ஈனோக் ஆர்டன்
இங்கிலாந்தின் கடற்கரை
யோரத்தில் ஒருசார் நீண்டு நிற்கு மலைத் தொடரும், அதில் ஓரிடத்தில் அலை ஓயாது மோதுவதால்
ஏற்பட்ட தோர் இடை வெளியும், அவ்விடத்திற்குச் சற்று தூரத்திற்கப்பால் சிறு துறைமுகமொன்றும்
உண்டு. அதைச் சுற்றிலும் செவ்வோடுகளுடன் கூடிய வீடுகள் பல உண்டு. சற்று மேலே சென்றால்
பழமையான தோர் வேதக் கோவிலொன்று தென்படும். அதிலிருந்து நீண்டதோர் வீதி இன்னும் மேலே
சென்று மாவரைக்கும் ஆலை ஒன்றில் முடிவடைந்து நிற்கும். அதற்கப்புறம் பரந்த வெளியும்,
தூரத்தே அடிவானத்தில் வானைத்தொட்டு நிற்பது போன்று பழமரங்கள் பல அடர்ந்து காணும்.
இத்தகைய ஊரின் கடற்கரையோரம்
பல்லாண்டுகளுக்கு முன் நம் கதை ஆரம்பமாகிறது. வெவ்வேறு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று
குழந்தைகள் அங்கு விளையாடுவது வழக்கம். அதில் இருவர் ஆண்கள்; மூன்றாமவள் பெண். அன்னிலீ
என்பது அவ்வழகிய சிறுமியின் பெயர். பிலிப்ரே என்பவன் அங்குள்ள இயந்திரசாலை எஜமானனின்
சீமந்தபுத்திரன். மற்றையவனான ஈனோக் என்பவன் ஒரு மாலுமிச் சிறுவன் - தாய் தந்தையரை இளமையிலேயே
இழந்தோன்.
இவர்கள் மூவரும்
கடற்கரையோரம் மணலில் வீடுகட்டி விளையாடுவது வழக்கம். அலை இவர்களின் மண் வீட்டைக் கலைப்பதும்,
மறுபடி இவர்கள் வீடுகட்டுவதுமாக ஆனந்தமாய் இவர்கள் விளையாட்டு சடந்து வந்தது. சிற்சிலசமயங்களில்
செங்குத்தான பாறைக்கடியிலுள்ள தோர் குகையிலும் சென்று ஆடுவர். அக்காலை பிலிப் ஒருநாள்
விருந்தாளியாகப் பாவனை செய்வான். ஈனோக் விருந்திடுவோனாக இருப்பான். மறுபடி விருந்திடும்
முறை பிலிப்பிற்கு வரும். அப்பொழுது ஈனோக் விருந்தாளியாக மாறவேண்டும். அன்னி எப்பொழுதும்
வீட்டு எஜமானி ஸ்தானத்தையே வகிப்பாள். ஈனோக் சுத்த மாடன். ஒரு வாரம் தொடர்ச்சியாய்த்
தானே விருந் திடுபவனாக இருந்து, அன்னியைத் தன் சின்னஞ் சிறுமனைவியாக ஆக்கிக் கொண்டிருக்க
விரும்புவான். பிலிப் பலவீனன். பாவம்! என் செய்வான்? ஐயோ 'மாறிமாறி விளையாடுவோமே' என்று
தன் நீலக் சண்களில் நீர்ததும்பக் கத்துவான். நண்பர்களே, என் பொருட்டாவது சச்சரவிடாமலிருக்க
மாட்டீர்களா?' என்று கிள்ளை போல் துக்கமேலீட்டால் கூறுவாள் அன்னியும்.
அவர்களின் இளமைப்பருவம்
கழிந்தது. நண்பரிருவரும் காளைப் பருவ மெய்தினர். காதல் தீ இருவரையும் தகிக்க ஆரம்பித்தது.
ஆகவே இளைஞரிருவரும் அவ்வொரு பெண்மீதே தம் நாட்டத்தை வைத்தனர். ஈனோக் கூசாமல் அவளிடம்
தன் காதலைக் கூறிவிடுவான். ஆனால் பிலிப்போவெனில் அவளை மனதிலேயே எண்ணி எண்ணி உருகுவான்.
இது இப்படி யிருக்க, அன்னிக்கு பிலிப்மீது அத்யந்த அன்பு உண்டேனும், அவளை அறியாமலே
ஈனோக் மீது அவள் மனம் காந்தத்தின் முன் இரும்பு போலிருந்தது.
அன்னி மீது காதல்
கொண்ட நாள் தொட்டு ஈனோக் கண்ணுங் கருத்துமாய்த் தன்னாலியன்றவரை பணம் சேர்த்து, சொந்தத்தில்
ஒரு படகு வாங்கவும், அன்னிக் கேற்றதோர் அழகிய வீடு சமைக்கவும் எண்ணினான். மனம் போல
ஆயிற்று மாங்கல்யம். 'அவன் எடுத்த காரியம் யாவினும் வெற்றி பெற்றான். ஒரு வியாபாரக்கப்பலில்
ஒரு வருடம் உழைத்து, மாலுமித்தொழில் நிபுணனாய்விட்டான். இருபத்தோராண்டு நிரம்புமுன்,
ஈனோக் ஒரு படகைத் தனக்கே சொந்தமாய் வாங்கினான். அன்னிக்கு சிறிய தோர் குடிலைத் தெருவின்
நடுமத்தியில் அமைத்தான். அதன் பின் விவாகமாக வேண்டுவதே பாக்கி.
அறுவடைகாலம் வந்தது.
