Friday, September 4, 2020

 

பகவத்கீதை வசனம்

தொகுப்பு

சீடன்

ஶ்ரீமான்

ஆரணிகுப்புசாமி முதலியாரவர்கள்

இயற்றியது.

 

 

 

மாத இதழ்

1923 ஜுலை யில் இருந்து 1926 செப்டம்பர் வரை

உள்ள இதழ்களில் இருந்து தொகுக்கப்பட்டது

 

 

 

 


தொகுப்பில் உள்ள அத்தியாயங்கள்

 

6 - வது அத்தியாயம். 3

7 - வது * மாயாரூப அத்தியாயம்.. 6

8 - வது * எழுவகை வினாவுரை அத்தியாயம்.. 12

9 - வது மாயாவிகார * அத்தியாயம்.. 20

10 - வது விபூதியோக அத்தியாயம்.. 27

11 - வது விஸ்வரூப அத்தியாயம்.. 31

12- வது பக்தியோக அத்தியாயம்.. 37

13 - வது க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞவிபாகயோக அத்தியாயம்.. 40

14 - வது * குணாதீத அத்தியாயம்.. 45

15 - வது * பிரபஞ்சம் அத்தியாயம்.. 49

16 - வது தேவாசுர சம்பத்து விபாகயோகம் அத்தியாயம்.. 53

17 - வது குணவிகாரம் அத்தியாயம்.. 57

18 - வது அத்தியாயம்.. 72

 


 

பகவத்கீதை வசனம்

6 - வது அத்தியாயம்.

 

(பார்த்தன் கேட்ட வினாவிற்கு விடையாகப் பகவான் மனோநிக்கிரகம் செய்ய உபாயங் கூறுகின்றார்.)

 

ஏ பார்த்த! நீ கூறியவாறு மனதை யடக்குவது அரிதேயாயினும் அப்பியாசத்தாலும், வைராக்கியத்தாலும் நிக்கிரகம் செய்யலாகும். இதில் ஐயமில்லை. கரணங்களை வசம் பண்ணினவர் யோகசித்தி பெற்றவராவர்.

 

ஓர் மதயானையை அங்குசமின்றி யடக்கமுடியாது. அதுபோலவே மனதை யுத்திகளால் வசப்படுத்த வேண்டும். ஞானேந்திர கருமேந்திரி யங்களை அடமாய் நிக்கிரகம் பண்ணுவது போல் மனதைச் செய்ய முடியாது. மனதை யடக்குவதற்குள்ள உபாயங்களில்,

 

1 - வது உபாயம் - அத்தியான்ம வித்தையாம்: - அதாவது நித்தியா நித்திய வஸ்து விவேகத்தால் தேகாதிப் பிரபஞ்சமாகிய காணப்படும் வஸ்துக்கள்யாவும் அநித்தியம் சடம் துக்கம் என்ற நிச்சயம் உதித்தால் அவற்றிலுள்ள ஆசை யொழியும். மனம் இச்சா சொரூபமானதால் இச் சையொழிந்தால் விறகின்றிய தீப்போல் மனம் மாயும். இதுவே உத்தம மார்க்கமாம்.

 

2 - வது சாதுசங்கம் - தத்துவ விசாரத்தை உணரக்கூடாதவர்களுக்கும் அதை மறக்கும் சுபாவமுடையோர்க்கும் சாது சங்கமே மனநிக்கிரகம் செய்ய உபாயமாம். சாதுசங்கத்தால் அடிக்கடி தத்துவ உணர்ச்சியும், சிந்தனையும் உண்டாகும். இவையே வைராக்கியம் எனப் பகவான் கூறியது.

 

3 – வது பிராணனை யடக்கல் - குருமூலமாய் பிராணாயாம அப்பியாசத்தில் திடமுண்டாவதாலும், யுத்தியாலும் பிராண சலனம் அடங்குகிறது. அது அடங்க மனமடங்கும். இதுவே அப்பியாசத்தால் மனவொடுக்கம் பெறுவதாம். (முக்கியமாய் இச்சை யொழிவே மனம் ஒடுங்குதற்குபாயமாகும். அப்போது மனம் தானே யொடுங்கும். மனம் எழற்கு மூலமாயுள்ளது இச்சையே. இச்சை யொழிந்தால் உலக வாசனையே யொழியும். அதோடு நாமரூபநாட்டம் ஒழியும். அது ஒழியின் ஞானோதயமுண்டாகும். உலகசம் பந்தமான யாவற்றையும் வெறுத்தாலன்றி மோக்ஷம் கிட்டாது. "மனநாசமே ஞானத்திற்கு முக்கிய சாதனம். மனமே மாயை. இச் சையே மனதின் சொரூபம். இச்சை யொழியின் மனம் மாளும். ஆதலின் இச்சையே மாயையின் சொரூபம்; இச்சாநாசமே மோக்ஷம் " என்று வசிஷ்ட முனிவர் ஸ்ரீ இராமருக்குக் கூறினார்.

 

 

''அறிபவற்றாசை யறிலது தானே

யவித்தையு மனமுமாண் டதுவாம்
      பொறிபயி லாசை துன்பமா நிராசை
      புகலரு முத்தியா மின்பம்
      பிறிவறு தனது முயற்சியா லுண்டாம்

பேதைய ருண்டெனு மவித்தை
      செறிதரு பொய்யாய் நாமமாத்திரமாய்ச்
      சித்தெனத் தேர்ந்திடிலிலதாம்.
      பிறப்பெனு மாயைக் கரையதா யெங்கும்

பிறிவரு பெரும் பொரு டோன்றி
      லிறப்புறு மாயைக் கிச்சையே வடிவா
      மிதனுடை நாசமே வீடு

சிறப்பில் சங் கற்பம் சிதைந்திடி லிதுதான்
      றேய்ந்திடுஞ் சித்தெனுங் கதிரோன்
      புறப்படி லிதய விசும்பில்வா தனையாம்

பொங்கிருள் போமெனப் புகல.''              (ஞானவாசிட்டம் - உற்பத்திப்பிரகரணம்)

 

அவரவர்கள் தரத்திற்குத் தக்கபடி மேலே கூறப்பட்ட உபாயங்களில் ஒன்றால் மனதை யடக்க வேண்டுமேயன்றி முரட்டுத்தனமான அடத் தால் மனதை யடக்கமுடியாது. " மனதை மனதாலேயே வெல்லவேண்டும், மாயையை மாயையாலேயே வெல்லவேண்டும்'' என்றே ஆன்றோர் கூறியுளர். அதாவது, மன நிக்கிரகம் என்றது ஈண்டு மனதின் ரசோதமோ குணங்களின் ஒழிவேயாகும். இதுதான் முதலில் வரவேண்டும். சத்துவகுணமாகிய மனதால் இரஜோ தமோகுணங்களை வெல்லவேண்டும். பிறகு சமாதி யனுபவத்தில் அச்சத்துவகுணமாயையும் விலீனமாகிவிடும்.


 "கருதி மலத்தான் மலமறுக்குங் காருவென்ன மாயைதனைப்
 பெருமா யையினாற் செறல்வேண்டும்.........''                          (வாசிட்டம்)


 'இம்பரி னஞ்சை நஞ்சா லிரும்பினை யிரும்பா லெய்யும்
 அம்பினை யம்பாற் பற்று மழுக்கினை யழுக்கான் மாய்ப்பர்

 வம்பியன் மாயை தன்னை மாயையான் மாய்ப்பர் பின்னைத்
 தம்பமா மதுவுங் கூடச் சவஞ்சுடு தடிபோற் போமே.''                  (கைவல்யம்)

 

(யோக முயற்சியில் யோகசித்தியடையாது இடையில் மறித்தவன் என்ன பலனையடைவான் என்று அர்ச்சுனன் வினவுகிறான்.)

"ஏ பரந்தாம! ஒருவன் சிரத்தையோடு யோகாப்பியாசம் செய்துகொண்டிருந்து மரணகாலத்தில் அதை மறந்து இறப்பானாயின் அவன் எக்கதி யடைவன்? ஞானசித்தியின் பொருட்டு கர்மோபாசனைகளைக் கைவிட்டவன் மோகமுடையவனாதலின் யோகசித்தியடையான். அத்தகையவன் மரண மாயின் எக்கதியடைவான்?

 

அடியேன் மனத்திலுதித்த இந்த ஐயத்தை நீக்கவல்லோர் தங்களை யன்றி வேறொருவருமில்லை'என்ற பார்த்தனை நோக்கி பரமேசுரராகிய பகவான் பின் வருமாறு அருளிச் செய்கின்றார்: -

 

ஏ கிரீடி! பொய்யான சம்சாரபந்தங்களில் சம்பந்தப்படாத அறிவை யுடைய யோகப்பிரஷ்டர் இகலோகத்தும் பரலோகத்தும் விநாசமடைவதில்லை. ஏனெனில் அவர்கள் எப்போதும் மெய்யான பிரமவிசாரத்தை விட்டவர்களல்ல.

 

யோகம் முடிவு பெறாது இடையே மடிந்தவன், அசுவமேதாதி பலயாகங்களைச் செய்தவன் அடையத்தக்க பிரம்ம உலகத்தை யடைந்து அதில் துன்பமின்றி பிரம்மன் ஆயுள் பரியந்தம் நல்ல போகங்களை யனுப் வித்துப் பிறகு செல்வமும், சுத்தமும், குணமுமுடைய மகா சக்கிரவாத்தி (ஜனகனாதியர் போன்றவர்கள்) வீட்டில் ஜன்மத்தையடைவன். அவன் பூர்வம் அனுபவித்த போகவாசனையிருத்தலின் அவ்வாறு ஜன்மமடைவன். இகபர போகங்களின் இச்சையற்ற வைராக்கியமுடையவனான யோகப் பிரஷ்டன், விஷயபோகவாசனை யில்லாததால், புண்ணியவான்களடையத் தக்க உலகத்தையடைந்து, பிரம்ம வித்தையும் யோகாப்பியாசமுமுடைய தரித்திரராகிய பிராம்மணர் குலத்தில் பிறந்து, அதில் அடையத்தக்கனயாவுமடைந்து, பின்னும் முன் ஜன்மத்தில் அனுஷ்டித்து மரணகாலத்தில் மறந்த யோகத்தை வருத்தமில்லாமலே அடைவான்.

 

இவர்களிருவரில் முதல் கூறப்பட்ட யோகப்பிரஷ்டனை விட இரண்டாவது யோகபிரஷ்டன் விசேஷமாம். ஏனெனில் முதல் யோகப் பிரஷ்டன் செல்வவந்தன் குடியிற் பிறப்பதால் மனதைக் கலக்கத்தக்க பலவித நிமித்தங்கள் அவனுக்குப் பிராப்தமாகின்றன. தரித்திரன் குடும்பத்திற் சனித்த இரண்டாவது யோகப்பிரஷ்டனுக்கு இயல்பாகவே அத்தகைய நிமித்தங்களில்லை. ஆயினும் இருவருக்கும் முயற்சியில்லாமலே முன்சன் மத்தின் முடிவில் மறந்த யோகாப்பியாசம் தானே வந்தெய்தும் - பூர்வ இதய அனுபவித்தவர்கள்) ஆம், குணமும், யாராகிய பிரார்து, பிரம்ம வித்தால், புண்ணியவனான அப்பியாசமே மறுபடி அவர்களை யதில் முயல்விக்கும். பூர்வஜன்ம ஞான வாசனை அற்பகாலாப்பியாசமா யுள்ளதேனும், இவர்களைப் போகங்களில் விருப்பங்கொள்ளா வண்ணம் தடுத்துத் தன் வசம் செய்து கொள்ளும்.

 

ஏ பார்த்த! விஷயங்களிற் செல்லும் மனமானது நிலைத்து நிற்கப் பெறாதவனாயினும், ஓடுமனதை யோடாது தடுக்க அதிகப் பிரயத்தனஞ் செய்யும் யோகியானவன், பல ஜன்மங்கள் சிரவணாதிகளைச் செய்தாயினும் (அச்சன்மங்களில் செய்யும் புண்ய கருமத்தின் பலத்தால் முடிவான ஜன்மத்தில்) பிரம்மான்ம ஐக்கியமாகிய முத்தியை யடைவான்.

(அர்ச்சுனனுக்கு முன் சொன்ன யோகத்தில் சிரத்தை யுண்டாகும்படி பகவான் பின்வருமாறு அருள்கின்றார்.)

 

ஏ பார்த்த! சாந்திராயண முதலிய எல்லாத் தவங்களையும் செய்தவனைக்காட்டிலும், சகல சாத்திரங்களையும் கற்றுணர்ந்தோனைக் காட்டிலும், அநுபவியாது ஒழியாத யாகாதிகர்மங்கள் அனைத்தும் செய்தவனைக் காட்டிலும், மனோநிக்கிரகம் செய்து, தத்துவஞானம் பெற்று, விஷயவாசனையற்ற யோகியே மேலானவன், நீ இப்படிப்பட்ட யோகத்தையே அடையக்கடவாய்.

 

(இப்போது பகவான் எல்லா யோகத்தினும் ஞானயோகமே சிறந்ததெனக் கூறியருள்கின்றார்).

 

ஏ பார்த்த! இருவினைகளை யளிக்கும் கர்மங்களனைத்தையும் விலக்கும் அடயோகி முதலிய எல்லா யோகிகளினும், மனதையும் அன்பையும் சதா என்னிடத்தே பதியவைக்கும் ஞானயோகி யொருவனே எனக்குப் பிரியமானவன்.

 

["அவனருளாலே யவன்றாள் வணங்கி" என்றபடி, ஈசுவரன் அருள் பெற்றாலன்றி மோக்ஷம் சித்திக்காது.] அவனிடத்து அத்தியந்த பக்தி வைத்தலே அவனருள் பெறற்கு மார்க்கமாம். ஆதலின் பக்தியின்றி எத்தகைய சாதனங்களைச் செய்யினும் பயனில்லை. அன்பே சிவமாதலின் நாம் அன்புருவமடைந்தாலன்றி அவனையடைதலும் அவனில் கலத்தலும் இலையாம். பனிக்கட்டி கடலில் மிதக்கினும் அது கடலுக்கு வேறாகவே பிரிபடக்கூடியதாக விருக்கிறது. ஆனால் அது கறைந்து கடல் போல் ஜல உருவமடைந்தால் உடனே பிரிக்கக் கூடாதபடி கடலோடு கலந்து விடுகிறது. அதுபோல் நாம் அன்புருவமடைந்தாலன்றி அன்புருவமான சிவத்தோடு கலக்கமாட்டோம்.

"அன்புஞ் சிவமு மிரண்டென்ப ரறிவிலா
 ரன்பே சிவமாவ தாரு மறிகிலா
 ரன்பே சிவமாவ தாரு மறிந்தபின்

 னன்பே சிவமா யமர்ந்திருந் தாரே.”                                  (திருமந்திரம்)

 

இவற்றால் மோக்ஷப்பிரயத்தனம் செய்வோர்க்கு பக்தி இன்றியமையாததென்று நன்குணரலாம்.

(இந்த ஆறத்தியாயங்களும் பிரதமஷட்கரூப கருமகாண்டமெனவும் கூறப்படும். இவற்றில் துவம்பதார்த்தம் நிரூபணம் செய்யப்பட்டது. இனி'' மனதையும் அன்பையும் என்னிடம் வைத்தவன்'' என்ற வாக்கியங்களால் குறிப்பிக்கப்பட்ட பக்தியோகத்தையும் அதற்கு விஷயமான தத்பதார்த்தத்தையும் நிரூபணம் செய்ய, இன்னும் ஆறு அத்தியாயங்களால் உபாசனா காண்டம் அருளப்படும்.)

 

ஆறாவது அத்தியாயம் முற்றிற்று.

7 - வது * மாயாரூப அத்தியாயம்

[* வடநூலில் ஞானயோகம் என்று பெயர்]

 

[சர்வ கர்மங்களின் சந்நியாச ரூபமான சாதனம் பிரதானமாகவுள்ள முதல் ஷட்கத்தால் (6 அத்தியாயங்களால்) ஸ்ரீ பகவான் யோகத்தோடு கூட துவம்பத இலட்சிய ரூபமான ஞேயவஸ்துவைத் திருவாய் மலர்ந்தருளினர். இப்போது பிரம்மத்தின் பிரதிபாதனமே முக்கியமாகவுடைய இம்மத்திய ஷட்கத்தால் தத்பதரூபமான பரமான்மாவைக் கூறியருள்கின்றார். பகவத் சேவையைப்பற்றி கூறுவதற்காக இந்த ஏழாம் அத்தியாயம் ஆரம்பிக்கப்படுகிறது. இங்கு பகவானை எத்தன்மைய சொரூபமாக சேவிக்கவேண்டும், பகவானது சொரூபத்தில் மனமானது எவ்வாறு நிலைபெறும் என்ற கேள்விகளை அர்ச்சுனன் கேட்க வேண்டும். அவன் கேட்காதிருந்தும் பரமகிருபா மூர்த்தியாகிய பகவானே அக்கேள்வி களுக்கு விடையருள்கின்றார்.]

 

இலக்ஷமீகாந்தனாகிய ஸ்ரீ பரந்தாமன் அர்ச்சுனனை நோக்கிக் கூறுகிறார்: - 'ஏ பார்த்த! மோக்ஷமடையும் பொருட்டு அன்போடு என்னையே சரண்புகுவதாகிய யோகத்தைப் பயிலும் யோகியானவன் ஐயமின்றி என்சொரூபத்தை யெவ்வாறு அறிவானோ அதைக் கூறுதும் கேட்பாயாக.

 

(அந்த பரமேஸ்வரனது சொரூபஞானத்தில் அதிகாரிகளை யபிமுகமாக்கும் பொருட்டு அந்த ஞானத்தின் அருமை பெருமைகளைப் பகவான் புகழ்ந்து கூறுகிறார்.]

 

ஏ அர்ச்சுனா! அழியத்தக்க மாயையினால் மறைக்கப்படாத மனத்தினிடை என் சொரூபத்தை உள்ளபடி உண்மையாக அறிந்திருப்பவர்கள் அறியாத பதார்த்தம் ஒன்றுமேயில்லை. ('என் நிஜ சொரூபத்தை யறிந்தவன் யாவற்றையு மறிந்தவன்'என்றபடி.)

 

இத்தகைய பெருமைவாய்ந்த எனது சொரூபஞானமானது என தருளின்றிக் கிட்டுவதருமை. பல்லாயிரம் மனிதர்களில் ஒருவனே எனது சொரூபஞானத்தை யடைய மனம்வைத்து முயல்வான். அப்படி முயலும்பல்லாயிரம் பேரில் ஒருவனே என் சொரூபத்தை யுள்ளவாறுணர்வான்.

 

[விசாரித்துப் பார்க்கும் போது இல்லாமற் போவதாலும், ஞானோதயத்தில் ஒழிந்து போவதாலும் மாயை அழியத்தக்கதென்றார். சித்தசுத்தி வாய்ந்து ஆசையொழிந்தவிடத்து மாயையின் மறைப்பு நீங்குவதால் அத்தகையோர் மனம் மாயையால் மறைக்கப்படாதது என்றார். தேவர்கள் முதலிய பேர் சங்கு சக்ர கதாகட்க கோதண்டபாணியும் இலக்ஷ்மீ சமேதனுமாகிய பகாவனை யறிந்திருக்கிறார்களெனினும் அது பகவானது உண்மை வடிவமன்றாம். அவரைப் பிரத்தியகான்மாவிற்கு அபின்னமான பிரம்மசொரூபமாய் யுணர்ந்தவர்களே அவரது நிஜ சொரூபத்தை யுணர்ந்தவராவர்.]

 

ஏ பார்த்த! மண், நீர், தீ, வாயு, ஆகாயம், மனம், புத்தி, அகங்காரம், இவ்வெட்டுவிதமான அபரப் பிரகிருதியினும் வேறாய் உலகின்கண்ணுள்ள அனைத்தையும் தாங்கிக்கொண்டு தேகத்தின் கண்ணும் சீவரூபமாய் நிற்பது எனது மாயையேயாகும். இச்சீவவடிவ பரப்பிரகிருதியே உலகனைத்தையும் தரித்திருப்பது. இவ்வுலகிலுள்ள சேதனா சேதனங்களனைத்தும் மேற்கண்ட இரண்டு பிரகிருதிகளாலும் உண்டாகின்றவைகளே.

 

ஏ அர்ச்சுனா! பூதங்களனைத்தும் இவ்விரண்டு பிரகிருதிகளின் காரியங்களே யென்பதை யுனதறிவினால் நிச்சயித்துணர்வாயாக. நானே சீவவடிவத்தால் பிரவேசித்து இந்நாமரூபத்தோற்றமாகிய யாவற்றையும் தாங்கி நிற்கிறேன். என்னின் வேறாக எந்தப் பொருளும் ஒரு பொருளைத் தாரணம் செய்யும் சமர்த்துடையதல்ல. ஆகையால் பிரபஞ்சத்தின் உற்பத்திக்கும் நாசத்திற்கும் நானே காரணன்.

(இப்போது பகவான் பரமேசுவரனான நானே எனது மாயாசக்தியால் சிருட்டித்து இருத்துச் சங்கரிக்கிறேனாதலில், உண்மையில் எனக்கயலாக ஒரு பொருளுமில்லை யென்று அருளிச்செய்கின்றார்.)

 

ஏ பார்த்த! யாவற்றிற்கும் காரண பூதமாகவுள்ள என்னையன்றி இப்பிரபஞ்சத்தைத் தாங்கத்தக்க பொருள் வேறெதுவுமில்லை. பல வர்ணமான அனேகம் மணிகளினிடையே யொரு நூலானது சென்று கோர்வையான அம்மணிகளைத் தாங்கி நிற்பது போல, பல பேதங்களாகக் காணப்படும் எல்லா வஸ்துக்களிலும் நானே அந்தரியாமியாய் நின்று அவையனைத்தையும் தாங்கும் தன்மையைக் கூறுதும் கேட்பாயாக.

 

சகல ஜலங்களிலுமுள்ள இரசதன்மாத்திரை வடிவ மதுரம் நானாகின்றேன். சூரிய சந்திரர்களிடத்துள்ள ஒளி நானாகின்றேன். வேதங்களிலுள்ள பிரணவம் நானாகின்றேன். ஆகாயத்திலுள்ள ஒலி நானாகின்றேன். பிருதிவியிலுள்ள கந்தம் நானாகின்றேன். அக்னியிலுள்ள உஷ்ணம் நானாகின்றேன். சர்வ புருடர்களிடத்திலுமுள்ள ஆண்மை நானாகின்றேன். சகலப் பிராணிகளிடத்துமுள்ள சீவனமும் நானாகின்றேன்.

 

அறிவாளிகளிடத்துள்ள அறிவாகிய யுக்தி நான். தவசிகளிடத்துள்ள தவம் நான். புகழ்ச்சிபொருந்தினவர்களிடத்து புகழ் நான். வீரர்களிடத்துள்ள வலிமை நான், சத்துவம் இராசதம், தாமதம் என்ற மூன்று குண பேதமாய் விளங்காநின்ற சகல பொருள்களும் பரமேசுரனாகிய என்னிடத்தே தோன்றுகின்றன. அவை பற்றி நிற்பதும் என்னையே. ஆனால், 

ஏ அர்ச்சுனா! அக்கற்பிதமான பதார்த்தங்களில் நான் தோன்றுவதில்லை. நான் அவற்றில் சாட்சிமாத்திரமாக நிற்பனேயன்றி அவற்றை யாதாரமாகக்கொண்டிரேன். இப்போது நான் கூறிய மயக்கத்தக்க முக்குணங்களின் வயப்பட்டு விவேகமிழந்திருக்கின்ற உயிர்களனைத்தும் எக்குணங்களையும் கடந்து நிற்கும் பரமேசுரனாகிய என்னை யறியமாட்டா.

(அநாதியாகிய மாயையின் முக்குண வயப்பட்ட உயிர்களனைத்தும் சுதந்தரமின்மையின் முக்குண வடிவமாகிய மாயையை நிவர்த்திசெய்யச் சக்தியுடையவனல்லவே என்னும் அர்ச்சுனன் சங்கைக்குப் பகவான், அந்நிய உபாயங்களால் மாயாநிவர்த்தி யுண்டாகாதெனினும், ஈசுரபக்தியால் உண்டாகும் தத்துவஞானத்தால் மாயாநிவர்த்தி கூடும் என்று அருளிச் செய்கின்றார்.)

 

ஏ பார்த்த! இம் முக்குண சுபாவத்தையுடைய என் மாயையை வெல்வது யாவர்க்கும் அரிதே. என்னையே எப்போதும் மெய்யன்போடு வழிபடும் மனமுடையோர் மட்டுமே தத்துவ ஞானத்தால் இம்மாயையை நிவர்த்திக்கக்கூடும்.


     அர்ச்சுனன் “எ பகவன்! உம்மைச் சரணடைந்து பக்தியோடு சிந்திப்பதினாலேயே இம்மாயை வெல்லக்கூடுமெனின், வேறு எவ்வழியாலும் ஒழிக்கக்கூடாத இம்மாயையை நிக்கிரகம் செய்யும் பொருட்டு யாவரும் உம்மையேன் சரணமடைவதில்லை?” என்று வினவியதற்குப் பகவான் அருளிச் செய்கின்றார்: -

 

      “ஏ பார்த்த! பூர்வ ஜன்மங்களிற் செய்த பாப கன்மங்களின் வலியால், உள்ளம் பாழாகி, இது நமக்கு நன்மையளிக்கும், இது நமக்கு தீமையளிக்கும் என்ற விவேகம் குன்றி மாயையின் வயப்பட்டோரும், மூடரும், இடம்பம், அகங்காரம் முதலிய அசுர பாவத்தை யடைந்தவரும் என்னைப் பூஜியார்கள். ஆயினும் என்னைப் பூஜிப்போரும் சிலர் உளர். அவர்களியாரென்பதைக் கூறுதும் கேட்பாயாக.

 

      (1) உலகபோக சம்பந்தமான தனம், ஸ்திரீ, புத்திரர் முதலிய ஐசுவரியங்களை யடைய விரும்புவோர்,

      (2) ஆபத்தையடைந்து அதினின்று தப்பவிரும்புவோர்,

      (3) இது நித்தியம் இது அநித்தியம் என்பதையறிந்து ஜனனத்தை யொழிக்கும் பொருட்டு ஞானமடைய இச்சிப்போர்,

      (4) எனது வாஸ்தவ சொரூபத்தைச் சாக்ஷாத்கரித்த மெய்ஞ்ஞானி, இந்நால்வரும் தத்தம் சக்திக்குத் தக்கபடி என்னை யாராதிக்கும் தவமுடையவர்களாம்.

 

      இந்த நால்வரில் ஞானி (பிரத்யகான்மாவாகிய தன்னை, பரமான்மாவாகிய என்னில் அபேதமா யறிவனாதலின்) மேலானவனாவன். அவன் எனக்கத்தியந்தம் பிரியன், அவனுக்கு நானும் அத்தியந்தம் பிரியன்.

     

      [பொருளை விரும்பி ஈசுவரனைப் பூஜிப்பவன் அர்த்தாத்திரி எனப்படுவம் (அர்த்தம் = பொருள்). ஆபத்தினின்றும் தப்புவதற்காக ஈசுரனைப் பூஜிப்பவன் ஆர்த்தன் எனப்படுவன் (ஆர்த்தி = ஆபத்து). மோக்ஷமடைய இச்சித்து ஈசுவரனைப் பூஜிப்பவன் சிஞ்ஞாசு எனப்படுவன் (சிஞ்ஞாசு = மோக்ஷவிச்சை யுடையவன்). இவர்கள் மூவரும் சுயநலமாகிய ஒன்றை யிச்சித்தே பகவானைப் பூஜிப்பவர்கள். ஞானியொருவனே நிட்காம பூஜை செய்பவன்.

 

      சுக்ரீவன், விபீஷணன், உபமன்யு முதலியவர்கள் இகலோக போகங்களை விரும்பியும், துருவன் முதலியோர் பரலோக போகங்களை விரும்பியும் பகவானைப் பூஜித்தார்கள். இவர்கள் அர்த்தார்த்திகள்.

      துரோபதை, கஜேந்திரன் முதலியோர் ஆபத்திலிருந்து காப்பாற்றப்பட வேண்டிப் பகவானை பூஜித்தார்கள். இவர்கள் ஆர்த்தர்கள் – முசுகுந்தச் சக்கிரவர்த்தி, ஜனகராஜா, உத்தவர் முதலியோர் ஞானமடையவேண்டிப் பகவானைப் பூஜித்தார்கள். இவர்கள் சிஞ்ஞாசுக்கள். இந்த மூவரில் சிஞ்ஞாசு ஞானமடைவதால் நேரே மாயையைக் கடக்கிறான். மற்ற இருவரும் சிஞ்ஞாசுக்களாகி ஞானமடைந்த பின்பே மாயையைக் கடப்பார்கள்.]

 

      “எ பகவன்! ஞானியே தங்களுக்குப் பிரியன் எனில் ஆர்த்தன் முதலிய மற்ற மூவரும் அப்பிரியர்களோ?” என்னும் அர்ச்சுனன் சங்கைக்குப் பகவான் “அவர்களும் பிரியர்களே, ஆயினும் ஞானி மிகப் பிரியன்” என்று காரணத்தோடு கூறியருள்கிறார்: -

 

      ஏ பார்த்த! ஆர்த்தன் முதலிய மூவரும் உத்கிருஷ்டமானவர்களே. எனினும் ஞானி என் உண்மைச் சொரூபத்தின் கண்ணே சாட்சாத்காரமாய்ப் பொருந்தியிருத்தலின் அவன் எனது ஆன்மாவே என எனது நிச்சயம். இத்தகைய ஞானியாதல் பல ஜனனங்களில் கொஞ்சங் கொஞ்சமாய் ஆசையொழிந்து நிராசையுதிக்கும் கடைசி ஜன்மத்தில் சித்திப்பதாகும்.

 

      (இனிப்பிறவா முடிவான பிறப்பிலே மெய்ஞ்ஞான மெளிதிலுண்டாம்....”)

                                    (வாசிட்டம் – சனகராசன் கதை)

 

      (அத்தகைய ஞானியின் அருமையைப்பற்றி பகவான் அருள்கிறார்.)

 

      அந்த ஞானி அறியப்பட்ட எல்லா வஸ்துக்களும் அதிஷ்டானமாகிய என்னையன்றியில்லை என்கிற உண்மையைப் பரோக்ஷமாயறிந்து, பரமாத்மாவாகிய என்னில் அபேதமாய்ப் பொருந்தியிருப்பன். ஓ கூர்மைபொருந்திய வேலாயுதத்தையுடைய அர்ச்சுனா! அத்தகைய ஞானி அடைதற்கு மிக்க அரியவனாகும்.

 

      ஏ பார்த்த! பூர்வ வாசனையால் தம் அந்தக்கரணங்களில் வைத்த காமாதிகளையுடையோரின் அந்தக்கரணங்கள் முழுமையும் நம்மினின்று பராமுகம் பண்ணப்பட்டு தமக்கு வேண்டுவனவற்றை யளிக்கும் க்ஷுத்திரதேவதைகளை உபாசியா நிற்பர்.

 

      (மாரணம், மோகனம், உச்சாடனம், ஸ்தம்பனம், ஆகர்ஷணம், வசீகரணம் முதலியவற்றின் சம்பந்தமான தாழ்ந்த இச்சைகளையுடையோர் அவற்றை ஈசுரசேவையால் அடைய விரும்புவது அசக்கியமெனக் கருதி அத்தகைய அல்ப இச்சைகளைப் பூர்த்தி செய்விக்கும் க்ஷுத்த்ர தேவதைகளை ஜபம், உபவாசம் முதலியவற்றால் உபாசிப்பார்கள்.) எவன் சிரத்தையோடு ஒரு தெய்வத்தைப் பூஜிக்கிறானோ அந்தச் சகாமபுருஷனுக்கு அத்தெய்வத்தினிடத்து நிலையான பக்தியை அந்தரியாமியாகிய நான் அளித்திடுவேன். என்னாலளிக்கப்பட்ட பக்தியோடு அந்த அந்நிய தெய்வஙக்ளை நாடோறும் நம்பிக்கையோடு ஆராதிப்பவர் கோரும் காமிய பதார்த்தங்களை யெல்லாம் நானே அவர்களுக் களித்திடுவேன்.

 

      ஏ பார்த்த! இந்த க்ஷூத்திர தெய்வஙக்ளைத் தம் மனதில் மெய்த் தெய்வங்களென்றே கருதி ஆராதனம் செய்யும் அற்ப மனமுடையவர்கள் அடையும் பலன் வீணாக நாசமுடையது. அவர்கள் ஆராதிக்கும் அத்தெய்வங்களும் நாசமுடையனவாம். அத்தேவதைகளை யாராதிப்பவர்கள் அத்தேவதைகளையே யடைவார்கள். பரமான்மாவாகிய என்னை யாராதிப்பவர்கள் என்னையே யடைவார்கள்.

 

      [எவனெவன் எதையெதை யாராதிக்கிறானோ அதையதையே யடைவன். பிரத்யகான்மாவான தன் நிஜவடிவை யறிந்து பரமாத்மாவை அபேதமாய்ச் சாட்சாத்கரித்தவன் அப்பரமான்மாவையே யடைகிறான்.]

 

      ஆதலி னெனக்கினிச் சரியையா திகள்போது

            மியாதொன்று பாவிக்க நான்

      அதுவாத லாலுன்னை நானென்று பாவிக்கி

            னத்துவித மார்க்க முறலாம்                             (தாயுமானவர்)

"ஓ பகவானே! தங்களை நேரே யுபாசிப்பதால் அழிவற்ற உத்தமப் பயனையடையலாமெனில், யாவரும் தங்களையே உபாசிக்காத காரண மென்ன?'' என்னும் அர்ச்சுனன் சங்கைக்குப் பகவான் அருளிச்செய்கின்றார்: -

 

ஏ பார்த்த! விவேகமில்லாத புருடர்கள் பகவானாகிய நான் நித்தியன், அழிவற்றவன், ஒப்புவமையில்லாதவன், அத்துவிதானந்த சொரூபன் என்று அறிகிறார்களில்லை. மற்றோ இவன் கிருஷ்ணன், நந்தகோபன் மகன், நம் போல் விவகாரங்களோடு கூடியிருப்பவனாதலின் நித்தியானந்தனலன், சாதாரண சீவர்களில் இவனும் ஒருவன் என்றே கருதாநிற்பர்.

"ஏ பகவன் தாங்கள் யாவரிடத்துமில்லாத அனேக விசேஷ குணங்களும் சகலஐசுவரியங்களும் பொருந்தியுள்ள சர்வேசுரனாக விருக்கத்தங்களை அவிவேகிகள் சாதாரண மனிதனாகவும் சீவனாகவும் கருதுவானேன்?'' என்ற அர்ச்சுனன் ஐயத்தை நீக்குவான் பகவான் அருளிச்செய்கிறார்: -

 

ஏ பார்த்த! நான் பிரகிருதியாகிய மாயையில் மறைந்திருப்பவனாத லில், உலகமாயையில் மனம் பொருந்தியுள்ள ஞான சூனியர்கள் ஜனன மரணமற்ற என்னை அறிந்து கொள்வதில்லை. முன்சென்றவைகளும், இப்போதுள்ளவைகளும், இனிமேல் உண்டாகுபவைகளுமாகிய சர்வபிராணிகளையும் நான் அறிந்துளேன். உலகிலுள்ள சகலப் பிராணிகளும் ஜனிக்கும் போதே இச்சை துவேஷம் என்னும் குண வேறுபாட்டால் உண் டாகும் மோகத்தில் அழுந்தியவர்களாய் தேகபாவனையைப் பொருந்தியிருப்பதால் அந்தரியாமியாகவுள்ள என்னை அறியமாட்டார்கள்.

 

[சீவர்கள் இராகத்துவேஷங்களோடு பொருந்தியவர்களாய் மனமா யையின் வழியே யுழன்று கொண் டிருப்பதால் அத்தகையோர் பரமான்மாவின் உண்மைச் சொரூபத்தை யறியமாட்டார்கள். பரமேசுவரனை யுபா சிக்கிறவர்களாயினும் இச்சையையொழித்து மனதின் பசையறுத்து, பிரத் யகான்மாவாகிய தன்னையறிந்தாலே பரமான்ம சொரூபத்தை அறியலாகும்.]

 

(மற்றப்படி எத்தகையோர் தம்மை யாராதிப்பர்கள் என்பதைப் பக வான் அருளிச் செய்கின்றார்.)

 

ஏ பார்த்த! முன் ஜன்மங்களிற் செய்த நல்வினைப்பயனையுடைய அதிகாரிகள், பாவகர்மங்கள் முழுமையும் ஒழியப்பெற்று, மாயையின் மயக்கில் சிக்காதவராய் பரமேஸ்வரனாகிய என்னிடத்தில் நிலைக்கப்பெற்ற மனதோடு என்னையே ஆராதிப்பார்கள்.

 

(இப்போது பகவான், சில கேள்விகள் கேட்கும்படி அர்ச்சுனனைத் தூண்டும் பொருட்டுப் பின் வரும் விஷயத்தைக் கூறியருள்கின்றார். பின் வரும் 8 - வது அத்தியாயத்தில் அதன் பொருள் விரித்துக் கூறப்படுகிறது.)

 

ஏ பார்த்த! பிணி, மூப்பு, பிறப்பு, இறப்பு ஆகியவற்றை யொழிக் கும்பொருட்டு ஞானத்தை யடையக்கருதி பரமேசுரனாகிய என்னை யாசிரயித்து பலேச்சையின்றி கர்மங்களைச் செய்யும் அதிகாரிகள், தத்பத இல க்ஷியார்த்தமான பிரம்மத்தையும், அதனையறியும் துவம்பத இலக்ஷியார்த்தமான பிரத்யகான்மாவையும், அனுஷ்டிக்க வேண்டிய சிரவணாதிகருமங்களையும் அறியாநிற்பர்.

 

அவ்வாறு என்னைச் சதாசிந்தியாவிற்கும் அதிகாரிபுருடர், என்னிடத்தில் பொருந்திய மனதுடையவர்களாய், இத்தேகத்தை விட்டு நீங்கும் போது பரமான்மாவாகிய என்னையுள்ள படியே யறிவார்கள்.

 

[பகவானை மேற்கண்டபடி சதா சிந்திக்கும் புருஷர்களின் இந்திரிய முதலிய கரணங்கள் ஒருமைப்படாவிடினும், பகவானது அருளாலும் பூர் வாப்பியாச சமஸ்கார வலியாலும் மரணகாலத்தில் அவர்களுடைய அந்தக்கரணம் பரமான்மாகாரத்தையே யடையும். ஆதலின் அவர்கள் பக்தியோகத்தால் கிருதார்த்தராவார்கள் என்று பகவான் அருளிச்செய்தார்)


ஏழாவது அத்தியாயம் முற்றிற்று.

 

8 - வது * எழுவகை வினாவுரை அத்தியாயம்

 

[* வடநூலில் அக்ஷரப்பிரமயோகம் என்று பெயர்.]

 

[முன் அத்தியாயத்தின் முடிவில் பகவான் குறிப்பாய்க்கூறிய பிரமம் முதலிய ஏழு பதார்த்தங்களையும் பற்றி எட்டாம் அத்தியாயத்தில் வியாக்கியானரூபமாக அருளிச் செய்கிறார்.]

 

(பகவான் கூறிய ஏழு பதார்த்தங்களையும் பற்றி விசேஷமா யறிய விரும்பிய அர்ச்சுனன் அவற்றைப்பற்றி பகவானை வினாவுகின்றனன்.)

 

இவ்வுலகை முழுவதையும் அபிமானத்தால் பந்தித்து, தாம்மட்டும் எதிலும் பந்தப்படாமலிருந்தும் ஏசோதாபிராட்டியின் கயிற்றால் பந்திக் கப்பட்டு பாலலீலை செய்தருளிய பகவானை நோக்கிப் பார்த்தன் பின் வரும் வினாக்களைக் கேட்கின்றான்: -
 

ஏ பகவன்!

 

1. முன்பு ஞேய வடிவமாய்த் தாங்கள் அருளிய பிரம்மம் என்பது எது? சோபாதிகமா? அல்லது நிருபாதிகமோ?

 

2. அத்யாத்மம் எது? அந்த அத்தியாத்மம் சுரோத்திரம் முதலிய கரணங்களின் கூட்டமோ? அல்லது பிரத்தியக் சைதன்யமோ?

(ஆன்மாவோடு சம்பந்தமுடையதாய்த் தேகத்தைத் தழுவி நிற்பது அத்தியான்மம் எனப்படும்.)

3. தாங்கள் விதித்தருளும் கருமம் யாது? அது எஞ்ஞரூபமா? அல் லது வேறு விதமானதா?

 

4. அதிபூதம் என்பது எது? பிருதிவி முதலிய பூதங்களைத் தழுவி நிற்கும் அற்ப காரியமா? அல்லது எல்லா காரியங்களுமா?

      (பூதங்களை ஆசிரயித்திருப்பது அதிபூதம் எனப்படும்.)

 

5. அதிதெய்வம் எது? அது தேவதா விஷயமான தியானமா? அல்லது தேவதைகளின் ஆதித்திய மண்டல முதலியவற்றில் கலந்திருக் கும் சைதன்யமா? (தெய்வத்தை ஆசிரயித்துள்ளது அதிதெய்வம்.)

 

6. அதியெஞ்ஞம் என்பது எது? அது யாதேனுமொரு தேவதா சம்பந்தமானதா? அல்லது பரப்பிரம்மமோ? அந்த அதியெஞ்ஞம் எவ்வாறு சிந்தித்தற்குரியது? அதாவது தாதான்மிய ரூபமாகவா அல்லது முற்றும் அபேதமாகவா? அவ்வதியெஞ்ஞம் தேகத்திலுள்ளதா அல்லது புறம்பாகவுள்ளதா? தேகத்தின்கண் எனின், எந்த ரூபமா யிருக்கிறது? புத்தி முதலிய வடிவமாகவா அவற்றிற் கயலாகவா?

 

7. மரணமடையும் காலத்தில் இந்திரியங்கள் கலக்கமடைவதால், அச்சமயம் மனம் ஒருமித்துத் தங்களை உள்ளபடி யறியும் மார்க்கம் எவ்வாறு?

 

ஏ பரமாத்மா! தாங்கள் சர்வஜ் ஞராதலின் அடியேனுக்கு இவற்றின் பொருள்களை யெல்லாம் விவரமாக உரைத்தருளப் பிரார்த்திக்கின்றேன். (பகவான் விடையளிக்கத் தொடங்கி முதலாவது பிரம்மத்தைப்பற்றி யருள்கின்றார்.)

 

ஏ பார்த்த! பிரம்மம் என்று கூறியது நிருபாதிகப் பிரம்மமேயாகும். அது ஒருவரால் அறிதற்கரியது, அழியாதது, யாவற்றிலும் பெரியது.

 

[தேசம் காலம் முதலிய எதனாலும் அழியாதது எதுவோ அதற்கு'அக்ஷரம்'என்று பெயர். இத்தகைய அக்ஷரம் என்ற பிரம்மத்தைப்பற்றி பிரகதாரணிய உபநிடதத்தில் யாக்ஞவல்கிய முனிவர் கார்க்கி என்பவரை நோக்கிப் பின் வருமாறு கூறுகின்றார்: -

 

ஏ கார்க்கி! இப்பிரம்மம் தூலமன்று, அணுவன்று, குறிலன்று, நெடி லன்று, எவ்வித உபாதிகளுமில்லாதது; சூரிய சந்திராதி சர்வ ஜகத்தையும் தனதாணையில் நிறுத்துவது; சர்வப்பிரபஞ்சத்தையும் தாரணம் செய்வது; சொப்பிரகாச பரமானந்த சொரூபமாயுள்ளது; சர்வத்திற்கும் சாட்சியாயுள்ளது.)

 

2 - வது கேள்விக்கு விடை: -

அந்தக்கரணங்களில் நிற்கும் (பிரம்மத்தின் சொரூபமான) பிரத்தியக் சைதந்நியம் இத்தேகத்தை யாசிரயித்திருப்பதால் அத்தியாத்மம் எனப்பட்டது. பிரத்யக் சைதந்நியத்தின் வேறான சுரோத்திரம் முதலியவற் றின் கூட்டமல்ல.

 

 

3 - வது கேள்விக்கு விடை: -

தாவர ஜங்கம ரூபமான பூதங்களின் உற்பத்தியைச் செய்கின்ற யாகம் முதலியவை கருமம் எனப்படும். அதாவது இந்திராதி தேவதை களைக் குறித்துச் செய்யும் யாகம், எஞ்ஞம், தானம் முதலியனவாம்.

 

4 - வது வினாவிற்கு விடை: - தேகம் முதலிய அழியத்தக்க பொருள்களும், அவற்றில் உள்ள நான் என்னும் அபிமானமும் அதிபூதம் எனப்படும்.

 

5 - வது வினாவிற்கு விடை: -

பந்தப்படும் இச்சரீர வடிவ சர்வபுரங்களிலும் நிறைந்திருக்கும் புருஷ னாகிய இரண்யகருப்பன் அதிதெய்வம் ஆகும்.

(இரண்யகர்ப்பன் சூரியன் முதலிய தேவதைகளை ஆசிரத்து சட்சு முதலிய கரணங்கட்கு அநுக்கிரகம் செய்வதால் அதிதெய்வம் என்று கூறப்பட்டான். தேவதா விஷய தியானம் முதலியவை அதிதெய்வ மன்று.)

 

6-வது வினாவிற்கு விடை: -

அதியஞ்ஞம் நானேயாகின்றேன்.

(சர்வ எஞ்ஞங்களுக்கும் அதிஷ்டானத்தன்மை வடிவாயும், சர்வ எஞ்ஞபலனைத் தருபவராயும், சர்வ யஞ்ஞங்களின் அபிமானியாயும் உள்ள விஷ்ணுவே அதியெஞ்ஞம் ஆதலின் பகவான் அதியஞ்ஞம் நானாகவே யிருக்கிறேன் என்றருளினர். இத்தகைய சர்வவியாபியாதலின் அவ்வதி யஞ்ஞம் இத்தேகத்திலுள்ளதா? புறம்பேயுள்ளதா? புத்தியா திரூபமா? என்ற சகல சந்தேகங்களும் நிவர்த்தியாயின.)

 

7 - வது வினாவிற்கு விடை: -

ஏ பார்த்த! அதியஞ்ஞவடிவ சகுணப் பிரம்மமாகிய என்னையேனும், நிர்க்குணப் பிரம்மமாகிய என்னையேனும் சிந்தித்து, அச்சிந்தனையின் வலியால் மரணகாலத்தில் ஐந்திந்திரியங்களையும் சத்தாதி விடயங்களையும் நிக்கிரகித்து, இத்தேகத்தில் நான் எனதென்னும் அபிமானத்தை விட்டு, சித்தத்தை என்னிடமே வைத்து மரிப்போர் எனது சொரூபத்தன்மை யையே யடைவர். அது எவ்வாறெனில் கூறுதும். ஒருவன் மரணகாலத் தில் யாதொரு தேவதையின் மேல் அல்லது வேறெவ்வித வஸ்துவின் மேல் பிரியம் வைத்து சிந்திப்பவனாய் இச்சரீரத்தை விட்டுச் செல்கி றானோ, அவன் அந்தப் பாவனையால் அந்த வஸ்துவையே யடைவான். நீ எனது பாவனையையே யெப்பெழுதும் மனதில் சிந்தித்துக்கொண்டு, என் பால்வைத்த சிந்தனையோடு யுத்தம் செய்வாயாயின் என்னையே யடைவாய். இதிற் சற்றும் சந்தேகமின்று.

 

[நிர்க்குணப் பிரம்மத்தைத் தியானம் செய்பவன் நிர்க்குணப் பிரம்ம பாவத்தை யடைவன். சகுணப்பிரம்மத்தைத் தியானம் செய்பவன் தேவயான மார்க்கமாய்ப் பிரம்ம உலகத்தை யடைந்து, இரண்யகர்ப்ப உலகத்தை யனுபவித்து, முடிவில் நிர்க்குணப் பிரம்மத்தையே யடைவன். ஆயுட் காலமெல்லாம் ஈசுர சிந்தனையின்றி மனம் போனவழி உலக விஷ யங்களி லுழன்றுகொண்டிருந்து, மரணம் நெருங்கும் சமயம் ஈசுர சிந் தனை செய்யலாம் என்றிருந்தால், அவ்வாறு சித்திக்காது. அந்திய காலத்தில் தேவதாஸ்மரணை யுண்டாவதற்காகவே அறிவாளிகள் சதா ஈசுர சிந்தனை செய்துவரவேண்டு மென்றனர். மரணத்திற்கு முன் இடைவிடாது செய்த தேவதா தியானத்தின் அப்பியாச பலத்தால் அந்தியகாலத்தில் அத்தேவதா ஸ்மரணம் உண்டாகும். எந்த வஸ்துவின் சிந்தனை மனதில் ஆழ்ந்து பதிந்திருக்கிறதோ அந்த வஸ்துவின் ஸ்மரணையே மரணத் தருவாயில் உண்டாகும்]

 

(இலௌகீகத்திலிருப்பவன் சதா தெய்வசிந்தனையிலிருப்பது எப்படி கூடும் என்று கருதலாகும். அது கஷ்டசாத்தியமேயாகும். ஆனால் தத்துவ விசாரணை செய்து தேகம், இந்திரியங்கள், கரணங்கள் முதலிய யாவும் நாமல்ல, இவற்றுக்கெல்லாம் சாக்ஷியாகிய பிரத்யகான்மாவே நாம் என்றுணர்ந்தால், இலௌகீகத்தில் நேரும் அவசியமான தொழில்களைச் செய் தாலும் " எத்தொழிலைச் செய்தாலும் ஏதவத்தைப்பட்டாலும் முத்தர்மன மிருக்கும் மோனத்தே'' என்று பட்டினத்தடிகள் அருளியபடி, அந்தர் முகத்தில் மனதை ஈசுர சிந்தனையிலேயே தைல தாரைபோல் வைத்துக் கொண்டிருப்பது சாத்தியமேயாகும். பழகப் பழக மனம் சுலபமாகவே அதே நிலையில் நின்றுவிடும். இவ்வாறு சகுணத்தியானமே செய்யினும் அதனால் சித்த சுத்தியுண்டாகி, முடிவில் ஞானோதயமேயுண்டாகும்.)


      ''காயத்தில் வேறாகத் தன்னைக் கண்டோன்
            காயமீ றினுமறியான் கன்னற் கட்டி

தீயிற்கா யினுமரிந்த போது மின்பந்
            தீராத வாறுபோற் றெளிந்த ஞானி

மாயத்தின் மோகத்தாற் பேத மாகான்
            மணந்தபர புருடன்மேன் மனஞ்சேர் மங்கை

நேயத்தான் மனைத்தொழிகள் செய்யு மாபோல்
            நிகழ்தொழில் செய்யினும் பரத்தி னிலைமை நீங்கான்.''    (வாசிட்டம்)

 

ஏ பார்த்த! இடைவிடாது பரமான்மாவையே சிந்திக்கும் அப்பியாசமுடையதும், அன்னிய ஜடசம்பந்தமான விடயங்களில் செல்லாததுமான மனத்தால் ஒருவன் பரமான்மாவான திவ்விய புருஷனையே யடைகிறான். நதிகள் தமது நாமரூபங்கள் குணங்கள் யாவும் இழந்து கடலில் கலந்து ஏகத்துவத்தையடைவது போல் அவன் அந்தரியாமியாகிய பரமபுருடனை அபேதமா யடைகிறான்.

 

(அர்ச்சுனனது ஏழு கேள்விகளுக்கும் விடையருளிய பகவான் அதிகாரிகளடைதற்குரிய அப்பரம புருஷனது விசேடணங்களை அருளிச் செய்கின்றார்.)

 

ஏ பார்த்த! கருமயோகத்திலும் ஞானயோகத்திலும் செல்லத் தகுதியுடைய சித்தத்தைப் பரமாத்மாவின் பால் நன்றாய்ச் செல்லும்படி செய்து வேறொரு விஷயத்தையு மடையாதோர், சூரிய மண்டலம் போல் விளங்கும் பரமான்மனை யல்லாது வேறொன்றினையு மடையார்கள், அப்பரமான்மாவின் சுபாவத்தையும் அவரையடையும் விதத்தையும் இனிக்கூறுதும் கேட்பாயாக.

 

திரிகாலங்களிலுமுள்ள எல்லா வஸ்துக்களையும் அறியும் சர்வக்ஞனும், அநாதியாயுள்ளவனும், யாவற்றையும் தன் ஆணைவழி நிறுத்துபவனும், சூக்கும் பதார்த்தங்களுக்கெல்லாம் அதிசூக்குமமாயுள்ளவனும், (பிராணிகளின் கர்மங்களுக்குத் தக்கபடி) எல்லா பயன்களையும் அளிப்பவனும், யாவர்க்கும் சிந்திக்க வரிதானவனும், எங்குமுள்ள இருளை நீக்கிய இளஞ் சூரியன் போல் பிரகாசமுடையவனும் ஆகிய இத்தன்மைய பரம புருடனை அடைதற்குரிய அன்புடையவர்கள், மரணகாலத்தில் ஏகாக்கிர சித்தத்தோடு புருவமத்தியில் தமது பிராணவாயுவை நிறுத்தித் தேகத்தினின்றும் வெளிப்படுவார்களாயின், இந்த யோகத்தால் அந்தப் பரமபுருஷனோடு பொருந்துவர். அதன் பொருளையின்னமும் கூறுவோம் கேட்பாயாக.

(தியான காலத்தில் ஏதேனும் ஒரு நாமத்தால் சிந்திப்பதோ அல்லது இன்ன நாமத்தால் தான் சிந்திக்க வேண்டுமென நியமமுளதோ என்றுண்டாகும் சங்கையை யொழிக்க, பிரணவ மந்திரத்தாலேயே சிந்திக்க வேண்டுமென பகவான் அருளிச் செய்கின்றார்.)  

 

ஏ அர்ச்சுன! வேத முணர்ந்தவர்கள் எந்தப் பிரணவத்தை அழியாத தென்று போற்றுகின்றனரோ, எந்தப் பிரணவத்தை ஆசையை யொழித்த யோகிகள் அடைகின்றனரோ, எந்தப் பிரணவத்தை யடைய விரும்பினவர்கள் காமாதிகளை யிழந்து பிரம்மசரியத்தை யநுஷ்டிப்பார்களோ, எந்தப் பிரணவம் பரம்பொருளே யாகுமோ அதைச் சுருக்கமாகக் கூறுதும் கேட்பாயாக.

 

ஏ பார்த்த! எவன், சுரோத்திரம் முதலிய ஐந்து இந்திரியங்களையும் சத்தம் முதலிய தத்தம் விடயங்களைக் கிரகிக்க வொட்டாது செய்து மனதை இருதயத்தில் நிறுத்தி, பிராணவாயுவைச் சிரசிலேறும்படிச் செய்து யோகத்திலிருந்து, ஏகாக்ஷரமாகிய பிரணவத்தை யுச்சரித்துக்கொண்டு, மனம் வேறொரு நாட்டமுமின்றி என்னையே சிந்தித்துக்கொண்டு தேகத்தை விட்டு நீங்குகிறானோ, அவன் நித்தியமான என்னையே யடைவான்.

 

இப்போது கூறியபடி ஒரு வருடம் ஆறுமாதம் என்று காலவரை யெண்ணாமல் எப்பொழுதும் பரமேசுவரனாகிய எனது சொரூபத்தை சிந்தியா நிற்கும் புருஷர்களுக்கு நான் சுலபமாகக் கைவசமாவேன். அத் தகையோர் நாசமுடையதாகிய ஜன்மத்தை யடையமாட்டார்கள். (அதா வது, அத்தகையோர் பிரம்மலோக மடைந்து மேலான போகங்களை யனுப வித்து, முடிவில் பிரம்மஞானமடைந்து கைவல்ய முத்தி யடைவார்களாத லால் பிறப்பதும் மறிப்பதுமாகிய இக்கன்ம ஜன்மத்தை யடையார்கள் என்பதாம். அவர்கள் பிரம்ம லோகத்தில் சுத்தமான அந்தக்கரண முடையவர்களாகச் சேர்வதால் பிறப்பு இறப்பிற்குக் காரணமாகிய கர்மங் களில் பிரவர்த்தியார்கள்)

 

(இப்போது பகவான் மேற்கண்டவாறு பிரமலோக மடைவோர் மட்டுமே மீண்டும் ஜனியா நெறியடைவார்களென்றும், பரமேசுரத்தியானமில்லாமலும் ஆன்மசாட்சாதகார மடையாமலும் பிரமலோக மடைவோர் மீண்டும் ஜனிப்பர் என்பதைப்பற்றியும் அருளிச் செய்கின்றார்.)

 

ஏ பார்தத! தம்மால் முன் ஜன்மத்தில் செய்யப்பட்ட வினைகள் அனுபவித்துத தீரந்தபோது பிரம்மலோக மடைந்தோரும் மறுபடி ஜனிப்பார்கள். என்னை யடைந்த புருஷரே மீண்டும் பிறவாத நெறியை யடைந்தோராவர்.

(பிரம்மலோகமடைகிறவர்களில் இருவிதமுண்டு. பகவான் கூறியபடி ஈசுர உபாசனையா லடைபவாகள் ஒரு சாரார். அவர்களே மீண்டும் பிறப்பிறப்படையாமல் பிரம்மஞானம் பெற்று முத்தி யடைவோர். இவ்வாறு அடையும் முததிக்கு கிராமமுததி என்று பெயர். மற்றொரு சாரார் யாக எக்யாதிக் கிரியைகளால் பிரம்மலோக மடைவோர். இவர்கள் தான் மீண்டும் ஜனிப்பார்கள்.)

பிரம்மலோகம முதலிய சர்வ உலகங்களும் காலத்தால் பரிச்சின்னப்படுபவை. அதாவது நமமைப்போல் ஆயுள் நிர்ணயமுடையவை. அந்த காலம் முடிந்தால் அவை நசிக்கும். அந்த ஆயுள் பிரமாணம் பினவருமாறு: -

 

சதுர்யுகம் ஆயிரமாயின் பிரம்மாவிற்கு ஒரு பகலாம். அவ்வாறே ஆயிரம் சதுர்யுகம் ஓர் இரவாகும். அதாவது 2000 சதுர்யுகம் பிரம்மாவிற் கொருநாள். இப்படிப்பட்ட நாட்கள் 15 கொண்டது ஒரு பட்சம். 2 பட்சம் 1 மாதம். 12 மாதம் ஒருவருடம். இத்தகைய நூறு வருடம் பிரம்மாவுக்கு ஆயுளாகும். அதன முடிவில் பிரம்மா நாசத்தை யடைவர்.

 

இந்திராதி தேவதைகள் பிரமமாவினும் குறைந்த ஆயுளுடையோராவர். பிரமமாவின் ஒரு பகலே இவாகளுக்கு ஆயுளாகும். இரவு அவ்வுலகங்களுக்குப் பிரளயமாம். ஆகையால் இவர்களும் இவர்கள் போகங்களும் அநித்தியமே. இதனால் இவ்வுலகங்களிற் செலவோரனைவரும் மீண்டும் ஜனித்தே தீரவேண்டும் (மேலே கூறியபடி கிரமமுத்தி யடைவோர் தவிர) என்றுணரற்பாலது.

 

(பகவான் பிரம்மப் பிரளயத்தைப் பற்றி இன்னும் விவரமாய்க் கூறுகிறார்.)

 

ஏ பார்த்த! அப்பிரம்மாவிற்குப் பகல் வந்தால் அவ்வியத்தத்தினின் றும் (காணும்படி புலப்படும் பிரபஞ்சமுதலிய) இந்த வியத்தங்களெல்லாம் உண்டாகின்றன. பிரம்மாவிற்கு இரவுவரின் தோன்றிய அனைத்தும் அவ்வியத்தத்தில் பிரளயமாய் விடுகின்றன.

 

[அவ்வியத்தம் = தெரியும்படி தோன்றாமலிருப்பது. அதாவது வெளிப்படாது மறைந்திருத்தல் - வியத்தம் = காணும்படி வெளிப்படுதல்.]

 

முன் கற்பத்திலுள்ள பிராணிக்கூட்டங்களே உத்தரோத்தர கற்பத்திலு முண்டாகின்றன. அவை பிரம்மாவின் பகற்குள் தோன்றி இரவிற்குள் இலயமாகின்றன. ஆன்மஞானமின்றிய அஞ்ஞானிகளால் செய்யப்படும் கர்மங்கள், எவ்வளவு காலமாயினும் போகத்தைக் கொடுத்துப் புசிக்கச் செய்யாமல் நாசமாகா, ("எஞ்சிய பிராரப்தத்தின் வினையனுபவித்தே தீரும்" - கைவல்யம்) ஆதலின் முன் கற்பத்திலுள்ள பிராணிகளே பின்கற்பத்தில் தோன்றுகின்றனவன்றி புதிது புதிதாய்ப் பிராணிகளின் தோற்ற முண்டாகாது.

