நல்லினஞ் சேர்தல்
கடவுளால் சிருஷ்டிக்கப்பட்ட இப்பூவுலகின் கண்ணுள்ள
ஜீவபேதங்களில் அதிகசிரேஷ்டமானது மானிடப்பிறவி. அதாவது ஓரறிவு உயிர்தொடங்கி ஆரறிவு உயிர்
இறுதியாயுள்ள எண்பத்து நான் குலக்ஷம் பேதமான ஜீவராசிகளுள் இது நன்மை இது தீமை எனப்
பகுத்துணரும் ஆறாம் அறிவானது இம்மக்கட்ஜாதி ஒன்றிற்கே உளது. இவை அடைய வேண்டியவை புருஷார்த்தங்களே.
அவ்வித புருஷார்த்தங்களை அடைவதற்குக் கல்வியே முக்கியமானது. ஆதலால் மானிடராய்ப் பிறந்த
ஒவ்வொருவரும் அதை விருத்தி செய்ய முயல வேண்டும். அவ்விதம் கல்வி கற்கினும் தம்மிலும்
முதிர்ச்சியடைந்து கல்வி கேள்வி ஒழுக்கங்களில் சிறந்து, தம்மையடை ந்தவரைத் தீயசெயல்களி
லிருந்து மீட்டு நற்செயல்களில் பயிற்றுவிக்கும் நல்லோர் துணையை நாட வேண்டும். அவ்விதம்
நாடினவர்கள் சீர்மையடைவார்கள். அதாவது:
"பாலோட ளாயநீர் பாலாகு
மல்லது
நீராய்
நிறந்தெரிந்து தோன்றாதாம் - றேரில்
சிறியார்
சிறுமையும் தோன்றாதா நல்ல
பெரியார்
பெருமையைச் சார்ந்து "
என்னும் ஆன்றோர் வாக்கியத்திற்கிணங்க நல்லோருடைய
துணையை நாடினவர்களுக்கு பரோபகாரத்தை ஆபரணமாகக் கொண்ட அந்நல்லோர் தம்மை'யடைந்தவர் தாழ்ந்தவரேனும்
மனமுவந்து கல்வி கேள்விகளைக் கசடறப் போதித்து பேதைமையை நீக்கி மேதையுண்டாக்கி இழுக்கெலா
மிரிய ஒழுக்கம் பயிற்றித் தம்மைப்போல சீர்மை பெறச்செய்வர். இதனை
"தெருண்ட மேலவர் சிறியவர்ச் சேரினும் அவர்தம் - மருண்ட
தன்
மையை மாற்றுவர் எனுமிது வழக்கே''
என நம் கவிச்சக்ரவர்த்தி யாகிய கம்பநாட்டாழ்வார்
கூறியுள்ளார். மேலும் நல்லோருடைய சேர்க்கையானது, கல்வியில் அவாவும், குருவினிடத்தில்
வணக்கமும், பழிப்பில் அச்சமும், கடவுளிடத்தில் பக்தியும், தீயோர் இடத்தில் பிரிவும்
உண்டாக்கி வாக்கில் சத்தியத்தை நிறுத்தி, யாவரிடத்தும் நன்கு மதிப்பை யுண்டாக்கும்.
இவ்விதகுணங்க ளமைந்த நல்லோருடைய நட்பை எவர்தாம் மறுக்க வல்லார்.
"ஆயின்மறை முதற்கலைக ளனைத்துமுணர்ந்
தறமறம் பாத்
தேயினிது
நன்றிது தீ தென்றுணர்த்து மவர் நட்பை
வீயினுந்தா மறப்பார்களோ மேதையோர் மறப்பரே
னாயினுங்கீழ்ப் பட்டவர்களவர்காணிந்
நானிலத்தே'' என்றும்,
"சமயம்வரி னிடித்துரைப்பார் தக்கவழிச்
செலச்செய்வார்
இமையவர்த முலகுறவு மிருளுலகம் பகையுமா
யமையவறி வுறுத்துவா ரந்தோ நூல் கற்றுணர்ந்த
கமையுடையார் நட்பெவர்க்குக் காண்கிடைக்கும்
அரிதரிது "
என்றும் கூறும் முதுமொழிக் கிணங்க நல்லவருடைய நட்பை
அடைந்தால் இந்நற்குணமுடைய பெரியோர்கள் எவ்விடத்தி லிருந்தாலும் தாங்கள் ஒருவர் மீது
வைத்த அன்பை மறக்கமாட்டார்கள். தம்மையடைந்தவர்கள்ளைக் கண்ட மாத்திரத்தில் நன்கு உபசரிப்பர்.