இயற்கை யன்னையும் மகிழ்ச்சி கொண்டவள் போலத் தோன்றினாள். சிறுவர்களும், சிறிதும் பெரிதுமாய்க்
கூடைகளைக் கையில் சுமந்தவராய்க் காட்டில் கொட்டை பொறுக்கச் சென்றனர். அன்று பிலிப்பின்
தந்தை காயலாயிருந்ததால் பிலிப் சற்றுத் தாமதித்துச் செல்ல நேர்ந்தது. குன்றின் மீது
ஏறிப் பள்ளத்தாக்கை நோக்கிக் கவிந்துநிற்கு மிடத்தை அடைந்தான். அங்கு ஒருபால் ஈனோக்கும்
அன்னியும் நெருங்கி உட்கார்ந்திருக்கக் கண்டான். தன் விதியை எண்ணினான். அவர்களுடைய
ஆனந்தத்தைப் பார்த்தான். மறுநிமிடம் அவ்விருவர் முகமும் ஒன்றை யொன்று நெருங்க ஆரம்பித்தது.
'உஸ்'ஸென்று பெருமூச்சு விட்டுக் கொண்டு, அம்பினால் அடிபட்ட மிருகத்தினை ஒப்ப மெல்லப்
புதர்களுக்குள் மறைந்தான் பிலிப். ஊராரனைவரும் கூக்குரலிட்டுக் கும்மாளி போட்டுக் கொண்டிருக்க,
பிலிப் மாத்திரம் தன்னந்தனியே மனமிடிந்து காட்டில் மறைவிடத்தில் சிறிது நேரம் தங்கிப்
பின் மனதில் அடங்காக் காமப் பிணி வருத்த எழுந்து சென்றான்.
சின்னாட்கள் கழிந்தன.
கலகலவென எங்கும் மணி ஓசை ஒலிக்க, ஈனோக்குக்கும் அன்னிக்கும் விவாகம் நடந்தேறியது. உற்சாகமாய்
நாட்ககளும் கழிந்து சென்றன. ஒரேழு ஆண்டுகள் ஓடி மறைந்தன. அதனிறுதியில் அன்னிக்கோர்
பெண் மகவு பிறந்தது. குழந்தை பிறந்த நாள் தொட்டு, ஈனோக் தன்னால் இயன்றவரை, பொன் சேமித்துத்
தன்னைப் போலாவது தன்மனைவியைப் போலாவது அன்றி நல்வாழ்க்கையில் தன் குழந்தையை வளர்த்து
வரவேண்டுமென்ற எண்ணங் கொண்டான். அவ்வாறு இரண்டு வருடங்கள் கழிந்தன. தங்கவிக்ரகம் போன்ற
தோர் ஆண்மகவை அன்னி ஈன்றெடுத்தாள். ஈனோக் வியாபார நிமித்தம் வெளியூர் செல்லுங்கால்
அவன் ஏகாந்தத்தை இனிதுறக் கழிக்க ஏற்றபாலன். மீன் வியாபாரத்தில் ஈனோக் மிகவும் பெயர்
பெற்றான். சுற்றுப்புறக் கிராமத்திலுள்ளோரில் அவனை அறியாதவரே கிடையாது.
மானவ வஸ்துக்களெல்லாம்
மாறும் தன்மைய வல்லவா? ஆகவே, இத்தம்பதிகளின் இல்வாழ்க்கையிலும் மாறுதலொன்றேற்பட்டது.
அக்குக்கிராமத்திற்குப் பத்து மைல்களுக்கப்பால் வடக்கே ஓர் துறைமுகமுண்டு. அங்குத்தரை
மார்க்கமாகவும் கடல் மார்க்கமாகவும் ஈனோக் அடிக்கடி போவதுண்டு. ஒரு தடவை அத்துறை முகத்தில்
நங்கூரம் பாய்ச்சப்பட்டிருந்ததோர் படகின்பாய் மரத்தின் மீது ஏறுகையில் சற்றுக் கை நழுவவே
தடாலெனக் கீழேவிழுந்தான். ஈனோக் பக்கலிலிருந்தோர் பாய்ந்து வந்து அவனைத் தூக்கி நிறுத்தவே,
அவனது அங்கங்களிலொன்று முறிந்து கிடக்கக் கண்டனர். பின்னர் ஈனோக் அதே கிராமத்தில் சிகிச்சை
பெற்று வந்தான்.
இஃதிவ்வாறிருக்க,
அங்கு அன்னி அரோக்கியமான ஆண்மகவைப் பெற்றாள். துன்பம் வந்தால் தொடர்ந்து வருமல்லவா?
ஈனோக்கிற்குப் போட்டியாய் வியாபாரத்துறையி லொருவன் தோன்றவே, ஈனோக்கின் பிழைப்பிற்கு
இன்னல் வந்தது. ஈனோக் மனோதிட முள்ளவன் தான். கடவுளுக்குப் பயந்தவன்தான். ஆயினும் அவன்
மனதில் பலவித ஐயமும் துன்பமும் குடியேறின. தன் குழந்தைகள் வறுமை வாய்ப்பட்டு உண்ண உணவின்றித்
தவிக்க, தன் அருமைக்காதலி அன்னி கதிபோலிருப்பதாகவும் அவனுக்கோர் கனவென அவ்வெண்ணம் எழுந்தது.
'ஐயோ! கடவுளே! நான் எத்தகைய இடர்ப்படினும் அவர்களைக் காப்பாற்றாயா? என்று முறை யிட்டான்.
அம்முறையீடு அநாதரக்ஷகனின் காதில் விழுந்தது போலும்! முன்னர், எக்கப்பலில் ஈனோக் வேலை
செய்து கொண்டிருந்தானோ அதே கப்பற்றலைவன், ஈனோக்கின் தொழில் வன்மையை நன்கு அறிந்தவனாதல்பற்றி,
அவன் துர்பாக்கிய தசையைக் கேள்வியுற்று, அவனைக்காண வந்து சைனா போகவிருக்கும் தன் கப்பலுக்குத்
தண்டேல் வேலையில் அமர இஷ்டமா? என்று அவனைக் கேட்டான். சற்றே ஈனோக் திகைத்தான். கடவுளே
இரங்கி அம்முன்னீட்டைத் தந்துவரென மகிழ்ந்தான். ஓமென ஒப்பினான்.
ஆகவே மலைபோல் அவனுக்கேற்பட்ட
துன்பம் பனிபோல் விலகிற்று. ஆனாலும் ‘தான் இல்லாதிருக்கையில், தன் மனைவி ஜீவிப்பதெப்படி?'
