தேசிகனும்
தேசப்பற்றும்
(சு. வே. நடராஜன்)
தேசிகன் யார்? உயர்
திரு. தேசிக விநாயகம் பிள்ளையவர்களே யாவர். இவரை நம் தமிழ் நாடு நன்கறியும்.
வஞ்சி நாட்டின் கண்ணுள்ளது
நாஞ்சில் நாடு, அதன்கண் அமைந்தது தேரூர். இதுவே பிள்ளையவர்களின் பிறப்பிடம். இவ்வூரில்
அவர் 1876-ம் ஆண்டு பிறந்தார். இதுகாலை, புத்தேரியில் வதிகிறார்.
ஸ்ரீலஸ்ரீ சாந்தலிங்கத்
தம்பிரானிடம் தமிழ் பயின்றவர். திருநெல்வேலி உமையொரு பாகக் குருக்களிடம் சிவ தீட்சை
பெற்றவர். கோட்டாறு, திருவனந்தபுரம் ஆதிய இடங்களில் ஆசிரியராயிருந்து அரும்பணி ஆற்றியவர்.
தெய்வ பக்தியிற்
சிறந்த தெய்வீகர்; தேச பக்தியிற் தேர்ந்தஅன்பர்; சாந்தகுணம் நிரம்பிய சான்றோர்; கருணை
நிறைந்த கருத்தாளர்; ஒழுக்கத்தில் விழுமிய பெரியார்; கல்வியிற் பெரியர்; கவித்துவ முடையர்.
அவர் கவிகள் அருமையும்
பெருமையுமுடையன; அழகும் ஆழமுமுடையன; சொல் நயம் பொருள் நயம் வாய்ந்தன; நகைச்சுவை ததும்பியன;
செந்தமிழில் - இனிய எளிய நடையில்-கவினுற அமைந்தன. புலமைமிக்கவரின் புலமை தெரிதல் புலமை
மிக்கவர்க்கன்றோ புலனாம், வேறு யாவர் அறிவர்? கடவுளிடம் கரை கொளாப்பற்றுடைய
கவிதைகள்; இயற்கையில் ஆராத அன்புடைய கவிதைகள்; நீதிகள் நிறைந்த கவிதைகள்; மூதுரை செறிந்த
கவிதைகள்; அவர் கவிதைகளின் அமைப்பை-அழகை-இன்பை என்னென்பேம்! கவிதைகளின் அருமையை உணர்ந்தன்றோ
'கவிமணி' என்னும் பட்டமும் சென்னை பல்கலைக் கழகத்தார் வழங்கினர்.
'அகத்தினழகு முகத்தில்
தெரியும்'. உள்ளக் கிடக்கை யன்றோ வெளியிற் செயலாக் வெளிப்படும்? எனவே, தேசபக்தி தெளிவுற
நிறைந்த அவரது பாடலைக் காணுங்கால், அவரதுள்ளம் தேசப்பற்றுடைய தெனின் குற்றமுடைத்தோ?
அவர் பற்று எவ்வளவு ஆழமுடைத்தென்று அன்னவர் பாடல்களில் நின்றுந் தெளியலாம்.
ஒவ்வொருவருக்கும்
தத்தம் பிறந்த நாட்டின் மீது அன்பும் ஆர்வமும் உண்டாதல் இயற்கை. 'காக்கைக்கும் தன்
குஞ்சு பொன் குஞ்சு.' ஆயினும், அவர் தேசத்தினிடை எத்தன்மையதாகிய அன்பை
உடையவர் என்பதை அளந்தறிதல் வேண்டும் அஃது அறிஞர் கடனுமாகும்.
"அன்புடையார்
என்பு முரியர் பிறர்க்கு." தனக்கென வாழாத் தன்மையினர்; பிறர்க்கென வாழும் பிறவியினர்;
தன்நாட்டிற்கு -- தமிழ் நாட்டிற்கு - தமிழ்ப் பாஷைக்கு உடல், பொருள், வி மூன்றும் அர்ப்பணித்த
பெருந்தகை என்றால் மிகையாகா.
பண்டை நாள் மங்கை
நல்லாளொருத்தி இருந்தனள். அவள் தந்தை, தமையன்மார், கணவன் இவர் அனைவரும் போரில் பட்ட
எனினும், மாற்றார் மறம் மாறிலது. சிறுமகன் தாய்ப்பால் பருகிக் கொண்டிருந்தான். அம்மகனை,
தன் மார்பகத்தினின்றும் இழுத்து, ஈட்டி கையில் தந்து போருக்கனுப்பினள். இவளன்றோ வீரமகள்!
