தீயோன்
(ரா.பா.மு. கனி)
ஒரு குற்றமும் அறியாத
அயலாரைத் தன் காரியங்களைச் சாதித்துக்கொள்வதற்காக நாசஞ் செய்பவனைப் பொதுவாகத் தீயோன்
என்கிறோம். தன் தலை தப்பிப்பதற்காக நிரபராதியான கோவலனுக்கு மரண தண்டனை வாங்கித் தந்த
வஞ்சிப்பத்தான் இதற்கு ஒரு உதாரணம். இவன். உண்மையிலேயே தீயோனாக இல்லாதிருந்தால் அடுத்தவன்
மேல் பொய்க் குற்றம் சாட்டி இருக்கமாட்டான். ஆனால், இவனையும் விடக் கடுமையான கொடியோர்களுண்டு,
அவர்கள் தங்களுக்கு எவ்விதமான லாபம் இல்லாமல் இருந்தாலும் கூட பக்கத்திலுள்ளோரைக் கெடுத்து
விடுவார்கள். அதில் அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சி. அது அவர்களுக்கொரு விளையாட்டு. இத்
தீயோர்களும் மனிதர்கள் தானே, ஏன் இந்த விதமாக மிரபராதிகளைக் கெடுக்கவேண்டும் என்றால்
அதற்கு விடையறிய மனிதனின் உண்மையான தன்மையை நாம் அறிந்து கொள்ள வேண்டுவது அவசியமாகும்.
உலகிலுள்ள ஒவ்வொரு
மனிதனுக்கும் அதிகார ஆசை (Love
of Power) இயற்கையாக உள்ளது, இதற்கு மற்றொரு பெயர் தான் குறும்பு செய்யும் ஆசை (Love of Mischief) என்பது.
உலகில் முதல் மனிதன் மகிழ்ச்சியோடு முதல் முதலில் சிரித்ததே ஒரு பிரயாணியைச் சித்திரவதை
செய்யும்போது தான் என்கிறார் ஒரு மேனாட்டு ஆசிரியர். இது ஒன்றே குறும்பு செய்யும் ஆசை
மனிதனுக்கு இயற்கையாக இருக்கிறது என்பதைக் காட்டும். மேலும், சிறு குழந்தைகள் ஈ, தவளை,
எலி முதலியவற்றை மகிழ்ச்சியோடு கொல்வது இந்த ஆசையினால் தான். இன்று பல கோடிமக்கள் தங்கள்
உயிரைத் திரணமாக மதித்துப் போரிடுகிறார்கள். இதன் காரணம் ஒரு சிலரின் அதிகார ஆசை தான்.
இந்த அதிகார ஆசை தான் நாடு பிடிக்கும் போராக, மக்களை மாய்க்கும் யுத்தமாக வெளிப்பட்டிருக்கிறது
என்பதை யோசித்தால் அதிகார ஆசைக்கு மற்றொரு பெயர் தான் குறும்பு செய்யும் ஆசை என்பது
தெளிவாகும். பாலினில் குண்டு மாரி பொழிந்து ஆயிரக்கணக்கான மக்களுக்குச் சேதம் என்றால்
நாம் ஏன் அதை லோடு படிக்கிறோம்? ஓரிடத்தில் ஒரு மனிதன் கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறான்
என்றால் நாம் ஏன் அதைப் போய்ப் பார்க்க அவாவுகிறோம்? ஒரு வீட்டில் தீப்பிடித்துக் கொண்டது
என்றால் அதைப் பார்க்க என் ஓடுகிறோம்? ஒரு மனிதனை நடுச் சந்தியில் தூக்கில் போடுகிறார்கள்
என்றால் அதைப் பார்க்க எத்தனை பேர் கூடுகிறார்கள்? காரணம், நம்மிடம் ஒரு மூலைமில் ஒளிந்து
கிடக்கும் குறும்பு செய்யும் ஆசை தான் என்கிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள். இன்றும்
கீழ்த்தரமான சில ஆத்மாக்கள்(?) சில மிருகங்களைச் சித்ரவதை செய்வதில், வேட்டையாடுவதில்,
உத்சாகமும் அக்கரையும் காட்டுவதைக் காணலாம். மனிதனுடைய மனதில் பலமான உணர்ச்சி எழுச்சிக்கு
(Excitement) உள்ள ஒரு இயற்கையான தன்மையே
இதற்குக் காரணம். இந்தத் தன்மையைக் கட்டுப்படுத்தத் தான் மானுஷீகக் குணம் (Humanity) அல்லது
நீதியுணர்ச்சியுள்ள கடமை (Moral
Obligation) மனிதனுக்கு அவசியமாகிறது. இந்த நீதியுணர்ச்சியோ, மானுஷீகக் குணமோ இல்லாதவன்
அடுத்தவரைக் கெடுப்பதில் ஆனந்தங் கொள்கிறான். அவனை நாம் தியோன் என்கிறோம்.
