Friday, September 4, 2020

 

பாலுக்குப் பூனையைக் காவல் வைக்கலாமா?

 

சகோதர சகோதரிகளே!

 

நெடுநாள் மக்கட்பேறின்றி, கடுந்தவம் செய்ததின் பயனாக, ஒருவனுக்கு, பேயோ, இராக்ஷசனோ, பிள்ளையாகப் பிறந்தால், பெற்றவனது மனம் எவ்வாறிருக்கும். இவன் மன நிலைமையை நாம் யூகித்து அறிந்து கொள்ள வேண்டியது. சமீபத்தில் சென்னையில் நம் பெண்களுக்காக, ஏற்படும் கலாசாலை விஷயமாக அறிந்தோமேயானால், முன் சொன்னவன் மன நிலைமையை நாமும் அனுபவத்தில் உணரலாம். நெடுநாளாகப் பெண்கல்வி பெண்கல்வி என்று கூக்குரலிட்டதற்கு, தற்காலம் இக்கலா சாலை நேரப்போவது மேல்சொன்ன உதாரணத்தை ஒக்கும்.

 

நமது நாட்டாரின் சிறந்த தெய்வபக்தி, சத்தியம், ஒழுக்கம், கற்பு, மாதர்களின் மேன்மை, முதலியன வெல்லாம், தற்கால நாகரீக முறை மைகளாலும், கல்லூரிகளில் ஏற்பட்டிருக்கும் கல்வி முறைகளாலும் ஏனையவற்றாலும் அடியோடு மழுங்கிக் கிடக்கின்றன. கிருஸ்துவக் கலாசாலைகள் ஆங்காங்கே, ஏற்பட்டதின் பயனாக, அநேக மாணவர்கள் கிருஸ்துவ மதத்தைத் தழுவியதுடன், அநேகருக்கு இந்து மதத்தினிடம் இருக்க வேண்டிய அபிமானம் கெட்டுவிட்டது. பின் அரசாங்கக் கலாசாலைகளில் என்றாலோ, அவ்விடமும், மாணவர்களுக்கு இந்து மதத்தைப்பற்றிப் போதிப்பதில்லை அவர்கள் கற்க விரும்பினாலும், அவகாசமற்றவர்களாயிருக்கிறார்கள். முடிவில் இக்கல்லூரிகள் மாணவர்களை நாஸ்திகர்களாகவும், மதாபிமானமில்லாதவர்களாகவும், சுய நம்பிக்கை, சுயமுயற்சியின்றிப் பிறர் நம்பிக்கை மேல் காலங் கழிப்பவர்களாகவும், சுயாதீனத் தொழிலை யிகழ்ந்து, அதமமாகிய சேவகாவிர்த்தியைக் கௌரவமெனக் கருதுபவர்களாகவும், ஆக்கிவிடுகின்றன. நம்முடைய நாட்டில் ஒவ்வொரு குடும்பத்திலும், மேல் சொல்லிய தன்மை வாய்ந்த பிள்ளைகள் இருந்து வருகிறார்கள். அநேக குடும்பத் தலைவர்களும் மேல் சொன்னவர்களைச் சார்ந்தவர்களே. இதுவரையிலும், இவர்கள் இஷ்டப்படி செய்து அடியோடு கெடாவண்ணம் தடை செய்தது இவர்களுடைய மாதர்களே. பெண்கள் பெரியோர்களின் ஒழுக்கங்களைக் கைவிடாது, கணவன் பிள்ளைகள் ஏளனம் செய்யினும், கடவுளின் கியாபக மூட்டக்கூடிய பண்டிகைகள், விரதங்கள் முதலியவைகளை அனுசரித்துக்கொண்டு வருவதால், இந்து மதமும் இன்னும் இருந்துகொண்டு வருகிறது என்று சொல்லுவதற்கேனும் வாயிருக்கிறது. ஆனால் இப்போது இதற்கும் மோசம் வரும் போல் தோன்றுகிறது.

 

சமீபத்தில் சென்னை ஜார்ஜ் டௌனில் இந்து பெண்களுக்காக, உயர்தரக் கலாசாலை ஏற்படப் போகிறதாம். அதில் கிருஸ்துவ சந்நியாசினிகள் (Nuns and Sisters) உபாத்தினிமார்களாக இருந்து, நமது பெண்களுக்குக் கல்வி போதிக்கப் போகிறார்களாம். இக்காரியம் நடைபெற்றால் அந்தோ! நமது மதத்தின் முடிவுகாலம் சமீபித்தது என்று கருதவேண்டியதே!

