Saturday, September 5, 2020

பெண்களின் நிலை

 

முன்னுரை

 

''பேதமை யென்பது மாதர்க் கணிகலம்" என்பது நந்தமிழ் நாட்டில் வழங்கிவரும் பழமொழிகளில் ஒன்று. பழமொழியை இயற்றிய மகான் யாரோ தெரியவில்லை. அது யாராயினும் சரி, இப் பழமொழியானது பெண்களுக்கோர் அடாத பழிமொழியாகவே யிருக்கிறது என்பது மட்டும் உறுதி. பெண்கள் யாவரும் பேதைகளா? அங்ஙனமாயின் அவர்களிடமிருந்து ஜனித்த ஆடவரும் பேதைகளன்றோ? ஆகவே பெண்கள் பேதைகளல்லர்; மற்று, அவர்கள் அறிவில் ஆடவர்க்குச் சற்றும் குறைந்தவரல்ல ரென்பது கண்கூடு.

 

ஆதி காலந்தொட்டு, நம் பாரத நாட்டில் பெண்மணிகள் ஆடவரைப் போலவே பல துறைகளிலும் முன்னேற்ற மடைந்தவர்களாய் இருந்து வந்திருக்கின்றனர். நமது நாட்டிலே ஆரியர் செல்வாக்குடன் விளங்கிய காலத்தில், பெண்மணிகள் தற்போது நமது சகோதரிகளிற் பலரைப்போல் சமையலறைச் சுவர்களினிடையே சிறைவாசம் செய்யவில்லை. ஆனால் பரந்த அறிவும் விரிந்த நோக்கமும், உயர்ந்த வீரமும் கொண்டு விளங்கனர். சின்னஞ்சிறு வயதிலேயே தமது புதல்வர்க்கு வீரப்பாலூட்டிய பெண்மணிகளைப் பற்றி நீங்கள் கேட்டதில்லையா? போரிற் புறங்கொடுத்தோடிய பேடிகளைப் பெருவீரராக்கிய பூவைகளைப்பற்றிப் படித்ததில்லையா? கற்பைக் காக்கத் தீக்குழியில் மூழ்கி உயிர் துறந்த உத்தமிகளைப்பற்றி அறிந்ததில்லையா? இவை யெல்லாம் என் சொல்லுகிறேன்? நமது பழம் பெருமைகளைப்பற்றித் திரும்பத் திரும்பச் சொல்லி கர்வங் கொள்வதற்கல்ல - எவ்வளவோ உன்னத ஸ்தானத்திலிருந்த நாம் எவ்வளவு கேவலமான நிலைமைக்கு வந்திருக்கிறோம் என்றுணர்ந்து, நமது தாழ்மையான நிலையினின்று மறுபடியும் மேன்மையுறத்தக்க வழியைப் பின்பற்றுவதற்கேயாம்.


பெண் சுதந்தரம்.

 

'இந்தியாவில் பெண்களுக்குச் சுதந்தரமே கிடையாது. அவர்கள் யாவ்ரும் அடிமைகள்' என்பது வெள்ளைச் சீர்திருத்தக்காரர்கள் கட்டிவிட்ட பொய்மூட்டைகளில் முத தன்மையானது. அதனை யாதரித்து நமது கருப்புச் சீர்திருத்தக்காரர்களும் பிரமாதமாகக் கூச்சல் போடுகிறார்கள். இந்தியாவில் வெளிக்கு நமது சகோதரிகள் பராதீனர்களாயிருப்பது உண்மையே. ஆனால் உண்மையில் அவர்களுக்குள்ள செல்வாக்கு அனந்தம். இதில் எதாவது சந்தேகமிருந்தால் நீங்களே உங்கள் நெஞ்சில் கைவைத்து யோசியுங்கள். வீட்டில் உங்களைவிட உங்கள் மனைவியர்க்கு அதிகச் செல்வாக்குண்டு என்பதை நன்குணர்வீர்கள்.