 

[இதுவே வேதாந்த சித்தாந்தத்திற்கு உடன்பாடாம். சூரியன், அண்டங்கள் முதலிய யாவற்றையும் முன்னுள்ளவாறே பின் கற்பத்திலும் பரமேசுவரன் சிருட்டித்தான் என்று சுருதி கூறுகிறது.]

 

பிரளயத்தில், மெழுகுருண்டையில் தங்கரேணுக்கள் அடங்கி மறைந்திருப்பது போல், சீவன்கள் மாயையில் மறைந்திருக்கின்றன வென்றும், தயாநிதியாகிய பகவான் அச்சீவர்கள் அஞ்ஞானத்தை நீக்கிக்கொண்டு தம்மை வந்தடையும் பொருட்டுக் கருணையோடு அவர்களுக்குத் தநுகரண புவன போகங்களை யளிக்கின்றார் என்றும் சுருதி கூறுகிறது.

பிரம்ம உலக மீறாகிய கதிகளனைத்தும் காரியமேயாகும். கற்பிதமான சர்வ உலகங்களிலும் அந்தரியாமியாயுள்ள சச்சிதானந்த சொரூபமே யாவற்றிற்கும் காரணமாம். எதையடைந்தோர் மீண்டும் பிறப்பதில்லையோ, அச்சத்தா வடிவ சச்சிதானந்த சொரூபமே எனது வடிவமாம் என்று பகவான் அருளினார். எந்த அதிகாரிக்கு ஈசுவரனிடத்தி லும் குருவினிடத்திலும் அநந்நிய பக்தியுளதோ அவனுக்குச் சகல சாத்திர அர்த்தங்களும் எளிதில் புலப்படும். அப்பக்தியில்லார்க்குப் புலப்படாது. ஆதலின் ஞானமடைய விரும்புவோர்க்கு பக்தி அவசியம் வேண்டியதாகும்.)

 

(இப்போது பகவான் முன்பு கூறிய பக்தியோகமே பரகதியடைதற் குரிய உபாயமாகுமென்று அருளிச் செய்கின்றார்.)

 

ஏ பார்த்த! எல்லாப் பூதங்களும் எந்தப் புருஷனிடம் அடங்குகின்றனவோ, சர்வபூதங்களிலும் அந்தரியாமியாய் வியாபித்துள்ள பரமபுருஷன் எவனோ, அத்தகைய பரமாத்மாவாகிய என்னை அடைதற்குரிய மார்க்கம் அநந்நிய பக்தியே யாகும். (அநந்நியபக்தி = வேறெவ்வித சிந்தனையுமில்லாது தைல தாரைபோல் சதா ஈசுவரனையே அன்போடு சிந்தித்தல்)

 

அர்ச்சுனன்: - "பகவான்! எத்தகைய நிலைமையான காலம் வரும் போது மரணமடைந்தோர் மறுபடி பிறப்பதில்லையோ, அப்படி வாரா நிற்குங் காலத்தை அடியேனறியுமாறு கூறியருளல் வேண்டும்" என்றான்.

 

(இப்போது பகவான் தேவயான மார்க்கமும் பிதுருயான மார்க்கமும் அருளிச் செய்கின்றார்.)
 

ஏ அர்ச்சுன! எந்த மார்க்கத்தில் சோதி சொரூபமான அக்கினியும் பகலும், சுக்கிலபட்சமும் பொருந்துகின்ற ஆறுமாதங்களாகிய உத்தராயணம் உள்ளதோ, அதுவே தேவயான மார்க்கமாகும். அக்காலத்தில் மரிக்கும் சகுணப்பிரம்மோபாசகர்கள் மீண்டும் பிறப்பையடையார்கள்.

 

(இவர்கள் மேலே கூறப்பட்ட அக்கினி, பகல், சுக்கிலபக்ஷம், உத்தராயணம் முதலியவற்றின் அபிமான தேவதைகளால் அந்தந்த உலகங்களுக்குக் கொண்டு போகப்பட்டுக் கடைசியில் பிரம்மலோகத்திற்குக் கொண்டு போகப்படுவர். ஆங்கு அவர்கள் இரண்யகர்ப்பரூபமான சகுணப்பிரம்மத்தையடைந்து, அதன் மூலமாய் நிர்க்குணப் பிரம்மத்தையடைவர்.)

 

எந்த மார்க்கத்தில் தூமமும், கறுப்பாகிய இரவும், கிருஷ்ணபட்சமும், ஆறு மாதங்களாகிய தக்ஷிணாயனமும் உளதோ, அதுவே பிதுருயான மார்க்க மெனப்படும். அக்காலத்தில் மரிப்போர் மீண்டும் உலகில் சனிப்பர். இம்மார்க்கத்தில் செல்வோர் புண்ணியகர்மம் பாபகர்மம், இவை இரண்டும் கலந்த மிசிரகர்மம், ஆகிய மூன்று கர்மங்களை யுடையோர். இவர்கள் தூமம், இருளாகிய இரவுகாலம், கிருஷ்ணபட்சம், தக்ஷிணாயனம் ஆகியவற்றின் அபிமான தேவதைகளால் அந்தந்த உலகங்களை யடைந்து முடிவில் சந்திரனுலகத்தை யடைவர். அங்கு பாபகர்மம், புண்ணியகர்மம் ஆகிய இரண்டின் பலன்களையும் பொசித்த பின்னர், மிசிரகர்ம பலத்தை யனுபவிக்கப் பூமியில் மறுபடி சனிப்பர். (இருளாகிய இரவுகாலத்தின் அபிமான தேவதையே காலன்)

 

உத்தராயணம் தக்ஷிணாயனங்களில் உத்தராயணமே உத்கிருஷ்ட மானதாகும். இதில் மரித்துப் பிரம்மலோகம் செல்பவர்களில் சகுணப் பிரம்ம உபாசகர்களாகிய யோகிகள் மீண்டும் பிறவார்கள். ஏனையோர் மட்டும் மீண்டும் சனிப்பர். ஆனால் தக்ஷிணாயனத்தில் மரித்துச் செல்வோர் அனைவரும் மீண்டும் பிறவியையடைவார்கள்.)

 

(இப்போது பகவான் தியானயோகத்தில் அதிகாரிக்குச் சிரத்தையை யுண்டாக்கும் பொருட்டு அதன் விசேஷத்தைக் கூறுகின்றார்.)

 

ஏ பார்த்த! இத்தேவயான மார்க்கம் என்ற சுக்லபக்ஷ (உத்தரா யண) மார்க்கம் கிராம முத்தியையே தருவதாகும். பிதுருயான மார்க்கம் என்ற கிருஷ்ணபக்ஷ (தக்ஷிணாயன) மார்க்கம் பிறவியையே தரும் என்னும் இந்த இரண்டு மார்க்கங்களையும் உணர்ந்த சகுணப் பிரம்மத்தியான பாரில் ஒருவரும் மயக்கத்தை யடையார்கள்.

 

ஏ அர்ச்சுன! அசசகுணப் பிரம்மத்தியானம் புனராவர்த்தியில்லாத பலத்தையே தருவதாகும். ஆதலின் நீயும் அந்தச் சகுணப் பிரம்மத்தியான யோகத்தையே செய்வாயாக.

 

இருக்காதி வேதங்களை அத்தியயனம் செய்கிறவனும், அசுவமேதாதி யாக எக்கியங்களைச் செய்பவனும், சாந்திராயணம் முதலிய விரதங்களைக் கிரமப்படியனுட்டிப்பவனும், இடம் காலமறிந்து சத்பாத்திரங்களுக்கு உத்தம தானங்களைச் செய்கிறவனும் எந்தப் புண்ணிய பலன்களை வடைவார்களென்று சாத்திரத்தில் கூறப்பட்டிருக்கிறதோ அப்புண்ணிய பலன்களை யெல்லாம் தியானயோகி அதிக்கிரமணம் செய்து (கடந்து சென்று) யாவற்றிலும் மேலான மோக்ஷத்தையடைவான்.

 

[பாபகர்மம் புண்ணியகர்மம் ஆகிய இவற்றின் பலன்களையனுபவித்த பின் சந்திரமண்டலத்தில் இருக்கும் ஆன்மாவிற்கு மிசிரகர்மம் (பாபம் புண்ணிய மிரண்டும் கலந்தது) ஒன்றே அனுபவிக்க வேண்டிய மீதியா யிருக்கிறது. ஆவரணம் அக்கர்மத்தை ஆன்மாவோடு பொருத்தி வைத்துக்கொண்டிருக்கும் பசைபோலிருக்கிறது. ஆன்மா மறுபடி உலகில் சனிக்க வேண்டிய காலம் வரும்போது அதன் மிச்ரம கன்ம பலன் மழை அல்லது பனித்துளியின் வழியாய்ப் பூமியிலிறங்குகிறது. பிறகு அது ஜலமாகவோ, அல்லது அது சேர்ந்து உற்பத்தியான தானியம், பழம், ஒளடதம் முதலியவற்றில் ஒன்றின் உருவமாகவோ, அந்த ஆன்மா எத்தந்தைக்கு சனிக்க வேண்டுமோ அந்த ஆடவனுடைய தேகத்தில் பிரவேசித்து இரத்தமாய் மாறிய பிறகு சுக்கிலமாகி, அதன்பிறகு தாயின் கருப்பத்தில் போய்ச் சேர்கிறது. அங்கு அது தாயின் சுரோணிதத்தோடு கலந்து தேகமாய், அதாவது குழந்தை யுருவமாய் மாறுகிறது. ஆன்மா முன் செய்த கர்மங்களின் பலமே இத்தேகமாய் உற்பத்தியாகிறது. இக்கர்மங்களை யொருவன் மனம், வாக்கு, காயம் என்ற திரிகரணங்களாலேயே செய்கிறான்: ஆகையால் இவன் செய்த கர்மங்களின் பலனுக்குத் தக்க தேகமே இவனுக்கு அமைக்கப்படுகிறது. அதன்படியே அழகிய தேகமோ, குரூபியா னதோ, முடமானதோ, குருடானதோ அமைகிறது. மனமும், வாக்கும் சிலர்க்கு நல்லவையாகவும், சிலர்க்குக் கெட்டவையாகவும் இயற்கையிலேயே அமைவதற்கு இதுவே காரணம். உலகில் சிலர் இயற்கையிலேயே சீவகாருண்யமும் இரக்கமும் பொருந்திய மனமுடையவர்களாகவும், உண்மையும் இனியமொழியுமே பேசுபவர்களாகவும், சிலர் கடின சித்தமும் கொடுமையும் கெட்ட எண்ணங்களும் நிறைந்த மனமுடையவர்களாகவும் பொய்யும் கெட்ட வார்த்தைகளும் பேசுபவர்களாகவும் இருப்பதைப் பிரத்தியக்ஷத்தில் காண்கிறோம். இவ்வாறு கர்மபலனே தேகமா யமைந் திருப்பதால் கர்மபலன்களை யனுபவித்து முடிந்தபின் ஒரு விநாடி கூடத் தேகம் நில்லாது.


''வினைப்போக மேயொரு தேகங் கண்டாய் வினைதா னொழிந்தால்
 தினைப்போ தளவு நில்லாது கண்டாய் சிவன்பாத நினை
 *    *     *            *            *            *     ''

என்றனர் மெய்ஞ்ஞானச் செல்வராகிய பட்டினத்தடிகள்.

 

தாயின் கற்பத்தில் குழந்தையின் தேகம் பூரண உருவமடைந்தபின் கபாலத்திலுள்ள உச்சித்துவார வழியாய் தேகத்திற்குள் வந்து சேருகிறது. சந்திர மண்டலத்திலுள்ள ஆன்மாவின் மிசிரம கர்மபலன் அதை விட்டுப் பிறிந்தபின், பூமியில் சனிக்கு மட்டும் அந்த ஆன்மாவிற்குத் தன்னைப் பற்றிய முன்பின் விஷயங்கள் யாவும் தெரியுமென்று கூறப்பட்டிருக்கிறது.)
 

எட்டாவது அத்தியாயம் முற்றிற்று.

 

9 - வது மாயாவிகார * அத்தியாயம்

 

[* இதற்கு வடநூலில் " இராஜவித்தியா ராஜகுய்ய யோகம் " என்று பெயர்.]

 

(முன் அத்தியாயத்தில் சகுணப்பிரம்ம உபாசனையால் பிரம்மலோ கத்தை யடைந்த உபாசகன் அங்குள்ள போகங்களைப் புசித்தபின் கற்பாந்தத்தில் பிரம்மஞானத்தால் முத்தியடைவன் என்று பகவான் அருளிச் செய்தமையால், ''அந்தப் பிரகாரமே முத்தியடையப்படுவதா? அல்லது வேறு அந்நிய மார்க்கத்தாலும் அடையப்படுவதா?'' என அர்ச்சுனனுக் குண்டாகும் ஐயத்தை நீக்கும் பொருட்டு இந்த அத்தியாயம் தொடங்கப் படுகிறது.)

 

துன்பத்தை யளிக்கும் பிறவியை யொழிப்பது முன் அத்தியாயத்தில் கூறப்பட்ட கிரம முத்தியோ அல்லது அந்நிய முத்தியுளதோ என்று அர்ச்சுனன் மனதில் உதித்த சந்தேகத்தை யறிந்த மேகவர்ணனாகிய கண்ணபிரான் பின் வருமாறு அருளிச் செய்கிறார்:

 

(இப்போது பகவான் முன் கூறிய சகுணப் பிரம்மத்தியானத்திலும் ஆன்மஞானமே சாட்சாத் மோக்ஷசாதனம் என்பதை யறிவிக்கத் தொடங்குகிறார்.)

 

ஏ பார்த்த! உலகிலும் சாத்திரங்களிலும் கூறா நிற்கும் சகல ஞானங்களிலும் முதன்மையானதும் அநுபவமா யறியக்கூடியதுமான ஞானத்தை, இரகசியமான பொருள்களனைத்தினும் அதி இரகசியமானதை, எள்ளளவேனும் துன்பமில்லாததை, பல ஜன்மங்களிற் றேடிய சகல பாபங்களையும் ஒழிக்கும் உத்தம பவித்திரமாயுள்ள ஞானத்தை உனக் குரைக்கின்றேன் அறிந்துகொள்வாயாக.

 

அத்தகைய இணையற்ற ஆன்மஞானமானது அக்ஷயமாக (அழிவற்ற தாக) உள்ளது. பல ஜன்மங்களிற் செய்த நிஷ்காம தருமங்களின் பல வடிவமானது. குருவருளால் கஷ்டமின்றி அடையத்தக்கது. ஆயினும் அதையடைய வேண்டுமென்ற சிரத்தையில்லாதோர் என் அருளைப் பெறாமல் பிறப் பிறப்பாகிய துன்ப சாகரத்தில் உழன்றுகொண்டிருப்பர்.

 

[ஞானத்தையடைய வேண்டும் என்ற சிரத்தையோடு குரு முகத்தில் சிரவண மனனாதிகளைச் செய்து முயன்றால் தான் ஞானம் கிட்டும். ஏனை யோர்க்கு அது அடையச் சாத்தியமானதன்று.)

 

(இப்போது பகவான் ஆன்ம ஞானத்தை யருளிச் செய்கின்றார்.)

 

ஏ பார்த்த! ஒருவராலும் காணப்படாத அவ்வியக்த மூர்த்தமே சொரூபமாகவுடைய நான் ஜகங்களனைத்தும் வியாபித்து நிற்பேன். சரா சரங்களனைத்தும் என்னிடத்தில் பொருந்தி யிருக்கும். ஆனால் சர்வேசுரனாகிய நானோ அவற்றில் பொருந்தியிரேன். எனது அவ்வியக்த சொரூ பத்தை யறியாதவர்களது ஊனக்கண்ணிற்கு நான் இப்பிரபஞ்சத்தில் பொருந்தி யிருப்பவன் போலவே காணப்படும்.

 

அர்ச்சுனன்: - ஏ பகவான்! தாங்கள் அவ்வியக்த மூர்த்தியாதலின் தங்களுக்குச் சகத்தில் ஸ்திதிகூடாதேனும் சகல பிரபஞ்சத்திற்கும் தங்க ளிடத்தில் ஸ்திதி கூடுமல்லவா?

 

பகவான்: - எ பார்த்த! நான் சிருட்டிக்கு முன்பு ஒன்றோடும் சம்பந்தியாமலே இருப்பேன். உலகம் கற்பிதமான தாகையால் அது என்னோடு சம்பந்தித்து நிற்காது. அற்புதமான என்றன் இயற்கையினைப் பார்ப்பாய்.

 

("எனது சச்சிதானந்த சொரூபம் ப்ரபஞ்சங்கட்கெல்லாம் காரணமாக விருந்தாலும் அவற்றில் நானிருப்பதன்றாம். பிரபஞ்சங்களும் ஆரோபமாகிய கற்பிதமாதலின் உண்மையில் என்னிடத்தில் அவை இருக்க வில்லை " என்பதாம்.)

 

(இப்போது பகவான் தாம் உலகிற்காதாரமா யிருக்கும் விவரத்தைத் திருட்டாந்த பூர்வகமாய் அருளிச் செய்கின்றார்.)

 

ஏ பார்த்த! எல்லா விடங்களிலும் சென்று கொண்டு எல்லையிலாத அளவாய்ச் சதாசலித்துக் கொண்டிருக்கும் வாயுவானது ஆகாயத்தில் எப்படியிருக்கிறதோ, அவ்வாறே சகல பிரபஞ்சங்களும் எனது சொரூபத்தில் சம்பந்தப்பட்டாலும், என்னைத் தவிர வேறொன்றினிடத்தும் தோன்றாமலும் எப்போதும் என்னிடத்திலேயே நிலைத்திருக்கின்றன.

 

(பிரபஞ்ச உற்பத்தியிலும் திதியிலும் தாம் அசங்கமாக விருப்பதை யருளிச்செய்த பகவான் இப்போது பிரளயகாலத்தும் தமக்கு பிரபஞ்சத் தோடு சம்பந்தமில்லை யென்பதை யருளிச் செய்கின்றார்.)

 

ஏ பார்த்த! இங்கு காணப்படும் ஆகாச முதலான எல்லாப் பதார்த்தங்களும் பிரளயகாலத்தில் முக்குண சம்பந்தமான எனது பிரகிருதியினிடத்தே இலயமாகும். சிருட்டிகாலத்தில் அவை மறுபடி அப்பிரகிருதியிலிருந்தே கிரமப்படி யுற்பத்தியாகும். ஆகையால் உண்மையாகப் பார்க்கில் சர்வஞ்ஞனான நானே பிரபஞ்சமனைத்தும் சிருட்டித்து இரட்சித்து அழிக்கின்றேன்.

 

(இப்போது பகவான் சிருட்டியாதிகளைச் செய்வதால் தமக்குப் பந்த முண்டாகாதென அருளிச் செய்கின்றார்.)

 

ஏ! அர்ச்சுனா! நான் பலன்களில் இச்சை வைத்தல், வெறுத்தல் என்கிற வேண்டல் வேண்டாமையின்றி மித்தியாவடிவமான இச்சிருஷ்டியாதி திருத்தியங்களைச் செய்கின்றேன். ஆகையால் அக்கருமங்கள் என்னைப் பொருந்தா. சிலந்திப் பூச்சி தன் வாயால் நூல் நூற்று அந்நூலான் தான் கட்டுண்பது போல் பலன்களை யடையக்கருதி கர்மங்களைச் செய்வோர் அக்கர்மங்களால் பந்திக்கப்பட்டு அக்கர்ம பலன்களில் சிக்கி யுழலா நிற்பர்.

 

[ஈசுவரனது மாயையாகிய பிரகிருதியே இப்பிரபஞ்சத்தைத் தோற்று வித்து சகல கிருத்தியங்களையும் செய்கிறது. சூரியன் ஒரு சிந்தனையுமின்றி யிருக்க, அதன் பிரகாசத்தால் நீரிலுள்ள தாமரை மலர்வதும், தரையிலுள்ள தாமரை உலர்ந்தழிவதும், நீர் ஆவியாக மாறுவதும், ஈர வேஷ்டி உலர்வதும், கல்லில் சூடேறுவதுமாகிய பல விகாரங்கள் (அந்தந்த வஸ்துவின் நிலைமைக்குத் தக்கவாறு) உண்டாவது போல, ஈஸ்வர சந்நிதான விசேஷத்தால் பிரகிருதியிடம் சிருஷ்டியாதி கிருத்தியங்கள் நிகழ்கின்றன. சீவன்கள் அவரவர் கர்மத்திற்குத் தக்கவாறு சுகதுக்கங்களை யனுபவிக்கிறார்கள். இதனால் துஷ்டநிக்கிரக சிஷ்ட பரிபாலனம் செய்வதால் அரசனுக்குப் பாவபுண்ணியம் சித்திக்காதது போல், பஞ்ச கிருத்தியங்களால் ஈசுவரனுக்கு எவ்விதப் பந்தமும் நேராது. ஈசுவரன் சூரியனைப்போல் பிரகாசித்துக் கொண்டிருப்பதையன்றி ஒரு தொழிலும் செய்பவனல்ல. அவனிடம் செய்கையும் செய்விக்கையுமில்லை.


 ''செய்கையும் செய்விக்கையு மற்றிருக்கும் காந்தச்
      சிலைமலை முன் அயங்கள் வந்து சேட்டிக்கு மாபோல்
 செய்கையும் செய்விக்கையு மற்றிருக்கு மென்முன்

சடமான வுலகமெலாம் சேட்டை செய்யும் * * * *''               (கைவல்யம்)


 ''ஐவகைய சத்தியினாலைந்தொழிலு மாருயிர்க்காய்ச
 செய்யாமற் செய்யும் சிவம்''
 ''வாளிரவி சந்நிதியின் மரைமலர்ந்து வாடிடினும்
 வாளிரவிக் குண்டோ மயல்''                            (பதியியல்)

 

(இப்போது பகவான் அவிவேகிகள் தம் உண்மையை யுணராது சாதாரண மனிதனாக எண்ணுவதைப்பற்றி அருளிச் செய்கின்றார்.)

 

ஏ பார்த்த! சச்சிதானந்த சொரூபியாகவும், சர்வப் பிராணிகளிடத்தும் ஆன்மரூபமாகவும் உள்ள என்னைக் காலதேச வஸ்து பரிச்சேதமற்ற பரமேசுவரனாக அறியாத அவிவேகிகள், சாதாரண மனிதனென வெண்ணி அவமதிப்பார்கள். அவர்கள் மனதின்கண் ஆசை பொருந்தியவர்களாய்க் கர்மங்களைச் செய்து நரகங்களில் சஞ்சரிக்கத் தக்கவர்களாகிய இராக்கதர் முதலியோராவர்.


(இனி தம்மையறிந்து பூசிப்போர் இத்தகையோர் என்று பகவான் அருள்கின்றார்.)

 

விவேக ஞானத்தால் என்னைப் பரிபூரண சொரூபியாகிய பரமேசுர னென உணர்ந்து, மனதை யடக்கிப் புலன் வழிகளில் செல்ல வொட்டாது தடுத்து சதா என்னையே ஸ்மரித்துக் கொண்டிருப்போர் தேவர்களாகக் கருதப்பட்டவராவர்.

 

அவ்வாறு மனவடக்கத்தோடு தங்களைப் பஜிக்கும் புருடர்கள் எவ்விதமாய்ப் பஜிக்கிறார்கள் என்னும் அர்ச்சுனன் சங்கைக்குப் பகவான் விடை யருள்கின்றார்:

 

ஏ பார்த்த! காலத்தாலும், இடத்தாலும், வஸ்துவாலும் பரிச்சின்னமாகக் கருதவொண்ணாத என்னை ஞான தரிசனத்தால் அபேதமாகவும், பலவிதமான சொரூப வணக்கங்களால் பேதமாகவும் (அன்னியமாகவும்) ஞான யோகங்களினால் உபாசனை செய்யா நிற்பர். அவர்களது தன்மையைக் கூறுதும் கேட்பாயாக.

 

[உபாசகர்களாகிய அதிகாரிகள் உத்தமம், மத்திமம், மந்தம் என்ற மூவகையாய்ப் பிரிக்கப்படுவர்.]

1. உத்தம அதிகாரிகள் - மனதை இந்திரியங்களின் வழிச்செல்ல வொட்டாது தடுத்து ஒடுக்கி ஞான யோகத்தால் ஈசுவரனை அனந்நியமாக உபாசிப்போர்.

 

2. மத்திம அதிகாரிகள் - ஈசுவரளை சொரூபமாக (விக்கிரகாதி உருவங்களாக) அன்னியமாக, உபாசிப்பவர்கள். (சரியை கிரியைகளின் வழியாக ஈசுவரனைப் பஜிப்பவர்கள்.)

 

3. மந்த அதிகாரிகள் - சூரியன், அக்னி முதலிய தெய்வ சொரூ பங்களை யுபாசிப்பவர்கள்.
 

[ஒருவன் சரியையில் ஈசுவரனைத் தனக்கன்னியமான சடவடிவாய்க் கண்டு வணங்குகிறான். கிரியையில் மந்திர பூர்வமாகத் துதிக்கிறான். யோகத்தில் தனக்குள்ளாகவே தரிசிக்கிறான். ஞானோதயமானவனே அபேதமாய் இரண்டற்ற நிலையில் (தானதுவான நிலையில்) சாக்ஷாத்கார அனுபவத்தை யடைகிறான்.]


 ''சரிதையிலே யீசன் சடவடிவாய் நின்றான்
 கிரியையிலே மந்திரத்திற் கிட்டி - யருகிருந்தா
 னூனமிலா யோகத்தி லுள்ளொளியா யேநின்றான்.
 ஞானமதி னானாயி னான்.''                             (ஞான விளக்கம்)

 

ஏ பகவான்! இவ்வாறு பல தெய்வங்களை யுபாசிக்கிறார்களே, அந்த அதிகாரிகளனைவரும் ஈசுரனாகிய தங்களையே உபாசிக்கிறார்கள் என்பது எப்படி பொருந்தும்?'' என்று அர்ச்சுனன் கேட்ட சங்கைக்கு ஸ்ரீபகவான் விடை யருள்கின்றார்: -

 

ஏ பார்த்த: - வேதத்தில் கூறப்பட்ட அக்நிஷ்டோமாதி யாகங்களும், எக்ஞங்களும், பிதுர்க்களுக்குச் செய்யும் சிரார்த்தம் முதலியவைகளும், மூவித அக்னிகளும், பிரணவாதி மகாமந்திரங்களும் யாவும் நானாக இருக்கின்றேன்.

 

மேலும் சகல ஜகங்களையும் இரட்சிக்கும் மாதா பிதாவும் பிதா மகரும் நானே. அவரவர்கள் முன் ஜன்மத்தில் செய்த கர்மங்களுக்குத் தக்க சுக துக்காதி பலன்களை யளிக்கும் தாதாவும் நானே. வேதங்களும் பிரணவ மும் நானே. எல்லாரும் அடையும் சுவர்க்காதி பலன்களும் நானே. இரு வினையின் வழியே சீவன்களைப் போஷிப்பவனும் நானே. எல்லார்க்கும் தலைவனும், எல்லாப் பிராணிகட்கும் சாக்ஷியா யிருப்புவனும் நானே.

 

ஏ பார்த்த! எல்லார்க்கும் சுவர்க்கா திபலன்களா யிருப்பவன் நானே. இருவினை வழியே யாவரையும் போஷிப்பவனும், யாவர்க்கும் துக்க நிவர்த்தி யுண்டாக்குபவனும், யாவர்க்கும் பிரதிபலன் கோராமல் உபகா ரம் செய்பவனும், எல்லாப் பொருள்கட்கும் காரணமா யிருப்பவனும் நானே.

 

பூமியின் கண்ணுள்ள நீரை இரவியாய் நின்று ஆக்ருஷணம் செய்கின் றவனும், மீண்டும் அதை மழையாக வருஷிக்கிறவனும் நானே. யார் எந்தத் தெய்வத்தைப் பூசித்தாலும் அவர்கள் என்னையே பூசிக்கிறார்கள். கர்மவயத்தராகிய மாந்தர் ஞான சொரூபியாய் ஏகமாய் உள்ள என்னையே (பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், அக்னி, ஆதித்தன் முதலிய) நானா ரூபங்களாகப் பாவித்து யாகாதிகளால் பூசிக்கிறார்கள். அத்தகையோர் சுவர்க்க லோகமடைந்து அங்குள்ள போகங்களைப் புசித்து, மறுபடி இம்மண்ணுல கில் ஜனித்து, இவ்வாறே இச்சையினால் மீண்டும் மீண்டும் பிறப்பதும் இறப்பதுமாய் அலைவர்.

 

[புண்ணிய கர்மங்களையும் யாகாதி யக்ஞங்களையும் செய்வோர் மேலுலக போகங்களால் அப்புண்ணிய கர்மபலன்களை யனுபவித்து மீண்டும் பிறப்பிறப்பையடைவர் என்று பகவான் கூறியது சகாய புருடர்களைப்பற்றியே. அதாவது இச்சையோடு, பிரதிபலனை யெதிர்பார்த்துக் கருமங்களைச் செய்வோர்களைப் பற்றியே. இச்சையே பிறவிக்குக் கார ணம். மனம் இச்சா சொரூபமே.]

 

இப்போது பகவான் தத்துவஞானிகளாகிய நிஷ்காம புருஷரைப் பற்றி அருளிச்செய்கின்றார்.

 

ஒளி பொருந்திய வேலாயுதத்தை யேந்திய அர்ச்சுனா! என்னையே அநந்நியமாய்ச் சாக்ஷாத்கரித்துச் சதா சிந்திக்கும் துறவிகள் வேண்டிய யாவற்றையும் நானே உடனுக்குடன் கொடுத்து இரட்சிப்பேன்.

 

(எல்லார் வேண்டியவற்றையும் பகவானே யளிப்பவராயிருக்க ஈண்டு ஞானிகள் வேண்டுவனவற்றைப்பற்றி மட்டும் விசேஷித்துக் கூறுவதென்னை யெனின், மற்றப் பிராணிகள் வேண்டியவற்றிற்கு முன்னே பிரயத்தனத்தை யுண்டுபண்ணி அப்பிரயத்தன வாயிலாய் அளித்து இருக்கிறார். ஞானிக்கு வேண்டியவற்றைப் பிரயத்தனமின்றியே யளிக்கிறார். அதனானே உடனுக்குடன் அளிக்கிறார் என்று கூறப்பட்டது.)

 

அர்ச்சுனன்: - பகவான் தாங்கள் அருளியவற்றால் இந்திரன் முதலிய அநந்நிய தேவதைகளும் உமது சொரூபமேயாகும். ஆதலின் அத் தேவதைகளை யுபாசிப்போர் உம்மையே யுபாசித்தவராவர். அவ்வாறிருக்க அவர்களெல்லாம் மீண்டும் பிறப்பிறப்பை யடைவரென்பதும், தங்கள் பக்தர்கள் மட்டும் பிறவி யடையார் என்பதும் எவ்வாறு பொருத்தமாகும்?

 

ஏ பார்த்த! இந்திரன் முதலிய தேவர்களை வணங்குவோர் உண்மையில் என்னையே வணங்குகிறார்கள். ஆயினும் அவர்கள், அந்த தேவதைகள் எனது சொரூபமே என்பதை அறியாத அஞ்ஞானத்தோடு பொருந்தியிருந்தே அப்படி வணங்குகிறார்கள். ஆதலின், மீண்டும் ஜனிக்கிறார்கள்.

 

(ஞானியோ எல்லாம் என்னுடைய சொரூபமே யென்றும், என்னை யன்றி வேறொன்றுமில்லை யென்றும் அறிவதாகிய ஞானத்தோடு என்னை வணங்குகிறானாதலின் பிறவியில்லாத நித்தியானந்தப் பேற்றை யடை கிறான்.)

 

(இந்திரனாதி தேவர்களைப் பூசிப்போர் பிறப்பிறப்பற்ற உயர் பதவியை யடையாரெனினும், அந்தந்த தேவதையின் ஆராதனைக்குரிய அற்பபயனை அவசியம் அடைவார்களென்றும், நேரே தம்மையே பூசிப்போருக்குரிய விசேடணத்தையும் அருளிச் செய்கின்றார்.)

 

இந்திரன் முதலிய தேவர்களை யாராதிப்போர் அத்தேவர்களே யாவார்கள். பிதிர்க்களை யாராதிப்போர் அப்பிதிர்க்களே யாவார்கள். யார் எந்தப் பூதங்களிடத்து அன்புவைத்து ஆராதிக்கிறார்களோ அவர்கள் அப்பூதங்களே யாவார்களெனின், என்னை யாராதிப்போர் நானே யாவார் களென்பதில் ஐயமுண்டோ? இல்லை.

 

(இப்போது பகவான் தனது பக்தர் அழியாத பலனையடைவர் என்பதை யருளிச்செய்து, தமது ஆராதனம் கஷ்டமின்றென்பதையும் அதன் பிரகாரத்தையும் யருளிச் செய்கிறார்.)

 

ஏ பார்த்த! பத்திரம், புஷ்பம், பழம் முதலிய சுலபமாய்க் கிடைக்கத்தக்க வற்றைக் கொண்டு உள்ளன்போடு அருந்திய பக்தியால் என்னை யாராதிக்கும் பரிசுத்த உள்ளமுடைய அன்பர்கள் எனக்கு அர்ப்பணம் செய்ததையே நான் சந்தோஷமாய் ஏற்றுக்கொள்வேன். ஆதலின் ஈவன, நோற்பன, உண்பனவாகிய, இவற்றையெல்லாம் அன்போடு எனக்கு அர்ப்பணம் செய்தால் பிரம்ம சொரூபியான என்னையே அடையலாகும்.

 

(இந்திராதி தேவதைகளை யாராதிப்பதிலும் யாகாதி எக்ஞங்களைச் செய்வதிலும், மிகு திரவியச் செலவும், தேகப்பிரயாசமும் உண்டு. ஈசுவரனை யாராதிப்பதற்கு மெய்யான பக்தி யொன்றே போதும். ஆதலின் தம்மைப் பூசிப்பதின் சுலபத்தைப் பகவான் அருளிச்செய்தார்.)

 

(பகவானே! உமது பக்தர்க்கு அநுக்கிரகம் செய்து மற்றையர்க்குச் செய்யாததால் தம்மிடம் இராகத்துவேஷாதிக ளிருப்பதாகவன்றோ எண்ணவேண்டுமென்ற அர்ச்சனன் சங்கைக்குப் பகவான் அருளிச் செய்கின்றார்.)

 

ஏ பார்த்த! ஈசுவரனாகிய நான் எல்லாப் பிராணிகளிடத்தும் சமானமாகவே யிருப்பவனாதலின், எனக்கு யாவரும் சமானர்களே யன்றி இன்னவர் பிரியமானவர், இன்னவர் பிரியமில்லாதவர் என்ற வித்தியாசமில்லை. ஆயினும் எவன் என்னை இவ்வாற்றிந்து, சர்வ கர்மபலன்களையும் எனக்கே அர்ப்பணம் செய்து என்னிடம் அநந்நியபக்தி செலுத்துகிறானோ அவன் என்னிடத்துள்ளவனாவான். நானும் அவனிடத்திருந்து அவனுக்கு அநுக்கிரகம் செய்வேன்.

 

(அக்கினி, ஜலம், கற்பகவிருட்சம் இம்மூன்றும் இராகத்துவேஷ முடையவையல்லவேனும் தம்மை யடைந்தவர்களது குளிரையும், வெப்பத்தையும், குறையையும் முறையே தவிர்ப்பது போல், ஈசனும் தம்மை யடைந்தவர்க்கருள் செய்வார். மற்றையர்க்குச் செய்வதில்லை.)

 

ஒருவன் உணவு முதற்கொண்டு எனக்கே அர்ப்பணம் செய்து, என்னிடத்தில் அநந்நிய பக்தி யுடையவனாயின், அவன் மிக்க துராசார முடையவனாயினும் சாதுவே யாவன். அவன் துராசாரமுடையவனா யிருந் திருப்பினும் என்னிடத்து வைத்த பக்திப் பிரபாவத்தால் எப்போதும் துன்பமில்லாது நித்தியமான நிரதிசயானந்த மோட்சத்தையே யடைவான் என்பது சாத்தியமே.
 

வேளாண்மை, வாணிபம் முதலிய எத்தகைய தொழில் செய்பவராயினும், இன்னும் தாழ்ந்த தொழில் செய்பவராயினும், ஸ்திரீகளாயினும் என்னிடத்து அருந்திய பக்தி வைப்பராயின் அத்தகையோர் பந்தத்தினின்றும் விடுபட்டுப் பரகதியடைவாரெனின், மன்னர்களும் பிராம்மணர்களும் என்னிடத்து வைத்த பக்தியால் பிறப்பிறப்பை யொழித்து முத்தியின்பமெய்துவர் என்று கூறவும் வேண்டுமோ?

 

“ஏ! அர்ச்சுனா மின்னலைப்போன்று தோன்றி யழியுந்தன்மைத்தாய இம்மாநுட வாழ்வில் உள்ள நீ பக்தியோடு திரிகரணங்களால் என்னையே நமஸ்கரித்து, சதா என்னையே சிந்திப்பாயாகில் நித்தியானந்த சொரூபி யாகிய என்னையே யடைவாய் " என்று பகவான் அருளிச் செய்தார்.

 

[எவன் உலக சம்பந்தமான எந்த வஸ்துவிலும் மனம் பற்றாதவனாய், அதாவது நிராசை யுடையவனாய் ஈசுவரனுடைய நிஜ சொரூபத்தில் பக்தி யுடையவனாய்ச் சதா அவனையே திரிகரண சுத்தியோடு சிந்தித்துக்கொண் டிருக்கிறானோ அவன் முடிவில் பரமானந்த சொரூபியாகிய அப்பகவா னையேயடைகிறான். எவ்வாறெனின், நதிகளெல்லாம் கடலை நோக்கிச் சென்று முடிவில் தமது நாமம் உருவம் யாவும் ஒழிந்து கடலிற் கலந்து கடலே யாவது போல ஆன்மாவும் பிரம்ம சொரூபத்தை யடைகிறது.]


 ஒன்பதாவது அத்தியாயம் முற்றிற்று.

 

10 - வது விபூதியோக அத்தியாயம்

 

(ஏழு, எட்டு, ஒன்பதாம் அத்தியாயங்களில் பகவான் தத்பதார்த்த வடிவனான பரமேஸ்வானது சோபாதிக நிருபாதிக சொரூபங்களைக்காண் பித்தனர். அவற்றில் ஒன்று தியானத்திற்கு மார்க்கம்; மற்றொன்று ஞானமடையும் மார்க்கமாகும். அத்தகைய பரமேஸ்வரனுடைய * விபூதிகள் ஏழாவது, ஒன்பதாவது அத்தியாயங்களில் சுருக்கமாகக் கூறப்பட்டன. அவற்றை விரித்துக் கூறவே பகவான் இப்பத்தாவது அத்தியாயத்தை ஆரம்பித் தருளுகின்றார். கருணாநிதியாகிய பகவான் அர்ச்சுனன் வினவாமலே அவனுக்கு அருளிச் செய்கின்றார்.)

 

நான்மறை யுச்சியில் நடனம்புரியும் கார்வண்ணனாகிய பகவான் பார்த்தனை நோக்கி, "ஏ அர்ச்சுனா! முன்பு எனது பிரபாவங்களைச் சுருக்கமா கக் கூறினேன். அவற்றைக் கேட்ட உன் மனதில் களிமிகும்படி அன்பனாகிய உனக்கு மீண்டும் அதை விவரமாகக் கூறுகிறேன் கேட்பாயாக' என்று அருளிச்செய்தனர்.

 

(பரமேசுவரராகிய தங்கள் பிரபாவங்களை எனக்கு உபதேசிக்கத் தக்கவர்கள் இந்திரன், மகரிஷிகள் முதலியவர்கள் இருக்கையில் அதைத் தாங்களே ஏன் உபதேசிக்க வேண்டு மென்று அர்ச்சுனனுக்கெழும் சந்தேகத்தை நிவர்த்திக்க வேண்டி பகவான் பின் வருமாறு அருளிச் செய்கின்றார்.)

 

ஏ பார்த்த! இந்திரன் முதலிய தேவர்களும் பிருகு முதலிய ரிஷிக்ளும், அசுரரும், சித்தர்களும் ஆகிய யாவரும் எனது பிரபாவத்தை யுணரார்கள். ஏனெனில் தேவர் முதலிய அனைவர்க்கும் நான் காரணனாக விருக்கிறேன். அவர்களுடைய புத்தியாதிகளைப் பிரவர்த்திப்பிக்கும் காரணன் நானாகவிருக்கிறேன். அவர்களனைவரும் என் காரியங்கள். ஆகையால் என் பெருமைகளை யவர்கள் உணருகின்றார்களில்லை. மரணமும் பிறப்பு மில்லாத என்னை யறியத்தக்கவர்கள் சகல பாவகர்மங்களையும் அறவே விடுத்து நிரதிசயானந்தமாகிய முத்தியை யடையாநிற்பர்.

 

[* விபூதிகள் = விசேஷ குணங்கள், ஐசுவரியங்கள்.]

 

புத்தி (அந்தக்கரணங்களின் தொழில்,) பொறுமை, தவம், ஞானம், புகழ்ச்சி, அபகீர்த்தி, ஜீவ இம்சை செய்யாமை, சத்தியம், சமை (உட்கரணங்களை யடக்கல்,) தமை (புறக்கரணங்களை யடக்கல்,) ஜபம், தானம், மரணம், பிறப்பு, பிராரப்த வசத்தால் கிடைத்தது கொண்டு திருப்தியடைதல், சுகம், துக்கம், பயம், பயமில்லாமை இவை யாவும் என்னிடத்தி கனின்றே உண்டாகின்றன வென்பதை நீயறிவாயாக.

     

எவ்வகைப்பட்ட தவங்களை யுடைய ரிஷிகளும், ஸ்தாவர சங்கம் ரூபமாகிய சகல உலகங்களையும் உண்டாக்கிய (சுவாயம்பு முதலிய பதினான்கு) மனுக்களும், ஜனகர், ஜகத்குமாரர், ஜனந்தனர், ஜநாதனர் ஆகிய நான்கு மகரிஷிகளும், எனது சங்கற்பமாத்திரத்தால் உதித்தவர்கள் என்று அறிவாயாக.

 

இவ்வாறு என்னையுள்ளபடி யறிந்த அறிவாளிகள் என்னிடம் தங்கள் பிராணனோடு சித்தத்தை அர்ப்பணம் செய்வார்கள். அவர்கள் தங்கள் மாணாக்கர்களையும் அவ்வாறே செய்யும்படி செய்வார்கள். சதா என்னைப் பற்றியே போதியா நிற்பர்; என்னைப்பற்றிய சம்பாஷணையிலேயே சந்தோஷமடைவர்; அதிலேயே இன்புற்றிருப்பர்.

(இவ்வாறு தமது பிரபாவத்தை யறிந்து பஜிக்கும் அன்பர்கள் அடையும் பயனை பகவானருளிச்செய்கின்றார்.)

 

ஏ பார்த்த! இவ்வாறு என்னைச் சதா சிந்திக்கும் அத்தகைய பக்தர்களுக்கு நான் கூறிய அந்த ஞானயோகத்தை யுண்டாக்குவேன். அதனாலவர்கள் என்னைத் தமதான்ம வடிவமா யடைவார்கள். நான் அவர்கள்ளது துன்பத்தைப்போக்கி, அவர்கள் எனது உண்மைச் சொரூபத்தை யாராய்ந்தறியும் புத்தியையளித்து, அவர்களது அஞ்ஞானத்தாலுண்டான ஆவரண இருளை ஞான வொளியால் நாசமாக்குவிப்பேன்.

 

(இவ்வாறு பகவான் கூறியவற்றைச் சாமான்யமாய்க் கேட்ட அர்ச்சுனன், அதை மீண்டும் விசேடமாகக் கேட்க ஆவல் கொண்டவனாய்ப் பகவானைத் துதிக்கிறான்.)

 

ஏ பரந்தாமா! பிறப்பிறப்பற்றவன், எங்கும் நீக்கமற நிறைந்து நிற்கும் விபு, பேரானந்த சொரூபி, சர்வஜகத்திற்கும் காரணனான ஆதிதேவன் பரப்பிரம்மம், நாசமற்றவன், வேதங்களுக்கெட்டாதவன், யாவற்றையும் பிறப்பிப்பவன் என்று மெய்ஞ்ஞானிகளாகிய மகரிஷிகள் அருளிச் செய்தவனைத்தையும் தாங்களே எனக்கருளிச் செய்தீர்கள். சர்வ பூதங்கட்கும் ஒப்பற்ற காரணனே! சர்வ ஜனங்கட்கும் ஈசுவரனே! தேவர்கட்கும், உல கங்களுக்கும் இறைவனே! "என்னை நானே அறிவித்தாலல்லது ஒருவரும் அறியார்கள். என்னை நானேயறிவேன்'' என்ற வாக்கியங்களிலுள்ள பொருள்க ளனைத்தும் சாத்தியமே யாகும். யானும் அந்த உண்மையை யறிந்து சந்தேக மொழிந்தேன்.

 

["அவனருளாலே யவன்றாள் வணங்கி' என்று மணிவாசகப்பெருமான் அருளியபடி ஈசுவரன் கருணை கூர்ந்து தன்னை யறிவித்தாலன்றி அவனை அறிய வொண்ணாது. அப்பர் சுவாமிகளும் "(உம்மைக்) காண்பா ரார் கண்ணுதலே (நீர்) காட்டாக்காலே'' என்றருளினர். தாயுமான சுவாமிகளும் "அதன் பெருமை யெவர்க்கார் சொல்வார், அதுவானால்
 அதுவாவர் அதுவே சொல்லும்" என்றருளினர். இதனானே முத்தியடை வதற்குப் பக்தி இன்றியமையாததென உணரக்கிடக்கிறது. பக்தியா லேயே ஈசுவரனது அருளைப் பெறலாகும்.]

 

ஏ பரந்தாமா! பற்பலவிதமாக உள்ள இந்தப் பிரபஞ்சத்தின் கண்ணே எத்தகைய உருவங்கள் மெய்யான தன்மையினையுடைய தங்கள் சொரூ பங்கள் என்பதை அடியேன் அறிந்திலேன். அத்தகைய தங்கள் சர்வ விபூதிகளையும் தங்களையே தஞ்சமென நம்பிய அடியேனுக்கு உபதேசித் தருளப் பிரார்த்திக்கிறேன். தங்கள் பிரபாவங்களாகிய உபதேசவமிர்தத்தைப் பருகும் எனக்கு ஒருபோதும் திருப்தியுண்டாகிறதில்லை. ஆகையால் அடியேனுக்கவற்றைப் பூரணமாக உபதேசித்தருளல் வேண்டும். என்று இவ்வாறு பிரார்த்திக்கும் அர்ச்சுனனுக்கு முக்காலங்களிலும் வளர்தலும் குறைதலுமின்றி என்றும் ஒரே சச்சிதானந்த சொரூபியாய் விளங்கும் பகவான் பின் வருமாறு அருளிச் செய்கின்றார்: -

 

ஏ பார்த்த! அளவிறந்த எனது விபூதிகளுக்கு ஓர் முடிவில்லை. அவற்றைப் பூரணமாகக் கூறவொண்ணாது. ஓ தருமசிந்தனையுடைய அர்ச்சுனா! அத்தகைய விபூதிகளில் சிறந்தனவாகிய சிலவற்றைக் கூறுகிறோம் கேட்பாயாக,

 

சகலப் பிராணிகட்கும் இருதயத்தின் கண்ணுள்ள பிரத்தியகான்மா (சாட்சியாயுள்ளது) நானே யாகிறேன். நானாபேதங்களாக விருக்கும் இப்பிராணிகட்கெல்லாம் உற்பத்தியும், ஸ்திதியும், நாசமும் நானேயாகிறேன்.

 

துவாதசாதித்தருள்ளே விட்டுணு நானாகிறேன். சப்தமருத்துவரில் மரீசி நானாகிறேன். பிரகாசவஸ்துக்களில் எங்கும் பிரகாசிக்கும் ஆதித்தன் நானாகிறேன். வானத்தில் ஒளிரும் நட்சத்திரங்களுள் சந்திரன் நானாகிறேன். வேதங்களில் சாமவேதம் நானாகிறேன். தேவர்களில் இந்திரன் நானாகிறேன். இந்திரியங்களில் மனம் நானாகிறேன். சர்வப்பிராணிகளின் சம்பந்தமுடைய காரணகாரியங்களாகிய பூதங்களுக்குள் சேதனம் நானாகிறேன். ஏகாதச உருத்திரர்களுக்குள்ளே மந்திரரூபனான சங்கரன் நானாகிறேன். யட்சரருள் குபேரன் நானாகிறேன். மலைகளில் மகம் மேரு நானாகிறேன். அஷ்டவசுக்களில் அக்னி நானாகிறேன். சேனாபதிகளுக்குள் தேவர் சேனாபதியாகிய அறுமுகன் நானாகிறேன். நீர் நிலைகளுக்குள் கடல் நானாகிறேன். புரோகிதர்களுக்குள் பிரகஸ்பதி நானாகிறேன். யாகங்களுக்குள் ஜபயாகம் நானாகிறேன். ஸ்தாபரமான (சலனமற்ற) சகல பொருள்களிலும் இமாசலம் நானாகிறேன். மகரிஷிகளுக்குள் பிருகுரிஷி நானாகிறேன். வாக்குகளில் பிரணவமாகிய ஓங்காரம் நானாகிறேன். மரங்க ளில் அரசு நான். தேவரிஷிகளில் நாரதர் நான். கந்தருவருள் சித்திரரதன் நான். சித்தர்களில் கபில முனி நான். அசுவங்களில் (பாற்கடலிற் பிறந்த) உச்சைச்சிரவம் என்ற அசுவம் நான். யானைகளுக்குள் ஐராவதம் நான். மனிதருள் அரசர் நானாகிறேன். ஆயுதங்களுள் வச்சிராயுதம் நானாகிறேன். சர்ப்பங்களுக்குள் வாசுகி நான். நாகங்களுக்குள் ஆதிசேடன் நான். பசுக்களில் காமதேனு நான். ஜலத்தில் சஞ்சரிப்பவைகளில் வருணன் நான். தண்டிப்பவர்களில் யமன் நான். காமங்களுக்குள் புத்திரோத்பத்திக் கேது வான காமம் நானாகிறேன். அசுரர்களுக்குள் பிரகலாதன் நானாகிறேன். கணிக்கப்பட்டவைகளுள் காலம் நான். பட்சிகளுக்குள் கருடன் நான். மிருகங்களுக்குள் சிங்கம் நான். வேகமாய்ச்செல்லும் வஸ்துக்களுள் வாயு நான். யுத்த வீரர்களுக்குள் இராமன் நான். மச்சங்களுக்குள் மகரம் நான். நதிகளில் கங்காநதி நான். வித்தைகளுள் பிரம்மவித்தை நானாகிறேன். அட்சரங்களுக்குள் 'அ'காரம் நானாகிறேன். அழிவற்றகாலம் நானாகிறேன். இருவினைப்பயன்களைக் கொடுப்பவனும் நானாகிறேன். சர்வ உயிர்களையும் சங்காரம் செய்யும் மிருத்துயு நானாகிறேன். அவ்வுயிர்களை உற்பவம் செய்பவனும் நானே. பெண்களில் * சப்தமாதர் நானாகின்றேன்.

 

* 1) கீர்த்தி. (2) ஸ்ரீ (தர்மம், அர்த்தம், காமம்). (3) வாக்கு (சரஸ்வதி) (4) மேதை (கிரந்தங்களின் அர்த்தங்களைக் கிரகிக்கும் சக்தி) (5) க்ஷமை (சுகதுக்கங்களைச் சமமாகக் கருதும் சக்தி) (6) திருதி (சகல பீடைகள் வரினும் சரீரேந்திரியங்களை ஸ்திரமாகச் செய்யும் சக்தி) (7) ஸ்மிருதி (பூர்வம் உணர்ந்திருப்பவற்றை வெகுகாலத்திற்குப் பின்னும் நினைவிற்குக் கொண்டு வரும் சக்தி).

 

ஆறு இருதுக்களில் வசந்த இருது நான். மாதங்களுக்குள் மார்கழி மாதம் நான். சந்தசுக்களுக்குள்ளே காயத்திரி நான். வஞ்சிப்பவைகளுள் சூது நானாகிறேன். முயற்சியுடையாரிடம் முயற்சி நானாயிருக்கிறேன். ஜெயசீலர்களிடம் வெற்றி நானாகிறேன். பலசாலிகளிடம் வல்லமை நானாகிறேன். சாத்வீகபுருடரிடம் (சத்துவகுண காரியமாகிய) தர்மம், சாந்தம், வைராக்கியம் முதலியவை நானாகிறேன். ஞானிகளிடமுள்ள (பிரம்மான்ம ஐக் கியரூப) ஞானம் நானாகிறேன். யாதவரில் கிருஷ்ணன் நான். சாஸ்திர வான்களுள் சுக்கிரன் நான். பாண்டவருள் தனஞ்சயன் நான். முனிவர்களில் வேதவியாஸர் நான். மறைவான பொருள்களுக்குள் (பூரண) மௌனம் நானாகிறேன். இப்பிரபஞ்ச மனைத்திற்கும் சேதனரூபமான காரணம் நானாக விருக்கிறேன். பரமேசுவரனாகிய என்னையன்றி வேறு யாதொரு பதார்த்தமுமில்லை. (எல்லாம் எனது சொரூபமே.)

 

ஓ அன்பனே! எவ்வளவு வருந்தினும் எனது பெருமையை முடிவுறக் கூறமுடியாது. அத்தகைய விபூதியை நான் ஒருவாறு ஏகதேசமாக உரைத்தேன். எந்தெந்தப் பிராணிகள் இலக்ஷ்மி கடாக்ஷம் பெற்றவைக் ளும் ஐசுவரியம் பெற்றவைகளுமாக விருக்கின்றனவோ அவை யாவும் எனது சக்தியின் அம்சத்தாலுண்டானவையென் றுணர்வாயாக.

 

ஏ அர்ச்சுனா! பலவிதமாக இனி நான் உரைத்தென்ன பயன்? எல் லாப் பிராணிகளும், சகல அண்டங்களும் என்னில் ஏகதேசமாத்திரத்தில் (எங்கோ ஓரிடத்தில்) ஒடுங்கி நிற்கின்றன. ஆயினும் நான் அவற்றோடு எள்ளளவும் சம்பந்தியேன். என்றிவ்வாறு ஆயர்பாடியில் அவதரித்த பரந்தாமனாகிய ஸ்ரீ கண்ணபிரான் அருளிச்செய்தார்.

 

பத்தாவது அத்தியாயம் முற்றிற்று.

 

11 - வது விஸ்வரூப அத்தியாயம்

 

[பத்தாமத்தியாயத்தில் ஸ்ரீ பகவான் தமது நானாவான விபூதியின் மகிமைகளை யருளியபின் முடிவில் எல்லாப் பிராணிகளும் எல்லா உலகங்களும் என்னில் ஓரிடத்தில் ஒடுங்கிநிற்கும் என்றருளினர். அது பகவானுடைய விசுவரூபத்தன்மையைக் குறிக்கிறபடியால் அச்சொரூபத்தைத் தரிசிக்க ஆவல் கொண்ட அர்ச்சுனன் பகவான் முன்பருளியதைப் புகழ்ந்து துதிக்கின்றான்.]

 

அர்ச்சுனன்: - 'மனவாக்குகளுக்கெட்டாத பரம்பொருளே! துளப மணிந்த முடியுடையவரே! சகடாசூரனை வதைத்த பாதமுடையவரே! எல்லா உயிர்கட்கும் உள்ளுயிராயிருப்பவரே! சோக மோகங்களில் முழுகிக்கிடந்த அடியேனிடத்து கருணை கூர்ந்து தாங்கள் அருளிய அமுதம் போன்ற வாக்கியங்களைக் கேட்டு என் மோகமொழிந்தேன். ஒருவராலும் காண்டற்கரிய பரம்பொருளே! ஒருவர்க்கும் தோன்றாத படி தாங்கள் எவ்விடத்தும் வியாபித்தவராய் நிற்கின்ற அத்திருக் கோலத்தை அடியேன் தரிசிக்க அத்தியந்தம் ஆவலுடையவனாக விருக்கிறேன்'' என்று மொழிந்தான்.

 

(தமது அன்பனான பார்த்தனது பிரார்த்தனையைச் செவியேற்ற பக வான் தமது விசுவ சொரூபத்தை யவனுக்குத் தரிசிப்பிக்கத் திருவுளங் கொண்டு அச்சொரூபத்தின் தன்மையை யொருவாறு அருளிச் செய்கின்றார்)

 

"எ அர்ச்சுனா! அந்த எனது சொரூபம் எண்ணுதற்கரிய பலவித சுபாவங்களையுடையது. எண்ணுதற்கரிய நிறங்களையுடையது. கற்பனை செய்து ஒருவராலும் சிருஷ்டித்தறிய வொண்ணாதது. ஆகாயத்தினும் விரிந்த சுபாவமுடையது. கண்பார்வையால் அளவிட்டறிய வொண்ணாதது. நாற்பத்தெட்டு மருத்துவரும், பனிரண்டு சூரியர்களும், எட்டு வசுக்களும், பதினோரு உருத்திரரும் என்னிடத்தேயுள்ளார்கள். யாவரும் காணப் பிரியங்கொள்ளும் அனேகம் உருவங்களும் என்னிடத்தே யுள்ளன. கருத்தோடு அவற்றை நீ காண்பாயாக'' என்று அருளிச் செய்தபின், பகவான்,

 

அர்ச்சுனனது சாதாரணமான இரண்டு கண்களும் தமது சொரூபத்தைக் காணமுடியாவென்று கருதி அவனுக்கு ஞானக்கண்ணளித்து, தாம் அருளிப்படியே விசுவ சொரூபம் காட்டி நின்றார்.

 

(என்றிவ்வாறு திருதராட்டினருக்குக் கூறும் சஞ்சயர், பகவானது விசுவரூபத்தின் விசேடணங்களைக் கூறுகிறர்.)

 

அர்ச்சுனனுக்கு உபதேசித்தருளிய ஸ்ரீ கண்ணபிரான் அக்குருக்ஷேத் திரத்தில் கொண்டருளிய விசுவரூபத்தை ஒருவரால் இத்தகையதென வரையறுத்துக் கூறக்கூடுமோ? (" கூடாது ஆயினும் ஒருவாறு சிறிது கூறு கிறேன் " என்றபடி.) தேன் சொரியும் மலர் மாலைகளும், பீதாம்பரம், கந்தம் முதலியவைவைகளையுமுடைய அச்சொரூபம் எல்லை கடந்து அருந்தமாய், எண்ணிறந்த பலகோடி சூரியர்கள் ஆகாயத்தின் கண் உதித்ததற்கு ஒப்பானதாகும்.

 

இன்னும் அந்த விசுவரூபத்தின் கண்ணே உள்ள தோள்களும், பாதங்களும் அனேகம். அழகுபெற அணியப்பட்ட ஆபரணங்களும் அனேகம். ஒளிபொருந்திய முகங்கள் அனேகம். வாய்கள் அனேகம். கைப்பற்றிய ஆயுதங்கள் அனேகம். அற்புதங்களும் அனேகம்.

 

பகவான் கொண்டருளிய அவ்வற்புதமான விஸ்வருப கோலத்துள் எவ்வகைத் தன்மைகளையு முடையனவாகிய எல்லாப் பொருள்களையும் நேரே தரிசித்த அர்ச்சுனன், இனி நாம் ஈடேறினோம் என்று ஆனந்தத்தில் முழுகினவனாய் தான் செய்வதின்னதென அறியாதவனாகி, அச்சொரூபத்தின் முன் சாஷ்டாங்கமாக வீழ்ந்து நமஸ்கரித்தான். மனங்கரைந்து கண்களில் ஆனந்தபாஷ்பம் பெருக புளகாங்கிதமுற்று, இரு கரங்களையும் குவித்து அப்பரமேசுவரன் சந்நிதியில் நின்று பின்வருமாறு புகலலுற்றான்: -

 

''ஓ! தேவர்களாலும் பூசிக்கப்பெற்ற பரம்பொருளே! நீர் கொண்ட இந்த அற்புதமான விசுவரூப கோலத்தினுள்ளே ஒருவராலும் அளவு காணமுடியாத ஸ்தாவர ஜங்கம பொருள்களனைத்தும் பொருந்தியிருக்கக் கண்டேன். மும்மூர்த்திகளில் சிருட்டி கர்த்தாவாகிய நான்முகப் பிரம்மாவை முனிகணங்களோடும் கண்டேன். வாசுகி முதலிய நாகங்களைக் கண்டேன். தேவர்களின் கூட்டங்களையும் கண்டேன்.

 

ஏ பரந்தாமா! குளிர்ச்சி பொருந்திய கிரணங்களையுடைய மகுடமும், கதையும், சக்ராயுதமும் தரித்தருளி, சூரியனும் அக்கினியும் ஒன்று கூடிய சோதியை யொப்பான தமது விசுவரூபத்தின்கண்ணே அனேகம் கண்களும், உதரங்களும், புயங்களும், முகங்களும் உடைய அனேகம் வடிவங்களைக் கண்டேன்.

