியாயினும், என்ன வயதுடையவனாயினும் அவசியமில்லை. ஆனால் அப்படி நேரிடுவது மிக அரிது. இந்த பாலிய சந்நியாசிகளுக்கு இச்சை யொழிந்ததென் றெங்கேனுங் கருதத்தகுமோ. இவர்களில் பெரும்பாலார்க்குக் கல்வியேயில்லை. சிலர்க்குக் கஷ்டத்தோடு வரிசையாய் எழுத்துகளைப் படிக்கமட் டும் தெரியுமாதலால் சிறு நூல்களைப் பொருளறியாமலே மனப் பாடம் செய்கின்றனர். இவர்கள் பிரத்தியட்சமாய்க் காணும் பலன் என்னவெனில் கஷ்டப்படாமலே அன்னியர் கர்மத்தைப் புசித்தலே. இதனால் சோம்பலுக்குத் தோழராகிறார்கள். உண்மை விரக்தியடைந்து சந்நியாசம் பெற்றிருப்பவனைப்பற்றி நாம் கூற வில்லை.

 

இவர்களுக்கு எள்ளளவேனும் இச்சை யொழியவில்லை. இந்திரியங்களை நிக்கிரகிக்கும் சக்தியாவது மனதை யடக்கும் சக் தியாவது சற்றேனுமில்லை. அறுசுவை யுணர்ச்சி யொழியவில்லை. பெரும்பாலும் இவர்களுக்கு இந்திரியங்களையும் மனதையும் வேறு பிரித்தறியவே முடியாதெனில் இவர்கள் அவற்றை யடக்குவ தெப்படி? இவர்கள் சந்நியாசகோல மணிவதிலும் ஒழுங்கு தேடு கிறார்கள். உயர்ந்த மல், வெண்பட்டு, சரிகை வேட்டி இத்தகையவற்றிற்கு ரோஜா நிறச் சாயமேற்றி யணிதல், பொன்மலர் கட்டி இரத்தினங்களிழைத்த உருத்திராக்கமணியைப் பொன் கயிற்றில் கோத்தணிதல், இன்னும் பலவுள.

 

சந்நியாச மடைவது உலக விவகாரங்களை யடியோடொழித் துக் கிரியையற்று, சதா ஆன்ம சாக்ஷாத்கார நிலையிலிருக்கச் சாதனை செய்வதற்கேயன்றி வேறில்லை. ஆனால் இப்போதுள்ள சந்நியாசிகளில் பலர் இல்லறத்தானுக்கிருக்கும் தொல்லைகளைக் காட்டிலும் அதிக தொல்லைகளை வைத்துக்கொண்டு அல்லற்படுகிறார்கள். இத்தகையார் சந்நியாசததால யாது பயன்? இவ்வகைச் சந்நியாசிகள் மலிந்து காணப்படுவதால் அந்த ஆசிரமத்துக்குரிய மதிப்பு இல்லாமற்போகிறது. சந்நியாசிகள் பூசிக்கத்தக்கவர் களாகக் கருதப்படவேண்டியிருக்க, அதற்கு மாறாக உயர்தரயாசகராகவும், வெளி வேடக்காரராகவும் கருதப்படுகிறார்கள். போலிச் சந்நியாசிகளால் மெய்யான சந்நியாசிக்கும் மதிப்பில்லா மற் போகிறது.

 

நாவின் ருசியையும் ஸ்திரீயிச்சையையும் ஜெபித்து விட்டால் எல்லாக் கஷ்டமும் ஒழிந்ததாகும் என்று ஒரு ஞானி கூறியுள்ளார். ஸ்ரீ சைதன்னியசுவாமிகள் கேசவ பாரதி பாரிடம் சென்று தமக்குச் சந்நியாசம் அளிக்கும்படி வேண்டியபோது அவர் சைதன்னியரை நோக்கி “நீ நல்ல வாலிபமும் மிக்க அழகுமுடையவனாக இருக்கிறாயே. உனக்குச் சந்நியாசமளிக்க யாருக்குத் தீர முண்டாகும்?'' என்றனர்.

 

சைதன்னியர் “சுவாமி! ஒருவனுக்குச் சந்நியாசமளிக்கு முன் அவனைச் சோதியுங்கள். நான் சந்தியாசம் பெறத் தகுதி யுடையவனாயின் தாங்களே எனக்குச் சந்நியாசமளிக்கப் பிரியப் படுவீர்கள். ஆகையால் அடியேனைச் சோதித்துப் பாருங்கள்) என்றார். அதன்மேல் கேசவபாரதி சைதன்னியரை நோக்கி “உனது நாவை நீட்டென்றார், அவர் நீட்டியதும் பாரதி கொஞ்சம் சர்க்கரையை நாவின்மேல் வைத்தார். சற்றுநேரம் அப்படியே யிருந்தபோது சர்க்கரை கரையாமலே யிருந்தது. பிறகு ஊதியபோது உடனே சர்க்கரை தூளாய்ப் பறந்து போயிற்று. ஏன்? நா அதன் ருசியை யுணர்ந்திருப்பின் நாவில் நீர் சுரந்து சர்க்கரை கரைந்து போயிருக்கும். உணர்ச்சியில்லாததால் கரைய வில்லை.

