ஒற்றுமை
ஒற்றுமையாவது
ஒன்றாகுந் தன்மையாகும். இத்தன்மை எல்லா வுயிர்களுக்கும் இன்றியமையாத தொன்றாயினும் மனவுணர்வின்
மிக்க மக்களுயிரக்கே சிறப்பாவ தொன்றாகும்.
அறிவோடு கூடிய ஆண்
பெண் எனு மிருபாலாரும் மக்கள் எனப்படுவர். மக்களே யெனினும் மனமென்பதோர் அறிவுடைய ராகாவழி,
அம்மக்கள் மாக்களெனப் படுவாராவர். மனவுணர்ச்சி யில்லாதார் இத்தன்மையராதல்,
"மாவும் மாக்களு மையறி வினவே
பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே "
(தொல். பொரு - மர. 32)
என்றதனானும் அதன் உரையானும் தெளிவாம். அறிவொடு புணர்ந்த
ஆண் பெண் என்னு மிருபாலாரும் மக்களெனப் படுவாராதல்,
'மக்க டாமே யாறறி வுயிரே ரையா
வே யக்கிளைப் பிறப்பே” (தொல். பொருள் - மா. 33)
என்றதாற் றெளியப்படும். இச்சூத்திரத்தினுரையில் நச்சினார்க்கினியர்
தாமே'எனப் பிரித்துக் கூறினமையான் நல்லறிவுடையார் என்றதற்குச் சிறந்தார் என்பதுங் கொள்க''
எனக் கூறியிருத்தலானே அறிவுசேர்ந்த மக்களே பல்லாற்றானுஞ் சிறந்தாராக ஒற்றுமையுடையராதற்
றன்மையராவர். அறிவுடையார் தாம் ஆன்றோர் அருளிய நூற்களையும் அன்னார் வாய்ச் சொற்களையும்
முறையே கற்றுங் கேட்டும் தம் நுண்ணறிவாற் கொள்வனவும் தவிர்வனவும இன்னவென்றுணர்ந்து,
(சான்றாண்மைதாங்குந் தூண்களாம்) அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மையாதி குணங்களாற்
சிறந்து, வாழ்க்கைக்குத் தன்னேரிலாச் சிறப்பினதாகிய ஒற்றுமையினைக் குறிக்கொள்வாராவர்.
ஒற்றுமைக்குக் காரணமாவன
பலவெனினும் முற்கூறிய அன்பாதி குணங்களே சிறந்தனவாம். 'அன்பாவது, ஒருவன் வாழ்க்கைத்துணையும்
புதல்வரும் முதலிய தொடர்புடையார்கட் காதலுடையனாதல்' எனப் பரிமேலழகியார் விளக்கினர்.
நச்சினார்க்கினியரும் " ஒப்பு முருவும்......... வென்ப” (தொல். பொரு. பொருளியல்
- 53) எனுஞ் சூத்திரத்திற் கிட்டவுரையில் 'அன்பாவது மனைவியர் கண்ணும் தாய் தந்தை புதல்வர்
முதலிய சுற்றத்தின் கண்ணும் மனமகிழ்சசி நிகழ்த்திப் பிணிப்பித்து நிற்கும் நேயம்' என்றனர்.
இக்கூற்றுக்களான் ஒரு குடும்பத்தினர் பலரும் தமக்குள் வேற்றுமை யின்றாகத் தம்முட் பொருந்தி
வாழ்தற்பயனைத் தருதற்பாலது அன்பேயாதலின் அன்பு ஒற்றுமை எழுச்சிக்குக் காரணமாவதாம்.
அன்பென்னுந் தளையான் யாக்கப்பட்டு ஒழுக்கநெறியிற் செல்லும் குடியே உயர்குடியெனப் படுதலின்,
அக்குடிக்கு
'இற்பிறந்தார்
கண்ணல்ல தில்லை யியல்பாகச்
செப்பமு நாணு மொருங்கு'' (குற. குடி. 1)
என்றதனான் நாண் இன்றியமையாத தொன்றாம், நாணாவது 'சால்பு,
பண்பு முதலிய குணங்களா னுயர்ந்தோர் தமக்கொவ்வாத கருமங்களில் நாணுதலுடையராந் தன்மை'எனப்
பரிமேலழகியார் கூறியதாம். தமக்கொவ்வாத கருமங்களில் நாணுதலுடையாரே அடுக்கிய கோடிபெறினும்
தம்மொழுக்கங் குன்றும் தொழில்களைச் செய்யாராதலின்
"குற்ற மிலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்று முலகு " (குற. குடி.