 

ஏ பகவான்! தாங்கள் கொண்டருளிய இந்த அற்புதமான உருவமானது என்ன உருவமென்று என்னால் நிச்சயிக்கக்கூடவில்லை. இதனுடைய ஆதி, மத்தியம், அந்தம் இன்னவையென்று என்னாலறியக்கூடவில்லை. அழிவற்றதை, நான்மறைகளும் ஆராய்ந்து உபதேசித்ததை, மாயையாலுண்டாக்கப்பட்ட சகலத்திற்கும் அதிஷ்டானமாயிருப்பதை, முக்காலத் தும் உள்ள நித்தியத்தை, சகல தருமங்களும் பிறழாதபடி நிலைநிறுத்தும் நெறியுடையதை, பெருகுதலும் குறைதலுமில்லாததை, என் அநாதியான கடவுளை, கன்றைத் தொடரும் பசுவின் தன்மையாய் என் எதிர்நிற்கக் கண்டேன். சூரிய சந்திரர்களையே நேத்திரங்களாக வுடையதை, மிக்க ஒளியையும் உஷ்ணத்தையுமுடைய அக்னியை முகத்தில் உடையதும், உலகனைத்தும் தனது தேஜசால் தகிக்கப்பண்ணுவதுமாகிய தங்களுடைய சொரூபத்தை மிக்க வியப்போடு தரிசித்தேன்.

 

ஏ பரம்பொருளாகிய பகவானே! பூமி ஆகாயம் யாவும் நிறையும்படி உயர்ந்து, திக்குகளனைத்தும் சென்று நீக்கமின்றி உமது சொரூபத்தை வியாபிக்கச் செய்தால், அத்தகைய திரு உருவத்தைக் கண்டு துன்பமடை யாதவர்கள் யாருளர்? சகல உலகங்களும் முழுதும் அச்சமுருவதைத் தேவரீர் காண்பீராக. தேவகணங்கள் வணங்கவும், மகாதபோதனர்களாகிய நாரதாதி மகரிஷிகள் துதிக்கவும், சித்தர்கணங்கள் கூட்டமாகக் கூடிநின்று வியந்து புகழவும் கண்டேன். அசுரகணங்களும் கந்தர்வர்களும் நெறுங்கி இத்தன்மையரென்றறியத்தகாதவர்களையும் என்னெதிரிற் கண்டேன்.

 

எனது பரமபிதாவாகிய பகவானே! ஆகாய முற்றும் வியாபித்து, பலவித வர்ணங்களையுடையதாய், பேயின் தன்மையை யொத்த மூன்றாம் பிறை போன்ற வக்கிர தந்தங்களையும், பெரியவாய்களையும் உடையனவாகிய பற்பல முகங்களையுடைய இவ்விஸ்வரூபமானது அடியேன் அடை யத்தக்கதன்மையதன்று.

 

சகல அண்டங்களும் தாமாகவே விளங்கும் எந்தையே! தாம் சகல உலகங்களுக்கும் இருப்பிடமாகவும், எல்லாம் தாமேயாகவும் நின்ற தன்மையைக் கண்டேன். இதனால் அடியேன் கிருதார்த்தனானேன் எனினும், இந்த விசுவரூபத்தைக் காணக்காண எதற்குமஞ்சாத அடியேன் அந்தக்கரணமும் நடுங்குகிறது. நிற்கத் தைரியமுடையதாயில்லை. திக்குத் திசை யொன்றும் தெரியவில்லை. அடியேனை யஞ்சேல் என்று அருள் செய்யப் பிரார்த்திக்கிறேன்.
 

(இப்போது அர்ச்சுனன் தான் ஜெயமடைவதையும், துரியோதனாதியர் அபஜெயமடைவதையும் காண்பதாகக் கூறுகின்றான்.)

 

ஏ பகவான்! துரியோதனாதியர் நூற்றுவரும் அவர்கள் சேனைகளும், அவர்களுக்குத் துணையாக வந்துள்ள அரசர்களும், எனது படைகளும் உமது நமனையொப்பான வக்கிரதந்தங்களிலகப்பட்டு நசுக்கப்பட்ட தேகங்களை யுடையவர்களாய், வாயுவால் மூண்டெரியும் அக்கினிக்கொப்பான உம்முடைய முகங்களிலே விழுவதைக் கண்டேன். சொலற்கரிய நதிகளனைத்தும் சாகரத்தையடைவது போல், உம்மிடத்தினின்றும் உண்டான பிராணிகளனைத்தும் உம்முள்ளேயே பிரவேசிக்கக் கண்டேன். விட்டிற்பூச்சிகளனைத்தும் தீயில் பாய்ந்து மடிவது போல் எல்லாவுயிர்களும் தமது முகங்களில் வீழ்ந்து மடிவதைக் கண்டேன்.
 

ஏ விசுவரூபியாகிய பகவானே! பிரகாசம் பொருந்திய உமது முகங்களால் எல்லாப் பிராணிகளையும் உணவாகக்கொண்டழித்து, அந்த உணவு போதாமல் வெளியில் நாவை நீட்டி நீட்டி வெறுஞ் சுவை கொள்கின்றீர். இத்தகைய உக்கிர ரூபமான உம்மை இத்தன்மையரெனத் தெளிவாய் நான் அறியமுடியவில்லை. உமது செய்கையும் இன்னதென்று அறியக் கூடவில்லை. அடியேன்மேல் கிருபைவைத்து உம்மை உள்ளவாறு அருளிச் செய்யவேண்டுமாய்ப் பிரார்த்திக்கின்றேன்.

 

(இவ்வாறு பிரார்த்திக்கும் அர்ச்சுனனுக்குப் பகவான் தமது உண் மைச் சொரூபத்தையும், செய்கையையும் அருளிச் செய்கின்றார்.)

 

மேற்கண்டவாறு அர்ச்சுனன் தமது சொரூபத்தையும் செய்கையையும் உள்ளளவாறு அருளிச் செய்யவேண்டுமென்று பிரார்த்திக்க, யாவும் தானேயாகி எங்கும் நிறைந்து நின்ற பகவான் பின்வருமாறு அருளிச் செய்கின்றார்: -

 

ஏ பார்த்த! உன்னைத்தவிர இப்பூவுலகிற்குப் பாரமாயிருக்கும் சகலரையும் சங்கரித்து அவர்களுயிரைப் புசிக்க முயன்றேன். யுகம் முடிவாகும் அக்காலத்தில் யாவற்றையும் சங்கரிக்கும் கால ரூபமான பரமேசுவரன் நானாகவிருக்கிறேன் என்பதை நீ யறிவாயாக. இங்குள்ள துரியோதனாதியர் முதலிய அனைவர்களும் என்னால் மடிந்தார்களென்றே எண்ணிக் கொள்வாயாக. நீ கேவலம் நிமித்தமாத்திரமேயாவாய். நீ யமர் தொடங்கி இவர்களைச் சங்கரிப்பாயேல், அது உனது தருமமேயாவதோடு, ஜெயத்தையும் இராச்சியத்தையும், இப்பூமியின் கண் பிறந்தோரால் அடைதற்கரிய பெருங் கீர்த்தியையும் அடைவாய்.

 

இவ்வாறு பகவான் அருளிய மொழிகளைக் கேட்ட காண்டீபன் தன் கரங்களைச் சிரமேற் கூப்பி, கண்களில் நீர் பெருக, உரை குழற அச்சத்தோடும் அன்போடும் கோவர்த்தனகிரியைக் குடையாய்ப்பிடித்து ஆநிரைகளைக் காத்த மேகவர்ணனாகிய ஸ்ரீ கண்ணபிரானை நோக்கிப் பின்வருமாறு துதிக்கலுற்றான்: -

 

ஞானேந்திரிய முதலிய சகல இந்திரியங்களையும் நடத்தும் நாயகனே! வினையாகிய விலங்கை யறுப்பவரே! உமது கீர்த்தியைக் கேட்கில் தேவர்களும் சித்தர் கணமும் மனங்களித்து சந்தோஷமடைவார்கள். ஆனால் அசுரரும், இராக்க தரும் மரண துக்கமடைவார்கள். சிவந்த திருக்கரங்களையும், திருப்பாதங்களையும், வாயையும், நேத்திரங்களையுமுடைய கரிய முகிலே! இருபத்தைந்து தத்து * வங்களாலும் அறியப்படாதவரே! நான் முகன் தாயே! முடிவில்லாதவரே! சத்து அசத்தைச் சேராதவரே! சத்து அசத்து யாவுமாய்ப் பரந்துள்ளவரே! பிழைக்க வேண்டுமென்று எண்ணி யவர்களுள் உம்மை வணங்காதவர்களுமுண்டோ?

 

[* ஞானேந்திரியம் 5, கருமேந்திரியம் 5, சத்தாதி 5, வசனாதி 5, அந்தக்கரணங்கள் 5, அதாவது தத்துவக் கூட்டங்களால் அறியப்படாதவர் என்பது பொருள்.]

 

ஜகத் காரணரான ஆதிதேவன் நீரே. எல்லாச் சரீரங்களிலும் உயி
 ராய் நிறைந்துள்ளவர் நீரே. ஒருவராலும் அறியப்படாதவரும் நீரே. முடி வுகாலத்தில் சகலப் பிரபஞ்சங்களுக்கும் புகலிடமாயுள்ள வரும் நீரே. யாவற்றையும் அறியும் சர்வக்ஞர் நீரே. அறிவாலறியப்படும் பொருள்கள் யாவும் நீரே. நீதியுடைய யமனாய் யாவற்றையும் அழிப்பவர் நீரே. நீருங் காற்றும் தீயும் மண்ணும் வானும் நீரே. சகல உலகங்களையும் எப்போதும் உற்பத்தி செய்யும் மாதாவும் பிதாவும் நீரே. பாட்டனுக்குப் பாட்டனும் நீரே. ஆராய்ந்தறியவொண்ணாத ஸ்ரீ பகவானே! அழியத்தக்க என் பிறவிகளொழிவதற்காக அடியேன் உம்மைப் பல்லாயிரமுறை நமஸ்கரிக்கிறேன். என் தாயே! எனது மகத்தான சம்சார துக்கங்களனைத்தும் ஒழியும்படி மறுபடி நமஸ்கரிக்கின்றேன். ஓ எனது தந்தையே! உமது முன்பாகத்தும் பின்பாகத்தும் முறைப்படி நமஸ்கரிக்கிறேன். என் அன்பே! என் ஆருயிரே! தொலையாத இப்பிறவிப்பிணியின் வலிமை கெடும் பொருட்டு உம்மை எவ்விடத்தும் மீண்டும் வணங்குகின்றேன்.

 

[சர்வேசுரனுக்கு முன்பு, பின்பு, நடு, ஆதி, அந்தம் ஏதுமில்லை யெனினும் பக்திப் பெருக்கால் அர்ச்சுனன் அவ்வாறு மொழிந்தனன்.]

 

ஓ! தேவர்களுக்குத் தேவனே! உமக்கு அன்னியமான வேறு தெய்வமேது, செய்யத்தக்க பாவமேது, புண்ணியங்களேது, பந்தமேது, வீடேது, சாவதேது, வாழ்வதேது? யாவு நீராகவே யிருக்கிறீர். ஆதலின் இன்னது செய்வதென யான் ஒன்றுமே யறிகிலேன்.

 

ஏ பரந்தாம! நான் உமது உண்மையை யுணராதவனாகி, அடாயாதவா, என்மைத்துனா, பசுநிரைகளை மேய்க்கும் யாதவா என்று இவ்வாறு சொல்லத் தகாதனவாகிய வார்த்தைகளையெல்லாம் அறியாது கூறிவிட்டிருக் கறேன். நான் உமது பெருமையைச் சற்றும் உணராதவனாய் என்னுடைய தோழனென்றும் மைத்துனனென்றும் கருதி, உமது வார்த்தைகளை மறுத்துக் கூறிய பெரிய குற்றங்களை க்ஷமித்தருள வேண்டுகிறேன்.

 

ஏ கண்ணபிரானே! கருணாகரனே! உண்ணும் போதும், விளையாடும் போதும், உறங்கும் போதும், வீற்றிருந்தபோதும் உமது புராதனமான மகிமையை உணராது செய்த பிழைகளனைத்தையும் பொறுத்தருளப் பிரார்த்திக்கிறேன்.

 

இந்த உலகங்கள் அனைத்தும் சிருஷ்டித்தவர் நீரே. உமது நிஜ சொரூபத்தை யுணர்ந்து யாவராலும் புகழ்ந்து துதிக்கப்படுபவரும் நீரே. குரு மூர்த்தமாய் எழுந்தருளி வந்து உண்மை உபதேசம் செய்து குற்றங்களைக் களைபவரும் நீரே. அப்படிக் கூறப்படினும், வேதங்களெல்லாம் உன்னினும் மேலானவர்களில்லை யென்று தக்க காரணங்களோடு ஒருமுகமாய் நின்று நிரூபித்தாலும் உன்னருள் பெறாதவர் உன்னை யுள்ளபடி யறிய மாட்டார்கள். அந்தகர் அன்னிய உருவங்களைக் காண்பதுண்டோ?

 

புத்தி விளக்கமில்லாத பால்ய பருவத்தில் புத்திரன் செய்த குற்றத்தைத் தந்தை பொறுத்தல் போலவும், விட்டுப் பிரியாத சினேகன் செய்யும் குற்றத்தை சினேகத்தில் மிக்கார்கள் க்ஷமித்தல் போலவும், பேதையேன் தெரியாமற் செய்து வரும் குற்றங்களை யெல்லாம் குணமாகக் கொண்டருள வேண்டும் கருணாநிதியே'' என்று பரந்தாமனுடைய பாதகமலங்களில் வீழ்ந்து இன்னும் பின்வருமாறு காண்டீபன் கூறலுற்றான்:

 

"ஏ பகவான்! நான் முன்பு ஒருபோதும் கண்டறியாத விஸ்வரூப தரிசனத்தைக் கண்டு சந்தோஷமடைந்தேன். அக்கோரரூப தரிசனத்தால் உண்டான பயத்தால் என் உள்ளம் வியாகூலத்தை யடைந்தது. ஆதலின் ஏ பரந்தாமா! கிரீடத்தையும் சங்குசக்கர கதா கோதண்ட முடைய சதுர்ப்புஜ மூர்த்தமாகிய உருவத்தையே கொண்டருளப் பிரார்த்திக்கிறேன்'' என்றான்.

 

(இவ்வாறு அர்ச்சுனன் பிரார்த்திப்பதைக் கண்ட பகவான் பயத்தால் வருந்தாநிற்கும் அவனுக்குத் தேறுதலுண்டாகுமாறு சில வசனங்களை மொழிந்தருள்கின்றார்.)

அவ்வாறு தோத்திரம் செய்யும் அர்ச்சுனனை நோக்கி எல்லா வுருவங்களும் தானேயாகிய ஒருருவமாய் நின்ற பகவான் கூறுகிறார்:

 

ஏ பார்த்த! பூரணமான பிரகாசமுடையதாய், ஆதியில் யாவற்றையும் படைக்கும் காரணவஸ்துவாய் யாவுமாகிய எனது விசுவரூபத்தை முன்னே யாவரும் அறிந்திலர். இல்வுலகில் (நீதவிர மற்ற) எவரும் வேதாத்தியயனத்தாலும், யஞ்ஞங்களின் அத்தியயனத்தாலும், மேலான தவங்களினாலும், தானங்களைச் செய்வதாலும், கருமங்களாலும் தரிசிக்க முடியாது. அத்தகைய விசுவரூபத்தைத் தோஷாகிதமான எனது யோகமாயையின் சாமார்த்தியத்தால் நீ தரிசிப்பிக்கப் பெற்றாய்.

 

ஏ அர்ச்சுனா! எனது விசுவரூபத்தைத் தரிசித்ததால் நீ பீதியடைந்து கலக்கப்படவேண்டாம். பயமின்றி சந்தோஷமனத்தனாய் என் முந்திய சொரூபத்தையே தரிசிப்பாயாக.

(இங்கு சஞ்சயர் திருதராட்டிருக்குப் பின்வருமாறு கூறுகிறர்.)

 

''அய்யா திருதராட்டிர பூபதியே! தனக்கு ஒப்பாரும் மிக்காருமில்லாத பரந்தாமனாகிய பகவன் அர்ச்சுனனுக்கு அவ்வாறு கூறியபின் சங்கு சக்கிரம், கதை, பத்மம் இவற்றைத் தரிசித்தருளிய சதுர்ப்புஜ மூர்த்தியாகிய தமது திவ்விய சொரூபத்தைக் காட்டியருளி அவனுக்குண்டாகியிருந்த பீதியையகற்றிக் கிருபைபாலித்தார்'' என்று சஞ்சயர் திரிதராட்டிரருக்கு மொழிந்தார்.

 

(பகவான் அர்ச்சுனனுக்குத் தாம் காட்டியருளிய விசுவரூப தரிசனத்தின் அரியதன்மையை அருளிச்செய்கின்றார்.)

 

"ஏ பார்த்த! இப்போது நீ தரிசித்த அந்த விசுவரூபத்தை இதுகாறும் ஒருவரும் தரிசித்ததில்லை. இனியும் தரிசிப்போரில்லை. இந்திரன் முதலிய தேவர்களும் அந்த விசுவரூபத்தைத் தரிசிக்க மிக்க ஆவலுள்ளவர்களாக விருக்கிறார்கள். இத்தகைய என்னை எத்தகையோர் அடையலாகுமெனின், என்னிடத்து அநந்நியபக்தி பூண்டவராய், என்னையன்றி வேறு எதனுடைய சம்பந்தமும் கொள்ளாதவராயிருப்போரே யென்னை யபேதமாயடையத் தக்கோராவர்'' என்றருளிச்செய்தார்.

 

"ஏ பார்த்த! எவ்வதிகாரி எனது பிரசன்னத்தின் பொருட்டே சகல கர்மங்களையும் செய்கிறானோ, எவ்வதிகாரி நானே அடையத்தக்க வஸ்து என்னும் நிச்சயமும், ஏனைய சுவர்க்காதி பலன்கள் அடையத்தக்கவை யன்று என்னும் நிச்சயமும் உடையவனோ, எவன் தனம் தாரம் புத்திரன் முதலிய எல்லா பதார்த்தங்களினும் பற்றில்லாதவனாய் என்னிடத்துமட்டுமே பற்றுவைத்து யாவற்றையும் எனது சொரூபமாகப் பாவித்துப் பஜிக்கிறானோ, எவன் தனக்குத் தீங்கிழைத்தவர்களிடத்தும் துவேஷம் கொள்ளாதவனோ, இத்தன்மைய அதிகாரியே என்னை யபேதமா யடைதற்குரியவன்' என்று பகவான் அருளினார்.


 11 - வது அத்தியாயம் முற்றிற்று

12- வது பக்தியோக அத்தியாயம்

 

[ஸ்ரீ பகவான் இதுகாறும் சகுணம் நிர்க்குணம் ஆகிய இரண்டையும் உபதேசித்தருளினார். இவ்விருவகை உபதேசங்கள் அதிகாரி பேதத்திற்குத் தக்கபடி கொள்ளற்பாலனவாம். ஆகையால் அர்ச்சுனன் தனது அதிகார நிச்சயத்தின் பொருட்டு சகுண வித்தை நிர்க்குணவித்தை யிரண்டின் தன்மையையும் அறிய இச்சித்துப் பகவானை நோக்கி வினவுகிறான்.]
 

அர்ச்சுனன்: - "ஏ பரந்தாமா! பெரியோர்கள் தங்கள் மனதிற்குப் பொருந்திய உருவமாகவே பரமேசுவரனான உம்மைச் சிந்தியா நிற்பரோ? அல்லது பரிசுத்தமான நான்மறைகளுக்கு மெட்டாதான நிர்க்குணப் பிரம்மமாகிய உம்மையே நிரந்தரம் சிந்திப்பார்களோ?' என்று வினவியதற்கு, ஆயர்பாடியிலவதரித்து ஆவினங்களை மேய்த்த கண்ணபிரான் அருளிச் செய்கின்றார்:  -

 

''ஏ அர்ச்சுனா! நீ தரிசிக்கும்படி நாம் முன்பு காட்டிய விசுவரூபத்தை ஏகாக்கிர சித்தத்தோடும், சாத்விக சிரத்தையோடும் மனதினாற் சிந்தித்து -வாக்கினாற் றுதிப்பவர்கள் எல்லோரும் என்னையே யடைவார்கள். அவர்கள் யாவரினும் சிரேஷ்டராவர். இனி யிவர்களை யன்றி நிர்க்குண உபாசகர்களின் நெறியையும் கூறுதும் கேட்பாயாக.

 

(இப்போது பகவான் நிர்க்குணோபாசனையைப்பற்றி கூறுகிறார்.)

 

ஏ காண்டீபனே! வாக்கினால் இன்ன விதமானதென்று வசனிக்கக் கூடாததாய், மனத்தினால் இத்தன்மையதென ஒரு விஷயமாக அறியப் படாததாய், எங்கும் நீக்கமின்றி நிறைந்து போக்குவரவற்றதாய், சர்வ சாட்சியாய்ப் பிரகாசிக்கும் நிர்க்குணப்பிரம்ம சொரூபத்தை, கடத்தற் கரிய இந்திரியங்களை நிக்கிரகம் செய்து, சாக்ஷாத்காரமாய் அறியாநிற்பவன் என்னின் அன்னியமாக மாட்டான்.

 

(பகவான் முன்பு சகுணோபாசகரை யாவரினும் நல்லவர் என்று கூறி விட்டு இப்போது நிர்க்குண உபாசகர் நானேயாகும், என்னின் அன்னிய மல்ல என்று கூறியதால் அர்ச்சுனனுக்குண்டாகும் சந்தேகத்தை நிவர்த்திசெய்யும் பொருட்டு பகவான் கூறுகின்றார்.)

 

ஏ பார்த்த! ஒரு காரணமுமில்லாததாய், அந்தர் இந்திரிய பகிர் இந்திரியங்களுள் ஓர் இந்திரியத்திற்கும் விடயமாகாததாயள்ள நிர்க்குணப் பிரம்மத்தை படையாநிற்பவர்களுடைய வருத்தம் செய்பத்தரமானதன்று. அது வேறொரு கஷ்டத்தோடு ஒப்பிட்டுக் கூறத்தக்கதன்று. அறிதற் கரிய இப்பிரம்ம நிஷ்டை தேகேந்திராதி அபிமானமுடைய மனிதரால் சுலபமாய் அடையத்தக்கதன்று. ஆதலின் அதை யடைந்தவர்களின் மதிமையை அளவறுத்துக் கூறவல்லார் யார்? (ஒருவரு மில்லை என்றபடி.)

[ஈண்டு பகவான் சகுண உபாசனை நிர்க்குண உபாசனை யிரண்டிற்குமுள்ள பேதத்தைக் கூறியருளினார். இரண்டு உபாசகர்களும் தம்மையேயடைவர் என்று கூறியதனால் இருவர்க்கும் பலன் ஒன்றே யென்றாயிற்று. ஆனால் நிர்க்குண உபாசகர்க்கு வருத்தம அதிகம் என்றும் சகுண உபாசகர்க்கு அதனினுங் குறைந்த வருத்தம் என்றும் தெரிகிறது. இப்போது இரண்டு மார்க்கங்களுக்கும் பலன் ஒன்றாகவே யிருக்கிறவரையில் குறைந்த வருத்தமுள்ள மார்க்கத்தையே யேன் கைக்கொள்ளலாகாது? அதிக வருத்தமான மார்க்கத்தில் செல்வோரை யேன் அதிகமாகச் சிறப்பிக்க வேண்டும்? என்ற ஐயங்கள் எழலாகும்.

 

அதிகாரிகளின் தன்மையால் இரண்டு மார்க்கங்களும் வேண்டற்பா லனவே. ஏனெனில் தீவிரதர, தீவிர அதிகாரிகளே நிர்க்குண உபாசனைக்குரியோர். ஏனெனில் அவர்கள் சூக்கும அறிவுடையோர் ஆதலின் தேகம் தனக்கன்னியம் என்பதை எளிதினுணர்ந்து, மனதையும் ஆன்மாவையும் வேறு பிரித்தறிந்து பிரம்மசாக்ஷாத்கார நிலைமையடைவார்கள். மந்தம் மந்ததரமுடைய அதிகாரிகள் வேறு பிரித்தறியும் சக்தியுடையவர்களல்லவாதலின் அவர்கள் சகுண உபாசனைக்கே யுரியவர். இவர்கள் சகுண உபாசனையால் தான் அலையும் மனதைக் கொஞ்சம் கொஞ்சமாய் ஒடுக்க வேண்டும். இவர்கள் தாங்கள் துதிக்கும் சொரூபத்தினிடம் பக்தி முதிர்ந்து அப்பக்தி அனன்னிய பக்தியாய் மாறியபின் ஞாதுரு ஞேயங்க ளற்று, பிறகே ஞான மாத்திரமாய்ச் சேஷித்தலாகிய ஆன்மசாக்ஷாத்கார மெய்தி பிரம்மான்ம ஐக்கிய நிலையையடைவார்கள்.

 

இந்த இருவரில் சகுண உபாசகர்கள் தம் உபாசனாமூர்த்தமாகிய சொரூபத்தினிடத்தில் மனம் நிலைத்து நிற்கும்படிச் செய்யவேண்டிய கஷ்டத்தையுடையவர்கள். இவர்களுக்கு வாக்கும் காயமும் உதவியாயிருக்கின்றன. எவ்வாறெனின், வாக்கு மந்திரத்தை யுச்சரிப்பதாலும், காயம் அர்ச்சனையாதி கிரியைகளைச் செய்வதாலும் மனதையலைய விடாது காக்கின்றன. ஆதலின் இவர்கள் வருத்தம் குறைவானதே.

 

நிர்க்குண உபாசகரோ தேகம் இந்திரியங்கள் கரணங்கள் யாவற்றையும் அடியோடு நிக்கிரகம் செய்து சகல கேவலங்கள் தாக்காத நிலையையடைய வேண்டியிருத்தலால் இவர்கள் கஷ்டம் மிக்க அதிகமானதே. இவர்கள் நேரே பிரமத்தையடைகிறார்களாதலின் பகவான் ''அத்தகையோன் நானே' என்றார். சாதாரணமாய் ஒருவன் யாரும் செய்யமுடியாத காரியத்தைச் செய்துவிட்டதாய்த் தன்னைப் புகழ்ந்து கொள்ளும் போது "இவன் என்ன பிரம்மவித்தை கண்டு பிடித்து விட்டானோ " என்று உலகோர் கூறுவதே இதனுண்மையை விளக்குகிறது.

 

சுகுண உபாசனையே மனோலயம் பெறுதற்கு ஓர் சுலபமான மார்க்க மாகும். எவ்வாறெனின் மனம் எப்போதும் நாமரூபங்களிலேயே நாட்டமுடையது. நாமரூப நாட்டத்தை விட்டாலன்றி ஆன்ம சொரூபம் தோன்ருது: மனமோ நாமரூப நாட்டத்தை யெளிதில் விடும் சுபாவமுடைய தல்ல. சகுணோபாசகன் அது செல்லும் வழியேயதைவிட்டுப் பிறகு சுலபமாய் அடக்கிவிடலாகும். சதா ஒரு விஷயத்தை விட்டு ஒரு விஷயத்தில் பாய்ந்தோடி அலைந்து கொண்டே யிருக்கும் மனம், சகுணோபாசனையின் மூலமாய் முதலில் குறித்த ஒரு நாட்டத்திலேயே நிலைத்து நிற்கப் பழகி நம்வயப்படுகிறது. பிறகு அதை அடக்குவது சுலபமாகும். ஆகையால் பெரும்பாலான அதிகாரிகளுக்குச் சகுணோபாசனையே பயனளிக்கத்தக்கதாகும். சகுணோபாசகன் பக்தியொன்றையே நாட்டத்தில் கொண்டு அதையப்பியசிக்கத் தொடங்குவானேல் ஞானமடைதற்கு வேண்டிய எல்லாச் சாதனங்களும் ஈசுவரனருளால் தானே கை கூடும். இம்மார்க்கத்தால் அரிய சித்திகளையும் முத்தியையும் பெற்ற மகான்கள் எண்ணிறந்தோர்.]

 
(என் பக்தர் எனது அருளால் முத்தியடைவார் என்று பகவான் அருளிச் செய்கிறார்.)

 

ஏ பார்த்த! யாவர் சகல கர்மங்களையும் என்னிடத்தே அர்ப்பணம் செய்து தமது சித்தத்தை என் பால் நிலைக்கச் செய்வார்களோ அவர்களை இறப்பும் பிறப்புமாகிய துக்க சாகரத்தினின்றுங் கரையேற்றிச் சிறிதுகாலத்தில் அவர்களை முத்தியடையச் செய்வேன்.

 

நீ உண்மையாகவே உனது சித்தத்தைப் பூரணமாக என்னிடத்தில் வைப்பாயாயின், என்னில் அன்னியமாக விராது அபேதமாய்க் கலர் திருப்பதற்குச் சற்றும் சந்தேகமேயில்லை. அவ்வாறு சகுணப் பிரம்மமாகிய என்னிடத்தில் சித்தத்தை நிலைநிறுத்த முடியாதாயின், அதற்குரிய அப்பியாசத்தைச் செய்வாயாக. அதையும் செய்ய முடியாதாயின் நீ திரி கரணங்களாற் செய்யும் கர்மங்களை யென்பொருட்டாகச் செய்வாய். அப்படிச் செய்யவும் முடியாதாயின் பலனை யிச்சியாமலே கர்மங்களைச் செய்வாயாக.

 

அப்பியநசத்திலும் ஞானமே சிரேஷ்டமாம். அந்த ஞானத்தினும் உண்மையான தியானம் சிறந்ததாம். அத்தியானத்திலும் காமபலனைத் தியாகம் செய்தல் மேன்மையானதாகும். அதன் பின்னர் சித்த சாந்தி யுண்டாகுமாதலின்.

 

ஈண்டு அப்பியாசம் என்பது சிரவணாதிகளைக் குறிக்கும். ஞானம் என்பது ஆன்ம நிச்சயமாகிய பரோக்ஷஞானம் சிரவணமனனஞானம் நிதித்தியாசனவாயிலாக ஆன்ம சாக்ஷாத்காரஞானத்தை யளிக்கும். நிதித்தியாசனரூபமான தியானமோ ஈசுவரனது அருளைப் பெறச்செய்வதால் நேரே ஆன்ம சாக்ஷாத்கார ஞானத்தையளிக்கும். ஆதலின் படிப்படியாய் ஒன்றினொன்று மேலானதென்றார்.

 

[ஞானத்தினும் தியானம் மேற்கண்ட காரணத்தால் சிரேஷ்டமாயினும், கர்மபலத் தியாகம் அத்தியானத்தினும் சிரேட்டமாம். ஏனெனில், கர்மபலனைத் தியாகம் செய்தால் இச்சை யொழிந்ததாகும். அதன்பின் சித்தசுத்திவாயிலாய் எளிதில் ஆத்மஞானம் கைகூடும்.]

 

ஏ பர்க்குண! சர அசரமாகிய உயிர்களிடத்து (ஓரறிவு முதல் ஆறறிவு வரையிலுள்ள பிராணிகள்) அன்புடையவனாய, இன்ப துன்பங்கள் நான் எனது என்றவைகளில் ஒன்றையுமறியாதவனாய் (சுக துக்கங்களில் சம திருட்டியுடையவனாய், அகங்கார மமகாரங்களற்றவனாய்), எந்தப் பதார்த்தங்களிலும் இச்சை வெறுப்பில்லாதவனாய், சித்தததை ஒருவழியில் நிறுத்தியவனாய், ஆன்மாவின் கண் திடநிச்சயமும் கருணையும் உடையவனாய், புத்தியை விஷயங்களிற் செல்லவொட்டாது தடுத்து என்னிடத்தே அர்ப்பணஞ் செய்திருக்கும் யோகியே யெனக்கு அத்தியந்தப் பிரியன்:

 

ஒரு பொருளிலும் ஆசையின்றி இந்திரியங்களின் வழியில் தான் செல்லாது அவற்றைத் தன் வசமாக்கி, ஒருவர் செய்யும் உபகார அபகாரங்களில் சம மனமுடையவனாய், நற்கரும துர்க்கருமங்களைப் பரித்தியாகம் செய்து, தேகத்திற்குச் சுகமுண்டாயினும் வேதனையுண்டாயினும் மகிழ்தல் வாடுதல் இன்றி, பிரியவஸ்து கிடைத்தால் சந்தோஷமடைதலும் அப்பிரியவஸ்து கிடைத்தால் துக்கமடைதலும் இன்றி, இழந்த பொருட்குத் துக்கியாது வரும் பொருட்கு இச்சைவையாது, சத்துரு மித்துரு என்ற பேதம் வையாமல், மானம் அவமானம், இன்பம் துன்பம், சீதம் உஷ்ணம், துதி நிந்தை இவற்றில் சம சித்தமுடையவனாய், தான் வசிப்பது இன்ன விடமென்று ஒன்றைக் குறித்துக் கொள்ளாதவனாய்ச் சஞ்சரிக்கும் யோகியே எனக்கு அத்தியந்தப் பிரியனாவன்.

 

தாம் அறிவித்தாலன்றி ஒருவராலும் அறிதற்கரிய பகவான் பார்த்தனை நோக்கி, "ஏ அர்ச்சுனா முயற்சி செய்து அடையத்தக்கதும், அடைந்தோரைச் சம்சார துக்கத்தினின்றும் விடுவித்து முத்தியிற் சேர்க்கக்கூடியதுமான பொருளை நான் அருளிச்செய்தபடியே சுபாவமாகப் பொருந்தும் வண்ணம் அறிந்து கொள்கின்றவர்களுக்கு நான் மிக்க பிரியனாக விருக்கின்றேன்'' என்று அருளிச் செய்தார்.


 12 - வது அத்தியாயம் முற்றிற்று.

 

13 - வது க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞவிபாகயோக அத்தியாயம்

 

[முதல் அத்தியாயம் தொடங்கி ஆறாம் அத்தியாயம் வரையில் துவம் பதார்த்த நிரூபணமும், ஏழாம் அத்தியாயம் தொடங்கி பன்னிரண்டாம் அத்தியாயம் வரையில் தத்பதார்த்த நிரூபணமும் கூறப்பட்டது. இப்போது தத்துவம் பதார்த்தங்களின் அபேத ரூபமான மகாவாக்கியத்தின் பொருளை அருளிச் செய்யக் கருதித் தத்துவஞானத்தைப் பிரதானமாகவுடைய பதின்மூன்றாம் அத்தியாயம் முதல் பதினெட்டாவது அத்தியாயம் வரையில் பகவான் கூறத் தொடங்கினர். ஆன்மஞானம் ஒன்றே பிறப்பிறப் பிற்குக் காரணமாகிய அஞ்ஞானமென்னும் அவித்தையை யழிக்கத்தக்க தாகும். ஆதலால் அத்தகைய ஆன்மஞானமே இப்போது கூறப்படுகிறது.]

 

(பகவான் பிறவி, பிணி, மூப்புச் சாக்காடாகியவைகளோடு பொருந் தியிருக்கும் தேகமும், அதில் வசிக்கும் ஜீவனுமாகிய, க்ஷேத்ரம், க்ஷேத்ரக் ஞன் என்பவைகளைப்பற்றி கூறத் தொடங்குகிறார்.)



ஏ பார்த்த! உயிரால் அனுபவிக்கப்படும் சுகதுக்க போகங்களை யுண்டாக்கும் இந்திரியங்கள் கரணங்கள் பிராணாதிவாயுக்கள் முதலியவைகளுக்கு இருப்பிடமாகிய இத்தேகமே க்ஷேத்ரம் எனப்படும். இந்தச் சரீரத்தை ஆராய்ந்தறிந்துணருவதும், இதில் வசிப்பதுமான உயிர் க்ஷேத்ரக்ஞன் எனப்படும்.

 

(இப்போது இச்சீவான்மா அசம்சாரியாகிய பரமான்மாவோடு ஏகத்வ ரூபமான பாரமார்த்திக சொரூபத்தைப் பகவான் அருளிச் செய்கின்றார்.)

 

ஏ அர்ச்சுனா! இந்திரியாதிகளோடு பொருந்திய க்ஷேத்ரம் என்ற உடல்கள் யாவற்றிலும் அறிவு சொரூபமாய் பிரகாசித்துக்கொண்டிருக்கும் க்ஷேத்ரக்ஞன் என்ற உயிர் பிரம சொரூபமான நானே என்று அறிதி. இந்த க்ஷேத்ரம் க்ஷேத்ரக்ஞன் என்ற இரண்டினையும் அவற்றின் தன்மைகளோடு எது அறிகிறதோ அதுவே ஞானம் என்று அறிவாயாக. இது சுருதி சம்மதமாம்.


(மேலே கூறிய விஷயங்களை இப்போது பகவான் விரிவாய்க் கூறத் தொடங்குகிறார்)

 

ஏ பர்க்குண! இந்தத் தேகமானது எத்தன்மையது என்பதையும், ஜடரூபமான இத்தேகத்தின் உற்பத்தியும், இச்சை துவேஷம் முதலிய தருமங்களும், இந்திரியாதி விகாரங்களும், சீவன்களது சைதன்ய ஆனந்த சொரூபமும் ஆகிய இவைகளைப்பற்றி வசிஷ்டராதி மகரிஷிகள் பலவகை யாகக் கூறியிருக்கின்றனர். அவற்றை நான் சுருக்கமாகக் கூறுகிறேன் கேட்பாயாக.

 

பிருதிவியாதி பஞ்சபூதங்களும், அப்பூதங்களுக்குக் காரணமாகிய அகங்காரமும், அகங்காரத்தின் காரண ரூபமான புத்தியும், புத்தியின் உற்பத்திக்குக் காரணமான அவ்வியக்தமும், ஆகிய இந்த எட்டு வகையான பிரகிருதிகளும், வினைகளைச் செய்விக்கும் அந்தக்கரணமும், ஞானேந்திரியங்கள், கர்மேந்திரியங்களும், ஐம்பொறிகளும், சப்தபாதி ஐந்து விஷயங்களும், ஆகிய இவற்றோடு இராகத்துவேஷாதி குணங்களும், சுக துக்கங்களும், இவையாவும் பொருந்திய விகாரத்தன்மையோடு கூடிய இத்தொகுதியையே பெரியோர் தேகம் என்று கூறாநிற்பர். இனி இந்த க்ஷேத்ரத்திற் குரித்தாகிய ஞானசாதன குணங்களைக் கூறுதும் கேட்பாயாக.

 

(இப்போது பகவான் ஞானத்தை யடைவதற்கு வேண்டிய சாதனங்களைக் கூறி யருள்கின்றார்)

 

தனது குணங்களைப் புகழ்தல், பிறர் தன்னை நன்கு மதிக்கும்படி தன்தருமங்களைச் செய்தல், மோக்ஷத்திற்கு இடையூறான குறைகள், அந்நிய பிராணிகளுக்குத் தீங்கிழைத்தல், நான் என்ற அகங்காரம், இகபர போகங்களையனுபவிக்க வேண்டுமென்ற பேராசை, ஆகிய இவற்றை யெல்லாம் கெடுக்கும் வல்லமை

அழகிய மாளிகை, மனைவி, மக்கள் இவர்களிடம் உண்டாகும் ஆசை, தேகத்திலுள்ள பற்றால் அதைச் சுத்தமாகவும் அழகாகவும் வைத்துக் கொண்டிருத்தல், இந்திரியங்கள் சப்தாதி விஷயங்களில் செல்லும்படி விடல், கோபம், மூடர் (உலகபோக விச்சையுடையோர்) சகவாசம் ஆகிய இவற்றை விட்டொழித்தல்.

 

(இவைகள் அனைத்தும் விடத்தக்கவை. இனி கொள்ளத்தக்கவை களைக் கூறி யருள்கின்றார்.)

 

ஒப்பற்ற பிரம்ம சொரூபமாகிய என்னையே சித்தத்தின் கண் வைத்தல், இருவினைகளையும் ஒழிப்பவர்களாகிய ஞானிகள் வசிக்குமிடங்களில் (ஏகாந்தத்தலம்) சேர்தல், குருபணிவிடை செய்தல், ஆன்ம அனான்ம பதார்த்தங்களின் சொரூபத்தை யுள்ளவாறு பகுத்தறியும் விவேகம், பிறப்பு, மூப்பு, வியாதி, மரணம் இவற்றாலுண்டாகும் துக்கங்களை யடிக்கடி சிந்தித்தல் ஆகிய இவையனைத்தும் ஞானசாதனங்களாகும். இனி இத்தகைய சாதனங்களால் முமூட்சுக்களடையாநிற்கும் ஞேயவஸ்துவின் சொரூபத்தைக் கூறுதும் கேட்பாயாக.

 
ஏ பார்த்த! அந்த ஞேயவஸ்துவானது உற்பத்தி நாசமற்றது. எப்போதுமிருக்கும் மகிமை பொருந்தியது. கூறும் பட்சத்தில் சத்து அசத்து என்று கூறும் குறைபாடில்லாமல் பிரகாசிப்பது. தான் பூரணமாய் நீக்கமற எங்கும் நிறைந்து நிற்றலின், எங்கும் கை, கால், காது, சிரசு முதலிய அங்கங்களை யுடையதாயிருக்கிறது.

 

விஷயங்களைக் காணாநிற்கும் இந்திரியங்கள் முதலிய வனைத்திலும் அறிவாய் நின்று தோற்றுவிப்பது. தனக்கென இந்திரியங்கள் ஒன்றுமில்லாமலே இருக்கும் தன்மையது. தான் எவ்வித வஸ்துவோடும் சம்பந்தியாமலே சகல பிரபஞ்சங்களையும் தானே தரித்து நிற்பது. சாத்வாதி குணங்கள் ஒன்றுமில்லாமலே அக்குணங்களைப் பொருந்தியனுபவிப்பது. பஞ்சபூத பௌதிகங்களின் உள்ளும் புறம்பும் வியாபித்திருப்பது. தனக் கெவ்வித விகாரமுமின்றியே ஸ்தாவர ஜங்கம ரூபங்களாய் இருப்பது. இத்தன்மையதென்று சொல்லவும் அறியவும் கூடாதபடி அதி சூக்குமமானது. உண்மையில் அது ஏக சொரூபமாகவிருந்தும், பேதமுண்டானது போலச் சச்சரீரங்கள் தோறும் இருந்து பிரகாசிக்கின்றது. மேலும் அந்த ஞேயவஸ்து உருவமற்றதாய், அதிக தூரமாய், யாவும் தானாய், அதிக சமீபமாய் உள்ளது. சகல நாமரூப வஸ்துக்களையும் சிருட்டித்து மீண்டும் சங்காரம் செய்வது. ஒப்பற்ற சூரிய சந்திராதி ஜோதிகளுக்கெல்லாம் உள் ஜோதியாகி யொளிர்வது. ஞானரூபமாயும், ஞானத்திற்கு விஷயமாயும் உள்ளது.

 

ஏ பார்த்த! இத்தகைய பெருமை வாய்ந்த ஞேய வஸ்துவானது முன்பு கூறப்பட்ட ஞானசாதன குணங்களால் அனுபவமாக அறியத்தக்க பொருளாம். இப்போது தேகமாகிய க்ஷேத்திரத்தின் கண் பொருந்தியுள்ள ஞானசாதன குணங்களையும், அக்குணங்களால் சாக்ஷாத்கரிக்கப்படும் ஞேய வஸ்துவின் இலக்கணங்களையும் சுருக்கமாக உனக்கருளிச் செய்தேன்.
 

(இப்போது பகவான் இதற்கு அதிகாரிகள் யார் என்பதைக் கூறியருள்கின்றார்.)

 

ஏ அர்ச்சுனா! எனது வாக்கை யலட்சியம் செய்யாமல் யான் முன் உரைத்த க்ஷேத்ரம், ஞானம், ஞேயம் என்ற முப்பொருள்களையும் என்னிடத்து அனன்னிய பக்தியுடையோரே யுள்ளபடி யுணர்வார்கள். அவ்வாறுணர்ந்த எனது பக்தர்கள் பிறப்பிறப்பையுண்டாக்கும் மாயையாகிய கடலைக் கடந்து முமூட்சுக்களால் இச்சிக்கப்படும் நிரதிசயானந்த சொரூப னாகிய என்னை யடைவார்கள்.


(பகவான் தேகம் ஜீவன் இவற்றின் அநாதித்தன்மையை யருளிச் செய்கின்றார்.)

 

ஏ பார்த்த! நாம் கூறிய பிரகிருதி புருடன் (தேகம் ஜீவன்) இவையிரண்டிற்கும் உண்மையில் காரணத்தைக் கண்டறிபவர் ஒருவருமில்லை. ஆதலின் இவை அநாதியென நீ யறிதி. இனி இவற்றின் செய்கைகளைப் பற்றி கூறுதும் கேட்பாயாக.

செய்யப்படும் வினைகளுக்கு பிரகிருதியாகிய தேகமே காரணம். இன்பதுன்பங்களை உண்ணாநிற்பது புருடனாகிய ஜீவனாகும். இந்தச் சீவன் மாயாரூபப் பிரகிருதியாகிய உடலின் கண் இருந்து, அவ்வுடலால் உண்டாக்கப்பட்ட சுகதுக்கங்களை அனுபவியா நிற்பன். இச்சீவன் இது நான் இவை யென்னுடையவை என்ற தாதான்மியங்களைப் பொருந்தி யிருத்தலால் யோனிகளில் ஜனித்தும் மரித்தும் உழன்று கொண்டிருப்பன்.

 

என் நண்பனான பார்த்தா! இந்த ஜீவரூபமான க்ஷேத்திரக்ஞன் என்னும் புருடன் இத்தேகத்திலிருப்பினும் இவன் சர்வத்திலும் வேறானவன். ஆதலின் இவனே (சுகதுக்கா திகளனைத்தையும் புஜிக்கும்) போக்தாவும், (தேகேந்திரியாதிகளனைத்தையும் அறிவு சொரூபமாகவிருந்து பார்க்கின்ற) உபதிருஷ்டாவும், எப்பொருட்கும் அது அதுவாய் ஒத்திருக்கும் நாதனும் மகேசுரனும் பரமாத்மாவுமாக விளங்குகிறான்.

 

(பகவான் பிரகிருதி புருஷ விவேகமுடைய ஞானியின் பெருமையை யருளிச்செய்கிறார்)

 

ஹே அர்ச்சுன! மேலே கூறியபடி க்ஷேத்ரக்ஞனாகிய புருடனையும், சுக துக்காதி குணங்களையுடைய அவித்தியா வடிவப் பிரகிருதியையும் உள்ளபடி எவன் அறிந்தானோ அப்புருடன் பிராரப்த கர்மவசத்தால் கிடைத்த போகங்களை எப்படி (சாத்திரவிதியைக் கவனியாமல்) புஜித்துக்கொண்டு சீவிப்பினும் பிறவியை யடைய மாட்டான்.

 

[இத்தேகம் மித்தையாகிய அநித்திய சடப்பொருளென்றும், இதில் வசிக்கும் சாக்ஷியாகிய ஆன்ம சொரூபமே தானென்றும் குருசாத்திர மூலமாய், அனுபவமாய் எவன் அறிகிறானோ அவன் பிறப்பிறப்பற்ற முத்திநிலை யெய்துவன் என்பதாம். அத்தகைய புருடன் பிராரப்த கர்ம பலனாகிய போகங்களை யனுபவித்துக் கொண்டிருப்பவனாகக் காணப்படினும், அவன் தான் ஒன்றைச் செய்கிறவன் அல்லது செய்விக்கிறவன், ஒன்றைப் புஜிக்கிறவன் என்ற அபிமானமின்றி சாக்ஷிமாத்திரமாகவே யிருப்பான்.]

 

(ஆன்மஞானத்தையடையும் அதிகாரிகளின் பேதத்தால் சாதன வகைகளில் வித்தியாசமுண்டென்பதை ஸ்ரீ பகவான் அருளிச்செய்கின்றார்)

 

ஏ பார்த்த! சகல தேகங்களிலும், எங்கும் நிறைந்து அகண்ட சொரூபமாக நிற்கும் பரமான்மாவைச் சிலர் தியான ரூபமான ஆன்ம சிந்தனத்தினால் தமது உள்ளத்தின்கண் சாக்ஷாத்கரிப்பர்.

 

வேறு சிலர் சாங்கிய யோகமார்க்கத்தால் அப்பரமான்ம சொரூபத்தின் சர்வவியாபக நிலைமையைச் சாட்சாத்கரிப்பர்.

 

இந்த இரண்டு மார்க்கங்களாலும் அந்த ஞானத்தை யடையத்தக்க அறிவு விளக்கமில்லாதோர் ஆசாரியன் இதுவே தெய்வம் என்று உபதேசித்த ஒன்றையே சிரத்தையோடு தியானம் செய்து, அத்தியான வாயிலாக அவர்களும் பிறவியை யொழித்துக் கொள்வார்கள்.

 

[இப்போது கூறப்பட்டவற்றில் முதல் மார்க்கத்தால் ஞானத்தையடைவோர் உத்தம அதிகாரிகளாவர். இரண்டாவது மார்க்கத்தை யனுசரிப்போர் மத்திம அதிகாரிகள். மூன்றாவதாகிய கடைசி மார்க்கப்படி ஞானமடைவோர் மந்ததர அதிகாரிகளாவர்.]

 

மற்றபடி ஈரமும் அசரமுமாகிய தேகங்களைத் தரித்துக் கொண்டிருக்கும் சகல ஜீவர்களும் துக்கத்தை யனுபவிப்பதன் காரணம் என்னவெனில், அவர்கள் ஷேத்திரம், க்ஷேத்திரக்ஞன் (பிரகிருதி புருஷன்) ஆகிய இரண்டின் தன்மையை விசாரித்தரியாத குற்றமேயாகும்.

 

(இங்கு பகவான் "சரமும் அசரமுமாகி தேகங்களைத் தரித்துக் கொண்டிருக்கும் சகல ஜீவர்களும்" என்றருளியதில் ஆன்மாவின் வியாபக இலக்ஷணம் அடங்கியுள்ளது. இதனால் தாவரஜங்கமமாகிய இரண்டு உருவங்களிலும் ஆன்மா உள்ளது என்று அறியக்கிடக்கிறது. ஆனால் கல்லிலும், மரத்திலும், மிருகபட்சிகளிலும், மனிதனிலும் உள்ள ஆன்மா ஒரே விதமாயினும் அறிவு விர்த்தியில் தாரதம்மியமுண்டு. அவஸ்தா பேதம் என்றும் கூறலாம். மனிதனிடத்திலேயே அவஸ்தாபேதத்தால் அறிவு விர்த்தியில் தாரதம்மியம் காணக் கிடக்கிறது. சாக்கிரத்திலுள்ள மனிதனுக்குப் பூரண அறிவிருக்கிறது. சொப்பனத்தில் அறிவு விளக்கம் குறைவே. சுழுப்தியில் அறிவுசாக்ஷிமாத்திரமாக விருக்கிறதேயன்றி அதன் விர்த்தி பூரணமாய் ஒடுங்கியிருக்கிறது. இவ்வாதே மற்றப் பிராணிகளில் ஓரறிவு முதல் ஐந்து அறிவுவரையுளது. தாவரங்களுக்கு ஸ்பரிச உணர்ச்சி ஒன்றேயுண்டு. கல் முதலியவற்றில் ஆன்ம நிலை சுழுத்தியின் நிலைமையிலிருக்கிறது. தாவரங்களின் இலை காய் கனி முதலியவற்றைப் பற்றி நமது உரோமம், நகம் இவற்றைக் கழிப்பது போல் அவற்றிற்கு இம்சையை யுண்டாக்குவதில்லை யென்றும், ஆகையால் இலை, காய், கனி முதலியவற்றை யுண்பதில் ஜீவ இம்சை யில்லையென்றும் மற்ற ஈரறிவு முதல் உடைய பிராணிகளை வதைத்தல் கொலைபாதகமாகும் என்றும் தெள்ளிதின் விளங்கும்.)

 

ஏ பார்த்த: - நாசத்தையுடைய பூதங்கள் தோறும், நாசமற்றதாய் நீர் விகாரரூபமாய்க் கலந்துள்ள வேதப்பொருளான பரமான்மாவை சர்வபூதங்களிலும் எகரூபமாய்ச் சாக்ஷாத்கரிக்கிறவன் எவனோ அவன் மங்களமான வனைத்தும் கண்டவனாவன்.

 

ஸ்தாவர ஜங்கம ரூபமாகிய சகல வஸ்துக்களிலும் நிறைந்திருப்பதாகிய ஆன்ம சொரூபத்தை அத்தன்மையாகவே சாக்ஷாத்கரிக்கும் அறிஞனே பிறப்பிறப்பாகிய துக்கத்தை யொழித்து நித்தியானந்தமாகிய மோக்ஷ நிலையையடைகின்றான்.

 

(இவ்வாறு ஆன்ம சொரூபத்தைச் சாக்ஷாத்காரமாக அறிந்தவனே முத்தியெய்துவான் என்றருளிய ஸ்ரீ பகவானை நோக்கி அர்ச்சுனன் வினவுகிறான்.)

 

அர்ச்சுனன்: - "பரந்தாமனே! சுகாசுக கர்மங்களை யுண்டாக்குகிறவனும், தேகங்கள் தோறும் வேறுவேறாய் இருந்து சுகதுக்கரூபமான பலன்களைப் புஜிக்கிறவனுமாகிய ஆன்மாவைச் சர்வ பூதங்களிலும் ஏகமாய்க் காண்பது எவ்வாறு? " என்று வினவினான்.
 

பகவான். - ஏ பார்த்த! க்ஷேத்திரக்ஞனான புருடன் விகாரமற்றவனென்றும், மாயாவடிவப் பிரகிருதியாகிய தேகமே சகல கருமங்களையும் செய்கின்றது என்றும் கண்ட விவேகியாகிய புருடனே உண்மையைக் கண்டவனாகும். ஆன்மா நிர்க்குணனாகலின், தேகம் எல்லாக் கருமங்களையும் செய்யினும், அவற்றோடு சம்பந்தித்திரான்.

 

(மேலே கூறியதை ஸ்ரீ பகவான் இப்போது திருட்டாந்த பூர்வமாய் அருளிச்செய்கின்றார்.)

 

ஆகாசம் நல்லன தீயனவாகிய எல்லாப் பொருள்களிலும் உள்ளும் புறம்பும் வியாபித்திருந்தாலும் அவற்றோடு சம்பந்தப்படாமலே தாக்கற்று நிற்பது போல், பரமான்மா சகல தேகங்களிலும் உள்ளும் புறம்பும் வியாபித்திருந்தாலும் அத்தேகங்களின் சுபாசுப கருமங்களோடு சம்பந்தியாமலே யிருப்பன்.

 

ஆதித்தன் தான் ஒருவனாகவே நின்று உலகிலுள்ள சகல வஸ்துக்களிலும் பொருந்தியிருக்கும் இருளை நீக்கிப் பிரகாசிக்குந் தன்மை போல் க்ஷேத்திரக்ஞனான பரமான்மா ஒருவனே சரா அசரங்களாகிய எல்லாச் சரீரங்களிலும் வியாபித்து நின்று அவற்றைப் பிரகாசிப்பான்.

 

(சூரியன் பல பேதங்களாய் உள்ள சகல வஸ்துகளின் இருளை நீக்கிப் பிரகாசித்துக் கொண்டிருந்தாலும் அவ்வஸ்துக்களின் பேதத்தால் தான் பேதமடையான். அவற்றின் சுத்தம் அசுத்தங்களால் தான் எவ்வித விகாரமுமடையான். அதுபோலவே பரமான்மா சகல சரீரங்களிலும் வியாபகமாய்ப் பிரகாசித்துக் கொண்டிருந்தாலும் எவ்வித பேதமாவது அடையான் என்பதாம். இத்தகைய திருட்டாந்த தாட்டாந்தங்களில் விஷயத்தில் எவ்வளவு சம்பந்தப்பட்டிருக்கிறதோ அதுவரையில் மட்டுமே ஒத்திட்டுப் பார்த்துக்கொள்ள வேண்டும்.)

 

ஏ பார்த்த! தேகேந்திரியாதிகளனைத்திற்கும் அதீதமாய் நிற்கும் க்ஷேத்திரக்ஞனோடு உடம்பிற்குரிய நாமம், ஜன்மம், ஜரா மரணம் என்ற தருமங்களையும் இப்பூமியின் கண் வேறு பிரித்தறியா நிற்பவர் முத்தியை யடைந்தவராவர்

 
 பதின்மூன்றாம் அத்தியாயம் முற்றிற்று.

 

 14 - வது * குணாதீத அத்தியாயம்

 

[* இதற்கு வடமொழியில் “குணத்திரயவிபாகயோகம்” என்று பெயர்.]

      [முன்பு க்ஷேத்ரக்ஷேத்ரக்ஞாது சம்யோகத்திற்கு ஈசுவராதீனத் தன்மையுளதென்றும், அதில் குணசங்கத்தையே ஜன்மத்திற்குக் காரணமென்றும் அருளிச் செய்ததால், இப்போது எந்த எந்த பிரகாரமாக சங்கமுளதென்பதையும், அக்குணங்கள் எவையென்பதையும், அவை எவ்வாறு ஜீவனைப்பந்திக்கின்றன வென்பதையும், சத்துவாதி குணங்களினின்றும் அதிகாரிக்கு எவ்வாறு முத்தியுள தாமென்பதையும், முத்தனான புருஷனுடைய லட்சணங்கள் எவை யென்பதையும் விவரமாக அருளிச்செய்யும் பொருட்டு பகவான் இப்பதினான்காவது அத்தியாயத்தை யாரம்ம்பிக்கிறார்.]

ஏ பார்த்த! மிக்க உத்தமமானதும் சிரேஷ்டமானதுமாகிய ஞானத்தின் சுபாவமான அநுஷ்டானத்தால் என்னை அபேதமாக வடைந்த ஞானிகள் சிருஷ்டிகாலத்தில் மறுபடி பிறவார்கள்; பிரளயகாலத்தில் இறவார்கள். இந்த ஞானத்தின் சுபாவம் எத்தன்மையதென்று வினாவுவாயாயின் அதனையும் இனிக் கூறுதும் கேட்பாயாக.

 

ஏ புண்ணியத்தையுடைய அர்ச்சுனா! சத்துவாதி முக்குணங்களால் பேதமாகப் பரிணாமங்களையடையும் எனது மாயையே கர்ப்பாதானத்தின் தானமாம். அம்மாயையில் நான் (உலகைச் சிருஷ்டிக்க வேண்டும் என்னும்) சங்கற்ப ரூபமான கருப்பத்தைத் தரிப்பிப்பேன். அதனானே பூதங்களனைத்தும் உற்பத்தியாகும்.

 

இவ்வாற்றால் நால்வகை யோனிகளுமுண்டாகும். தேவர், மநுடர் முதலிய எல்லாச் சரீரங்கட்கும் அம்மாயையே மாதாவடிவினளாவள். பரமேசுவரனாகிய நாமே கர்ப்பாதான கர்த்தாவான தந்தையாகும்.

 

(பரமேசுராதீன பிரகிருதி புருட சம்பந்தத்தால் பிராணிகளின் உற்பத்தியை நிரூபணம் செய்தபின் பிரகிருதியாகிய மாயை சீவனுக்குப் பர்தத்தை யுண்டாக்குவதைப்பற்றி பகவான் அருளிச்செய்கின்றார்.)
 

ஏ திண்ணிய புயங்களையுடைய பார்த்த! நாம் கூறிய மாயையாகிய மூலப் பிரகிருதி முக்குணங்களையுடையது. அம்முக்குணங்களையுடைய மாயையானது சீவான்மாவைப்பற்றி பந்தித்துள்ள விதத்தை அறிவிக்கிறோம்.

 

அம்மாயையின் மூன்று குணங்களுக்கும் சத்துவம், இரஜசு, தமசு என்று பெயர். இவையே சுகதுக்காதிகளான சகல பலன்களையும் ஜீவனுக்களிப்பனவாகும். அத்தகைய சத்துவாதி குணங்களின் செயல்களைக் கூறுவோம் கேட்பாயாக.

 

இந்த மூன்று குணங்களில் சத்துவகுணம் நிர்மலத் தன்மையால் படிகத்தை யொத்தது. சொச்சமானதால் பிரகாசமுடையது. ஞானத்தை யுண்டுபண்ணத்தக்கது. சாந்தமுடையதாதலின் துக்கமற்ற சுகமானது. இது சுகதுக்கத்தாலும் ஞானசங்கத்தாலும் ஆன்மாவைப் பந்திக்கின்றது. இது பிரகாசமுடையதாதலால் மூலப்பிரகிருதியின் தமோ குணத்திலுதித்த ஆவரணமாகிய இருளையழிக்குந் தன்மையுடையது.

 

இரசோகுணம் இராகரூபமுடையது. (கிடையாத வஸ்து கிடைக்க வேண்டுமென்னும் ஆசையையும், கிடைத்த வஸ்துவில் பிரீதியையும் உண்டாக்குவது.) காவிக்கல் போன்ற (சிவந்த நிறம் பொருந்தியது. இது இலௌகிக வைதிக கர்மங்களோடு ஜீவான்மாவைப் பந்திப்பதற்கு ஏதுவாக விருப்பதாகும்.

