Sunday, September 6, 2020

 

மறுபிறப்பு

 

 கர்மத்தினால் நமக்கு இப்பிறவி வந்திருக்கிறது. இப்பிறப்பில் செய் யும் கர்மத்தால் மறுபிறப்பை யடைகிறோம். இப்படி நாம் அனாதி தொடங்கி எடுத்த ஜன்மங்களுக் கோரளவில்லை. கர்மத்திற்குத் தக்கபடி நால் வகை யோனிகளில் * எழுவகைப் பிறவிகளை மாறிமாறியடைந்து கொண் டிருக்கிறோம். இம்மானிட ஜன்மத்தில் தான் பிறவியை யொழித்துக் கொண்டு முத்தியையடையலாகும். அதனால் தான் இம்மானிட ஜன்மம் கிடைப்பது அரிது என்று ஆன்றோர் கூறினர். இதுதான் நமது மதச்சித்தாந்தம். ஆன்மாவாகிய தன் நிஜ சொரூபத்தைக் கண்டு பரமான்மாவில் இரண்டறக் கலந்துவிடுவதுதான் முத்தி.

 

* (1) சராயுஜம், (2) அண்ட ஜம், (3) உற்பிஜம், (4) சுவேதஜம்.

1. தேவர், 2. மனிதர், 3. விலங்கு, 4. பக்ஷி, 5. ஊர்வன, 6. நீர் வாழ்வன, 7. தாபரம்.

 

இச்சித்தாந்தம் ஒன்றே உலகிலுள்ள சகல பிராணிகளின் சுகதுக்கம், நன்மை தீமைகளின் வித்தியாசங்களுக்குத் தக்க காரணத்தை வெளியிடுகிறது. இன்றேல் ஒருவன் அழகுடையவனாகவும் ஒருவன் அவலட்சண முடையவனாகவும், ஒருவன் செல்வவந்தன் மகனாகவும், ஒருவன் பிச்சைக் காரன் மகனாகவும் பிறந்திருப்பதற்கு நியாயமில்லை. வேறு எக்காரணம் பார்த்தாலும் பொருந்தாதாதலின் கடவுள் பாரபட்சமுடையவரென்றா வது, ஒருநெறியின்றி கண்மூடித்தனமாய் சிருஷ்டிப்பவரென்றாவது ஒப்பு வேண்டி நேரிடும். அவ்வாறுள்ள இதர காரணங்களைக் கூறி விவகரிக்க இங்கு இடம் போதாது. மேலும் அது அனாவசியம். ஏனெனில் அத்தகைய காரணங்களனைத்தும் முன்னமே பல நூல்களில் எடுத்துக் கூறிக் கண்டிக் கப்பட்டு முன்பின் பிறவி யுண்டென்பது மறுக்க முடியாத விதமாய் நிலை நாட்டப்பட்டிருக்கிறது. இச்சித்தாந்தமே ஆன்மா பரமான்மாவைப்போல் நித்தியம் என்பதை நிரூபிக்கிறது. எது முக்காலத்திலுமுளதோ அதுவே நித்தியம் எனப்படும். இடையில் உண்டாக்கப்பட்டது, முன்னில்லையாதலின், நித்தியமாகாது.

 

சென்மாந்தரஞ் செய்த வினைகளுட றருமெனிற்

செல்கால மிவனுண் டலோ

கன்மா நு பவநரக சொற்கமெனில் வருகின்ற

காலத்து மிவனுண் டலோ

உன்மாத யாதனா வுடல் கடவு ளுடல் மநுட

வுடன் மாறி மாறி யழியும்

தன்மாய வுடல் கெடினு மிவனிருப் பதுகொண்டு

சத்தென்ப தொக்கு மகனே.                              (கைவல்யம்)

 

கிருஸ்தவ மதத்தின்படி ஒரே பிறப்புதான் உண்டென்பது அவர்கள் கொள்கை. அம்மதஸ்தர்கள் ஒவ்வாத காரணங்களைக் கூறி நம்மவரில் பாமரர் முன் மறுஜனனத்தை மறுத்துக் கூறுவது வழக்கம். நமது நூல்க ளில் எங்கேனும் ஒரு பாடல் வெளித்தோற்றத்திற்கு அவர்கள் தவறான கொள்கைக்கு ஒத்திருப்பது போல் தோன்றின், இந்துக்கள் நூல்களி லேயே யப்படி கூறியிருக்கிறது என்று பிரஸ்தாபிப்பது அவர்கள் வழக் கம். இவர்கள் அந்நூலில் முன்பின் விஷயத்தை விட்டுவிட்டு வெளிக்கு மாறாகத் தோன்றுவதை மட்டும் ஆதாரமாக எடுத்துக் கூறுவார்கள்.

