எறும்புகள்
(ஆர். ருக்மணி சாம்பசிவம்)
ஆழ்ந்து நோக்குவோமானால்
அல்லது ஆராய்ச்சி நூல்களைப் புரட்டினோமானால், மனித வாழ்க்கையின் சீர்திருத்தமெல்லாம்,
மற்றவற்றின் வாழ்க்கைச் சீர்திருத்தத்தின்
பிற்பட்டவையே எனத் துணிய எண்ண முண்டாகும்.
ஆறறிவுள்ள தற்கால
மனிதர்களுக்கு முன்பே, ஐயறிவுடையனவும், ஐயறிவிற்குக் கீழ்ப்பட்டனவும் தற்போது பெற்றுள்ள
இனிப் பெறப்போகிற பழக்க வழக்கமெல்லாம் பெற்று விட்டன. சுருங்கக் கூறினால் அவற்றின்
வாழ்க்கையிலே எவ்வளவு சீர்திருத்தம் ஏற்படவேண்டுமோ அவ்வளவும் அவைபொழுதே பெற்று விட்டன.
ஆனால், ஆறறிவுள்ள மனிதர்கள் தாம் தமக்கு எவ்வளவு சீர்திருத்தம் வேண்டுமோ அவ்வளவையும்
இன்னும் பெற்றுக் கொண்டு வருகிறார்கள், ஐயறிவுடையன முதலியவற்றினிடமிருந்தும், அன்னிய
மனிதர்களிடமிருந்தும். எனவே, மனிதர்களின் வாழ்க்கையிலே ஏற்பட வேண்டிய சீர்திருத்தங்களுக்கும்,
நல்ல பழக்க வழக்கங்களுக்கும் முடிவான எல்லை இன்னும் நகர்ந்து கொண்டே போகிற தென்று தான்
கூற வேண்டும்.
ஆனால், ஐந்து, நான்கு,
மூன்று, இரண்டு, ஒரு அறிவுடையன பெற்றுள்ள சீர்திருத்தங்களும், பழக்க வழக்கங்களும் போதுமானவை
என்றோ, முழுதும் சிறந்தவை என்றோ அர்த்தமில்லை. உற்பத்திக் காலத்திலேயே அவை அவற்றைப்
பெற்றிருந்தன என்பது தான் முக்கியம். மனி தன் இன்னும் பெற்றுக்கொண்டு தானே வருகிறான்?
காலச் சுழற்சியின்
அதிர்ச்சியிலே சில, இடம் பெயர்ந்தன: பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்த மக்கள், எழுதேடோ
(காகிதம்), எழுத்தேடோ (நூல்கள்) பெற்றிருந்தார்களா? அப்பொழுதெல்லாம் அவர்கள் ஒவ்வொருவரும்
கவி தாகூரைப் போல இயற்கை தேவியில் 'மேனி ஏடுகளைப் படித்து, கவி உள்ளம் பெற்றிருந்தார்கள்.
இப்பொழுதுள்ளவர்கள்
பெரும்பாலார், ஏட்டுச் சுரைக்காயர்களாய்ப் போய்விட்டதற்குக் காரணம், படித்தவற்றை இயற்கையோடு
பொரு ருத்திப் பார்க்காததோ, இயற்கையை இனிக்க, சுவைக்க, ரசிக்கத் தன்மை யில்லாததோதான்.
அதனாலேயே தான் உலகத்தில் 'வரட்டு உள்ளங்'கள் அதிகரித்து விட்டன! "கவி உள்ளம்'
வேண்டுமானால், இயற்கை எழிலிலே முதலில் முழுகித்தான் ஆகவேண்டும்.
அட! கேவலம் எறும்புகளைப்பற்றி
நானறிந்த இரண்டொன்றைக் கூற அல்லவா தொடங்கினேன்! அநாவசியமாகப் பெரிய விஷ்யங்களில் தலையிடுகிறேனே!
ஒருகால், எறும்புகளுக்கும் இயற்கையோடு சம்பந்த மேதேனும் இருக்குமா? அல்லது எறும்பேதான்,
இயற்கையர்! அப்படியானால், இன்னும் எவ்வளவோ ஜீவராசிகளிருக்கின்றனவே அவை? அவையும், காணப்படுகின்ற
எவையும் சேர்ந்து தான் இயற்கையா? எது எப்படிக் கிடந்தால் எனக்கென்ன! எறும்பைப் பற்றித்தான்
சொல்லப் போகிறேன். அதுவும் இரண்டொன்று. இதை யாரும் படிக்கக்கூடாது. ஏனென்றால், இயற்கையைக்
கூர்ந்து நோக்க ஆரம்பித்து விட்டார்களானால். சரி; ஆரம்பிக்கலாம்:
எறும்பா? ஆமாம்.