என்றயோசனை அவன் மனதில் எழுந்தது. தன் படகை விற்று - ஐயோ! என்வளவு அருமையாய் நேசித்தபடகு!
பொங்கு திரைக்கடலில் எத்தனை முறை அவனைத் தாங்கிச் சென்ற படகு! பரியாளன் தன் பரியை அறிந்திருப்பதையொப்ப
அவன் நன்றாய் அறிந்த அப்படகு - ஆம்! அப்படகையே விற்று மாலுமிகளின் குடும்பத்திற்கு
வேண்டிய சரக்குகளை வாங்கி, அன்னியை வியாபாரத்துறையி லமர்த்திவிட்டால், அக்கவலை ஒருவாறு
அகலும். திரைகடலோடியும் திரவியம் தேடவேண்டு மல்லவா அவன்? ஒரு முறையா அல்லது அதற்குமேலா
- ஏன்? வேண்டு மவ்வளவு அவன் கடற்பிரயாணம் செய்தே தீர வேண்டும். முதலில் துன்பப்படினும்
முடிவில் செல்வவானாய்த் திரும்பிப் பெரிய வியாபாரத்திற் கெஜமானனாய், அளவற்ற லாபத்துடன்
அமைதியான வாழ்க்கையை நடத்திக்கொண்டு, தன் இளஞ்சிறார்களைப் பயில்வித்து, மனநிம்மதியாய்
வாழலாமே என்றிவ்விதமான எண்ணங்கள் அவனுக்குத் தோன்றின.
உடம்பு குணப்பட்டு
ஊரை அடைந்தான். கையில் மெலிந்த மேனியமகவைச் சுமந்து கொண்டு, அன்னி அன்புடன் அவனை வரவேற்றாள்.
குழந்தையை அவன் கரங்களில் ஈந்தாள். தந்தையும் தன் மகவை வாரியெடுத்து, அதன் அங்கங்களை
நன்கு தொட்டுப்பார்த்துக் குழந்தையுடன் கொஞ்சினான். ஆனால் தான் எண்ணிக் கொண்டிருக்கும்
எண்ணத்தை மறுநாள் வரை வெளிபிட மனங்கொள்ளவில்லை.
மறுநாள் காலை தன்னைக்
கைதொட்டு மணந்த நாள் முதல் அன்னி அன்றுவரை தன் கணவனின் வார்த்தைக்கு எதிர் வார்த்தை
கூறினவளில்லை. ஆயினும் அன்று அவன் எண்ணத்திற்கு எதிர்த்து நின்றாள். அடங்காப் பிடாரியென
அலறினாளில்லை. மனதைக்கரைக்கும் மொழிகளாலும், இடைவிடாதளிக்கும் மென் முத்தங்களாலும்,
கண்ணீருகுத்தலாலும், இரந்து கெஞ்சும் சொற்களாலும் தன் கணவன் தன்னை விட்டுப் பிரிந்து
செல்லக்கூடாதெனமன்றாடினாள். அதன் காரணமாக இன்னல் பல விளையுமென்று அவளுக்குத் தோன்றிற்று.
ஆனால் அவள் வேண்டுகோளனைத்தும் விழலுக் கிரைத்த நீராயின. ஈனோக் ஒரே பிடிவாதமாய் நினைத்ததை
நிறைவேற்றி விட்டான்.
படகை விற்றான். சரக்குகள்
பல வாங்கினான். தன் வீட்டு வாசல்புறத்தை ஓர் சிறு கடையாக அமைத்து, அதில் சாமான்களை
வைக்க அறைக்ளுடன் கூடிய தட்டுகளைச் செய்து வைக்க ஆரம்பித்தான். அன்று முழுவதும் இடைவிடாமல்
அவ்வீட்டில் சம்மட்டி சப்தம் ஓர்பக்கம், ரம்பங்கொண்டு அறுக்கும் சப்தம் ஓர் பக்கம்,
அதன் பின்னர் பலகையைத் துளைக்கும் சப்தம்மற்றோர் பக்கம், கோடரியின் பேரொலி ஒரு பக்கம்
எங்குமாகப் பரவி நின்றன. அச்சப்த மெல்லாம் அன்னியின் காதில் அவளது சாவிற்குத் தயாரிக்கப்படும்
கழுமரத்தின் ஓசையென ஒலித்தன. ஈனோக்கின் கைவன்மையின் பயனாக எல்லாம் அழகுபட அமைந்தன.
வேலை முடிந்தபின், ஈனோக் மறுநாள் வரை அயர்ந்துறங்கினான்.
கதிரவனும் கீழ்த்திசை
எழுந்தான். ஈனோக் செல்ல வேண்டியது அக்நாளே. அதுபற்றி அவன் அளவற்ற இன்பமெய்தி யிருந்தான்.
அன்னியின் பயமெல்லாம் அவனுக்கு நகைப்பை விளைத்தன. ஆயினும், பயபக்தி கொண்டவனாதலின்,
முழங்கால் படியிட்டுத் தன் மனைவியையும் குழந்தைகளையும் எல்லாவித ஆபத்தினின்றும் காக்கவேண்டுமென
ஈசனைத் தொழுதான். 'அன்னி! கடவுள் கிருபையால் நமக்கு இப்பிரயாணம் நன்மையையே நல்கும்.
வீட்டைப் பார்த்துக் கொள். நீ அறியுமுன்னரே நான் திரும்பிவந்துவிடுவேன்' என்றான் ஈனோக்.
பின்னர் மெல்லெனக் குழவியின் தொட்டிலை ஆட்டி விட்டு, 'இவ்வழகனை, பலவீனனான இப்பாலனைக்
கடவுள் ஆசீர்வதிக்கட்டும். நான் திரும்பி வருங்கால் இவன் என் முழங்கால்களில் அமருவான்.
அன்னிய நாட்டுக் கதைகளை வெகு ஆர்வத்துடன் அவனுக்கு நான்வேன். அவனும் ஆர்வத்துடன் கேட்டு
ஆனந்திப்பான். அன்னி, வருந்தாதே - நான் சென்று வரட்டுமா?' என்றான்.