 

பெண்களுக்கு எவ்விதமான சுதந்தரம் தேவை யென்பது அடுத்த கேள்வி. சுதந்தரம் என்றால் தான்தோன்றித்தனமாகத் திரிவது என்று யாராவது எண்ணினால், அதைப் போன்ற பெரிய தவறு வேறொன்றுமில்லை. மேனாட்டு வெள்ளைப் பண்டிதர்கள் தங்கள் நாட்டுப் பெண்களுக்குள்ள சுதந்தரத்தைப் போல் இந்தியாவில் இல்லையென்று பறைசாற்றுகிறார்கள். உண்மையில் அவர்கள் நாட்டுப் பெண்மணிகளின் மிதமிஞ்சிய சுயேச்சையால், மாதர்கள் தங்களுக்குத் தாங்களே பெரிய படுகுழி தோண்டிக் கொள்கிறார்கள் என்பதை இப்பண்டிதர்கள் கவனிக்கிறார்களா? இன்றைக்கு ஒருவனுடன் கலியாணம், மறுநாள் விவாக விலக்கு. அன்றே வேறொருவனுடன் கூடி வாழ்தல், மறுபடியுமோ விவாக விலக்குத்தான். என்னே கலிகாலக் கொடுமை! இவர்கள் மக்களா மாக்களா? இது மட்டுமோ? மேனாட்டு நாகரிகத்தில் மூழ்கியதன் பயனாய் மிதமிஞ்சிய சுயேச்சையால் பாழடைந்த பாரத புத்திரிகளும் பலராவர்.

 

ஆகவே, நம் சகோதரிகளுக்கு அவ்விதமான சுதந்தரமானது தேவையற்றதும் தீமை பயப்பதுமாகும். கணவன் தீய வழியிற் புகுந்தால் அவனைக் காப்பாற்றும் சுதந்தரம் நம் நங்கையர்க்கு அமைய வேண்டும்; குழந்தைகளைச் சிறந்த வழியில் நடத்தும் சுதந்தரம் அவர்களுக்கு வேண்டும்; அநீதியையும் பாவத்தையும் எதிர்பார்த்துப் போராடும் சுதந்தரம் வேண்டும்; இல்லறத்தைக் செவ்வனே நடத்தும் சுதந்தரமும் அவர்களுக்கு வேண்டும்.

 

பெண்மணிகள் புருஷர்களுக்கு- இன்று நேற்று அல்ல--பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகவே வாழ்க்கைத் துணைவிகளாகவும், துன்பத்தில் தேறுதல் கூறும் உண்மைத் தோழிகளாகவும், வீட்டாசிகளாகவும் இருந்து வந்திருக்கின்றனர். அவர்களது உதவியின்றேல் கோடிக் கணக்கான ஜனங்கள் பட்டினியால் மாள வேண்டியதே. நிழலின் அருமை வெய்யிலில் தெரியுமென்பர். மாதர்களின் சிறந்த பணிவிடைகள் அவர்கள் கண் மூடிவிட்டபிறகே நன்கு விளங்கும். குடும்பத் தலைவி இறந்துவிட்டால், கணவன், குழந்தைகள் முதலியோர் படும்பாடு செப்புந் தரமன்று. தாயில்லா வீடுபாழன்றோ?

 

இன்னும், விதை விதைத்தல், நாற்று நடுதல், அறுவடை செய்தல் முதலிய உழவுத் தொழிலாகிய உயிர்த் தொழிலிலும் நம் பெண்மணிகள் அரிய சேவை செய்து வருகிறார்கள். பண்டைக் காலத்தில் நம் பாரத நாட்டில் நெய்யப்பட்ட, உலகப் பிரசித்திபெற்ற ஆடைகளிற் பெரும்பாகம் நம் இந்தியப் பெண்களால் நெய்யப்பட்டனவே. இன்று நிகழும் சாத்தியப் போரிலாகட்டும், அன்று நிகழ்ந்த அறச்சமரிலாகட்டும், நம் பாரதமாதர்கள் முக்கியமான பங்கெடுத்துக் கொண்டனர் என்ப தேற்றம். இன்னும் பெண்களே ஆடவர்க்குச் சிறந்த மதியூகிகளாயும் விளங்குகிறார்கள். "தையல் சொற் கேளேல்" என்றாள் ஒரு கிழவி. "சேலை கட்டிய மாதரை நம்பினால். றிழுத்தார் ஒரு கவிராயர். இவை சில சமயங்களில் சில மாதர்களுக்குப் பொருந்துமே யன்றி, நெடுக இதே பாட்டைப் பாடுவது சற்றும் பொருந்தாது.  