 

தற்கால நாகரீகத்தில் சிக்குண்டு மயங்காது, நல்ல ஸ்திதியில் இருந்து வருகிறவர்கள் பெரும்பாலும் நமது பெண்களே. அந்தோ! அவர்களுக்கும் கெடுதல் காலம் சமீபித்தது போலும். நமது நாட்டுப் பெண்களுக்கு கல்வி கற்பிக்க, நம் இந்து மாதர்களெல்லாம் எங்கு போனார்கள்? இந்து உபாத்தினிமார்களை விட கிருஸ்துவ சந்நியாசினிகள் எதில் சிறந்தவர்கள்? இக்கலாசாலை நடைபெறுமேயானால் அது பாலுக்குப் பூனையைக் காவல் வைத்ததாகவே முடியும். இதில் மற்றொரு விபரீதம் என்னவென்றால், பெண்களுக்கும் தற்காலம் மாணவர்கள் கற்றுவரும், கலாசாலைப் (University Education) படிப்பையே கொடுக்கப்போகிறார்களாம். இப்படிப்பு மாணவர்களுக்கே இவ்வித நன்மையைக் கொடுத்திருக்கின்றதென்றால், பெண்களுக்கு எவ்வித நன்மையைக் கொடுக்கும் என்பதை இதை வாசிப்போரே நன்கு யோசியுங்கள்! சில நாட்களுக்குமுன் சிதம்பரத்தில் நடந்தது நண்பர்களுக்கு கியாபகத்தில் இருக்கும். அமெரிக்கா மிஷினெரிகள் செய்து கொண்டு வரும் பிரயத்தனங்களைப் பற்றியும் கேட்டு இருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆகையால் நண்பர்களே! நமது மாதர்களின் மேன்மையையும், கற்பென்னும் தெய்வத் தன்மையையும், மதத்தையும், தாய் நாட்டையும் காப்பாற்றும் பொருட்டு, ஒவ்வொருவரும், மேற்சொன்ன பள்ளிக்குத் தங்கள் பெண்களை அனுப்புவதால் நேரிடக்கூடிய பெருந்தீங்கைப் பற்றித் தீர்க்காலோசனை செய்வீர்கள் என நம்புகிறேன்.

 

இத்துடன், நமது பெண்கள் கல்வி கற்க, ஆங்காங்கு பெண்கள் பாடசாலைகளைத் தாபிக்க முயன்று வரவும், பெரிய நகரங்களில் பெண்கள் உயர்ந்த படிப்பைப் படிப்பதற்கு வேண்டிய சவுகர்யமான, இந்து மாதர்களால் நடத்தக்கூடிய உயர்தரக் கல்லூரிகளையும் தாபிக்க உங்களால் ஆன பிரயத்தனங்களைச் செய்யவும் வேண்டுகிறேன். கடவுள் அருள் புரிவாராக.

தங்கள் நேசன்,

வை. நடேசன்,

செவ்வாய்பேட்டை.

 

குறிப்பு: - மேற்கண்ட விஷயம் நமது சகோதர சகோதரிகள் அனைவரும் ஆழ்ந்து கவனிக்கத்தக்கது. இந்துக்களாகிய நமக்கு நமது மதமும், மதாசாரங்களுமே மற்றையாவற்றினும் பிரதானம் என்பதைப்பற்றி நாம் விவரமாக எடுத்துக் கூறுவது அனாவசியம். நமது மதமும், நமது மாதரசிகளின் கற்பாகிய தெய்வத் தன்மையுமே நம் தாய் நாட்டின் க்ஷேமத்திற்கு இன்றியமையாத ஆதாரமாகும். இப்போது நமது நண்பர் கூறுவது போல் பெண்களுக்காக ஏற்படுத்தப்படும் உயர்தரக் கலாசாலையில் கிருஸ்தவ உபாத்தினிகளை வைத்து நமது பெண்களுக்குக் கல்வி கற்பிக்க துரைத்தனத்தார் ஏற்பாடு செப்யப்போகிறார்கள் என்ற விஷயம் எதுவரையில் உண்மையென்பது நமக்கு இன்னும் தெரியாது. ஆயினும் அப்படி நடப்பதாயின் என் செய்வது என்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டியது அவசியமேயென நமக்குப் புலப்படுகிறது.