 

தமோகுணம் கறுநிற முடையது. அஞ்ஞானத்திற் கேதுவானது. மயக்கம், சோம்பல், நித்திரை யிவற்றால் ஜீவான்மாவைப் பந்திப்பது.

 

ஏ கீர்த்தி பொருந்திய அர்ச்சுனா! சாத்துவகுணமானது ஆன்மாவைச் சுகத்திற் பொருத்துகிறது. இரசோகுணம் கர்மங்களில் பொருத்தும். தமோகுணம் ஞானத்தை மறைத்து அறியாமையாகிய அஞ்ஞானத்தில் பொருத்துவிக்கும் என்று உணர்வாயாக.

 

இந்த மூன்று குணங்களும் மாறிமாறித் தத்தம் காரியங்களைச் செய்யும். இவற்றில் ஒன்று மேலெழும்போது மற்றையிரண்டும் கீழடங்கும். சத்துவம் மேலெழும் போது இரஜசு தமசு என்ற இரண்டு குணங்களும் கீழடங்கிவிடும். இரஜோகுணம் மேலெழும் போது சத்துவ தமோகுணங்கள் கீழடங்கிவிடும். தமோகுணம் மேலோங்கின் சத்துவ இரஜோகுணங்கள் கீழடங்கிவிடும்.
 

(கவனம் வைத்து நோக்கின் இதையனுபவமாக வுணரலாகும். இந்த மூன்று குணங்களின் விருத்திகள் இத்தன்மையவென வறிந்தாலன்றி அவற்றில் நீக்க வேண்டியவற்றை நீக்கவும் கொள்ள வேண்டியவற்றைக் கொள்ளவும் ஒருவரால் இயலாது. ஆதலின் பகவான் அக்குணங்களின் சுபாவத்தைக் கூறுகிறார்.)

 

ஏ பார்த்த! எப்போது அறிவின் பிரகாசம் மிகுந்து நிறைந்த சாந்தம் தோன்றுகிறதோ, அதுவே சத்துவகுணம் என்று அறிதி. கருமங்கள் செய்வதில் மனம் நாடி ஆசையான துண்டாகி லோபகுணம் வந்தடையின் அப்போது இரஜோகுணம் மேலோங்கியதென்று அறிவாயாக. ஒரு கருமத்தைப் பற்றி சிந்திக்கையில் இது தக்கது தகாதது என்று அறியாத போதும், சோம்பல், மயக்கம், உறக்கம் இவை நேரிடும்போதும் தமோ குணம் அதிகரித்ததென்று உணர்வாயாக.

 

(இப்போது மரணகாலத்தில் விருத்தியடைந்துள்ள சத்துவாதி குணங்களின் பலனைப்பற்றி பகவான் அருளிச் செய்கின்றார்.)

 

ஏ கிரீடி! மரண காலத்தில் சத்துவகுணம் மேலோங்கியிருக்கப் பெற்றோர் தேவயோனிகளில் ஜனிப்பார்கள். இரஜோகுணம் மேலோங்கியிருக்கும் காலத்தில் இறந்தோர் மனிதயோனிகளிற் பிறப்பார்கள். தமோகுணம் விருத்தியடைந்திருக்கையில் மரித்தோர் மிருகாதி மூட யோனிகளிலே பிறப்பார்கள். இச்சத்துவாதி குணங்களின் வேறு பயன் களையும் நீயறியும்படி உறைக்கிறோம் கேட்பாயாக.

 

சாத்துவிக தர்மத்தின் பலம் நிர்மலமானதாம். இராஜஸ தர்மத்தின் பலம் துக்கத்தை யனுபவித்தலாம். தாமஸதர்மத்தின் பலம் அஞ்ஞானமாம். மேலும் சத்துவ குணத்தினின்றும் ஞானமுண்டாம். இரஜோ குணத்தினின்றும் உலோபமுண்டாம். தமோகுணத்தினின்றும் மோகங்களும் அஞ்ஞானமு முண்டாம்.

 

எப்போதும் சுத்தமான சத்துவகுணத்தைப் பிரதானமாகவுடைய மனிதர் மேலுலகமாகிய பரலோகத்தை யடையாநிற்பர். மத்திய குணமாகிய இரஜோகுணத்தைப் பிரதானமாகவுடையோர் மத்திய உலகில் மாநுட ஜன்மமாய் வாழ்வார்கள். அதமமாகிய தமோகுணத்தைப் பிரதானமாக உடையோர் அதோகதியாகிய பசுவாதி ஜன்மங்களை யடைவார்கள்.

ஏ பார்த்த! எவன் 'இச்சத்துவாதி குணங்களே சர்வகர்மங்களுக்கும் கர்த்தாவாம். வேறு கர்த்தாயில்லை. நான் அவற்றின் கர்த்தாவல்ல. நான் விகாரமற்றவன்'' என்று அக்குணங்களையும் சாக்ஷியான ஆன்மாவாகிய தன்னையும் வேறு பிரித்தறிகிறானோ அப்புருடன் பிரம்மத் தன்மையையடைகிறானாதலின் அவன் முத்தியின்பத்தை யடைந்தவனாவான்.

 

(அப்புருடன் எவ்வாறு முத்தியின் பெய்து வான் என்பதைப் பகவான் அருளிச்செய்கின்றார்.)

 

"ஏ பர்க்குண! இத்தேகத்தோடு கூடி சீவிக்கையிலேயே பிறப்பிறப்பிற்குக் காரணமாகிய இம் முக்குணங்களையும் மாயாமயம் என்றறிந்து அவற்றைப் பரித்தியாகம் செய்தவன் பிறப்பு மூப்பு இறப்பு என்ற இவற்றின் துக்கங்களனைத்தையும் பரித்தியாகம் செய்து மோட்சவின்பத்தையடைகிறான்'' என்று பகவான் அருளிச் செய்ததைக் கேட்ட அர்ச்சுனன் பின் வருமாறு வினவுகின்றான்.

 

அர்ச்சுனன்: - ''ஏ பரந்தாமா! கடத்தற்கரிதாகிய இச்சத்துவாதி முக்குணங்களையும் கடந்த புண்ணிய புருடர்களின் சுபாவமும், அவர்கள் அக்குணங்களை யெவ்வித உபாயத்தால் கடந்தார்களென்பதையும், அவர்களது இலக்ஷணங்களாகிய குறிகளையும் அடியேற்கருளிச் செய்ய வேண்டுகிறேன்'' என்றனன்.

(பகவான் முக்குணக்களைக் கடந்தவனது இலக்கணத்தை யருள்கின்றார்.)

 

பகவான்: - ஏ பார்த்த! மாயா மயமாகிய சத்துவம், இரஜசு, தமசு என்ற முக்குணங்களின் காரியங்களாகிய பிரகாசம், பிரவிர்த்தி (தொழில்) மோகம் இவற்றை அடையாத போது இச்சித்தலும், அடைந்தபோது துவேஷித்தலும் செய்யாதவன் குணாதீதன் எனப்படுவான்.

 (இப்போது அவன் சுபாவத்தை யருளிச் செய்கிறார்.)

 

அவன் உதாசீன புருடன் போல் இராகத்துவேஷங்களை யடையாதவனாய், அக்குணங்களோடு கூடியிருந்தே அவற்றால் அசைக்கப்படாதவனாக விருப்பன். மானம் அவமானங்களிலும், சுகதுக்கங்களிலும், மண் பொன்னிலும், சத்துரு மித்திரரிடத்திலும், ஸ்துதி நிந்தைகளிலும், சமதிருஷ்டியுடையவனாகவிருப்பான். இக்குணங்களோடு எனக்கு யாதொரு சம்பந்த முமில்லை, இவற்றையெல்லாம் பிரகாசிக்கும் ஆன்மாவே நான் என்ற திட நிச்சயமுடையவனே குணதீதனாவன்.

(இனிப் பகவான், அந்த அதிகாரி எந்த உபாயத்தால் அம் முக்குணங்களைக் கடந்து விடுகிறான் என்பதை யருளிச்செய்கிறார்.)

 

இவர்கள் எவ்வகையாலேனும், ஒப்புயர்வற்ற பரமேசுவரனாகிய என்னிடத்தில் வைத்த அனன்னிய பக்தி யோகத்தினால் சத்துவாதி முக்குணங்களையும் கடந்து நித்தியமாகிய மோக்ஷ வீட்டை யடையாநிற்பர்.

 

ஏ பார்த்த! என்றும் கெடாத ஞானமும், அழியாத மோக்ஷமும், நிரதி சயமான ஆனந்தமும், சாசுவதமான தருமமும் என்னிடத்தினின்றே உண் டாகின்றனவாதலின் என்னிடத்து வைத்த நீங்காத அனன்னிய பக்தியினால் அதிகாரிக்கு மோக்ஷம் உளதாகும்.

 

பதினான்காவது அத்தியாயம் முற்றிற்று.

15 - வது * பிரபஞ்சம் அத்தியாயம்

 

[* இதற்கு வடமொழியில் புருஷோத்தம யோகமென்று பெயர்.]

 

[முன்பு பதினான்காம் அத்தியாயத்தின் முடிவில் அநந்நிய பக்தியினால் பரமேசுரனான என்னைச் சிந்தனம் செய்வோர் ஞானவாயிலாக முத்தியடைவர் என்று பகவான் கூறி யருளினார். அத்தகைய அநந்நிய பக்தியும் ஞானமும் சம்சாரத்தில் விரக்தியடைந்த வைராக்கிய புருடனுக்கே உளவாமாதலின், வைராக்கிய பூர்வகமாக ஞானோபதேசம் செய்யக் கருணைகூர்ந்த பகவான் சம்சாரத்தை விருக்ஷரூபமாக வர்ணித்தருளுகின்றார்.]

 

(இப்போது பகவான் சம்சார ரூபமான மாயையைத் தலைகீழாகவுள்ள ஒரு விருக்ஷத்திற்கு ஒப்பிட்டு விவகரித்தருள்கிறார்.)

 

ஏ பார்த்த! மஹாமாயையால் உண்டாக்கப்பட்ட இச்சம்சாரமாகிய விருக்ஷமானது வேர் மேலாகவும் கிளைகள் கீழ்நோக்கியுமுடையது. அழியாதது. வேதத்திலுள்ள கர்மகாண்டங்களாகிய இலைகளையுடையது. இது அசுவத்தம் (அரசமரம்) என்ற பெயரையுடையது. இதன் சுபாவமாகிய வகையாதெனின் கூறுதும்.

 

இது தனக்குச் சமானமானதொன்றும் இல்லாதபடி, மஹத்தாகிய பிரம சொரூபத்தின் கண்ணின்றே உண்டாகும். கிரமப்படி ஆகாயமுதல் தூல உருவங்கள் ஈறாகவுடைய சகல பிரபஞ்சங்களும் உண்டாகின்றபடியால் மூல காரணமான பிரம்மமே வேராகவுடையது. பிராணிகளின் வினை வசத்தால் வராநின்ற உலகங்களாகவும் உயிர்களாகவும் எழுகின்றதால் காரிய உபாதிகளையுடைய இரண்ய கர்ப்பாதிகளைத் தலைகீழ் நோக்கியிருக்கும் சாகைகளாகவுடையது. தோற்றம் ஸ்திதி நாசம் உடைய பந்தரூபமாகிய பிறவித்தொடர் என்ற அச்சம்சார விருட்சத்தின் பிரவாகமானது, ஒரு காலத்தும் முழுமையும் சூனியமாகும்படி அழியாமையின் ஒரு தன்மையதாயுள்ளது.

 

ஏ பார்த்தா! கர்ப்பத்தில் உண்டான காலமுதல் இச்சம்சாரவிருட்சம் புண்ய பாபகர்மங்களால் வளராநிற்கும் விருப்பமுடையதாதலால் அரிய நான்கு வேதங்களையே இலைகளாகவுடையதென அறிதி. இச்சம்சார விருட்சம் எதிர்காலத்தில் ஒரு நாள் இருக்குமென விரும்பும்படி யில்லாததால் இதற்குப் பிரசித்தமான அசுவத்த விருட்சம் என்ற நாமம் சூட்டப்பட்டது.

 

[பிரம்மமே சகல பிரபஞ்சங்கட்கும் மூலகாரணமாகையால் இச்சம்சார விருக்ஷத்திற்கு பிரம்மம் வேர் எனப்பட்டது. அது ஆனந்தமும் நித்தியமு மானதால் ஊர்த்துவமாம். அதாவது மேல்நோக்கி இருப்பதாம். அச்சம் சாரம் மாயாசம்பந்தமுடையதாயும் பிறப்பிறப்பாகிய பெரும்பிணியை யளிப்பதாயும் இருப்பதால் அச்சம்சார விருக்ஷத்தின் சாயைகள் அதோமுகமா யிருப்பனவாம். அதாவது கீழ்நோக்கி யிருப்பனவாம். விருக்ஷம் எப்படி கந்தத்தினின்றுண்டாயிற்றோ அவ்வாறே இச்சம்சார விருக்ஷமும் புத்தியினின்றும் நானாவகையான பரிணாமங்களை யடைந்திருக்கிறது. சாதாரண விருக்ஷத்தில் துவாரங்கள் இருப்பது போல் இதில் சுரோத்திரம் முதலிய இந்திரிய துவாரங்களிருக்கின்றன. விருக்ஷத்தில் கிளைகளிருப்பது போல் இச்சம்சார விருக்ஷத்தில் ஆகாசாதி பூதங்கள் முதலிய தத்துவங்கள் பரந்து கிடக்கின்றன. இந்த விருக்ஷம் ஸப்த ஸ்பரிச முதலிய பத்திரங்களையுடையது. தர்மாதர்ம ரூபமான புஷ்பங்களையும், அவற்றினின்றும் உண்டாகும் சுகதுக்கங்களாகிய கனிகளையுமுடையது. கனிகளையுடைய விருக்ஷத்தில் பக்ஷிகள் வந்து சேர்வது போல் இச்சம்சாரமாகிய அசுவத்தமென்னும் விருக்ஷத்தில் சீவகோடிகள் இருக்கின்றன. இச்சம்சார விருக்ஷத்தில் சுத் தப்பிரமம் சர்வசாக்ஷிமாத்திரமாய், அதன் குணதோஷங்களில் சம்பந்தப்படாமல் தாக்கற்று நிற்கிறது.]

 

இத்தகைய சம்சார விருக்ஷத்தை ஆன்ம ஞானமாகிய வாளினால் மூலத்தோடு அழிப்பவனே முத்தியடைவான். (அதாவது அதன் சுகதுக்காதிகளாகிய கனிகளைப் புசியாமல் அவற்றில் இச்சைவையாமல் யாவற்றிற்கும் சாக்ஷிமாத்திரமாய் இருக்கும் நிலையாகிய ஆன்மசாக்ஷாத்காரத்தை யடையும் அதிகாரி புருடனே மீண்டும் பிறவாமுத்தியாகிய வீட்டைவான்.)
 

(பகவான் மேலே கூறிய சம்சார விருக்ஷத்தின் அவயவங்களை இன்னொரு விதமாக விளக்கிக் காட்டுகிறார்.)

 

ஏ பார்த்த! இம்மாயா சம்சார விருட்சத்தின் கூறுபாடுகள் இவையாகும். இவற்றை நான் கூறியபடியே யுள்ளபடி நுட்பமாக உணராநிற்பவர் வேதத்தின் பொருள் முழுவதும் உணர்ந்தோராவர். இப்பெரிய சம்சார விருட்சத்தின் அவயவ கற்பனைகள் இன்னும் சில உள. அவற்றைக் கூறு தும் கேட்பாயாக.

 

எனது கண்மணிக்கொப்பாகிய பார்த்த! இச்சம்சார விருட்சமானது நானாவித யோனிகளின் வழியே பூமி முதலிய கீழ் உலகத்து வளர்வனவும், தேவலோக முதலிய மேல் உலகத்துள்ளனவுமான அளவிறந்த பிறவிகளாகிய கிளைகளையுடையது. (சீவர்கள் புண்ணியகர்மவசத்தால் ஊர்த்துவ யோனிகளிலும், பாபகர்மவசத்தால் அதோயோனிகளிலும் பிறக்கின்றன.)

 

பல ஜன்மங்களில் புசித்த போகானுபவத்தாலுண்டாகும் இராகத் துவேஷாதிகளென்கிற வேரானது பல மநுட வுலகின்கண்ணே (மநுட தேகங்களில்) அஞ்ஞானத்தோடு கூடி வீழ்ந்திருத்தலின், இச்சம்சார விருட் சத்தின் வேர் கீழேயுமுளதாம். இந்த விருட்சம் பிரியா துண்டாகின்ற சத்துவாதி குணங்களாகிய ஜலத்தால் வளராநிற்கும். இந்திரிய சம்பந்தமான சப்தாதி விஷயங்களாகிய தளிர்களையுடையது.

[முன்பு சம்சார விருட்சத்திற்கு மூலமாகிய பிரம்மம் என்ற வேர் மேலாக உள்ளது என்று கூறப்பட்டது. அது முக்கியமான வேர். இராகத்துவேஷாதி வாசனைகள் அவாந்தரமூலமாகும். அதாவது இச்சம்சார விருட்சத்திற்கு உள்ளுக்குள்ளாக விருக்கும் வேர் போன்றது.]


(இச்சம்சாரம் அதிர்வசனீயம் என்று பகவான் அருளிச்செய்கின்றார்.)

 

ஏ பார்த்த! இந்த மாயா சம்சார விருட்சமானது விழித்தால் பொய்யாகும் சொப்பனக்காட்சி போலவும், பொய்யாகிய தோற்றம் மாத்திரமாகவுள்ள பேய்த்தேர் (கானல்நீர்) போலவும், (ஜாலக்காரன் காட்டும்) தோன்றியுடனே மறையும் கந்தர்வ நகரம் போலவும் உள்ளதால் தனக்கென யாதொரு உருவமுமில்லாதது. முதலில் இல்லாதிருந்து உண்டாவது. ஆதிகாலமும் பின்னர் அபாவமாகும் காலமும் இல்லாமையாலே அந்தமும் ஆதியும் அறியப் படாதது.

 

(இப்போது பகவான் இம்மாயா சம்சாரவிருக்ஷத்தைச் சேதிக்கும் உபாயம் கூறியருள்கின்றார்.)

 

இந்த மாயா விருக்ஷத்தினைத் திடவைராக்கியமென்ற வாளால் வெட்டி, பிரம்ம சொரூபமாக இருந்தபடியிருந்தே இந்திரசாலம் போல மாயா சொரூபமான இப்பிரபஞ்சமனைத்தையும் தோற்றுவிக்கின்ற ஆதியந்தமற்ற என்னைச் சரணமடைதலே, ஏ பார்த்த! பிரமத்தை யறிதற்குத்தக்க உபாய் மாகும்

.

[மாயை அநிர்வசனீயம். அதுபோன்றே மாயாகாரியமாகிய சம்சார விருட்சமும் அநிர்வசனீயமாகும். அதனுடைய அநித்தியத்தன்மையை யுணர்ந்து அதனிடத்து, பூரண விரக்தியடைந்து அதனிடத்துண்டாகும் சந்தோஷம் துக்கமாதிகளில் தாக்கற்றவனாகி, ஈசுவரனிடத்து அநந்நிய பக்தி பொருந்தியிருப்பதே பிரம்மான்ம ஐக்கிய ஞானமடைதற்கு மார்க்க மாகும்.]

 

ஏ அர்ச்சுனா! தம்மையடைந்துள்ள இராகத்துவேஷாதி குணங்களை நிக்கிரகம் செய்த ஞானிகள் தரிசிக்கும் வண்ணம் தோன்றா நிற்கும் எனது சொரூபம் எத்தகைய சுபாவமுடையதெனின், சகல பிரபஞ்சங்களையும் பிரகாசிப்பிக்கின்ற சூரியன், சந்திரன், அக்கினி என்ற இவைகளின் ஒளியால் பிரகாசிப்பிக்கப்படாத தன்மையையுடைய சொப்பிரகாச சொரூபமானது. வந்தடைந்தோர், பிறகு தமது சொரூபம் வேறொருவிதமாகாத தன்மையையுடையது. (அதாவது அச்சொரூபத்தை யடைந்தோர் அச்சொரூப மயமாய் விடுவார்களேயன்றி மறுபடி பிறவார் என்பதாம்).

 

(சுவர்க்காதிகளை யடைந்த கர்மிகளும் பிரளயங்களிலுள்ள பிராணிகளும் மீண்டும் ஜனியாரிற்க உம்மை யடைந்தோர் மட்டும் என் ஜனியார் என்ற அர்ச்சுனன் சங்கைக்குப் பகவான் காரணம் அருள்கின்றார்).

 

ஏ பார்த்த! குடத்தில் தோன்றும் கடாகாயம் அசைதற்போலும், தடாகத்தில் பிரதிபலித்துள்ள பிரதிபிம்ப சந்திரன் போலும் சரீரங்கள் தோறும் அன்னியமாய் ஜீவன் போல் நின்றே சுரோத்திராதி புலன்களையும் மனதையும் அவ்வவற்றின் சுபாவ விஷயங்களில் நான் பிரேரிப்பேன்.

 

[கடம், தடாகஜலம் ஆகிய உபாதிகள் நசித்ததே கடாகாயம் மகாகாயத்திலும், பிரதிபிம்ப சந்திரன் அதிஷ்டான சந்திரனிலும் கலந்துவிடுவது போல், ஆன்மஞானத்தால் அஞ்ஞானம் நீங்கியதும் சீவான்மா தனது சொரூபமான பிரம்மத்தில் கலந்து மறுபடி ஜனியாதென்பது பெறப்படுகிறது.]

 

(இச்சீவான்மா எக்காலத்தில் மனம் முதலிய ஆறு இந்திரியங்களையும்ஆகர்ஷணம் செய்கின்றான் என்ற அர்ச்சுனன் சங்கைக்குப் பகவான் கூறி யருள்கின்றார்.)

 

ஏ பார்த்த! மலர்களிலுள்ள இனிய மணத்தைக் காற்றானது எப்படி கிரகித்துக் கொண்டு செல்கின்றதோ அவ்வாறே ஈசுவர அம்சமாகிய சீவன் ஓர் சரீரத்தை விட்டு நீங்கும் போது மனம் முதலிய ஆறிந்திரியங்களையும் கிரகித்துக் கொண்டு செல்வான். நிலையில்லாத தேகத்தை விடுவதும் அடைவதுமாகிய இச்சீவான்மா சுரோத்திரம் முதலிய இந்திரியங்களை ஆசிரயித்தே சப்தம், இரசம், ரூபம் முதலிய விடயங்களை நுகருகின்றான்.

 

அத்தன்மைய ஆன்மாவை அசுத்த அந்தக்கரணமுடைய அவிவேகி கள் முயற்சி செய்தாலும் காணார்கள். சுத்த அந்தக்கரணமுடைய அறிவாளி மட்டுமே ஞானத்தாலும் தியானாதியோகங்களாலும் பிரத்தியட்சமாயறியாநிற்பர். இவ்வான்மாவின் சுபாவத்தை இன்னும் கூறுதும் அறிவாயாக.

 

ஏ தோள்வலியுள்ள வீரனாகிய அர்ச்சுனா! சட்சு முதலிய இந்திரியங்களைப் பிரகாசிப்பிக்கும் ஒளி நானாகவிருக்கிறேன். சர்வ அண்டங்களுக்கும் ஒளியளிக்கும் சூரியசந்திர அக்கினியாகிய இவைகளினிடத்துள்ள பிரகாசமும் நானாகின்றேன். பிருதிவிரூபமாக நின்று அதற்குக் கந்தமும், எனதுபலமாகிய உரத்தையும் அதில்வைத்து அதிலுள்ள தாவரஜங்கம ரூபமான யாவற்றையும் தாங்கி நிற்பவனும் நானாகவே யிருக்கிறேன். ஆகாயத்தினிடத்தில் சர்வ ரசங்களின் ஆகாரமான சந்திர ரூபமாய் நின்று உண்ணத் தக்க பண்டங்கள் யாவற்றிற்கும் அததற்குத் தகுதியான சுவையை யளித்து அவைகள் கெடாதபடி வளர்க்கின்றவனும் பரமேசுரனாகிய நானாகின்றேன். தின்பன, நக்குவன, சுவைப்பன, உண்பன என்ற நான்கு வகையாகவுள்ள உணவுப் பொருள்களும் சுகத்திற்கேதுவாகும்படி, பிராணிகளின் சரீரங்கள் தோறும் ஜடராக்கினியாய் நின்று அவ்வுணவுப் பொருள்கள் ஜீரணிக்குமாறு பக்குவப்படுத்துவோனும் நானே.

 

ஏ பார்த்த! புண்ணிய கருமங்களையுடைய நல்ல மாந்தரின் சிறந்த அறிவும், பாபிகளாகிய கெட்ட மாந்தரின் அற்ப அறிவும் நானேயன்றி வேறில்லை யென்றறியக்கடவாய். நான்கு வேதங்களின் பொருள்களை யறிபவனும், அவ்வேதங்களின் மெய்ப்பொருள்களைச் சுரங்களினால் போதிக்கும் ஆசாரியனும் நானாகவே யிருக்கின்றேன்.

 

(இப்போது பகவான் அழியும் பொருள் இன்னது அழியாப்பொருள் இன்னதென அருளிச் செய்கின்றார்.)

 

ஏ பற்குனா! இன்னொரு விஷயமும் கூறுகின்றோம் கேட்பாயாக. அதாவது, இப்பிரபஞ்சத்தின்கண்ணே அழிதலையே உருவமாக உடைய ஒரு பொருளும், அருவமாய் எதனாலும் அழிவில்லாமையாகிய தன்மையையுடைய ஒரு பொருளும் உண்டு. அழிவது அழியாதது என்ற இந்த இரண்டு பொருள்களையும் அறிவினால் நன்றாக உற்று நோக்கி ஆராய்ந்திடின், பிரம்மா முதல் ஸ்தாவர மீறாகவுள்ள நாமரூபத் தோற்றமான சரீரங்களனைத்தும் அழியுமென்றும், நாமரூபமற்ற ஆன்மா அழியாத தென்றும் விளங்கும்.

 

(இப்போது பகவான் மேற்கண்ட இருவகைப் பொருள்களுக்கும் விலட்சணனாய் அவற்றோடு தாக்கற்று நிற்கும் பரமான்ம சொரூபத்தைப் பற்றி அருளிச்செய்கின்றார்.)

 

ஏ பார்த்த! அழிவதுமழியாததுமாகிய இருவகைப் பொருள்களுக்கும் அந்நியமாய், அவற்றின் தோஷங்கள் ஒன்றும் பற்றாமல், உற்பத்தி நாசமின்றி, எவ்வகைக் குறைபாடுமின்றிச் சகலப் பிரபஞ்சங்களிலும் தனது சக்தியால் வியாபித்து நிற்பது எதுவோ அதுவே சச்சிதானந்த சொரூபமாகிய பரமான்மா என்பது.

 

இத்தகைய நிர்விகார நிரதிசயானந்த ரூபியாகிய என்னை யுள்ளவாறு உள்ளத்தில் அறிந்தவர்கள் எவ்விதப் பந்தமுமடையார். அனாதியாய் ஆதி காரணனாயுள்ள இப்பரமான்மாவிற்கு ஆதியும் அந்தமும் உண்டென்று கூறமுடியாது.

 

ஏ பார்த்த! இருக்காதி நான்கு வேதங்களையும் மொத்தமாய்ச் சொல்லத் தொடங்கினும் இப்பரமான்ம ஞானம் கொஞ்சமும் சொல்லக்கூடியதன்று. உலகமே இதை யறிந்திலது. இத்தகைய மிகவும் இரகசியமான ஒன்றைத் தோழனாகிய உன் மேல் வைத்த கருணையால் உனக்கு உபதேசித்தோம். இதையுடையவன் ஆன்மஞானம் பெற்று முத்தியின்பெய்துவன்.


 பதினைந்தாம் அத்தியாயம் முற்றிற்று.

 

16 - வது தேவாசுர சம்பத்து விபாகயோகம் அத்தியாயம்

 

[முன் அத்தியாயத்தில் பகவான் கூறியருளிய, மநுடதேகத்தில் பூர்வம் செய்துள்ள சுபாசுப கர்மங்களின் வாசனையை தெய்வசம்பத்து அசுர சம்பத்து என இரண்டாய்ப் பிறித்து விவகரிக்கிறார். இவற்றில் தெய்வசம் பத்து என்ற சுபவாசனை மோக்ஷத்திற்கேதுவாதலால் கொள்ளத் தக்கதாகும். அசுரசம்பத்தென்ற அசுபவாசனை பந்தத்திற்கு ஏதுவாதலின் தள்ளத் தக்கதாகும். ஆனால் ஒன்றைக் கொள்ளற்கும் மற்றொன்றைத் தள்ளற்கும் அவற்றின் தன்மை தெரிந்தாலன்றி கூடாது. ஆதலின் ஸ்ரீபகவான் அந்த இரண்டு சம்பத்துக்களின் சொரூபத்தையும் அருளிச்செய்கின்றார்.]

 

ஏ பார்த்த! இப்பூவுலகின்கண்ணுள்ள மாந்தர் தேவர் அசுரர் என்ற இரு பகுப்பினராய் வாழ்வார்கள். அவர்களுடைய சுபாவங்களைக் கூறுகிறோம் கேட்பாயாக.

(முதலில் பகவான் கொள்ளத்தக்கதான தெய்வ சம்பத்துடையோரின் சுபாவத்தை யருளிச் செய்கின்றார்.)

 

ஏ அரிய காண்டீபமெனும் வில்லையேந்திய அர்ச்சுனா! பயமின்மை, அந்தக்கரணங்களைச் சுத்தியாக்குதல், சித்தத்தை ஆன்மாவின்கண் சலன மின்றி நிறுத்தல், ஆன்ம சொரூப நிச்சயத்தில் திடம் பெற்றிருத்தல், கோபமின்மை, சத்தியம் மொழிதல், தியானம் தவம் உடைமை, வேத ஆராய்ச்சி செய்தல், தன்னைப் பெருமையாக எண்ணாமை, கோட்சொல்லாமை, கொல்லாமை, அன்னியர் செய்யும் அபசாரங்களைச் சகித்தல், பெருந்தன்மையான நடக்கை, தானதர்மங்கள் செய்வதில் விருப்பம், சகல ஜீவர்களிடத்திலும் கருணை, அகக்கரண புறக்கரண சுத்தம், இந்திரியங்களை விஷயங்களில் செல்லாதபடி தடுத்துத் தன்வயப்படுத்தல், ஆகிய குணங்களையுடையோரே தேவசம்பத்துடையவர்களாம்.

 

(இனிப் பகவான் தள்ளத்தக்கதான அசுரசம்பத்துடையோரின் சுபாவத்தை யருளிச்செய்கிறார்.)

 

ஏ பார்த்த! இனித் தீயசெயல்களைச் செய்யாநிற்கும் அசுர சம்பத்துடையவர்களின் சுபாவத்தைக் கூறுகிறோம். அவர்கள் இன்னது செய்யத்தக்கது என்றும் இன்னது செய்யத் தகாதென்றும் அறியமாட்டார்கள்; இந்திரிய சுத்தத்தையும் புனிதமாகிய ஆசாரங்களையும் கைவிட்டவர்கள்; சாத்தியமில்லாதவர்கள்; அவிவேகமுடையோர்; ஜகத், அதைச் சிருட்டிக்கும் கடவுள் ஒருவர், பாவபுண்ணியம் இவை யாவும் பொய்யென்று கருதுவோர்; பெண் ஆண் இரண்டின் சேர்க்கையால் இயற்கையாகவே யாவும் உண்டாகின்றனவாதலால் ஈசுவரன் முதலியவை அனாவசியம் என்று வாதிப்போர்.

 

('யாவும் பஞ்சபூதங்களின் சேர்க்கையாலும் ஆண் பெண் சேர்க்கையாலுமே இயற்கையாகவே உண்டாகின்றன. மற்றப்படி ஈசுவரன் பாப புண்ணியம் முதலிய யாவும் பொய். இவ்வுலகபோகத்திற்கு மிஞ்சிய போகம் வேறில்லை. இவ்வுலக போகங்களில் ஸ்திரீ போகமே யாவற்றினும் உயர்ந்தது. மாதரே பெண்தெய்வம்'' என்று இவ்வாறு கருதுவோர் உலகாயதர் எனப்படுவார்கள்.)

 

 

[முற்கூறிய உலகாயதர்களின் திருஷ்டியும் சாஸ்திரீய திருஷ்டி போல் இஷ்டந்தானோ என்னும் அர்ச்சுனன் சங்கைக்குப் பகவான் கூறியருள் கின்றார்.]

 

ஏ பார்த்த! மேலே கூறப்பட்ட உலகாயதர் போன்ற அசுர சுபாவ முடையோர் விரும்பப்படாதவர்களாய், வருணாச்சிரமதருமங்களை வெறுத்து விட்டனர். சத்தியத்தையும் ஆசாரத்தையும் கைவிட்டார்கள். விவேக புத்தியை இழந்துவிட்டார்கள். அற்ப புத்தியோடு கூடிக்கொண்டார்கள். பெரும் பழியான காரியங்களையே செய்வார்கள். தங்கள் காரியங்களால் வரும் இலாபநஷ்டங்களை யறியார்கள். இவர்கள் இவ்வுலகத்தை யழிப்ப தற்காகவே அவதரித்தவர்கள் என்றறிதி.

 

(மேற்கண்ட உலகாயதன் போன்ற அசுர சம்பத்துடையோர் பூலோகத்தை யழிக்கும் குணம் பொருந்திய துஷ்ட ஜெந்துக்களாகிய தாமதயோனிகளில் ஜனிப்பார்கள். ஆதலின் அத்தகைய அதோகதிக்காளாகாதிருக்க வேண்டினோர் அத்தகைய குணங்களை விட்டொழிக்க வேண்டும்.)

 

மேலும் அவர்கள் எவ்வளவு காலமாயினும் விஷய போகங்களில் பூரண மாகாதவைகளைப் பூரணமாக்க விரும்பி, உலகோர் தம்மை மெய்ப்பக்தர் என்று கருதுமாறு இல்லாத நற்குணங்களை இருப்பனபோல் காட்டி, அவி வேகம், குரோதம், துவேஷம் முதலிய தீயகுணங்களோடு பொருந்தியிருந்தும், தங்களுக்குத் தகுதியல்லாத அசத்தான தவங்களையே செய்யாநிற்பர்.

 

இன்னும் அவர்கள் மரணபரியந்தம் தங்களுக்குக் கிட்டாத பொருள்களின் மேலேயே சிந்தனையை வைத்திருப்பர்கள். இவ்வுலகில் அனுபவிக்க நேர்கின்ற வனிதையாதி போகங்களையன்றி தருமமென்றாவது மோக்ஷ மென்றாவது வேறொரு பொருள் மறந்தும் கிடையாதென்பர். பூமியிற் சனித்து பேராசையாகிய யிவற்றால் பிணிக்கப்பட்ட இந்த அசுர சம்பத் துடையோர் உலகத்தின் அநித்திய போகங்களை யனுபவிப்பதற்காக அநியாய வழிகளில் பொருளைச் சேகரிப்பார்கள்.

 

(இப்போது பகவான் இத்தகையோரின் மன நாட்டத்தையும் இவர்கள் ளடையும் நரகப்பிராப்தியையும் அருளிச்செய்கிறார்.)

 

ஏ பார்த்த! இவர்கள் அடைந்த தனம் முதலிய பொருள்களால் மன மகிழ்ச்சியடைந்து "நாம் இந்தப் பொருள்களை யடைந்துவிட்டோம், இனி வேண்டிய வேறுபொருள்களைச் சீக்கிரம் அடைவோம் என்றும், இப்பகைவரை யொழித்துவிட்டோம், இனியுள்ள மற்றப் பகைவரையும் அழித்து விடுவோம் என்றும், இவ்வுலகபோக பாக்கியங்களை எம்மைப் போல் அனுப் விக்கத்தக்க சமர்த்தர் ஒருவருமில்லையென்றும், நமக்கு மேலானவர்களாகவும் சமமானவர்களாகவும் யார் இருக்கிறார்கள்? ஒருவருமில்லை'' என்றும் கருதா நிற்பர்.

 

ஏ பார்த்த! இவர்கள் ''நாம் ஜனக்கூட்டமும் வல்லமையும் சுகமும் அடைந்திருக்கிறோம். செல்வம் மிக்க அதிகமாகவுடையோம். ஆதலின் எம்மிலும் மேலானவர்கள் ஒருவருமில்லை' என்று தம்மைத்தாமே புகழ்ந்து கொள்வார்கள். இன்னமும் ''நாங்கள் பல யாகங்களைச் செய்வோம். மேகம் போல் தானங்களை யளிப்போம்'' என்று தினந்தோறும் மனோராஜ்ஜியம் செய்வதேயல்லாமல் வேதத்தில் கூறுகிறபடி செய்யார்கள்.

 

பந்தத்தை யொழித்தற்குக் காரணமாகவில்லாத பலவித துஷ்ட எண்ணங்களிலேயே சுழன்று கொண்டிருப்பவரும், அடக்கற்கரிய மோகமாகிய வலையில் சிக்கி யுழல் பவருமாகிய இவர்கள் புல்நுனியிலிருக்கும் பனித்துளி சூரிய கிரணத்தால் உலர்ந்து போவது போல், கூற்றுவனால் உயிர் நடுக்குற்றிறந்து கடத்தற்கரிய கொடிய அசுசியாகிய நரகக்கடலிலே வீழ்வர்.

 

ஏ பார்த்த! இந்த அசுர சம்பத்துடையோர் தங்களையே மேலானவர்களாக மதித்துப் புகழ்ந்து, உண்மையான சாதுக்களைச் சிரேஷ்டராகப் பாராட்டமாட்டார்கள். பழைய வேதங்களில் கூறப்பட்ட விதிகளைக் கைக்கொள்ளாமலே யாகங்களைச் செய்யா நிற்பர்.

 

நிலையான களிப்பும், பலமும், காமாதிகளும், நான் என்கிற அகங்காரமும் பொருந்தியுள்ள இவர்கள் தம்மவர்கள் யாவரிடத்தும் எனது சுபாவத்தை அன்னியமாகக் கருதிக்கொண்டு துவேஷத்தையே செய்யா நிற்பர்.

 

(பரமேசுவரராகிய உமது கருணையால் இந்த அசுர சுபாவமுடைய மாந்தர்க்கு ஒருகாலத்தில் நற்கதி கிடைக்காதோ என்ற அர்ச்சுனன் சங்கைக்குப் பகவான் அருளிச்செய்கின்றார்.)

 

ஏ அரசனாகிய பார்த்த! மானிடர்களில் அதமரும், பிறர்க்குக் குரூரமான தீங்குகளைச் செய்வதில் அரவத்திற்கொப்பானவருமாகிய இந்த அசுர சம்பத்துடையோரை ஒழியாத துன்பங்கள் வந்து சேரும். யானே அவர்களைக் கீழான யோனிகளாகிய புற்றுகளில் அடிக்கடி புகும்படி வீழ்த்துவேன்.

 

இவ்வாறு வியாக்கிரசர்ப்பாதிகளாகிய அசுர யோனிகளை யடைந்த இவர்கள் விவேகஞானமடையும் வழியின்மையாலே நற்கதிக்கேதுவான வேதமார்க்கத்தையடையாமல் கொடிய நரகங்களில் சுழன்று திரிந்து வருந்தா நிற்பர்.

 

ஒருவரை எப்போதும் அதம யோனிகளில் ஜனிக்கும்படிச் செய்வதும், எப்போதும் நரகத்தில் உழலச்செய்வதும் ஆகிய இவைகள் வரும் வழிகள் மூன்றுள. அவற்றை ஒருமுறை கிரமமாகப் போதிக்கின்றேன் கேட்பாயாக.

 

ஏ பார்த்த! விஷய போகங்களிலுண்டாகும் பிரீதியாகிய காமம், தன்னுடையதை யின்னொருவர்க்குக் கொடுக்க மனம் பொறாத குணமாகிய உலோபம், சுடுகின்ற அக்னிக்குச் சமதையாகிய கோபம், இந்த மூன்றுமே ஒருவனுக்கு நரகத்திற்கும் நாசத்திற்கும் காரணமாகும். ஆதலினால் இவை மூன்றையும் விட்டொழித்தோர் சர்வ அநர்த்தங்களினின்றும் நீங்குவதாகிய நிரதிசயானந்த மயமாகிய மோக்ஷத்தை யடைவார்கள். சாத்திரங்களில் அந்தந்த அதிகாரிகளுக்கு விதித்துள்ள விதி நிஷேதங்களின்படி நடக்க வேண்டுமென்ற விருப்பத்தை விட்டுத் தம்மனம் போன வழியே நடவா நிற்பவர்கள், இகலோக பரலோகங்களில் அடையக்கூடிய சுகங்களையும், சித்தசுத்தியையும், அதன் துவாரா அடையக்கூடிய முத்தியையும் அடையார்கள்.

 

ஏ பார்த்த! மேலே கூறப்பட்ட காரணங்களால், காரியா காரியங்கள் அனைத்தையும் அறிவதற்கு மார்க்கமாகிய சுருதியாதி சாத்திரங்களில் விதிக்கப்பட்ட மார்க்கத்திலேயே ஒரு தோஷமுங் கருதாமல் உனது அதிகாரித்தன்மைக்குத் தக்க தருமயுத்தம் முதலிய காரியங்களையே செய்வாயாக.

(அசுர சம்பத்துடையோர்களிடத்துள்ளனவாகக் கூறப்பட்ட குணங்களை நீக்கி, முக்கியமாய் காமம், உலோபம், கோபம் என்ற கொடிய மூன்று குணங்களையும் அடியோடொழித்து, சித்தசுத்தி பொருந்தி சாத்திரங்களில் கூறப்பட்ட விதி நிஷேதங்களின்படி ஒழுகினால் நற்கதி பெறலாம் என்பது கருத்து.)


பதினாறாவது அத்தியாயம் முற்றிற்று.

 


17 - வது குணவிகாரம் அத்தியாயம்

 

[கருமத்தைச் செய்பவர் மூவகையாவர். சிலரோ, நூல்விதியை யறிந்தும் சிரத்தையில்லாமையினாலே, அந்த விதியைவிட்டுத் தங்கள் இச்சைப்படி சிறிது கருமத்தைச் செய்வர். அவர் எல்லாப் புருடார்த்தங்கட்கும் அயோக்கியராதலின் ஆசுரர் ஆவர். சிலரோ நூல்விதியையறிந்து மிகுந்த சிரத்தையுடையராய் அவ்விதி முறையே நிஷேதகருமத்தை நீக்கி விதித்த கருமத்தைச் செய்வர்; அவர் புருடார்த்தம் யாவற்றிற்கும் பொருந்திய வராதலின் தேவராவர் என்னும் இப்பொருள் 16 - வது அத்தியாய முடிவில் முடிக்கப்பட்டது. இனி எவர்கள் நூல்விதியை ஆலசியம் முதலிய தோஷ வசத்தால் விடுத்துத் தங்கள் தந்தை முதலான பெரியோர்களின் விவகாரத்தை யொட்டிச் சிரத்தையோடும் கெட்ட காரியத்தைவிட்டு விதித்த வற்றை யனுடிப்பார்களோ, அவர்களிடத்தில் ஆசுரதருமமும் தேவதா தருமமும் பொருந்தும்; நூல்விதியை விடுத்தல் ஆசுரதருமமாம்; சிரத்தை யோடும் விதித்ததைச் செய்தல் தேவதாதருமமாம். அவ்விரண்டு தருமத் தோடுங்கூடிய அவர்கள் ஆசுரர்களில் அடங்குவாரா அல்லது தேவதைகளி லடங்குவாரா என்னும் சந்தேகத்தை யடைந்த அருச்சுனன் ஸ்ரீ பகவானிடத்தில் வினாவுதல்.]

பார்த்தன்: - ஏ பரந்தாமா! எவர்கள் நூல் விதியை விடுத்துச் சிரத்தையோடுங் கூடினவராகித் தேவபூசை முதலியவற்றைச் செய்வார்களோ, அவர்கட்கு மீளவும் எந்த வகையான நிஷ்டையானது வரும்? சாத்துவிகமா? இராஜசமா? தாமதமா?

 

(தேவதா புருடர்கள் சுருதியாதி சாஸ்திரங்களை அனுசரிப்பர். அப்படி யனுசரிக்காமல் அவற்றை யாலசியாதியால் விடுபவரும், சிரத்தையற்ற ஆசுரர்போல ஆகாமல் பிதா முதலிய பெரியோரது விவகாரத்தைப் பின்பற்றுவதில் சிரத்தையோடு கூடியவரும் ஆகியோர் தேவபூசை செய்தால் அவர் நிஷ்டை யெத்தகையதெனலாம்? சாத்விகமானாலோ நல்ல இயல் பினராதலால் தேவரேயாவர்; இராஜததாமதமானால் இரண்டு இயற்கை யடையவராதலால் அசுரரேயாவர் என்பது அருச்சுனன் சம்சயமாம்)

 

[யாவர் சாஸ்திரவிதியை விடுத்துச் சிரத்தையோடும் தேவபூசை முதலியவற்றைச் செய்வரோ அவர் சிரத்தை சிறிது உடையவரேயாவர். ஏனெனில் சிரத்தை மூன்று விதமாம்; அவற்றுள், சாத்விக சிரத்தையோடு கூடியவர் தேவர்; இவர் சுருதி கூறியதில் அதிகாரியாவது மல்லாமல் அப்பயனையும் பெறுவர். இராஜத்தாமத சிரத்தையோடு கூடியவர் அசுரர்; இவர் சுருதி கூறியதில் அதிகாரியாகார் அப்பயனையும் அடையார் என்று பிரித்து அருச்சுனனுடைய சம்சயத்தை நீக்க இச்சித்தருளிய ஸ்ரீ பகவான் சிரத்தையை மூன்று விதமென்றருளுகின்றார்.]

 

பகவான்: - ஏ அருச்சுன! உடம்பை யபிமானித்தவர்கட்கு, அவ்வியற்கையாலுள்ள சிரத்தை சாத்துவிகமெனவும் இராஜசமெனவும் தாமத மெனவும் மூன்று வகையாம்; அவற்றை யினியியம்புவாம்.

 

சிரத்தையோடு கூடியவர் சாஸ்திரவிதியை விடுத்துத் தேவபூசை முதலியவற்றைச் செய்யின் மூன்று வகையாக மாறுவர். முன் ஜன்மத்திற் செய்த புண்ணிய பாவங்களின் சமஸ்காரம் இயற்கையாகும். அது மூன்று வகையாகும். அதனாலே சாத்விகம் இராஜசம் தாமதம் எனச் சிரத்தையும் மூவகையாம். முற்பிறப்பின் இயற்கைக்குத் தக்கபடி இப்பிறப்பிற் சிரத்தையான துண்டாகின்றது. இயற்கையை வாசனையென்றும் கூறலாம். சாஸ்திர அபேக்ஷையில்லாமல் எவ்லாவுயிர்கட்கும் பொதுவாக இயற்கையாலுண்டாம் சிரத்தையே மூன்று வகையாகும். முன்ஜன்ம வாசனையை சாஸ்திரஜன்னிய விவேகஞானத்தாலே மாற்றவும் முடியும். ஆனால், நூல் விதியைத் தாண்டியவர்க்கோ முடியாதாம். இம்மூவகைச் சிரத்தையை நீ கேட்டால் நீயே அவர்களிடத்தில் தேவத்தன்மையையும் அசுரத்தன்மை யையும் நிச்சயித்துக் கொள்ளலாம்.

 

[முன்னர் மனத்திலிருக்கும் முற்பிறப்பின் வாசனை வடிவகாரணத்தாலே சிரத்தை மூவகை யென்றருளப்பட்டது. இப்போது அந்த சிரத்தைக்கு முதற்காரணமாகிய அந்தக்கரணத்தின் வேற்றுமையால் சிரத்தையின் வேற்றுமையைக் கூறி யருளுகின்றார்.]

 

பகவான்: - ஏ பாரத! எல்லாப் பிராணிகளுக்கும் தங்களுடைய அந்தக்கரணத்தின் அனுசாரமாகவே சிரத்தையுண்டாகின்றது. சிரத்தை மயனாக இருத்தலினாலே எவன் எந்த சிரத்தையுடையவனோ அவன் அதற் கொத்தவனேயாவன்.

 

சத்துவகுணத்தை முக்கியமாகவுடைய சூக்ஷம பஞ்சபூதங்களினின்றும் உண்டாகிய அந்தக்கரணம் பிரகாசமயமாயிருத்தலின் சத்வமாம். தேவதை கட்கோ அதிக சத்துவத்தோடு கூடி அவ்வந்தக்கரணமிருக்கும். இயக்கர் கட்கோ இரஜோ குணத்தினாலே அழுத்தப்பட்ட சத்துவத்தோடு கூடி யவ்வந்தக் கரணமிருக்கும். பூதப்பிரேத முதலியவற்றின் அந்தக் கரணங்களோ தமோகுணத்தால் மூடப்பட்ட சத்துவ குணத்தோடு கூடியிருக்கும். மநுடருக்கோ அது அநேகமாகக் கலந்தேயிருக்கும். சாஸ்திரத்தாலுண்டாகிய விவேக ஞானத்தாலே இரஜதமகுணம் அமிழவே, அவனை உற்பூதசத்துவகுணி யெனலாம். எல்லாப் பிராணிகட்கும் தங்கள் தங்கள் மனத்தை யனுசரித்தே சிரத்தையுண்டாம். எம்மனத்தில் எக்குணம் மிகுந்து நிற்குமோ அந்தக் குணத்தின் பெயரையே சிரத்தையும் அடையும். சத்துவ குணமிகுந்திருந்தால் சாத்விக சிரத்தையையுடைய சாத்விகனாவான். இரஜோகுணமிகுந்திருந்தால் இராஜச சிரத்தையையுடைய இராஜசனாவன். தமோகுண மிகுந்திருந்தால் தாமச சிரத்தையை யுடைய தாமசனாவன். ஆகையால் சிரத்தையை யனுசரித்து அவனவனுடைய நிஷ்டையை யறிந்து கொள்ளலாம். (ஏ பாரத! என்று விளித் தமையாலே நீ மகாபரதவம்மிசத்திற் பிறந்தவனாகலின் சுத்த சாத்விகத்தை யுடைத்தாயிருக்கின்றா யென்று ஸ்ரீ பகவான் குறிப்பித்தருளியதாகும்.)

 

[அருச்சுனன் பகவானை நோக்கி! அவனவனுடைய சிரத்தையே அவனவனுடைய நிஷ்டையைக் காட்டும் என்று தாங்கள் திருவாய் மலர்ந்தருளினீர்களே, அது மெய்யே என்றாலும், அந்த சிரத்தையை யறியாமல் அந்த நிஷ்டையை அறிய முடியாதாகலின் அந்த சிரத்தையை எவ்வுபாயத்தாலறிவது என்று கேட்ப, அதற்கு ஸ்ரீ பகவான், அவனவனுடைய தேவ பூசை முதலிய காரியங்களைக் கொண்டு சிரத்தையையும் தெரிந்துகொள்ள லாமென்று கூறியருளுகின்றார்.]

 

பகவான்: - ஏ அருச்சுன! யாவர் தேவதைகளைப் பூசை செய்கின்றாரோ அவர் சாத்துவிகராவர். யக்ஷ இராக்ஷதரைப் பூசிப்பவர் இராஜதராவர். பூதங்களையும் பேய்களையும் பூசிப்பவர் தாமதர் ஆவர் என்று தெரிந்து கொள்வாய்.

 

சாஸ்திர ஞானமில்லாமல் இயற்கையான சிரத்தையினாலே வசுக்கள் ருத்திரர்கள் முதலிய சாத்துவிக தேவதைகளைப் பூசிப்பவர் சாத்துவிக ராவர்; சாஸ்திர ஞானமில்லாமல் இயற்கையான சிரத்தையாலே இரஜோ குணமுடைய குபேராதி இயக்கரையும், நிருதி முதலிய இராக்ஷதரையும், பூசிப்பவர் இராசதர் ஆவர். நல்லுணர்வில்லாமல் இயற்கையான சிரத்தையாலே தமோகுணமுடைய பிரேத்த முதலியவற்றைப் பூசிப்பவர் தாமத ராவர் என்று தெரிந்து கொள். தங்கள் தருமங்களினின்றும் நழுவிய பிராஹ்மணர் முதலினோர் இறந்தபின் காற்றுமயமான உடம்பை யெடுத்துக் கொள்ளிவாய்ப் பேய் முதலிய பிரேதங்களாவர். பிரேதம், பேய், எழுமாதாக்கள் முதலியோர் பூதகணமாவர். இதனாலே சாத்விகாதி மூவரையும் பகுத்துத் தெரிந்து கொள்ளலாம்.

 

[இவ்வண்ணம் சாஸ்திரத்தை விட்டவருடைய சாத்விக முதலிய நிஷ்டை தேவபூசை முதலியவற்றாலே தெரிவித்தருளப்பட்டது. இராஜத தாமதரும் பூர்வபுண்ணிய வசத்தால் சாத்துவிகராகி அதிகாரிகளாகலாம். ஆனால் பிடிவாதத்தாலும் முன் செய்த பாவமிகுதியாலும், கெட்டவர்களோடு சேர்ந்துவிட்டால் இராஜததாமத இயற்கையை விடமுடியாமல் நல்ல நெறியைவிட்டுக் கெட்ட மார்க்கத்திற் பிரவேசித்து இவ்வுலகத்திலும் அவ்வுலகத்திலும் வெறுந்துயரையேயடைவர் என்னும் அருத்தத்தை யருளிச் செய்கின்றார்.]

 

பகவான்: - ஏ அருச்சுன! யாவர் சாஸ்திரசம்மதமில்லாத கோரமான தவத்தைச் செய்வார்களோ, இடம்ப அகங்காரத்தோடு கூடியிருப்பார்களோ, காம இராகபலத்தோடு கூடியிருப்பார்களோ, தேகத்திலிருக்கும் பூதக் கூட்டத்தை இளைக்கச் செய்வார்களோ, சரீரத்துள்ளிருக்கும் பரமாத்மாவாகிய எம்மையும் கஷ்டப்படுத்துவார்களோ, விவேகமற்றவர் களோ, அவரை அசுர நிச்சயமுடையவரென்று தெரிந்துகொள்.

 

பகவான் பின்னுங் கூறுகின்றார்: -

 

ஏ பார்த்த! யாவர் அசாஸ்திரம் விதித்த கோரமாகிய தவத்தைச் செய்வரோ அவரை அசுர நிச்சயமுடையவரென்று அறிந்துகொள். அதாவது: இருக்கு முதலிய வேதங்கள் சாஸ்திரமாம்; அவற்றிற்கு வேறானது அசாஸ்திரமாம்; வேதத்தில் விதிக்கப்படாத தவம் அசாஸ்திரம் விதித்த தவமெனப்படும்; வேதவிரோதமாய பெளத்தாகமாதிகளிற் கூறும் காய்ந்த பாறையில் ஏறல் முதலிய தவம், சாஸ்திரமரியாதையைத் தாண்டியதாம்; கோர மாம்; செய்பவனுக்கும் அன்னியருக்கும் இடரையே தருவதாம்; அத்தகைய தவத்தைச் செய்பவர் அசுரரே யென்று சொல்லப்பெறுவர். இதே பிரகாரம், உலகமெல்லாம் என்னைத் தருமாத்மாவென்று சொல்லவேண்டும் என ஆசைப்பட்டுக் கண்டவரிடத்திலெல்லாம் தான் செய்யுந் தருமத்தைப் பேசுதலாகிய இடம்பத்தையும், எல்லாக் குணங்களிலும் யானே யெல்லாரைப் பார்க்கினும் மேன்மையான குணமுடையவன் என்னும் கெட்ட அபிமானமாகிய அகங்காரத்தையும், யாவருடையவரோ அவரும் அசுரர் எனப்படுவர். இச்சிக்கத்தக்கனவாய வீணாகான முதலியவை காமமாம்; அவற்றில் அதிக ஆசையே இராகமாம்; அதுவிஷயத்தில் எத்தனை துக்கம் வந்தாலும் பொறுத்துக் கொள்ளும் சாமர்த்தியமே பலமாம்; அல்லது வீணாகானாதி விஷயங்களில் அதிக ஆசையே காமமாம்; எப்போதும் இவற்றில் அதிக அபிமானம் வைத்து ஏங்குதல் இராகமாம்; இவ்விஷயங்களை நான் எப்படியாவது சம்பாதிப்பேன் என்னும் பிடிவாதமே பலமாம்; இந்த மூன்றோடும் கூடியவரும் அசுரரேயாவர். இந்தக் காரணத்தாலே பலமாகிய துக்கத்தைப் பார்த்த போதிலும், நீங்காமலே தேகத்திலிருக்கும், தேக அவயவ இந்திரியமனாதி வடிவமான பிருதிவி முதலிய ஐந்து பூதங்களையும், ஆகாராதிகளை அடியோடு வெறுக்கும் வாயிலாக, இளைக்கச் செய்பவர் யாவரோ அவரும் அசுரரேயாவர். இவ்வுடம்பிலே போக்தாவடிவமாக இருக்கும் பரமேசுரராகிய எம்மையும், இவ்வுடம்பையொடுக்கும் வாயிலாக ஒடுக்குபவர் யாவரோ, அல்லது சர்வாந்தரியாமி வடிவமாக இத்தேகத்திலிருக்கும் புத்தி விருத்திகளுக்குச் சாக்ஷிரூபப் பரமேசுரராகிய எம்மையும், எமது சாஸ்திரமாகிய ஆணையையும் தாண்டி யாவர் துன்பஞ் செய்வரோ அவரும் அசுரரேயாவர். இதனாலே யாவர் விவேகமற்றவரோ, யாவர் கூறிய வகையே இகலோகத்தில் எல்லாப் போகங்களும் கிடையாதவராகிப் பரலோகத்திலும் கீழானகதியை யடையும் புருடார்த்தமெல்லாமில்லாதவரோ அவரும் அசுரரே யாவர் என்று நீ தெரிந்துகொள். விளம்பியபடி விபரீத பாவனையோடு கூடி வேத அருத்தத்தை விரோதஞ் செய்பவர் மநுடராகத் தோன்றினாலும் அசுரத் தொழிலையே செய்பவராதலின் அவரை அசுரரூபமாகவே யறிந்து கொள். அவரோடு சேரவேண்டாம்; அவர் எண்ண மெல்லாம் அசுரத்தன்மையோடே கூடியிருக்கும். மநுடர்கள் அசுரர்களல்லாவிட்டாலும் அவர்கள் துஷ்டச் செய்கையாலே அசுரர்கள் ஆகின்றார்கள். (இதனாலே ஸ்ரீ பகவான் கெட்ட தொழிலாலே மநுடருக்கும் அசுரத்தன்மை வருதலால் அவற்றை விட்டுவிட வேண்டுமென் றருளியதா யிற்று.)

 

[முன்னர் சாத்துவிகர் தேவர் என்றும், இராஜசர் தாமதர் விபரீத புத்தியுடையராதலின் அசுரர் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டது; இப்போது, சத்துவ குணமுடையவரைக் கொள்ளும் பொருட்டும், ரஜதமகுண முடையவரைத் தள்ளும் பொருட்டும், ஆகாரம் யாகம் தவம் தானம் என்னும் நான்கினுடைய மூன்று வகுப்பை ஸ்ரீ பகவான் அருளிச்செய்கிறார்.]

 

ஏ அருச்சுன! எல்லாப் பிராணிகளுக்கும் பிரியமாகிய ஆகாரமும் மூன்று வகையாகும். அதுவல்லாமல் யாகமும், தவமும், தானமும் மூன்று வகையேயாம். அவற்றின் சாத்துவிகாதி பேதத்தைக் கூறக் கேட்பாயாக.

 

ஏ குந்திமைந்த! முன்னேயுபதேசித்த சிரத்தையே கேவலம் மூன்று வகை யென்பதாக வில்லை; பின்னையோ, யாவருக்கும் பிரியமான ஆகாரமும் சாத்துவிகாதி பேதத்தாலே மூவகையேயாம்; நான்கு வகையல்லவாம். ஏனெனின்? உலகத்திலுள்ள பொருள்கள் எல்லாம் முக்குண வடிவமாகவே இருத்தலின், வேறாக நான்காவது ஒரு வகுப்பு உண்டகாதாம். கடித்துத் தின்னும் தேன் குழல் முதலியவை, விழுங்கும் அன்னம் முதலியவை, சுவைத்துண்ணும் பழரசமுதலியவை, சாரத்தை உட்கொள்ளும் கரும்பு முதலியவை ஆகிய பசியை நீக்கும் கண்கண்ட பலத்தைத் தரும் ஆகாரம் மூன்று வகையாக இருப்பதேபோலத் தருமத்தை யுண்டாக்கும் வாயிலாக, கண்காணாத சொர்க்கத்தைத் தரும் யாகம் தவம் தானம் என்னும் மூன்றும் மூன்று வகையாகும். அக்கினி முதலிய தேவதைகளை யுத்தேசித்து நெய் முதலியவற்றை மந்திரஞ் சொல்லித் தீயில் விடுதல் யாகமெனப்படும். தேக இந்திரியாதிகளைக் காயவைக்கும் கிருச்சிர சாந்திராயணாதிகள் தவமெனப் படும். தன்னுடையவையாகிய பொன் பசு மனை முதலியவற்றைத் தன் னுடையவென்னும் அபிமானத்தைவிட்டு, மறையவர் முதலியவருக்குக் கொடுத்தல் தானமெனப்படும். இந்த ஆகார முதலிய நான்கையும் மூவகை யாகப் பிரித்துக் கூறுகிறேன், ஒருமையுடன் கேட்பாயாக:

 

[இப்போது ஆகாரதி நான்கின் மூவகைப் பேதத்தை ஸ்ரீ பகவான் விஸ்தாரமாக அருளிச் செய்யத் தொடங்கி முதலில் ஆகார பேதத்தை யருளுகின்றார்.]