5)
என்றதற் கிலக்கியமாய் உலகந்தானே சுற்றமாச் சூழ்தலின்
ஒற்றுமையுண்டாக வாழ்வாராவர். ஆதலின் நாணும் ஒற்றுமையினை விளைவிப்பதாம்.
ஒருவர் நாணேற்று
அன்பாற் சுற்றந்தழுவ வேண்டின் உலக நடையினை யறிந்து செய்தலாகிய ஒப்புரவினை யுடைய ராகாராயின்
தம்முயற்சியான் அறத்தின் வழி ஈட்டிய வொண்பொருளைத் தம்மவர்க்கும் தக்கார்க்கும் பயன்படுத்த
லிலராவர். இலராகவே
''சுற்றத்தாற் சுற்றப் படவொழுகல் செல்வந்தான்
பெற்றத்தாற் பெற்ற பயன்'' (குற.
சுற்ற. 4)
என்பதற் கேற்பத் தம் தாளாண்மையின் பயனாய்வந்த செல்வம்
தரும் பயனாகிய சுற்றத்தார் சூழவிருத்தலை யிழந்தவராவர். ஆதலின், ஒப்புரவாற்றலும் ஒற்றுமைப்
பயனை அளிப்பதாம். குணமேயுடையார் உலகத்து அரியராகலின் ஒரு குடிப்பிறந்தாருள் ஒருவர்
ஒருகால் மிகையாயின செய்வாராயின் அக்குடியிற் பிறந்த மற்றொருவர் மிகையாயின செய்தாரை
வெறுத்தல் கூடுமன்றே? அந்நிலைமையில் வெறுக்கு மவர்தாம், கண்ணுக் கணிகலமாம் கண்ணோட்டத்தினை
யுடையராயின், அவர் குற்றத்தைப் பொறுத்தாற்றுவாராய்க் குற்றஞ்செய்தார் தாமும், தம்முடன்
என்றும் போல ஒன்றிவாழ வாழுந் தன்மையினராவர், ஆதலின், கண்ணோட்டமும் ஒற்றுமையாகிய பலனளிப்பதொன்றாம்.
அன்பு, நாண் ஒப்புரவு, கண்ணோட்ட மிவைதம்மை யொருவ ருடை யாரேனும் (தீமையாதொன்றுஞ் சொல்லாமையென்னும்
இலக்கணத்ததாகிய) வாய்மை யவர் பக்கல் காணப்படாவழி யவரை அறிவுடையார் தம்முள்ளத்தினுள்
வைத்தெண்ணார். எண்ணாமைக் காரணத்தான் அவர், பெரியார் தம் இனத்திருத்தலை யிழந்தவராவர்.
ஆதலின் வாய்மைக்குணனும் பலர் தம்முடன் ஒத்து வாழ்தற்குச் சிறந்ததாவதோடு கருவியுமாகும்.
இக்கூறியவாற்றான்
ஒருவர் அன்புடையராய் நாண்பூண்டு, ஒப்புரவாற்றிக் கண்ணோட்டத்தோடு வாய்மைக்குணனுங்கொண்
டொழுகுவாராயின் அவர் எல்லாரானு மவாவப்பட்டாராய்ப் பல்லாருடைய நட்பும் பெற்று ஒற்றுமை
என்னும் உறுதிப்பொருளைப் பெறுவாராவர் என்பது தெளிவாகும். இனி யிப்பெற்றித்தாய ஒற்றுமை
யுண்மை யின்மைகளான் வரும் பயன் ஆய்வாம்.
ஒற்றுமை யுண்டாகச்
சேராப்பயன் எதுவுமின்றாம். ஒற்றுமைதான் முற்கூறிய அன்பு தொடக்கத்துக் காரணங்களானும்
இன்சொற் கூறல் நட்புப் பூணலாதி பிற வேதுக்களானு மாவதோர் விளைவாதலின், ஒற்றுமைக் குணனுடையார்,
பிறர் இடுக்கண் கண்டுழித் தம்மானியன்றன வியற்றி யவ் விடுக்கண்ணினைக் களைவாராகின் றனர்.