நம்பிக்கை தோன்ற
அவன் மொழியும் சொற்களைக் கேட்டாள். அவன்கடவுளைப் பற்றிப் பேச ஆரம்பித்தவுடன் மெய்ம்மறந்தாள்.
அதன் பின் அவள் காதில் ஒன்றும் விழவில்லை. 'ஈனோக், நீ உயரிய புத்திமான் தான். நீ எது
கூறினும் உன்னை மறுமுறை தரிசியேன் என்று என் மனதில் ஏதோ ஒன்று எடுத்துரைக்கின்றதே'
என்றாளவள். ஆனால் சரி. நீ என்னைப் பாராவிடில், நான் உன்னைத் திண்ணமாய்ப் பார்ப்பேன்.
அன்னி, நான் சொல்லும் மரக்கலம் அடுத்த திங்கட்கிழமை இவ்வூரைக் கடர்து செல்லும். அக்காலை
யாரிட மிருந்தாவது ஒரு தூரதிருஷ்டிக் கண்ணாடியை அதன்மூலம் என்னப் பார். உன் கவலையை
ஒழி' என்றான். புறப்படவேண்டிய நேரம் கிட்டிற்று. அன்னி, என் காதலி, என் அன்பே, வருந்தாதே!
சமாதானங்கொள்! எல்லாம் தெரிந்த நீயே இவ்வாறு வருந்தலாமா? குழந்தைகளை நன்கு பாதுகாப்பாயாக.
அப்படி உனக்குப் பயம் தோன்றிடில் கருணாநிதியாகிய கடவுள் மேல் பாரத்தைப் போடு! - அவனிருக்கிறான்
அச்சுமையைத் தாங்க. அவன் சர்வவியாபி. நான் எங்குச் சென்றிடினும் அங்கும் அவனிருப்பான்.
கடலும் அவனது! அவன் படைத்தது அது' என்று கூறிக்கொண்டே ஈனோக் எழுந்தான். வருந்தி நிற்கும்
மனைவியை வாரியணைத்தான். ஆச்சரியத்துடன் நிற்கும் குழந்தைகளை முத்தமிட்டான். மூன்றாம்
குழந்தை முதல் நாள் கண் விழித்ததால் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தது. அன்னி அவசரமாய்
அதை எழுப்பமுயல, ஈனோக் அன்னியைத் தடுத்து, 'ஐயோ, அதையேன் அலட்டுகிறாய்! குழந்தைகள்
இதையெல்லாம் ஞாபகத்தில் வைத்துக்கொண்டு இருக்கப்போகின்றனவா?' என்று கூறிவிட்டு அம்மகவை
உச்சிமோந்தான். அக்குழந்தையின் உச்சி நெற்றியில் சுருண்டு தொங்கும் கூந்தலில் ஒரு சுருளைக்
கத்தரித்து அதை அவனிடம் ஈந்தாள். தன்னாயுள் உள்ளவரை அதைப் பாதுகாத்தான் ஈனோக்! மூட்டையைக்
கையில் பற்றியவனாய், கையை விசிறிக் கொண்டு தன் பாதையில் நடந்தான்.
ஈனோக் குறித்த திங்கட்கிழமை
அன்னி கையில் கண்ணாடியை வைத்துக் கொண்டு திருகித் திருகிப் பார்க்கிறாள். அங்கமெல்லாம்
நடுங்குகிறது. அவள் கண்ணிற்கு எக்காரணத்தினாலோ ஒன்றும் தெரியவில்லை. ஆனால் தன் சொற்படியே
ஈனோக் மரக்கலத்தின் மேல் தட்டில் கைக்குட்டையை விசிறிக் கொண்டே நின்றிருந்தான். மரக்கலமும்
மறைந்தது. கண்பார்வையினின்றும் அது மறையும் வரை அன்னி அதைப் பார்த்து நின்றாள். அழுதகண்ணும்
சிந்திய மூக்குமாய் வீட்டுக்குத் திரும்பினாள். ஈனோக் இறந்துவிட்டானென்றே எண்ணிக் கதறினாள்.
வியாபாரம் செய்து பழக்கப்பட்டவளா? வியாபார தந்திரங்களெல்லாம் தெரியாது. பாவம்! பொய்,
புனை சுருட்டு ஏதாவது தெரியுமா? அதுவும் தெரியாது. ஆகவே, சில சமயங்களில் தீராக்கஷ்டத்தினாலும்
வேறுவகையின்றியும், சில சாமான்களை வாங்கினமிகக் குறைத்தே விற்றாள். வியாபாரத்தில் நஷ்டமடைந்தாள்.
நற்செய்திவரும் வருமென்று நாட்களைக் கழித்தாள். நாளை நாளை யென்று நாட்களும் கடக்க,
சொல்லொணாத் துன்பத்திடை அரை வயிறுக் கஞ்சிக்குமில்லாமல் அன்னி தன் நாட்களைப் போக்கினாள்.
மூன்றாம் குழந்தை
வயதாக வயதாகப் பின்னும் பலஹீனமடைந்தான். அன்னை தயையனைத்தும் அன்னி அதற்களித்தும், அல்லல்
பல பட்டுத் தன் அன்னை அறியு முன்னரே, கூண்டிலகப்பட்ட பஞ்சாம் குபீலெனத் தப்பிச் செல்லுவது
போல் அக்குழந்தையின் ஆவி அதன் கூட்டினின்றும் மின்னலென வெளிப்பட்டு மறைந்தது. பாவம்!
என் செய்வாள் தாய்!
குழந்தை இறந்த அதே
வாரம் ஈனோக் சென்று பல நாளாயும் அநாதி போலவிருக்கும் அன்னியைக் காணாமலிருந்ததற்காக
பிலிப் தன் மனதை நொந்து கொண்டான். தான் அவளைப் பார்ப்பது அவளுக்கு ஆறுதல் அளிக்கக்கூடுமென
எண்ணி அங்குச் சென்றான். முன்னறையைக் கடந்து உட்கத் வண்டை சென்று ஒரு வினாடி தயங்கினான்.