 

ஒரு கிருஸ்தவர் நாயனார் கூறிய


(1)    "குடம்பை தனித்தொழியப் புட்பறந்

தற்றேயுடம் போடுயிரிடை நட்பு'                   என்ற குறளையும்,
(2)    ''உறங்குவது போலுஞ் சாக்காடுறங்கி

விழிப்பது போலும் பிறப்பு'                        என்ற குறளையும்,

 

மறு பிறப்பில்லை என்று அவர் கூறியதற்கு ஆதாரமாகக் காட்டுகிறார்.

 

பேஷ் இவர் அறிந்து கொண்ட அர்த்தம் மிக நேர்த்தியே.

 

1 - வது குறளின் அர்த்தம்: - " சத்தாகவும் நித்தியமாகவும் உள்ள உயிரும், ஜடமும் அநித்தியமுமாகிய தேகமும் கருவில் ஒன்றாக அமைந்திருப்பினும், வினையினால் சம்பந்தப்பட்டதேயன்றி உண்மையில் தம்முள் மாறாதலின், வினை யொழிந்ததே உயிர் உடலை அதிருக்குமிடத்தில் விட்டுப் போய்விடும்'' என்பதாம். அதற்குத் திருட்டாந்தமாக முட்டையையும் அதற்குள்ளிருந்து வெளிப்படும் பறவையையும் கூறினார்.

 

2 - வது குறளின் அர்த்தம். "நாம் தினம் நித்திரைபோய் மறுபடி விழித்துக்கொள்கிறோம். இந்த உறங்குதலும் விழித்தலும் எப்படி உயிர் கட்கு இயல்பாய் அடிக்கடி மாறிமாறி வருகின்றனவோ, அதுபோல் மரணமும் பிறப்பும் மாறிமாறி வந்துகொண்டிருக்கும்'' என்பதேயாகும். மூடத்தனமாய் இக்குறள்களை மறுபிறப்பில்லை யென்பதற்கு ஆதாரமாய்க் கூறுவோர் நாயனாரருளிய கீழ்க்கண்ட குறள்களை யுணர்ந்திலர் போலும்,


 "பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கு மற்று
 நிலையாமை காணப் படும்''

 

(பொருள்) அகப்பற்று புறப்பற்றாகிய இருவகைப் பற்றுக்களும் ஒழிந்தால் தான் பிறப்பொழியும் - அப்பற்றுக்களொழியாவிடின் பிறந் திறந்துழல்வதாகிய நிலையாமை காணப்படும்.


 "கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
 மற்றீண்டு வாரா நெறி''

 

(பொருள்) இம்மானிட ஜென்மத்தில் ஆசானனுக்கிரகித்த உபதேச மொழிகளின் மெய்ப்பொருளை யுணர்ந்தவர் மறுபடி பிறவியடையாத நெறியை யடைவார்.

 

''அவாவென்ப வெல்லா வுயிர்க்குமெஞ் ஞான்றுந்
 தவா அப் பிறப்பீனும் வித்து''

 

(பொருள்) இச்சையென்பது எல்லா வுயிர்களுக்கும் எக்காலத்தும் கெடாது வருகின்ற பிறப்பினை விளைவிக்கும் வித்தாகும்.

 

