Saturday, August 29, 2020

 

ஒற்றுமை

 

பூர்வகாலத்தில், நமது முன்னோர்கள் ஒற்றுமையுடன் இருந்து வாழ்ந்து வந்தார்களென்பது வெளிப்படை. தங்களுக்குள், ஏ தேனும் ஒருவிவகாரம் ஏற்பட்டு விட்டால், பட்டக்காரர், பாளையக்காரர், பெரியதனக்காரர், செட்டிமைக்காரர், மணியக்காரர், நாட்டாண்மைக்காரர், கொத்துக்காரர், என்று பல பட்டப் பெயர்களைப் பெற்ற பெரியமேதாவிகளை வைத்துக்கொண்டு தங்களுக் குள்ளாகவே அந்த விவகாரங்களைப் பைசல் செய்து கொள்வார்கள்.

 

இக்காலத்திலோ அப்படி யில்லாது சிலர் வீண்சண்டைகளைச் செய்துகொண்டு கோரட்டுக்குப்போய் பாட்டன் பூட்டன் தேடிவைத்த சொத்துக்களை குமஸ்தாக்களுக்கும், வக்கீல் தரகர்களுக்கும், கொடுத்துத் தங்களுக்கு அநுகூல மாகாவிட்டால், இன்னும் மேல்கோரட்டுக்கு என்றும், கீழ்க்கோரட்டுக் கென்றும் போய்ப் பணத்தை வாரியிறைத்துவிட்டுச் சிவ சிவாவென்று வீட்டுத் திண்ணையின் மேல் ஒரு புறமாகக் குந்தியிருப்பர்.

 

தற்காலத்திலும் கூட, குடும்பர்கள், குயவர்கள், தொட்டியர்கள் ஆகியவர்களுக்குள் கட்டுப்பாடிருக்கின்றது. இவர்களது ஜாதிக் கட்டுப்பாடுகளை என்னென்றுரைப்பது. இந்த ஜாதியாருக்குள் ஏதேனும் குற்றங்குறைக ளுண்டாயின் அதைத் தீர்த்துக் கொள்வதற் கென்றே இவர்கள் வருஷம் ஒரு முறையேனும், அல்லது இரு முறையேனும், மஹாநாடுகள் கூடி, அவர்களுக்குள் முதன்மையான பெரியதனக்காரன், நாட்டாண்மைக்காரன், பெரியபூசாரி, சின்னப்பூசாரி, இவர்களை வைத்துக் கொண்டு அந்த விவகாரங்களைத் தீர்த்துப் பைசல் செய்வதும் தவிர தப்பிதம் செய்தவர்களுக்கு அபராதம் போட்டு வசூல் செய்து அங்கு வந்திருக்கும் உறவின் முறையோர்களுக்கு அந்தப் பணத்தைக் கொண்டு விருந்து முதலிய வற்றிற்குச் செலவிட்டுப் பிறகு இந்தவிதமான குற்றங்களைச் செய்யக்கூடாது என்றும், இன்னவிதமாய் நடந்துகொள்ள வேண்டும் என்றும் கட்டுப்பாடு செய்து கொண்டு போவார்கள்.

 

இவ்விஷயத்திற்கு அறிகுறியாக நேற்று, கருவூருக்கு அடுத்த மணியம் பாளையம் என்னும் கிராமத்தில் குயவர்களெல்லாம் ஒன்று சேர்ந்து கூட்டங்கூடி, அக்கூட்டத்தில் தங்கள் ஜாதியின் முன்னேற்றத்திற்கான பல விஷயங்களையும், பழைய வழக்கங்களை அறவே ஒழிப்பதையும், இனிமேல் இதரஜாதியாரிடம் நடந்து கொள்ள வேண்டிய சமரசதத்துவத்தையும் கைக்கொள்ள வேண்டியதையும் பற்றிப் பேசி அதன்படி முடிவு செய்து கூட்டம் கலைந்தார்கள்.