இலக்கியத்தில் அன்பர்களுக்குக்
காரணமாக வரும் தீயோர்கள் பலரைப்பற்றி நாம் படிக்கிறோம். கம்ப ராமாயணத்தில் இவர்களின்
வாழ்க்கை யம்சங்கள் பல காட்டப்படுகின்றன. ஆனால், இதில் காட்டப்படும் வாழ்க்கையிலும்
ஒரு சில நல்ல அம்சங்கள் இருந்து கொண்டு அவர்களிடம் நாம் அனுதாபம் கொள்ளும்படி செய்து
விடுகின்றன. உதாரணமாக, இராவணனைப் பாருங்கள். அவன் தருமத்தின் விரோதி, தவசிகளையும் மாதரையும்
துன்புறுத்தியவன், கற்பின் கொடியைச் சிறை வைத்தவன், களியாட்டங்களில் மயங்குண்டு கிடப்பவன்
என்றெல்லாம் படிக்கிறோம். ஆனால் அவனிடமும் ஒரு சில நல்ல குணங்கள் இருப்பதையும் காண்கிறோம்.
தவத்தில் வல்லவன், நான்கு வேதமும் கற்றவன், சங்கரனை பூஜிப்பவன், அஞ்சா நெஞ்சங் கொண்ட
வீரன், இசையில் தேர்ச்சியுள்ளவன், போரில் தான் இறந்து போனாலும் இராமன் பேர் உள்ளளவும்
தன்பெயரும் நிலை நிற்கும் என்ற நம்பிக்கை கொண்டவன். — இந்தவிதமான குணங்கள் அவன் மாண்டுகிடக்கும்போது
நம் கண்களில் கூடத் தண்ணீரைக் கொண்டு வந்து விடுகின்றன. அவன் தம்பி கும்பகருணன் பயங்கரமான
தோற்றத்தோடு இன்னொரு கொடியோனாக நம் கண்களில் படுகிறான். ஆனால், அவன் இராமன் சத்தியத்திற்காகப்
போர் செய்கிறான் என்று சொல்லும் போதும், தன் அண்ணன் குற்றங்களை இடித்துரைக்கும் போதும்,
செய்நன்றி கொல்லாதவனாக செஞ்சோற்றுகடன் கழிக்கப் போர்க்குச் செல்லும் போதும், 'திறந்
திறமாகி நின்ற கவிப் பெருங் கடலைச் சிந்தி'
இறுதியில் இராமனிடம் உருக்கமாகத் தன் தம்பி வீடணனுக்கு நற்பதவி யளிக்கும்படி வரம் வேண்டும்
போதும் நம் மனதை அவன் பக்கம் இழுத்து விடுகிறான். 'என்ன அற்புதமான மனிதனடா இந்தக் கும்ப
கருணன்!' என்று கூடச் சொல்லி விடுகிறோம். அது போலவே தான் இந்திரஜித்தும். முழுக்க முழுக்க வெறுக்கும்படியான தீயோர்கள் தமிழ்
இலக்கியத்தில் மிகக் குறைவு.
ஷேக்ஸ்பியரின் துன்பியல்
நாடகங்களில் (அனேகமாக எல்லாவற்றிலும்) துன்பியலுக்குக் காரணமாக நிற்கும் தீயோர்களுண்டு.