 

அதற்குமேல் அவரைச் சோதிக்கவேண்டியதில்லை. ஏனெனில் எப்போது இரச உணர்ச்சி வெல்லப்பட்டதோ அப்போது மற்ற எல்லாம் வெல்லப்பட்டதாகும்.

 

''அறுசுவையின் குணங்குற்ற மசுத்தம் சுத்தமென

வூணாராய்ந்திடாம லண்டினதைக் காட்டுத்தீபோ

லருந்துபவன் மாபோகியாகும்''                                  (கைவல்யம்)


இத்தகையோ ரன்றோ சந்நியாசத்திற் கருகராவோர்.

 

 சந்நியாசிகளுக்குச் சாதுக்கள் என்றும் பெயர். அதாவது அகங்காரத்தை யொழித்துவிட்டுக் கோபமின்றிச் சதா சாத்மீகத்தோடு பொருந்தியிருப்பவர்கள். பொறுமை யாவர்க்குமே இருக்க வேண்டிய மகா மேலான குணம். “பொறுமை கடலினும் பெரிது'' என்றனர் ஆன்றோர். இத்தகைய பொறுமை சந்நியாசியிடம் சதா இருக்கவேண்டும். இல்லறவாசிகள் எப்போதும் பொறுமையாயிருப்பது மிகக்கஷ்டமான காரியமே. இல்லறத் தில் அடியோடு கோபமே காட்டாதிருந்தால் மிக்க அனானுகூலம் நேரிடும். கோபம் ஓர் பேய் போன்றது. நான் எனது என்பதிருக்கிறவரையில் கோபம் ஒழிந்தபாடில்லை. தனக்காவது தன்னைச் சேர்ந்த உயிர்ப்பற்று பொருட்பற்றாகியவைகளுக்காவது ஒருவர் இடையூறு செய்தால் உடனே கோபம் கொதித் தெழும்புகிறது. பேய்வயப்பட்டவனுக்குத் தான் செய்வது நல்லது கெட்டது என்ற அறிவு விளங்குவதில்லை. அதுபோன்றே கோபப்பேயின் வயப்பட்டவனும் ஆத்திரத்தால் தன்னை மறந்து கொடும்பாதகச் செயல்களைச் செய்துவிடுகிறான்.

 

இதனாற்றான் கோபம் சண்டாளம் என்றும் பெரும்பாத கத்தை யுண்டாக்கத்தக்கதென்றும் கூறப்பட்டிருக்கிறது. குற்றம் செய்தபோது பெற்றோரும், உபாத்தியாயரும் பிள்ளைகளைத் தண்டிப்பது போல் பிறர் நலத்தின் பொருட்டுக் கோபங் காட்டு வது இல்லறத்தில் அவசியமே. அதனாற் குற்றமில்லை. சாதாரண மானவர்கள் கோபம் கெட்டதென்ற காரணத்தால் அது உண் டாகும் போது மறவாமல் அதைக் தடுத்தடக்கப் பழக வேண்டும்.

 

தற்செயலற்று, எல்லாம் ஈசன் செய லென உணர்ந்து, யாவும் அவன் சொரூபமாகவே காணும் அனுபவம்வரின், அப் போதுதான் கோபமும் அதன் மூலமாகிய அகங்காரமும் இயற் கையிலேயே இல்லா தொழியும். சந்நியாசி அத்தகைய நிலையி விருக்கவேண்டியவன். எப்போது இச்சை யொழிந்து விராகம் ஜனித்ததோ அப்போதே அகங்காரமமகாரங்க ளொழிந்தன. சந் நியாசி யாவற்றையும் தன் ஆன்ம சொரூபமாகவே காணவேண்டி யவன் ஆகையால் அவன் சாத்மீகமூர்த்தி அல்லது சாது என்று கூறப்படுகிறான்.

 

உண்மைச் சந்நியாசிகளையும் போலிச் சந்நியாசிகளையும் பிரித்தறிவது அதிக கஷ்டமான காரியமல்ல. வேடத்தைவிட்டுக் குணத் தாலும், நடக்கையாலுமே உண்மையை யறியலாகும். உண்மையான சந்நியாசிகளைக் கண்டால் அவர்கள் ஜாதி குலம் முதலிய ஒன்றையும் கவனியாமல் அவர்களைப் பரமேசுரனாகவே பாவித்து நடந்துகொள்ளவேண்டும்.


 சீடன்.

 

ஆனந்த போதினி 1923 ௵ - ஆகஸ்ட்டு ௴