 

அவ்வூர்................ கவுண்டர் என்ற ஒருவர் வீதிவழியாய்ப் போகும் போது இவரைக்கண்ணுற்ற குயவனொருவன் பழய ஏற்பாட்டின்படி கும்பிடாமலும், கைகட்டி வாய் பொத்தி நிற்காமலும், மௌனமாகவே யிருந்தான். உடனே கவுண்டருக்கு மீசை நீண்டு, கோபாக்கினி கொழுந்துவிட அவர் சினங்கொண்டு சீறி, " அடா ! அற்பக்குசப்பயல்களே ! ஏது உங்களுக்கு இவ்வளவு ஆணவம்? உங்கள் குலத்துக் குண்டான மரியாதை கொஞ்சமேனும் காட்டாமல் இருக்கிறாயல்லவா? உங்கள் ஜாதிக்கட்டுத் திட்டமா? பார்க்கலாம், நாளை ஊரில் குடியிருப்பது " என்று அக்கோபத்தோடு பேசிக்கொண்டே வீடு சென்றார். கவுண்டர் வீடு சென்றாரோ இல்லையோ? வேலையாட்கள் சிலர் ஓடோடியும் வந்து குயவன் சூளையிலுள்ள பாண்டங்களை உடைத்தும் வீட்டைப் பிரித்தும் குயவனை அடித்து வெளியில் துரத்திவிட்டனர்.

 

அந்தோ! பரிதாபம்! தன் ஜீவனோ பாயத்திற்காகச் செய்து வைத்த பாண்டங்களையிழந்தும், அடியுண்டும், அவஸ்தையுற்ற குயவன் வழியின்றித் திகைத்து "ஏழை அழுத கண்ணீர் கூறிய வாளோடொக்கும்'' என்பது போல் தன் இனத்தார்களுடன் சொல்லி முறையிட்டு அழுதான். இதைக் கேட்ட குயவர்களெல்லாம், ஷை கவுண்டருக்குச் சட்டிப்பானைகள் போடக்கூடாது எனக் கட்டுத் திட்டம் செய்து விட்டார்கள்.     

 

இந்து ஜனங்களுக்குக் குயப் பாண்டம் சுபத்திற்கும், அசுபத்திற்கும் உரித்தான தாகையால் மண் பாண்ட மகப்படாத கவுண்டரதுபாடு திண்டாட்டமாய் முடிந்தது. அவர் என்ன செய்வார்? குயவர்களது ஒற்றுமையைக் கண்டு நமது அதிகாரம் இனிக்குயவர்களிடம் செல்லாது எனத் தீர்மானித்த கவுண்டர் குயவர்களிடம் போய் கஷ்ட நஷ்டங்களுக்கு நான் பாத்தியப்படுகிறேன். முன்போலவே எனக்கும் சட்டிபானைகள் போட்டு வரவேண்டும் என்று மரியாதையோடு பேசி மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.  

 

குயவர்கள் குலம், கல்வி, செல்வம், இம்மூன்றிலும் தாழ்வு பெற்றிருந்தாலும், ஒற்றுமையாலல்லவோ, உயர்வெய்தினர். கவுண்டர் மேற்சொன்ன மூன்றிலும் சிறப்புற்றவராக விருந்தும், ஒற்றுமைக்குறைவாலன்றோ தாழ்வு பெற நேர்ந்தது. நாம் நம்மிலும் சிலர் தாழ்வு பட்டவர்களென்று எண்ணுவதும், அவர்களை ஏவலாளர்களாக எண்ணி இழிவு செய்தலும், கடவுள் நம்நிமித்தமே அன்னவர்களைப் பிறப்பித்தாரென எண்ணுவது போலாகுமன்றே? அந்தோ! கல்வியிலும், குலத்தொழிலிலும், தாழ்ந்து கிடப்பவர்களைத் தட்டியெழுப்பி உயர்வு படுத்துவதற்கு எத்தனையோ மஹான்கள் கங்கணங் கட்டிக்கொண்டிருக்க வில்லையா? அதை இவர் அறியார் போலும்? அன்னோர்களல்வவா உலகம் போற்றும் அன்பும், சமரச தத்துவமும் உடையவராவர்!

 

சகோதர, சகோதரிகளே! நாம் கடவுளுக்கு மாத்திரம் கீழ்ப்பட்டவரென எண்ணி நம்மில் ஒருவர்க் கொருவர் தாழ்ந்தவ ரென்றும் உயர்ந்தவரென்றும் எண்ணாமல் யாவரிடத்தும் அன்புடனே ஒற்றுமையாக உலகம் போற்ற வாழ ஒப்பற்ற முதல்வனை மனத்தில் வைத்துப் போற்றுவோமாக. சுபம், சுபம்.

S. V. பழனியப்பன்,

சாலியாபாளையம்.

ஆனந்த போதினி – 1920 ௵ - ஆகஸ்ட் ௴

No comments:

Post a Comment