 

நம் நாட்டில் பூர்வீகத்தில் பெண்களின் கல்வி என்ன நிலைமையிலிருந்தது, அவர்கள் எத்தகைய கல்வி கற்றிருந்தார்கள் என்று நோக்கின் அவர்கள் நம் தாய்ப்பாஷையில் இலக்கண இலக்கிய நூல்களும், ஞானநூல்களும், இலௌகீக ஆசாரங்களையும் தெய்வ வழிபாட்டையும் பற்றிய நூல்களுமே கற்றதாகத் தெரிகிறது. இப்போது நம் நாட்டில் பெண் கல்வி குறைவாயிருக்கிற தென்பது யாவருமறிந்த விஷயமே. ஆயினும். பெண்களுக்குக் கல்வி கற்பிப்பதால் கெடுதி நேரிடுகிறதென்று அபிப்பிராயப் படுவோரும் நம் நாட்டிலில்லாம லில்லை. எழுதப் படிக்கக் கற்ற பெண்களில் இரண்டொருவர் தங்கள் கல்வியைத் தகாதவழியில் உபயோகிப்பதே இத்தகைய அபிப்பிராயத்திற்குக் காரணம். இதனானே பெண்களுக்குக் கல்வி கூடாதென்று கருதுவது தவறேயாயினும், பெண்கள் கற்க வேண்டிய கல்விக்கு ஒரு வரம்பிருத்தல் அவசியமென்பது அறிவாளிகள் மறுக்கொணாத விஷயமேயாகும்.

 

அன்னிய நாட்டாருடைய பழக்கங்களையும், ஆசாரங்களையும் பற்றிக் கூறும் பாடபுத்தகங்களையும், புறச்சமயிகள் எழுதும் புத்தகங்களையும் வாசிப்பதால் நமது ஆண்மக்கள் எத்தகைய சீர்கேடடைந்திருக்கிறார்கள் என்பது யாவருமறிந்த விஷயம். அவர்களுக்கு நமது மதக்கல்வி போதிக் கப்படாததால் சீக்கிரத்தில் நமது மதத்தை யலட்சியமாகக் கருதவும் நம் முன்னோர்களை மூடர்களாகக் கருதவும் துணிந்து விடுகிறார்கள். கடைசியில் உலோகாயதத் தன்மை படிந்து, ஈசுர சிந்தனை யடியோடில்லாதவர்க ளாகி, பொருள் சம்பாதிப்பதும், உண்பதும், உறங்குவதும் மட்டுமாகக் காலத்தைக் கழித்து, அரிய மானிடப்பிறவியாலடைய வேண்டிய பயனை யடியோடிழந்துவிடுகிறார்கள். இத்தகையோர் இஜ்ஜன்மத்தில் அடைந்த சகவாசம் பழக்கம் ஆகிய இவற்றின் வாசனைப்பலத்தால் மறுமையில் உண்ணல் உறங்கல் மட்டுமேயுடைய பிறவிகளாகவோ, உலக போகத்தையே யாவற்றிலும் சிறந்ததாகவும், மாதரைத் தெய்வத்திற்குச் சமம் அல்லது அடுத்தபடியாகவும் கருதும் உலோகாயத ராகவோ ஜன்மிப்பார்களென அஞ்ச வேண்டியிருக்கிறது என்று பிறவி இரகசியமறிந்த ஆன்றோர் கூறுகின்றனர்.

 

நமது ஆண்மக்களில் உயர்தரக் கல்விகற்றுப் பட்டதாரிகளாக இருப்போர்களிலும் பலர் மேற்கண்டவாறிருப்பினும், மேலே நமது நண்பர் கூறியபடி மாதர்களாலேயே நமது மதாசாரங்கள் இன்னும் நிலை நிற்கின்றன.

 

இவ்வாறிருக்க இன்னும் மாதர்க்கே அத்தகைய கல்வியைக் கற்றுக் கொடுப்பதாயின் கடவுளே சதிக்காமல் நம்மை யடியோடழித்துவிடுவார் என்பது திண்ணம். நமது மாதர்க்கு எத்தகைய கல்வி வேண்டும்? எவ் வளவு கல்வி போதுமானது? என்பதை யுணர்வது பெருங்கஷ்டமல்ல. சாதாரண நூல்களை வாசிக்கப் போதுமான இலக்கண இலக்கியம், குடும்ப விவகாரத்திற்குப் போதுமான கணக்கு, சுகாதார வழிகள், கற்பிலக்கணங்களையும், குலாசார மதாசாரங்களையும், ஈசுர பக்தியையும் போதிக்கும் நூல்கள், சுருக்கமான பூகோள சாத்திரம், பக்தியோடு கட வுளைப் பாடித் துதிக்கப் போதுமான சங்கீதம், முதலியவைகளே நமது பெண்மக்களுக்குப் போதிய கல்வியாகும். ஆன்மார்த்த நூல்களை யெவ்வளவு கற்றாலும் கற்கலாம். இதைவிட்டு இப்போது நம் ஆண்மக்கள் கற்கும் கல்வியை யவர்களுக்குப் போதிக்கக் கருதுவதைவிட கல்வியே யில்லாதிருக்கச் செய்வது பெரும் புண்ணியமாகும்.