ஆகவே, இத்தனை மகிமை பொருந்திய மாதர் மணிகளுக்கு மிதமிஞ்சிய சுயேச்சை யென்னும் கொடிய விஷத்தைக் கொடுப்பதற்குத் தூண்டுவதோ, துணை செய்வதோ, அனுமதிப்பதோ, பெருத்த அநீதியும் மகா பாதகமும் ஆகும். அடிமைத்தனமின்றி, மட்டுக்குட்பட்ட சுதந்தரந் துடன் சிறந்த வாழ்க்கைத் துணைவிகளாகவும், கிருக லக்ஷிமிகளாகவும் விளங்கி, நம் சகோதரிகள் பெரும்புகழ் படைத்த பாரத நாட்டின் பழஞ் சிறப்பை நிலைநிறுத்துவார்களாக.

 

பெண் கல்வி

 

கல்வியே நம்நாட்டில் மிகவும் கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகும். அதிலும் பெண் கல்வியில் எவ்வளவு கவனம் செலுத்தினாலும் தகும். ஆதலின் அதனைப்பற்றிச் சற்று ஆராய்வோம்.

பெண்களுக்கு எத்தகைய கல்வி தேவை? தற்போது நம் நாட்டுச் சிறுமிகளுக்குக் கற்பிக்கப்படும் கல்வியானது சிறிதும் ஏற்றதல்ல. மற்று, தீமையே பயக்கிறது தென்று சொல்வது பெண்கள் கல்வி கற்க வேண்டுமென்றால், இந்திய மாணவரைப்போல் எம். எ., பி. ஏ. முதலிய பட்டங்கள் பெறவேண்டுமென்று அர்த்தமில்லை. அவ்விதம் செய்தலானது ஓர் அளவு அவர்களது நாசத்திற்கே அடி கோலுவதாகும். கணவன உத்தியோகம் செய்து பொருளீட்டுவதும், மனைவி கிருக காரியங்களைப் பார்ப்பதுமாகிய விதியே இயற்கையின் சட்டமாகும். அதற்கு மாறாக நடக்கும் எவரும் இயற்கை விதிப்படி தண்டனை யடைபவர்களே--அதனை யனுபவிப்போரும் மிகப் பலராவர்.

 

எனவே, பெண்களுக்குக் கற்பிக்கப்பட வேண்டிய கல்வி, அவர்கள் வாழ்க்கையிற் பிரயோசன மளிப்பதா யிருக்கவேண்டும். தையல் வேலையில் தேர்ச்சி பெறுவது நம்மாதருக்கு மிக நலமாகும். வீட்டுக்கணக்கு எழுதுதல், கணவனுக்குக் கடிதம் எழுதுதல், சாதாரணமாகத் தடையின்றி நன்னூல்களை வாசித்தல் முதலிய காரியங்களுக்குப் போதுமான கல்வியும் அவர்களுக்கு அவசியமாகும். பக்திரசம் பொருந்திய இனிய பாடல்களைச் சௌகரியமானால் வீணை அல்லது ஹார்மோனிய சுருதியுடன் பாடக் கற்பித்தல் நம் சிறுமிகளுக்கு மிகவும் நன்மை பயப்பதாகும். எல்லாவற்றிற்கும் மேலாக, ஆரோக்கியமாக எவ்விதம் குழந்தையை வளர்ப்பது என்பதும் கற்பிக்கப்பட வேண்டிய தவசியம். குழந்தைக்கு ஏற்ற ஆகாரம், அவற்றிற்கு வரும் வியாதிகள், அவற்றை எளிதிற் குணப்படுத்தும் லேசான கைமருந்து முறைகள் முதலியவைகளை நம் பெண்மணிகள் அறிந்திருந்தால் எவ்வளவு நன்மையாயிருக்கும்! வீண்கவலையும், சிரமமும், அகால மரணமும் பெண்களின் அறியாமையாலேயே பெரும்பாலும் சம்பவிக்கின்றன. ஆதலின் ஒவ்வொரு இந்திய சகோதர சகோதரிகளும் தீவிரமாக முயன்று பெண்களுக்கேற்ற கல்வி முறையை நிலைநாட்டுவது அவசியத்தினும் அவசியமாகும்.