மெல்லென மும்முறை கதவைத் தட்டினான். பதிலொன்றும் கிடைக்காது போகவே உள்ளே நுழைர் தான்.
துக்கமே யோர் உருக்கொண்டாற் போல், குழந்தையைக் குழியில் போட்டுத் துக்கம் தீராமல்,
ஒருவர் முகத்திலும் விழிக்க மனமின்றி அன்னி சுவர்ப்புறம் திரும்பி இருந்து கொண்டு குமுறிக்
குமுறி அழுது கொண்டிருந்தாள். 'அன்னி, உன் உதவியை நாடி வந்தேன்' என்று பிலிப் மெல்லக்கூற'
துன்பக் கடலில் மூழ்கித் தத்தளிக்கும் ஒருத்தியிடமிருந்தா உதவி?' என்று அன்னியிடமிருந்து
எழுந்த மொழிகள் அவன் இதயத்தை நூறு கோடரிகள் சேர்ந்து தறிப்பதை ஒத்திருந்தன. அவளருகில்
அமர்ந்தான். 'அன்னி, உன் கணவன் எதை விரும்பியிருந்தானோ அதைப் பற்றியே
பேசவந்தேன் என்றான். 'ஈனோக் திடசித்தங் கொண்டவன். ஆரம்பத்திலேயே உன்னை மணக்க விழைந்தான்.
அவ்வாறே செய்து முடித்தான். இப்பொழுது உன்னைத் தனியே விடுத்துச் சென்றிருக்கிறான்?
இன்பமெய்தவா? ஊர் சுற்றவா அல்ல! அல்ல! தன் குழந்தைகட்கு உயரிய வாழ்க்கையை அளிக்க எண்ணங்
கொண்டே, மறுபடி திரும்பி வந்து தன் குழந்தைகள் கடாரிகள் போல் தான்தோன்றித் தனமாய்த்
திரிவதைக் கண்டால் அவன் எவ்வாறு சினங்கொள்வான்? அன்னி, இப்போ- நீ என்னை வெகுநாளாய்
அறிவாயல்லவா? உனக்கு உன் காதலன் மேலிருக்கும் காதலுக்கும் உன் மக்கள் மேலிருக்கும்
பாசத்திற்கும் வேண்டி நான் கேட்பதற்கு 'இல்லை' என்று கூறுதல் கூடாது. உன்னைமன்றாடிக்
கேட்கிறேன். ஏனெனில், நீ விழைந்தால், ஈனோக் திரும்பி வரும் பொழுது - ஏன்? ஈனோக் பணமுனதே
- உன் பையனையும் பெண்ணையும் பள்ளியிலிருத்துகிறேன். இதுவே நீ செய்யவேண்டிய உதவி' என்றான்.
சுவரை நோக்கிய வண்ணமே
அன்னி பதிலுரைத்தாள் 'பிலிப், உன்னைப் பார்க்கவே எனக்கு மனமில்லை. நான் பித்துப் பிடித்தவள்
போலிருக்கிறேன். நீ உள்ளே வந்ததும் மனமுடைந்து விட்டது. இப்பொழுது நீபேசும் இன்சொற்கள்
என்னை இன்னும் வருத்துகின்றன. ஈனோக் பணத்தைத் திருப்பிக் கொடுத்து விடுவான். ஆனால்
உன் தயாள குணத்தை எவ்வாறு திரும்பக் கொடுப்பான்.' ''ஆனால் நீ என தெண்ணத்திற்கு இனிச்
சரியென்கிறாயல்லவா!'' என்றானவன்.
அன்னி சட்டெனத் திரும்பினாள்! எழுந்தாள்! ஒருமுறை பிலிப்பை நீர் ததும்பும் கண்களால்
பார்த்தாள். ‘நீ தீர்க்காயுளுடனிருக்கவேண்டுமெனக் கூறிவிட்டு அவன் கையை ஆத்திரத்துடன்
பிழிந்தாள். உத்சாகத்துடன் பிலிப் வெளிப்போந்தான். பையனும் பெண்ணும் பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.
வேண்டிய புஸ்தகங்களை யெல்லாம் பிலிப் அவர்களுக்கு வாங்கிக் கொடுத்தான். தன் கடமையைச்
செய்து முடிப்பவன் போல் அனைத்தும் செய்தான். ஊர் வாய்க்கஞ்சி, பிலிப் அன்னியின் வீட்டுப்புறம்
கூட வரவி ல்லை. ஆயினும் அடிக்கடி குழந்தைகள் மூலம் பழம், மாமுதலியன அனுப்புவான்.
பிலிப் அன்னியின்
மனதை நன் சறிந்தாளில்லை. அன்னிக்கும் பிலிப்பின் எண்ணத்தை அறியக் கூடவில்லை. ஆனால்
குழந்தைகளுக்கு மிகவும் வேண்டியவனாய் விட்டான். அவனது வீட்டிற்கும் ஆலைக்கும் அவர்களே
எஜமானர்கள் போல் விளங்குகிறார்கள். அவனைக் கண்டால் போதும், அவர்கள் பாடு குஷிதான்.
'அப்பா! அப்பா!' என்று இடை விடாமல் பேச ஆரம்பித்து விடுவார்கள். ஆகவே அவர்களுக்கு ஈனோக்கைப்
பற்றிய எண்ணமெல்லாம் மறைய ஆரம்பித்தன. பத்து வருடங்கள் – ஈனோக் தன் நாட்டை நீத்து,
மக்களையு நல்லாளையம் பிரிந்து, வீடிழந்து வெளிநாட்டுக்குச் சென்று பத்து வருடங்கள்
- பறந்து சென்றன. அவனைப் பற்றி ஒரு தகவலும் கிடைக்கவில்லை.