இத்தகைய விரமகளிர் எண்ணிறந்தவரைப் பெற்றெடுத்தது இப்பாரதநாடு. இப்பெற்றிய பாரதநாடு,
அறங்குன்றி, மறந்தேய்ந்து பற்றற்றுப் பாழுங் குழியில் வீழ்ந்து கிடந்தது. அந்நாள் எந்நாளும்
நன்னாளாக்க நம் நாட்டில் பாரதி தோன்றி இன்மொழியால் இசைத் தமிழால் புத்துயிர் பெற பாடல்கள்
பல தந்தனர்.
நம் பிள்ளையவர்களும்
'பாரதி பாடலும் பட்டிக்காட்டானும்' என்னுந் தலையங்கத்தில் கரும்புத் தோட்டத்திலே, செந்தமிழ்
நாடு, பாஞ்சாலி சபதம், சுதந்திரப் பள்ளு, தொண்டு செய்யுமடிமை என்பன வர்திய பாரதி பாடல்களைச்
சுட்டிக்காட்டிச் செல்கின்றார்.
'உள்ளந் தெளியுமொரு பாட்டிலேயடா - மிக்க
ஊக்கம்
பிறக்குமொரு பாட்டிலேயடா
கள்ளின் வெறிகொளுமோர் பாட்டிலேயடா-ஊற்றாய்க்
கண்ணீர்
சொரிந்திடுமோர் பாட்டிலேயடா.'
என்று பாரதி பாடல்களைப் பாராட்டுகின்றார். அவர் பாடல் கண்டு உள்ளத் தெளிவில்லாதாரை
உள்ளந் தெளிய வேண்டுகின்றார்; ஊக்கமிழந்தவரை ஊக்கமுறத் தூண்டுகின்றார்; நாட்டுப் பற்றற்றவரை
பற்று வெறி கொள்ள நாட்டுகின்றார்; நாட்டின் நிலைகண்டு ஊற்றாய்க் கண்ணீர் உகுக்க உரைக்கின்றார்.
என்னே! நம் கவிமணியின் உளப்பற்று.
“செந்தமிழ் நாட்டின் - முதன்மொழி
செவியிற்
சேறா முன்னே
அந்தமில் லாமல்--உள்ளத்தில்
அமுத
மூறுதடா"
என்பது தன் நாட்டின் மீது வைத்த ஆழ்ந்த அன்பையும் அபிமர் னத்தையும் தெள்ளிதின் தெளிவுறுத்தும்.
'செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே'
எனப் பாரதியாருங் கூறிப் போந்தார் அன்றோ!
இந் நாவலந் தீவிலுள்ள
நம் பெரியோரெல்லாம் பாவங்களை ஐங் கூறு படுத்தினர். அவை பொய் கொலை, களவு, கள், காமம்
எனப்படும். இவைகளை நம் முன்னோர் நெஞ்சால் நினைக்கவும் அஞ்சுவர். பிற நாட்டார் இப் பெரும்
பாவங்களுள் பலவற்றைச் சிறு குற்றமாகவும் கருதார். மேலை நாடுகள் பலவற்றில் கொலையுங்
கள்ளும் பாவ-வுணர்ச்சி இல்லாமலே பயிலப்படும். இஃது அவர்கட்கு
பொழுது போக்கும் ஒரு சிறு விளையாட்டு போலும்! தற்போதும் மேலை நாடு வெடி குண்டு வீச்சினிற்
குடி கொண்டு களித்தல் கண்கூடு.
கொல்லா விரதங்
கொண்டோரே நல்லோர். கொலை முதலியன அகந்தூய்மை இல்லாரால் இயற்றப்படும். ஆகவே, அகந்தூய்மை
உடையராதல் வேண்டும்; கொல்லாமையைக் கடைப்பிடிக்க வேண்டும்; தன்னுயிர்போல் மன்னுயிர்
ஓம்ப வேண்டும்; எவ்வுயிரிடத்தும் அருளுடையராய் இருத்தல் வேண்டும்; தண்ணளி செய்யும்
இறைவழி நிற்க வேண்டும்.
பிறநாட்டு நாகரிகம்
நம் நாட்டில் விரவியது - விரவுகின்றது. யாண்டும் கொலைத் தொழில்! எங்கணும் உயிர்ப்பலி!