ஆனால், பலர் தங்கள் காரியங்களைச் சாதித்துக் கொள்வதற்காக எவ்வளவோ கொடுமைகளைச் செய்த
போதிலும், ஒரோ விடங்களில் தங்களிடமும் மனித ஹிருதயம் இருப்பதாகக் காட்டிக் கொள்கின்றனர்.
ஹேம்லெட்டில் வரும் கிளாடியஸ், லியர் மன்னனில் வரும் எட்மண்டு, மெக்பெத்தில்
வரும் மெக்பெத், மூன்றாம் ரிச்சர்டு அரசனில் வரும் ரிச்சர்டு மன்னன் ஆகிய கொடியோர்கள்
கூடத் தங்களது நற்செய்கைகளால் நம் அனுதாபத்தைப் பெற்று விடுகிறார்கள். ஒத்தல்லோவில்
வரும் இயாகோ (Iago) என்னும் கொடியோன் அனேகமாக நம் வெறுப்பு முழுவதையும் சம்பாதிக்கிறான்.
தன்னை முழுதும் நம்பும் ஒத்தல்லோவை அவன் அறியாமல் செய்த சிறு பிழைக்காக நாசஞ்செய்வது
மன்னிக்க முடியாததாகும். இரக்கம் சிறிதுமற்ற நெஞ்சினனாய் இயாகோ, தன் சொந்தக்காரனான
ஒத்தல்லோவுக்கு அழகிலும் கற்பிலும் மிக்க அவன் மனைவியின் மீது சந்தேகத்தை யுண்டாக்கிவிட்டு
அவளைக் கொல்லும்படி செய்கிறான். பிறகு தன் பிழையை உணர்ந்த ஒத்தல்லோ தன்னையே கொன்று
கொள்கிறான். இவர்களைத் தொலைக்க ஒரு கருவியாக உபயோகித்த ஒத்தல்லோவின் நண்பனையும் அங்கஹீனப்
படுத்துகிறான். தனது முட்டாள் நண்பன் ராட்டரிகோவிடமிருந்தும் வேண்டும் பணம் கறந்து
விடுகிறான். நாடக இறுதியில் இவன் பேரில் நமக்கு உண்டாகும் வெறுப்பு விவரிக்கக் கூடியதல்ல.
இந்த இயாகோவையும்
விடக் கொடியவன் ஒருவன் ஷேக்ஸ்பியரின் நாடகமொன்றில் வருகிறான். தனக்கு ஹிருதயம், மனசாட்சி
என்பனவே கிடையாது என்று அவனே சொல்கிறான். அவன் வரும் நாடகத்தின் பெயர் டைடஸ் ஆண்டிரோநிகஸ் (Titus
Andronicus). அக்கொடியோன் பெயர் ஆரோன் (Aaron). ஒரு கருப்பு மூர். இவன் செய்யும் பாதகச்
செயல்கள் அம்மம்மா! (ஷேக்ஸ்பியர் எப்படித்தான் கற்பனை செய்தானோ?) டை
டஸ் ஆண்டிரோநிகஸ் உரோமானியரின் சேனாதிபதி. அவன் காத் (Goths) ஜாதியாரை
வென்று அவர்கள் அரசி டமோரா (Tamora) வையும் அவள் மக்கள் மூவரையும், இந்த ஆரோன்
பிசாசையும் கைது செய்து உரோமாபுரிக்குக் கொண்டு வருகிறான். டமோராவின் மூத்த மகனை வழக்கப்படி
போரில் மாண்ட உரோமானியருக்காகப் பலி கொடுக்கிறான். உரோமாபுரிக்கு அப்போது தான் அரசனாக்கப்பட்ட
- அதுவும் டைடஸ் ஆண்டிரோ நிகஸால்-சேட்டர்னினஸ் (Saturninus) டமோராவின்
மேல் காதல் கொண்டு அவளைத் தன் அரசியாக்கிக் கொள்கிறான். இந்த ஆரோன் என்ற கருப்பு மூர்
ட மோராவின் ஆசை நாயான். அவன் தன்னைக் கைதியாகக் கொண்டுவந்த டைடஸ்மேல் வஞ்சந் தீர்த்துக்
கொள்ள எண்ணுகிறான். அதை அவன் செய்யும் முறைதான் அவன் உள்ள மற்ற மிருகம் என்று காட்டுகிறது.