 

ஏ அர்ச்சுன! ஆயுள், சத்துவம், பலம், ஆரோக்கியம், சுகம், பிரீதி என்னுமியாவற்றையும் விருத்தி செய்வதும், இரசமுடையதும், பசையுடையதும், திரமும், மநோரம்மியமும் ஆகிய ஆகாரம் சாத்துவிகர்க்குப் பிரியமுடையதாம்.

 

ஏ பார்த்த! நெடுங்காலம் வாழ்தல் ஆயுளாம். பெரிய பெரிய துக்கம் வந்தாலும் கஷ்டப்படாமலிருக்கும் மநோதைரியம் சத்துவமாம்; அல்லது உற்சாகமாம். தான் செய்யுங் காரியத்தில் ஆயாசம் வராமலிருக்கும்படியான சரீர வலுமையே பலமாம். சுரம் சூலம் முதலிய நோய்களில்லாமலிருத்தல் ஆரோக்கியமாம். உண்டபின்னர் உள்ளே கொள்ளும் சந்தோஷம் சுகமாம். உண்ணும் போது அருசியில்லாமல் போஜன விஷய அதிக ஆசை பிரீதியாம். இவையாவற்றையும் வளரச்செய்யும் ஆகாரம் சாத்விகர்க்குப் பிரிய முடையதாம். இனிப்பின் முக்கியத்தாலே மிகவும் சுவாதான ஆகாரம் இரசமுடையதாம். இயற்கையான நேயத்தாலும் இடையில் விடும் நெய் முதலிய நேயத்தாலும் விசேஷமான ஆகாரம் பசையுடையதாம். இரசம் முதலிய அம்சத்தாலே தேகத்தில் அநேக நாள் நிலைத்திருக்கும் ஆகாரம் திரமுடையதாம். கெட்ட நாற்றம் அசுத்தம் முதலிய எந்தத் தோஷமும் இல்லாமல் பார்த்த மாத்திரத்தினாலே மனதிற்கு மகிழ்ச்சிதரும் ஆகாரம் மநோரம்மியமாம் இவ்வகை நல்லகுணங்களோடு கூடிய நால்வகை யாகாரம் சாத்துவிகர்க்கே பிரியமுடையதாம். (சத்துவகுணம் வேண்டியவர் இம்மாதிரியான ஆகாரத்தையே புசிக்கவேண்டுமென்பது ஸ்ரீ கருணாமூர்த்தியினுடைய திருக்கருத்தாம்.)

 

ஏ அர்ச்சுன! கைப்பு, புளிப்பு, கார்ப்பு, மிகவெம்மை, காழ்ப்பு, காய்ந்தது, தாகஞ்செய்வது, துக்கசோகரோகமென்னும் மூன்றையுந் தருவது ஆகிய இவை இராஜசர்க்கே பிரியமாம்.
 

ஏ பார்த்த! வேம்பு முதலிய ஆகாரம் மிகவும் கைப்பாம். எலுமிச்சை முதலிய ஆகாரம் மிகவும் புளிப்பாம். உப்பு முதலிய ஆகாரம் மிகவும் கார்ப்பாம். உண்ணும்போது வாயும் கையும் வெந்து போவதான ஆகாரம் மிகவும் வெம்மையாம். மிளகாய் முதலிய ஆகாரம் மிகவும் காழ்ப்பாம். பசையில்லாத கருந்தினை முதலியவை மிகவும் காய்ந்தனவாம். மிகப் பெருந்தாபத்தைத் தரும் கடுகு முதலியவை மிகவுந் தாகஞ்செய்வனவாம். துக்கம் சோகம் நோய் மூன்றையும் தரும் ஆகாரங்கள் யாவையென்னில்: - அக்காலத்திலேயே உண்டாம் பீடை துக்கமாம்; இனிவருங் கெட்ட எண்ணம் சோகமாம்; சுரம் முதலியவை நோயாம். வாத பித்தாதி தாதுக்களை வேறுபடுத்தி மேலே கூறிய மூன்றையுங் கொடுக்கும் ஆகாரம் துக்க சோக நோயைத் தருவது என்று சொல்லப்படும். இந்த ஆகாரங்கள் எல்லாம் இரஜோகுணமுடையவர்க்கே பிரியமாம். இந்த ராஜச ஆகாரங்களைச் சத்து வகுணம் விரும்பியவர் தொடவே கூடாதென்பது ஸ்ரீ பகவானுடைய திருக்கருத்தென்று அறிந்து விட்டொழிக்கவேண்டும்.)

 

 

ஹே அர்ச்சுன! எந்த ஆகாரம் வேகாததோ, இரசமற்றதோ, தீநாற்ற முற்றதோ, ஊசியதோ, எச்சிலோ, அசுசியோ, அது தாமதர்க்கே பிரியமுடையதாம்.

 

ஹே பார்த்த! எவ்வாகாரம் பாதி வெந்ததாமோ, மிக வெந்துபோனதால் தீய்ந்து ருசியற்றதாமோ, எவ்வோதனாதி சமைத்து நெடும் போதானதால் தண்ணென்று குளிர்ந்ததாமோ, எதனது சாராம்சம் எடுக்கப் பெற்றதோ (மோர் முதலியவை), எது துர்க்கந்த முடையதாமோ, எது சமைத்து ஓரிரவு கழிந்தபின் உண்பவனுக்கு மயக்கத்தைத் தருவதாமோ, உண்ட உச்சிஷ்டமாமோ, அயோக்கிய அசுசிமாம் சாதிகளாமோ, அபத்தியமாமோ, இவையாவும் தாமதர்க்குப் பிரியமுடையனவாம். இத்தாமத ஆகாரத்தைச் சாத்துவிகர் அதிதூரத்திற்றள்ள வேண்டும். (இவ்வாகாரத்தில் துக்கம் சோகம் முதலியவற்றின் காரணத்தன்மை யாவர்க்குந் தெரிந்ததேயாதலின் பகவான் நேரே கூறியருளிலர். முறையாகச் சாத்விகத்தையும் இராஜசத்தையும் தாமதத்தையும் கூறியருளினர். பின்னிரண் டாகாரங்களில் முன்னதன் விரோதமேயுளதாம். மிகக்கைப்பாதிகள் மிகவுஞ்சுவையுடையன வாகாமையின் இரசிய (சாத்விக) விரோதியேயாம். பசையற்றது பசையுற்ற சாத்விக விரோதியேயாம்; மிகக்காழ்ப்பு மிகத்த கித்தலிரண்டும் தாதுவின் காப்பில் விரோதியாதலின் திரத்தன்மை விரோதியாம்; மிக வெம்மையாதி மனமகிழ்ச்சி விரோதியாம். நோயைக் கொடுப்பது, ஆயுள், சத்துவம், பலம், ஆரோக்கியம், என்னும் நான்கன் விரோதியாம். துக்கசோகத்தைக் கொடுப்பது, சுகப்பிரீதி என்பவற்றிற்கு விரோதியாம். உரைத்த வண்ணம் இராஜசத்திற் சாத்விகவிரோதம் வெளிப்படையாம். இவ்வாறு தாமதத்திலும் இரசமற்றது, வேகாதது, பழையது ஆகிய மூன்றும், முறையே இரசமாயிருத்தல், பசையுடனிருத்தல், திரமி கத்தருதல் என்னும் மூன்றன் விரோதியாம்; துர்க்கந்த முடையது, எச்சிலாவது, அசுத்தமாயிருப்பது மூன்றும் மனமகிழ்வுற்றதன் விரோதிகளாம். தாமதத்தில் ஆயுள் சத்துவாதி விரோதம் யாவருக்குந் தெரிந்ததேயாம். இராஜசத்திலோ கேவலம் கண்கண்ட விரோதமேயாம். தாமதத்திலோ கண்கண்ட கண்காணா விரோத மிரண்டுமாம். இவ்விசேடங்களை யெல்லாம் நுண்ணியமதியினாலே ஆய்ந்து தெரிந்துகொள்ள வேண்டும்.

 

[ஆண்டு முன்மூன்று சுலோகங்களான் ஸ்ரீ பகவான் முறையாகச் சாத்விகாதி மூன்றாகாரத்தையும் மொழிந்தருளினர். இப்போது மூன்று சுலோகங்களால் முறையே சாத்விகாதி மூன்று யாகங்களைக் கூறி அருளுவர்.]

 

ஹே பாரத! பலத்தில் ஆசையில்லாதவர் இந்தயாகம் இன்றியமை இயற்றத்தக்கது தான் என்று மனத்தில் துணிவையடைந்து சாஸ்திரத்தில் விதித்த யாக அநுஷ்டானத்தைச் செய்வர்; அந்தயாகம் சாத்விக மெனப்பெறும்.

 

ஹே கௌந்தேய! அக்கினி ஹோத்திரம், தரிச பூரணமாசம், சாதுர் மாசியம், ஜோதிஷ்டோமம், என்பதாதி யாகங்கள் இருவகையாம்; ஒன்றோ காமியமாம், மற்றொன்றோ நித்தியமாம். அவற்றுள், '' தரிசபூரண மாசங்களால் சுவர்க்கம் வேண்டியவன் வேட்க,'' என்பதாதி வசனம், சுவர்க்கபலனைப் பற்றி விதித்ததாதலின் காமியமாம்; இதுவோ எல்லா அங்கங்களும் பூர்ணமான யாகத்தாலே அனுட்டிக்கத்தக்கதே அல்லாது பிரதிநிதிவாயி லாயன்றாம். "சாங்காறும் எரியோம்புக'' என்பதாதி வசனம் பயனைப்பற்றாமலே கேவலம் வாழ்தலாதி நிமித்தப்பற்றாலே கூறினமையின் நித்தியமாம்; சர்வ அங்கங்களும் நிறைவிலா தொழியவே பிரதிநிதிகளாலும் அநுஷ்டிக்கத்தக்கதாம் இது. சர்வாங்க சம்பூர்ணமிலதேனும் பிரதிநிதியைக் கவர்ந்து எனக்கு நித்தியகருமம் இன்றியமையாது செய்யத் தக்கதேயாம், பிரத்தியவாய நீக்கப்பொருட்டல்லவா ஸ்ரீ வேதபகவான் இன்றியமையாது வாழ்தலாதி நிமித்தத்தானே நித்திய கரும விதானஞ் செய்துளார் என்பதாகத் தன்மனத்தெண்ணி மனத்தூய்மையை வேண்டிக் காமியகரும அனுஷ்டான விருப்பற்றவராலே நூலளவைக் கொண்டு துணிந்தயாக மியாது அநுஷ்டிக்கப்படுமோ அது நூற்படி மனத் தூய்மையின் பொருட்டு அநுட்டிக்கத் தக்க நித்தியமாகிய சாத்விகமாம்.

 

ஹே பாரத! மேலும், சொர்க்காதி பிரயோஜனத்தை யுத்தேசித்தும், இடம்பப்பொருட்டும், அனுஷ்டிக்கும் யாகம் இராஜசமென்றறிவாய்.

 

ஹே அர்ச்சுன! ஜீவர்களின் ஆசைக்கு விஷயமாய சுவர்க்காதி பய னைக்குறித்து எந்தமகம் செய்யப்பெறுமோ, சித்த சுத்தியின் பொருட்டு யாது அனுஷ்டிக்கப் பெறாதோ, யாவரும் என்னைத் தருமாத்மா என்று புகழ வேண்டும் என்றாசைவைத்து யாவருக்கும் தனது தருமான்மத் தன்மையை வெளிப்படுத்தல் இடம்பமாம்; இந்த டம்பப் பொருட்டும் எந்த யாகஞ் செய்யப்படுமோ, அது இராஜசமாம். ஒவ்வொரு யாகமோ இடம்பப் பொருட்டுச் செய்யாவிடினும் சுவர்க்காதி பயனைக் குறித்தே செய்யப்படும்; ஒவ்வொருமகமோ, சுவர்க்காதிகளை யுத்தேசியாமலே கேவலம் இடம்பப் பொருட்டே செய்யப்படும்; ஒவ்வொருமகமோ சொர்க்காதிபலப் பொருட்டும், இடம்பப் பொருட்டும் செய்யப்படும். இந்தப் பிரகாரம் திருஷ்ட அதிருஷ்ட திருஷ்டாதிருஷ்டப் பிரயோஜனத்தைக் குறித்து நூற்படி எந்தமகம் செய்யப்பெறுமோ அது இராஜசமாம். இந்த இராஜசத்தை விட்டுத் தொலைக்க வேண்டும். நீ பரதவம்சத்திற் பிறந்தவனாதலின் இராஜசகருமத்தை விட்டு விடுதல் தகுதியேயாம்.

ஹே அர்ச்சுன! நூல் விதியற்றதும், அன்னதான மற்றதும், மந்திய மற்றதும், தக்ஷிணையற்றதும், சிரத்தையில்லாததும், ஆகியயாசத்தை வேத முணர்ந்த பெரியோர் தாமதயாக மென்பர்.

 

ஹே பற்குன! எந்தயாகம் விதியில்லாததோ எந்தச் சாஸ்திரத்தில் அந்தயாகம் விதித்திருக்கின்றதோ, அதற்கு மாறாயதாமோ, எம்மகத்தில் மறையவர் முதலானவர்க்கு அன்னதான மிலையோ, எந்தயாகம் உதாத்தாதி சுரங்களோடும் ககாராதி வர்ணங்களோடும் கூடிய மந்திரங்களற்ற தாமோ, எந்தயாகம் தக்ஷிணையற்றதாமோ, இருத்துவிக்கு மறையவர் முதலியவரின் துவேஷாதியால் எந்தயாகஞ் சிரத்தையற்றதாமோ, அத்தகைய யாகத்தை வேதமறிந்த பெரியோர் தாமதயாகமென்பர். மேற்கூறிய விதியற்ற தன்மை முதலிய ஐந்து விசேடங்களுள் ஒவ்வொரு விசேடத்தோடு கூடியும் ஒவ்வொரு வகையாக யாகம் ஐந்து வகையாம்; அவ்வைந்து சிறப்போடுங் கூடியதாக ஆறாவது வகையொன்றாம். தனித்தனி இரண்டு, மூன்று, நான்கு விசேஷணங்களோடு கூடி யாகங்கள் அநேகவகையாம். முன்மொழிந்த இராஜசயாகத்தில் சித்தசுத்தியி னபாவமுளதேனும், சொர்க்கம் முதலிய பயன்களையடையச் செய்யும் தருமமாகிய அபூர்வம் அவசியம் உண்டாம்; ஏனெனின் அந்தயாகம் சாஸ்திரத்தை யனுசரித்தே செய்யப்படுவதாதலின்; இம்மகமோ எவ்வபூர்வத்தையும் உண்டாக்காதாம். கூறிய இரண்டினுள்ளும் இதுவே வேற்றுமையா மென்றறிந்து கொள்க.

 

[இம்மூன்று சுலோகங்களாலே ஸ்ரீ பகவான் முறையே சாத்துவிகாதி மூவகை யாகங் கூறியருளினர்; இனிச் சாத்துவிகாதி மூவகையான தவத்தைக் கூறியருளும் பொருட்டு முதலில் மூன்று சுலோகங்களாலே முறையே காயிக, வாசிக, மானத, பேதத்தாலே மூன்று வகையாகத் தவத்தைக் கூறியருளுகின்றார்.]

 

ஹே அர்ச்சுன! தேவர், துவிஜர், ஆசிரியர், அறிஞர், இவரியா வரையும் பூசித்தல் காயத்தூய்மை; ஆர்ஜவம், பிரஹ்மசரியம், அஹிம்சை என்னு மிவையாவும் காயத்தவமாம்.
 

ஹே பார்த்த! பிரஹ்மா, விஷ்ணு, சிவன், சூரியன், அக்கினி, துர்க்கை, கணபதி, என்பவர் தேவர்; நன்னடக்கையோடு கூடிய உத்தம மறையோர் துவிஜர்; தந்தை தாய் ஆசிரியர் என்னும் விருத்தர் ஆசிரியர்; வேதபாடப் பொருளையறிபவர் அறிஞர்; இத்தகையவர்கட்கு சாஸ்திர விதிப்பிரகாரம் சிரத்தை பக்திகளுடன் தகுதிப்படி நமஸ்காரம் சேவை தக்ஷிணை அன்னதானம் என்பதாதியைச் செய்தலே இவர்தம் பூசையாம். தண்ணீரும் மண்ணுங்கொண்டு காயமேவிய மலங்கழுவுதல் சௌசமாம். ஆர்ஜவமோ மனக் கோணலின்மை வடிவமென இனி ஸ்ரீபகவான், மானத தவத்திற் கூறியருளுவராதலின் இவ்விடத்தில் அதைக் கொள்ளற்க; மற்றோ, நூல் விதித்ததில் முயலுதலும் நிடேதித்ததில் நீங்குதலும் ஆகிய பிரவிருத்தியே ஆர்ஜவமெனக் கொள்க. சாத்திரநிடேத மைதுனத்தினின்றும் நீங்கல் பிரஹ்ம சரியமாம்; சாத்திரநிடேதமாகிய பிராணி கட்குப் பீடை செய்தலன்மை அகிம்சையாம்; இதனோடு கள்ளாமை கொள்ளாமையுங் கொள்க.  இவை பூசையே முதலியவை யெல்லாம் காயத்தவமாம்; காயமுக்கியமாயிருக்குங்கருத்தா முதலியோரால் செய்யப்படுந்தவம் காயிகமாம்; கேவலங்காய மாத்திரையானே செய்யுந்தவம் காயிகமன்றாம்.

ஏனெனின், இனிவரும் 18 - வது அத்தியாயத்தில் 14 - 15 - வது சுலோகங்களால், அதிஷ்டானம், கருத்தா, கரணம், சேஷ்டை, தெய்வம் என்னும் ஐந்தன்கண்ணெல்லாக் கருமங்களின் காரணத்தன்மை கூறப்பெறு தலினாலென் றறிந்து கொள்க. மேற்கூறிய ஐந்தன் விசேட அருத்தத்தை அச்சுலோக அருத்த நிரூபணத்திற் கூறுவாம். இவ்விதமான கிரமத்தைப் பின் வரும் வாசிக்கதவத்திலும், மாந்ததவத்திலும் கண்டுகொள்ள வேண்டும்.
யான் பிரஹ்மரூபன் என்னும் பிரஞ்ஞை யாவனுக் குரியதோ அவன் பிராஞ்ஞனென்னும் அறிஞனாவான். இருபிறப்பாளரினும் அறிஞனை ஸ்ரீ பகவான் தனியே கூறியருளியது எதற்காக வென்றால்: - முன்னநேகம் பிறப்புகளில் செய்த புண்ணியத்தால் கிடைத்த ஈசுரரது திருவருளாலே பிரஹ் மநிஷ்டத்தன்மை வடிவ அறிவுற்றதன்மை சூத்திராதியரிடத்தும் சம்பவித்தல் கூடும். விதுர் தரும வியாதர் என்பவராதியரிடத்தில் ஞான மிருந்தது ஸ்ரீ பாரதாதிகளில் வெளிப்படையேயாம். பெண்களாயினும் வணிகராயினும் சூத்திரராயினும் எம்மைத் தரிசிக்கிறவர்கள் பரமகதியை யடைவார்களென்று ஸ்ரீ பகவானே முன்னர் அனுக்கிரகித்தருளியுள்ளார். இத்தகைய அறிஞர்களாகிய சூத்திராதியரும் பூசிக்கயோக்கியரேயாவர். இவ்வர்த்தத்தைத் தெரிவிக்கும் பொருட்டே இருபிறப்பாளரினும் அறி ஞரை வேறாகக் கூறியருளியதாம்.

 

ஹே அர்ச்சுன! துயரைத்தராததும், உண்மையும், பிரியமும், ஹிதமும் ஆகிய வாக்கியம், வேதமோதல் என்பனயாவும் வாக்குமயத்தவமாம்.

 

ஹே கௌந்தேய! கொடூரத்தைச் செய்யாததும் அதாவது கேட்கப்பட்ட யாவருக்குமே துயரமீயாததும், மெய்யாயதும், அதாவது பிரமாண மூலத்தை யுடையதும் (வேறுபிரமாணங்களாற் பாதிக்கப்படாத பொருளை யுடையதும்), பிரியமும் அதாவது மொழியும் பொழுதே கேட்பவனுடைய செவிக்கு இன்பந் தருவதும், ஹிதமும் அதாவது மேல் பலந்தரும்போதும் கேட்டவனுக் கின்பமே தருவதும் என்கிற நான்கு சிறப்புகளோடு கூடிய தாகவே கூறும் வசனமிருந்தால் அது வாக்குத்தவமாம்; இவற்றிற் சிறிது குறைந்தாலும் வாக்குத் தவக்குறைவாம்.''சாந்தனா யாதியென் மைந்த நின்றனது, போந்த வேதந்தனைப் புகழ்பெறப்படித்தி, யாந்துணையோகம் அரிது பயிலுதி, வேந்தரும் புகழ வீற்றிருந்திடுவாய்'' என்பதில் இயம்பிய நான்கு விசேஷணங்களுமே யமைந்துள்ளனவாம். இதனால் இன்சொன் மொழிதலே பெரிய வாசிக தவமாம் நியமமாக இருந்து வேத அத்தியயனஞ் செய்தல் சிவராமாதி நாமங்களைச் செபித்தல் வாக்குத்தவமாம்.

 

ஹே பார்த்த! மனத்தின் றெளிவு, சௌமியத்தகைமை, மௌனம், உளத்தின் நிக்கிரகம், மனத்தூய்மை என்பனயாவும் மாநசதவமாம்.

 

ஹே பற்குன! விடயசிந்தை வியாகூலமற்றிருத்தல் வடிவமனத்தினது சுவஸ்தத்தன்மையே மனப்பிரசாதமாம்; எல்லாருக்கும் ஹிதத்தையே விரும்பலும், சாஸ்திரம் தள்ளியதை நினையாமையும் ஆகிய நன்மனத் தன்மையே சௌமியத் தன்மையாம். ஒருமையுடன் ஆன்மாவைச் சிந்தித்தல் வடிவநிதித்தியாசனமென்னும் முனித்தன்மையே மௌனமாம், அல்லது வாக்கை யடக்குவதற்குக் காரணமாகிய மனத்தின் அடக்கமே மௌனமாம். மனத்தினது எல்லா எண்ணங்களின் விசேடநிக்கிரக மென்னும் நிருவிகற்பசமாதியே ஆத்மவிநிக்கிரகமாம் = மனத்தை நன்கடக்கலாம். இருதயத்திற் காமக்குரோத லோபாதிரூப மலநீக்கமாகிய நற்றூய்மையே ஹிருதய சுத்தியாம்; அவ்விருதயத்தில் மீண்டும் காமாதி யசுத்தியுண்டாகா மையே தூய்மையில் மேன்மையாம். அயலாரோடு விவகாரகாலத்தில் கபடமுதலியவை யில்லா திருத்தல் மனத்தூய்மையாம். இவையாவுமே மானத்தவமாம்.

 

[ஆண்டு அருளிய 3 சுலோகங்களாலே காயிகாதி முத்தவங்கள் கூறி யருளப் பெற்றன; இனி முத்தவத்தின் சாத்து விகாதி முப்பேதத்தை ஸ்ரீ பகவான் 3 சுலோகங்களாற் கூறியருளத் தொடங்கல்.]

ஹே அர்ச்சுன! பல ஆசையில்லாத ஒருமையோடு கூடிய மனத்தை யுடையவர் அதிசிரத்தையாற் செய்த முன்மொழிந்த முத்தவங்களைப் பெரியவர் சாத்விக தவமென்பர்.
 

ஹே பார்த்த! பலேச்சையற்ற அதாவது காரியசித்தி அசித்திகளில் மகிழ்ச்சிவாட்ட விகாரமற்ற சமாகித சித்தமுடைய அதிகாரிகளாகிய நிட் காமர்களால் அப்பிராமாண்ய சங்கையாகிய களங்கமில்லாமல் உளதாம் ஆஸ்திக்கிய புத்திரூப சிரத்தையானே அனுஷ்டிக்கப் பெற்ற முன்மொழிந்த காயிகாதி முத்தவத்தை அருமறையறிந்த ஆன்றோர் சாத்வீகதவ மென்பர்.

 

ஹே அர்ச்சுன! மீண்டும் சற்காரமான பூஜையின் பொருட்டு இடம் பத்தானே செய்யப்பட்ட தவத்தையான்றோர் இராஜசமென்பர்; அத்தவ மிவ்வுலகிலேயே பயன்றருவதாம் சலமும் அத்துருவமுமாம்.

 

ஹே பாண்டவ! இத்தவத்தையுடைய பிராஹ்மணர் மிகவும் மேன்மையர் என அவிவேகிகள் செய்யுந்துதி சற்கார மெனப்படும்; அவிவேகிகள் செய்யும் எழுதன் முதலியவை மானமெனப்படும்; அவிவேகிகள் செய்யும் திருவடியபிடேகம் அர்ச்சனை தக்ஷிணைசெய்தல் பூசையாம். இவற்றின் பொருட்டுக் கேவலம் இடம்பத்தானே செய்யப்படுவதும், ஆஸ்திக்யபுத்தி ரூபசிரத்தையினானே செய்யப்படாததும், ஆகியதவத்தை நூலுணர் பெரியோர் இராஜசதவமென்பர். அத்தவம் கேவலம் இகலோக பலத்தையே யடைவிக்கு மல்லது பரலோகபலத்தை யடைவியாதாம். அது சலமாம் = மிக அற்பகால மிருக்கும் பலகாரணமாம். அது அத்துருவமாம் = பல காரணத் தன்மையின் நியம மின்மையதாம். அத்தவத்தைச் செய்பவர்க்கெல்லாம் நியமமாகச் சற்காராதி கிடைப்பது மில்லை; எவனேனும் ஒருவனுக்கே கிடைக்குமாதலின், இகலோக பலத்திலும் அது நியமமாக ஹேது வாகாதாம்.

 

ஹே கௌந்தேய! எத்தவமானது மிகப் பிடிவாதத்துடன் இவ்விந் திரியக் கூட்டத்தைத் துன்புறுத்திச் செய்யப்படுவதாமோ, அயற்பிராணியை விநாசஞ்செய்யும் பொருட்டுச் செய்யப்படுமோ அத்தவத்தை யான்றோர் தாமதமென்பர்.

 

ஹே அர்ச்சுன! அவிவேகத்தின் அதிசயத்தானே, செய்யப்பட்ட துராக்கிரகத்தால் தேக இந்திரியாதி சங்காதத்தைப் பீடை செய்து எத்தவஞ் செய்யப்பெறுமோ, வேறொரு பிராணியை விநாசஞ் செய்யும் பொருட்டு எத்தவஞ் செய்யப்படுமோ, அத்தவத்தைச் சாஸ்திரமுணர்ந்த பெரி யோர் தாமதமென்பர்.

 

[மேல் அருளிய மூன்று சுலோகங்களானே முறையாகத் தாமதாதி முத்தவம் மொழிந்தருளப் பெற்றது. இப்போது அருளுஞ் சுலோகங்கள் மூன்றாம் முறையாகத் தானத்தின் சாத்விகாதி முப்பேதத்தை ஸ்ரீபகவான் றிருவாய் மலர்ந்தருளல்.]

 

ஹே அர்ச்சுன! இத்தானம் அவசியமியற்றத் தக்கதாம்; இவ்வாறு துணிந்து எத்தானம் உத்தம க்ஷேத்திரத்திலும், உத்தமகாலத்திலும், உப காரியாகாத பாத்திரத்திற்குச் செய்யப் பொறுமோ அது சாத்விகமாம்.

 

சுருதிமிருதி வடிவசாஸ்திரம் இத்தானத்தை எனக்கு விதித்துளதாதலின், அதனாணையின் வயத்தான் இது என்னால் இன்றியமையாது இயற்றத் தக்கதாம் என்று நிச்சயித்து, அத்தானபல ஆசையை யகற்றிப் பொன் முதலியவற்றினது தானத்தை உத்தமமான இடத்தில் மேலான காலத்தில் அநுபகாரியான பாத்திரத்தில் இயற்றுவது சாத்துவிகதான மெனப் பெரியோர் கூறுவர். குருக்ஷேத்திராதி தீர்த்த பூமிகள் உத்தம தேயங்களாகும். சூரியகிரகணாதிகாலம் உத்தமகாலமாம். யாவன்றனக்கு ஒருகாலத்தினும் யாதொரு உபகாரமும் செய்யானோ அவன் அபகாரி யெனப்படுவன். வித்தை தவமிரண்டோடுங் கூடியவன் பாத்திரனாவன். அல்லது தன்னை யுந்தாதாவையும் காப்பவன் பாத்திரனாவன். எம்மறையவன் வித்தை தவங்களோடு கூடித் தன்னைக் காப்பதிலும் தாதாவைக் காப்பதிலும் சாமர்த்திய முடையவனாவனோ அவனே தாதாவின்றனாதியை யேற்றுக் கொள்ளலாம்; அவ்வாறாகாதவன் தானம் வாங்கலாகாது என்று சாஸ்திரமும் விதிக்கின்றது. இத்தகைய அநுபகாரிக்கு உத்தம தேசகாலத்தில் பயனை விரும்பாமல் சாஸ்திர விதிப்பிரகாரம் கொடுக்கும் பொன் முதலியவற்றின்றானம் சாத்விகதானமாம்.

 

ஹே அர்ச்சுன! பிரதியுபகாரத்தின் பொருட்டாகிலும், சுவர்க்காதி பயனை யுத்தேசித்தாகிலும், பச்சாத்தாபத்தோடு கூடியாகிலும் கொடுக்குந் தானம் இராஜததானமாம்.

 

ஹே கௌந்தேய! எந்தத் தானமானது பிரதியுபகாரத்தை யுத்தே சித்துக் கொடுக்கப்படுமோ, அதாவது இந்தப் பிராஹ்மணனுக்கு யான் தானம் கொடுப்பேனாயின், ஒரு சமயத்தில் எனக்கு அவன் பதில் உபகாரஞ் செய்வான் என்னும் புத்தியினாலே கேவலம் கண்கண்ட பயன் சித்தித் தற்பொருட்டே எத்தானமானது கொடுக்கப்படுமோ, அல்லது, இத்தானத்தாலே எனக்குச் சுவர்க்கம் உண்டாகுக வென்னும் உத்தேசத்துடன் எத்தானங் கொடுக்கப்படுமோ, இவ்வளவு தனத்தையான் ஏன் செலவழித்தேன் எனப்பச்சாத்தாபத்துடனே எத்தானங் கொடுக்கப்படுமோ, அந்த தானத்தைப் பெரியோர் இராஜததான பென்பர். சாத்விகதானத்தினும் இராஜததானத்திலுள்ள வேற்றுமையை யூகித்தறிந்து கொள்க.

 

ஹே அர்ச்சுன! எத்தானம், அதேசத்தில் அகாலத்தில் அபாத்திரர் பொருட்டுச் சற்காரமில்லாமல் அவமதிப்போடும் கொடுக்கப்படுமோ அத்தானம் ஆன்றோரால் தாமததான மெனப்படும்.

 

ஹே பார்த்த! இயல்பாகவேனும், துஷ்டர்களின் சம்பந்தத்தாலேனும் பாவகாரணவடிவ அசுத்தமான இடம் அதேசமாம். புண்ணியத்தின் காரணமாகப் பிரசித்தமில்லாத காலம், அகாலமாம்; அல்லது சௌசமற்ற காலம் அகாலமாம். அத்தகைய தேசகாலத்தில் வித்தை தவமில்லாத நட விடாதி அபாத்திரர் பொருட்டுப் பொன் முதலிய கொடுக்கு மத்தானம் தாமதமெனப்பெறும். உத்தம தேசகால பாத்திரங் கிடைப்பினும் சற்கார மில்லாமற் செய்யுந்தானம் = பிரியவசனம், பாதப்பிரக்ஷாளனம், சந்தனம் புஷ்பம் அக்ஷதை முதலியவற்றாலே பூசை என்பதாதி சற்காரத்தாலே யன்றிச் செய்யுந்தானம், அவமதிப்போடு கொடுக்குந்தானம் அதா வது தானபாத்திரரூப மறையவரை ஆதரவு செய்யாது கொடுக்குந்தானம் ஆகிய இதனை (பெரியோர்) தாமதமென்பர்.

 

[ஆண்டு, முற்பிரசங்கத்தில், ஆகாரம், யாகம், தவம், தானம் என்னும் நான்கினுக்கும் சாத்விகாதி மூவகைப் பேத்ததைக் கூறியருளி அச்சாதவி காதி ஆகாராதிகள் இன்றியமையாமல் கொள்ளத் தக்கன வெனவும், அவ்விராஜதாதி ஆகாராதிகள் விள்ளத்தக்கன வெனவும் திருவாய் மலர்ந்தருளப் பெற்றன. அவற்றுள் ஆகாரமோ கேவலம் பசி நீக்க வடிவ கண்கண்ட அருத்த சித்தியையே யாக்குமல்லாமல், அறத்தை யாக்கும் வாயிலாய்த் துறக்காதிரூப அதிர்ஷ்ட அருத்த சித்தியை யாக்காதாமாதலின் ஏதேனும் அங்கமிலதேனும் ஆகாரபல அபாவசங்கையாகாதாம். தரும உற்பத்தி வாயிலாக மனத்தூய்மை வடிவ அல்லது சுவர்க்காதிவடிவ அதிர்ஷ்ட அருத்த அடைவு செய்யும் யாகம் தவம் தானம் என்னும் மூன்றற்குமோ யாதேனு மொருமந்திராதிரூப அங்கமிலாமையானே தரும் அபூர்வ முண்டாகாமற் பலமிலாமையேயாம். இதனானே சாத்விகயாகாதிகளில் பலமில்லாமையேயாம்; ஏனெனின், யாகாதியைச் செய்பவர்க்குப் பிரமாதத்தின் மிகுதியாலே யாதேனுமொரு அங்கங்கெடுதலே யாமாதலின், அக்கெடுதலை நீக்கும் பொருட்டு ஓம் தத்சத்தென்னும் ஸ்ரீ பகவந்நாம உச்சாரணரூப சாமான்ய பிராயச்சித்தத்தைப் பரமதயா நிதியாகிய ஸ்ரீ பகவான் அதிகாரிகட்கு உபதேசித்தருளல்.]

 

ஹே அர்ச்சுன! ஓம் தத் சத்தென மூன்றவயவப் பரப்பிரஹ்மத்தின் நாமம் ஸ்மரிக்கப் பெற்றுளது. அந்நாமத்தாலே சிருஷ்டியின் ஆரம்பகாலத்தில் பிரஜாபதியானவர், பிராஹ்மணாதி கர்த்தாவையும், காரணரூப வேதத்தையும், கர்மரூப யாகத்தையும் உண்டாக்கினர்.

 

ஹே பார்த்த! அகார உகார மகார மென்னும் மூன்று அவயவங்களோடு கூடிய ஒரே பிரணவ நாமம் பரப்பிரஹ்மத்திற் காவதேபோல ஓம் தத்சத்தென்னும் மூன்றவயவமுடைய ஓம் தத்சத்தென்னும் ஒரேநாமம் பரப்பிரஹ்மத்திற்கு வேதாந்த மறிந்தவர்கள் விளம்புவார்கள். முற்காலத்தில் வேதாந்தமறிந்த பெரிய இருஷிகள் கூறிய பிரகாரம் ஸ்மரித்ததாலே இப்போதிருக்கும் ஞானிகளும் அங்ஙனமே அவசியம் ஸ்மரிக்க வேண்டும். அந்த நாமத்தைஸ்மரித்தலாலே அதிகாரிகள் இயற்றும் யாகாதிகள் இடை யூறுடையனவாகாவாம் என்பது. ஸ்மிருதியிலும் காணலாம். யாகாதியைச் செய்பவனுக்கு யாதேனும் ஒரு பிரமாதவயத்தால் அவற்றுள் மந்திராதிரூப அங்கம் பங்கப்படின் அது ஸ்ரீ மகாவிஷ்ணுவின் ஸ்மரணத்தாலே பரிபூர்ணமாம் எனச் சுருதிபகவதி கூறியுள்ளாள். வேதவேத்தாக்களாகிய ஆன்றோர் எவ்வெவ் வைதிக கருமத்தைத் தொடங்குகின்றார்களோ அவ்வதன் றொடக்கத்தில் ஓம் தத்சத்தென்னும் நாமத்தை ஸ்மரித்தே அவ்வதனைச் செய்வார். ஆகையினால் சிஷ்டாசார ரூபப்பிரமாணத்தாலும் இடையூறு நீங்கும் பிரயோஜனம் அதற்குத் துணியப்படும். மேற் கூறிய நாமஸ்மர ணத்தினால் யாகாதிகளின் விக்கினம் நீங்குவதாகும் என்பதான அதன் சாமர்த்தியத்தைத் தெரிவித்தருளுதற்கு ஸ்ரீ பகவான் அந்நாமத்தைத் தோத்தரித்தும் அருளினார்: - சிருஷ்டியின் ஆதிகாலத்தில் பிரஜாபதியாகிய பிரஹ்மாவானவர் பிராஹ்மண க்ஷத்திரிய வைசிய கருமகருத்தாக்களையும், காரணரூப வேதத்தையும், கரும ரூப யாகத்தையும், உண்டாக்கியது ஓம் தத்சததென்னும் பிரஹ்ம நாமத்தைத் தியானித்தேயாம். ஆகலின் யாகாதி சிருஷ்டியின் காரணமாதலின் இம்மகாமகிமை வாய்ந்த பிரஹ்மத்தின் நாமம் இடையூறு நீக்குவதில் ஆற்றலுற்றதேயாம்.

 

[இப்போது ஸ்ரீ பகவான், அகாராதிமூன்று அவயவங்களை வியாக்கியானித்து அவற்றின் சமுதாயரூப ஓங்காரத்தின் வியாக்கியானமாவதே போல ஓம் தத்சத்தென்னும் மூன்று அவயவங்களின் வியாக்கியானஞ் செய்தருளி அவற்றின் சமுதாயரூப ஓம் தத்சத்தென்னும் பிரஹ்மநாமத்தை நான்கு சுலோகங்களாலே வியாக்கியானித் தருளுகின்றார். அந்தப் பிரஹ்மநாம ஸ்துதியின் அதிசயத் தன்மையின் பொருட்டு ஆண்டு முதலில் ஓங்கார சப்தவியாக்கியானம் செய்தருளல்.]

 

ஹே அர்ச்சுன! அக்காரணத்தினாலே ஓம் என்னும் சப்தத்தை யுச்சரித்தே வேதவேத்தாக்களின் விதிசாஸ்திரம் விளம்பிய யாக தான தவ வடிவக் கிரியை நிரந்தரம் பிரவிருத்திக்கும்.

 

ஹே பற்குன! சுருதிகளில் ஓமென்னும் சப்தம் பிரஹ்ம நாமமென வெளிப்படையாதலின் ஓமென்பதை யுச்சரித்தே வேதவேத்தாக்களின் விதி சாஸ்திரம் விளம்பிய யாக தான தவ வடிவ எல்லாக் கிரியையும் எப்போதும் பிரவிருத்திக்கும்; அதாவது வேதவேத்தாக்கள் எவ்வெச்சாஸ்திர விகிதயாக தவ தானக்கிரியைச் செய்வரோ அவ்வக்கிரியையின் முன் ஓ மென உச்சரித்தே பின் அவ்வத்தொழிலைச் செய்வர் என்பதாம். அவ் வோங்கார உச்சாரண மகிமையாலே அந்த மகான்களின் யாகாதி நற்றொழில்கள் விக்கினமில்லாமல் நன்கு முடியும். ஆகையால், அம்மூன்றனுள் ஒன்றாய ஓங்காரத்தை யோதினும் எல்லா இடையூறுகளும் நீங்கும் என்றால் அம்மூன்றையும் சேர்த்து உச்சரித்தால் விக்கினம் மக்கினமாமென்பதில் மீண்டுங் கூறத்தக்கது யாதுளது.

 

[முன் சுலோகத்தில் காமிய யாகாதி கருமங்களினும் நிட்காம யாகாதி கருமங்களினும் சாதாரணத் தன்மை ரூபத்தாலே ஓமென்பதற்கு உபயோகம் அருளப்பெற்றது; இப்போது முமுக்ஷக்கள் யோகத்தைக் கூறி யருளுபவராகிய ஸ்ரீ பகவான் அதற்கு வியாக்கியானம் செய்தருளல்.]

 

ஹே அர்ச்சுன! மோக்ஷ இச்சையையுடைய புருடர் தத்தென்னும் சப்தத்தை யுச்சரித்துப் பயனை இச்சியாது நானாவகையாய யாக தவ தான ரூபக்கிரியைகளைச் செய்கின்றனர்.
 

ஹே பாண்டவ! தத்வமசி யென்பதாதி சுருதிகளில் வெளியாயுள்ள தத் என்னும் பிரஹ்ம நாமத்தை யுச்சரித்தே பயனை விரும்பாமல் முமுக்ஷக்கள் தமது சித்தசுத்தியின் பொருட்டு பலவகையாய யாகாதி கிரியையைச் செய்வர்; தத்சப்த உச்சாரண மகிமையாலே அவர் தமக்கு யாகாதிகள் யாவும் இடையூறின்றி முடியுமாதலின் இந்தத் தத்சப்தமும் மிக மேன்மையதா மென்றறிந்துகொள்.

 

[இப்போது ஸ்ரீ பகவான் மூன்றாவது சத்சப்தத்தை இருசுலோகங்களால் வியாக்கியானித்தருளுகின்றார்.]

 

ஹே பார்த்த! சத்பாவத்திலும் சாது பாவத்திலும் பெரியோர் சத் தென்னும் சப்தத்தை உச்சரிக்கின்றனர்; புகழப்பெற்ற கருமத்தின்கண்ணும் சத் சப்தத்தை யுச்சரிக்கின்றனர்.

ஹே அர்ச்சுன! சத்தே சௌமிய இத்தனைக்கு முதலில் என்பதாதி மறைகளில் வெளியாய சத்தென்னும் பிரஹ்மத்தின் நாமத்தை நூலுணர் பெரியோர் சற்பாவத்தின் கண்ணுச்சரிக்கின்றனர்; அதாவது எப்பொருட்டு இருப்பின்மைச் சங்கையுண்டாமோ அதற்கு இருப்பு இருப்பதில் சத் சப்தத்தை யுச்சரிக்கின்றனர். சாது பாவத்திலும் சத்சப்தத்தை யுச்சரிப்பர்; அதாவது, எதற்கு அசாதுத்தன்மை சங்கையுண்டாகுமோ அதன் சாதுத்தன்மையிலும் அதனை யுச்சரிக்கின்றனர். ஆகலின் இந்தச் சத்சப்தம், இடையூற்றை நீக்கி யாகாதிகளைச் சாதுத்துவ மாக்குவதற்கும், அவற்றின் பயனை யிருத்தற்கும் ஆற்றலுடையதாம். சற்பாவத்திலும், சாதுபாவத்திலும் இச்சத்சப்தம் உச்சரிக்கப்படுவதே போலத் தடையில்லாமல் விரைவாகவே இன்பத்தை யுண்டாக்குவதாகிய விவாகாதி மங்கள காரியத்தும் பெரியோர் சத் சப்தத்தை யுச்சரிப்பராதலின், இச் சத்சப்தம் இடையூற்றை நீக்கி மகமுதலியவற்றிற் றடையில்லாமல் விரைவாகவே பலத்தை யுண்டாக்குந் தன்மையைச் சம்பாதிப்பதில் ஆற்றலுடையதாமாதலின் இச் சத்சப்தம் மிகவும் மேன்மையுடையதாம்.

 

அல்லாமலும் பகவான் கூறுவது: - ஹே அர்ச்சுனா! பின்னரும், யாகத்திலும், தவத்திலும், தானத்திலும் இருக்கும் நிலையும் சத்தேயாகும். அவ்வர்த்த சம்பந்தமாகிய கருமமும் சத்தே.

 

ஹே கௌந்தேய! யாகத்திலும், தபசிலும், தானத்திலும் எவ்வுண்மையிருக்கின்றதோ, அதாவது தற்பரமாக எவ்வடிவ நிஷ்டையுளதோ அதனிருப்பும் அறிஞர்களாற் சத்தெனப்படும். அவ்வார்த்த சம்பந்தமாகிய கருமமும் சத்தே. மக முதலிய அர்த்தங்களில் உண்டாகிய அவற்றின் அனுகூல கருமவிசேஷம் அவ்வர்த்த சம்பந்தமாம். அல்லது எந்தப் பிரஹ்மத்திற்கு இச்சத்தென்னும் பெயர் சொல்லப் பெற்றதோ அதுவே அர்த்தம்; விஷயம் எதற்கோ அது அவ்வர்த்தமாம். இத்தகைய சுத்தப்பிரஹ்ம் விஷயஞானத்தின் அனுகூலகருமம் அல்லது ஸ்ரீ பகவதர்ப்பண புத்தியாலே செய்யுங்கருமம் அல்லது பரமேசுர அடைவின் பொருட்டுச் செய்யுங்கருமம் அவ்வர்த்த சம்பந்தகருமமாம். இக்கருமத்தையும் அறிஞர் சத்தெனக் கூறினர். சத்தென்னும் பெயர் யாகாதிகரும இடையூறு நீக்குதற்பொருட்டுச் சமர்த்துடையதாதலால் மிகவு மேன்மையதாகும். ஓம் தத்சத் என்னும் பிரஹ்ம நாமத்தின் ஒவ்வொரு ஓங்காராதிரூப அவயவத்திற்கும் இவ்வித பெருமையான திருந்தால், அவையாவுங் கூடியதற்கு, அத்தியந்த அற்புதமகிமையுள்தாமெனக் கூறவேண்டுவ தென்னே?

 

அருச்சுனன் வினா: - ஹேபகவானே! ஆலசிய முதலிய தோஷத்தாலே, நூல் விதித்த விதியை விடுத்துச் சிரத்தையுடையவனாகிக் கேவலம் பெரி யோரின் விவகார மாத்திரத்தாலே மகமுதலியவற்றைச் செய்பவன் பிரமாதவசத்தால் அவற்றில் இடையூறடைந்து ஓம் தத்சத் தென்னும் பிர்ஹ்ம நாமத்தாலே அந்த இடையூற்றின் நீக்கம் உளதாயவழி, சிரத்தை யில்லாமையாலே நூல்விதித்த விதியைப் பரித்தியாகித்துத் தனது இச்சையாலே சிற்சில யாகாதிகளைச் செய்யும் ஆசுரனுக்கும் அந்நாமத்தாலே இடையூறு கழிந்துவிடு மாதலின், யாகாதிகளின் சாத்விகத் தன்மைக் கேதுவாகிய சிரத்தைக்கு யாதொருபயனு மில்லையல்லவா?

 

பகவான் விடை: - ஹே பார்த்த! அசிரத்தையுடன் ஹோமஞ் செய்வதும், தானஞ்செய்வதும், தவஞ்செய்வதும், மற்றெக்கருமஞ் செய்வதும் ஆகியயாவும் அசத்தென்னப்படும். அதுபற்றி யல்லவா சிரத்தையில்லாத கருமம் பரலோகத்திலும் இகலோகத்திலும் பயன் கொடாமற் போகின்றன. ஹேபற்குன! அவ்வண்ணஞ் சிரத்தையில்லாமல் அக்கினியிற் செய்யும் ஹவனமும், பிராஹ்மணர்க்கீயும் தங்க முதலியவற்றின்றானமும், காயவாக்குக் கருத்தென்னும் மூவகையாலாய தவமும், இவற்றினும் வேறாகிய துதி நமஸ்காராதிகளும், இவை போன்ற மற்றெவையுமே அசத்தெனப்படும்; அதாவது அக்கருமம்யாவுமே அசாதுவேயாம்; ஆகையால் சிரத்தையில்லாமற் செய்த அக்கருமங்கட்கு ஓம் தத் சத் தென்னும் நாமத்தாலே சாது பாவஞ் செய்யப்படுவதில்லையாம், கல்லின் மேல் முளையுண்டாகத் தகுதியேயற்றது போற் சிரத்தையற்ற கருமங்களில் எல்லாவகையாலும் சாதுத்தகைமையாகிய யோக்கியதையே யுண்டாகாதாம். ஆகவே அவற்றில் ஓம் தத்சத் தென்னும் நாமத்தாலே சாது பாவம் ஒருகாலும், சம்பவியாதாம். சிரத்தையில்லாத கருமம் எந்த ஹேதுவினாலே அசத்தெனப்படுமெனின், அந்த ஹேதுவைச் சொல்லுகிறேன் கேட்பாயாக: அசிரத்தையிலே செய்த கருமம் பரலோகத்திலும் பயனையளியாதாம்; ஏனெனின், சிரத்தையற்ற கருமம் இடையூறு உடையதாகலின் தருமரூப அபூர்வத்தை யுண்டாக்காதாம். அபூர்வமில்லாமல் துறக்கம் எய்தாதல்லவா? மற்றும் இகலோகப் புகழ்ச்சிப் பயனும் இல்லையாகும்; ஏனெனின், சிரத்தையில்லாதவனைச் சிட்டர் துதியார், நிந்தையே செய்வராகலின் சிரத்தையில்லாது செய்யும் யாகாதிகள் இக பரலோகப் பயனில்லாதவையே. ஆகையால் மனத்தூய்மையின் பொருட்டு அதிகாரிசாத்விக சிரத்தையாலே சாத்விக யாகாதிகளைச் செய்தல் வேண்டும் சிரத்தையுடன் செய்த அவற்றின் கண்ணே யிடையூறுண்டாகிலோ ஓம் தத்சத்தென்னும் பிரஹ்ம நாமத்தை யுச்சரித்து யாகாதிகளை இடையூறற்றவை யாக்க வேண்டும். இந்த 17 - வது அத்தியாயத்தில் நிர்ணயிக்கப்பட்ட பொருள், ஆலசிய முதலிய தோஷத்தால் நூல் விதியை விடுத்துச் சிரத்தையுடன் தந்தை, தந்தையின் றந்தை முதலிய பெரியவரது விவ காரமாத்திரையாலே யாகாதிகளில் முயன்று சாஸ்திரவிதியை விடுதலாகிய ஆசுரதருமம், சிரத்தையோடுங் கூடிய கருமங்களின் அனுட்டானரூப தேவதருமம் என்னும் இரண்டோடுங் கூடலின், அவற்றைச் செய்வோர் அசுரரா? தேவரா? என்னும் அர்ச்சுனனது சம்சய விஷயத்திலடங்கியவருள் யாவர் இராஜத தாமத சிரத்தை வாயிலாக இராஜததாமத ரூபயாகாதிக ளையே செய்வரோ அவர் அசுரராவர்; அவர் சாஸ்திரமறைந்த ஞானசாதனங்களின் அதிகாரியரல்லர்; யாவர் சாத்விக சிரத்தை வாயிலாகச் சாத்விக யாகாதிகளையே செய்வரோ அவர் தேவராவர்; அவர்கள் சாதனங்களின் அதிகாரியர் ஆவர் என்று ஸ்ரீபகவானானவர் ஈண்டுச் சாத்விகாதி மூவகைச் சிரத்தை வாயிலாக ஆகாராதிகளின் சாத்விகாதி மூவிதத்தைச் சித்தஞ் செய்தருளினர் என்பதாம்.


 பதினேழாவது அத்தியாயம் முற்றிற்று.

 

18 - வது அத்தியாயம்

 

[முன்னர் 7 - வது அத்தியாயத்திற் சிரத்தையின் சாத்விகாதிமூவகை வேற்றுமையையும், ஆகாறயாக தவதானம் என்னும் நான்கினது சாத்விகாதி மூவகைப் பேதத்தையும், கருமிகளின் சாத்விகாதி மூவகைப் பேதத்தையும் கூறியருளினர். சாத்விகர்களைக் கவரும்பொருட்டும், இராஜசதாமசர்களை விடற்பொருட்டும், இப்போது சந்யாசத்தின் சாத்விகாதி மூவகைப் பேதத்தைக் கூறியறுளிச் சந்யாசிகளின் மூவகைப் பேதத்தையும் அவசியங் கூறியருளல் வேண்டும். ஆனம சாக்ஷாத்காரத்தின் பின்னர்ச் செய்யத் தக்கதாகிய பலபூதசர்வ கருமங்களின் வித்வத் சந்நியாசமோ முன் 14 -வது அத்தியாயத்திற் குணாதீதரூபமாய் வியாக்கியானித்தருளப்பெற்றது; ஆகையால் பலமாய வித்வத் சந்நியாசமோ சாத்விகாதி மூவகைப் பேதத்தகுதிய தாகாதாம்; ஆன்மஞானத்தின் முன் அதனையடைதற் பொருட்டுச் சர்வ கருமங்களின் சந்யாசத்தை ஆன்மஞான மடைய வேண்டு மென்னு மிச்சையுடையவன் வேதாந்த வாக்கியங்களின் ஆராய்ச்சியின் பொருட்டுச் செய்வன்; அது விவிதிஷா சந்யாசமாம்; அதுவும், "இக்கரு மகாண்டரூபவேதம் திரைகுண்யத்தை விஷயஞ்செய்வதாம். நீ அத்திரை குண்யமற்றவனாகுதி'' என்பதாதிய திருவாக்குக்களாலே இரண்டாவது அத்தியாயத்தில் நிர்க்குணரூபமாக வியாக்கியானித் தருள் பெற்றதாதலின் சாத்விகாதி மூவகைத் தாக்கத் தகுதியதாகாதாம்; பலவடிவ வித்வத் சந்நியாசமும் விதிஷாசந் யாசமும் குணாத்தசன்யாசம் எனப்பெறும். ஆன்மசாக்ஷாத்காரத்தை யடையாதவர்கள், அதனிச்சைவடிவ விவிதிஷையு முண்டாகாதவர்கள்; தத்துவ வித்தன்மையற்ற ஜிஞ்ஞாசுத்தன்மை யில்லாதவர்களின் கருமசந்தியாசம் ''அவன் சந்நியாசியும் யோகியுமாவன்'' என்பதாதிய திருவாக்குக்களாலே முன் கௌணசந்யாசமாய்க் கூறியருளப் பெற்றதாகும்; அதனது சாத்விகாதி முப்பேதங்கூடும்; அதனை விசேடமாயறியும் வேட்கையனாகிய அருச்சுனன் ஸ்ரீ பகவானை வினாதல்.]

 

அருச்சுனன் கூறல்: - ஹே மகா பாகுவாகிய தேசிகோத்தமரே! ஹே இருஹிகேசரே! ஹே கேசியைக் கொன்றவரே! சந்யாசத்தினதும் தியாகத்தினதும் சொரூபத்தை யான் தனித் தனியறிய விரும்புகிறேன். ஆகையா லென்மீதுள்ள தயையா லவற்றைக் கூறி யருள வேண்டும்.


 

ஹே பகவானே! எவர்கட்கு ஆன்மஞான முண்டாகவில்லையோ, அதனிச்சை வடிவ விவிதிஷையு முண்டாகவில்லையோ, அத்தகைய கருமாதி காரி செய்த சிறிது கருமத்தைக் கவர்ந்து சிறிதின் பரித்தியாகமியா தோவது தியாக அம்சரூப குணயோகத்தாலே கெளணீ விருத்தியாகச் சந்யாச மெனப்படும். இங்ஙனம் சித்த சுத்தியின் பொருட்டு அறிஞனல்லாத கரும் அதிகாரி செய்த எல்லா வகையாலும் கருமங்களின்றி யாகரூப மில்லாததும் ஏகதேச தியாகமுமாகிய சந்யாசம் எஃதாமோ அதன் சொரூபத்தைச் சாத்விகாதி முப்பேதத்தாலே யறிய விரும்புகின்றேன்; தியாகத்தின் சொரூபத்தையும் அவ்வாறே யறிய ஆசைப்படுகின்றேன். சந்யாசம் தியாகம் என்னும் இரண்டு சப்தமும் கடபட சப்தங்களைப் போல வேறு வேறு பொருளைக் கூறுவனவா? அல்லது கடகலச சப்தங்களைப் போல ஒரே பொருளைக் கூறுவனவா? அவற்றுள் முதற் பக்ஷத்தை யங்கீ கரிக்கிலோ தியாக வடிவத்தைச் சந்யாசத்தினும் வேறாக்கி யறிய யான் இச்சிக்கின்றேன். இரண்டாவது பக்ஷததை யங்கீகரிக்கிலோ அவ்விரண்டன் பிரவிருத்தியின் நிமித்த பூதமாகிய உட்பட்ட உபாதியின் பேத மாத்திரம் கூறி யருளவேண்டும் அவ்விரண்டனுள் ஒன்றன் வியாக்கியானஞ் செய்தே இரண்டன் வியாக்கியானம் சித்தமாம். மகாபாகு = பெருந்தோள்களை யுடையோன், கேசியைக் கெடுத்தோன் = கேசி யென்னும் அசுரனைக் கொன்றோன், என்னும் இவ்விரண்டு சம்போதனத்தாலே அர்ச்சுனன் ஸ்ரீ பகவானிடத்தே வெளியுபத்திரவத்தை நீக்குமாற்றலைக்
குறிப்பித்தனன். ஹ்ருஷிக மென்பது பொறியாம்; அதனீசன் = ஏவுபவன், ஹ்ருஷிகேசனாவன்; இதனாலே உட்காமக் குரோதாதி யுபத்ரவத்தை நீக்குமாற்றலைக் குறிப்பித்தனன. ஸ்ரீ பகவானிடத்திருக்கும் மிகுந்த பக்தியினாலே மூன்று சம்போதனங்கள் தந்தனன். கரும் அதிகாரியாகிய அறியான் செய்த சந்யாசத்தில் மொழிந்த யாகதிகளின் ஒப்புமையு மிருக்கும்; குணாதீத ரூப இருவகைச் சந்யாசத்தின் ஒப்புமையுமிருக்கும். மக முதலியவற்றைக் கரும அதிகாரியே செய்வது போலச் சந்யாசததையுஞ் செய்வன்; இதுதான் சந்யாசத்தில் மக முதலியவற்றின் ஒப்புமை. குணாதீத மெனப் பெயரிய இருவகைச் சந்யாசம், சந்யாச சப்தத்தானே கூறியதே போல இச்சந்யாசமும் கூறலின் இதில் அவ்விருவகைச் சந்யாசத்தின ஒப்புமையாம். இவ்வாறு மகம் குணாதீத மென்பவரறின் ஒப்புமையாலே இதில் முக்குணத் தன்மையின் சம்பவ அசம்பவ மிரண்டாலு முண்டாம் சம்சயமோ முதல் வினாவின விரையாம். சந்யாசம் தியாகமெனனும் இரண்டு சப்தங்கட்கும் கடகலச மென்னும் இரண்டு சப்தங்கட்குள்ளது போலும் பரியாயத்தன்மை யிருத்தலின் கருமத்தியாக ரூபத்தாலும், கரும் பலத்தியாக ரூபத்தாலும் அவ்விரண்டின் விலக்ஷணத்தனமைக் கூற்றாலுண்டாகிய ஐயமோ இரண்டாவது வினாவின் விரையாமென உய்த்துணர்க.

 

[அவற்றுள், சூசீகடாக நியாயம் பற்றி ஈற்றுவினாவை நீக்குவதன் பொருட்டு ஸ்ரீ பகவான் உத்தரங்கூறியருளல்: - கொல்லனானவன் அதிகப் பிரயத்தினத்தினாலே அடித்தாக்குங் கடாகத்தை விடுத்து, முதலில் அற்பப் பிரயத்தனத்தினாலே செய்யக்கூடிய ஊசியைச் செய்து கொடுத்தல் போல, அதிவிஸ்தாரமாக அறையத் தகுதியாய பொருளை விட்டு முதலில் அற்பமாகக் கூறப்படும் பொருளைக் கூறுதலே சூசீகடாக நியாயமாம்.]

 

ஹே அர்ச்சுன! காமிய கருமத்தியாகத்தைச் சூக்குமதரிசிகள் சந்நியாசம் என்பர்; விசாரகுசலர் சர்வகருமங்களின் பலத்தியாகத்தைத் தியாக மென்பர்.