சித்தெறும்பு, கட்டெறும்பு, செந்தேளெறும்பு, கூனெ றும்பு, வெல்ல எறும்பு, தானிய எறும்பு,
மாமிச எறும்பு, சாக்கடை எறும்பு, தழை எறும்பு, குளவி எறும்பு, காட்டெறும்பு, பேய்க்கா
லெறும்பு முதலியன இருக்கின்றன.
முதலில் இவற்றின்
அடையாளங்களையும், வாழு மிடங்களையும் கூறிப் பிறகு குணஞ் செயல்களைத் தனித் தனி விரிப்பின்
பெருகு மாதலின், பொதுவர்கக் கூறி முடித்துக் கொள்கிறேன்.
1. சித்தெறும்பு:
- இதைச் சிற்றெறும்பு என்றுஞ் சொல்ல வரும். எல்லா எறும்புகளைக் காட்டிலும்
உருவத்தில் சிறியஎறும்பே இது. அதனாலேயே இப் பெயர் பெற்றது போலும். இதனுடைய நிறம்; மஞ்சளும்,
சிகப்புங் கலந்த நிறம். மர்வுபதார்த்தங்களை திருடுவதில் வல்லது.
2. கட்டெறும்பு:
- இதைக் கட்டை எறும்பு என்றுங் கூறுவார்கள். எனினும், கட்டு எறும்பு என்று
கூறுவது தான் பெர்ருத் தம். ஏனெனில், இது கடித்தால் நமக்கு அதிக நேரம் வலிப்பதோடு,
கடிக்கப்பட்ட இடம் கட்டியாகி விடும். அதாவது, தடித்து வீங்கி விடும். இதன் நிறம்: சுத்தக்
கறுப்பு. ஒரு நெல்லைவிட நீளமாக இருக்கும். எனினும், மெல்லிதாக அதாவது, 'லீன்' ஆக இருக்கும்.
இதனுடைய உணவு, பெரும்பாலும் அசரப் பொருள்களின் பால், அல்லது சாரமே யாகும். வாழ்விடம்:
வேலி, புதர்.
3. செந்தேளெறும்பு:
- கடித்தால், செந்தேள் கொட்டிவிட்டது போலிருக்கும். நிறத்திலும் செந்தேளின்
நிறமே. அதனாலேயே இதற்கு இப் பெயர் வந்திருக்கவேண்டும். இதன் பருமன், சிற்றெறும்பைக்
காட்டிலும் இரண்டு பங்கு பெரிது; கட்டெறும்பைக் காட்டிலும் மூன்றில் இரண்டு பங்கு சிறியது.
ஈரமான பிரதேசமே இதன் வாழ்விடம்.
4. கூனெறும்பு: - கூன்
விழுந்த 'பாட்டி 'போல வளைந்து இருக்கும். மெதுவாகத்தான் நடக்கும். யாரையுங் கடிக்காது.
தொந்தரை செய்யாது. எனினும், பழஞ்சாதத்தில் நிறைய வந்து விழுந்து இறந்து கிடக்கும்.
மக்கிப் போன பொருள்கள் என்றால் இதற்கு உயிர். உருவத்தில் கட்டெறும்பைப் போல வென்றாலும்
வளைந்து, நீண்ட கால்களை யுடையது. நிறம், சாதாரண கருப்பு. வாழிடம்: ஏதேனும் ஒருவித நாற்ற
மடிக்கக்கூடிய ஈரப் பிரதேசமே.
5. வெல்ல எறும்பு:
- வெல்லம் முதலிய இனிப்புள்ள உணவு களைத் திருடித் திருடி இப் பெயர் பெற்றது
போலும். வெல்லத்தை நாம் வயிற்றிற்குள் வைத்துப் பாதுகாத்தாலும், தேடிக் கண்டுபிடித்துச்
சிறிது அள்ளித் தின்றுவிட்டுச் சென்று விடும். நிறம், மங்கல் கறுப்பு. கட்டெறும்பை
விடச் சிறிதளவு பெரிய பது. தலை கொஞ்சம் மொத்தமாக இருக்கும். கடிக்கத் தெரியாது. தப்பித்
தவறி கடித்தாலும் அதிகம் வலிக்காது. வாழ்விடம், இனிப்புக் களஞ்சியங்கள்!