டைடஸ் மகள் லாவினியா (Lavinia) என்ற அழகியை சேட்டர்னினஸின் தம்பியான பஸ்ஸியானஸ் (Bassianus) என்பான்
மணம் புரிகிறான். இந்த லாவினியாவின் அழகைக் கண்டு காமுறுகின்றனர் டமோராவின் மக்கள்
இருவரும். அவளை அனுபவிக்க அவர்களுக்கு ஒரு வழி சொல்லிக் கொடுக்கிறான் ஆரோன். ஆரோனுடைய
சூழ்ச்சிப்படி பஸ்ஸியானஸ் தன் மனைவி லாவினியாவுடன் நடுக்காட்டிற்கு வருகிறான். அங்கே
டமோராவின் மக்கள் இருவரும் அவனைக் கொன்றுவிட்டு லாவினியாவைக் கைப்பற்றுகின்றனர். அவர்களிடம்,
'நெல்லைக் கசக்கிவிட்டு வைக்கோலுக்
குத் தீ வைத்து விடுங்கள்' என்று போதிக்கிறான் ஆரோன். அதன்படி அவர்களிருவரும் லாவினியாவைத்
தங்கள் காமப்பேய்க்கு இறையாக்கிய பின்பு, அவள் நாக்கையும் இரண்டு கைளையும் துண்டித்து
அக்காட்டில் விட்டுச் செல்கின்றனர். தந்திரமான முறையில் ஆரோன், பஸ்ஸியானஸைக் கொன்ற
குற்றத்தை டைடளின் மக்கள் இருவரின் மேல் சுமத்தி, அரசன் நம்பும்படி செய்கிறான். ஆகவே,
அவர்களிருவரையும் தூக்கிலிடும்படி அரசன் உத்தரவிடுகிறான். இதுவிஷயத்தில் குறுக்கிட்டதாக
டைடஸின் எஞ்சிய லூசியஸ் என்ற ஒரு மகனையும் தேசப் பிரஷ்டம் செய்யும்படி செய்கிறான் ஆரோன்.
இவற்றால் மட்டும் அவன் மனம் திருப்தி யடையவில்லை.
வீரன் டைடஸ், உரோமாபுரிக்காக
எத்தனையோ போர்க்களங்களில் இரத்தஞ் சிந்திய டைடஸ், தன் இருபத்திரண்டு மக்களை நாட்டுக்காக
நடந்த போரில் பலி கொடுத்ததாகக் கூறும் டைடஸ், தன் மக்கள் இருவருக்கும் தூக்கு தண்டனை
கிடைத்ததே என்று மனம் புண்பட, அப் புண்ணில் வேல் கொண்டு குத்துவதுபோல் நாவும் கைகளும்
இழந்த அவன் மகள் செங்குருதி சோரப் பரிதாபகரமாக அவன் முன்வர, ஒன்றுந் தோன்றாதவனாக இருக்கிறான்.
அப்போது அவனிடம் வருகிறான் ஆரோன். அவன் மக்கள் இருவரும் கொலை தண்டனையைத் தப்பவேண்டுமென்றால்
அவன் தன் ஒரு கையை வெட்டிக் கொடுக்க வேண்டுமென்கிறான். அச்செய்தி டைடஸ்க்குச் சிறிது
ஆறுதலளிக்கிறது. தன் கை போனாலாவது தன் மக்கள் இருவரும் பிழைக்கட்டும் என்று போர்க்களங்களிலே
எதிரிகளைச் சின்னா பின்னப்படுத்திய தன் கைகளிலொன்றை ஆரோனைக் கொண்டே துண்டிக்கச் செய்து
அவனிடம் கொடுத்தனுப்புகிறான். ஆனால், சிறிது நேரத்திற்குப் பின் டைடஸ் தலையில் இடிவிழுவதுபோல்
அவன் முன்வருகிறது அவனுடைய அருமை மக்களின் இரு தலைகளும் அவன் துண்டித்துக் கொடுத்த
கையும்.
