ஒற்றுமை
ஐயன்மீர்!
"ஒற்றுமையில்லாக்குடும்பம்
ஒருமிக்கக் கெடும்''
"சேர்ந்து
வாழ்வதே சிறந்த வலிமை''
"எத்தால்
வாழலாம் ஒத்தால் வாழலாம்''
என்ற, இத்தகைய மேற்கோள்க
ளெல்லாம், ஒற்றுமையின் பொருட்டே உதித்தனவாகும். எல்லாம் வல்ல இறைவனியற்றிய இப்பிரபஞ்சத்திலுள்ள
[*1] சராசரங்கள் அனைத்திற்கும், ஒற்றுமை என்பது இன்றியமையாதது.
அதனாலுண்டாம் நன்மைகள் பல. ஆகவே, மானிடர்கள் ஒவ்வொரு வரும் பந்துத்வம், பட்சம், பாசம்,
நேசம், விசுவாசம், அபிமானம், காதல், பக்தி, என இடபேதத்தை நோக்கிப் பலவகைகளான பெயர்களுடன்
செலுத்தப்படும் அன்பைச் சற்றும் குறைவுறாது, செலுத்துவார்களேயானால், ஒற்றுமை என்பது
தானே உதிக்கு மென்பதற் கைய மில்லை.
இத்தகைய ஒற்றுமை,
மானிடருக்கு மாத்திரம் உண்டா? உலகத்தில் தோன்றிய மற்ற இயற்கைப்பொருள் முதலானவற்றிற்கு
முண்டா? என்பதை சிறிதளவு ஆராய்வாம். முதலில் தாவரத்தைப் பற்றிக்கூறுவோம்:
ஆலமரத்தின் கிளை
ஒற்றுமையைக் காணின், நமக்குப் பெரும் வியப்பு தோன்றும். எவ்வாறெனின், மீன் சினையினும்
சிறிதாயுள்ள ஒரு ஆலின் விதையானது முளைத்துப் பெரிய தருவாகித் தரும் விழுதுகள் பல நூல்
போன்ற கிளைகளாக உதித்துக் கீழிறங்கிப் பூமியை எட்டிய உடனே அவையனைத்தும் ஒற்றுமை யடைந்து,
வேரூன்றித் தம்முன் தோன்றியனவாகிய கிளைகளைத்தாங்கி அவைகளுக்கு உதவி செய்கின்றன. இவற்றின்
இனவொற்றுமையை என்னென்றியம்புவது! சிறு சல்லிகளாகிய இவ்விருதுகள், தங்களால் சுமக்கமுடியாத
அத்தகைய கிளைகளின் பாரத்தைச் அசைவன, அசையாமலிருப்பன. சுமப்பதற்குக் காரணம் என்ன? ஒற்றுமையே
யன்றோ? இதை ஊகித்தறிய வேண்டிய தவசியமன்றோ? பின்னும்,
விருக்ஷத்தை நீக்கி
விலங்கினை நோக்குவாம்; இரண்டு எருதுகள் சேர்ந்து, ஒரு வண்டியினை இழுத்துச் செல்லுங்கால்,
அவற்றின்பா லுள்ள ஒற்றுமையைக் கண்டறியார் ஒரு சிலருமிரார் என்பது வெளிப்படை.
நிற்க, புள்ளினத்தை
நோக்குவாம்: ''ஆகாயத்தோட்டி'' எனப்பெயர் புனைந்த காகமானது, தனக்கு ஆகாரம் கிடைக்கும்
போது தனது இனத்தின் கூட்டத்தைப் பேரிரைச்சலிட்டு ஒருங்கு படத் திரட்டி அவற்றிற்கும்
அதனை ஊட்டி உண்ணுவதைப் பார்க்காதவர் யாவர்? புறா என்னும் பறவையானது தன் துணையுடன் இணைபிரியாது
இசைந்தொழுகும் குணத்தினை என்னவென் றியம்புவது? கொலைஞனொருவன் தனது கொடியஆயுதத்தால் ஒரு
புறாவை உயிர் துறக்கச் செய்யுங்கால் அதை நீங்கின மற்ற புறாவானது தானே உயிர் துறக்குமென்பதை
நாம் எல்லோரும் கேட்டே யிருக்கின்றோம். மற்றும், குரங்குகள் என்று சொல்லக்கூடிய பிராணிகள்
ஒருமரத்தில் இருக்கும்போது, ஒருவன் ஒரு குரங்கைப் பார்த்துப் பயமுறுத்துங்கால் அது
கண்ட பல குரங்குகளும் அன்னவனை உறுமுவதை நோக்கின் அவற்றின் பாலுள்ள ஒற்றுமை நன்கு தெளிவாகின்றது.