 

நமது மதம் போதிக்கப்படாமலிருப்பது நமது ஆண்மக்களுக்கே மிக்க கெடுதியை விளைவிக்கிறது. அன்னிய மதஸ்தரால் எழுதப்பட்ட நமது முன்னோர் சரித்திரங்கள், ஆசாரங்கள் முதலியவை யடங்கிய பாட புத்தகங்களை நமது மக்கள் வாசிக்கும்படி விடுவது பெருந் தீங்கை விளைவிக்கிறது. அன்னிய மதஸ்தருக்கு நம் மதத்தில் நம்பிக்கை யில்லை. ஆத லால் அவர்கள் நமது மதாசார சம்பந்தமான விஷயங்களைப் பற்றி எழுதும் போது தந்திரமாகவே அவற்றைத் தாழ்வுபடுத்தி அல்லது அவற்றிலுள்ள மகிமையையும் உயர்வையும் நீக்கிவிட்டு வரைகிறார்கள். அத்தகைய புத்தகங்களை வாசிக்கும் நமது மக்களுக்கு நமது மதத்தில் ஒருவிதத் தாழ்வான அபிப்பிராயமும், அவநம்பகமும், அலட்சியமும் ஆரம்பத்திலேயேயுண்டாய் விடுகின்றன.

 

இதற்கு இரண்டொரு திருட்டாந்தங்கள் மட்டும் கூறுகிறோம். நமது புராணக்கொள்கைப்படி சாக்ஷாத் பரம்பொருளே துஷ்ட நிக்ரக சிஷ்ட பரிபாலனார்த்தம் இப்பூவுலகில் ஸ்ரீஇராமபிரானாக அவதரித்தார் என்று நாம் நம்புகிறோம். அவ்வாறே நமது பிரபல சாத்திரங்கள் கூறுகின்றன. அப்படி யிருக்க தற்சமயம் நமது பிள்ளைகள் வாசிக்கும் ஒரு பாடபுத்தகத்தில், இராமரைப்பற்றி எழுதப்பட்ட பாடத்தில், அவரை ஒரு சாதாரண மனிதனாகவே விவகரித்து முடிவில் ஹிந்துக்கள் அவரை வணங்குகிறார்கள் என்று கூறப்பட்டிருக்கிறது. வின்கிளேர் என்ற ஆங்கிலர் எழுதியுள்ள இந்துதேச சரித்திரத்தில் நமது வேதம் சுமார் இரண்டாயிர வருடங்களுக்கு முன் சிலரால் வரையப்பட்டதாகக் கூறப்பட்டிருக்கிறது.

 

நமது மதத்தில் பக்தியும் நம்பிக்கையுமுள்ள நம் மதத்தவரால் எழுதப்பட்ட நமது மதசார சம்பந்தமான நூல்களை நம்மக்கள் வாசித்தால்தான் அவர்களுக்கு நம் மதத்தின் உண்மையும், பெருமையும் விளங்கி அதில் நம்பிக்கையும் பக்தியும் உண்டாகும். நமது மதத்தில் அவநம்பகமும் துவேஷமுமுடைய அன்னிய மதஸ்தர் நமது மதம் ஆசாரம் இவற் றைப்பற்றி யெழுதுவதாயின் அவற்றில் தோஷங்கள் கண்டு வெளியிடும் நோக்கமே அவர்களுக்கிருக்கும் என்று கூறவும் வேண்டுமோ. "இந்துக்கள் இன்ன இன்னவற்றைக் கடவுளாக வணங்குகிறார்கள். அவர்கள் கொள்கை கள் இன்னின்னவை'' என்று மூன்றாவது மனிதரைப்பற்றி கூறப்பட்டது போன்ற புத்தகங்களை நம்மக்கள் வாசிப்பதால்'' நம் மதம், நமது முன்னோர் கொள்கை, நமது முன்னோர் ஆசாரம் " என்ற அபிமானமே அவர்களுக்கில்லாமல் போவதோடு அவற்றில் அலட்சிய புத்தியும் அவநம்பகமும் உண்டாகின்றன.

