ஞானப் பிரகாசம்
தண்ணீருக்குள் வைக்கப்பட்ட
பாத்திரமானது, உள்ளும் புறம்பும் நீர் நிறைந்ததாகவே யிருக்கும்; அதைப்போலவே ஈசுரனிடத்திலே
ஐக்கியமாயிருக்கும் ஆத்மா, எங்கும் வியாபகமாயுள்ள பரமாத்மாவை உள்ளும், புறம்பும் தரிசித்துக்கொண்டே
யிருக்கும்.
நீ உன் மனதிற்குள்ளாகவே,
"குடும்பக் கவலைகள் என்னுடையவையல்ல; இவை ஈசுரனுடையவையே; நான் அவருடைய தாசனே; அவரின்
இச்சைப் பிரகாரம் நடக்கவே நான் இங்கே வந்திருக்கிறேன்'' என்று எப்பொழுதும் சிந்தனை
செய்து கொண்டிரு; இச்சிந்தனை உறுதியடைந்துவிட்டால் உலகக்தில் உனக்குச் சொந்தமென்று
கூறும்படி ஒன்றுமே யிராது; நீ ஈசுரனிடத்தே லயமாகிவிடுவாய்.
எடை கனமாயுள்ள தராசுத்
தட்டு கீழே தாழ்கின்றது; இலேசான தட்டுமேலே கிளம்புகிறது; இவற்றைப் போலவே புத்திசாலித்தனமும்,
சாமார்த்தியமும் நிறைந்த மனிதன் எப்பொழுதும் அடக்கமும், வணக்கமு முடையவனா யிருக்கிறான்;
அறிவில்லாத மூடன் கர்வங்கொண்டு எவரையும் மதியாமல் தலைநிமிர்ந்து திரிகிறான்.
சாதுக்களுடைய சங்கமானது
அரிசிக் கழுநீர் போன்றது; அரிசிக்கழு நீரானது, காடி நீரினா லுண்டாகும் மயக்கத்தைப்
போக்கும் வல்லமையுள்ளது; அதைப் போல் சாதுக்களுடைய சங்கமும் வீணான உலக ஆசையாகிய மதுபானத்தினா
லுண்டாகும் மயக்கத்தைப் போக்கும் வல்லமையுள்ளது.
பக்தனுக்கு ஈசுவரன்
பல வடிவங்களிலும் பிரசன்ன மாகிறார்; ஆனால், சமாதியிலே பிரஹ்மஞானாநுபூதி யடைந்தவனுக்கு
அவர் நிர்க்குண பிரஹ்மமாகவே - நிராகார வஸ்துவாகவே - நிர்ப்பந்தப் பொருளாகவே யிருக்கிறார்;
இந்நிலையில் தான் ஞானமும், பத்தியும் ஒற்றுமைப்படுகின்றன.
பிரபஞ்சலீலை எவருடையதோ
அவருக்கே நித்தியத்தன்மையுண்டு; எவருக்கு நித்தியத்தன்மையுண்டோ அவருடையதே இந்தப் பிரபஞ்சலீலை.
குருவையும் அறியாத
சிஷ்யனையும் அறியாத ஒருவித பரிசுத்த நிலை அதிக இரகசியமானது; அதுதான் பிரஹ்ம ஞானமென்று
சொல்லப்படும்; அந்த ஞானம் ஒருவனுக்கு உண்டாய் விட்டால் குருவினிடத்திலும் சிஷ்யனிடத்திலும்
வித்தியாசம் ஏற்படாது; எல்லாம் சமமே.
சில சமயங்களில் நாம்
உடை தரித்துக் கொண்டும், சில சமயங்களில் ஆடையின்றியும் இருப்பது போல பிரஹ்மவஸ்துவானது
சில சமயங்களில் சகுணமாயும், சில சமயங்களில் நிர்க்குணமாயும் இருக்கின்றது; சகுணப் பிரஹ்மம்
சத்தியோடு கூடிய பிரஹ்மமெனப்படும்; அப்பொழுது அது ஈசுவரன் எனப்படும்.
ஈசுவாஞானத்தைப் புத்தகங்களைப்
படிப்பதன் மூலமாகத்தான் அடைதல் கூடும், வேறு எவ்வழியினாலும் பெறல் முடியாது என்று பலர்
நினைக்கிறார்கள்; இது சரியான அபிப்பிராயமன்று; சாஸ்திரங்களை வாசிப்பதைக் காட்டினும்
உண்மையை, ஞானிகளிடம் கேட்பானால் அந்த ஞானம் எளிதிலேற்படும்; அதிலும் அநுபவத்தில் அதி
எளிதில் அந்த ஞான தரிசன முண்டாகும். வீண் சாஸ்திரப்படிப்பைக் காட்டினும் சற்குருமூலமாக
ஈசுவர ஞானத்தைக் கேட்டுணர்ந்து கொள்ளுதல் மனதில் நன்றாய்ப்பதியும்; அதைக்காட்டினும்
பிரத்தியக்ஷ ஞான தரிசனம் நன்றாய்ப் பதியும்; காசியைப் பற்றி அறிவதற்கு அது சம்பந்தமான
புத்தகத்தைப் படிப்பதைக் காட்டினும், காசிக்குச் சென்று அதை நேரில் பார்த்தவரிடம் கேட்டுத்
தெரிந்து கொள்வது நலம்; அதைக் காட்டினும் நேரிலேயே காசிக்குச் சென்று அதைத் தரிசிப்பது
மேலாகும்.
குருநாதர்.
ஆனந்த போதினி – 1928 ௵ - ஜுலை ௴
No comments:
Post a Comment