6. தானிய எறும்பு:
- முன்னொரு காலத்தில் மனிதர்களுக்கு இது செய்த பேருபகாரத்தை நான், என்னவென்று
சொல்ல? முன்னெல்லாம் பஞ்சகாலம் வந்தால் பல ஏழை மக்கள் பயப்படுவது கிடையாது. பேசாமல்
கையில் ஒரு கூடையும், மண் வெட்யோ அல்லது கடப்பாரையோ ஒன்றையும் எடுத்துக் கொண்டு கிளம்புவார்கள்.
நேரே தானியம் அடித்த களத்திற்கோ அல்லது புல் அதிகமாகவுள்ள பிரதேசத்திற்கோ போவார்கள்.
தானியத்தை வாரிக்கொண்டு திரும்புவார்கள். எப்படியா? இதோ சொல்லுகிறேன்.
இந்தத் தானிய எறும்புகள்,
தானியக் களத்தைச் சுற்றி வளைதோண்டி இருக்கும். அறுவடை காலம் வருமானால் அந்தக் காலம்
முடிவதற்குள் ஒவ்வொரு வளையிலும் இந்த எறும்புகள் குறைந்த அளவு பட்டணம் படி ஒரு படியோ
இரண்டு படியோ சேகரித்து வைத்து விடும். அவ் வளவை ஓர் ஆண்டிற்குள் தின்ன முடிவதில்லை
இவைகளால். மீதம் கெடாத வகையில் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும்; அல்லது இவைகள்
தீண்டின தானியங்கள் 'முளைக்க லாகாது' எனப் பிரமன் சாபமோ என்னவோ யார் கண்டார்கள்!
புல் விதைகளையும்
இப்படியே உரிய காலத்தில் ஒவ்வொரு வளையிலும் சேகரித்து வைத்து விடும். இவற்றைத்தான்
மக்கள் பஞ்ச காலத்தில் கொள்ளை யடித்துக்கொண்டு வந்து சாப்பிட்டார்கள். இப்பொழுதும்
சில வளைகளைத் தோண்டிப் பார்த்தால் உண்மை உணரக் கிடக்கும். அப்படிப்பட்ட பஞ்சம் இன்னும்
வரவில்லை யல்லவா! வரும்போது தானிய எறும்புகளின் வாயில் மண்ணை யள்ளிப் போட்டு விட்டு
நாம் வாரிக் கொண்டு வந்தாலும் பரவாயில்லை. அதனால், எறும்புவளைத் தோண்டுங் காரியத்தை
நாம், சோதனை அல்லது பரிட்சை அளவிற்கு வைத்துக் கொள்வோமாக.
உருவத்தில் இது,
அசல் செந்தே ளெறும்புதான். என்ற லும், நிறம் மங்கல் கருப்பு; கடித்தால் அதிகம் குடையாது.
வஞ்சந் தீர்த்துக்கொள்ளத் துரத்தவுஞ் செய்யாது. இதைச் 'சமயசஞ்சீவி எறும்பு' என்றாலும்
பொருந்தும்.
7. மாமிச எறும்பு:
- மாமிசம் என்றால் இதற்குத் தேவாமிர்தம். புழு, பூச்சிகளின் பிணங்களைத்
தேடித் திரிவது தான் இதற்கு வேலை. தேங்காய் மூளிகளில் உள்ள ஈரத்தை யெல்லாம் வந்து குடித்து
விட்டுச் சென்று விடும். வெல்லம் கிடைத்தாலும் ஒருகை பார்க்கும். உருவத்தில் சிற்றெறும்பு
அளவு இருக்கும். நிறம், கருப்பு ஓட்டத்தில் அசல் ஒன்றாம் நம்பர் திருடன் தான். இது,
நீர் இல்லாத எந்தப் பிரதேசத்திலும் வாழ்க்கை புரியும்.
8. சாக்கடை எறும்பு:
- இது, வாழ்க்கையைச் சர்க்கடையிலேயே ஆரம்பிக்கிறது. சாக்கடை நீர் தான்,
இதற்குக் காவேரி. இந்தச் சாக்கடைக் காவேரியன் கரையிலை, மூனறு மாதத்திற்குள் ஒருமுறை
வளையை விட்டு எல்லாம் வெளியே வந்து கூடி, இந்திரவிழா நடத்தி விட்டுத்தான் உள்ளே செல்லும்.