 

அந்தோ! இத்தகைய புத்தகங்களை நமது மக்கள் வாசிக்கும்படி நாம் விட்டிருப்பது நமது மதத்தையும் நம் புண்ணிய நாட்டின் தெய்வத்தன்மையையும் நாமே யழிக்க முயல்வதல்லவோ. நமது ஆண்பிள்ளைகளையே இத்தகைய கெதியில் விட்டிருக்கிறோம். இப்போது நமது பெண்பிள்ளைகளையும் அவ்வழியில் விடுவதாயின் கடவுளால் நமக்கு அழிவு நேர்வது திண்ணம். துரைத்தனத்தார் மதவிஷயத்தில் பிரவேசிப்பதில்லையாகையால் அவர்கள் பாடசாலைகளில் நமது மக்களுக்கு நம்மதக்கல்வி போதிக்கப் படுவதில்லை. பெண் பாடசாலைகளில் கிருஸ்துவ உபாத்தினிமார்களை அவர்கள் ஏற்படுத்தினால், நமது பெண்களையங்கு வந்து வாசிக்கும் படி யவர்கள் கட்டாயப்படுத்துகிறார்களோ? ஒருபோதுமில்லை. நமது பெண் மக்களை நமது மதக்கல்வி போதிக்கப்படாத பாடசாலைக் கனுப்புவதே பெரியமதியீனச் செய்கையாகும். ஈசுரபக்தி யில்லாத கல்வியை நமது பெண்க ளுக்குப் போதிப்பதாயின் நாம் ''யாவற்றினும், பிராணனிலும், மதமே சிறந்தது" எனக் கருதும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களாகவே மாட்டோம். இதோடு இன்னும் அன்னியமத உபாத்தியாயர்களிடம் நமது பெண்மக்களை வாசிக்க விடுவோமாயின் நம்மிலும் மதியீனர் வேறில்லை யென்றே கூறலாம். 

 

'உபாத்தியாயர் அன்னிய மதஸ்தராயின் அதனால் நமது பெண்களுக்குக் கெடுதியேன் வரும்?'' என்று சிலர் கருதலாகும். இப்படிக் கருதுவது சுத்த அறிவீனமேயாகும். இன்னும் உலக அனுபவமறியாத பாலியர்களின் மனம் புகைப் படம் பிடிக்கும் கண்ணாடி போன்றது. முதலில் எந்த அபிப்பிராயங்களும் கருத்துகளும் அவர்களுக்கு ஊட்டப்படுகின்றனவோ அவைகள் உறுதியாக அவர்கள் மனதில் பதிந்துவிடும். பிறகு அவற்றை நீக்குவது சுலபமல்ல. ஒரு பெண்ணினிடம், " குழந்தாய்! நீ நெற்றியில் வைத்துக்கொண்டிருக்கும் குங்குமம் என்பது வெறும் மஞ்சள் பொடியும் சுண்ணாம்பும் கலந்ததுதானே. கடவுள் அழகாய்ப்படைத்த நெற்றியைப் பரிசுத்தமாக வைத்துக்கொண்டிருப்பதைவி ட்டு இந்தப் பொட்டை வைத்துக் கொள்வது முட்டாள் தனந்தானே; நேற்று பிள்ளையார் சவுத்தியல்லவா? மனிதன் மண்ணால் செய்த உருவைத் தானே கும்பிட்டீர்கள். அது பேசுமா? நீ தன்னை வணங்குவது அதற்குத் தெரியுமா? அதைத் தெய்வமென்று நினைக்கலாமா? இதோ பார்! இந்துக்களிடம் தான் இந்த மூடபுத்திகள் இருக்கின்றன. உலகத்தில் மற்ற பேர் அப்படிச் செய்கிறார்களா பார். பரீட்சைக்கு துரைசானியம்மாள் வரும் போது இதையெல்லாம் பார்த்து உங்களைத் தொடவும் அசிங்கமடைகிறாள்" என்று இரண்டு முறை கூறினால், பிறகு அப்பெண் குங்குமத்தைத் தொடவேமாட்டாள். நமது மதக்கொள்கைகளில் அவளுக்கு வெறுப்பு தோன்று மென்பதைக் கூறவும் வேண்டுமோ? இவ்வாறே பிரத்தியட்சமாக நடந்ததை நாமே கண்டிருக்கிறோம். அன்னிய மத உபாத்திமார்கள் நமது பெண்களுக்குக் கல்வி போதிக்கும் போது தங்கள் மதாசாரங்களின் சார் பாகவே போதிப்பார்களென்பது வெளிப்படை. நாமும் அப்படித்தானே செய்வோம்; இது மனிதனுக்கு இயற்கையல்லவா!