சமீபகாலத்தில் ஈரோட்டில் நடந்த குரங்குகளின் ஒற்றுமையை நமது ஆனந்தபோதினி பகரக்கேட்டிராதவர்
யாவர்? ஆகவே, சகோதர சகோதரிகளே!
இப்படி எல்லா இனங்களுள்ளும்
நிறையப்பெற்ற ஒற்றுமை யானது, நம் பரதகண்டத்தில் முன் எவ்வாறிருந்தது என்பதைக் கூறுவோம்.
கேட்பீராக. சூரிய குலத்தைப் பாருங்கள்; ஸ்ரீராமர் வனமேகப் புறப்பட்டதும், கற்பிலக்கணம்
வாய்ந்த மனைவியாகிய சீதாதேவியும், ஒற்றுமையே உருவாகத் தோன்றிய தம்பியாகிய இலக்குமணனும்
பின்தொடர்ந்ததும், இதைக்கண்ட தசரதர் உயிர் நீங்கினதும், அந்நகரின் ஜனங்கள் யாவரும்
இராமபிரானைப் பின்தொடர்ந்ததும், ஓடக்காரனாகிய குகனின் அன்பும், நினைத்துப் பார்க்கில்
எவ்விடத்திலாவது ஒற்றுமை என்பது குன்றியதாகக் காணப்படுகிறதா? இல்லையே!
மற்றும், சந்திரகுலத்தை
நோக்கின், பாண்டவரின் ஒற்றுமை எவரிடத்துண்டு? இவ்வாறு ஒற்றுமையே உருவாகத் தோன்றிய நம்தாய்
நாடானது தற்போது ஒற்றுமை என்பது சற்று வேற்றுமை யடைந்திருப்பது மிகவும் வருந்தத்தக்கதாகும்.
நம்பாரதமாதாவின் மக்களனைவரும் ஒருதாயின் பிள்ளைகளாக ஜனித்து, மதம் பாஷை உடை நடை குணம்
பாவனை முதலியவற்றில் சிறிது மாறுபாடடைந்ததால் நமக்குள் ஒற்றுமை என்பதும் சிறிது மாறுபாடடைய
ஏது உண்டானது போலும். அதுமிகவும் நன்றன்று.
இனி நந்தமிழ் மக்களனைவரும்
மதத்துவேஷம், குலத்துவேஷம், குடும்பத்துவேஷம், தேசத்துவேஷம், இராஜத்துவேஷம் என்ற இத்தகைய
துற்குணங்க ளெல்லாம் ஒழித்து முறையே துவேஷம் என்ற சொல் ''அபிமானம்'' என்று மாறும்படி
நடந்தொழுகி இப்பரதகண்டத்தை முன்னிருந்த உயர் பதவிக்குக் கொண்டு வரும்படியான நல்லறிவைப்
பெறுமாறு எங்கும் நிறைவுற்ற எம்பெருமான் இனிது கிருபை கூர்ந்தருளப் பிரார்த்தித்து
வணங்குவாம். குறையிருப்பின் உலகம் பொறுக்க.
“ஒற்றுமைக்கொடியை உலகத்தோர் நாட்டுக.''
S. பூர்ணம் பிள்ளை, துறையூர்.
ஆனந்த போதினி – 1925 ௵ - செப்டம்பர் ௴
No comments:
Post a Comment