சில யங்கள் அந்தக் காவேரிக்குச் சொந்தக்காரர்கள், அவற்றை இந்'திர உலகத்திற்கே அனுப்பி
வைப்பதும் உண்டு.
சாக்கடையிலே சிந்திக்
கிடக்கும் யாவும் இவற்றின் உணவே. இவை, எறும்புகளெல்லாவற்றினும் பெரியவை. நிறம் கறுப்பு.
கடிக்க வேண்டுமானால் அழுத்தம் திருத்தமாகக் கடிக்கும். வலியும் அப்படித்தான். இதிலுள்ள
ராஜா எறும்பு சுண்டுவிரல் மொத்தங்கூட இருப்பதுண்டு.
9. தழை எறும்பு: -இதைக் கிராம மக்கள் வேறு விதமாக அழைக்கிறார்கள்.
இது, மரங்களின் நுனியிலுள்ள தழைகளை அப்படியே வளைத்து ஒருவித நூலை உபயோகித்து அதைக்கூடாகச்
செய்து, அதில் வாழ்க்கை புரிகிறது. பழங்களை உணவாக்கிக் கொள்கிறது. இவ்வின எறும்புகள்
வாழும் மரங்களில் எவ்வித காரணத்தை முன்னிட்டும் மக்கள் ஏறக்கூடாது – ஏறவும் முடியாது.
துரத்திக்கொண்டு மந்தை மந்தையாக வந்து கடிக்கும். கடித்தால், உயிரே போய்விடும் போலாகிவிடும்.
நிறம், மங்கலான மஞ்சள்.
கட்டெறும்பை விடச் சிறிது நீளம். இலுப்பை, மாமரங்களில் அதிகமாக வாழும்: அவற்றின் 'பாலு'ம்
அவற்றிற்கு உணவாகும்.
10. குளவி எறும்பு: - இதன் வாழ்க்கையிலே இது, நாள் எறும்பாகவும், வாழ்க்கையின்
பிற்பகுதியிலே இறக்கைகள் முளைத்துப் பறந்து, குளவியாகவும் இருக்கிறது. எல்லா எறும்புகளின்
பொது இலக்கணந்தான் இதன் இலக்கணமும். ஏனென்றால், ஒவ்வொரு இனத்திலும் இறக்கை முளைக்கும்
அதிர்ஷ்டம் வாய்ந்த எறும்புகள் சிலவுண்டு.
11. காட்டெறும்பு: - காட்டிலே
பெரும் புதர்களிலே புற்று போன்ற பெரிய வளைகளை அமைத்துக்கொண்டு வாழும், உருவத்திலேயும்
சாக்கடை எறும்பை ஒத்திருக்கும். நிறங் குணங்களிலும் அப்படித்தான். நீரற்ற மேட்டுப்
பாகங்களில் வசிக்கும் வித்தியாசம் ஒன்றுதான். நன்றாய்க் கடிக்கும். எக்கச் சக்கமாய்
வலிக்கும். இதன் சிநேகிதன் பாம்புதான்.
12. பேய்க்கால் எறும்பு: - நீண்ட்
கால்களை யுடையதால் இப் பெயர் பெற்றது. கடிக்கவே தெரியாது. ஊமை எறும்பு என்றாலும் பொருந்தும்.
பயந்து பயந்துகொண்டு ஓடும்.
இன்னும் பல வகைகள்
இருக்கலாம். இருந்தாலும், அவைகளையும் இவ் வினங்களில் அடக்கியே பிரிவு கூறலாம். ஆகலின்,
பொதுவாக இவற்றின் நடத்தையைக் கவனிப்பதும் அவசியமே.
எறும்புகளின் இந்தப்
பலவித இனங்களுக்குள்ளே சிறந்த நாகரிக முடையதும், வாழ வழி தெரிந்ததும் ஆன ஓர் இனம்,
கட்டெறும்பின் இனமே: ஆகவே, அவற்றைப்பற்றி ஆராய்வது மற்றையவற்றையும் ஆராய்வது போலவே
யாகும். ஆதலினாலே, கட்டெறும்பின் இனம் என்னென்ன செய்கிறதென்று பார்ப்போம்:
கட்டெறும்புகள்,
சிறு புதர், சிறு வேலி, செடிகளடர்ந்த தோட்டம், வீடுகளின் சுற்றுப்புறம் முதலிய விடங்களில்
வாழும்.