ஹே கௌந்தேய! துறக்ககாமன் வேட்க என்பதாதி விதிவசனங்கள், சுவர்க்காதி பலத்தை விரும்பியவர்க்குக் கூறும் சோதிட்டோமா திகாமிய கருமம், சித்தசுத்தியிற் சிறிது மாத்திரையும் உபயோகமாகாதாம். அத்தகைய தியாகத்தைப் பெரியோர் சந்நியாசமென்பர். ஏனெனின்?


"பூத பதிபூத பால னுலகூடு போக முடியாத தானதோர்

சேது வெனுமீச னான வனைமேவல் தேடி வழிபாடு மேவியே
வேத மொழியாலும் வேள்வி பலவாலு மேவு தவதான பூசையே
யாதி வழியாலு மாத ரவினாலு மாயு முனிஞானி யாகுவான்''

 

என்னும் சுருதியானது நித்திய கருமங்கட்கே, தடையாய பாவநீக்க வாயிலாக ஆன்மஞானத்தில் உபயோகம் ஆம்வண்ணம் கூறுகின்றது. இச்சுருதியில் வேதமொழியாலும் என்றது பிரஹ்மசாரியின் சர்வதருமங்களை யும் குறிப்பதாம்; வேள்விதானம் என்பனவோ இல்லறத்தானது எல்லாத் தருமங்களையும் காட்டுவனவாம். தவமென்றதோ வனத்திலிருப்பவனது சர்வதரும உபலக்ஷணமாம். " ஆவதாஞான மதிகாரிகட்குப் பாவமாம் வினையின்படி றறலானே'' என்னும் வசனமும் தடையாய பாவநீக்கவாயிலாக நித்திய கருமத்திற்கு ஆன்மஞான உற்பத்தியில் உபயோகம் ஆமாறு நிகழ்த்துகின்றது. ஆகையால் நித்திய கருமங்கட்கே ஆன்மஞானத்தின் கண்ணேனும், ஆன்மஞானத்தின் இசசைவடிவ விவிதிஷையின் கண்ணேனும் உபயோகமாம்; காமிய கருமங்கட்கோ உபயோகம் இல்லையாம். ஆதலின் மனத்தூய்மை வாயிலாயும் அறியும் வேட்கையாக்கும் வாயிலாயும் ஆன்மஞானத்தை யடையும் அவாவினன் பகவதர்ப்பண புத்தியானே நித் தரும உபலக்ஷண மாடி என்னும் வசனமும் தடையாயோகம் ஆமாறு காமன் வேட்டத் தலைத் தியாகவோன் அனுஷ்ட திய கருமங்களையே யனுட்டிக்க வேண்டும். காமியகருமமோ அவ்வப்பயனோடு யாவுமே பரித்தியாகஞ் செய்யத்தக்கனவாம்.'' ஏமமின்றி யெவ் வினைப்பயன்களான யாவையுந், தீமையென்றறத் துடைத்திருத்தறியாக மாவதே'' சர்வகாமிய கருமங்களின் நித்தியகருமங்களின் பலத்தியாகம். அதாவது மனத்தூய்மையை வாஞ்சித்து விவிதிஷையின் அடைவின் பொருட்டு எக்காமிய நித்திய சர்வகருமங்களின் அனுஷ்டான முளதோ அவற்றின் பயனைத் தியாகித்தலைத் தியாகமென்பர் ஆராய்ச்சி மிகுந்த ஆரியர். துறக்க காமன் வேட்க என்பதாதி வசனங்கள் சோதிட்டோமாதிகா மிய கருமங்கட்குத் துறக்கம் மைந்தன் முதலிய வேறுவேறு பயனே கூறியிருக்கின்றன. என்றபோதிலும் அதிகாரியானவன் அவற்றுள் ஒன்றையும் ஆசைப்படாமல் அந்தக் காமிய கருமத்தையும், சித்தசுத்தியின் பொருட்டே செய்தல் வேண்டும்; ஏனெனின், அக்கினி ஹோத்திராதி கருமங்களில் இயற்கையாயோ நித்தியத் தன்மையேனும் காமியத்தன்மையேனும் உண் டாவதின்றாம். மற்றோகருத்தாவின் கருத்தின் சிறப்பானே சித்தமாம். சுவர்க்காதி பல இச்சைவாயிலாகச் செய்யப்படும் அதன்கண் காமியத் தன்மையும், பலனை விரும்பாமற் பகவதர்ப்பண மதியானே செய்யும் அதன் கண் நித்தியத்தன்மையும் இருக்குமாதலின், இது துணியலாம்: - ஆன்ம ஞானத்தின் ஆசைவடிவ விவிதிஷையின் கட்கேவலம் நித்தியகருமங்கட்கே உபயோகமாமன்றிக் காமியத்திற் கிறையளவு மில்லையாமாதலின், முழு க்ஷக்கள் காமிய கருமங்களையும் அவற்றின் பயனையும் அடியோடு பரித்தியாகித்தல் வேண்டும். விவிதிஷையின்கண் நித்தியகருமங்கட்கு உபயோகமிருத்தலே போல அவ்வப் பல ஆசையற்ற காமியகருமத்திற்கும் உபயோக மாம். ஆகையால் விவிதிஷை பெறக் காமிய நித்தியகருமங்களைச் செய்த போதினும் அதிகாரி அவ்வக்கருமத்தின் அவ்வப்பயன்றன் ஆசைமாத்திரத்தைப் பரித்தியாகஞ் செய்க. பலசகிதகாமிய கருமமாத்திரத்தின்றியாகமோ சந்யாச சப்தப்பொருளாம். நித்திய காமிய ரூப சர்வகருமங்களின் பல இச்சைமாத்திரப் பரித்தியாகம் தியாக சப்தத்தின் பொருளாம். ஆகலின் கடபட மிரண்டனுக்கும் கடத்வபடத்வ ஜாதியுடைய பொருள் தோற்றுவதே போலச் சந்யாசம் தியாகம் என்னுமிரண்டு சப்தங்கட்கும் வேறுவேறு ஜாதியுடைய அர்த்தமின்றாம். மற்றோ, மனத்தூய்மையின் பொருட்டுச் சொரூபமாகவே கருமங்களின் அனுஷ்டானம் உளதாயினும் அவ்வக்கரும அவ்வப்பல இச்சையின் பரித்தியாக வடிவ ஒரே பொருள் அவ்விரண்டு சப்தங்கட்கும் சித்தமாம். இதனானே ஒருவினாவின் விடைதுணியப்பெற்றதாம்.

 

[இரண்டாவது வினாவின் விடையை யருளும் பொருட்டும் சந்யாச தியாக சப்தங்களின் அருத்தங்களில் மூவகைத் தகைமையையருளும் பொருட்டும், முதலில் அப்பொருளில் வாதிகளின் ஐயத்தை ஸ்ரீ பகவான் அருளல்.]

 

ஹே பார்த்த! இராகத்துவேடாதி தோடங்களைப் போலக் கருமமும் பரித்தியாகஞ்செய்ய யோக்கியமாம். இவ்வண்ணம் சிலமதிமான்களியம்புவர். யாகதான தவரூப கருமம் தியாகிக்க யோக்கியமன்றா மென்பர் வேறு சிலபெரியோர். ஹே பற்குன! நித்திய, நைமித்திக, காமிய, பிராயச்சித்த முதலிய சர்வகருமங்களும், இவனது பந்தஹேதுவாதலின், தோஷமுடையனவாம், ஆதலின் மனத்தூய்மையற்ற கரும அதிகாரியும் கரும முழுதையும் பரித்தியாகமே செய்ய வேண்டும் என்பர் சில பெரியோர். இராகத் துவேடாதி தோடங்கள் அதிகாரியால் விடத்தக்கனவே போல ஆன்மஞானத்தை யடையாதவரும், அதையறியும் அவாவடையாதவரும் ஆகிய கருமாதிகாரிகளும் தங்களுடைய பந்தவேதுவென வுணர்ந்து சர்வ கருமங்களையும் தியாகமே செய்யவேண்டும். யாக தான தவ ரூப கருமத்தை, சித்தசுத்தியற்ற கரும அதிகாரி மனத்தூய்மைவாயிலாக அறியும் வேட்கையுண்டா தற் பொருட்டு ஒருபோதுமே விடலாகாது எனச் சில பெரியோர் கூறுவர்.

 

[இவ்வண்ணம் கரும பரித்தியாகத்தில் வாதிகளின் சம்சயத்தைக் கூறி ஸ்ரீ பகவான் தமது தீர்மானத்தை யுரைத்தருளல்.]

 

ஹே பரதகுல மேன்மைமிக்கோய்! அந்தக் கருமத்தியாகத்தின்கண் எமது துணிபை நீ கேட்குதி; ஹே சர்வபுருட சிரேஷ்ட! அத்தியாகம் மூவகையாய் அன்றோ கூறப்பட்டிருக்கின்றது!

 

ஹே அர்ச்சுன! மனத்தூய்மையற்ற கரும அதிகாரியைக் கர்த்தாவாகவுடைய சந்யாசம் தியாகம் என்னும் இரு சப்தங்களானே பிரதிபாதிக்கப்பட்ட பலேச்சா பூர்வக கருமங்களின் பரித்தியாகத்தைச் சொரூபமாக வுடையதாக முன்னர் எம்மாற் கேட்கப்பெற்ற அதன்கட் பூர்வ ஆசிரியர் செய்த துணிபை நீ கேட்குதி யென்றருளிய தென்னே? அந்தத் தியாகத்தில், தங்கள் பாற் கேட்க வேண்டியதாக, அறியக்கூடாததாந்தகைமை யிருந்தவாறென்? என்னும் அர்ச்சுனனது சங்கையை நீக்கியருள ஸ்ரீ பகவான் றிருவாய் மலர்ந்தருளுகின்றார்: - ஹே அன்ப! கருமாதிகாரியைக் கருத்தாவாகவுடையதாகிய பலேச்சாபூர்வக கருமங்களின் றியாகத்தை வேதமுணர்ந்தவர் மூவகையாகக் கூறுவர். தாமதாதி முக்குண வேறுபாட்டானே அந்தத் தியாகம் மூவகையாக மொழியப் பெறும்; பலத்தின் இச்சை வடிவ விசேஷணத்தானே விசிஷ்ட கருமத்தியாகம், விசேஷண மின்மையானே விசேடியமின்மையானே உபயமின்மையானே ஆமெனப் பெறும்; அஃதாமாறிங்ஙனம்: - தண்டரூப விசேஷண விசிஷ்டமாகிய தண்டியினபாவம் விசிஷ்டா பாவமாம். அது, புருட விசேடிய மிருந்தும் தண்ட விசேஷணமிலதேயாம். அப்போது விசேஷண தண்டமின்மையால் உண்டாய விசிஷ்டாபாவ மெனப்படும். தண்டவிசேஷண மிருந்தும் புருட விசேடியமிலதேல் தண்டியபாவமாம். இது விசேடியமிலதாக வுண்டாம் விசிஷ்டா பாவமாம். இரண்டு மிலாதபோதும் தண்டிய பாவமாம். இது இரண்டனபாவத்தா லுண்டாய விசிஷ்டா பாவமாம். இத்திருஷ்டாந்தம் போலவே, பலேச்சா விசேஷண விசிஷ்ட கருமத்தியாகரூப விசிஷ்டா பாவம். இச்சையாகிய விசேஷண மில்லாமையானும் கருமரூப விசேடிய மில்லாமையானும், உபயமின்மையானும் உண்டாம்; கருமமிருப்பினும் இச்சை விடுதலானே விசிஷ்டத் தியாகமாம். இது விசேஷண மின்மையாலுண்டானதாம். இச்சையிருப்பினும் கருமத்தை விடுதலானே ஆகு மது விசேடிய மின்மையாலாயதாம். இரண்டு மின்மையானே ஆகுமதுவோ விசேடிய விசேஷண மிரண்டு மின்மையாலுண்டாயதாம். அவற்றுள் முதற்றியாகமோ சாத்விகமாதலின் கவரத் தகுதியதாம். இரண்டாவதோ இராஜச தாமத பேதத்தானே இருவகையாம். இவ்விருவகையுமே இகழ்ந்துவிடத் தக்கனவாம். துயர்மதியாற் செய்யப்பெற்ற கருமத்தியாகம் இராஜசமாம் மயல்வடிவ விபரீதத்தானே செய்யப் பெற்ற கருமத்தியாகம் தாமசமாம்; இவ்வண்ணம் கரும அதிகாரியானே செய்யப்பெற்ற கருமத்தியாகமே அருச்சுனனது வினா விடயமாம். மனத் தூய்மை யுடையனாதலின், கரும அந்திகாரியைக் கருத்தாவாகவுடைய மூன்றாவது குண தீதமென்னுந் தியாகம் ஈண்டு, அர்ச்சுனன் வினா விடய மல்லவாம். இத்தியாகமும் சாதன பல வடிவத்தானே இருவகையாம். பல இச்சையின்றி யாகவாயிலாய கரும அனுஷ்டான ரூப சாத்விகத்தியாகத்தால் மனத்தூய்மையை யடைந்தவனும், ஆன்மஞானேச்சை வடிவ விவி திஷை யுதிக்கப்பெற்றவனும், ஆன்ம ஞான சாதன பூத சிரவண மனன ரூப வேதாந்த விசாரப்பொருட்டுச் சுவர்க்காதி சர்வபல இச்சையற்றவனும் ஆகிய அதிகாரி மனத் தூய்மையின் பின்னர்ச் செய்த தூய்மையின் சாதன பூதமாகிய சர்வ கரும பரித்தியாகமோ முதற்சாதன ரூப தியாகமெனப்படும். இதனையே பெரியோர் விவிதிஷா சந்யாசமென்பர். இதனை ஸ்ரீ பகவானும் அருளுவர். முன்ஜன்மத்திற் செய்த சிரவணாதி சாதனங்களின் அப்யாசபரிபாகத்தால் இச்சன்மத்தில் ஆதியிலே ஆன்மசாக்ஷாத்கார மடைந்த கிருதகிருத்திய ஞானி தானே செய்த பலேச்சை கரும பரித்தியா கம் இரண்டாவது பல வடிவத்தியாகமாம். இது வித்வத் சந்யாசமெனப்படும். இதனை ஸ்ரீ பகவான் முன்னருளியுள்ளார். திடப்பிரஞ்ஞன் இலக்கணாதிகளாலும் விரிவாயருளினர். ஹே அர்ச்சுன! எதனானே முன் மொழிந்த முறையே தியாக வடிவம் மிகவும் அறியத்தகாததாமோ; நீதியாக தத்துவத்தையறிய விரும்புகின்றேன் என்பதனானே முன்னதனை யுணர வேண்டினையோ, அதனானே சர்வஞ்ஞராகிய எமதுபதேசத்தானே அதனுண்மை வடிவத்தை நீ துணிதி. ஈண்டு முன்மொழிந்த இரண்டு விளிகளானே, அருச்சுனன்பால், குல நிமித்தக மேன்மையையும், தன் பௌருட நிமித்தக மேன்மையையும் ஸ்ரீ பகவான் உணர்த்தி யருளியவாறு காணலாம். ஆகவே அவனிடத்தில் தியாக வடிவத்தைத் துணியும் தகுதி குறிப்பித் தருளியவாறும் காணலாம்.

 

[பகவானே! 18 - வது அத்தியாயம் 3 - வது சுலோகத்தி லருளிய, வாதிகளின் பக்ஷங்களுள் எது தங்களாற்றுணிந் தருளப்பெறுவது? முதலாவதா? இரண்டாவதா? மூன்றாவதா? என்னும் அருச்சுனனது வினாவிற்கு இரண்டாவது பக்ஷமே எமது துணிபு என்று ஸ்ரீ பகவான் விடையருளல்.]

ஹே அருச்சுன! யாகதான தவவடிவமான கருமம் தியாகிக்கத் தக்கதாகாது, செய்யத் தகுந்ததேயாம். யாகதான தவமென்னும் மூன்றும் பலனில் இச்சையற்ற புருடர்களைப் பவித்திரஞ் செய்வதேயாம்.

 

ஹே பார்த்த! சுருதியின் சம்பந்தமும் ஸ்மிருதியின் சம்பந்தமுமான அக்கினி ஹோத்திராதியாகம், உத்தமதேச காலத்தில் சுபாத்திரத்தில் சாத்திரவிதிப்படி, கோ, பொன், அன்ன முதலியவற்றை யீயுந்தானம், கிருச்சிர சாந்திராயண வடிவமான தவம், என்னும் மூன்றும் முதன் மூன்றாசிரமிகள் ஆசிரிக்கத்தக்க சாஸ்திர விகிதமான சர்வகருமங்களின் உபலக்ஷணமாம். அவை மோக்ஷ முதலிய பலன்களில் இச்சையில்லாதவரைப் பரிசுத்தமாக்கும்; அதாவது அவை ஞானத்தின் தடையாகிய பாவமலத்தை நீக்கி ஞானமுதிக்கத்தக்க புண்ணிய குணத்தை யுண்டாக்கிப் பலனில் இச்சையற்றவரின் தூய்மையேயாகும். இங்கு அந்தக்கரண வுபாதியின் சுத்தியி னாலே அதன் உபகிதரின் சுத்தியை ஸ்ரீ பகவான் கருதியருளியதாம். யாகாதிகள் பயனை விரும்பாதவர்க்கு மனத்தூய்மையை யாக்குவனவாம். ஆகலின் மனத் தூய்மையை விரும்பிய கரும அதிகாரி பலத்தின் இச்சையற்ற அவற்றை ஒருகாலும் விடாமற் செய்தல் வேண்டும். இதனால் ஸ்ரீ பகவான் யாகாதிகளைத் தியாகம் செய்யாமையை யருளினார். அதனாலே பொருளால் அவற்றின் செய்கை யடைவு யாதலின் மீளவும் அவற்றின் செய்கையையருளல் பொருந்தா தாம் எனினும் அவற்றின் செய்கையில் மிக்க ஆதரத்தின் பொருட்டு மீண்டும் அருளினர். செய்தற்பாலனவாமென வேதம் விதித்துண்மையாலே யாகாதிகள் செய்யத்தக்கனவே யாமாதலின் அவை அதிகாரியால் ஒருகாலும் விடத்தகாதனவேயாம்.

 

[ஹே கருணா மூர்த்தியே! யாகாதிகட்கு ஒருகால் மனத்தூய்மை செய்வதில் ஆற்றலிருக்குமாயின், மோக்ஷ முதலியவற்றை விரும்பிச் செய்த போதிலும் அவை மனத்தூய்மை யாகுமாதலின் பலேச்சையைப் பரித்தியாகித் தல் பயனில்லாத கூற்றேயாம் என்னும் அருச்சுனன் சங்கைக்கு ஸ்ரீ பக வான் விடையருளல்.]

 

ஹே கௌந்தேய! முற்கூறிய யாகதானாதி கருமமும், கர்த்திருத்துவ அபிமானத்தையும் சுவர்க்காதி பலத்தையும் பரித்தியாகித்துச் செய்யத்தக்கதாம் என்பது பரமேசுரராகிய எமது மேன்மையான துணிபாம்.

 

ஹே குழந்தாய்! காமியகருமமும் தான தரும இயற்கையாலே மனத்தூய்மையைச் செய்யுமாயினும், அதனால் உளதாகிய வுளத்தூய்மையானது அதன்பயனான சுகத்தை அனுபவிக்கு மாத்திரத்திலே உபயோகமாம். ஆன்மஞானத்திற் சிறிது மாத்திரையும் உபயோகமாகாதாம். இதனை வார்த்திகக் கிரந்தகருத்தாவாகிய ஸ்ரீ சுரேசுவர ஆசிரியரும் அருளியுள்ளார்கள்: - காமியகருமங்களைச் செய்த போதிலும் மனத்தூய்மையே ஆம்; ஆனால் அதனாலாகிய தூய்மை கேவலம் போகசித்தியின் பொருட்டேயாகும். ஞானோற்பத்தியின் பொருட்டாகாதாம். எதனாலே இந்திர சம்பந்தியாய சுகபலம் மலின அந்தக் கரணத்தோடு கூடிய மலப்பன்றி முதலியவற்றின் றேகத்தாலே போகிக்க முடியாதோ; தூயமனமுடைய தேவதேகத்தாலே போகிக்க முடியுமோ; ஞானத்தி லுபயோகமான மனத்தூய்மையை யுண்டாக்கும் யாகாதிகள் பலேச்சை வாயிலாய்ச் செய்யப்படின் பந்தகாரண ரூபமாயினும் பலேச்சையில்லாது செய்யப்படின் பந்தஹேது ரூபமாகாதாமாதலின், முமுக்ஷக்கள் பலேச்சை வாயிலாய் அவற்றைச் செய்யாமல் அதை விடுத்தே செய்யத்தக்கதாம்; ஆண்டு யவ்வனாதியவத்தையும் வருணமும் ஆசிரமுமான இவற்றிற்கு நிமித்தமாகிய யான் இக்கருமத்தைச் செய்கின்றேன், என்னால் இஃதின்றி யமையாது செய்ய யோக்கியமாயது, என்னும் கர்த்திருத்துவ அபிமானஞ் சங்கமாம்; இச்சைக்கு விடயமாகிய அவ்வக்கருமத்தாலே யடையப்படும் துறக்க முதலிய பொருள்கள் பயனாம். இவ்விரண்டையும் விடுத்தே கருமத்தை மனத்தூய்மையின் பொருட்டுச் செய்ய வேண்டும். இங்ஙனமாதல் எமது சம்மதமாம். இதனாலே ஹே கௌந்தேய! கருமாதிகாரியால் யாகாதிகள் விடத்தக்கனவா? விடடத்தகாதனவா? என்னும் இரண்டனுள், விடத்தகாதன வென்னும் எமது மதம் மிகவும் மேன்மையதாம். ஸ்ரீ பகவான் முன் 4 - வது சுலோகத்திற் கூறியருளிய தமது துணிபையும் சங்கரித்தருளினார்.

 

[யாகதான என்பதாதிய வசனத்தால் ஸ்ரீ பகவான் முன்மொழிந்தரு ளிய தமது பட்சத்தை இதுவரையிலும் நிலைபெறுத்தி யருளினர்; இப்போது த்யாஜ்ய மென்பதாதிய வசனத்தாலே முன்மொழிந்தருளிய பரபக்ஷத்தில் முன்மொழிந்த தியாகமூவகையை வியாக்கியானித்து நிஷேதிக்கத் தொடங்கி யருளுகின்றார்,]

 

ஹே அர்ச்சுன! கருமத்தின் தியாகம் சம்பவியாதாம். அந்நித்தியகருமத்தை மோகத்தாலே பரித்தியாகித்தல் தாமதத்தியாக மெனப்படும்.

 

ஹே பார்த்த! சுவர்க்காதி பல இச்சையுடன் செய்த காமியகருமம் மனத் தூய்மையின் ஹேதுவாகாதாம்; மாறாகப் பந்த ஹேதுவேயாம். ஆகலின் அது தோஷமுடைய தேயாம். இதனாலே பந்தத்தை நீக்கும் ஆன்மஞானம் விரும்பியோன் ஆற்றிய காமிய கருமத்தியாகமோ சாத்திரத்தாலும் ஊகத்தாலும் சம்பவிப்பதேயாகும்; ஆனால் மனத்தூய்மை யேதுவாதலின் தோஷமற்ற சுருதிமிருதி விகித அக்கினிஹோத்திர சந்தியாவந்தனாதி நித் தியகருமத்தியாகஞ் செய்தல் மனத்தூய்மை விரும்பினவனாகிய முமுக்ஷவிற்குச் சாத்திரத்தாலும் ஊகத்தாலும் சம்பவியாதாம். மற்றோ, மனத்தூய்மையின் பொருட்டு முமுக்ஷுக்கள் நித்தியகருமத்தை இன்றியமையாது அனுஷ்டிக்க வேண்டும். இப்பொருள் முன்னருமருளப் பெற்றது. மனத்தூய்மையை யுண்டாக்கும் நித்தியகருமத்தை மோகவயத்தால் விடுதல் தாமதத்தியாகமாகும். வேதவிகித நித்திய கருமத்தில் நிஷித்தத்தன்மை யுணர்வும், அர்த்த ஹேதுவாகிய அதன்கண்ணே அநர்த்த ஹேதுமதியும், தரும ரூபமென்பவற்றில் அதருமத்தன்மை மதியும், அனுஷ்டான யோக்கியமாய அதில் அனனுஷ்டானத் தன்மைமதியும், ஆகிய பயன் ஞானவடிவ விபரீத மோகமாம். இம்மோக வயத்தால் நித்தியகரும் பரித்தியாகம் தாமசத்தியாகமாம். இம்மோகம் சாங்கிய சாஸ்திர முடையார்க் குண்டாம்; அவர்கருத் திதுவாம்; - காமியகருமந் தோஷமுடைய தாவதேபோல அக்கினிஹோத்திராதி நித்திய கருமங்களும் தோஷமுடையனவேயாம்; என்னை, நித்திய கருமங்களுள்ளும், நென் முதலியவற்றைக் குத்தலின் யாகசாலையைத் துலக்கலின், அக்கினியில் ஹோமஞ்செய்தலின் ஜீவர்கட் கிம்சையாம்; பசுக்கட்கும் இம்சையாம். ஆதலின் நித்திய கருமமும் ஹிம்சை வடிவ தோஷமுடைய தாதலின் காமியகருமம் போலத் துஷ்டமேயாம். "எல்லாப்பிராணியையுமே இம்சிக்கலாகாது'' என்னுஞ்சுருதி சர்வபூதங்களின் இம்சையை நிஷேதஞ் செய்துளதாதலின் யாகத்திற்செய்யும் பசுவினிம்சையும் நிஷித்தமேயாம். மனத்தூய்மையோ ஹிம்சைப்பிரதான நித்திய கரும் மின்றிக் காயத்திரியாதி மந்திரங்களின் ஜபத்தாலேயாம். இது ஸ்ரீ மகாபாரதத்திலுங் கூறப் பெற்றுளது. காயத்திரி முதலிய மந்திரங்களின் ஜபமோசர்வதருமங்களினும் பரமதரும மெனப்படும்; என்னை, ஜபயாகத்தினும் வேறாகிய ஜோதிஷ்டோமாதி யாகங்களியாவும் பூதங்களி னிம்சையாலே பொருந்து வதாம்; ஜபயாகமோ அஹிம்சையாலே முயல்வதாம்; இதனாலே இஃதியாவினும் உயர்ந்ததாம். இதனை மனுவும் கூறியுள்ளார். காயத்திரியாதிகளின் ஜபத்தாலே பிராஹ்மணன் மனத்தூய்மையையடைவன்; இவ்விஷயத்தில் சிறிது மாத்திரையும் ஐயமின்றாம். மனத்தூய்மையின் பொருட்டு அதிகாரி வேறொரு கருமத்தைச் செய்யவேண்டு மென்றேனும் வேண்டாமென் றேனுமின்றாம். அஹிம்சை வடிவமான மைத்திரியை யுடையவனே பிராஹ் மணனெனப்படுவன் என்பதாதி சாத்திரங்கள் நித்தியகருமத்தை நிஷேதித்து மனத்தூய்மைக்கு ஜபத்தையே விதிக்கின்றதாதலின் மனத்தூய்மையற்ற கரும அதிகாரியாலும் நித்திய கருமம் விடவேதக்கதாம் என்பர். இக்கூற்று மிக முரணுடையதாம்; என்னை, யாகத்தில் பசு முதலியவற்றின் இம்சை அநர்த்தஹேதுவாகாதாம்; யாகமிலா அஃதே அநர்த்தஹேதுவாம். மேற்கூறிய அஹிம்சைச் சுருதி பூதஹிம்சையை நிஷேதிக்கினும் யாகம் போரின்றியஹிம்சை பரமாம் அந்நிஷேதம்; ஒருகாலவ்வசனம் சர்வஹிம்சை மாத்திரத்தையே நிஷேதிப்பதாகுமே யாயின், யாகத்தில் பசுஹிம்சையை விதிக்கும் வசனம் வீணேயாம். வேதமொழியை வீணெனல் மிகமுரணுமாதலின் இருவசனத்திற்கும் பரஸ்பரம் சாமானிய அபவாதபாவம் புனைந்து விவஸ்தை செய்தல் உசிதமாம். எப்பிராணியையு மிம்சியாதொழிக வென்பது சாமானியமாம்; அக்கினி ஷோமீயவசனம் அபவாதமாம்; அபவாதத் தலத்தை விடுத்தே அயலிடத்திற் சாமானிய வசனப் பிரவிருத்தியாம்; யாகம் போரின்றி யெவ்வுயிரையும் இம்சை செய்யற்க வென அதன்பொருள்: கொள்க; கொள்ளவே சாத்திரவிகிதமாக
சம்பந்திஹிம்சை தோஷரூபமாகாதாம். முன்மொழிந்த மகாபாரத மனுவசனங்களும் கேவலம் ஐபயாகத் தின்றுதி பரமாமன்றி யாக சம்பந்திஹிம்சையில் அதர்மத் தன்மையைப்   போதியாதாம். இதை நிந்தியாமல் அதைத்துதிக்கின்ற தென்பதே கருத் தாம். எவ்வசனத்திற் கெப்பொருளிற் கருத்தாமோ அதற்கதுவே பொருளாமாகலின் சாங்கியர்க்கு மேற்கூறியவாறு தோற்றுதல் மோகமேயாகும். மோக வயத்தால் நித்தியகருமத்தியாகம் தாமசத்தியாகமாம்; மோகம் தமரூபமே யல்லவா.

 

[ஸ்ரீ பகவான் இவ்வண்ணம் தாமதத்தியாகத்தை யியம்பியருளி இப்போது இராஜதத்தியாகத்தை யுரைக்கத்தொடங்கல்.]

 

ஹே அர்ச்சுன! இக்கருமம் துக்கரூபமேயென்றெண்ணிச் சரீர ஆயாசத்தின் அச்சத்தாலே நித்தியகருமத்தை விடுதலாகிய தியாகம் இராஜசமாம். இந்தத் தியாகத்தாலே தியாகபலத்தை அவன் ஒருகாலும் அடையான்.

 

ஹே கௌந்தேய! முன் மொழிந்த மோகமில்லாவிடினும் மனத்தூய்மையை மருவாத கரும் அதிகாரி சருவ நித்திய கருமங்களும் துக்கரூபமேயாமென நினைந்து அவற்றைச் செய்தலாலுண்டாம் சரீரக் கிலேசத்தின் பயத்தாலே. அவற்றை விடல் இராஜசத் தியாகமாம். அந்தத் துக்கம் இரஜோகுண ரூபமேயாம். மோகமில்லாவிடினும் இராஜசத் தியாகத்தாலே பயன் அடைய முடியாதாம். கூறப்பெறும் சாத்விகத் தியாகத்தின் ஞான நிஷ்டா வடிவமாகிய பயனை இராஜசத் தியாகி யடையான்.

 

[முன்னிரண்டு சுலோகங்களாலே நித்திய கருமங்களின் இராஜச தாம தத் தியாகங்களை
விடவேண்டுமென்றருள், ஆயின் எக்கருமத் தியாகத்தை யதிகாரி யங்கீகரிக்க வேண்டும் என்று தெரிந்துகொள்ளும் வேட்கையானது அருச்சுனனுக்குண்டாகியபோது சாத்விகத்தியாகமே கொள்ளத்தக்கதாம் என்று ஸ்ரீ பகவான் அதன் வடிவத்தை யருளல்.]

 

ஹே விஜய! இக்கருமம் செய்யத்தக்கதேயாம் என்றெண்ணி நித்திய கரும சங்கத்தையும் பலத்தையும் தியாகித்தே செய்வது சாத்விகத் தியாக மெனப் பெரியோரால் அங்கீகரிக்கப்பெறும்.

 

ஹே பார்த்த! நித்திய கருமங்களை விதிக்கும் வாக்கியங்களில் அவற்றின் பயன் சொல்லாவிடினும் வேதவிதிதமாதலின் நித்திய கருமங்கள் அவசியம் செய்யத்தக்கவை என்று நிச்சயித்து, யான் செய்கிறேன் என்னும் அபிமானத்தையும், சுவர்க்காதிபலத்தையும் விட்டுச் சித்த சுத்தியுண்டாம் பரியந்தம் அவற்றைச் செய்தலாகிய தியாகம் சாத்விகத் தியாகமாம் என்பர் ஆன்றோர். பலத்தின் ஆசையையும் அபிமானத்தையும் விட்டுச் செய்யும் நித்தியகருமம் உளத்தூய்மையையுண்டாக்கும் என்பதாம். முன்னர் தள்ளி விட்ட இரண்டு தியாகங்கள் போல இச்சாத்விகத் தியாகம் தள்ளத்தக்கதன்றாம். சுவர்க்கம் விரும்பியவன் யாகம் செய்க வென்பதாதி வசனம் பயனை யுத்தேசித்துக் காமிய கருமத்தை விதிப்பதே போல் நித்தியகருமத்தை விதிக்கும் வசனம் அப்பயனைக் குறித்து அதனை விதியாதாதலின் அதற்கொரு பலமுமேயின்றாம்; இலதாகவே, பலத்தை விட்டு என ஸ்ரீ பகவான் அருளியது எங்ஙன் கூடுமெனின்? இங்ஙனமாம். நித்தியகரும வசனம் பயனைக் குறித்து அதனை விதிக்கவில்லை யெனினும் அதற்கொரு பயனை யின்றியமையாது கோடல் வேண்டும்; அல்லாவிடிற் பயனை விட்டு என்றருளியது வீணாம். அடைவுற்றதற்கே விலக்குதலுங் கூடுமென்பர்; ஆகலின் அதற்குமொரு பலமுண்டென்றன்றோ அம்மொழியாற் கிடைக்கின்றது. பயனைக் குறியாமல் மந்தனும் முயலான் என்றபடியால் அறிஞன் எங்ஙனம் முயல்வன், முயலான். ஆகலின் முயலும் பொருட்டுப் பயனை யவசியம் அங்கீகரித்தல் வேண்டும். ஆபஸ்தம்ப இருடியும் அதன் பயனை யறைந்துளார். மாங்கனியடைவின் பொருட்டு மாமரம் வைத்தவனுக்கு அத்தரு நிழல் வாசனை முதலிய பயனையும் அவசியம் தருவதே போல தனது தருமம் என்றெண்ணி நித்தியகரும் அனுஷ்டானஞ் செய்யின் மோக்ஷ முதலிய பிரயோஜனம் அவசியம் உண்டாம்; இப்பயன், பெரும்பயன் பெறுவதற்கு முன் விருப்பிலாமலே எய்தும் தொடர் பயன் எனப்படும். மனத்தூய்மை வாயிலாக ஆன்மஞானப் பிராப்தியாலே மோக்ஷம் பிராப்தியாம். இதுவே நித்தியகருமத்தின் மகாபலமாம். இஃதுறாத வரையும், அதனால் அவசியம் அத்தொடர் பயனாமென்க. நித்தியகருமங்களைச் செய்யாவிடில் எப்பாவ முளதாமோ, செய்யின் உண்டாகாதோ, அப்பாவ நீக்கமே அதன்பயனாம். நித்தியகருமஞ் செய்யாவிடின் பாவமுண்டாமென்பது சுருதிமிருதியாற் பிரசித்தமாம்: - "வேதங் கூறிய நித்திய வினைகளைப் பாதகன் செயானேற் பாவமடைவான், வேதமும் மிருதியும் விளம்பு நித்தியங்களை, நீதமாய்ப் பற்றியே துவிஜனிலைப்பன், ஓதிவை விடுத்த துவிஜன் ஒருதலை, கோதுறக் கீழேவிழுவன் கோலிலாப், போதகக்குருடன் குழி விழல்போன்றே'','ஒரு நாள் ஜபத்தைச் சந்தியை மூன்று, திருநாள் அக்கினிஹோத்திரம் பத்தொடும், இருநாள் விடின் மறையவன் சூத சிரனாம், குருவாணையையு மிதிற் குலவாதே'', " மறையவன் மூன்று நாள் வரைச் சந்தியைத்தான், அறைபன் னிருதின மக்கினிகோத்திரம், உறசெயாதிருப்பின் ஓதினும் வேதம், மறை யவன் சூத்திரன் மருவாதையமே.''

 

''சந்தியையுல்லங்கனஞ் செய்தலானே பிராஹ்மணன் பால் சூத்திரத் தன்மை அடைவுண்டாதலின் ஒருகாலும் சந்தியை யுல்லங்கனஞ் செய்யலாகாது. காலையிலும் மாலையிலும் சாவதானனாகிச் சந்தி செய்க; பிரமாதத்தால் விடின், நிச்சயமா யவன் நரகத்தையடைவன்'' என்பதாதி சுருதி. இவன் நான் என்ற மாழியாமிருதி வசனங்கள் நித்தியகருமத்தைச் செய்யாவிடின் பாவ அடைவைக் கூறியுள்ளன. அக்கினிஹோத்திராதி நித்திய கருமத்தானே தடையாய பாவத்தை நீக்குகவென்பதால் வேதவேத்தாக்கள் நித்திய தருமத்தைப் பரம தருமமென்பார்கள் என்பதாதி சுருதிகள் ஞானத்தடையாய பாவநீக்கம், ஞானமுண்டாக யோக்கியமாகிய புண்ணிய ஆக்கம், என்னும் ஆன்ம சமஸ்காரமே நித்தியகரும் பலமாம் என்று கூறும். சில சாஸ்திரங்களிலோ நித்திய கருமத்திற்குப் பிரஹ்மலோகப் பிராப்தி வடிவமான பலம் பகரப் பெற்றுளது. ''திரவிரதத்தொடுஞ் சேர்ந்தவராகி, யுரமுறச் சந்தியை யுபா சனை செய்பவர், சருவபாபங்களுஞ் சாம்பினராகி, பிரமலோகத்தைப் பெரிநிதய்து வாரே'' என்பதாதிய சுருதி மிருதி முதலியவற்றில் நித்தியகருமத்திற்கும் பலங்கூறப் பெற்றுளது. அப்பலத்தை யாசைப்படாமலே யதனைச் செய்க வென்னும் திருக்கருத்தாலே ஸ்ரீ பகவான் ஈண்டுப் பலத்தை விடுத்து என்பதால் நித்திய கரும பலத்தின் பரித்தியாகத்தைக் கூறியருளினர். ஆகலின் ஸ்ரீ பகவத் வசனத்தில் ஒரு சிறிதும் முரணின்றாம். தியாகசந்யாச சப்தங்கள் கட பட சப்தங்கள் போலப் பின்ன பின்ன ஜாதியையுடைய அர்த்தவாசகங்களல்லவாம். மற்றோ, பலேச்சா பூர்வகமாகிய கருமத்தியாகமே இரு சப்தங்களின் பொருளாம். முற்கூறிய இப்பொருளை மறவா துறைக. பல இச்சையிருந்த போதினும் முன்மொழிந்த மோக வயத்தால் அல்லது தேகக்கிலேச பயத்தால் நித்தியகருமப் பரித்தியாகமோ, கருமமாகிய விசேஷிய அபாவத்தாலாகிய விசிஷ்ட அபாவரூபமாம். அந்தத் தியாகம் தாமச இராஜசமென நிந்திக்கப்பட்டதாம். நித்திய கருமமிருந்த போதினும் அதன் பல விருப்பத்தை விடுந்தியாகம், பலேச்சையாகிய விசேஷணா பாவத்தாலாம் விசிஷ்ட அபாவமாம். இத்தியாகம் சாத்விகத் தன்மையாலே துதி செய்யப் பெற்றதாகும். இரண்டபாவங்களிடத்தும் விசிஷ்ட பாவத்தன்மை சமமேயாமாதலின் ஸ்ரீ பகவானுடைய திருவாக்கியத்தே பூர்வ அபரவிரோதமின்றாம்.

 

[இப்போது முன்னுரைத்த சாத்விகத் தியாகத்தைக் கொள்ளும் பொருட்டு ஸ்ரீ பகவான் அதன், மனத்தூய்மை வாயிலாய் ஞானநிஷ்டை வடிவப் பலத்தை யருளிச்செய்தல்.]

 

ஹே அர்ச்சுன! முன் மொழிந்த சாத்விகத்தியாகமுடையவன் சத்து வத்தால் வியாப்தமாம் போது தத்துவஞானமுடையவனாவன், சர்வ சம்சயங்களுமற்றவனாவன். அப்போது அசோபன கருமத்தைப் பிரதிகூலமென்னான்; சோபன கருமத்திற் பிரீதியுஞ் செய்யான்.

 

ஹே பாண்டவ! சாத்விகத்தியாகி = முன்னர்க் கூறியவகையே கர்த் திருத்துவ அபிநிவேசத்தையும் சுவர்க்காதி பல இச்சையையும் பரித்தியாகித்து மனத்தூய்மையின் பொருட்டு வேதவிகித நித்திய கருமத்தை யனுஷ்டானஞ் செய்யும் தியாகி, அக்காலத்தில் சாத்துவத்தாலே நன்கு கூடியவனாவன். ஆன்ம அனான்ம விவேக ஞானஹேது பூதமாகிய உள்ளத்துள்ள நன்ஞானத்தின் றடையென்னும் இரஜதமரூபமான மலமிலாமை வடிவ அதிசயத்தகைமை சத்துவமாம்; அதனால் இனிது வியாபிக்கப்பெற்றவனாவன் என்பதாம். சாற்றிய சத்துவ வியாப்தியாலே நியமமாக ஆன்ம ஞான ரூப பல ஜனகத்தன்மையே நலமுடைமையாம். ஸ்ரீ பகவானுக்கருப்பணஞ் செய்த நித்தியகரும அனுஷ்டானத்தாலே பாவரூப மலநீக்கமாகிய சமஸ்காரத்தானும், ஞான உற்பத்தி யோக்கியதை வடிவ புண்ணிய முண்டாவதாகிய சமஸ்காரத்தானும், சமஸ்கரிக்கப்பெற்றபோது அத்தியாகி மேதாவியாவன். விவேகம், வைராகம், சமதமாதி யாறு சம்பத்து, முமு க்ஷதை, சர்வகருமங்களின் விதிவத்தாய தியாகம், பிரஹ்ம வேத்தாவாகிய ஆசிரியன்பாற் செல்லுதல் என்பதாதி சாதனங்களானும், ஞான ஆசிரியர் வாயிலாக வேதாந்த சாஸ்திர சிரவணமனன நிதித்தியாசனமென்னும் மூன்று சாதனங்களானும் உண்டாயதும், தத்துவமசி முதலிய வேதாந்த மகாவாக்கியத்தைக் காரணமாகவுடையதும், எல்லா அப்பிரமாணிய சங்கையும் நீங்கியதும், அகண்ட அத்விதீய சைதன்யமலாத வஸ்துவை விடயஞ் செய்யாத அகம்பிரஹ்மாஸ்மி யென்னும் பிரஹ்மாத்ம ஐக்கியஞானம் மேதையாம். அம்மேதையோடு கூடியவனே மேதாவியாவன்; அவனே திடப் பிரஞ்ஞனாவன்; அக்காலத்தே அவன் ஐயமெல்லாம் நீங்கியவன் ஆவன். பிரஹ்மவித்தை வடிவ மேதையாலே அவித்தை நீங்கிவிடும்; அதுவே சருவ சமுசய உற்பத்தியைச் செய்து கொண்டிருந்தது; அது தொலையவே காரிய ஐயம் திரிபுகள் யாவும் தத்துவ வேத்தாவிற்கு இலவாகும். ஆன்ம சாக்ஷாத்காரத்தாலே அவித்தை நீக்க வாயிலாய் நீங்கும் ஐயங்களிவையாம்: - சஞ்சித ஆகாமிய வர்த்தமானங்கள் என்னும் மூவகையாகிய கருமங்களுள் ஏதேனும் என்னைப்பற்றியுளதா? இலதா? கருத்திருத்துவ போக் திருத்துவ முதலிய சமுசாரம் ஆன்மாவிற்கா? அந்தக்கரணமாகிய அநான்மாவிற்கா? மோக்ஷகாரணம் யோகமா? உபாசனையா? கருமமா? ஆன்மசாக்ஷாத்காரமா? சாலோக்கியம், சாமீப்பியம், சாயுச்சியம் என்னும் இவையே மோக்ஷமா? பிரஹ்மான் மரூபமாய் நிலைபெறல் மோக்ஷமா? இவ்வெல்லா ஐயத்துள்ளும் ஈற்றது சித்தாந்தமென்றறிந்துகொள்க; மற்றவை பூர்வபக்ஷங்களாம். இவ்வையங்களும், தேகாதிகளில் ஆன்மமதி வடிவ விபரீதமும், தத்துவமறிந்தவன் அற்றவனாவன்; அப்போது சருவ கருமமும் அற்றவனாகலின், அகுசலகருமத்தில் துவேடஞ்செய்யான். அஞ்ஞானிகட்குப் பந்தவே துவாதலின் அசோபனரூப காமிய கரும நிஷித்த கருமங்களைப் பிரதிகூலமாகவெண்ணான்; மனத்தூய்மைவாயிலாய் ஆத்ம ஞான வேதுவாதலின் சோபனரூப நித்தியகருமத்திலும் பிரீதியைச் செய்யான். அவன் கிருத கிருத்தியனாதலின் அவனுக்கு ஒரு கருமத்தில் துவேடமும், மற்றொரு கருமத்திற் பிரீதியும் எங்ஙனமுண்டாம் என்னு மிதன்கட் சுருதியுமுளதாம்: - "பராபரமாம் அப்பொருளை வயங்கக்கண்டால், பெருமனக்கட்டறு மைய மறும் கருமமறும் "யான் பிரஹ்மரூபன் எனப் பிரஹ்ம சாக்ஷாத்காரத்தை யடைந்த தத்துவ வித்திற்குச் சிற்சடக்கிரந்தி பேதிக்கும்; முன்மொழிந்த சர்வசமுசயங்களும் நீங்கும்; புண்ணிய பாவ சர்வ கருமங்களும் க்ஷயமாம். அந்தச் சாத்விகத்தியாகத்திற்கு இம்மகா பலங் கிடைத்தலின் அதிகாரி பெருமுயற்சியால் சாத்விகத்தியாகத்தையே சம்பாதிக்க வேண்டுமென்பதாம்.

 

[கருமத்தில் முயலக்காரணமாகிய இராகத்துவேஷாதிகள் ஞானியி னிடத்தின்றாமாதலின் அவனிடத்தே சர்வ கரும பரித்தியாகஞ் சம்பவிக்கும், என்பது முன்னருளப்பெற்றது; இப்போது ஞானியிடத்தில் சர்வ கருமங்களின் பரித்தியாகம் சம்பவியாதாம் என்பதில் ஸ்ரீ பகவான் ஹேது வையருளல்.]

 

ஹே அர்ச்சுன! தேகாபிமானி முற்றினுமே கருமத்தைத் தியாகிப்பது முடியாத காரியமாதலின் அஞ்ஞானி கருமபலத்தை விடுவனேல் அவனும் தியாகியே யெனப்படுவன்.

 

யான் மனுடன், யான் பிராஹ்மணன், யான் இல்வாழ்வோன், எனக் கெடுக்க முடியாத அபிமானத்தானே தேகத்தைத் தரித்தலும் காத்தலுஞ் செய்பவன் தேகபிருத்தெனப்படுவன்; அதாவது, கருமாதிகார ஹேதுபூத பிராஹ்மணாதி வர்ண ஆசிரமங்கள், அவற்றிற்காசிரயமாய கருத்திருத் துவாதிகள், அவற்றிற்காசிரயமாய தூலாதி தேகங்களாம்; அநாதி யவித்தை வாசனைகளின் வயத்தால் வியவகாரயோக்கியதை ரூபத்தானே கற்பிதமாதலின் அசத்தியமாகிய அவற்றைச் சாத்தியமெனவெண்ணி, தன்னிற் பின்னமாயினும் அபின்னமாய் நினைந்து முன்மொழிந்த அபிமானத்தானே தேகத்தைத் தரித்துப் போஷிப்பவன் தேகபிருத்தாவன் என்பதாம். கருமாதிகார காரணவடிவ காய அபிமானங் கழலாதவன் காயபிருத்தாவன் என்பது கருத்தாம். அவன் கருமங்களில் முயல்வதற்குக் காரணவடிவமாகிய இராகத்துவேடாதிகளின் மிகுதியானே நிரந்தரம் கருமங்களில் முயல்பவனாவன். விவேகமின்றிய தேகாபிமானி தத்துவ ஞானியைப் போலக் கருமத்தை முற்றினும் விடமுடியான்; ஏனெனின், காரணசாமக்கிரியிருக்கும் வரை அத்தியந்தங் காரியபரித்தியாகம் செய்ய முடியாதாம். இராகத்துவேடாதி ரூபகாரண சாமக்கிரி அஞ்ஞானியின் பாலுளதாதலின் மனத்தூய்மையின் பொருட்டுக் கருமங்களைச் செய்த போதினும் பரமேசுவரகிருபையின் வயத்தால் கருமபலத்தைவிடின் அவனும் தியாகியே யாவன், அதாவது கருமகருத்தா அஞ்ஞானி உண்மையாய் அத்தியாகியாயினும் துதியின் பொருட்டுத் தியாக சப்தயோக்கியன் கௌணமாயாவன். அத்தியந்தம் கருமத்தியாகமோ தேகாபிமானமற்ற பரமார்த்த தரிசியே செய்யத்தக்கவன் ஆவனாதலின், அத்தகைய தத்துவஞானியே தியாகசப்த யோக்கியன் முக்கியனாயாவன். கருமபலத் தியாகி மிகவும் துர்லபன் ஆவன். பலேச்சையை விடுத்துச் சித்த சுத்தியின் பொருட்டு நித்தியகருமங்களைச் செய்யும் புருடனும் துர்லபனே யெனவறிக.

 

[ஹே பகவன்! தேகாபிமானமுடைய பரமான்ம ஞானமற்ற கருமியும், பலேச்சையிலாதமாத்திரத்தானே கௌணசந்நியாசியெனப் பெறுவன் தேகாபிமானமில்லாத பரமான்மஞானமுற்ற பலசகித சர்வ கருமத்தியாகியாகிய தத்துவமுணர்ந்தவனோ முக்கிய சந்நியாசியெனப் பெறுவன் என்பதாகத் தேவரீர் முன் அருளினீர்கள்; கௌணசந்யாசியின் பலத்திலும் முக்கிய சந்யாசியின் பலத்திலும் யாது விசேடமாகும். விசேட லாபமின்மையால் கௌணத்தன்மையும், லாபமுண்மையால் முக்கியத்தன்மையும் சந்யாசியின் பால் உண்டாமன்றோ. கருமபலத் தியாகித்தன்மையோ அவ்விருவர்
பாலும் சமமேயாமாதலின் அதனானும் சிறப்புச் சம்பவியாதாம்; மற்றோ, இதனினும் அயலொருசிறப்பே கூறியருளல் வேண்டும் என்னும் அருச்சுனனது வினாவுக்கு ஸ்ரீ பகவான் விடைபகர்ந்தருளல்.]

ஹே கௌந்தேய! கௌணசந்யாசிகட்கோ மரணத்தின் பின்னர்க் கருமங்களின் அநிஷ்ட இஷ்ட கலப்பு என்னும் மூவகைப் பயன் அடைவுறும்; முக்கிய சந்நியாசிகட்கோ ஒருகாலும் அம்மூவிதபலன் அடைவுறா வாம்.

 

ஹே பார்த்த! கருமங்களின் பலத்தியாகவானாயினும் கருமங்களை யனுஷ் டிப்பவனும், ஆன்மஞானத்தில் முயல்பவனும், அதையடையாதவனும் ஆகிய அத்தியாகியென்னும் கௌன சந்நியாசிக்கு ஆன்மஞான இச்சையாகிய விவி திஷையுண்டாங்காறும் சித்தசுத்தியைச் சமபாதியாது முன்னரே சரீரம் நீங்குமாயின் அகன் மரித்தபின் முன் செய்த கருமத்திற்குச் சரீரக்கிரகணரூப பலத்தை அவசியம் அடைவன். சரீர கிரகண ரூப கருமபலம் காரண ரூபகருமங்களின் மூவகைத்தன்மையானே அநிஷ்டம் இஷ்டம் மிசிரம் என மூவகைத்தாம். பாவத்திற்கு அநிஷ்டபலமாம்; புண்ணியத்திற்கு இஷ்டபலமாம்; இரண்டிற்கும் மிசிரபலமாம். இவ்வுடம்பு எனக் கடைவுறாதொழிக என்னும் பிரதிகூலத்தன்மையின் ஞானவிஷயம் நரகசம்பந்தியாய திரியக்குத் தேகமாம்; அது அநிஷ்டபலமெனப்படும். இத்தேகம் எனக் கடைவுறுக என்னும் அனுகூலத்தன்மை ஞான விடயம் தேவதைத் தேகமாம்; இது இஷ்டபலமாம். பாவபல புண்ணியபலத்தோடு கூடிய மநுடாதி தேகப் பிராப்தி மிசிரபலமாம். முமுக்கள் இம்மூவகைப் பயன்களையுந் தியாகிக்க வேண்டுமென்பதாம். இதுவரை கௌண சந்நியாசிகள் மரித்தபின் சரீரத்தையடைவார்கள் என்றதாம். இனி முக்கிய சந்நியாசிகட்கோ பிரஹ்ம சாஷாத்காரத்தானே காரியசகித அவித்தை நீங்கவே விதேக கைவல்லிய ரூபமோக்ஷமே கிடைக்கும் என்றருளல்: விதிப்பிரகாரம் சருவ கருமங்களையும் விட்டவரும், யான் பிரஹ்மரூபன் என்னும் பரமான்ம சாக்ஷாத்காரத்தோடு கூடியவரும் ஆகிய பரமஹம்ச பரிவிராஜக முக்கிய சந்நியாசிகள் மரித்து, கூறிய மூவகைப் பலத்தையும் எத்தேயத்தும் எக்காலத்தும் அடையார்கள். ஏனெனின், அவர்கட்கு ஞானத்தானே யஞ்ஞானமழிந்ததன்றோ? அஞ்ஞானமழியவே யதன் காரிய சர்வ கரு மங்களும் நீங்கியே போம். ஜன்மத்தைத் தருவதில் அஞ்ஞானமும் அதன் காரியமும் அன்றோ காரணம். அவ்விரண்டும் அகலவே பிறப்பெங்ஙனமாம். இதன்கண்ணிச் சுருதியையும் உணர்க: - பராபரமாம் அப்பொருளை வயங்கக்கண்டால் பெருமனக்கட்டறும் ஐயமறும் கருமமறும் " என்பதாம். இதனை ஸ்ரீ வியாசபகவானும் அருளியுள்ளார். - பிரத்தியக்கபின்ன பிரஹ்ம சாக்ஷாத்காரமுளதாகவே தத்துவஞானியின் பூர்வசஞ்சித கருமமோ விநா சமாம். மேற்செய்யும் வினை தீண்டவே மாட்டாது. இப்பொருள் சுருதியிருதிகளிலும் கூறப்பெற்றுளது என்பதாதி சுருதி சூத்திர வசனம் பரமான்ம ஞானத்தானே சர்வ கருமங்களின் நாசத்தைக் கூறாநிற்றலின் இது துணியப்பெறும்: - - முன்மொழிந்த கௌண சந்நியாசிகட்கோ முற்புண்ணிய பாவகருமவயத்தால் மீண்டும் சரீரக் கிரகண ரூப சம்சாரம் அவசியமுண்டாம். முக்கிய சந்நியாசியாகிய தத்துவவேத்தாவிற்கோ அவித்தை முதலியவையின்மையின் மீண்டும் சம்சாரம் அடைவுறாதாம்; மற்றோ, மோக்ஷமேயடைவுறும். இவ்வகை இவ்விரண்டினும் பல விசேடமாம். சிலர் கூறுவதாவது: - கருமபலத் தியாகத்தானே, கருமஞ் செய்யும் கருமியின்பாலும் சந்நியாசியென்னும் சப்தம் பிரயோகிக்கப்பட்டுளதாதலின், சந்நியாசி சப்தத்தானே, கருமபலத்தியாகஞ்செய்த கருமியையே கொள்க. அல்லாமலும், முன்னுரைத்த அநிஷ்டாதி மூவகைப்பலத்தைச் சந்யாசிகளிடத்தே நிடேதஞ்செய்யப்பட்டதும் சாத்விக்கருமிகள் பாற் சம்பவிக்கும். என்னை, நித்திய நைமித்திக கருமங்களைச் செய்யாமல், நிஷித்தகருமங்களைச் செய்தலின் உண்டாம் பாவ உற்பத்தி, சாத்விக கருமிகட்கு அவற்றை முறையே செய்தலின் செய்யாமையின் உண்டாகாதாம்; ஆகையால் அநிஷ்டபலப் பிராப்தியுண்டாகாதாம். அவர்கள் காமியகருமத்தைச் செய்யாமையின், ஈசுர அர்ப்பணமதியானே பல பரித்தியாகஞ் செய்தலின் இஷ்ட பலப் பிராப்தியுமுண்டாகாதாம்; இதனானே கலப்புப் பலமுமுண்டாகாதாம். இம்முறையே சாத்விக கருமிகட்கு மூவகைப் பயனுமுண்டாகாதாம். இதுபற்றியே சாஸ்திரத்திலுங் கூறப்பட்டுளது, முமுக்ஷ காமிய கருமத்திலும் நிஷித்தகருமத்திலும் பிரவிருத்தியான். மற்றோ, எவற்றைச் செய்யாமையானே பிரத்தியவாயமுண்டாமோ, அந்தப் பிரத்தியவாய மகற்று மவாவி னனாயந் நித்திய நைமித்திகங்களைச் செய்வன். இத்துணை மாத்திரையானே சமுசார் அபாவமாம். இங்ஙனம் ஏகபவிகவாத நீதியாய் ஸ்ரீ பகவானது வசனத்திற்கு வியாக்யானம் செய்பவர் பொருட்டு இது கூறுதல் வேண்டும்: சப்தத்தின் அர்த்தத்தின் மரியாதையை நீ நிண்ணயஞ் செய்திலைபோலும்; எதனானே ஸ்ரீ பகவான் வசனத்திற்கு நீ யிவ்வகை வியாக்யானஞ் செய்கின்றனையோ, ஆண்டுக் கௌண முக்கிய அர்த்தமத்தியில் யாதொரு பாதக மும் இலதாகவே முக்கியப் பொருளின் கண்ணே சப்தபோதமுண்டாம். இதுவோ சப்த மரியாதையாம். இங்குப் பிரசங்கத்தில் பல சகித் சர்வ கருமங்களின் தியாகியோ சந்யாசி சப்தத்திற்கு முக்கியப் பொருளாம். முக்கிய சந்நியாசியின் கண்ணே கருமபலத் தியாகித் தன்மையிருப்பதே போல நிட்காமகருமி புருடனிடத்தும் பலத்தியாகித்தன்மை யிருக்குமாதலின், அத்தன்மை வடிவ சமான குணத்தைக் கொண்டு அச்சப்தம் கருமி யின்பாலும் முயலுமாதலின் அவன் அதன் கெளண அருத்தமாவன். சந்நியாசி சப்தத்திற்கு முக்கியப் பொருள் கொள்வதில் யாதொரு பாதகமு மின்றாமாதலின் முக்கியப் பொருளையே ஈண்டுச சந்யாசி சப்தத்தாற் கோடல் தகுதியாம். இது சப்த மரியாதையாற் சித்தமாயதாம். காரண சாமக்கிரி யிருப்பக்காரிய உற்பத்தியாவசிய முண்டாம்; இது அர்த்தமரியதையெனப்படும். இதனானும் அம்முன்னறைந்த பொருளே கணியாம். அஃதாமாறு: - ஈசுரார்ப்பணமதியானே கருமபலம் விட்டவனும், மனத தூய்மையின் பொருட்டு நித்தியகரும் அனுஷ்டானஞ் செய்பவனும் ஆகியோன், மனத் தூய்மைவாயிலாய் ஞானநிஷ்டையை யடையாமல் மத்தியில் மரிப்பனேல், பூர்வ புண்ணிய பாவவயத்தானே மூவகைச் சரீரக்கவர்ச்சி வடிவச் சம்சார அடைவை எவனாலும் நீக்க முடியாதாம். புண்ணியபாவ வடிவக் காரணமிருப்பச் சரீரக்கிரகண வடிவக்காரியமவசியமுண்டாம். ஞான மில்லாதவன் அவசியம் புண்ணிய பாவவயத்தாற் பிறப்பன். இது சுருதியிலுமுளது: - ஹே கார்க்கி! இவ்வ - நரத்தை யறியாமல் எவன் இம்ம நுட லோகத்தினின்றும் செல்வனோ அவனைக் கிருபணனென்றேயறி. ஆகையால் மனத்தூய்மையின் பல பூத ஆத்மஞான முண்டாதற்பொருட்டு நிட்காமன் மநுடசரீர அடைவை யவசியம் அங்கீகரிக்க வேண்டியதேயாகும். இப்பொருள் முன் ஆறாவது அத்தியாயத்தில் நிர்ணயிக்கப்பட்டது. மனத்தூய் மையின் பின்னர் சாஸ்திரவிதி பூர்வகம் பல சகித சர்வ கருமங்களையும் பரித்தியாகஞ் செய்தவனாகிப் பிரஹ்மவேத்தாவாய குரு சமீபத்திற் சென்று அவர் வாயிலாய் வேதாந்த சிரவணஞ் செய்பவன். இடையில் மரித்திடின், ஆன்மஞானத்தையடையாத அந்த யோகப் பிரட்டனாகிய விவிதி ஷாசந்நியாசியானவன், யோகேசசையுடையனேல் ஸ்ரீமான்கள் வீட்டில் பிறப்பன்; யோகேசசையில்லனேல் பிரஹ்மஞானிகள் வீட்டில் பிறப்பன், என்னும் இவ்வியாவும் முன்னருளப்பட்டன. இதனால் இக்கைமுதிக நியாயம் சித்தமாம்: - ஆன்மஞானமற்ற சர்வ கருமத்தியாகியாகிய விவிதிஷை சந்யாசிக்கும் சரீரக்கிரகண மவசியமுண்டாமேல் ஆன்மஞானமற்ற கருமிக்கு அஃதுண்டாமென்பதிற் கூறவேண்டியதென்னையென்பதாம். ஆகையால் அஞ்ஞானிக்குப் பூர்வ கருமவயத்தால் சரீரக்கிரகண மின்றியமையா துண்டாம்; இது அருத்தமரியாதையானே சித்தித்ததாம். ஆகையால் சந்தியாசி சப்தத்தானே நிட்காம கருமியையே கவர்க என்னும் ஏகபவிக வாதிகளின் வியாக்கியானம் முற்றினும் அசங்கதமாம். முன்மொழிந்த ஸ்ரீமத் பாடியக்காரர் முதலியோரது வியாக்கியானமே சிறந்ததாம்.