பாலிய விதவா விவாகங்கள்

 

பாலிய விவாகமென்றால் என்ன? வயது வராத ஆண் பெண்கள் காம இன்பம் நுகரச் செய்வதே பாலிய விவாகம் எனலாம். இது நம் இந்தியாவில் மட்டுமல்ல, உலக முழுதிலுமே பரவி யுளது. உதாரணமாக, அமெரிக்காவில் பள்ளிக்கூடத்திற் படிக்கும் பெண்கள் துர்நடத்தையால் கருப்பவதிகளாய் விடுகின்றனர். அவர்களுக்குச் சிகிச்சை செய்வதற்கென்று பிரத்யேகமான ஆஸ்பத்திரிகளும் ஏற்படுத்தப்பட் டிருக்கின்றன.

 

பாலிய விவாகத்தால் விளையும் தீங்குகள் சொல்லுந் தரமல்ல. பாலப்பருவத்தைக் கடவாத பெண்கள் பெறும் குழந்தைகள் எவ்விதம் ஆரோக்கியமாகவோ, நீண்ட ஆயுள் உள்ளனவாகவோ இருக்கக்கூடும்? தக்க வயது வருமுன்னம் கருப்பமாகிப் பிரஸவிக்க மாட்டாது இறந்து பட்ட பெண்மணிகள் பல்லாயிரமாவர். மிகவும் குறைந்த வயதுள்ள ஒரு பெண் ஒரு குழந்தையைப் பெற்று அதனைப் பாதுகாத்தல், வீட்டுக்காரியங்களைக் கவனித்தல், கணவனுக்குப் பணிவிடை செய்தல் ஆகிய எல்லாவற்றையும் கவனிக்க முடியாது தவிக்கிறாள். கடைசியில் குழந்தையையும் பறிகொடுத்துத் தானும் நோய்வாய்ப்பட்டு மரிக்கிறாள்.

 

குழந்தையா யிருக்கும் போதே கலியாணம் செய்விக்கப்பட்ட சிறுவனது நிலைமையும் இப்படியே பரிதாபகரமானது. அவனது பள்ளிப்படிப்பு பாழடைகிறது. அவன் மனைவி, அவனுக்குக் கேவலம் வேசியைப் போலாகி விடுகிறாள். அவன் சிறுவயதிலேயே தன் பலத்தை இழந்து பரிதவிக்கிறான். இந்த அழகில் அவன் வெகு சீக்கிரத்தில் ஓர் குடும்பியாகி விடுகிறான்; குழந்தைகளுக்கும், தனக்கும், மனைவிக்கும் வேண்டிய தேவைகளைப் பூர்த்தி செய்ய அவனால் இயலுவதில்லை. இவ்வளவு துன்பப்பட்ட நிலையில் அவனும் நோயால் மாள்வது ஓர் ஆச்சரியமா? அந்தோ! பரிதாபம்! மதிகெட்ட பெற்றோர்கள் செய்த கொடுமைதான் என்னே! அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அமுதமென்று நினைத்து நஞ்சைக் கொடுக்கிறார்கள். என்னே மதியீனம்!