அவர்தம் செய்கையின் பயனுற்றார் நன்றியறிதற் குணத்தராயின் அவர்தம் உயிர்களுக் கிரங்குந்
தன்மைகண்டு அத்தகையாரோடு நட்பினராவர். இங்ஙனம் பலர் ஒரு வருக்குத் துணையாயவிடத்து ஒவ்வொருவரும்
அவருக்கு ஆக்கந்தருவினைகள் பலவற்றைச் செய்ய விழைவரன்றோ? அந்நிலையில் அவருக்கு வருவதோரிடுக்கணுமுண்டாகுமோ?
உண்டாமாயினும் துணையாயினார் வருந் துன்பத்திற்கே துன்ப மிழைப்பரன்றோ? இதனானன்றோ ஒருவர்
''உற்றநோய் நீக்கி யுறா அமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்'' (குற. பெ. துணை 2)
வேண்டுமென ஆசிரியர் திருவள்ளுவர் சொல்லிப் போந்ததூ
உம். வையாவிக் கோப்பெரும் பேகன் தன் மனையாள் கண்ணகியைத் துறந்தவிடத்து அவடன்னை அவன்
றன்னோடு வாழ்வித்தற்கருதிக் கபிலர், அரிசில் கிழார், பெருங்குன்றூர் கிழார், பரணர்
முதலினோர் முயன்றன ரன்றோ? பரணர்,
"மடத்தகை மாமயில் பனிக்குமென் றருளிப்
படாஅ மீத்த கெடாஅ நல்லிசைக்
கடாஅ யானைக் கலிமான் பேக!
பசித்தும் வாரேம் பாரமு மிலமே
களங்கனி யன்ன கருங்கோட்டுச் சீறியாழ்
நயம்புரிந் துறையுநர் நடுங்கப் பண்ணி
யறஞ்செய் தீமோ வருள்வெய் யோயென
இஃதியாம் இரந்த பரிசிலஃ திருளின்
இனமணி நெடுந்தே ரேறி
இன்னா துறைவி யரும்படர் களைமே' (புறம்.
145)
என்றதால் கண்ணகிதன் உற்றநோய் நீக்கிய தன்மை விளங்கக்
கிடப்பதாம்.
(கண்ணகி காரணமாக ஏனைப்புலவர் பாடிய செய்யுட்கள்புறம்
143, 144, 146, 147 - ல் காண்க)
மற்றும், புல்லாற்றூர் எயிற்றியனார், கோப்பெருஞ் சோழன் தன் மக்களோடு போர்புரிதற் கெழுந்தகாலத்து,
''மண்டம ரட்ட மதனுடை நோன்றாள்
வெண்குடை விளக்கும் விறல்கெழு வேந்தே!
பொங்கு நீ ருடுத்தவிம் மலர் தலை யுலகத்து
நின்றலை வந்த விருவரை நினைப்பிற்
றொன்றுறை துப்பினின் பகைஞரு மல்லர்
அமர்வெங் காட்சியொடு மாறெதிர் பெழுந்தவர்
வினைபுங் காலை நீயு மற்றவர்க்
கனையை யல்லை யடுமான் தோன்றல்
பரந்துபடு நல்லிசை யெய்தி மற்று நீ
யுயர்ந்தோர் உலக மெய்திப் பின்னும்
ஒழித்த தாய மவர்க்குரித் தன்றே
அதனால், அன்ன தாதலு மறிவோய் நன்றும்
இன்னுங் கேண்மதி யிசைவெய் யோயே
நின்ற துப்பொடு நிற்குறித் தெழுந்த
வெண்ணில் காட்சி யிளையோர் தோற்பின்
நின்பெருஞ் செல்லம் யார்க்கெஞ்சு வையே
யமர்வெஞ் செல்வ நீயவர்க் குலையின்
இகழுநர் உவப்பப் பழியெஞ் சுவையே
அதனால், ஒழுகதி லத்தைநின் மறனே வல்விரைர்
தெழுமதி வாழ்கநின் உள்ளம ழிந்தோர்க்
கேம மாகுநின் றாணிழன் மயங்காது
செய்தல் வேண்டுமா னன்றே வானோர்
அரும்பெறல் உலகத் தான்றவர்
விதுப்புறு விருப்பொடு விருந்தெதிர் கொளற்கே'' (புறம் - 213)
என இசைத்துப் போரெழாமற் காத்தனரென்னு மிவ்வரலாறு நோபுறாமை
முற்காத்ததனை விளக்கி நிற்பதன்றோ?