ஒருநாள் மாலை அன்னியின்
அருங்குழந்தைகள் மற்றவருடன் காட்டையடைந்து பழங்கள் பொறுக்கச் செல்ல விரும்பி அன்னியையும்
அழைத்தனர். 'அப்பா, நீரும் வாரும்' என பிலிப்பையும் சட்டையைப் பிடித்திழுத்தனர். சற்றுத்
தயங்கினான். ஆயினும் அன்னி செல்கிறாளல்லவா! அதனால் “சரி வருகிறேனென இசைந்தான். அனைவரும்
காடடைந்தனர். உயர்ந்த பிரதேசத்தில் மேலே ஏறிச் சென்றனர். பாதி தூரம் சென்றதும் அன்னிக்கு
அசதி ஏற்பட்டது. 'நான் சற்று இளைப்பாறவேண்டும்' என்று உட்கார்ந்து விட்டாள். பிலிப்பும்
மனமகிழ்ச்சியுடன் அமர்ந்தான். குதூகலமாய்க் குழந்தைகள் பள்ளத்தாக்கில் ஓடிப் பிரிந்து
சென்று விளையாட ஆரம்பித்தன.
பிலிப் தன் பக்கலில்
அன்னி இருப்பதையே மறந்தான். முன்னொரு நாள் அதே இடத்தில் தான் படுகாயப்பட்ட மிருகமென
வருத்தத்துடன் மறைந்ததை நினைத்தான். 'அன்னி! அதோ! அக்காட்டில் அவர்கள் எவ்வளவு களிப்புடன்
இருக்கிறார்கள் பார்த்தனையா! என்ன ஒருவாறு இருக்கின்றாயே! களைப்பா?' என்றான். பதிலேயில்லை.
களைப்பா?' என்றான் மறுபடியும். அன்னிதன் முகத்தைக் கையால் பொத்திக் கொண்டாள். சற்றுக்
கோபமுற்றவன் போல் பிலிப் கப்பல் காணாது போய் விட்டது. அந்த எண்ணமேன் இன்னும்? வருந்தி
உன் உயர்ந்த உயிரை மாய்த்துக் கொண்டு குழந்தைகளைத் திக்கற்றவர்களாக்கப் பார்க்கிறாயே?'
என்றான். அந்த நினைவில்லை' என்றாள் அன்னி. சற்றுக் கிட்ட நெருங்கினான் பிலிப். 'அன்னி,
என் மனதில் ஏற்பட்டதென்று எனக்குத் தெரியாமல் வெகு காலமாக ஒன்று இருந்து வருகிறது.
அது கடைசியாக வெளிவந்து விடுமென எண்ணுகிறேன். அன்னி பத்து வருடங்களுக்கு முன் உன்னைப்
பிரிந்து சென்றவன் இன்னும் உயிருடன் இருப்பான் என்று எண்ணுவது பெரும் பேதைமை நீ எழைமைப்பட்டு
உதவி பற்றிருப்பதைக்காண என் மனம் வருந்துகின்றது. நான் உனக்கு உதவி செய்ய வேண்டுமாயின்
- பெண்கள் வெகு யூகசாலிகளென்பார்களே! நான் நினைப்பது என்னவென்று உனக்குத் திண்ணமாய்த்
தெரியுமடி - நீ என் மனைவியானால் இவ்வளவு நாள் பட்ட கஷ்டமிருக்கட்டும் - நாம் கடவுள்
கிருபையால் சந்தோஷமாகக் காலங் கழிக்கலாமே- எனக்கோ உற்றாரில்லை. உறவினரில்லை. கவலையுமில்லை.
ஒரு சுமையுமில்லை. உனக்காக வொரு கவலை தான். நாமிருவரும் ஒருவரை யொருவர் நன்றாய் அறியோமா?
அன்னி! உனக்குத் தெரியு முன்னரே, வெகு காலமே நான் உன்னை மனமாரக்
காதலித்து வருகிறேன்' என்றான் பிலிப்.
மெல்லென அன்னி ‘பிலிப்,
தேவதூதன் போல் கருணை வள்ளலாய் என் வீட்டிற் கிருந்துவந்த சீமானே! உன்னைக் கடவுள் ஆசீர்வதிக்
கட்டும். என்னை விட உயரிய பரிசை உனக்கவரளிக்கட்டும். ஒருத்தி இருமுறை காதலிக்க முடியுமா?
நீ வேண்டுவ தென்ன?' என்றாள். 'அவனை விடச் சற்றுக் குறைவாய் என்னைக் காதலித்தால் போதுமானது'
என்றான் பிலிப் "ஐயோ, அன்ப! சின்னாள் பொறு! ஈனோக் வந்தால்- அவன் வரமாட்டான் –
ஆயினும் ஒரு வருடம் பொறு- அவ்வளவு நீண்ட கால மல்லவே - சற்றுப் பொறுக்க மாட்டாயா? என்றாள்.
'நான் கடமைப்பட்டவன் தான்' என்றான் பிலிப். 'சத்தியமாகக் கூறுகிறேன் ஒரு வருடத்தில்
- நான் ஒரு வருடத்தைக் கழிப்பது போல நீயும் கழித்து விடு' என்றாள் அன்னி. நான் அவ்வாறே
செய்வேன்' என்றான் பிலிப்.
சற்றுநேரம் மௌனம்.
கதிரவனும் சிவந்த மேனியனாய் மேற்கடலில் மூழ்கும் நேரம் வந்தது. பிலிப் குழந்தைகளைக்
கூவ அவர்களும் கை நிறையக் கொட்டைகளை அள்ளிக்கொண்டு ஓடி வந்தனர். வீட்டை நோக்கி அனைவரும்
புறப்பட்டனர். அன்னியின் வீட்டு வாயிலை அடைந்ததும், பிலிப் அன்னியின் கரத்தைப் பற்றிக்
கொண்டு, ''அன்னி நீ மனமிடித் திருக்கையில் என் எண்ணத்தைத் தெரிவித்தேன். நான் செய்தது
தப்பிதமே. நான் உண்மையில் கடமைப்பட்டவனே. ஆனால் நீ சுயேச்சை பெற்றவள் தான்?'' என்றான்.
'இல்லவே இல்லை' என்று அழுதுகொண்டே கூறினாள் அன்னி.
நாள்கள் கழிந்தன.