புத்தர் பிரான் தோன்றினார்; கொலைத் தொழிலை உலைத்தார்; இன்னுரைகள் ஈந்தார்; அறிவுரைகள்
தந்தார்; நாடும் அவர் வழி நின்று தழை வுற்றது.
''புத்தன் உரையைப் பொன்னுரை யாக
நித்தம்
நித்தம் நினைத்த பயனாற்
கொல்லா விரதம் குவலயத்
தெல்லா
வுயிர்க்கும் இன்பளித் ததுவே”
'என்றார் நம் கவிமணி. இவ்வாறு புத்தரின் கட்டுரையைக் கட்டுரைக்கு மிடையே, பாரத நாட்டைப்
பாராட்டும் அவர் தம் தேயப்பற்று தான். என்னை!
ஒற்றுமை உயர்ந்தது
- விழுமியது. ஒற்றுமைக்கீடு ஒன்றுமிலை எனலாம். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே; இன்றேல்
தாழ்வே.
ஒற்றுமை யாக உழைத்திடுவோம்- நாட்டில்
உற்ற துணைவராய் வாழ்ந்திடுவோம்''
என்று இந்தியாவில் நிலவும் ஊழல்களை நினைந்து, கவிமணி, நம்மை ஒற்றுமையுடன் வாழ வேண்டுகிறார்.
ஒற்றுமையே உயர்வைக்
கொடுக்கும்; ஒற்றுமை உள்ள நாடே உயர்ந்த நாடாகும். ஆதலால், நாடு நலமுற ஒற்றுமை நலத்தை
நாடுகிறார். இஃதை திரு. தேசிகர், உள்ளந் தெளிவுற தெள்ளத் தெளிந்த தீந்தமிழில் தீட்டி
யுள்ளார்.
“நாடி எவரொடும் நட்பினராய்த் தேச.
நன்மைக் குழைப்பதில் நஷ்டமுண்டோ''
எனத் தேச நன்மை கருதி நட்பினராய் ஒன்று பட்டுழைக்கத்
தூண்டுகின்றார். நாட்டுக்கு நன்மையை நாடுபவர் போடுஞ் சண்டைகளை அவர்கள் ஆடும் நாட்கமென்று
நகைக்கின்றார்.
உலகில் தோன்றிய அனைவருக்கும்
இறப்பும் ஒன்றே; பிறப்பும் ஒன்றே; ஆண்டவன் பார்வையில் அனைவரும் ஒன்றே; யாவரும் ஒரு
சாதியினரே. ஆகையால், 'சாதி சாதி' என்று சதி செய்யும் மாயத்தை மாய்க்க வேண்டுகின்றார்.
“சாதி சாதி யென்றுநிதம்
சண்டை
போட்டு மண்டைகளை
மோதி மோதி யுடைப்பதொரு
மூடச்
செயலென் றுணரீரோ"
எனச் செயற்கை வெறுத்த செம்மையாளராய் இயற்கை இன்பே
இன்பெனக் கொள்கிறார்.
“ஈன ஜாதியெனும் பேச்சினைப்போல் - நெஞ்சை
ஈர்ந்திடும் வாளொன்று வேறுளதோ”
என வினவுகின்றார்.
“என் சாதி உயர்சாதி இழிந்தசாதி
என்று சொல நாவு மெழா திருக்க வேண்டும்
நெஞ்சாரும் நினைப்பெல்லாம் நிகழ்த்தி நின்றேன்
நின் மலனே இரங்கி நீ யருளுதியே"
என ‘எல்லாருமோர் சாதி' என்னும் சமரசத்தைச் சாற்றுகின்றார்.
சமரசம் யாண்டுளதோ, ஆண்டு சன்மார்க்கமும் உண்டல்லவா? “நம் நாட்டுச் சனங்கள் சமரசமாய்
வாழ வேண்டும்; சன்மார்க்கராய் வாழ்வு நடாத்தல் வேண்டும் நம் நாட்டில் சமரச சன்மார்க்கம்
நின்று நிலவ வேண்டும்" என ஆண்டவனை நோக்கிஅருள் சுரக்க வேண்டுகின்றார். இந் நீர்மைய
அகன்ற மனத்தூய்மையைப் புகலவும் வேண்டுங் கொல்?