நல்லோரை அண்டினவர்களுக்குத் தீயோரால் ஓர் தீங்கு நேரிடினும் உடனே அந்நல்லோர் அதை நாசம்
செய்துவிடுவர். அதனால் தீயோர் கொடுஞ்செய்கை நல்லோரைச் சார்ந்தவர்கள்ளிடம் ஒன்றும் செல்லாது.
இத்தகைய அறிவுடையாரோடு பழகும் மனிதனுக்கு வேறெந்த நன்மைதான் பயவாது! ஆகையால் இத்தூயோர்களுடைய
நட்பானது. சிறந்ததாம் இன்னும்
''முத்திக்கு வித்தாகு முழுதுணர்ந்தோர்
பெருநட்பே
தித்திக்கு
நாடோறுந் தேவர் பெறற் கருந்திருவுஞ்
சித்திக்கும் படியருளுஞ் செப்பரிதால்.
......... ……………………….. …………………………… ..'”
எனப் புகழ்ந்து கூறும் நல்லோராகிய நட்பினர், உயிரானது
தேகமிளைத்த காலத்தில் தானுமிளைத்துச் செழித்த காலத்தில் தானும் செழிப்பது போல, தம்மை
யடைந்தவர் துன்புறும் போது தாமும் துன்புற்று அவர் மகிழ்ச்சியடையும் போது தாமும் மகிழ்ச்சியடைவார்
இத்தகைய அறிவோர்களுடன் ஒருவன் நட்புக் கொள்ளல் தகுதியே யன்றிப் புல்லோருடன் சிநேகம்
செய்தல் தகுதியாகாது. அவ்வாறு செய்யில் அவன் பெருந்துன்பங்களுக்குள்ளாகி நாசமடைவான்
என்பதில் ஐயமில்லை. இது பற்றியன்றோ,
''பல்லார் பகை கொளலிற் பத்தடுத்த
தீமைத்தே
நல்லார் தொடர் கைவிடல்''
"தம்மிற் பெரியார்த் தமரா வொழுகுதல்
வன்மையு ளெல்லாம் தலை'
என்று நமது தெய்வப்புலமைத் திருவள்ளுவநாயனரும் விளக்கி
இருக் கின்றனர். ஆதலால் நல்லோர்களுடைய சேர்க்கையை விட்டுப் பிறனுக்குத் துன்பத்தையுண்டாக்கி
அதை அவன் சகிக்க மாட்டாமல் விசனப்படச் செய்கின்றவர்களும், பிறரைப்பகைத்து அவர்களுக்குத்
தீங்கு விளைத்துக் கஷ்டத்தை யுண்டாக்கி மகிழ்கின்றவனும், ஒருவர் செழித்திருக்கும் காலத்தில்
நெருங்கி உறவாடி அவருடைய சுகங்களையெல்லாம் தாமும் அடைந்து, அவாகஷ்டப்படுங் காலத்தில்
அறியாதவர்கள் போல அவரை விட்டு நீங்கும் வர்களுமாகிய தீயோரினத்தைச் சாராமல், நல்லோர்களுடைய
சேர்க்கையை அடைய வேண்டும். இதனாலன்றோ நமது கல்விச் செல்வியாகிய ஒளவை பிராட்டியாரும்
''சேரிட மறிந்து சேர்'',.''நல்லிணக்க மல்லது அல்லல் படுத்தும்" என்று விளக்கியுள்ளார்.
இன்னும்,
இவ்வித அருமைக் குணங்களமைந்த நல்லோர்களைச் சகாயமாகக்
கொண்டு செய்யத்தக்க காரியங்களைத் தெரிந்து செய்து, செய்யத்தகாத காரியங்களைத் தெரிந்து
விடுக்க வேண்டும். ஆதலின் மக்கட் பிறப்பினும் ஆண் மக்களாயுதித்த ஒவ்வொரு வரும் பலவித
ஞான நூற்களைக் கற்றுணர்ந்த நல்லினத்தோடு சேர்ந்து, அவர்கள் அருளைப் பெற்று ஜனன மரணத்
துன்பங்களை நீக்கி எப்போதும் ஆனந்த சாகரமூழ்கிய முழு மனதோடு என்றும் அழியாத பேரின்
வாழ்வையடைய குமர குருநாதன் அருள் புரிவாராக.
சுபம், சுபம், சுபம்.
M. சுப்பிரமணிய அய்யர்,
உபாத்தியாயர், சக்கரமல்லூர், ஆற்காடு.
ஆனந்த போதினி – 1920 ௵ - ஆகஸ்ட் ௴
No comments:
Post a Comment