பிலிப்பின் வார்த்தைகள் அன்னியின் காதில் ஒலித்துக் கொண்டே யிருந்தன. மறுபடியும் அறுவடை
காலம் நெருங்கிற்று. வெகு வேகமாய் ஒரு வருடம் கழிந்து விட்டது. பிலிப்பும் அன்னியின்
முன் சென்று நின்றான். அதற்குள்ளாகவா ஒரு வருடம் கழிந்துவிட்டது' என்று திகைப்புடன்
னவள் கூற, 'ஆம்' என்றானவன். 'பிலிப்! இன்னுமே மோர் மாதம் -நிச்சயமாகக் கூறுகிறேன்.
அதற்குமேலில்லை - நான் உண்மையில் உனக்குக் கடமைப்பட்டவள் தான் - ஒருமாதம் பொறுத்துக்
கொள்' என்றான். 'உன்னிஷ்டம் போல் எவ்வளவு நாளாயினும் சரி' என்று நாக்குளறக் கூறினான்
பிலிப். இவ்வாறு ஏதேதோ சாக்குப் போக்குகள் கூறி அன்னி ஆறுமாதங்களைக் கழித்து விட்டாள்.
ஊர்வாயை மூட முடியுமா?
தங்களுக்கே நேர்ந்த குற்றமென அனைவரும் அலட்ட ஆரம்பித்தனர். பிலிப் அன்னியைத் துச்சமாக
எண்ணுகிறானென் அன்னி தான் பிலிப்பிற்கு இணங்கமாட்டேனென்கிறாள். அவள் தப்பிதம் என்றார்
மற்றுஞ் சிலர். இருவரையும் கண்டு ஏளனம் செய்தார் பலர். ஆனால் அன்னியின் மகனோவெனில்,
பிலிப்பின் எண்ணத்திற்கிசைவதே அன்னிக்கு நன்மை என்று எண்ணினானாயினும் வெளியே கூறினானில்லை.
தமக்கு ஆபத்துக் காலத்தில் ஆறுதலும் வேண்டிய உதவியும் அளித்த பிலிப்பை மணம் செய்து
கொள்ளென அன்னையை வற்புறுத்தினாள் பெண்.
வசீகரத் தோற்றத்துடன் விளங்கிய பிலிப்பின் முகம் வருத்தத்தால் வாடிவதங்கிற்று. இவையனைத்தும்
அன்னியின் மேல் அம்பு போல் தைத்தன.
ஒருநாளிரவு அன்னிக்குத்
தூக்கம் வரவில்லை. 'கடவுளே, ஈனோக்கைப் பற்றி ஏதாவது ஓர் அறிகுறியேனும் கிடக்குமா? அவன்
இருக்கிறானா இறந்து விட்டானா' என்று நினைத்துப் பிரார்த்தித்தாள். படுக்கையை விட்டெழுந்தாள்.
விளக்கேற்றினாள். வேதப் புஸ்தகத்தை விரைவினிலெடுத்து, ஒரு பக்கத்தைத் திருப்பி அதிலோர்
புறம் கையை வைத்தாள். 'பனையினடியில்' என்ற எழுத்துக்களின் மேல் கையை வைத்திருந்தாள்.
ஒன்றும் அவளுக்கு விளங்கவில்லை. புஸ்தகத்தை மூடிவிட்டுத் தூங்கினாள். கனவு கண்டாள்.
அதுவென்ன! ஈனோக் அதோ ஒரு பனையின் கீழ் உட்கார்ந்திருக்கிறான். அவன் தலைக்கு மேலே சூரியன்.
சரி, அவனிறந்துவிட்டான். ஆனந்தமாய்ச் சுவர்க்கத்திலிருக்கிறான். அங்கு பிரகாசிப்பது
ஞான சூரியன். சட்டென விழித்தாள். பிலிப்பை அழைத்து வரச் சொன்னாள். கடிதிற் கடிமணம்
நடந்தேற வேண்டுமெனக் கூறிவிட்டாள்.
பிலிப்பிற்கு இரட்டைச்
சந்தோஷம். மணிகள் ஒலிக்க மணம் நிறை வேறியது. ஆனால் அன்னியின் உள்ளத்தில் அந்தகாரமே
அமைந்திருந்தது. அது முதல் யாரோ தன்னைத் தொடர்ந்து வருவது போல் அவள் மனதிற் பட்டது.
தனியே இருக்கவே பயந்தாள். கதவைத் திறந்து கொண்டு வீட்டினுள் தனியே நுழையவே நடுங்குவாள்.
அவள் கருவுற்றிருக்கும் காரணத்தினால் அவ்வாறு நடுங்குகிறாளென நினைத்தான் பிலிப். பத்தாமாதத்தில்
அதிசௌந்தர்யமானதும் அவளை எல்லாவிதத்திலும் ஒத்ததுமானதோர் குழந்தை அவளுக்குப் பிறந்தது.
பழைய பயமெல்லாம் பறந்து சென்றன. புதுத்தா
யெனும் எண்ணம் தோன்றவே பிலிப்பின் மீது காதல் வளர்ந்தது. பழைய உணர்ச்சி மறைந்தது.
ஆனால் ஈனோக் எங்கே?
'நற்பாக்யம்' எனும் கப்பல் வெகு சுகமாய்க் கடலைக் கிழித்துக்கொண்டு சென்றது. உஷ்ணப்
பிரதேசத்தை அடைந்தது. வழியில் பல அல்லல்களேற்படினும் அவையனைத்தையும் பொருட்படுத்தாது
'நற்பாக்யம்' பொன் விளையும் புனிதமான கீழ்நாட்டை அடைந்தது.
அதில் பிரயாணம் செய்த
ஈனோக் சொந்த வியாபாரம் செய்யத் தொடங்கினான். பல விசித்திரமான பண்டங்களை வாங்கிக் கொண்டான்.