இவைகளுக்கு மழைகால
வளை, வெயிற்கால வளை என இருவகை யுண்டு. மழை பெய்யும்போது நனையாத இடத்திலே இருக்கும்
வளை, மழைகால வளை. வெயிற் காலத்திலே, ஓரளவு ஈரம்இருக்கு மிட்த்தில் உள்ள வளை, வெயிற்கால
வளை.
சீதோஷ்ண நிலையோ,
பருவங்களின் நிலையோ மாறும்போது வளையிலிருந்து மற்றொரு வளைக்குக் குடிபோகும். குடிபோகப்
படும் வளை இவ்வளவு தூரத்தில் இருக்கும் என்பதும், இன்னது என்பதும் நியதியில்லை; அவை
முன் கூட்டியே குறித்து வைப்பதும் கிடையாது.
ஆகவே, சில சமயங்களில்
சுமார் இரண்டு பர்லாங்கிற்கு அப்பர்லுங் கூடக் குடிபோகும்படி நேரிடலாம். இதெல்லாம்
அவ்வினத்தின் தலைவர்களைப் பொறுத்திருக்கின்றன. குறைந்த பட்சம் ஓர் குடும்பம் பதினைந்து
நபர்களையாவது உடையதாக இருக்கும். ஏறினது பத்தாயிரம் நபர்களையாவது உடையதாக இருக்கும்.
தலைமை எறும்புகள்
தாம் ஒவ்வொரு குடும்பத்தையும், பொறுப்பாகப் பாதுகாக்கும். குடும்பத்தைப் பொறுத்து இதனைத்
தலைவர்கள் வேண்டும் என்று அவையே முடிவு கட்டும்
போலும்.
ஒரு தலைவன் முதற்கொண்டு,
ஏழு தலைவர்கள் வரை உள்ள ஒரு 'போவை' இருக்கும் போலும்! ஒரு தலைவன் இருப்பது, சிறு குடும்பத்திற்கு.
குடும்பம் பெருகப் பெருகத் தலைமைத் தானங்களும் அதிகரிக்கும் போலும்!
ஆம்! 'குடியரசு'
ஆட்சியே!
இப் பேரவை'யில் உள்ள
அங்கத்தினர்கள் அதாவது பொறுப்பாட்சித் தலைவர்கள், காலநிலை, இடநிலை மாறும்போது, வேறு
வளை அவசியமாயின் அதற்கான சுற்றறிக்கையைத் தாமே நேரிற் சென்று வாய் மூலமே தெரிவிப்பார்கள்.
அது மட்டுமல்ல; குடியேறுவதற்கு என்னென்ன செய்து, எந்தெந்த விதத்தில் தயாராய் இருக்கவேண்டுமோ
அவற்றையும் தெளிவாக நேரிலேயே எடுத்துக் கூறுவார்கள். பிறகு, நிலைமை தயாரானதும் தம்
சமூகம் மூட்டை மூடிச்சுகளைத் தூக்கிக்கொண்டு தம்பின்னே வரிசையாக வரத் தாம் முன் செல்வர்.
மூட்டை முடிச்சுகள் வேறொன்று மில்லை; முட்டையும் பொறித்த குஞ்சுமே யாம். தேவையானால்
கையிலுள்ள முக்கிய வுணவுகளும் அவற்றோடு சேரும்.
இப்படித் தலைமை எறும்புகள்
முன்னே சென்று கொண்க்கும் போது பின்னே ஏதேனும் கலகம் விளைந்தால், செய்தி, தலைவர்களுக்கு
விரைவில் எட்டும்.
அதனால் சில தலைமை எறும்புகள் வரிசையாகச் செல்லும் கூட்டத்தின் நடுநடுவே வருவ உண்டு.
கலகம், அன்னியர்களால்
ஏற்பட்டதாயின் அதைப் பொது எறும்புகளே நிவர்த்தி செய்து கொள்ளும். உதாரண மாக, சில மனிதர்கள்
அவற்றின் பாதையைக் கலைக்கும்படி நேர்க்தால் அவை, 'நொய்' என் பற சப்தமிட்டுக் கொண்டு
அங்கேயே அவை கூட்டமாகத் திரண்டு விடும். பிறகு, பாதையின் தொடர்ச்சியைச் சில எறும்புகள்
கண்டு பிடித்துக்கொண்டு வந்து கூற யாவும் செல்லும். அப்படி எத்தனை முறை இடை யூறு நேரினும்
அவை பொறுமை குன்றாமல் காரியத்தை நிறை வேற்றும்.