இவ்விரு
காட்டுக்களானும் கண்ணகி, கணவன் பேகனோடும், கோப்பெருஞ்சோழன், தன் மக்களோடும் ஒற்றுமைப்பாடுடையராய்
வாழ்ந்தமை யாராயுமிடத்து முறையே நேர்ந்ததும் நேரவிருந்ததுமாகிய துன்பங்கள் ஒழிந்தனவன்றோ?
இதனான் ஒற்றுமையுண்டாக வாகும்பயன் இன்பமே என்பது தேற்றம். மேல் ஒற்றுமை யின்மையான்
வரும்பயன் ஆய்வாம்.
ஒற்றுமை இல்லாவிடத்து
இருப்பனவும் இன்றாக முடியும். துரியோதனனுள்ளிட்டார் நூற்றுவருக்கும் தருமராதி ஐவருக்கும்
இடை நிகழ்ந்த நேயம் அறியாதார் யாரே? துரியோதனன் ஐவரையும் முடித்தற்குச் செய்த சூழ்ச்சிகள்,
உண்மையுணர்ந்து நடுநிற்பார், 'ஆ'ஆ!! பலப்பல என வுடல் நடுங்க வுள்ள முருக வரைத்திடுந்
தன்மையனவன்றோ? தருமரோ தந்நேரிளங்கோ வீமன்''......... அரவுய - த்தோன் கொடுமையினும் முர
சுயர்த்தோய்! வின தருளுக் கஞ்சினேனே'' எனக் கழறவும் காரணராக வன்றோ, திரௌபதி, தன் வண்டார்குழல்
குலைய மானங்குலைய மனங்குலையக் கோச்சபையிற் கோ! கோ! வெனச் சோருங் கொடியாகத் துகிலுரியப்
பெற்ற வந்தாள், வீமன் கதைமேற் கைவைக்க, விசயன் சிலைமேல் விழி வைக்க, இருவரும் தங்கருத்திற்
சினம் மூட்ட''....... முன்னம் பொறுத்தீ ரின்னம் பொறும்.... (வில்லி. சூது. 230) என்றனர்.
தருமர் தம் பொறுமை பினைக் கண்டேனும் துரியோதனன் ஒற்றுமையுடன் வாழ்தலை நினைத்தனனோ? இல்லையன்றே.
அன்னாரைக் கானகத்துட் புகுத்தியும், ஆண்டும் அவர்க்கு இடையூறன்றோ பல விழைத்தான். இழைத்த
இன்னல்களை யியல்பெனவே மதித்த தருமர், கழிக்கவிதித்தநாட்களிற் கானுறைந்து மீண்டு வந்து
தம் உரிமையினை முறையிற்பெற விழைந்த காலத்தேனும் துரியோதனன், ஈனமிலாவகைவந்தார் நம் துணைவர்
என விரங்கி அவர் தம் நாட்டினை யவர்க்குத்தர இசைந்தனனோ? அவன் இசைந்தது போர் தொடுத்தற்கன்றே?
தொடுத்த போரில், திரௌபதி யொருத்தி தன் குழலினை விரித்ததற் காரணத்தானே அந்தப்புரமாதர்
பலரும் தத்தம் குழல் விரிக்கப் பொறைக்கடவுள் தருமர் முன் கூற்றுவன்வாய் வீழ்ந்தான்
துரியோதனன் என்று ஒற்றுமையின்மையின் பயன் காட்டுதற்கு இலக்காக வன்றோ துரியோதனன் தன்
கிளையோடும் கெட்டான்.