சாதியிலே, மக்கள்
கற்பித்துக் கொண்ட உயர்வு தாழ்விலே, தாழ்ந்த சிலர் தீண்டாதார் எனப்படுவர். தீண்டாமைப்
பேய் நம் நாட்டில் தலை விரித்துத் தாண்டவமாடியது. அது காலை அவர்கள்ளுற்ற அல்லற்கோர்
அளவில்லை. எல்லையற்ற துன்புற்ற அத்தீண்டாதார் உய்யும் நெறி முனைந்தார். அக் காலத்தில்
தான் நம் நாட்டிடை பல் வேறு சமயங்கள் நுழைந்தன. அவரவர் தமதுஆற்றலுக்கேற்ப மதாந்தரங்களைத்
தழுவினர். இது கண்டு நம் பிள்ளையவர்கள் பாடல்கள் பல செய்துள்ளார். "தீண்டாதார்
விண்ணப்பத்தில்' அவர்கள் உரிமை உரைக்கும் பான்மை கன்னெஞ்சுங் கரைந்துருகச் செய்யும்,
‘குற்றமிலா எமைக்கண்டு கோவிலையும் அடைக்கலாமோ
பெற்றவரைக்
காணவரும் பிள்ளை களைத் தடுப்பாருண்டோ?’
'தாகமென்று வருபவர்க்குத் தண்ணீரை அளியாமல்
ஆகமங்கள்
ஓதிநிற்றல் அழகாமோ? அறமாமோ'
என எளிய உவமானத்தால் எழிலுற விளக்கிச் செல்கின்றார்;
கனிந்த தமிழ் மொழியில் நமதுள்ளத்தைக் கனிய வைக்கின்றார் அமுதத்தை இதமுடன் அருத்துகின்றார்.
“பண்டுபண் டேயுள்ள பேயாம் - இந்த
பாரத நாட்டைப்பாழ் ஆக்கிய பேயாம்”
"இப் பெரும் பேயினி மேலும்--நம
திந்திய
நாட்டில் இருந்திட லாமோ
கப்பலில் ஏற்றுவோ மையா--நடுக்
காயல்
கடல் கண்டு தள்ளுவோம் ஐயா"
என்றார் கவி. நாடு கடத்தின் ஓடிவந்து விடும் போலும்! காடு புகுத்தின் நாட்டையும் போலும்!
ஆகவே நாடுமொழித்து, காடுந்துறந்து, காயலையுங் கடலையுங் கொண்டார் கவி. காயல் நாட்டகமுள்ளது:
கடல் நாட்டுப் புறமுள்ளது. ஒருகால் காயலில் தள்ளின் கரைசேரும்; ஆனால் கடலில் தள்ளின்
இயலுங் கொல்? எனவே காயலை முன்னும், கடலை அதன் பின்னும் வைத்தார். காயல், கடல் கரைகண்டு
தள்ளின் மீட்டும் வருமென வெருவினர் போலும்! வர்ராதொழிய வேண்டின் நடுக் காயல் கடல் கண்டு
தள்ள வேண்டுமென நினைந்து போலும் நடு என்னும் அடையுடன் அமைத்தார்.
'நடுக்காயல் கடல் கண்டு சேர்ப்போம்' அல்லது
நடுக்காயல் கடல் கண்டு ஆழ்த்துவோம்'
என்பது சிறப்பு போலும். அவ்வாறு கருதியே நடுக்காயல் கடல்
கண்டு 'தள்ளுவோம்' என இழிவுபடுத்திக் கூறினர். என்னே! நம்புலவர் பெருமானின் நெஞ்சப்
பாங்கு! இன்னணம் சில சொல்லிப் பல உய்த்துணர வைப்பதன்றோ மெய்ப் புலவர் செய்ல்!
நம் நாட்டில் வேலையில்லாத்
திண்டாட்டம் யாண்டும் பரவலுற்றது - பரவுகின்றது - பரவும். தனை அறவே ஒழிக்கக் கரு•தினார்
காந்தியடிகள். கைராட்டின த்தைக் கைக் கொள்ள அல்லும் பகலும் அயராதுழைத்தார் - உழைக்கின்றார்-
உழைப்பார். கதரைக் கட்ட உதிர வேர்வை சிந்தினார்-சிந்துகின்றார் - சிந்துவார். அம் மகானது
உண்மைக் கொள்கைகளை கவிமணி பொன்போற் போற்றுகின்றார்.