ஈண்டு ஸ்ரீபகவானது திருக்கருத்து வருமாறு: - அகர்த்தர அபோக்தா பரமாநந்த அத்வித்ய சத்திய சுவப்பிரகாசமாகிய பிரஹ்மம் யான் என்னும் பிரஹ்மசாக்ஷாத்காரம் நிர்விகற்பமும், மகாவாக்கிய ஜன்னியமும் விசாரத்தாலே நிச்சயிக்கப்பெற்ற பிராமாண்யமுடையதும், எல்லாவகையாலும் அப்பிராமாண்ய சங்கையற்றதுமாம். அதனால் அஞ்ஞானம் அகலும்; அகலவே அதன்காரியங்களாய கர்த்திருத்து வாதி அபிமானம் மற்ற உண்மையாய முக்கிய சந்யாசியோ அவித்தையோடு கூடிய சர்வகரும அழிவாலே கேவலம் சுத்தசொரூபனாகி அந்நிமித்தக சரீரக்கவர்ச்சியை மீண்டும் ஒரு காலும் அடையான். எதனாலெனில் தத்துவவேத்தாவின் சர்வமயல்களும் அவித்தையாகிய காரணங்கெடவே கெடலினால் என்றறிக. அவித்தை யுடையவனும் கர்த்திருத்துவாதி யபிமானமுடையவனும் தேகமுடையவனும் ஆகியவனோ மூவகையினனாவன்; இராகத்துவேஷ தோஷமகிமையாலே தன்னிச்சையாலே காமியகருமத்தையும் நிஷித்த கருமத்தையும் செய்யும் மோக்ஷசாஸ்திர அந்திகாரி முதலாமவனாவன்; பூர்வஞ் செய்த புண்ணிய கருமவசத்தாலே சிறிது மாத்திரம் நஷ்டமடைந்த இராகாதியையுடையவனும், விதிபூர்வகம் சர்வகருமபரித்தியாகம் செய்வதில் அசமர்த்தமனாயினும், நிஷித்தகாமிய கருமங்களைப் பரித்தியாகஞ் செய்து மனத்தூய்மையின் பொருட்டுப் பல இச்சையைப் பரித்தியாகித்து நித்திய நைமித்திகங்களையே செய்பவனும் மோக்ஷசாஸ்திர அதிகாரியாய கௌண சந்யாசியும் ஆகியவன் இரண்டாமவனாவன்.

 

நித்திய நைமித்திக அனுஷ்டானஞ்செய்து மனத்தூய்மை பெற்றபின் விவீதிஷையடைந்தவனும், சிரவணாதி சாதனங்களாலே மோக்ஷசாதன ரூப ஆன்மஞான சம்பா தனஞ் செய்யும் வேட்கையனும் சாஸ்திரவிதி பூர்வகம் சர்வகரும் பரித்தியாகத்தால் வேதாந்த சாஸ்திர விசாரம் செய்யும் பொருட்டுச் சுரோத்திரிய பிரஹ்மநிஷ்ட குருவின் சாணத்தையடைந்த வனும் ஆகிய விதிஷா சந்யாசி மூன்றாமவனாவன். முதலாமவனுக்குச் சம்சாரித்தன்மை வெளிப்படையேயாம்; இரண்டாமவனுக்குச் சம்சாரித் தன்மை அதிஷ்டம் இஷ்டம் மிசிரமுமென்பதாலே யருளப்பட்டது. கடையவனுக்குச் சம்சாரித்தன்மை ஆறாவதத்தியாயத்தில் வினாவி நிண்ணயித் தருளப்பெற்றது. ஆகையால் அவித்தையாதிகாரணமிருப்ப அஞ்ஞானிக்குக் சம்சாரித்தன்மை யின்றியமையாதாம். ஒருவனுக்கோ ஞானப்பிரதிகூல சரீரமுண்டாம்; ஒருவனுக்கோ ஞானானுகூல சரீரமுண்டாம்; இத்துணை விசேடமாம் தத்துவமுணர்ந்தவனோ ரவித்தை முதலிய சமுசாரகாரணம் அபாவமாதலின் தானாகவே கைவல்லிய மோஷமடைவான் என்பதாக ஸ்ரீபகவானிச் சுலோகத்தில் இரண்டையுங் குறிப்பித்தருளினார்.

 

[ஆன்மஞானமில்லாத அஞ்ஞானியின் சம்சாரித்தன்மையில் கருமபரித்தியாக அசம்பவரூபஹேது முன்னர் அருளப்பெற்றது; அவ்வஞ்ஞானியின் கருமத்தியாக அசம்பவத்தில் யாது ஏதுவாம், எவ்வேதுவினாலே கருமத்தியாகம் செய்யமுடியாதவனாகின்றான் என அருச்சுனனுக்கு அறியும் அவாவரக் கருமஹேது பூத அதிஷ்டானதி ஐந்தனுள் அஞ்ஞானிகளின் தாதான்மிய அபிமானமே கருமத்தியாக அசம்பவத்திலே துவாம் என்னும் பொருளை யிப்போது ஸ்ரீபகவான் நான்கு ஈலோகங்களால் வருணித்தருளுகின்றார்: அவ்வைந்தும் வேதாந்த சாஸ்திரத்தைப் பிரமாணமாக வுடையதாம். அவற்றை நீக்கும் பொருட்டு இன்றியமையாதுணரத் தக்கதாம் என்னும் பொருளை முதற் சுலோகத்தி லருளிச்செய்கின்றார்.]

 

ஹே பெருந்தோளையுடைய வீரனே சர்வகருமசித்தியின் பொருட்டுக் கூறப்புகும் அதிஷ்டானாதி ஐந்து காரணங்களை எமது மொழியால் நிச்சயஞ்செய்தி. அவை சர்வகரும சமாப்தியையுடைய வேதாந்த சாஸ்திரத்தில் இயம்பப்பெற்றுளது.

 

ஹே அருச்சுன! இலௌகிக வைதிக கருமசித்தியின் பொருட்டுக் கூறப்படும் அதிஷ்டானாதி ஐந்து காரணங்களைச் சர்வஞ்ஞபரமேசுரராகிய நமது வசனத்தால் நிச்சயஞ்செய்தி, அதாவது அவ்வைந்தின் வடிவத்தையுணர நீ சாவதானனாயிருத்தி. அவை முற்றிலும் அறியத்தகாதனவல்ல; மற்றோ, ஒருமை மனத்தனா லுணரத்தக்கனவேயாம். அவற்றையறிவால் மனத்தை யொருமைப்படுத்தி யருளுவார் ஸ்ரீ பகவான் அவ்வைந்தையும் துதித்தருளினார்; ஹே மகா பாகோ என்னும் விளியால் அவற்றின் றுதியின் பொருட்டு இப்பொருள் குறிப்பித்தருளப்பெற்றது; இவ்வைந்தையுமுணர்வதில் மகாபராக்கிரமமுடைய சிரேஷ்ட புருடனே சமர்த்தனாவன்; அசிரேஷ்டன் சமர்த்தனாகான்,

 

நீயும் மேன்மைமிக்கவனாதலின் அவற்றை அறிவதில் ஆற்றல் உடையவன் ஆவாய். அவ்வைந்தும் தேவரீரது திருவாக்காலறியத்தக்கனவேயா? அல்லது அவற்றில் வேறு பிரமாணமும் உளதா? எனவுண்டாம் சங்கையை நீக்கித் தந்திருவாக்கில் நம்பிக்கை வருதற்கு வேதாந்த சாஸ்திரப் பிரமாணத்தையவற்றில் அருளினார். விரஹ்மாநந்தரூப நிரதிசய புருடார்த்த அடைவின் பொருட்டும் ஜன்மமரணாதி சர்வ அநர்த்த நிலிருத்தியின் பொருட்டும் அறியத்தக்கதாகிய ஜீவப்பிரஹ்ம ஒருமையுணர்ச்சிக்கு உபயோகமான சிரவணாதிசாதன முதலிய பதார்த்தங்களைக் கூறும் சாஸ்திரம் உபநிஷத் வடிவமான வேதாந்தமென்னும் சாங்கியமாம். அதன்கண் அவ்வைந்தும் அறையப் பெற்றுள்ளனவாம். சர்வகருமங்களையும் சாதனமாகக் கூறுவதும் பின் சருவகருமங்களையும் விடுமாறருளுவதும் ஆகிய வேதாந்த சாஸ்திரம் அவ்வைந்தையும் அறையும். அவற்றை யுலகத்தார் மயலுணர்ச்சியாலே ஆன்மரூபமாய்க் கவர்ந்துளார். அவ்வைந்தையும் ஆன்மதத்துவ ஞானத்தாலே பாதஞ் செய்யும் பொருட்டுப் பரித்தியாச்சிய ரூபத்தால் வேதாந்த சாஸ்திரம் விளம்புகின்றதேயல்லாமல் அவற்றை வெறிதே கூறுவதிற் கருத்தின்றாம். அத்விதீய ஆன்மாவைக் கூறுவதன்கண்ணே அதற்குக் கருத்தாம். கருத்திதுவாம். - தேகாதி யனான்மபதார்த்தங்களின் தரும ரூப கருமமே அசங்க ஆன்மாவின் கண் அவித்தையாலே அத்தியாரோபிதமாம். உண்மையிலின்றாம். இவ்வாறு வேதாந்த சாஸ்திரம் ஆன்மாவின் வாஸ்தவவடிவப் பிரதிபாதனஞ் செய்கின்றபோது சுத்த ஆன்ம ஞானத்தாலே அத்தியாரோபித கருமம் பாதமாதலின், சர்வகருமங்களின் அந்தஞ் செய்யப்படும். அதிஷ்டான ஆன்மஞானமின்றி வேறெவ்வுபாயத்தாலும் கருமாந்தஞ் செய்யமுடியாதாம். இதனாலே அசங்க ஆன்மாவின்கண் அக்கரும அசம்பந்தத்தைப் பிரதி பாதிக்கும் பொருட்டு மாயாகற்பித அநான்ம பூத பஞ்சகருமகாரணம் வேதாந்த சாஸ்திரத்தி லனுவதிக்கப்பட்டுளதாமன்றி அதைப் பிரதிபாதிப்பதிற் கருத்தின்றாம். ஆகையால் அத்வைத ஆன்மாமாத்திரத்திற் கருத்தாம். அக்கருத்திற்கு இங்கு ஆனியுண்டாகாதாம். ஆதலின் ஸ்ரீபகவான் வேதாந்த சாஸ்திரத்தில் கருமாந்தத்தன்மையை யருளினார்; இதனை முன்னருங்கூறி யருளியுள்ளார்.

 

[வேதாந்த சாஸ்திரத்தைப் பிரமாணமாகவுடைய கரும்பஞ்சகாரணம் ஆன்மாவிற்கு அகர்த்தாத்தன்மை சித்திக்கும் பொருட்டுப் பரித்தியாச்சிய ரூபத்தாலே அறியத்தக்கதென்பது முன்னருளப்பெற்றது; அவ்வைந்தும் யாவையென அறியும் வேட்கை யருச்சுனனுக்கு உண்டாகியவழி ஸ்ரீ பகவான் அருளல்.]

 

ஹே அருச்சுன! அதிஷ்டானமும் கர்த்தாவும் நானாவகையாய கரன் மும் நானாவகையாய பின்னாபின்ன சேஷ்டையும் இக்காரணங்களில் ஐந்தாவதாகிய தைவமும் ஆகிய ஐந்தும் கருமகாரணமாம்.

 

ஹே பார்த்த! இச்சை, துவேஷம், சுகம், துக்கம், சேதனம் என்பதாதி தரும அபிவியக்தியாசிரயரூப பஞ்சீகிருத பஞ்சபூதங்களின் காரிய ரூப தூல சரீரத்திற்கு அதிஷ்டானமெனப் பெயராம்; யான் கருத்தாவென அபிமானமுடைய ஞனாசக்திப்பிரதான அபஞ்சீகிருத பஞ்சமகாபூதங்களின் காரியரூபம் அகங்காரமாம். அது அந்தக்கரணம் புத்தி விஞ்ஞானம் என வழங்கப்பெறும்; அது ஆன்மாவோடு தாதாத்மிய அத்தியாசத்தால் தன்பாலிருக்கும் கர்த்திருத்து வாதிகளை ஆன்மாவின்கண் ஆரோபிக்கும். அதுவே கர்த்தாவெனப்படும். அக்கர்த்தாவின் பால் முன்மொழிந்த சரீரரூப அதிஷ்டான ஒப்புமையுண்டாம். சரீரரூப அதிஷ்டானம் அநான்மாவும் ஆகாயாதிகளின் காரியமும் கனாப்பொருள் போல மாயையால் உண்டாக்கப்படுவது போல அகங்கார கருத்தாவும் ஆம்

கருத்திதுவாம்: - தூலதேகத்தை யுலகாயதன் ஆன்ம வடிவமாய்க் கொண்டானேனும், வேறு நூலுணர்ந்தவர் அனான்மாவாகவே நிச்சயித்துள்ளார். அத்தகையதைக் கர்த்தாவில் திருஷ்டாந்தமாகக் காட்டியபோது தார்க்கிகன் ஆன்மரூபமாய்க் கவர்ந்த கர்த்தாவில் அநான் மரூபத்தன்மை நிச்சயம் மிகவும் எளிதென்பதாம். அபஞ்சீகிருதபூதங்களினின்று முண்டாய சப்தாதிவிடயத் தோற்றத்தின் சாதன ரூபச் செவியாதி புலன்கள் கரணங்களாம். அவை தனித்தனியாம் ஞானேந்திரியம், கருமேந்திரியம், மனம், புந்தியென நானாவாம். நூலில் மனாதி நான்கையே அந்தக் காண பேதத்தானே அறைந்திருந்த போதினும் காணவர்க்கத்திலிருக்கும் மனம் புத்தியிரண்டும் அகங்கார விருத்தி விசேடமாகக் கொள்க. அவ்விருந்திகளோடு கூடிய அந்தக்கரணரூப அகங்காரமோ கேவலம் கருத்தாரூபமேயாம்; கரணரூபமல்லவாம். சேதன ஆபாசமோ எவ்விடத்தும் சமமேயாம். அந்தக்கரணரூப அகங்காரத்திற் கருத்தாத்தன்மை சுருதிகளில் வெட்ட வெளியாம். சரீரரூப அதிஷ்டானம் அகங்காரரூப அதிஷ்டானம் அகங்காரரூபகருத்தா அனான்மரூபமும் பௌதிகமும் கற்பிதமும் ஆவதேபோல இப்பன்னிரண்டுவகைக் கரணமும் ஆம். கிரியாசக்திப் பிரதானமாகிய அபஞ்சீகிருத்தங்களின் காரியரூபமும், கிரியைப் பிரதானத்தன்மை ரூபத்தானும் வாயுவின் சம்பந்தித்தன்மை ரூபத்தானும் கூறப்பெற்றதும் ஆகிய பிராணாதி சேஷ்டையாம்; நானாவிதமாம். பிராணன் அபானன் வியானன் உதானன் சமானன் என ஐந்து வகையாம்; அல்லது நாகன் கூர்மன் கிரு கலன் தேவதத்தன் தனஞ்சயன் என்னும் ஐந்தையுஞ் சேர்த்துப் பத்து வகையாம்; நாகாதியைந்தும் பிராணாதியி லடங்குவனவேயாம். ஆகலின் அநேக இடங்களில் ஐந்து பிராணனே கூறப்பெறும். அச்சேஷ்டை தனிப்பட்டு இடவேற்றுமையானும் காரியபேதத்தானும் பின்ன பின்னமாம். அறைந்த அதிஷ்டானம் கருத்தா கரணம் என்னும் மூன்றும் அனான் மரூபமும் பெளதிக்ரூபமும் மாயாகற்பிதமும் ஆமாறு இச்சேஷ்டையுமாம். துயிலின்கண்ணே கருத்தாரும் அந்தக்கரண மிலயமாயினும் பிராணவியாபாரம் காண வரும், பல இடங்களில் பிராணன் அந்தக்கரணத்தினும் வேறாகவே கூறப்பெற் றிருக்கின்றதாதலின் இரண்டும் அத்தியந்தம் வேறென்பர் சிலர். கிரியாசத்தியையுடையதும் ஞானசக்தியையுடையதும் ஆகிய ஒரே அபஞ்சீகிருதகாரியஞ் சேதனத்தைச் சீவனாக்கு முபாதியாம். அவ்வொரே காரியம் கிரியாசக்தி முக்கியத்தானோ பிராணன் எனவும், ஞானசக்திப் பிரதானத்தானோ அந்தக்கரணமெனவும் பெறும். ஏனெனின், சுருதியில், உத்கிராந்தி (கிளம்புல்) திதியாதிகளின் உபாதித்தன்மை பிராணனிடத்திற் கூறப்பெற்றுளது. வேறு சுருதிகளில் அவ்வுத்கிராந்தி முதலியவற்றின் உபாதித்தன்மை அந்தக்கரணரூப உபாதியின்கண்ணே கூறப்பட்டது. இங்கு, பிராணன் அந்தக்கரணம் என்னும் இரண்டு பாதி கட்கும் சுதந்திரமாகவே பேதமங்கீகரிக்கின் ஜீவான்மாவிற்கும் பேதவடைவாம். ஜீவபோதம் வேதாந்த சித்தாந்தத்தில் அங்கீகாரம் இன்றாமாத லின் அந்தக்கரணம் பிராணன் என்னும் இரண்டிற்கும் ஏக ரூபமாகவே உத்கிராந்தியாதிகளின் உபாதித்தன்மை பொருத்தமாம், கூறிய பேதமோ அவற்றின் ஒருமையின் கண்ணும் கிரியாசக்தி ஞானசக்திகளின் பேதத்தானே சம்பவமாம். துயிலில் ஞானசக்திபாகம் இலயமாயினும் கிரியா சக்திபாகதரிசனமோ அவற்றின் ஏகபாவத்தின் கண்ணும் முரணுறாதாம். திருஷ்டி சிருஷ்டி இலயத்தில் சர்வ இலயமாயினும் பிராண வியாபாரமுடைய துயில்வோனது தேகம் அன்னியரானே இவன் துயில்கின்றான் எனக் கற்பிக்கப்படுகின்றது. ஆகையால், இருவகையானும் பிராணன் அந்தக்கரணம் என்னுமிரண்டின் பேதம் கூறல் கூடியதேயாம் முன் மொழிந்த சரீரரூப அதிஷ்டான, அகங்காரரூபகத்தால் 12 வகையாய கரணம், பிராணாதிரூப சேஷ்டை என்னும் யாவற்றிற்கும் மேலாக முறையேயனுக்கிரகம் செய்யும் தேவதைகள் தைவமெனப்படும் அது காரணவர்க்கத்தில் ஐந்தாவதாம். கூறிய அதிஷ்டானாதிகளைப் போலத் தைவமும் அனான்மரூபமும் பௌதிகமும் மாயா கற்பிதமும் ஆம். ஆண்டுக்கருத்தர கரணம் சேஷ்டையென்னும் மூன்றினுக்கும் அதிஷ்டானமாகிய சரீரத்திற்கோ பிருதிவி தேவதையாம். ஏனெனின், சுருதியில், வாக்கு முதலியவற்றின் அதிஷ்டாதா அக்கினியாதிகளோடு சரீரத்தின் அதிஷ்டாதா ரூபத்தானே பிருதிலி படிக்கப்பெற்றுளதாம், ஆகையால் இச்சுருதிப் பிரமாணத்தானே சரீரரூப அதிஷ்டானத்தின் தேவதை பிருதிவியேயெனத் துணியப் பெறும். கருத்தாரூப அகங்காரத்திற்கு ருதரதேவதையாம். இது புராணாதிகளிற் பிரசித்தமாம். இவ்வாறு சுரோத்திராதிகரணங்களின் தேவதையும் வெளிப்படையேயாம். செவி முதலியவற்றிற்கு முறையே, திக்குவாத அருக்க பிரசேதா அசுலி நீ என்னும் ஐந்தும் தேவதைகளாம். வாக்காதி யைந்திற்கும் முறையே வன்னி இந்திரன் உபேந்திரன் மித்திரன் விபரீதம் வாக்காலே பகவான் கூறிய கூறியுள்ளாராக பிரஜாபதியென்னும் ஐவர் தேவதைகளாம். மனமதிகட்குச் சந்திரனும் பிரகஸ்பதியும் தேவதைகளாவார்கள். பிராணாதியைந்திற்கும் முறையே, சத்யோஜாத வாமதேவ அகோரதத்புருஷ ஈசானதேவதைகள் ஆவார்கள் என்பது புராணப்பிரசித்தமாம். ஒருரையில் தைவசப்தத்தானே தரும் அதருமம் கவரப்பெற்றுள்ளது.

 

[பூர்வசுலோகத்தில் அவ்வதிஷ்டானாதி ஐந்து காரணங்களின் சொரூபங் கூறி யருளப்பெற்றது. இப்போது இம்மூன்றாவது சுலோகத்தால் ஸ்ரீ பகவான் அவ்வைந்திலும் சருவகரும காரணத்தன்மையைக் கூறி யருளுகின்றார்]

 

ஹே அருச்சுன! இப்புருடன் சரீரம் வாக்கு மனம் என்னும் மூன்றால் தருமத்தையேனும் அதருமத்தையேனும் ஆரம்பிப்பன்; அவ்வியாவற்றிற்கும் அதிஷ்டானாதி யைந்துமே காரணமாம்.

 

தேகத்தாலாயது வாக்காலாயது மனத்தாலாயது என விதிநிடேத் ரூப மூன்று வகையே கருமம் தருமசாஸ்திரத்திற் பிரசித்தமாம். அக்ஷபாத முனிவரும் மூவகையே கருமத்தைக் கூறியுள்ளாராதலின் பிரதானத்திற் கருத்தை வைத்து ஸ்ரீ பகவான் கூறியுள்ளார். அதிகாரியானவன் சரீரத்தாலேனும் வாக்காவேனும் மனத்தாலேனும் நியாயரூபகருமத்தையேனும், விபரீதரூப கருமத்தையேனும் தொடங்குவன். எல்லாக் கருமங்கட்குமே உரைத்த ஐந்துமே காரணமாம். சுருதி மிருதிரூப சாஸ்திரத்தில் விதிக்கப்பட்ட அக்கினிஹோத்திராதிதருமம் நியாயமாம். அவற்றானே நிடேதிக்கப்பட்ட ஹிம்சாதியதருமம் விபரீதமாம். ஜீவன ஹேது பூதமாகிய உசுவாசம் நிசுவாசம் நிமேஷம் உன்மேஷம் க்ஷ பதம் ஜிரும்பணம் என்பதாதி இயற்கை யாய கருமங்களும் பிறவும் ஆகிய விதிடே தசருவகருமங்களும் தரும அதருமங்களின் காரிய ரூபங்களேயாமாதலின் அவையாவுமே நியாயம் அநியாயம் என்னு மிரண்டிலே யடங்கும். ஆகையால், ஸ்ரீபகவான் றிருவாக்கிற் குறைவுண்டாகாதாம். சாத்திரத்திற்கும் சாத்திரத்திற் கூறிய கருமத்திற்கும் மநுடனே அதிகாரி; இப்பொருளை யுணர்த்தும் பொருட்டு ஸ்ரீபகவான் மனுடவாசகநர: என்னும் சப்தத்தைக் கூறியருளினர். ஒருரையிலோ இச்சுலோகத்திற்கு இப்பொருள் இயம்பப்பெற்றுளது: - - சரீராதிகளானே தொடங்கப்பெற்ற கருமம் என்னும் வசனத்தானே பின்னர் அச்சருவகருமங்களின் அதிஷ்டானாதி ஐந்து காரணமாம் எனக் கூறன் மிகமுரணாம். ஈண்டுச்சரீரம் என்னும் பதத்தானே அதிஷ்டானத்தைக்கவர்க; நா : என்பதானே கருத்தாவைக்கொள்க; வாங்மக : என்றதானே கரணங்கவர்க; ப்ராரபதே என்னும் பதத்தானே சேஷ்டையைக் கவர்க. ந்யாயம்வா வியரீதம்வா என்னும் வசனத்தானே தரும அதருமரூப தைவத்தைக் கொள்க. சருவகருமங்களினும் அதிஷ்டானாதியைந்து காரணங்களின் உபயோகம் சமானமேயாம். இவ்வைந்துமிலாது எக்கருமமும் துணியப் பெறாதாமாயினும் சுருதியாதிகளில் விதிநிடே தரூப சாரீரவாசிகமானசிகம் என்னும் மூவகையே கருமம் பிரசித்தமாம் ஆகலின் இது சாரீரம் என்பதாதியாகக் கூறல் அவ்வத்தேகாதிகளின் பிரதானத்தன்மையை யபேக்ஷித்தாமன்றி யக்கூற்று அச்சரீராதி கருமங்களில் அதிஷ்டானாதிகளின் ஹேதுதையை நீக்கமாட்டாதாம் என்றறிக; ஆகையால், சிறிது மாத்திரையும் ஈண்டு முரண் இன்றாம்

 

[முன்மொழிந்த அதிஷ்டானாதிகட்கே சர்வகர்மங்களின் கருத்தாத்தன்மை கூடலின், அசங்க ஆன்மாவிற்குக் கருமங்களின் கருத்தாத்தன்மை யின்றாம். இவ்வண்ணம் ஆன்மாவின்கண் அகர்த்தாத்தன்மை ஞானமும் அதிஷ்டானாதிகளிற் கர்த்தாத்தன்மை ஞானமுமே அவ்வைந்தின் நிரூபண பலமாம்; அப்பயனை யிப்போது ஸ்ரீ பகவான் ஆன்மாவைக் கர்த்தாவென வெண்ணும் மூடரையிகழும் வாயிலாகக் கூறியருளுகின்றார்.]

 

ஹே அர்ச்சுன! அச்சர்வகர்மங்களிலும் அதிஷ்டானாதிகளால் ஜன்யத்தன்மையிருந்த போதினும் எம்மூடன் அசங்க உதாசீன ரூபமேயாகிய ஆன்மாவைக் கர்த்தாரூபமாய்க் காண்பனோ, அத்துர்மதி சாஸ்திர ஜன்னிய விவேகபுத்தியற்றவனாதலிற் காணான்.

 

ஹே அர்ச்சுன! முற்கூறிய தரும அதருமரூ0 சர்வகருமங்களிலும் கூறிய அதிஷ்டானாதிகளானே ஜன்னியத்தன்மை சித்தமாயினும் உண்மையாய்ச் சங்க உதாசீனரூபமேயாய ஆன்மாவை யெம்மூடன் கருத்தாவாய்க் காண்கின்றனனோ; அதாவது சர்வ ஜடவுலகையும் விளக்குவதும், இருப்பு விளக்க வடிவமும், சுவப்பிரகாச பரமானந்தகனமும், பாதமற்றதும், அசங்கஉதாசீனமும், அகர்த்தாவும், அவிக்கிரியமும், அத்விதீயமும், ஆகியுண்மையாயிருப்பினும் ஆன்மா அவித்தையினானேமொழிந்த அதிஷ்டானாதிகளில் பிரதிபிம்பிதமாம். சூரியன் நீரில், பிரதிபிம்பித்தலே போலும். நீர்முதலியவற்றை விளக்கும் சூரியன், அவற்றினும் அயலாயினும் நீரோடு சூரியனுக்குத் தாதாத்மிய பாவத்தைக் கற்பித்து மூடன் ஜலத்தின் சலனத்தால் சூரியன் சலிப்பதேயாக எண்ணுகின்றதேபோல அதிஷ்டானாதிகளை யொளிர்விக்கும் அசங்க அத்விதீய ஆன்மாவிற்கு அதிஷ்டானாதிகளோடு தாதாத்மிய பாவத்தைக் கற்பித்து அவற்றின் கருமத்தை ஆன்மாவின்கண் ணாரோபித்து யானே கருத்தன் எனச் சருவசாக்ஷரூபமாய் ஆன்மாவையும் கிரியைக்காசிரயமாகக் காண்பன். கருத்திதுவாம்: -

இரஜ்ஜுலின் உண்மை வடிவத்தை யுணராமல், சர்ப்பமாய்க் காண்பதேபோல ஆன்மாலினுண்மையாய அசங்க அகர்த்துருரூபத்தைக் காணாமல் அவித்தையினானே அதனைத் தேகாதிகருமாசிரயரூபமாய்க் காணும் மயக்கமுடையவன் இவ்வண்ணம் ஆன்மாவைக்காணினும் கண்டிலன். இரஜ்ஜுவைச் சர்ப்பரூபமாய்க் காணினும் மயங்கியவன் கண்டிலாததே உண்மையாய் அசங்க உதாசீன அகர்த்தான்மாவைக் கர்த்தாரூபமாய்க் காணினும் மயங்கியவன் கண்டிலன். மூடன்மயக்கத்தானே யான்மாவை விபரீதமாகவே காண்பன், உண்மை வடிவத்தைக் காணான் என்பதில் ஏதுயாதாம் எனச் சங்கையருச்சுனனுக் குண்டாக ஸ்ரீ பகவான் அவ்விபரீத தரிசனத்தின்கண் ஏதுவைக் கூறியருளுகின்றார்: -

 

குருசாஸ்திர வுபதேசத்தானே உண்டாகாத விவேகமதி யெவனுக்கோ அவன் அகிருதபுத்தியாம்; அத்தகையனாதலின் அவன் ஆன்மாவை விபரீதமாகவே காண்பன்; அதாவது உண்மையாய் அசங்க உதாசீன அகர்த்தாரூபமாயினும் ஆன்மாவை மயங்கியவன் கருத்தாரூபமாகவே காண்பன். கருத்திதுவாம்: - இரஜ்ஜுவின் உண்மை வடிவம் சாக்ஷாத்தாகப்பாராதவரை பாம்புமயலை எவ்வுபாயத்தானும் நீக்கிக்கொள்ள முடியாததே போலச் சத்தியஞான அநந்த அகர்த்தா அபோக்தா பரமானந்த மூவவத்தையற்ற அசங்க உதாசீனப்பிரஹ்மம் யானெனப் பிரஹ்ம சாக்ஷாத்காரம் குருசாஸ்திர உபதேசத்தானே உண்டாகாதவரை அக்கர்த்திருத்துவமயலை எவ்வுபாயத்தானேனும் நீக்க முடியாதாம். குருசமீபஞ் சென்று வேதாந்தவாக்கியத்தை விசாரித்து இங்ஙன் பிரஹ்மான் மசாக்ஷாத்காரத்தை யேன் உண்டாக்கிக் கொள்ளவில்லை யென்றுண்டாம் அருச்சுனன் சங்கைக்கு விடை யருளுகின்றார்: -

 

விவேகத்தின் றடையாகிய பாவ கருமங்களானே அசுத்த அந்தக்கரணமுடையவன் துர்மதியாவன்; அதனானே பிராந்தன் குருவையடைந்து சிரவணஞ் செய்திலன்.

 

கருத்திதுவாம்: - பாவகருமங்களானே அசுத்தபுத்தியையுடையவன் ஆகலின் நித்தியாநித்திய வத்துவிவேகாதிகள் இன்மையினானே பிரஹ்மான்ம ஞானத்திற்குத் தகாமையானே அவித்தையான் மயங்கியோன் அகர்த்தாரூப ஆன்மாவையும் கர்த்தாரூபமாய்க் கற்பித்தும், கேவலரூப ஆன்மாவை அகேவலரூபமாய்க் கற்பித்தும், கருமகருத்தா ரூபமாகிய அதிஷ்டானாதிகளில் தாதாத்மிய அபிமானத்தானே கருமங்களைத் தியாகஞ்செய்வதில் அசமர்த்தனாகி யதனானே சம்சாரி கருமத்தின திகாரி தேகபிருத்து அகிருத புத்தியென்பனவாகப் பல பெயர்களையுற்று எல்லாவகையானும் ஜன்ம மரண அடைவானே அநிஷ்ட இஷ்ட மிசிரம் என்னும் மூவகையாய கரும பலத்தையே யனுபவிப்பன், இத்துணையானே தேகாதிகளினும் வேறாகிய ஆன்மாவையே கேவலம் கர்த்தாவாகக் காணும், தார்க்கீகனும் அகிருத புத்தியேயென் றறிக வென்னும் பொருள் அறிவித்தருளப் பெற்றதாம் ஒரு வாதியோ இதற்கு இப்பொருள் செய்வன்: - ஆன்மா கேவலம் கருத்தாவன்றாம் : மற்றோ, முன்மொழிந்த அதிஷ்டானாதிகளோடு சேர்ந்த ஆன்மா கருத்தாவாம்; இவ்வாறுண்மையாய் அதிஷ்டானாதிகளோடு கூடிக் கர்த்தாத்தன்மையை யடைவுற்ற ஆன்மாவைக் கேவலம் கர்த்தாவாகக் காண்பவன், அதாவது அதிஷ்டானாதிகளின் சம்பந்தமின்றிக் கேவலம் ஏக ஆன்மாவையே கர்த்தாவாகக் காண்பவன் துர்மதியாவன். இவ்வாறாய பொருள் கேவலம் என்னும் சப்தப் பிரயோகத்தானே சித்தமாம். இவ்வாதி பொருள் நல்லதல்லவாம். ஏனெனின் சர்வக்கிரியைகளு மற்ற அசங்க ஆன்மாவிற்கு அதிஷ்டானாதிகளோடு சேர்க்கையே கூடாதாம். ஜலசூரியனைப்போல அவற்றோடு அசங்க ஆன்மாவிற்கு அவித்தையின் சம்பந்தத்தாலுண்டாய கலப்புடன்படினோ அங்ஙன் சேர்தலான் ஆன்மாவின் கண் அக்கர்த் துருத்துவமும் அதிஷ்டானாதிகள் யாவும் ஆவித்யகமேயாம்; கற்பித அவற்றோடு ஆன்மாவின் வாஸ்தவசம்பந்தத்தன்மை சம்பவியாதாம். கேவலம் என்னும் சப்தமோ, இயற்கையானே சித்தித்த ஆன்மாவின் அசங்க அத்விதீய வடிவத்தை அனுவாதஞ் செய்கின்றது ஆன்மாவைக் கர்த்தாவென அங்கீகரிப்பவன்பால் துன்மதித்தன்மையை யுணர்த்தும் பொருட்டாம்; ஆகையாற் கேவலம் என்னும் சப்தத்தானே வாதியினர்த்தஞ் சித்தியாதாம்.

 

[அருளிய நான்கு சுலோகங்களால் 12 வது சுலோகத்தின் மூன்று பாதங்களை வியாக்கியானித்தருளி இப்போது நான்காவது பாதத்தை வியாக்கியானித் தருளுகின்றார்]

 

(முக்கிய சந்நியாசிகட்கோ ஒருகாலும் அம்மூவிதபலன் அடைவுறாவாம், என்பது 12 வது சுலோகத்தின் நான்காவது பாதமாம். ஆனந்தபோதினி 210 வது பக்கம்.)

 

ஹே கௌந்தேய! எவ்வறிஞனுக்கு யான் கருத்தாவென்னும் விருத்தி யுண்டாகவில்லையோ, மதிபற்றுறுவதில்லையோ, அவ்வறிஞன் இவ்வுலகங்களைக் கொன்றும் கொல்வதில்லை; பந்திக்கப்படவுமாட்டான்.

 

ஹே பார்த்த! முற்சுலோகத்திற்கூறிய துர்மதியினும் அத்தியர்த விலக்ஷண அதிகாரியானவன் பூர்வபுண்ணிய கருமத்தானே விவேக விரோதியாய பாவகருமங்களை யொழித்து விவேக வைராக்கிய சமாதி ஷட்சம்பத்து முமுக்ஷதையென்னும் நான்கு சாதனங்களை யடைந்து குருசாஸ்திர உபதேசத்தானே உண்டாய அகர்த்தா, அபோக்தா, சுவப்பிர காச, பரமானந்த, அத்விதீயப் பிரஹ்மம் யான் என்னும் பிரஹ்ம சாக்ஷாத் காரமடைந்தவனுக்கு அகங்காரபாவம் நஷ்டமாம்; அதாவது தத்துவ சாக்ஷாத்காரத்தானே காரியசகித அஞ்ஞானம் பாதிதமாகவே யான் கருத்தா என்னும் விருத்தி ஒருகாலும் உண்டாகாதாம். தத்துவ வேத்தாவினுடைய சற்பாவம் அகம் எனக் கூறல் தகுதியல்லவாம். ஏனெனின் தத்துவசாக்ஷாத்காரத்தானே அகங்காரம் பாதமாகவே தத்துவஞானியின்
சுத்தசொரூபமாத்திரமே எஞ்சியதாய் நிற்கும். அதன்கண் மனவாணியின் விடயத் தன்மையில்லையாம். தத்துவமுணர்ந்தவனுக்கு அகங்காரத்தன்மையாகிய தாதாத்மிய அத்தியாசமின்றாம்; ஏனெனின், தத்துவவேத்தாவின் சாதாத்மிய அத்தியாசம் விவேகத்தால் நீங்கிவிட்டதாகும். விவகாரகாலத்திற் றத்துவவித்தின் கண்ணும் பாதித அனுவிருத்தியானே கருத்தாத் தன்மை தோற்றுமாயினும் இவ்வாறு ஆராய்ந்து தன்னான்மாவின்கண் கர்த்தாத்தன்மையை எண்ணான்; மற்றோ, முன்மொழிந்த அதிஷ்டானாதிகளிலே கர்த்தாத்தன்மையை யெண்ணுவன். அவ்வாராய்ச்சி: - சர்வான்ம ரூப என்னிடத்தில் மாயையாற் கற்பிக்கப்பட்ட அதிஷ்டானாதிகளைக் கற்பித சம்பந்தத்தானே சுவப்பிரகாச அசங்கசைதன்யனாகிய யானே யொளிர்விக்கின்றேன். அதிஷ்டானாதிகளே சருவகருமங்கட்குங் கருத்தாவாம் அசங்கனாகிய யான் ஒருகாலும் கருத்தாவல்லன். யான் அக்கருத்தாவிற்கும் வியாபாரங்கட்கும் சாக்ஷி பூதன். கிரியாசக்தியையுடைய பிராணரூப உபாதியும், ஞானசக்தியையுடைய அந்தக்கரண ரூப உபாதியும் அற்றவன் சுத்தன், சர்வகாரியகாரண சம்பந்தமற்றவன், கூடஸ்த நித்தியன், சர்வதுவைதமற்றவன், ஜன்மமரணாதி சர்வவிகாரங்களுமற்றவன். இத்தகைய எனது சொரூபத்தைச் சுருதிகளும் ஸ்மிருதிகளும் பிரதிபாதிக்கின்றன வாதலின் அசங்க ஆன்மாவாகிய யான் கருமங்களின் கருத்தாவல்லேன் என ஆராய்ந்து தத்துவமுணர்ந்தவன் அசங்க ஆன்மாவைக் கருத்தாவென வெண்ணாது கூறிய அதிஷ்டானாதிகளையே கருத்தாவென வெண்ணுவன். இதனானே யவனது மதி பற்றடைவதில்லை. அதாவது, தத்துவவேத்தாவின்மதி அனுசயவாலியாகாதாம். இக்கருமத்தை யான் செய்கின்றேன்; இதன் பயனை யான் அநுபவிப்பேன் என்னும் அநுசந்தானம் கர்த்தா போக்தாத் தன்மையின் வாசனை வடிவ நிமித்தத்தானே ஜன்னியமாம். அவ்வனு சந்தான ரூபப்பற்றிற்கு அனுசயமெனப் பெயராம். அது புண்ணிய கருமத்திலோ ஹர்ஷரூபமாம் பாவகருமத்தில் பச்சாத்தாபரூபமாம் என்னும் இருவகை இலயத்தால் தத்துவஞானியின் புத்தி பொருந்தாதாம். ஏனெனின் அகர்த்தா அபோக்தாவாகிய ஆன்மாவின் சாக்ஷாத்காரத்தானே கர்த்துருத்துவ போக்துருத்துவ முதலியவை நீங்கிவிட்டனவாமாதலின் அவன் மதி பற்றுறாதாமென் றுணர்க.

 

சுருதி கூறுவதாவது: - அஞ்ஞானியை ஆற்றிய பாவமும் ஆற்றாத அறமும் தாபப்படுத்துவதே போலப் பிரஹ்மவேத்தாவாய அறிஞன் செய்த பாவமும் செய்யாத புண்ணியமும் தபிப்பியாவாம். இப்பிரஹ்ம வேத்தாவிற்கு மகாப்பிரபாவமுளது, புண்ணியத்தானே மகிழான், பாவத்தானே பரிதவியான், யான் பிரஹ்மரூபனெனப் பிரத்தியக்க பின்னப் பிரஹ்மத்தைச் சாக்ஷாத்கரித்துத் தத்துவவேத்தா புண்ணியத்தோடு பற்றுறான். நீரிலுறுந் தாமரையிலையை நீர் பற்றுறாததேபோலத் தத்துவவேத்தாவைப்
புண்ணிய பாவம் பற்றுறாவாம். இத்துணையானே இப்பொருள் துணியப் பெறும்: - அகங்காரத்தை யடையாதவனும், மதியிற் பற்றுறாதவனும் ஆகிய தத்துவவேத்தாவானவன் துர்மதியினும் விலக்ஷணசுமதியாவன். தமா என்ன கொல்லட்டான் காண்பன்; ஒருகாலும் கர்த்தாவெனவெண்ணான். அவனுக்குக் கர்த்திருத்து வாதியபிமான மின்மையினானே அநிஷ்ட இஷ்ட மிசிரம் என்னும் மூவகைக் கருமபலத்தை யொருகாலுமடையான். இத்துணையே இக்கீதாசாஸ்திரத்தின் பொருளாம். இப்போது ஸ்ரீபகவான் தத்துவஞானியைத் துதிக்கும் பொருட்டு மொழிந்த அகங்கார அபாவத்தையும் மதிப்பற்றின்மையையும் கூறி யருளுகின்றார்: - தத்துவஞானி எல்லாப் பிராணிகளையும் கொன்றும் கொல்லான; அதாவது அசங்க ஆத்மா எப்போதும் அகர்த்தா ஆவேன் என அகர்த்தாவடிவத்தின் சாக்ஷாத்காரத்தானே கொல்லுதல் வடிவக் கிரியையின் கருத்தாவாகான்; இதனானே பந்திக்கப்பட மாட்டான் = ஹந்த ரூபக்கிரியையின் காரியரூப அதருமபலத்தோடும் சம்பந்தத்தையடையான். கொன்றும் பந்தமடையான் என்பதனானே ஸ்ரீபகவான் தத்துவ சாக்ஷாத்காரத்தின் மகத்துவத்தைத் திருவாய்மலர்ந்தருளினரேயன்றித் தத்துவ வேத்தாவானவன் சர்வப்பிராணிகளையும் கொல்வான் என்பதில் திருக்கருத்தின்றாம். சர்வான்மதரிசியினிடத்தில் எல்லாப் பிராணிகளின் கொலை செய்தல் சம்பவியாதாம். அவனிவ்வுலகங்களைக் கொன்றும் என்பதனானே தத்துவவேத்தாவின் பால் ஹநநக்கிரியையின் கர்த்தாத்தன்மை கூறியது இலௌகிக திருஷ்டியானேயாம். கொல்லான் என்பதனானே அவனிடத்தே கருத்துருத்துவ நிடேதஞ் செய்யப்பட்டது, சாஸ்திர திருஷ்டியினானேயாம். ஆகையாற் கொன்றுங் கொல்லான் என்னும் இரண்டும் முரண்படாவாம். இந்நூலினாதியில் ஆன்மாவின்கண் ணெல்லாக் கருமங்களின் றீண்டாமை பிரதிஞ்ஞை செய்தருளப்பெற்று, பின்னரும் அதனையே திரப்படுத்தியருளி, பின் அறிஞனுக்குச் சர்வகருமங்களின் அதிகாரநீக்கம் சுருக்கமா யருளப்பெற்றது. அவ்வதிகார நீக்கமே இடையிடையே பிரசங்கத்தையனுசரித்து வித்தரித்து விளம்பியருளப் பெற்றது. இத்துணையே கீதாசாஸ்திரத்தின் பொருளாம். இவ்வாறு சாஸ்தி ரார்த்தங்களின் ஒருமை யுடைமையைக் காண்பித்தருளற்பொருட்டே சருவகரும் அதிகாரநீக்கம் உ பசங்காரஞ் செய்தருளப்பெற்றது. ஆகையால் இப்பொருளாயது: - அஞ்ஞானத்தினாலே கற்பனை செய்யப்பட்ட அதிஷ்டானாதி 5 அனான்ம பதார்த்தங்களானே செய்யப்பட்ட விதி நிடே தகருமங்க ளெல்லாம் அகம்பிரஹ்மாஸ்மி யென்னும் ஆத்மவித்தையினானே மூலசகிதமாய்க் கெடுமாதலினானே பரமார்த்த சந்யாசிகளை அதிஷ்டாதி 3 வகைக் கருமபல மடையாவாம் என அருளியது பொருத்த முடையதேயாம். அகர்த்தாவாதியாய ஆன்மாவின் சாக்ஷாத்காரமே பரமார்த்த சந்யாசமாம். இது ஜனகன் அஜாத சத்துரு முதலிய தத்துவவேத்தாக்களாகிய கிருகஸ்தர்களிடத்து மிருந்தது. ஆகையா லவர்களும் பரமார்த்த சந்யாசமுடையவரேயாவர். ஜனகாதி கிருகஸ்த ஞானிகளிடத்தில் அவரது வருணாசிரம கருமம் காண வந்ததாயினும் தத்துவவேத்தாக்களாகிய பரமஹம்ச சந்யாசிகளிடத்தில் நுகர்வினைவயத்தால் பாதித அனுவிருத்தி கொண்டேனும், அன்னியரது கற்பனையினாலேனும், பிக்ஷாடனாதிகள் பிரதீதியாவதே போலப் பிரபல நுகர்வினைவயத்தால், கூறிய இருவகை கொண்டு ஜனகாதிகளிடத்தில் கருமங்களின் றரிசனம் முரண்படாதாம். இதனானே, ஆன்மஞான பலபூத வித்வத் சந்யாசஞ் சொல்லப்படும்; சாதனபூத விவிதிஷா சந்யாசமோ முதலி லிவ்வா றண்டாகாதாயினும் ஞானத்தின் பின் இவ்வாறேயாம்.

 

[முன்னர் அதிஷ்டானாதி ஐந்தும் சர்வகருமங்களின் ஹேதுவெனக் கூறியருளி ஆன்மாவிற்குச் சர்வகருமங்களின் பரிசமின்மை கூறி யருளப்பட்டது; இப்போது முன்னருளிய பொருளையே ஞானஞேயாதிப் பிரக்கிரியையாக வருணிப்பதுடன், திரைகுண்ய பேதவியாக்கியானத்தானே முன்னினும் விலக்ஷண முறையாக வருணித்தருளுகின்றார்.]

 

ஹே அர்ச்சுன! ஞான ஞேய பரிஞாதா வென்னும் மூன்றும் கர்மப் பிரவர்த்தகங்களாம். கரணம் கர்மம் கர்த்தா என்னும் மூன்றும் கர்மா சிரயங்களாம். ஹே கௌந்தேய வஸ்துவின் உண்மை வடிவத்தை யொளிர் விப்பது ஞானமாம் = பிரத்தியக்ஷாதிப் பிரமாணங்களானே உண்டாய குடமுதலியவற்றின் பிரகாச வடிவக் கிரியை ஞானமென்பதாம். ஞான ரூபக்கிரியைக்குக் கர்மபூதமாயகடாதிகள் ஞேயங்களாம். ஞானரூபக் கிரியைக்கு ஆசிரயபூதமும், அந்தக்கரணரூப உபாதியானே நன்கு கற்பிக்கப் பெற்றதும், ஆகிய போக்தா பரிஞாதாவாம். அம்மூன்றும் ஒன்றாகக் கூடியே இஷ்ட அநிஷ்டரூப கருமங்களைத் தொடங்கும்; ஒன்று கூடாமல் எக்கருமத் தொடக்கமு மிலதாம். ஏனெனின், ஞேயஞாதாக்க ளிருந்த போதினும் ஞானமிலதாயபோது பிரவிருத்தி யுண்டாகாதாம். ஆகலின் பிரவிருத்தியின் கண் அந்த ஞானத்திற்கு அவசியம் காரணத்தன்மையை யங்கீகரிக்க வேண்டும். ஞான ஞாதாகக ளிருந்த போதினும் தேசகாலத் தானே ஞேயந்தடையாயின் பிரவிருத்தி யாகாதாகலின் அதன்கண் ஞேயத்தையும் அவசியம் காரணமெனக் கொள்ள வேண்டும். நித்திரையில் வாசனை வடிவஞான ஞேயங்களிருந்த போதினும் ஞாதாவில்லாமையின் பிரவிருத்தி உண்டாகாதாகலின், அதன்கண் ஞானத்தையும் காரணமாக அவசியம் அங்கீகரிக்க வேண்டும். ஆகையால் மூன்றும் ஒன்று சேர்ந்தே சருவகருமங்களையும் தொடங்கும். இப்பொருளை ஸ்ரீபகவான் மூன்றும் கர்மப்பிரவர்த்தகங்களாம் என அருளினர். ஞானாதிமூன்றும் ஒருங்கு சேர்ந்தே கருமப்பிரவர்த்தகமாம். அனான்ம பதார்த்தத்தின்கண்ணே பிரோணீயத் தன்மையும் பிரோகத்தன்மையுமாம். அசங்க ஆன்மாவின் கண்ணே அவ் விரண்டு மின்றாமென்றறிந்து கொள்க. எதன் வியாபாரத்தின் பின்னர்க் கிரியையின் சித்தியாமோ அதுகாரணமாம். அதுவும் உள்வெளி வேற்றுமையானே இருவகையாம். செவி முதலியவையோ வெளிக்கரணமாம். மனாதிகளோ உட்கரணமாம். கர்த்தாவின் கிரியையில் இசையத்தக்க இஷ்டகாரகம் கருமமாம்; அதுவும் உற்பாத்தியம், ஆப்பியம், சம்ஸ்கார்யம், விகார்யம், என்னும் வேற்றுமையானே நான்கு வகையாம். அவற்றுள் உற்பத்திக்குத் தகுதியாயது அல்லது யாது முன்னிராது பின்னுண்டாமோ அது உற்பாத்தியமாம்; முன்னர் இருந்தே அடையப்படுவது ஆப்பியமாம். குணங்கொள்ளல் மலந்தள்ளல் வடிவசமஸ்கார யோக்கியமாயது சமஸ்கார்யமாம்; முன்னவஸ்தையை விட்டு வேறு அவஸ்தையின் அடைவு விகாரம், அதையடைவது விகார்யமாம்; யூபஸ்தம்பம் உற்பத்தியாக்கலும், தன் வேதசாகை படித்தடைதலும், நெல்லைப் புரோக்ஷித்துச் சமஸ்கரித்தலும், சோமக்கொடியைப் பிழிந்து விகாரப்படுத்தலும், முறையே இந்நான்கினுக்கும் உதாகரணங்களாம். இதரகாரகங்களால் அப்பிரயோஜ்யமும் சகலகாரகங்களின் பிரயே ஜகமாயதும் கர்த்தாவாம். அஃதிங்கு சித்தசித்தின் கிரந்திரூபமாய்க் கொள்க. அரணங் கருமம் கருத்தாமூன்றுமே பரஸ்பரம் சமுச்சய பாவத்தையடைந்து கருமசங்கிரகமாம் = கருமங்கலின் ஆசிரய ரூபமாம். கரணங் கர்மங்கர்த்தா வென்னும் வசனத்தின் ஈற்றின் இருக்கும் என்னும் என்ற சப்தத்தானே சம்பிரதானம், அபாதானம், அதிகரணம் என்னும் மூன்று காரகங்கட்கும் கரணாதி மூன்றிலே உள்ளடக்கமெனக் கொள்க. நல்ல மேன்மைமதியானே எவர்க்குப் பொருளீயப் பெறுமோ அது சம்பிரதானமாம்; வேதவேத்தாவாகிய மறையவனுக்குக் கோக் கொடுத்தல் உதாகரணமாம்; மறையவன் சம்பிரதானமாம். சம்யோக வாயிலாய் விபாகத்தில் அவதியாதோ அதே அபிதானமாம். இமாசலத்தினின்றும் ஸ்ரீ கங்காதேவியிறங்குதல் போலவாம். பர்வதம் அபாதானகாரகமாம். ஆதாரமென்பது அதிகரணமாம். இவ்வாறு கருத்தா, கருமம், கரணம், சம்பிரதானம், அபாதானம், அதிகரணமாம், என ஆறுகாரகங்கள் இலக்கண நூலிற் பிரசித்தங்களாம்.'' இந்திரன் றாமரையைக் கரத்தாற் கொய் திறைவனுக்குத் தந்திருங் குற்றத்தினீங்கி விண்மேலிருந்தானெனவும், வந்திடுங்காரகமெல்லாம' இவை முறையே யுதாகரணங்களாம். சம்பிர தானாதி மூன்றையும் கருத்தாதிகளில் அடக்கி ஸ்ரீ பகவான் கர்த்தாதி மூன்றைக் கூறியருளினர். இவ்வாறு மூவகைத்தகைமையடைந்த காரகமாறன் கூட்டமே சர்வக்கிரியைகளின் ஆசிரயமாம். கூடஸ்த ஆத்மா எக்கிரியைக்கும் ஆசிரயமாகாதாம், ஆகலின் துணிபு இதுவாம்: - யாது யாது கருமப் பிரோகமாமோ, ஆசிரயமாமோ, அவையாவுமே காமகரூபமேயாம், திரிகுணான்மகமேயாம். ஆன்மாவோ காரகபாவமற்றதும், முக்குணங்கள் அற்றதும் ஆமாதலின் சர்வகர்மங்களின் பரிசமற்றதாம் என்றறிக.

[பூர்வ சுலோகத்தில் ஞானாதி கரணாதி இருமும்மையும் அருளப்பெற்றது. இப்போது அவற்றில் திரிகுணரூபத்தன்மை யவசியம் கூறத்தக்கதா மாதலின் ஸ்ரீபகவான் அவற்றைத் தொகுத்துக் கூறியருளி அவற்றில் திரிகுண ரூபத்தன்மையின் பதிஞ்ஞையைச் செய்தருளுகின்றார்.]

ஹே அர்ச்சுன! சாங்கிய சாஸ்திரத்தின்கண் ஞானமும் கருமமும் கருத்தாவும் சத்துவாதி முக்குணபேதத்தானே மூவகையே யாகுமென்ப. அந்த ஞானாதிகளையும் அவற்றின் வேற்றுமைகளையும் நீ யுள்ள படி கேட்பாயாக.

 

ஹே கௌந்தேய! பிரத்யக்ஷாதிப் பிரமாண ஜன்னியவஸ்துவின் பிர சகாரூப அந்தக்கரண விருத்திரூப ஞானமே இங்கு ஞானசப்தத்தாற் கவரத்தக்கதாம். வஸ்துவில் ஞேயத்தன்மை உண்டாதல் ஞானரூப உபாதியா லாயதா ஞானமின்றி யாகாதாம். ஆதலின் மொழிந்த ஞேயத்திற்கும். ஞானத்தின் கண்ணடக்கமாம். கருமசப்தத்தானே யாகாதிரூபக் கிரியையைக் கவர்க. கருமம் கரணம் என்னும் இரண்டு காரகங்களும் கிரியையின் கண் உள்ளடக்கமாம்; ஏனெனின், வத்துவின் கண்ணே காரகத்தன்மை கிரியை வடிவ உபாதியாலாயதாம்; கிரியையின்றி யுண்டாகாதாமாதலின் கூறிய உள்ளடக்கம் பொருத்தமுடையதேயாம். முன்னர் அருளிய கிரியையை யுண்டாக்குவதாகிய கருத்தாவையே ஈண்டுக் கருத்தா சப்தத் தானே கவர்க. பரிஞாதாவை இக்கர்த்தாவின் கண்ணே யடக்கமென வறிக. கரணம் கருமம் என்னும் இரண்டு காரகங்களைப்போலக் கர்த்தாவின் கண்ணும் கிரியை யுபாதிகத்தன்மை சமானமேயா மாதலின் அவ்விரண்டைப் போலக் கர்த்தாவையும் தனியே கூறுதல் கூடாதெனினும், கர்த்தாவின் கண்ணே தனியாகத் திரிகுணத்தன்மைருபக் கூற்றுக்குத் தார்க்கிகர்கள் மயலாற் கற்பித்த ஆன்மத்தன்மையை நீக்கும் பொருட்டாம். அவரோ கர்த்தாவையே யான்மா வென்பர். ஞானாதி மூன்றும் குணசங்கியானத்தில் சத்துவாதி வேற்றுமையானே சாத்விகம் இராஜசம் தாமசம் என மூவகையாகக் கூறப்பெற்றுளது. சத்துவாதி முக்குணம் காரிய வேற்றுமையானே எந்நூலின்கண்ணே பிரதிபாதிக்கப் பெற்றுளதோ அது குணசங்கியானமாம். அத்தகையது கபில முனிவர் கூறிய சாங்கிய சாஸ்திரமாம். அதன்கண்ணிவை யறையப்பெற்றுள்ளனவாம். சாத்விகாதி முப்பேதங்களன்றி நான்காவதொன்றின்றாம். சாங்கிய சாஸ்திரம் பரமார்த்தப் பிரஹ்மத்தின் ஒருமையின் கண்ணே பிரமாணமாகாதாம்; ஆங்குகானா ஆன்மாவே அங்கீகாரமாதலின்; என்றாலும் சாங்கிய சாஸ்திரம் அபரமார்த்தரூப சத்துவாதிகுணங்களின் கௌணபேத நிரூபணத்தில் வியாவகாரிகப் பிரமாணபாவத்தை யடையும்; அதனானே இதனை ஸ்ரீ பகவான் சிலாகித்தருளினர்; அதாவது ஞானாதிகளின் மூவகைத்தகைமை கேவலம் இக்கீதாசாஸ்திரத்தின் மட்டும் பிரசித்தமல்லவாம்; மற்றோ, கபில முனிவர் கூறிய சாங்கிய சாஸ்திரத்தின் கண்ணும் பிரசித்தமாம். ஞானாதிகளையும், சத்துவாதிகுணங்களாலாக்கப் பெற்ற அவற்றின் வேற்றுமையையும் உள்ளபடியே கேட்பாயாக; அதாவது சாஸ்திரத்தில் அவற்றின் சொரூபங் கூறப்பட்டவாறே சிரவணிக்கும் பொருட்டு நீ சாவதானன் ஆதியென்பதாம். முன் 14 - வது 17 - வது அத்தியாயங்களில் ஸ்ரீபகவான் சத்து வாதிகளையும் அவற்றாலாய சாத்விகாதி பேதங்களையும் கூறியருளி மீண்டு மீண்டுங் கூறி யருளுவதானே கூறியது கூறலென்னுங் குற்றமாம் எனினும், இவ்வித விவத்தையானே அத்தோட மணுகாதாம். பூர்வம் 14 - வது அத்தியாயத்திலோ சத்துவாதிகுணங்களில் பந்தஹேதுத்தன்மையின் பிரகாரம் நிரூபித்தருளப்பட்டது, குணாதீதனுக்கு ஜீவன் முக்தத்தன்மையை நிரூபித்தருளும் பொருட்டாம் 17 - வதத்தியாயத்திலோ சத்துவாதிகுணங்கள் செய்த மூவகைச் சுபாவத்தை நிரூபித்தருளியதால் இப்பொருள் துணியப் பெறும் அதிகாரி அசுபரூபமாஜசுதாமா சுபாவத்தைப் பரித்தியாகித்துச் சாத்விக ஆகாராதிகளைச் சேவித்துத் தேவரூப சாத்வீக இயற்கையே சம்பாதிக்கத்தக்கதென்பதாம். இப்பதினெட்டாவது அத்தியாயத்திலோ இயற்கையானே குணாதீத அசங்க ஆன்மாவிற்குக் கிரியை காரகம் பலம் என்னும் மூன்றோடும் சிறிது மாத்திரையும் சம்பந்தமின்றாம். இப்பொருளையுணர்த்தி யருளும் பொருட்டுக் கிரியாகாரகாதி யாவற்றிற்கும் திரிகுண ரூபத்தன்மையேயாம்; இதனினும் அயலாக எவ்வடிவமும் அவற்றிற்கிலதாம்; இக்கிரியாகாரகாதிகட்கு ஆன்மாவின் சம்பந்தித்தன்மையாமாதலின்; என்னும் பொருள் கூறியருளப் பெற்றதாம். இதுவே மூன்றத்தியாய வசனங்களில் விசேஷத்தன்மையாமாதலின் ஈண்டுக் கூறியது கூறல் என்னுங் குற்றமுண்டாகாதாம்.