இத்துடன் கூட ஆரோன்
பிசாசின் வேலை நின்றுவிடவில்லை. அவன் டமோராவுடன் கள்ளத்தனமாகக் கூடியதால் அவள் பெற்ற
குழந்தையும் அவனைப்போல் கருப்பாகவே இருக்கிறது. அரசன் குழந்தையைக் கண்டால் தங்களுக்கு
ஆபத்து ஏற்படுமென்று அதை ஒரு தாதியிடம் கொடுத்து ஆரோனிடங் கொடுத்துக் கொன்று எறிந்துவிடும்படி
சொல்லியனுப்புகிறாள் டமோரா. ஆரோனுக்குத் தன்னிறத்தில் பிறந்த குழந்தையிடம் ஒரு பற்றுதல்
உண்டாகிறது. அது பிறந்தது வெளியில் தெரியாமல் இருப்பதற்காக, அது ஜனிக்கும் போது கூட
இருந்த மருத்துவச்சியையும் தாதியையும் தீர்த்து விடுகிறான்.
டைடஸ் ஆண்டிரோநிகளின்
குடும்பத்தை நாசஞ் செய்த இப்பாவி, டைடஸின் நாடு கடத்தப்பட்ட மகன் லூஸியஸ் என்பான் காத்
ஜாதியினரை உரோமானியரோடு போர்புரியத் திரட்டி வரும்போது, அவன் கையில் அகப்பட்டு விடுகிறான்.
அவனிடமிருந்த கருப்புக் குழந்தையைப் பிடுங்கிக் கொண்டு அவனைத் தூக்குமேடையி லேற்றுகிறார்கள்.
அப்போது தன் கருப்புக் குழந்தையைக் காப்பாற்றுவதாகச் சொன்னால் தான் பல ரசுஸ்யங்களை
வெளியிடுவதாக லூஸியஸிடம் சொல்கிறான். அதன்படி வாக்குறுதி செய்து கொடுத்தபின், அவன்
எப்படி டைடஸ் மகளைக் கற்பழித்து அங்கவீனப் படுத்தவும், அவள் கணவனைக் கொல்லவும், அந்தக்
குற்றத்தை ஒன்றுமறியா லூஸியளின் சகோதரர் இருவர் மேல் சுமத்தி அவர்களைத் தூக்கிலிடவும்
உதவினான் என்பதை விளக்குகிறான். "இதுமட்டுமா? நானில் லாவிட்டால் நீ இந்தமாதிரி
நாடு கடத்தப்படுவதற்கு வேறு என்ன காரணமிருக்கிறது? உன் தகப்பன் கையைத் துண்டிக்கவும்
நான் அவரை ஏமாற்றினேன். அப்போது நான் சிரித்த சிரிப்பில் என் சுவாசப் பையே வெடிக்கப்
பார்த்தது. பிறகு உன் இரு சகோதர்களின் தலைகளையும் உன் தகப்பன் கையையும் அவரிடம் கொடுத்தபோது,
நான் ஒரு சுவருக்குப் பின்னால் நின்று கவனித்தேன். அவர் கண்ணீர் விடுவது கண்டு நான்
சிரித்த சிரிப்பில் என் கண்களிலும் தண்ணீர் வந்துவிட்டது. இதை அரசியிடம் சொன்ன போது
அவள் அப்படியே மயங்கிவிட்டாள். இந் நற்செய்திக்காக எனக்கு இருபது முத்தங்கள் தந்தாள்."
லூஸியஸ். - இவ்வளவு
பாவச் செயல்களையும் செய்ததற்காக கொஞ்சமும் வருந்தவில்லையா?
ஆரோன்: - ஆமாம்,
இப்போது நான் வருந்துகிறேன்- இதுமாதிரி இன்னும் ஆயிரம் செயல்களாவது செய்யவில்லையே என்று.