மேல் இக்கட்டுரையின் நோக்கங் கூறுவாம்: -
யாதாமொரு
நாட்டின்கண் வாழும் பல வகுப்பினரும் ஒரு குடும்பத்தினரைப் போன்று ஒன்றுபட்டாலன்றி அந்நாடு
நாடாகாது. நம் மிர்திய நாட்டிலோ பலமுகமான கொள்கையினையுடைய வகுப்பினர் பலரிருக்கின்றனர்.
இப்பலரும் அடைய விரும்பும் பலனோ ஒன்றேயாகும். அவ்வொன்றனைப் பெறவே பல திறப்பட்ட கொள்கையினை
யுடையாரும் தத்தம் கொள்கையினையே வற்புறுத்துவாரா நிற்கின்றனர். ஒவ்வொருவருக்கும் தத்தம்
கொள்கையினை நழுவவிடுவதாவென்னும் எண்ணம் உண்டாவது இயற்கையே எனினும் ஒரு வகுப்பினைச்
சார்ந்தார் தம் கொள்கையினையே
பிறர்கொள நினைப்பாராயின் மற்றொரு வகுப்பினரும் தம்முடைய நோக்கத்தினையே பிறரும் தழுவுதல்
வேண்டுமென நினைத்தல் இயற்கையேயன்றோ? ஆதலின் அனைவருக்கும் ஒன்றாய முடிபு எதுவோ அதனை
முடிக்கக்கருதின் ஒவ்வொரு வகுப்பினரும் தம்முடைய கொள்கைகளைப் பிறரும் தம்முடன் கலத்தற்பொருட்டுத்
தளர்த்திக்கொள்ளுதல் இன்றியமையாததாகும். தளர்த்து தல் பன்னாளாகக்கொண்ட பழக்கவழக்கங்களின்
உரிமைக்கும், அடைந்து வரும் பலனுக்கும், பெருமைக்கும் கேடு அன்றோ என்று ஒருவகுப்பினர்
நினைப்பின், அவ்வகுப்பினர் எதிர் வகுப்பினரான் ஏற்பட்ட விளைவினை ஆய்ந்துணரும் உணர்ச்சியொழித்து
அவ்வகுப்பினரைத் தாக்குதல் வேண்டுமென்ற பேரவா வின் பெருக்கால் உள்ளனவும் இல்லனவும்
கூட்டித் தம்மினத்தவர் கையொலி கூட்ட அவ்வகுப்பினரைக் குறைகூறுதல் தானே எழுவதாகும்.
இவ்வெழுசசி, இரு திறத்தவர் செய்கையினையும் கண்டார்க்குக் கைகொட்டி நகையா தற் பயனளிப்பதோடு
அவ்விருதிறத்தாருக்கும், தமக்குக் கிடைத்த அப்பத்துண்டை தம்முள் ஒற்றுமையின்றி ஒரு
குரங்கின்பாற் கொடுத்துப் பாகம்பெற முற்பட்ட இரு பூனைகளுக்கு ஏற்பட்ட பலனையே யளிப்பதாகும்.
ஆதலின் தற்காலம் பெரும்பாலாருடைய உதவியைப் பெற்றவரின் பலாபலன்களை ஆய்ந்து, குறைகாணின்
அவற்றை நீக்குதற்கேற்றனசெய்து வகுப்புத் துவேஷத்தை விளைவிப்பனவற்றை வேரறக்களைந்து அனைவரும்
ஒன்றுபடின் அவ்வொற்றுமைதானே உறுதிப்பயனை யளிப்பதாகும்.
இறுகாறும்
கூறியவதனான் ஒவ்வொருவரும் அன்பாதிகுணங்களிற் சிறந்து, ஒற்றுமை உண்மை யின்மையின் விளைவினையாய்ந்து,
தத்தம் நலங்கருதாமல் ஓரினத்தவராக ஒற்றுமையுடையாராதல் வேண்டுமென்பதேயிக்கட்டுரையின்
நோக்கமாகும்.
N. திருவேங்கடத்தையங்கார், தமிழ்ப்பண்டிதர்.
C. R. C. High School, Purasawalkam.
ஆனந்த போதினி
– 1926 ௵ - பிப்ரவரி ௴
No comments:
Post a Comment