 

அடுத்தபடியாக விதவாவிவாகத்தைப் பற்றிச் சிறிது சொல்லிவிட்டு இக்கட்டுரையை முடித்துவிடுகிறேன். இவ்விஷயத்தில் தற்கால வைதிகர்களின் மனப்பான்மை அநீதமான தென்றே சொல்லவேண்டும். ஒரு புருஷன் மனைவி இருக்கும்போதோ, இறந்த பிறகோ தனக்கு இஷ்டமான மனைவிகளைக் கலியாணம் செய்துகொள்ளலாம். ஆனால் ஒரு பெண்ணோ - அவள் எத்தனை வயதுள்ளவளாயிருந்தாலும் சரி - தன் கணவன் இறந்துவிட்டால் வெளியில் கூட கழுத்தை நீட்டக்கூடாது. அவள் மறு விவாகத்தைப் பற்றி நினைப்பதே கொடிய பாவம்! நரகம்! சாஸ்திர விரோதம்! என்னே நீதி!

 

நான் சொல்லுவதைப் பலர் ஆதரிக்காமலிருக்கலாம். ஆனால் அவர்கள்
ளும், "நமது வாழ்க்கைத் துணைவிகளாகிய பெண் மணிகளை இவ்வளவு கேவலமாக நடத்துதல் நியாயமா?" என்று தங்களைத் தாங்களே கேட்டுக் கொண்டால், அப்போது இரக்கமுள்ள எந்த நெஞ்சும் பச்சாத்தாபப்படுமென்பதில் ஐயமில்லை. இல்லறமாகிய வண்டியில் ஆண் பெண்கள் இருவரும் இரண்டு அச்சாணிகளாவர். அங்ஙனமிருக்க, ஆண்கள் எத்தனை முறை வேண்டுமாயினும் மணம் செய்யும் சுதந்தரமுடையவராயிருக்கும் போது பெண்களுக்கு மட்டும் அது மறுக்கப்பட்டது பெருத்த அநீதமாகும். அவர்கள் விரும்பினால் மறுமணம் செய்துகொள்ளாமலிருக்கலாமே யன்றி, அவர்களாகச் செய்து கொள்ள விரும்பும்போது அதனைத் தடுப்பதற்கு நமக்கு எவ்வித உரிமையுமில்லை.

 

முன்காலத்தில் உடன்கட்டை யேறல்' என்னும் வழக்கம் நம் நாட்டில் இருந்து வந்தது. கணவனிடமுள்ள அதிகமான அன்பினால் அவர்களுடனேயே உயிர் நீத்தனர் அவ்வுத்தமிகள்! ஆனால், அக்காலத்தில் உடன்கட்டையேறாமல் இருக்கவும் ஸ்திரீகளுக்குப் பூரண சுதந்தரமிருந்த தென்பது கவனிக்க வேண்டிய விஷயமாகும். உதாரணமாக, பாண்டு இறந்த போது குந்தி உடன்கட்டை ஏறவில்லை. தசரதர் இறந்த பின்பும் அவரது மனைவியர் உயிர் வாழ்ந்திருந்தனர். எனினும், நாட்கள் செல்லச் செல்ல, இது ஒரு வழக்கமாகிக் கடைசியில் உயிர்விடச் சம்மதியாத பெண்களும் பலவந்தமாகக் தீக்கிரையாக்கப்பட்டனர். கடைசியாகத் துரைத்தனத்தாரின் பெருமுயற்சியாலேயே இக்கொடிய வழக்கம் ஒழிந்தது. என்றாலும் நம் இந்திய விதவைகள் சிறைவாசம் செய்வது போல் அடைபட்டுக் கிடக்கிறார்கள். அவர்களிற் பலர் வாழ்க்கை மணமே அறியாதவராவர். ஆதலின் மறுமணம் கொள்வதற்கு அவர்களுக்கு ஆவல் இருப்பது இயற்கையே. அதைத் தடுத்து நிற்கும் எவரும் சமூகத்துரோகிகளாவர். ஆதலின், திக்கற்ற நம் இந்தியச் சகோதரிகள் மறுமணம் செய்துகொண்டு வாழ்க்கை நடத்துவதை யாவரும் ஆதரித்து நிற்க வேண்டு மென்று வணக்கமாய்க் கேட்டுக்கொண்டு இக்கட்டுரையை முடிக்கின்றேன்.

 

ஆனந்த போதினி – 1932 ௵ - ஜுலை ௴

 

 

 

 

 

No comments:

Post a Comment