ஒரு மனிதனைக் கொல்வது அல்லது அவன் சாவிற்கு வழிதேடுவது, ஒரு கன்னியைக் கெடுப்பது அல்லது
அதைச் செய்ய வழிகோலுவது, நிரபராதிகள் பேரில் குற்றஞ்சாட்டி நானே (அவர்கள் அதைச் செய்தார்களென்று)
சத்தியம் செய்வது, இரு நண்பர்களுக்குள் கடும் பகையை உண்டாக்கிவிடுவது, எழைமக்களின்
ஆடுமாடுகளைச் சிதறிச் செல்லும்படி செய்வது, அவர்கள் விழுந்து சாக வழிசெய்வது, தானியமிருக்கும்
இடங்களுக்கும் வைக்கோல் போர்களுக்கும் இரவில் தீ வைத்து, அவற்றிற்கு உரியவர்கள் தங்கள்
கண்ணீரால் அவற்றை ணைக்கும்படி செய்வது.- இதுபோன்ற இன்னும் ஆயிரம் செயல்களைச்
செய்ய வில்லையே என்றுதான் நான் வருந்துகிறேன். எத்தனையோ தடவை இறந்தவர்களைப் புதை குழிகளிலிருந்து
தோண்டி எடுத்து, அவர்களின் உற்றார் தங்கள் துக்கங்களை எல்லாம் அனேகமாக மறந்துகொண்டு
வரும்போது, அவர்களின் வாசலில் என்ரறிந்திருக்கிறேன். அவர்களின் (இறந்தவர்களின்) தோளில்,
பச்சை மரத்தின் பட்டையில் எழுதுவதுபோல என் கத்தியால், 'நான் மாண்டுபோனாலும் உங்கள்
துக்கம் மாண்டுபோக வேண்டாம்' என்று உரோமானிய எழுத்தில் செதுக்கி இருக்கிறேன். ஆயிரம்
பயங்கரச் செயல்களைஒரு ஈயைக் கொல்லும் லகுவுடன்
செய்து முடித்திருக்கிறேன். ஆனால் அவைபோல் இன்னும் பதினாயிரம் செய்ய முடியாமல் போகிறதே
என்பதைப்போல் எதுவும் என்னை வருத்தவில்லை.
இந்த மாதிரிப் பிசாசுக்குத்
தூக்கு தண்டனை போன்ற இனிமையான சாவைக் கொடுக்கக் கூடாதென்று, அவனைத் தூக்குமரத்தி லிருந்து
இறக்கிக் காவலில் வைக்கும்படி உத்திரவிடுகிறான் லூஸியஸ் . நாடகத்தின் இறுதியில் நெஞ்சளவு
ஆழம் வரை ஆரோனைப் புதைத்து, உணவுக்காகக் கத்தியே அவன் சாகும்படி செய்ய உத்திரவாகிறது.
அப்போதுங்கூட இப் பிசாசு தான் செய்த பாவச் செயல்ககளுக்காகச் சிறிதும் வருந்தவில்லை.
“நான் இஷ்டப்பட்டிருந்தால் பதினாயிரம் மிக மிகக்
கொடுமையான தீமைகளைச் செய்திருப்பேன். என் வாழ்க்கையிலேயே நான் ஏதாவது ஒரு நல்ல காரியம்
செய்திருந்தால் அதற்காக என் மனங் கொண்ட மட்டும் வருந்துகிறேன்'' என்று தான் அவனுடைய
கடைசி வார்த்தைகள் வெளிவருகின்றன.
'இரக்கம் என்று ஒரு
பொருள் இல்லாத நெஞ்சினர் அரக்கர்' என்று கம்பர் நெஞ்சில் ஈரமில்லா மாக்களைக் குறிப்பிட்டார்.
அவர்களையும் நல்லவராக்கும் இத் தீயோனுக்கு நெஞ்சம் என்றே ஒரு பொருள் இருந்திருக்க முடியாது.
ஆனந்த போதினி – 1944 ௵ - ஜுன் ௴
No comments:
Post a Comment