அழகான தோர் பொம்மையைத் தன் பாலனுக்கு வாங்கிக் கொண்டான். பாவம்! பின்னால் வரப்போகும்
கூற்றை அவனால் எவ்வாறு அறியக்கூடும்! தன்னூர் நோக்கிப் புறப்பட்ட கப்பல் பன்னாட்கள்
கஷ்டமெதுவுமின்றிக் கம்பீரமாய்ச் சென்று கொண்டிருந்தது. ஒருநாள் திடீரென எங்கும் அமைதியேற்பட்டது.
சட்டென அது மாறிற்று. வான மிருண்டது. வைய நடுங்கிற்று. காற்றடித்கடல் குமுறிற்று. அலைகளின்
வாய்ப்பட்ட மரக்கலம் கண்டவாறுசென்று கடைசியில் ஒரு பாறைமீது மோதிப் படாலென உடைந்தது.
ஈனோக்கையும், மற்றிருவரையும் தவிர அனைவரும் அலையினுள் ஆழ்ந்து அழிந்தனர். ஒடிந்த கட்டை
யொன்றைப் பிடித்துக் கொண்டு, தண்ணீரில் தத்தளித்துக் கொண்டு தனித்ததோர் தீவின்கரையில்
ஏறினர் அம்மூவரும்.
அத்தீவில் எங்கு
நோக்கினும் அபரிமிதமான உணவுப் பொருள்கள் பிராணிகளனைத்தும் மனிதரின் கொடுமையை அறியாதனதலின்
அச்சமின்றி அலைந்து திரிந்தன. சமுத்திரக்கரையை நோக்கி நின்ற மலைப்பாங்கில் பனை இலையால்
வேய்ந்த குடிலில் அம்மூவரும் மனதில் கவலை பாதித்து நிற்க சுவர்க்கபோகம் நிறைந்த அத்தீவில்
வாழ்ந்து வந்தனர்.
அவர்கள் மூவரிலும்
இளையவன் கப்பல் மோதுண்ட இரவு ஏற்பட்ட அதிர்ச்சியால் ஐந்து வருடம் படுத்த படுக்கையாயிருந்து
முடிவில் மடிந்தான். அவனிறந்த சின்னாட்களில் மற்றொருவன் ஒரு பெரிய மரத்தினடியைப் பொசுக்கி
ஓர் படகுபோல் ஆக்க முயல்கையில் உஷ்ணத்தால் தாக்கப்பட்டு இறந்தான். எஞ்சியவன் ஈனோக்தான்.
'சரி இன்னும் சற்றுப் பொறுக்க வேண்டுமென்பது ஈசன் திருவுளம் போலும்' என்று எண்ணினான்.
மலையின் உச்சிவரை
அடர்ந்த மரங்களும், புல்வெளிகளும் வளைந்து வளைந்துள்ள பூங்காவனங்களும், விண்ணைத்தொடும்
வில்ருக்ஷ வகைகளும் செறிந்து விளங்கின. இயற்கை வனப்பு நிறைந்த அத்தீவு முழுவதையும்
ஈனோக் சுற்றிப் பார்த்தான். ஆனால் அன்பு ததும்பும் மனிதன் முகத்தைக் காண முடியவில்லை.
ஓர் இனிய குரலேனு முண்டா? ஏது! எண்ணற்ற கடற்பறவைகள் கத்தும் ஒலியும், பலகாத தூரம் நீண்டு
நிற்கும் அலைகள் பாறைமீது மோதும் சப்தமும், உயர்ந்து செறிந்த மரங்கள் காற்றிலசையும்
ஓசையும், நீரோடையின் சலசலப்பும் தவிர வேறு குரலேயில்லை. ஏதேனுமோர் கப்பல் வருமாவென
நாள் முழுவதும் நீலநிறக்கடலை இமைகொட்டாது பார்த்து நிற்பான் ஈனோக். அவ்வாறு நாட்கள்
பலசென்றன. மரக்கலமும் வருவதாயில்லை. அனுதினமும் வழக்கமாகக் கதிரவன் குணதிசை தோன்றி
வானவீதியில் ஏறிச்சென்று குடதிசை மலைமீது வீழ்வான்.
மறுபடியும் குண திசையிலுதிப்பான் இதைத்தவிர வேறு மாறுதலேயின்றி காலச் சக்கரம் சுழன்று
கொண்டிருந்தது.
ஒன்றுந் தோன்றாமல்
சில வேளைகளில் வெறும் வெளியை விரைக்கப் பார்த்து நிற்பான். அவ்வேளை, தோற்றத்தின் பின்
தோற்றமாகப் பல அவன் மனக்கண் முன் தோன்றி
மறையும். இல்லாவிடில் மானசீகமாகவே மனிதர்களிடை, கரைகாணாக் கடலுக்கப்பா லுள்ளதோர் தீவினிலே,
தனக்கு அறிமுதமான பிரதேசங்களில் நடமாடுவது போலவும், தன் குழந்தைகளின் மழலைச் செற்களைக்
கேட்டு மகிழ்வது போலவும் நினைப்பான். அன்னி, சிறுவீடு, உயர்ந்து மேலே செல்லும் வீதி,
மாவாலை, மரமடர்ந்த சோலைகள், தேக்குமரம், தான் விற்றபடகு, ஜில்லென்றிருக்கும் நவம்பர்
மாதத்திய காடு, மிருதுவான தூறல், மக்கிக்கிடக்கும் இலைகளின் நாற்றம், மங்கிய கடலின்
ஆழ்ந்தஓசை- இவ்வாறு பல எண்ணங்கள் அவலுக்கு முன் துள்ளிக்குதித்து மறையும். ஒரு தடவை
இவ்வாறிருக்கையில், மெல்லென வெகு தொலைக்கப்பால், கோலாகலமாய் கலகலக்கும் மணியின் ஓசை
அவன் செவிகளில் விழவே அது எங்கிருந்து வருகின்றதென்று அவனுக்கு விளங்கவில்லை. அவனுடம்பு
புல்லரித்தது. துள்ளி எழுந்தான். மண்டியிட்டு இறைவனை வணங்கினான்.
ஆனந்த போதினி – 1931, 1932 –
டிசம்பர், பிப்ரவரி ௴
No comments:
Post a Comment