இதை நிரூபிக்க நமது நூல்களிலிருந்து இன்னும் ஆதாரங்களை நாம் காட்டுவது அனாவசியம். இந்த அற்பகால வாழ்வையுடைய ஒரே ஜன்மத்தில் மனிதனைச் சோதித்து அதோடு நித்திய மோக்ஷமோ நித்திய எரிநரகமோ சேர்த்து விடுவதாயின் அத்தகைய கடவுளும் ஒரு கருணையுடைய கடவுளாகுமோ - பிறந்து ஒருநாள் அல்லது சில நாட்கள் அல்லது நான் கைந்து வருடங்களுக்குள் இறந்து போகிறவர்களைக் கடவுள் மோக்ஷத்திற் கனுப்புவாரா அல்லது நரகத்திற் கனுப்புவாரா? இதற்குப் பதில் கூறுவது அவருக்கே திண்டாட்டந்தான். முன்பின் பிறவியுண்டென்ற ஒரு உண்மையே இதற்குத் திருப்தியான சமாதானத்தை யளிக்கும். இது முன்னமே எவராலும் மறுக்க முடியாதவிதமாய் நம் முன்னோரால் நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது. அதனாற்றான், அமெரிகாவில் கூடிய சர்வமத சங்கத்தில் சுவாமி விவேகானந்தர் இதே கர்மம் மறுபிறப்பு என்பதை நிரூபித்து நிலைநாட்டி யிருக்கிறார். முன் பிறப்பிருந்தால் ஏன் ஒருவருக்கும் நினைப்பில்லை? என்ற ஒரு கேள்வி பிறந்தது. அதற்குச் சுவாமிகள் உண்மையான சமாதானமே கூறினார். அதாவது, "நாம் நேற்று என்ன ஆகாரம் புசித்தோமென்பது சற்று சிந்தித்தால் தான் நினைவிற்கு வருகிறது. தடாகத்தில் இருக்கும் ஜலத்தின் மேல்பாகம் காற்றால் அலையுண்டுகொண் டிருக்கும்போது அதன் அடியில் இருக்கும் பொருள்கள் நம் கண்களுக்குப் புலப்படா. ஜலம் தெளிவாய் அசைவற்று நின்றால் அவை தெரியும். அதுபோல் மனமாகிய கடலில் பூர்வஜன்ம சம்ஸ்காரங்களனைத்தும் படிந்து கிடக்கின்றன. மனதின் அலைவை யறுத்து அதில் ஆழ்ந்து நோக்கினால் கட்டாயம் பூர்வஜன்ம விஷயங்கள் புலனாகும்'' என்றார். நம் முன்னோரில் பலர் தங்கள் முன்ஜன்ம விஷயங்களை யறிந்து கொண் டிருக்கிறார்கள். அவர்கள் எதையும் பிரத்தியட்ச அனுபவமா யறிந்தபின்பே கூறினவர்கள். இது சாத்தியம். சிலர் தாங்கள் இச்சன்மத்தில் சாயுச்சிய முத்தியடைவதில்லை யென்றும், மறு ஜன்மத்தில் இன்ன இடத்தில் பிறக்கப்போவதாகவும், ஆன்மா நீங்கும் போது கூறியிருக்கிறார்கள். சீடர்கள் அவ்வாறே அந்த இடம் சென்று பிறந்த குழந்தையின் வாய்ப் பிறப்பைக் கேட்டு உண்மையை யுணர்ந்திருக்கிறார்கள். எங்கோ ஒவ்வொருவர்க்குப் பூர்வ ஜன்மத்தில் செய்திருந்த சாதனாபலத்தால் முன் ஜன்மத்தின் விஷயங்கள் மனதில் உதிப்பது முண்டு. இப்போது அத்தகைய அத்தாட்சி யொன்றிருக்கிறது. வடக்கிலுள்ள அல்வார் நாட்டிலிருக்கும் ஸ்ரீமான் இராய்பகதூர் ஷியாம் சுந்தர்லால், C. I. E., (Rao Bahadur Shiam Sunder Lal, C. 1. E., Alwar) என்பவர் அனேக வருடங்களாக முன் பிறப்பைப்பற்றிய சங்கதியை யறிந்து கொள்ளக்கூடியவர்கள் யாரேனுமிருக்கிறார்களா என்று ஆராய்ச்சி செய்து அவர்களைச் சோதித்துப் பத்திரிகைகளில் வெளியிட்டு வருகிறார். இப்போது அத்தகைய ஒரு ஆளைப்பற்றி அவர் " லீடர்'' பத்திரிகையில் வெளியிட்டிருக்கிறார். அதைப்பற்றிய முழு விவரமும் 1923 ஆகஸ்டு 4 வெளியான ஹிந்து பத்திரிகையில் காணலாம். நாம் இங்கு அதைப் பற்றி சுருக்கமாகக் கூறுகிறோம்: - "பரதபூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த ஸேலம்பூரிலுள்ள கெயிட்ரி பிராம்மணருடைய புத்திரனாகிய பிரபு என்ற நான்கு வயதுள்ள சிறுவன் தன் பூர்வ ஜன்மத்தைப்பற்றிய விஷயங்களைக் கூறுகிறான் என்று பரத பூர் மகாராஜாவின் மூலமாகவே மேற்படி ஸ்ரீமான் இராய்பகதூர் ஷியாம் சுந்தர்லால், C. I. E., அவர்கள் கேள்விப்பட்டு, அம்மகாராஜாவின் உத்தரவுப்படி அவருடைய காரியதரிசியைக்கொண்டு நேரில் போய் சோதனை செய்தார். 1923 மார்ச்சு அச்சிறுவனை அவன் வீட்டில் சோதனை செய்தார்கள். அவன் பின்கண்ட விஷயங்களைக் கூறினான்.