இன்னும் சில சமயங்களில்
வரிசையின் பாதியிலே துண்டாடிப் போய் விடுவதும் உண்டு; அந்தச் சமயங்களிலும் அவை பொ றுமையோடு
முன் சென்றுள்ள எறும்புகளின் அடிச்சுவடுகளின் குறியைக்கொண்டே விடாமல் தொடர்ந்து விடும்.
எறும்புகள், தம்
இனத்தின் அடிச்சுவடு இன்னதென்று பாறைகளின் மேலும், புற்களின் மேலும், இலைகளின் மேலுங்
கூட கண்டுபிடித்துத் தொடர்ந்து சென்று விடுகின்றன வென்றால், அவற்றின் திறமையை ஓர் வரம்புக்குள்
அடக்கி எப்படிக் கூறுவது?
முன்னே செல்லும்
தலைமை எறும்புகளுக்கே மனிதர்களர்லோ, மாடு, ஆடு முதலியவற்றினாலோ ஓர் இடையூறு ஏற்படுமானால்,
அது காரணமாகத் தம் பிரயாணத்தை நிறுத்திவைக்க மாட்டார். தப்பித் தவறி மீண்ட் தலைமை எறும்புகளை
மீண்டும் அதேகணத்தில் தயாராகி கூட்டத்தை அழைத்துக் கொண்டு செல்லும்.
சில சமயங்களில் சட்டென்று
வளை அகப்பட வில்லையெனில், தற்காலிகமாக ஏதேனும் ஓர் பெரிய வஸ்துவின் கீழ்ச் சென்று தங்கும்படி
இடந் தயார் செய்து கொடுப்பதோடு, சுற்றறிக்கையையும் விடுத்து விடும், தலைமை எறும்புகள்.
பின் சாவதானமாக ஒருநாள் கழித்துக் கூட வளையைத் தேடிக்கொண்டு யாவும் கிளம்புவதுண்டு.
இப்படிப் போகும்போது
தத்தம் முட்டையையும், குஞ்சுகளை யும் ஈன்ற எறும்புகளே எடுத்துச் செல்லும் என்பது கிடையாது.
சுமை எடுத்துச் செல்வதற்கு ஒவ்வொரு எறும்பும் முந்தும். சுமைகிடைக்காத எறும்பு தான்
கையை வீசிக் கொண்டு நடக்கும்.
தூக்கிக்கொண்டு செல்லும்போதே வீசிக்கொண்டு வரும் எறும்புகள்,
தாம் தூக்கிக் கொண்டு வருவதற்காக மற்றவைகளைக் கேட்கும். அவை இஷ்டமிருந்து கொடுத்தால்
தான்
இவை எடுத்துக் கொண்டு செல்லும்; இல்லாவிட்டால் மீண்டும் அப்படியே தான்.
சில எறும்புகள்,
வழியிலே எந்தக் காரணத்தினாலோ அலுத்துச் சுருண்டு வீழ்ந்து விடுவதுண்டு. விழ்ந்த எறும்புகளை
மற்ற எறும்புகள் தூக்கிச் செல்லும்.
பிரயாணத்தின்போது
இரண்டு பன) எறும்புகளாகச் சேர்ந்து தாக்க வேண்டிய வஸ்துக்கள் எத்தலும் வழியில் கிடக்
அவற்றைக் கட்டாயம் தொடமாட்டா. வழிப் பயணம் கெட்டு விடுமே! சிறிய வஸ்துக்கள் கிடைத்தால்
சும்மா செல்லும் எறும்புகள் கையில் பிடித்துக்கொண்டு செல்லும்.
இந்த எறும்புகளுக்குள்ளே
கட்டாயம் சோம்பேறிகளையும், பிச்சை எடுப்பவைகளையும் பார்க்கவே முடியாது. பிறந்த எறும்பிற்குக்
கைகால் முளைத்ததோ இல்லையோ முன்னேயே உழைக்கக் கிளம்பி விடும், அது. இப்படி மனிதர்களில்
ஆயிரத்திற்கு எத்தனைபேர் - இருக்கிறார்களோ, யார் கண்டார்கள்?
முடிவாக எறும்புகள்,
ஒற்றுமையான உழைப்புள்ள ஒரு சமூகம். அவற்றைப் பார்த்து நாம் அறிய வேண்டுவன இன்னும் எத்தனையோ
உள்ளன. அறிந்து கொள்வோமாக.
ஆனந்த போதினி – 1944 ௵ - பிப்ரவரி ௴
No comments:
Post a Comment