Saturday, August 29, 2020

 

கடவுளை நம்பினோர் கைவிடப்படார்

 

எவனொருவன் எல்லாம் வல்ல இறைவனும், ஏகநாயகனும், கருணா நிதியுமான பரமாத்மாவினிடத்தில் உண்மையான பக்தி வைக்கின்றானோ அவனுக்கு அப்பகவான் எவ்விதக்குறைவையும் வைக்காமல் அவன் கோரிக் கைகளையும் ஈடேற்றி வைக்கிறார் என்பதை அடியிற் கண்ட உண்மைச் சரித்திரம் கரதலாமலகம் போல் தெரிவிக்கிறது.

 

சுமட்றா தீவில் பாலெம்பரங் என்னும் துறைமுகப் பட்டணத்தில் இரண்டு வருஷங்களுக்கு முன் ஓர் மலாய்க்காரரும் அவருடைய பத்தினியும் வசித்துவந்தார்கள். இவர்கள் மிகவும் பரம ஏழைகளா யிருந்தாலும் தெய்வபக்தியிற் சிறிதும் குறைந்தவர்களல்ல. வறுமையின் கொடுமையால் அதிக கஷ்டத்துடன் ஜீவனம் செய்து வந்தார்கள். ஹிந்துக்களுக்கு காசியாத்திரை எவ்வளவு விசேஷமோ அதேமாதிரி இவர்களுக்கு மெக்கா ஸ்தலயாத்திரை மிகவும் அவசியம். சதிபதிகளிருவரும் தங்கள் ஜீவியகாலத்திற்குள் ஓர் முறையாவது அவ்விடம் போய்வரா விட்டால் தாங்கள் இவ்வுலகில் மானிட உடலெடுத்ததின் பிரயோசனம் ஒன்றுமில்லை என்று கருதி, தங்கள் எண்ணத்தை எவ்விதத்திலாவது முற்றுப் பெறச் செய்ய வேண்டுமென்று இரவும் பகலும் இடைவிடாது இறைவனைத் தொழுது வந்தார்கள்.

 

இம்மாதிரி சிலகாலம் சென்றபின் ஓர்நாளிரவு அம் மலாய்க்காரரின் கனவில் ஓர் பெரியவர் தோன்றி " உனக்கு அடுத்த வருஷம் ஒரு ஆண் குழந்தை பிறக்கும்; அக்குழந்தையால் உன் கோரிக்கை நிறைவேறும்' என்று சொல்லி மறைந்தார். பெரியார் அருளிய பிரகாரமே மலாய்க்காரரின் மனைவி மறுவருஷம் ஓர் ஆண்மகவை யீன்றாள். இக்குழந்தை இரண்டு சாணுக்கதிக நிகளமில்லை. பிறந்து இரண்டு தினங்களாவதற்குள்ளாகவே எழுந்து உட்காரவும், மழலைச் சொற்களைக் கழறவும் ஆரம்பித்தது. மறுதினம் எழுந்து நடக்கவும் தலைப்பட்டது. இந்தப் பேரதிசயத்தைக் காண திரள் திரளான ஜனங்கள் வந்து கூடினார்கள். வேடிக்கை பார்க்கவரும் ஜனங்களொவ் வொருவரும் தங்கள் தங்களாலியன்ற பொருளுதவியை அவ்வேழை மனிதனுக்குச் செய்யத் தவறுவதில்லை.

 

இம்மாதிரி ஒருவருஷம் சென்றது. குழந்தை பிறந்த பொழுதிருந்த வளர்ச்சியை விட ஓரங்குலங் கூட அதிகம் வளரவில்லை. புருடன் மனைவி இருவரும் தாங்கள் கோரிய இடம் போய்த் திரும்புவதற்குப் போதிய பணமும் சேர்ந்து விட்டது. இக்குழந்தை ஒரு நாள் காலையில் எவ்வித வியாதியாலும் பீடிக்கப்படாமலிருக்கையிலேயே திடீரென்று இம்மண்ணுலகை நீத்து விண்ணுல கடைந்தது. பெற்றோர்களடைந்த விசனத்திற் கோரளவில்லை. அதற்குச் செய்யவேண்டிய கருமங்களைச் செய்து முடித்த அதே இரவில் மலாய்க்காரரின் கனவில் முன்தோன்றிய பெரியவர் வந்து, ''இனி நீ அக்குழந்தைக்காக விசனப்படுவதை யொழித்து நீ கொண்ட கோரிக்கையை உன் பத்தினி சகிதம் நிறைவேற்று" என்று சொல்லி மறைந்தார். கண் விழித்ததும், பரம கிருபா நிதியின் பெருமையைக் கொண்டாடி, தானும் தன் மனைவியும் மறுநாளே தங்கள் பிரையாணத்தை ஆரம்பித்தார்கள். கடவுளிருப்பைச் சந்தேகிப்பவர்கள் என்றும் மீளாநரகிற்காளாவர்கள்.

 நா. மதுரைழத்துப்பிள்ளை.

74, அம்பாங்ஸ்திரீட், குவாலாலம்பூர்   

ஆனந்த போதினி – 1920 ௵ - டிசம்பர் ௴

 

No comments:

Post a Comment