      1. முன் ஜன்மத்தில் நான் ஹாடியோரி என்ற ஊரில் ஹார்பஷ் என்ற பிராம்மணன்.
      2. எனக்குக் கூர், ஷாம்லால் என்ற இரண்டு புத்திரர்களும், கோகிலா, போலி என்ற இரண்டு பெண்களும் உண்டு. அவர்கள் முறையே கெர்லியிலுள்ள ராம்ஹட் என்பவனுக்கும் நாவாரிலுள்ள கோகால் என்பவனுக்கும் மணம் செய்விக்கப்பட்டார்கள். நான் முதல் பெண்ணுக்கு மட்டும் கொஞ்சம் பணம் பரியமாக வாங்கிக்கொண்டேன். சின்ன பெண்ணுக்கு ஒன்றும் வாங்காமலே கொடுத்துவிட்டேன்.

 

3. எனக்கு ஹாடியோரியில் ஒரு நல்ல வீடிருந்தது.

4. என் வீட்டிற்குப் பக்கத்தில் ஸ்வரூப ஜாட்டின் வீடிருந்தது.

5. ஸ்வரூபஜாட்டுக்கு ஒரு புதல்வனும் ஒரு புதல்வியுமிருந்தார்கள்.

6. அங்கு கல்பதிந்த உயரமான ஒரு பாதை யிருந்தது.

7. அங்கு ஒரு குளமும், அக்குளத்தில் ஒரு வீடுமிருந்தது. குளக் கரையில் ஒரு கும்மட்டம் போன்ற சமாதியிருந்தது.'' என்ற இவற்றையும் இன்னும் தன் வீட்டருகிலிருந்த நல்ல தண்ணீர்க் கிணறுகள், தோட்டங்கள், விருட்சங்கள், தன்னிடம் வேலை செய்த குமஸ்தா, தன் தொழில், புத்திரன் தொழில், தன் சுற்றத்தார் விஷயம் முதலிய அனேக சங்கதிகளைக் கூறினான். விரிவஞ்சி நாம் அவை முழுமையும் இங்கு வெளியிடவில்லை. ஹிந்து, சுதேசமித்திரன் முதலிய பத்திரிகைகளில் முழு விவரமும் காணலாம்.

 

அச்சிறுவன் கூறிய யாவும் பதிந்து கொண்டு, இராய்பகதூர் ஷியாம் சுந்தர் லால், பரத்பூர் அரசரின் காரியஸ்தரையும் அச் சிறுவனையும் அழைத்துக்கொண்டு அவன் முன்ஜன்மத்தில் பிறந்திருந்த ஊருக்குச் சென்றார். அந்த ஊரைச் சிறுவன் கண்டதுமில்லை. அதைப்பற்றிக் கேட்டதுமில்லை யென்று அவர் அறிந்து கொண்டார். அதோடு அவ்வளவு சமாசாரங்களை யவனுக்கு மனப்பாடம் பண்ணி வைத்திருக்க முடியாதென்றும் அறிந்து கொண்டார்.

 

அங்கு சென்ற பின் அவ்வூரிலுள்ள மிக்க வயது முதிர்ந்த ஆட்களில் ஐந்தாறு பேர்களை யொன்று கூட்டி (அவர்கள் பெயர்களனைத்தும் பத்திரி கைகளில் காணலாம்.) எல்லா விஷயங்களையும் விசாரித்துச் சிறுவன் கூறியபடி யாவும் உண்மையாகவே யிருக்கக் கண்டார். பிறகு அச்சிறுவனே தான் கூறிய ஸ்தலங்களையும் காட்டினான்.

 

இவை யாவும் மேற்படி ஸ்ரீமான் இராய்பகதூர் ஷியாம் சுந்தர் லால், C. I. E., என்பவர் அலஹபாத்தில் பிரசுரமாகும் லீடர் பத்திரிகையில் விவரமாய் எழுதியிருக்கிறார். ஹிந்து, சுதேசமித்திரன் முதலிய பத் திரிகைகளிலும் பிரசுரிக்கப்பட் டிருக்கின்றன.

நமது மதத்தில் வீண் குற்றங்கூறி நம்மவரில் பாமரர்களை மயக்கமுயலும் பிறமதத்தினர் இதைப்பற்றி மறுத்துக்கூறும் ஆபாச வார்த்தைகளால் நம்மவர் மயக்கங் கொள்ளலாகா தென்பதற்காகவே இதைப்பற்றி வெளியிட நேர்ந்தது.

சீடன்.

 

ஆனந்த போதினி – 1923 ௵ - செப்டம்பர் ௴

 

   

 

No comments:

Post a Comment