 

அன்னிய மதஸ்தர் நமது இந்து மதத்தை யடியோடொழிக்கப் பகிரங்கமாய்த் துசங்கட்டியிருக்கும் போது அம்மத உபாத்திமார்களிடம் நமது பெண் பிள்ளைகளை யனுப்புவதை விட நாம் செய்யவேண்டிய மதத்துரோகம், தெய்வத்துரோகம் வேறில்லை. பெண் பிள்ளைகளையுடைய பெற்றோரில் பலர் இன்னும் இவ்விஷயத்தில் தெரிந்தோ தெரியாமலோ, கண் மூடித்தனமாகவே நடந்து வருகிறார்கள்; நம்முன்னோர்கள் எவ்வளவோ ஆழ்ந்த யோசனையோடு தங்கள் திரிகால ஞானபலத்தால் அவசியமான தெனக்கண்டு ஏற்படுத்திய ஆசாரத்திற்கு முற்றும் மாறாக நடக்கிறார்கள். இரண்டொரு பெண்கள் புத்தியறிந்த பின்னும் பாடசாலைக்கு அனுப்பப்படுவதை இச்சென்னையில் கடந்த வாரம் கண்ணாரக்கண்ட நம் மனம் புண்பட்டுவிட்டது. இத்தகையோர்க்கு எப்போது தான் நல்லறிவுதித்து இத்தகைய துர் ஆசாரங்களையும், அன்னிய மத உபாத்திமார்களிடம் நமது பெண் பிள்ளைகளைக் கல்வி கற்க அனுப்புவதையும் ஆலகாலவிடம் போல் மதித்து அடியோடு விட்டொழிப்பார்களோ நாமறியேம்.

 

நண்பர்களே! மதாசாரம் குறைந்து, அக்கிரமம் அதிகரித்து, நீதிதவறி, நமது தெய்வீக மதத்திற்கு இடுக்கண் நேரும்போது தான் பகவான் எப்போதும் அவதாரம் செய்கிறார் என்பது சாத்தியம். இப்போது நாமே நம் மதத்திற்கும் நமது முன்னோர் ஏற்படுத்திய ஆசாரங்களுக்கும் அழிவு நேரிடத்தக்க வழியில் நடக்கிறோம். நமது தாய் நாட்டிற்குண்டாகும் துன்பங்களுக்கெல்லாம் இச்செய்கைகளே காரணம்.

கல்வி என்றால் வித்தை - வித்தை'என்பது வித் என்ற தாதுவிலிருந்து வந்தது. வித் = ஞானம். ஆகையால் ஞானத்தைப் பெறவே, ஞானசொரூபியாகிய கடவுளை யறியவே கல்வி கற்பது என்பது ஆன்றோர் துணிபு. அந்தோ! அத்தகைய அறிவாளிகள் வழியிலுதித்த நாம் இப்போது கடவுள் விஷயத்தை யடியோடு நீக்கிவிட்டு மற்ற கல்வியையே நம் அரிய மக்களுக்குக் கற்பிக்கிறோம். இதனினும் நாம் நமது சந்ததிகளுக்கும், தாய்நாட்டிற்கும், ஆண்டவனுக்கும் செய்யத்தக்க துரோகம், பெருஞ்சதி வேறென்ன உளது?

 

இதை யுணர்ந்து இனியேனும் நம்மவர் ஒரு மனதாய், ஒரே வைராக்கியமாய், அன்னிய மதம் போதிக்கப்படும் பாடசாலைக்காவது, அன்னிய மத உபாத்திமார்களிடமாவது நம்மக்களைக் கல்வி கற்க அனுப்புவதை யொழித்து, ஆரம்பத்திலேயே அவர்களுக்கு நமது மதக்கல்வியைப் போதிக்கும் முயுற்சியை யெடுத்துக்கொள்ள வேண்டுமாய் சச்சிதானந்தப் பரம் பொருளாகிய பகவானை யாவரும் பிரார்த்திப்போமாக.


ஓம் தத்ஸத்.

பத்திரிகாசிரியர்.

 

ஆனந்த போதினி – 1921 ௵ - ஜனவரி ௴

 

 

 

 

No comments:

Post a Comment