 

[பூர்வ சுலோகத்தில் ஞானம் கர்த்தா கர்மம் என்னும் மூன்றற்கும் சாத்விகாதி மூவகைத்தகைமை அறியத்தக்கதெனப் பிரதிஞ்ஞை செய்தரு ளப்பெற்றது; இப்போது முதலில் ஞானத்திற்கு மூவகைத்தகைமையை 3 சுலோகங்களால் ஸ்ரீ பகவான் நிரூபித்தருளுவர். அதன்கண்ணும் முதலில் அத்வைத ஆன்மவாதிகட்குச் சாத்விகஞானத்தைக் கூறியருளுகின்றார்.]

 

ஹே பார்த்த! ஒன்றற்கொன்று வேற்றுமையையுடைய எல்லாப் பூதங்களிலும் யாண்டும் வியாபக ஏக அவ்யய சத்தாரூப பாவத்தை எவ்வுணர் வாற் சாக்ஷாத்கரிப்பனோ அவ்வுணர்வைச் சாத்விக ஞானமென்றறிதி.

 

ஹே அர்ச்சுன! அவ்வியாகிருத இரணியகருப்ப விராட்டு என்னும் பெயர்களையுடைய காரண சூக்கும் தூலரூப சமஷ்டி வியஷ்டி வடிவ சர்வபூதங்களும் விபக்தங்களாம்; அதாவது, வேறு வேறு நாமரூபங்களானே பரஸ்பரம் வியாவர்த்தியமும் நானாரசமுமாகிய உற்பத்தி நாசமுடைய திருசியவர்க்கரூப சர்வ பூதங்களிலும் சத்தை வடிவபாவத்தை வேதாந்த வாக்கியங்களின் விசாரத்தாலுண்டாய அந்தக்கரண விருத்திரூபஞானத்தானே அதிகாரி சாக்ஷாத்கரிப்பன்; அதாவது, அச்சர்வபூதங்களிலும் பரமார்த்த சத்தை வடிவ சுவப்பிரகாச ஆனந்த ஆன்மாவை எவ்வுணர்வாற் சாக்ஷாத் கரிக்கலாமோ என்பதாம். சத்தையாகிய பாவம் ஒன்றாம்; அதாவது, சஜா தீய விஜாதீய சுவகதபேதங்களற்றமையின் அத்விதீயரூபமாம்; அவ்யயமும் ஆம்; அதாவது உற்பத்தி விநாசாதி சர்வ விகாரங்களுமற்றதும் அதிருசியமும் ஆம்; அவிபக்தமும் ஆம்; அதாவது, சர்வ ஜடபதார்த்தங்களின் அதிஷ்டான ரூபத்தானும் சர்வ கற்பித பதார்த்தங்களின் பாத அவதி ரூபத்தானும் யாண்டும் வியாபகமாம்; அத்தகைய அத்விதீய ஆன்மாவை அதிகாரி வேதாந்த வாக்கிய ஜன்னிய ஞானத்தானே சாக்ஷாத்கரிப்பன். மித்தையாகிய பிரபஞ்சத்தின் பாதக ஆன்ம ஞானத்தை நீ சாத்விக ஞானம் என்றுணர்தி. இவ்வத்விதீய ஆன்மாவின் சாக்ஷாத்காரத்தினும் வேறாகிய எத்துணைத் துவைத் தரிசனமுளவோ அவையாவுமே இராஜசமாதலினானும் தாமதமாதலினானும் சம்சாரத்தின் காரணமேயாதலின் அந்தத்துவைத் தரிசனத்தில் ஒருகாலும் சாத்விகத்தன்மை யுண்டாகாதாம்.

 

[இப்போது இராஜச ஞானத்தின் சொரூபம் வருணித்தருளப்பெறும்.]

 ஹே அர்ச்சுன! மீண்டும் பரஸ்பர பேதத்தானே இராநின்ற தேகாதி சர்வ பூதங்களில் பரஸ்பர விலக்கண நானா ஆன்மாக்களின் ஞானத்தை நீ இராஜச மென்றறிதி.

 

கூறியருளிய சாத்விக ஞானத்தினும் இந்த இராஜச ஞானம் வேருய தாம்; அவ்வேற்றுமை யிதுவாம்: - பரஸ்பர பேதத்தோடு மிராயின்ற தேகாதிக சர்வ பூதங்களிலும் எஞ்ஞானம் தனிவகை நானாபாவங்களைக் காணுமோ, அதாவது தேகந்தோறும் சுகித்தன்மை துக்கித்தன்மை முதலிய ரூபத்தால் பரஸ்பர விலக்ஷண வேறு வேறு ஆன்மாக்களை எஞ்ஞானங்காணுமோ; கருத்தி துலாம்: - இவ்வுலகத்தில் சிலர் சுகிகளாவர், சிலர் துக்கிகளாவர், சிலர் பண்டிதர், சிலர் மூர்க்கர் என்பதாதி அநேகவகை விலக்ஷணத் தன்மை காண வருகின்றது. ஒருகால் சர்வ தேகங்களிலும் ஒரே ஆன்மா இருக்குமாயின் ஒரு பிராணி சுகியாயின் எல்லாரும் சுகிகளாக வேண்டும். ஒரு பிராணி துக்கியாயின் யாவருந் துக்கியாக வேண்டும், ஆனால் அவ்வாறு காணோமாதலின் சர்வ தேகங்களிலும் ஏக ஆன்மா இல்லை. மற்றோ, தேகந்தோறும் வேறு வேறு ஆன்மாவாம். இவ்வாறு குதர்க்கங்களாலுண்டாய ஞானம் தேகந்தோறும் வேறு வேறு ஆன்மாவைக் காண்டலின் அது இராஜசமாம். தேகந்தோறும் ஆன்மாக்களின் பரஸ்பர பேதம், ஆன்மாக்கட் கீசுரபேதம், ஆன்மாவிற்கும் ஜடவர்க்கங் கட்கும் பேதம், ஈசுர ஜடவர்க்கங்கட்கும் பேதம், ஜடவர்க்கங்கட்குப் பரஸ்பர பேதம், என இவ்வாறு அநௌபாதிக பஞ்ச பேதங்களை விஷயீகரிக்கும் தார்க்கிகரின் ஞானம் இராஜசமே யெனவறிக.


[தாமசஞான சொரூபத்தை வருணித்தருளல்]

 

ஹே அர்ச்சுன! எந்த ஞானம் ஏதாவது ஒரு காரியத்தில் பரிபூரண அருத்தத்தைப் போல அபிநிவேசமுடையதாமோ, ஊகமற்றதாமோ, பரமார்த்தப் பற்றற்றதாமோ, அற்பமாமோ, அந்த ஞானம் ஆன்றோரால் தாமசமெனப்பெறும்.

 

ஹே கௌந்தேய! முன்னர் மொழிந்த இராஜசஞானத்திலும் இத்தாமதஞானம் அயலாம். அவ்வேற்றுமை: - ஆகாசாதிகளின் காரியங்கள் இருந்தபோதினும் அவ்வியாவற்றினுள்ளும் ஒருதேக ரூபகாரியத்தில், அல்லது பிரதிமை முதலிய காரியத்தில் எந்தஞானம் பரிபூர்ண அர்த்தத்தைப் போலச் சக்தமோ, அதாவது இவ்வளவுமாத்திரமே ஆன்மாவாம்; இவ்வளவுமாத்திரமே ஈசுரராம்; இதனினும் வேறாக ஓரான்மாவேனும் ஓரீசுரரேனும் இல்லை என்னும் அபிநிவேசத்தானே எஞ்ஞானம் ஒரு தேகரூப ஏக்காரியத்தில், அல்லது பிரதிமாதிரூப ஏககாரியத்திலே யினிது பொருந்துவதாமோ, ஆன்மா அவயவத்தோடு கூடியதாம்; தேகபரிமாணமாம் என்னும் திகம்பரரது ஞானம்; இத்தூலதேகமே ஆன்மாவென்னும் சார்வாகரின் ஞானம். பாஷாணகாஷ்டாதிரூப இப்பிரதிமை மாத்திரமே ஈசுரர் இதனினும் மேலாக வேறு ஈசுரர் இல்லையென்னும் சாஸ்திர சமஸ்கார மற்ற மூடர்களின் ஞானம் என்பவை போலுமென்க. எஞ்ஞானம் உற்பத்திரூப ஹேதுவற்றதாமோ, அதாவது தேகப்பிரதிமையினும் வேறாக மற்றெத்துணைப் பூதகாரியங்களுளவோ, அவற்றுள் ஆன்மத்தன்மை யின்மையதும், ஈசுரத்தன்மையின்மையதும், ஆகிய பூதகாரியதேகத்தில் ஆன்மத்தன்மை யெங்ஙனஞ் சம்பவிக்கும், பூதகாரியப்பிரதமையின் கண்ணே ஈசுரத்தன்மை எங்ஙனஞ் சம்பவிக்கும், சம்பவியாதாம் என இவ்வாறு எஞ்ஞானம் ஆராய்ச்சியற்றதாமோ, இக்காரணத்தானே எஞ்ஞானம் அதத்வார்த்தவத்தாமோ, பிரமாணாந்தரத்தாற் பாதிதமல்லாத அர்த்தம் தத்வார்த்தமாம், அது எதற்கு விடயமன்றாமோ அது அதத்வார்த்தவத்தாம், அதாவது எஞ்ஞானம் அயதார்த்த அர்த்த விஷயகமாமோ எஞ்ஞானம் அற்பமோ, அதாவது ஆன்மாவின் நித்தியத்வ விபுத்வங்களை விடயஞ்செய்யாமையின் யாது முற்றினும் அற்பமாமோ, இவ்வாறு அநித்திய பரிச்சின்ன தேகாதிகளிடத்தில் ஆன்மத்தன்மை யபிமான வடிவ சார்வாகாதிகளின் ஞானமாமோ, எஞ்ஞானம் ஆத்மா ஈசுரரிரண்டும் நித்தியம் விபுதேகாதி சங்காதத்தினும் வேறென்னும் தார்க்கிக புருடர்களின் ஞானத்தினும் அத்தி யந்தம் விலக்ஷணமாகிய அந்த ஞானம் மதிமான்களால் தாமத ஞான மெனப்படும்.

 

[ஏக அத்விதீய ஆன்மாவை விடயஞ்செய்யும் உபநிடத சம்பந்திகளின் சாத்விகஞானமே முமுக்ஷக்களாற் கவரத்தக்கதாம், நித்திய விபுபரஸ்பரபின்னமாகிய அநேக ஆன்மாக்களை விடயஞ்செய்யும் துவைத்தரிசிகளாய தார்க்கிகர்களின் இராஜசஞானம், அநித்தியபரிச்சின்ன தேகாதிரூப ஆன்மாவை விடயீகரிக்கும் சார்வாகாதிகளின் தாமசஞானம், என்னுமிரண்டும் முமுக்ஷக்களானே விடத்தக்கனவாம். இப்பொருள் முன்னர் அருளப்பெற்றது. இப்போது ஸ்ரீ பகவான் சாத்விகாதிபேதத்தானே கருமத்தின் மூவகைமையைக் கூறியருளத் தொடங்கியவற்றுள் ஆதியில் சாத்விக்கரும சொரூபத்தை வருணித்தருளல்.]

 

ஹே பார்த்த! பயன்விழைவு பற்றாதவன் பண்ணாநின்ற சங்கமற்ற விருப்பு வெறுப்பு அற்ற நித்தியகருமம் சாத்விகமெனப்பெறும்.

 

ஹே அர்ச்சுன! யாது நியதமாமோ, அதாவது அக்கருமத்திற்கு எத்துணைத் திரவியம் தேவதை மந்திரம் முதலிய அங்கங்கள் உளவோ அவையாவற்றையும் நிறைவிப்பதிலாற்றலற்றவருக்கும் எக்கருமக் தன் பயனை யொருதலையா யடைவிக்குமோ, அத்தகையது அக்கினிஹோத்திராதி நித்தியாகருமமாம்; எக்கருமம் சங்கரகிதமாமோ, யானே பெரிய மகஞ்செய்பவனாவேன் எனக்கொப்பாக எவருமேயில்லை யென்பதாதியபிமான ரூப அகங்காரமெனப் பெயரிய இராஜச கர்வவிசேடம் சங்கமாம். அச்சங்கமற்ற, அதாவது எக்கருமம் இவ்வாறாய அபிமான பூர்வகம் செய்யப் பட மாட்டாதோ, அஞ்ஞானம் இருக்கும் வரை காத் திருத்வ போக் திருத்வப் பிரவர்த்தகமாய அகங்காரம் சாத்விக புருடரிடத்து மிருக்கும்; அவ்வஞ்ஞானமும் அகங்காரமும் அற்ற தத்துவஞானிக்கோ கருமங்களின் அதிகாரமே யின்றாம், என்பது முன்னர் அனேகமுறை கூறப்பெற்றதாதலின் சாத்விகனிடத்தில் கர்த்திருத்துவ போக் திருத்துவப்பிரவர்த்தக சாமானிய அகங்காரமிருப்பினும் அந்த இராஜச கர்வரூபவிசேஷ அகங்கார மிருப்பதில்லை. எக்கருமம் இராகத்துவேடமின்றிச் செய்யப்படுமோ, இக் கருமத்தால் யான் அரச சன்மான முதலியவற்றை யடைவேன் என்னும் அபிப்பிராயம் இராகமாம், இக் கருமத்தால் யான் சத்துருவை ஜயிப்பேன் என்னும் அபிப்பிராயம் துவேஷமாம், இவ் விரண்டால் எக்கருமஞ் செய்யப் பெறாதோ, இங்ஙனமே யாகதான ஹோமாதிரூப நித்திய கருமம் பலேச்சையின்றி நிட்காமனால் தன் மருமமென வெண்ணிச் செய்யப்படு மேல் சாத்விக கருமமெனப்படும். [இப்போது இராஜச கருமத்தின் வடிவம் வருணித்தருளப்பெறும்.]

 

ஹே அர்ச்சுன! சகாமபுருடனால் அகங்காரத்தோடு கூடியவனால் நியதமின்றிக் கிலேசமிகத்தரக்கூடிய எக்காமியகருமம் செய்யப்படுமோ அது ஆன்றோரால் இராஜசகருமமெனப்படும்.

 

ஹே கௌந்தேய முன்மொழிந்த சாத்விக்கருமத்தினும் இந்த இராஜசகருமம் விலக்ஷணமாம்: - சுவர்க்காதி பலத்தை விரும்பிய சகாமன் முற்கூறிய சங்க ரூபகர்வத்தோடு கூடியவன் எக்காமியகருமத்தைச் செய்கின்றானோ எக்கருமம் மிகவும் ஆயாசத்தோடதாமோ, அதாவது சர்வாங்கமும் நிறைவுறச் செய்வதாகிய காமியகருமம் பலத்தையடைவிக்கும், சிறிதுமாத்திரம் அங்கத்தின் விகுணத்தன்மையையடைந்த காமியகருமம் பல வேது வாகாதாமாதலின் சர்வாங்கம் நிறைவிக்கக் கர்த்தாவிற்கு அது மிகக் கிலேசத்தைத் தரும். இராஜசகருமத்தில் அநியதத் தன்மையுளதாம், நித்திய கருமத்தி லெப்போதும் கர்த்தவ்யத்தன்மையாமாறு போலக் காமியத்திலாகாதாம், மற்றோ, பல இச்சையிருக்கும் பரியந்தமே காமியகருமத்தின் கர்த்தவ்யத்தன்மையிருக்கும். ஆசை யகன்ற பின் காமியத்தின் கர்த்தவ்யத்தன்மை இராஜதமாதலின், அதன்கண் அநியதத்தன்மை பொருத்தமுடையதேயாம். இக்காமியகருமம் ஆன்றோரால் இராஜசகருமமெனப்பெறும், ஈண்டுச் சர்வ விசேஷணங்களானே இதில் பூர்வம் புகன்ற சாத்விக மருமத்தின் எல்லாச் சிறப்பானும் விபரீதத்தன்மை கூறியருளப்பெற்றதாம்.


[இப்போது தாமத கருமத்தின் சொரூபம் வருணித்தருளப்பெறும்.]

 

ஹே அர்ச்சுன! அநுபந்தத்தையும் க்ஷயத்தையும், ஹிம்சையையும், பௌருஷத்தையும் விசாரித்துக் கேவலம் அவிவேகத்தானே எக்கருமம் தொடங்கப்படுமோ அது தாமசகருமமெனப்படும்.

 

ஹே பார்த்த! இனியாகும் அசுபபலம் அநுபந்தம் எனப் பெறும். தேக ஆற்றலுக்கும் தனத்திற்கும் சேனைக்கும் விநாசம் க்ஷயமாம். பிராணிக்குறும் பீடை ஹிம்சையாம். தனது ஆற்றல் பௌருஷமாம். இந்நான்கையும் கருமம் தொடங்குவதற்குமுன் ஆராயாது கேவலம் அவிவேக ரூபமோ கவயத்தால் தொடங்கப்படுங் கருமம் தாமசமெனப்பெறும். துரியோதனன் அனுபந்தாதி நான்கையும் ஆராயாது கேவலம் அவிவேக ரூபமோகத்தா லிப்போரைத் தொடங்கியிருப்பது போலுமென் றறியலாம்.

 

(முக்குண கருமத்தின் சொரூபத்தை யுரைத்தருளிய பகவான் அம் முக்குண கர்த்தாக்களின் சொரூபத்தையும் சொல்லப்புகுர்து சாத்துவிக் கர்த்தாவின் சொரூபம் இத்தன்மையதென்று கூறுகிறார்.)

ஹே அர்ச்சுன! கர்மபலத்தில் இச்சையையும் அகங்காரத்தையும் அறவேயொழித்து, சர்வகர்மங்களிலும் உற்சாகத்தோடும் தைரியத்தோடும் நின்று, என்றும் தான் செய்யாநிற்கும் கன்மபலன்களில் உண்டாகும் இலாப நஷ்டங்களில் இது இன்பம் இது துன்பம் என்றெண்ணி, ஒரு சிறிதும் சலிப்பில்லாத கர்த்தா எவனோ அவன் சாத்துவிகனென்றறிவாயாக. (சலிப்பின்மையாவது) இன்பதுன்பங்கள் காரணமாக முறையே வரும் முகமலர்ச்சியும் முகவாட்டமும் இல்லாத நிர்விகாரத்தன்மையாம்.)


(இராஜஸ கர்த்தாவின் சொரூபத்தைச் சொல்லுகிறேன் கேள்.)

 

பார்த்த! கர்மபலன்களை இச்சித்தலும், புத்திராதிகளிடத்தில் சினேகமும், அற்ப அளவாவது ஒருவர்க்கும் ஒன்றையும் கொடாத லோபத்தன் மையும், தூய்மை இல்லாமையும், மனத்தின் கண் இலாப நஷ்டங்களில் முறையே சந்தோஷித்தலும் துக்கித்தலும் ஆகிய இவ்வித தன்மைகளோடு கூடி வாழ்பவர் எவரோ இவர் இராஜஸ கர்த்தர் என்று சொல்லப்படுவர்.

 

(இனித் தாமஸ கர்த்தாவின் சொரூபம் எத்தன்மைய தென்பதையும் சொல்லுகிறேன் கேட்பாயாக)

 

ஹே கௌந்தேய! மனத்தைச் செய்யத்தக்க கர்மங்களில் சாவதான மாகும்படி அடக்குதலும், பெருமை பொருந்திய ஞானசாஸ்திரங்களை இவையே நமக்குப் பெருஞ் செல்வமென்று மனத்துட்கொண்டு கற்றலும், பெரியோர் அனைவரும் சந்தோஷிக்கும் படியான வணக்கமும் ஆகிய இவை முதலிய குணங்களில் ஒன்றும் இல்லாமல், ஒருதினத்தில் முடிக்கத்தக்க காரியத்தை ஒருமாதகாலத்திலும் முடிக்க மாட்டாதவர் எவரோ அவர் தாமஸ கர்த்தாவென்று கூறப்படுவர்.

 

(இவையே முக்குண கர்த்தாக்களின் சொரூபம். இனி அந்த முக்குணங்களின் புத்தி சொரூபமும் அறியவேண்டுதலின் அவற்றையும் தெரிவிக்கிறேன் கேட்பாயாக வென்று பகவான் புகலத் தொடங்குகிறார்.)

 

ஹே பார்த்த! ''உத்தமமாகிய துறவற இல்லறங்கள் இப்படிப்பட்டவை, மோக்ஷபந்தங்க ளிப்படிப்பட்டவை, நல்வினை தீவினை (காரியம், அகாரியம்) இத்தன்மையானவை, இவை அஞ்சத்தக்கவை இவை அஞ்சத் தகாதவை'' என்று ஆராய்ந்து அவற்றை உள்ளபடியே அறியாநின்ற புத்தி எதுவோ அதுவே சாத்துவிக புத்தி

 

(இங்கு மோட்சத்தை ஏானமென்றும், துறவறத்தை மோட்ச ஏதுவான நிவிர்த்திமார்க்கமென்றும், இல்லறத்தைப் பந்த ஏதுவான பிரவிர்த்தி மார்க்கமென்றும், தேசகாலங்களை யபேட்சித்த கர்த்தவ்வியமும் அகர்த்தவ்வியமுமே காரியா காரியமென்றும், கர்ப்பவாசமுதலிய துக்கங்கள் அஞ்சத்தக்கவை, அவற்றிற் கெதிரிடையானவை அஞ்சத்தகாதவை யென்றும், புத்தியாகிய கரணத்திற் கர்த்திருத்துவஞ் சொன்னது உம் சாரம் என்றும் அறிதற்பாலன).

 

ஹே அர்ச்சுனா! தர்மாதர்மங்களையும், செய்யத்தக்க காரியங்களையும், செய்யத்தகாதனவாகும் காரியங்களையும் உள்ள படி அறிந்து கொள்ளாத அறிவே சந்தேக ரூபமான இராஜஸ புத்தியாம்.

 

அதர்மமாகத் தாமத்தைப் பாவித்தலும், செய்யத் தகாதனவான காரியங்களைச் செய்யத்தகுங் காரியங்களாமென்று பாவித்தலும், துன்பத்தைத் தராநின்ற சிந்தனையானது தீங்கான சர்வவிஷயங்களிலும் பிரவேசித்தாலும் தாமஸ புத்தி யென்பர். (தமவினால் மூடப்பட்டமையின் தர்மமுதலிய சர்வபதார்த்தங்களையும் உள்ளபடி அறியாமல் விபரீதமாக அறியும் புத்தியே தாமஸ புத்தி என்க.)

 

[பகவான் புத்தியின் மூவகைத்தன்மையை யருளிச்செய்து இனித் திருதியின் மூவகைத்தன்மையை அருளிச் செய்யத்தொடங்கி, சாத்துவிக் திருதியின் சொரூபமருளிச் செய்கின்றார்.]

 

மனத்தினாற் செய்யுங் கிரியைகள், நிலைபேறுடைய பிராணவர்க்கங் களினாற் செய்யுங் கிரியைகள், இந்திரியங்களினாற் செய்யுங் கிரியைகள் ஆகிய இச்சேஷ்டைகள் பாரமாய் அதிகரித்தாலும் கண்டு பொறுத்தலும், துவேஷியாமையும் சாத்துவிக தைரியமென்று கூறுவர்.

 

ஆசையினால் தரப்பட்ட சுவர்க்கமுதலிய பலன்களை அடையும் பொருட்டு அவைகட் கேதுவான தருமங்களைச் செய்து, தர்மம், காமம், அர்த்தம் என்னும் மூன்றுமே தமக்காவசியமாகச் சம்பாதிக்கத் தக்கன வென்று எண்ணி அவற்றைத் தரியாநிற்குந் திருத்தியானது இராஜஸ தைரியம்; புத்தியில் சோகம், களிப்பு, உறக்கம், பயம் என்பவைகளை எப்பொழுதும் விடாமற் பொருந்தித் தரியாநிற்குர் தைரியமானது தாமஸ தைரியம்

 

[பூர்வம் குணபேதத்தால் கிரியாகாரங்களை மூவிதமாக அருளிச் செய்து இனி அக்கிரியாகாரங்களால் உளவாகா நிற்கும் சுகரூபமாகிய பலத்தின் மூவிதத் தன்மையை ஸ்ரீ பகவான் அருளிச்செய்யத் தொடங்கி இதில் சாத்துவிக சுகத்தை யருளிச் செய்கிறார்.]

 

ஹே அர்ச்சுன! அதிகாரிக ளனைவருக்கும் ஞான வைராக்கிய தியான சமாதிகளின் ஆரம்பகாலத்தில், அத்தியந்தம் ஆயாச சாத்தியமாவதால் பிரசித்தமான விஷத்தைப் போல துன்பமாய், ஞானவைராக்கியாதிகள் பரி பாகமாகுமிடத்து இன்பமாய் அரிய அமுதமே என்று சொல்லத்தக்கது யாதோ அது சாத்துவிக இன்பமென்று கூறுவர் யோகிகள்.


(இனி ராஜஸ இன்பத்தின் சொரூபத்தைச் சொல்லுகிறேன் கேள்.)

ஹே பார்த்த! இந்திரியங்களுடனே விஷயங்களிற் சம்பந்தப்பட்டு அனுகூலமாக வெழுந்து பிரதம க்ஷணத்தில் அரியவமுதமென்று சொல்லலாவதாய், போகத்தின் முடிவில் வெறுப்பாய், விஷம் போற் பிரதிகூலமாகியே இருக்குஞ் சுகம் இராஜஸ இன்பமென்று பெரியோர் கூறுகின்றனர்.

 

(இராஜஸ இன்பம் இவ்வாறாக, தாமஸ இன்பம் எவ்வாறானதென் பதையும் அறிவிக்கிறேன் கேட்பாயாக.)

 

ஹே பற்குன! பூர்வ வினையின் பயனால் தொடராநின்ற நித்திரை, பிர மாதம், ஆலசியம் என்னும் இவற்றால் பொருந்தத் தோன்றினதாய் ஆரம்ப காலத்திலும், விரைவாய் முடிந்தகாலத்திலும் தனக்குக் கடனாக மோகத் தைச் செய்யாநிற்கும் இன்பம் எதுவோ அது தாமஸ இன்பமாம். பிரமாதம் என்பது சித்தத்தின் அசாவதானம் என்றுணரக்கடவாய்.

 

(இப்போது திரிகுணபேதங்களால் பூர்வாத்தியாயங்களில் ஓரிடத்தும் அருளிச் செய்யாத பதார்த்தங்களையுஞ் சங்கிரகஞ் செய்பவராய்ப் பூர்வஞ் சொன்ன பிரகரணார்த்தங்களை உபசம்மரித்துக் கிரியாகாரக பலரூபமான பிரபஞ்சமுழுவதும் திரிகுணான் மகமாயின், பிராணிகட்கு முத்தி எங்கனுளதாமென்று வருஞ் சங்கையானது நீங்குதற் பொருட்டுத் தத்தம் அதிகாரத்திற்குத் தக்கபடி கர்மானுஷ்டான வாயிலாகப் பகவதாராதனத்தா வளதாகும் அவரது கிருபையினாலடையப்படும் தத்துவஞானத்தினாலேயே முக்தியுளதாமென்னும் கீதார்த்தசாரத்தைச் சங்கிரகித்துத் தரிசிப்பவராய் இது தொடங்கி அத்தியாயம் முடியும் பரியந்தம் வேறொரு பிரகாரம் ஆரம் பிக்கின்றார்.)

 

ஹே தனஞ்சய! முன்னே 14 - ம் அத்தியாயத்திற் சொன்ன சுபாவமென்னும் பிரகிருதியினா லுண்டாகாநிற்கும் இந்தச் சத்துவம், ஜஸு, தமஸென்னும் மூன்று குணங்களையும் விட்டவர்கள் இந்தப் பிருதிவியிலாவது சுவர்க்கத்திலாவது ஒருவரும் இல்லை. பிராமணருக்கும், க்ஷத்திரியருக்கும், வைசியருக்கும், சூத்திரருக்கும் தத்தம் சுபாவங்களாலுண்டாகிய சத்துவமுதலிய குணங்களின் நன்மையினால் வந்த கர்மங்களின் கூறுபாடுகளை இனி அருளிச்செய்கிறேன் கேட்பாயாக.


(பிராமணாதியரின் சுபாவீக கர்மங்களைத் தெரிவிக்கின்றார்.)

 

பகவான் அருளிச்செய்தல். - ஹே பரந்தப! அதாவது உட்பகை புறப்பகை என்பவற்றை வெருட்டவல்ல அர்ச்சுனா! பிராமணர் முதலிய மூவர்க்கும் சூத்திரர்க்கும் கருமம் பரஸ்பரம் வேறு வேறாயிருக்கும். சமம், தமம், தவம், சௌசம், சாந்தி, ஆர்ஜவம், ஞானம், விஞ்ஞானம், ஆஸ்திக்யம் என்கிற இந்த ஒன்பதும் இயற்கையாலுண்டாகிய பிராமண கருமமாம். இவற்றுள் மனத்தை யடக்குதலே சமம்; வெளியிந்திரியங்களை யடக்குதல் தமம்; முன்னர்ப் பதினேழாவது அத்தியாயத்திற் கூறியபடி சாரீர, மானஸ, வாசிகங்களாற் செய்யப்படுகிற மூவகைத் தவமே தவம்; சௌசம், உள் வெளிப் பேதத்தாலே இருவகைப்படும்; அவற்றுள் மனத்தூய்மையே உள்; மண் நீர் இவற்றைக் கொண்டு உடலின் மாசகற்றுதலே வெளி; கடின வசனங்களினாலே நிராகரிக் கப்பட்டிருந்தாலும், ஆயுதாதிகளால் தண்டிக்கப்பட்டிருந்தாலும் மனத்தில் குரோத முதலிய விகாரமற்றிருத்தல் சாந்தி, அல்லது க்ஷமை; வஞ்சகத்தன்மை யில்லாமையே ஆர்ஜவம்; ஆறு அங்கங்களோடு கூடிய வேதத்தையும் வேதார்த்தத்தையும் கிரகிக்கும் அந்தக்கரண விருத்தி விசேஷமே ஞானம்; கரும் காண்டத்திற் சொல்லிய யாகாதிகளின் விவேகத்தன்மையும், ஞானகாண்டத்திற் சொல்லிய பரமான்மாவின் ஒருமை யனுபவமுமே விஞ்ஞானம்; சாத்து விகம், சிரத்தை யென்பவையே ஆஸ்திக்யம் (பரலோகம் உண்டென்னும் நம்பகம் ஆஸ்திக்யமாம்). இவையாவும் சத்துவகுண வியற்கையாதலாலும், சத்துவ சுபாவமுடையவனே பிராமணனாதலாலும், இவை பிராமண கரும் மாயிற்று.

 

இக்குணங்கள் பிறரிடத்து சத்துவவிருத்தி வயத்தால் ஒவ்வோர் காலத் துண்டாம். அதுபற்றி அன்னிய சாஸ்திரத்தின்கண் இவை நால்வருக்கும் பொதுவான தருமம் என்று கூறப்பட்டுள்ளன.
 

இனி க்ஷத்திரிய குண சுபாவத்தாலாகிய கருமத்தைப் பகவான் வெளியிடுகிறார்: -

 

ஹே பார்த்த! சௌரியம், தேஜசு, திருதி, தாக்ஷியம், போரிற் புறங் கொடாமை, தானம், ஈசுரபாவம் என்பவை க்ஷத்திரிய ஜாதியின் இயற்கை யான கருமமாம்.

 

இவற்றுள் சௌரியமாவது அத்தியந்தம் பலவானையும் அடிக்கத்தக்க பிரவிருத்தி வடிவமான வீரத்தன்மை; பகைவராற் றோல்வியடையாமையாகிய ஆற்றலே தேஜசு; பெரிய விபத்து வந்தபோதும் தேகேந்திரியாதிகளின் வியாகூலம் இல்லாமை திருதி; விரைவாக உண்டாகிய காரியத்தும் வியாமோகமில்லாதிருக்கும் சாதுர்யமே தாக்ஷியம்; யுத்தகளத்தில் முது கிடாமையே போரிற் புறங்கொடாமை; மனதாரப் பொன், பசு, வீடு, அன்னம், பூமி முதலியவற்றைத் தக்கவர்க் களித்தல் தானம்; பிரஜைகளை ரக்ஷிக்கும் பொருட்டுத் தனது சேவகர் முதலியோரிடம் தன் பிரபு சக்தியை வெளியிடல் ஈசுரபாவம்.

 

பகவான் கூறுதல்: - ஹே! காண்டீப! இனி வைசிய சூத்திர ரிருவரின் குண சுபாவத்தாலாகிய கருமங்களைச் சொல்லுகிறேன் கேட்பாயாக:

 

பயிரிடுதல், பசுவோம்பல், வாணிபஞ் செய்தல் ஆகிய இவை வைசியருக்குரிய சுபாவ கருமம். சூத்திரனுக்கோ இரு பிறப்பாளராகிய மூவர்க்கும் சேவை புரிதலே சுபாவ கருமம்.

 

முதன் மூன்று வருணத்தார்க்கும் தொழில் செய்தலே சூத்திரனுக்குச் சுபாவமான கருமமென்று பகவான் பொதுப்பட அருளினும், சூத்திரன் தனது குடும்ப சம்ரக்ஷணைக்கு வேண்டிய பொருளை க்ஷத்திரிய வைசியர்களுள் எவரிடத்தில் அதிகமாகப் பெறுகின்றானோ அவர்க்கு மட்டும் வேலை செய்தற்குரிய னென்பதும், அவ்வாறு பிராமணனிடம் பொருள் பெறினும் பெறாவிடினும் தனக்குப் புண்ணியமுண்டாகும் பொருட்டுச் சூத்திரன் பிராமணனுக்குப் பணி செய்ய வேண்டுமென்பதும், உழவுத்தொழிலும் வேந்தன் கொடுப்பின் தண்டத்தலைமையும் (சேனாதிபதித்துவமும்) சூத்திரன் செய்யலாமென்பதும் பிறவும் மேலோர் துணிபு. இவற்றைத் தொல்காப்பியம், பொருளதிகாரம், மரபியல் சூத்திரம் 80, 81 லும், அகத்திணை யியல், சூத்: 29, 30, 31 -லும், நன்கு காணலாம். நான்காம் வருணத்தானைத் தமிழர் வேளாளனென்றும் வட நூலார் சூத்திரனென்றும் அழைப்பதுண்டு.

 

பகவான் கூறுதல்: - ஹே அர்ச்சுன! இனி அவனவனுக்கு விதிக்கப்பட்டிருக்கின்ற கருமத்தில் சிரத்தையுடையவன் சம்சித்தியை யடைகின்றான். தனது கருமானுஷ்டானத்திலே யிருப்பவன் எவ்வாறு சித்தியை யடைவானோ அதையுஞ் சொல்லுகிறேன் கேட்பாயாக: பிரவிர்த்தியானது பிராணிகளுக்கு எவரிடத்தினின்றும் உண்டாகின்றதோ, எவரால் இச் சகல பிரபஞ்சமும் வியாபிக்கப்பட்டிருக்கின்றனவோ அவரை மனிதன் தனக்குரிய கருமத்தாலே ஆராதித்துச் சித்தியை யடைகின்றான்.

 

அல்லாமலும் தன்னுடைய தருமம் குணமில்லாததாயினும் அல்லது கிரமப்படி அநுஷ்டிக்கப் படாததாயினும், ஒழுங்காயனுஷ்டிக்கப் பெற்ற பிறரது தருமத்தினும் சிறந்ததாம். சுபாவத்தாலுண்டான கருமத்தைச் செய்கின்றவன் பாபத்தையடைய மாட்டான். எப்படி விஷமானது தன்னிடத்துள்ள புழுக்களுக்குத் தோஷமில்லாமலும் மற்ற பிராணிகளுக்குத் தோஷமுமா கின்றதோ அப்படி சுவதருமம் பிறர்க்குத் தோஷமானாலும் உரியவனுக்குத் தோஷமாகாது.

 

பகவான் கூறுதல்: - ஏ கௌந்தேய! இயற்கையாலேற்பட்ட (உடன் பிறந்த) கருமம் தோஷத்தோடு பொருந்தியதாயினும் அதனைக் கைவிடக் கூடாது. எவ்வாறு அக்கினி புகையால் மூடப்பட்டிருக்கின்றதோ அவ்வாறு எல்லாக் கருமங்களும் தோஷத்தாலே சூழப்பட்டிருக்கின்றன.

 

தன்னுடனுதித்தது முக்குண வயத்ததாதலின் தோஷத்தோடு சேர்ந்ததானாலும், சுவகரும பரகருமங்களனைத்தும் புகையால் அக்கினி மூடப்படுதல் போலத் தோஷத்தால் மூடப்பட்டிருக்கின்றன. அவ்விதந் தோஷசகிதமான கருமத்தை யேன் அனுஷ்டிக்க வேண்டுமெனின், மனிதன் கருமத்தை விட்டிருக்க முடியாது. கருமம் தோஷமுள்ளதா யிருக்கையில், ஒருவன் மற்றொருவன் கருமத்தை அனுஷ்டித்தலால் பாதகம் யாதெனில், பிறருடைய கருமத்தை யனுஷ்டித்தலால் அதிக பாதக முண்டென்று மேலே சொல்லப் பட்டிருக்கின்றது. பரமார்த்த சந்நியாசியாகிய பிரமஞானி கருமங்களை விடக்கூடுமாயினும் மற்றவர்கள் கருமங்களை விடக்கூடாது (இது சங்கரருடைய அபிப்பிராயம்).

 

துக்கத்தைத் தருவதானாலும், கருமம் சுலபமாகச் செய்யக்கூடியதாகை யாலே ஞானமார்க்கத்திற்கு யோக்கியனாயினும் கருமத்தைச் செய்யாமல் விடக்கூடாது. ஞானாரம்ப கருமாரம்பங்கள் துக்கத்தோடு கூடியிருக்கின்றன. அக்கினியோடு புகை பிறந்திருத்தல் போலக் கருமமும் ஞானமும் துக்கத்தோடு பிறந்திருக்கின்றன வாயினும் கன்மயோகம் சுலபமானதென்றும் ஞானயோகம் கடினமான தென்றும் தாத்பரியம். (இது ராகவேந்திரான அபிப்பிராயம்).

பகவான் கூறுதல்: - ஏ பார்த்த! எல்லாப் பொருள்களிலும் அபிமானமின்றி யிருக்கின்ற புத்தியை யுடையவனும், மனத்தைச் சயித்த அல்லது அகங்காரமில்லாதவனும், பலத்தில் விருப்பமற்றவனுமான புருஷன் பலசங்கத் தியாகமாகிய சந்நியாசத்தாலே சிறந்த சித்த சுத்தியை யடைகிறான்.

 

(இந்த சுலோகத்திற்கு சங்கரர், புத்திரமித்திர தன கனகாதி வஸ்துக்களிலே தனதென்னும் அபிமானத்தைவிட்ட புத்தியை விட்டவனும் மனத்தை வென்றவனும் புத்திராதிகளில் ஆசையற்றவனுமான ஆத்ம ஞானி சிரேஷ்டமான ஞான நிஷ்டையை அல்லது சாத்தியோ முக்தியை (தக்ஷணமே பிரம சொரூபமாவதை) செவ்வையா யடைந்திருக்கிற பிரமஞானத்தாலே அல்லது பிரமஞானமுண்டாய்ச் சகல கருமங்களையும் விட்டமையாலே அடைகின்றான்' என்றும், ராகவேந்திரர் கரும்பலன் முதலியவற்றில் அபிமானமற்றிருக்கின்ற புத்தியை யுடையவனும், மனத்தைச் சயித்தவனும், தான் கருத்தா அல்லன், ஈசுவரனே சர்வ கருத்தாவென்றறிந்து கருத்திருத்துவாபி மானத்தை விட்டவனும், அபிமான பலத்தியாகங்களான சந்நியாசத்தோடு கூடினவனுமான புருஷன், மேலே கண்டபடி ஈசுவராராதனை ரூபமான கருமங்களைச் செய்து வந்தால் உத்தமமான ஞான யோகத்திற்குப் பலனாகிய தியான நிஷ்டையை யடைவான்' என்றும் அபிப்பிராயங்கொண்டிருக்கின்றனர்).

 

பகவான் கூறுதல்: - ஏ! கௌந்தேய! பிரஹ்ம ஞானத்தின் கடைசி முடிவு எதுவோ, பிரஹ்ம ஞான சித்தியை யடைந்தவன் எங்ஙனம் பிரமத்தையடைவானோ அந்த விதத்தைச் சம்க்ஷேபமாக என்னிடத்தினின்றும் தெரிந்து கொள்.

 

பரிசுத்தமான நிச்சயத்தோடு கூடினவனாகவுந் தைரியத்தாலே புத்தியை விஷயங்களினின்றும் அடக்கியுஞ் சப்தமுதலிய விஷயங்களை விட்டும் ராகத்துவேஷங்களை விலக்கியும், தனித்தோர் இடத்தில் வசிப்பவனாகவும், மிதமான ஆகாரம் உட்கொள்ளுபவனாகவும், மனவாக்குக் காயங்களை அடக்கினவனாகவும், சதாகாலமும் நிஷ்டையில் ஆவலுடையவனாகவும், விஷய வைராக்கியத்தைக் கொண்டவனாகவும், அகங்காரத்தையும் துராக்கிரகம் அல்லது பிடிவாதத்தையும், துர்மார்க்கத்திற் பிரவிர்த்தியையும், ஆசையையுங் கோபத்தையும் அபிமானத்தையும் ஒழித்து மமதையற்றவனாகவும் ஒழிவடைந் தவனாகவும் இருக்கின்றவன் பிர்மமாவதற்கு அல்லது பிரம ஞானத்திற்கு அல்லது பிரமம் போலாவதற்கு யோக்கியனாக விருக்கிறான்.

 

தன் மனதைப் பிர்மத்தினிடத்தில் வைத்தவனாகவும் சாந்தமான மனமுடையவனாகவு மிருக்கின்றவன் விசனமடைவது மில்லை; விருப்பமுறுவது மில்லை; எல்லாப் பிராணிகளிடத்திலும் சமத்துவம் பாராட்டியிருந்து கொண்டு உத்கிருஷ்டமான எனது பக்தியைப் பெறுகிறான்.

 

நான் உண்மையாக எவ்வித பரிமாணமுடையவனாகவும், எவ்வித சொரூ பமுடையவனாகவும் இருக்கின்றேனோ அவ்விதமாக வுணர்கின்றான். பின்னர் என்னை உண்மையாக வுணர்ந்து, உணர்ந்தவுடனே பிரவேசிக்கின்றான்.

 

இந்த சுலோகத்திற்கு சங்கரர், "மாயை முதலிய எந்தெந்த உபாதிகளோடு பகவான் கூடியிருக்கின்றானோ, உபாதியற்றதாகவும், அகண்டமாகவும், ஞானசொரூபியாகவும், சர்வ வியாபியாகவுமிருக்கின்ற பகவான் எவ்வித சொரூபமுடையவனா யிருக்கின்றானோ அவ்விதமாகத் தெரிகின்றான்; இதிலுள்ள சில பதங்களால் ஞானமடைந்து அதற்குப் பின்பு பிரமத்திற் பிரவே சிக்கின்றானென்று அர்த்தமாகின்றது போலத் தோற்றும். ஞானத்திற்குப் பலன் அவித்தை நிவர்த்தியே. அதற்குப்பின்பு அடைய வேண்டியதா யொன்று மில்லை; பதின்மூன்றாவது அத்தியாயம் சுலோகம் மூன்றில் க்ஷேத்திரக்ஞன் அகண்ட பிர்மமாகச் சொல்லப்பட்டிருக்கிறான். ஜீவனென்னும் பெயரையுடைய தானே அந்த அகண்ட பிர்மமாகலால் அவன் அடைய வேண்டுவ தொன்றுமில்லை. வேறொன்றிருந்தாலன்றோ அதை அடைகின்றா னென்று சொல்லக்கூடும். அடைகிறதென்றால் அவித்தியா நிவர்த்தியை யடைவதுதான். அதுதான் பிர்மத்தை யடைகிறதென்று சொல்லப்படுகிறது. (சுண்ணாம்பின் சொரூபத்தால் சுத்த ஜலம் சுண்ணாம்பு நிறமாகக் காணப் பட்டபோது சுண்ணாம்பு ஜலமென்று விவகரிக்கப்பட்டது. பிரிக்கின்ற சாதனத்தால் சுண்ணாம்பு நீக்கப்பட்ட போது ஜலம் சுத்தத்தை யடைந்ததென்று விவகரிக்கப்படுகின்றது. சுண்ணாம்பு நீங்கிய பின்பு அந்த ஜலம் எதைப்போ யடைந்தது. சுண்ணாம்பு ஜல மென்னும் விவகாரம் நீங்கியதென்பதே ஜலம் சுத்தத்தையடைந்த தென்றமையால் சொல்லப்படுகின்றது. அவ்வாறு) அவித் யாவஸ்தையிலிருந்த பிரமம் ஜீவனென்று விவகரிக்கப்பட்டது. அவித்தை நிவர்த்தியானால் பிரகாசமான ஜீவசொரூபம் சுயம் பிரகாசமாகவே யிருக்கின்றது. இந்த அத்தியாயம் சுலோகம் 50 - ல் ஞான நிஷ்டையால் பிரமத்தை யடைகின்றானென்று சொல்லப்பட்டிருக்கிறதே யென்றால், அங்கு மிவ்வர்த்தந்தான் கொள்ளத்தக்கது. நிஷ்டை இத்தன்மையதென்று தெரிந்து கொள்ளுதலால் அஞ்ஞான நிவர்த்திக்குச் சாதகமுண்டு. குரு உபதேசித்த சாஸ்திர ஞானத்தாலுண்டானதும் அமானித்துவம் முதலிய குணங்களோடு கூடியதும், ஆத்மாவைத் தவிர வேறு யாதொரு வஸ்துக்களும் தோன்றாமல் தானே பிரமமென்னும் நிச்சயத்தோடிருக்கின்றதுமான திடமாகிய அகண்டத்தி யானம் யாதோ அதுதான் ஞான நிஷ்டையென்று கூறப்படுகின்றது. அத் 7 சு: 16 - ல் கூறிய நான்குவித பக்திகளில் நான்காவதான ஞானபக்தியே சிரேஷ்டமாயது. இதுவே ஞான நிஷ்டை. இதுவே ஜீவேசுரபேதத்தை நிவர்த்தித்தற் குரியது. இதுவே முடிவான பிரமஞானம். இத்தன்மையான ஞானிக்கே சர்வகன்ம சந்நியாசஞ் சொல்லப்பட்டிருக்கின்றது. இவனுக்கே ஆத்ம சொரூபமாகிய மோக்ஷம் சொல்லப்பட்டிருக்கின்றது. அதற்கு இதைவிட வேறு மார்க்கமில்லை. வேறிருப்பதாக நினைத்தால் மேலைக்கடலை யடைய விரும்பிக் கிழக்கே போவது போலப் பயன்படாது. இங்கு சொல்லிய ஞான நிஷ்டாமார்க்கம் ஒரு மலைபோலிருக்கின்றது. இதர மார்க்கம் கடுகு போலற்பமாகும். ஆதலால் பிரம சொரூபமாய் விளங்குவது என்பது தான் தாற்பரியம்'' என்றனர்.

 

பகவான் கூறுதல்: - எ! அர்ச்சுன! நித்திய நைமித்தியங்களாகிய சகல கருமங்களையும் எப்போதும் புரிகின்றவனும், என்னையே ஆசிரயித்தவனு மாகியவன் எனது அனுக்கிரகத்தினாலே என்று முள்ளதும் அழிவில்லாதது மான பதவியை யடைகிறான்.

 

சகல கருமங்களையும் மனத்தாலே என்னிடத்திற் சமர்ப்பித்து அடைய வேண்டிய உத்தமஸ்தானமாக என்னையே கொண்டு, நிச்சய புத்தியையடைந்து (சரணாகதியடைந்து) எப்போதும் என்னிடத்திலேயே சித்தத்தை வைத்தவனாகவும் ஆகக்கடவாய்.

 

என்னிடத்திலே மனத்தையுடைய நீ எனது அநுக்கிரகத்தாலே சகல துக்கங்களையும் அதிக்கிரமிப்பாய்; நானே தெரிந்தவன் என்னும் அகங்காரத் தாலே நான் சொல்லியதைக் கேளாவிடின் அல்லது கவனியாவிடின் கெட்டுப் போவாய்.

 

ஒருவேளை அகங்காரமுற்றுப் போர்புரிய மாட்டேனென்று நிச்சயங் கொள்வாயாயின் இந்த உனது நிச்சயம் பொய்யாம். பிரகிருதி (ரஜோகுண ரூபமாகப் பரிணமித்து) உன்னை (யுத்தத்திற்) பிரவிருத்திக்கும்படி செய்யும்.

 

ஏ! கௌந்தேய! பூர்வகர்ம சேஷத்தாலுண்டாயதும் உனது சுதர்ம மாயதுமான சௌரிய முதலிய கருமத்தாலே கட்டுப்பட்ட நீ அவிவேகத் தாலே எந்த யுத்தத்தைச் செய்தற்கு விரும்பவில்லையோ அந்த யுத்தத்தையும் பராதீனனாகவே செய்யப்போகின்றாய்.

 

ஏ! அருச்சுன! எந்திரத்திலேறிய வஸ்து போலச் சகல பிராணிகளையும் தமது சக்தியாலே கருமங்களிற் பிரவிர்த்திக்கும்படி செய்து கொண்டு ஈசுவரனானவர் சகல பிராணிகளின் இருதயத்திலிருக்கின்றார்.

 

ஏ! பாரத! தேகேந்திரியாதிகளால் அந்த ஈசுவரனையே சரணமாக அடை. அந்த ஈசுவராநுக்கிரகத்தாலே உத்தமமான சாந்தியையும், சாசுவத மான ஸ்தானத்தையுமடைவாய்.

 

ஏ! பார்த்த! இவ்விதம் ரகசியங்களுக்கெல்லாம் அதிரகசியமான, ஞான ஏதுவான சாஸ்திரம் என்னாலே யுனக்குச் சொல்லப்பட்டது. இந்த அரிய கீதாசாஸ்திரத்தைப் பூர்த்தியாய் ஆராய்ந்து பின் எவ்வாறு விரும்புகிறாயோ அவ்வாறு செய்.

 

ஏ! பாரத! எனக்கு நீ நெருங்கிய இஷ்டனாயிருக்கின்றாய். இந்த நிமித்தத்தாலே உனக்கு மீண்டும் சில சொல்லப்போகின்றேன். சகல ரகசியங்களிலும் மகா ரகசியமான அந்த எனது உத்தமமான வாக்கியத்தைக் கேள்.

 

ஏ! கௌந்தேய! என்னிடத்தில் மனமுடையவனாகவும், என்னிடத்தில் பக்தியுடையவனாகவும், என்னை விருப்புடன் ஆராதிக்கின்றவனாகவும் நீ ஆகக்கடவாய். என்னையே நமஸ்காரஞ்செய். என்னையே அடைவாய். நீ எனக்குப் பிரியனா யிருக்கின்றாய். உனக்கு உண்மையாக உறுதி கூறுகின்றேன்.

 

ஏ! அருச்சுன! நீ சகல கருமங்களையும் விட்டு என்னையே சரணமாக அடைவாயாக. நான் உன்னைச் சகல பாபங்களினின்றும் நீக்கிக் காப்பாற்றுவேன். விசனப்படாமலிரு.

 

இந்த சுலோகத்திற்கு சகல கருமயோக நிஷ்டையைக் காட்டிலும் பரம ரகசியமாகிய ஈசுவரசரணாகதியைப் பற்றி முன்னரே முடிவாக உனக்கு விளக்கிக் கூறியாய்விட்டது. இப்போது கருமயோக நிஷ்டையின் பலமாயுஞ் சகல வேதாந்த சாரமாயு மிருக்கின்ற பூரணஞானம் இதனால் விளக்கப்பட்டிருக்கின்றது என்று பகவான் பார்த்தனுக் குரைத்ததாக சங்கரர் கூறுகின்றார்.

 

பகவான் கூறுதல்: - ஏ! விஜய! இந்தக் கீதார்த்ததத்துவம் தவமில்லாதவனுக்கு ஒருபொழுதும் சொல்லத்தக்கதன்று. பகவதாசாரிய பக்தி இல்லாதவனுக்கும் சொல்லக்கூடியதன்று. பகவதாசாரிய கைங்கரியஞ் செய்யாதவனுக்கும் அல்லது கீதாதத்துவத்தைக் கேட்க இஷ்டமில்லாதவனுக்குஞ் சொல்லத்தக்கதன்று; எவன் என்னைத் தூஷிக்கின்றானோ அவனுக்குஞ் சொல்லத் தக்கதன்று.

 

ஏ! கிரீடி! எவன் பரமரகசியமாக விளங்கும் இந்தக் கீதாசாஸ்திரத்தை எனது பக்தர்களுக்கு விளக்கிச் சொல்லுவானோ அல்லது உபதேசிப்பானோ அவன் என்னிடத்தில் சிரேஷ்டமான பக்தியைச் செய்து சகல சந்தேகமு மற்றவனாய், கட்டாயம் என்னையே அடைவான்.

 

இதற்குச் சங்கரர் கீதையிலுள்ள சுலோகங்களையாவது அவைகளின் அர்த்தங்களையாவது மனத்திற் பதியும்படி சொல்லுகிறவன் என்னிடத்தில் சிரேஷ்டமான பக்தி கொண்டு அதாவது வாசுதேவனாகிய பகவானது சேவையை (கைங்கரியத்தை) இவ்விதமாக நான் செய்கின்றேன் என்ற உறுதி யான எண்ணத்தைக்கொண்டு உபதேசிக்க வேண்டும் என்பதே தாற்பரியம் என்று கூறுகின்றார்.

ஏ! காண்டீப! மனிதர்களில் என் பக்தர்களுக்கு கீதையை யுபதேசிப் பவனைக்காட்டிலும் எனக்கு மிகவும் பிரியமுள்ளவன் வேறு ஒருவனுமில்லை. எனக்கு அவனைக்காட்டிலும் ஒருவன் மிகவும் பிரியமுள்ளவனாகப் பூமியில் உண்டாகப் போவதுமில்லை.

 

ஏ! தனஞ்சய! தர்மமார்க்கத்தைவிட்டு விலகாததாகிய நம் இருவருடைய இந்தச் சம்வாதத்தை எவன் படிக்கின்றானோ அவனால் ஞானமும் உத்தமமு மாகிய யக்ஞத்தாலே நான் ஆராதிக்கப்பட்டவனாவேனென்பது எனது நிச்சயம். 

 

இந்த அரிய கீதாசாஸ்திரத்தை ஞானயக்ஞத்திற்குச் சமானமான தென்றாவது தேவாதி விஷயமான யக்ஞாதிகள் போலப் பலனைக் கொடுக்கத்தக்க தென்றாவது கொள்ள வேண்டும். ஏனெனில் யக்ஞமானது நான்குவிதப்படும். (1) விதியக்ஞம், - சரீரத்தாற் செய்யத்தக்க பிர்மயக்ஞாதிகள் (2) ஜப யக்ஞம், - பாராயணாதிகளாகிய வாயாலுச்சரிப்பது. (3) உபாம்சுயக்ஞம், - பிறர்க்குக் கேளாமலிருக்கும்படி வாய்க்குள்ளாகவே உச்சரிப்பது. (4) மாநஸயக்ஞம், - மனத்தால் தியானிப்பது. நான்காவதாகக் கூறப்பட்டுள்ள இந்த மாநஸயக்ஞந்தான் ஞானயக்ஞமாகச் சொல்லப்பட்டது என்று ஸ்ரீ சங்கார் கூறுகின்றார்.

பகவான் கூறுதல்: - ஏ! விஜய! எந்த மனிதன் சிரத்தையுடையவனாகவும் அசூயை யற்றவனாகவு மிருந்து இக்கீதையைக் கேட்பானோ அவனும் சகல பாபங்களினின்றும் நீங்கினவனாய்ப் புண்ணிய கருமங்களைச் செய்தவர்கள் அடையும் நல்லலோகங்களை அடைவான்.

 

ஏ! பார்த்த! இதுவரையில் நான் சொல்லி வந்த விஷயங்களையெல்லாம் நீ ஒரே நிலையான மனத்துடன் கேட்டு வந்தனையா? ஏ! தனஞ்சய! உனது அக்ஞானத்தாலுண்டான மோகம் உன்னைவிட்டு நீங்கிவிட்டதா?

 

அருச்சுனன் சொல்லுதல்: - ஏ! அச்சுத! உமது அநுக்கிரகத்தாலே நான் மெய்யுணர் வடைந்தேன்; மோகம் நீங்கிவிட்டது; சந்தேக நிவர்த்தி யடைந்த வனாயிருக்கின்றேன். ஆதலால் கட்டாயம் உமது வாக்யத்தை நிறைவேற்று வேன்.

 

அவிவேகம் போய்விட்டதா என்னும் வினாவுக்கு அக்ஞானம் போய் விட்டதென்று உத்தரஞ் சொல்லப்பட்டது. இந்த உத்தரத்தாற் சாஸ்திர விசாரத்திற்கு அக்ஞான நிவர்த்தியும் ஆத்ம சொரூபாது சந்தானமுமே பலனென்று வெளியிட்டதாகின்றது. (மோகம் - அக்ஞானம்).'' உமது வாக்யத்தை நிறைவேற்றுவேன்'' என்றமையாலே எனக்கு ஆகவேண்டிய தொன்று மில்லை. உமது உத்தரவை நிறைவேற்றுவதே எனது கடமையென்று நினைக்கின்றேன் என்னுந் தாத்பரியங் கிடைத்தது என்று சங்கரர் கூறுகின்றார்.

 

சஞ்சயன் திருதராட்டிரனைப் பார்த்துச் சொல்லுதல்: - நான் இவ்விதமாக மகாத்மாவான வாசுதேவன் அருச்சுனன் என்னு மிருவாது ஆச்சரியமானதும் புளக முண்டாகத்தக்கதுமான இந்தச் சம்வாதத்தைக் கேட்டேன்.

 

ரகசியமானதும், உத்தமமானதும், யோக சாஸ்திரமாக விளங்குவதுமாகிய இந்தக் கீதையைத் தாமாகவே அருச்சுனனுக்கு உபதேசித்தவரும், சகலவிதமான யோகங்களுக்கும் ஈசனாக விளங்குகின்றவருமான ஸ்ரீ கிருஷ்ண பகவானிடத்திலிருந்து வியாசமுனிவரது அநுக்கிரகத்தாலே நான் நேராகவே கேட்டேன்.

 

ஏ! அரசனே! ஆச்சரியமானதும், புண்ணியமானதுமான இந்தக் கிருஷ்ணார்ச்சுனர்களின் சம்வாதத்தை நினைத்து நினைத்து நான் அடிக்கடி மிகுந்த சந்தோஷமடைகின்றேன்.
 

ஏ! மன்ன! சாக்ஷாத் ஹரியாக விளங்கும் ஸ்ரீ கிருஷ்ண பகவானது அதிக ஆச்சர்யமான அந்த விசுவரூபத்தையும் நினைக்க நினைக்க எனக்கு மிகுந்த வியப்புண்டாகின்றது. நான் அதனால் மேலும் மேலுஞ் சந்தோஷமடைகின்றேன்.

 

எந்தப் பக்ஷத்தில் யோகங்களுக்கு ஈசனாக விளங்கும் ஸ்ரீ கிருஷ்ணபகவானும், எந்தப் பக்ஷத்தில் காண்டீபமென்னுஞ் சிறந்த வில்லைத்தரித்த அருச்சுனனு மிருக்கின்றார்களோ அந்தப் பக்ஷத்தில் ராஜ்ஜிய லக்ஷமியும், ஜயமும் அபிவிருத்தியும், நியாயமும் நிச்சயமாக இருக்கின்றனவென்பது எனது அபிப்பிராயம்

 

பகவத்கீதை வசனம் முற்றிற்று.

 

சீடன்

 

ஆனந்த போதினி –

1923 ௵ ஜுலை ௴ முதல்

1926 ௵ செப்டம்பர் ௴ வரை

 

No comments:

Post a Comment