'ராட்டின மல்லாது வேறுபடை-இந்த
நாட்டினுக்
கில்லையென்று நாட்டுங்கொடி
'நல்ல சரச்குசீமைச் சரக்கென்று நீர் - இந்த
நாட்டுச்
சரக்கைப் பழிக்கலாமோ?'
பெண்டுகள் பிள்ளைகள் நெய்த-- கதருடை
பிதாம்
பரத்தினும் மேலாமடா'
சீலை உடை கதருடையாய்த் திகழ வேண்டும்'
'வேலையில்லாத் திண்டாட்டாம் ஒழிய வேண்டும்'
'செஞ்சின் நூலை நினைப்பது விட்டினிப்
பஞ்சின்
நூலிற் பழகத் துணிகுவன்
கெஞ்சு வாழ்க்கையும் கேடும் ஒழியுமே
விஞ்சு
செல்வமும் மேன்மையுக் தக்குமே'
என்பன வாதிய தொடர்களில் முன்னவர் கொள்கைகள் மிளிரக் காண்கின்றனம்.
மங்கையரை மணாளர்
அடிமைகளாய் -ஆட்டும் பொம்மைகளாய் நடத்துகின்றார். பெண்ணுரிமை வழங்கல் பெருந் தீதென்கின்றார்;
பெண்கள் படித்தலும் பெருமையன்று என்கின்றார். எம் பெருமானுக்கு எவ்வுயிருமொன்றே. உயர்வுமில்லை;
தாழ்வுமில்லை.
"எண்ணென்ப வேனை யெழுத்தென்ப விவ்விரண்டும்
கண்ணென்ப வாழு முயிர்க்கு''
என வள்ளுவரும், இருபாலார்க்கும் ஒப்பக் கூறியே சென்றார்.
தேசவளர்ச்சிக்குப்
பெண்களின் வளர்ச்சி இன்றியமையாததன்றோ? ஒரு நாட்டின் தாய்மை நிலை பெண்ணாலன்றோ காக்கப்படுகிறது.
கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் பெண்ணென்னும் பெருந்தகையாளிட
மன்றோ உள? இத்தகைய பெண்களைப் பழிகின்றார் ஆண்மக்கள். இதை திரு. தேசிகர் செந்தேன் பிலிற்றும்
செந்தமிழில் செவ்வனம் அமைத்துளார்.
“வாட்டும் உலகில் வழுத்தரிய
வாழ்க்கை துணையாம் மங்கையரை
ஆட்டும் பொம்மை அடிமைகளாய்
ஆக்கி வைப்பதழகா காமோ”
“அன்பினுக் காகவே வாழ்பவரார்-அன்பில்
ஆவியும் போக்கத் துணிபவரார்''
பண்டை மகளிர் மணாளர் அமர்க்களஞ் சென்று சமர் புரிகின்றனர். ஆண்டு உயிரிழந்து மீண்டு
வாரா தொழிகின்றனர். அரிவையர் பலர் அது தெரிந்து, தன் ஆருயிர் நாயகனுக்காக ஆவிதுறக்கின்றனர்.
வேறு சிலர் பூசற் களஞ் செல்கின்றனர். ஆண்டுத் தன் கொழுநனைக் காண யாண்டுந் தேடுகின்றனர்.
தேடிக்காண்ட்லும் முகத்தொடு முகஞ் சேர்க்கின்றனர். ஆரத் தழுவுகின்றனர்; அன்பனுக்காக
இன்னுயிர் துறக்கின்றனர். இத்தகைய ரன்றோ அன்பினுக்காக வாழ்பவர்! அன்பில் ஆவியையும்
போக்கத் துணிபவர்! கற்பிற்கரசி கண்ணகியை அறியார் யார்? இந் நங்கையன்றோ அன்பிற்காக உயிர்
தாங்கியவள், அன்பில் ஆவியையும் போக்கியவள்? என்னே! பெண்ணைப் பழிக்கும் இழிநிலை!
முந்தைநாள், பாரத
நாட்டில் பஞ்சை நூலாகச் செய்தனர்;
நேர்மையான ஆடைகள் நெய்தனர்; அயல்நாட்டிற் கனுப்பி வாணிபத்தை வளர்த்தனர். நாடுஞ் சிறப்புற்றுத்
திகழ்ந்தது; செல்வத்தில் செழித்தது; புகழ்பெற்று விளங்கியது. அக்கால நிலையை நினைந்து
சிந்தை நைந்துருகுகின்றார் கவிமணி.
'காசுமியர் சால்வை நெய்த கையுமில்லையோ
- உயர்
காசியிலே
நெய்த பட்டின் காலமும் போச்சோ.'
அந்நிய நாடுகளுக் காடையனுப்பி - மானம்
அழியாமவ்
காத்ததுங்கள் முன்னோரல்லவா?
இந்நிலை மறந்து நீங்கள் இந்தநாளில்--உங்கள்
இடுப்புத்
துணிக்கலைவ திழிவல்லவோ''
இதனினின்றும் அன்னவர் தேசப்பற்று காய்தல் உவத்தல் அக்ற்றி நடுநின்று ஆராய்வார்க்கு,
அங்கை நெல்லிக்கனி யென விளங்கா நிற்கும்.
பண்டு பாரதநாட்டில்
கைத்தொழில் மிக்கிருந்தது; உழவுத்தொழில் சிறப்புற்றிருந்தது. இடைக்காலத்தில் மேல் நாட்டு
நாகரீகம் நம் நாட்டில் புகுந்தது. அன்று பிடித்தது நம் நாட்டிற்குச் சனி. கைத்தொழிலை
வெறுத்தனர்; விடுத்தனர். பதவி பட்டங்களை மோகித்தனர். கண்டு தொழுது கைகூப்பி நின்று
பெறுங்காசால் வயிறு வளர்த்தனர்; அடிமைக்குழியில் விழுந்தனர்; சுதந்திரத்தை இழந்தனர்.
ஆனால் கவி, நாஞ்சில் நாட்டு மக்கள் மனநிலை கூறுமிடத்து,
'கொண்ட நிலத்தில் விளைந்துவரும் - அந்தக்
கூழும் அமுதாகக் கொள்ளும் நாடு
கண்டுதொழுது கைகூப்பி நின்று--பெறும்
காசை விடமாகக் காணும் நாடு.'
என்றார்.
நாஞ்சில் நாட்டினர்
சொந்த நிலத்தில் விளைந்து வரும் அந்தக் கூழும் அமுதாகக் கொள்கின்றனர்; கைகூப்பி நின்று
பெறும் காசை விடமாகக் காண்கின்றனர்; இஃது கைத்தொழிலில் அவர்கள் கண்ட விழுமிய நிலையை
விளக்குகின்றது. கைத்தொழில் அருகிய நமது நாட்டில் மீண்டும் அதை நடைமுறையில் கொணர வேண்டுமென
ஞாபக மூட்டுகின்றார் கவி.
'செந்தமிழ் நாட்டுச் சிறுவர் சிறுமியர்க்
கிந்த நூலுரியதாய் என்றும் வாழ்கவே.'
என்று 'மலரும் மாலையும்' என்னும் நூலைச் செந்தமிழ் நாட்டுச் சிறுவர் சிறுமியர்க்கு
அர்ப்பணித்த அருங் குணத்தையும் தேசப்பற்றையும் என்னென்று கூறுவது? சிறுவர் பிற்காலத்து
ஆக்க வேலையாளர்; தேசத்தின் முழுப்பாரமும் அவர்களைச் சாரும்.
தேசத்தைப்பற்றி ஒன்றும் தெரியா தவர்; தேசப் பற்றில்லர் தவர், தேசப் பொறுப்பை நிர்வகிக்கின்
என்னாம்? ஆகவே, அவர்களை தேசத்தில் பற்றுண்டாகச் செய்கின்றார்; அவர்களிடம் தேசப்பற்று
மிளிரச செய்கின்றார். என்னே! அவர் தம் நாட்டுச் சிறுவர்கட்குப் பயிற்றும் பான்மை
'போரிலெழுந்த பஞ்சம்--பாரத
பூமியைத்
தாக்குதையோ'
'உலகமிசை இதுபோலும் ஒருதேசம் உளதோ'
'தேசபக்தி செழித்தோங்கி வளரவேண்டும்.
என வெளிப்படையாய்க் கூறினர். இவை அவரது தேசப்பற்றை பளிங்குபோல் விளங்கச் செய்யும்.
எனின், வேறு சான்று பகரவும் வேண்டுங் கொல்? இன்ன பிறவாற்றால், அவரது உள்ளமாகிய பள்ளத்தில்,
பற்றாகிய வெள்ளந் தேங்கி, பாரதநாடாகிய புலத்தில், பாய்ந்து பரவுகின்றது என்பதில் ஐயமில்லை.
ஆனந்த போதினி – 1944 ௵ - மே ௴
No comments:
Post a Comment