உலக அநுபவம்
இக்கட்டுரையில் இருப்பது
மத தூஷணை யென நினைக்கவேண்டாம். எனக்கு மதத்தைப் பற்றி தெரிந்ததே வெகு கொஞ்சம் அப்படியிருக்க
நான் தூஷிப்பது எவ்வாறு? எதைத் தூஷிப்பது, எதைப்போற்றுவது என்று தெரிந்தா லல்லவோ? அந்தோ!
பாரத மாதாவே! உன் மக்களில் எத்தனை கோடிகள் என்னைப் போல் மதத்தின் தாத்பர்யத்தை யறியாமல்
ஏதோ மூட அபிப்பிராயங்களைக் கொண்டு காலங் கழிக்கிறார்கள்! ஆஹா! ஹிந்து மதம் பண்டைக்
காலத்திலிருந்து வழங்கி வருவது எவ்வளவு மேன்மையானது! எத்தனை சாஸ்திரங்கள், எத்தனை அரிய
பெரிய நூல்கள்! பிறருக்கு இம்மதத்தை அறிய முடியாது என்று நமது தேசத்தில் பலர் சொல்லிக்
கேட்கிறோம். ஆயினும் இப்படித் திருவாய் மலர்ந்தருளும் மஹான்களில் எவரும் ஊர் ஊராகச்
சென்று ஹிந்துமத மென்பது இப்படி, அப்படியென்று தெளிவாக எடுத்துரைக்க லாகாதா!
நிற்க, மேலே கோரியபடி,
தயவு செய்து நான் சொல்வதை பக்ஷபாதமில்லாமல் படிக்குமாறு மறுபடியும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வுலகம் தோற்றத்திற்குத் தட்டையாக விருந்தாலும் உண்மையில் உருண்டையாயிருக்கிறதென்று
சிறுகுழந்தைகளும் அறிந்திருக்கின்றன. இதன் வெளிப்பாகத்திலேயே நாம் வசிக்கிறோம். பூமிக்குள்
நெருப்பிருக்கிறதென்று நமக்குத் தெரியும். சிறிது தோண்டும் போதே உஷ்ணம் தெரிகிறது.
இன்னும் அதிகமாகத் தோண்டினால் உஷ்ணம் அதிகரிக்கின்றது உலகத்தின் வயிற்றில் நெருப்பு
எரிந்து கொண்டிருப்பதற்கு அத்தாக்ஷி எரி மலைகளே. இவை பூமியின் வயிற்றிலிருந்து அக்கினினயக்
கக்குகின்றன. ஒரு நெருப்புத் துண்டை எடுத்து வைத்தால் சிறிது நேரத்தில் மேலெல்லாம்
சாம்பல் மூடிக்கொள்கிறது. இச்சாம்பலை ஊதிவிட்டு வைத்தால், மறுபடியும் சாம்பல் தோன்று இப்படியாக
சில நிகிஷங்களில் நெருப்பு முழுவதும் அவிந்து குளிர்ந்து விடுகிறது. நமது உலகமும் இவ்வாறே
முதலில் முழுவதும் நெருப்பாக இருந்தது. அப்போது ஜீவராசிகள் எதுவும் தோன்றவில்லை. தோன்றுவது
எங்ஙனம்? அனேக ஆயிர வருஷங்கள் பொறுத்து பூமி சற்றே குளிர்ந்தது, சுற்று வட்டமாக நிற்க
நிழல் உண்டாயிற்று. பின்னும் பல ஆயிரமாண்டுகள் பொறுத்து சிறிது குளிர்ச்சியுண்டாயிற்று.
இப்போதும் சிறிது சிறிதாகக் குளிர்ச்சி வளர்ந்து கொண்டே போகிறது. முடிவில் பூமி முழுவதும்
குளிர்ந்து போய் மனிதர் சஞ்சரிக்க முடியாமற் போகும்,
ஆகாயத்தை இரவில்
பார்ப்போமாயின், நக்ஷத்திரமண்டலம் தோன்றுகிறது. எத்தனை கோடி நக்ஷத்திரங்கள்! இவைகளெல்லாம்
என்ன? ஒவ்வொன்று ஒவ்வொரு மஹானா? உலகத்தில் நல்ல நடத்தை யுடனிருந்தால் நக்ஷத்திர மாகிவிடலாமா?
அன்று. அன்று ஒவ்வொரு நக்ஷத்திரமும் ஓர் உலகம். நமது பூமியைப் போல் அதுவும் ஒன்று.
அவ்வளவு சிறியதாக விருக்கிறதே! ஆம்! அது அநேக ஆயிரம் மைல்களுக்கப்பால் இருக்கிறது.
சூரியனின் வெளிச்சம் நமக்கு வருவதற்கு ஏழரை நிமிஷங்கள் ஆகின்றன. சூரியனுக்கும் நமக்கும்
ஒன்பது கோடியே முப்பது லக்ஷம் மைல் தூரமிருக்கிறது. சூரியன் நமக்கு எவ்வளவு பெரிதாகத்
தோன்றுகிறது. நக்ஷத்திரம் சூரியனை விட தூரமாக இருக்க வேண்டும். சில நக்ஷத்திரங்களிலிருந்து
நமக்கு வெளிச்சம் மூன்று வருஷங்கள் ஆகின்றன. சில நக்ஷத்திரங்களிலிருந்து வெளிச்சம்
200 - வருஷங்கள் ஆகின்றன. சிலவற்றிலிருந்து வர, இரண்டு லக்ஷம் வருஷங்கள் ஆகின்றன! என்ன
ஈசனின் சக்தி!
இப்படியெல்லாம் இருந்தால் நக்ஷத்திரங்களில் சில சூரியனை விடப் பெரிதாக இருக்க வேண்டுமல்லவா?
அப்படியே சில பெரிதாக இருக்கின்றன. சூரியன் சில சூரியன்களுக்குக் கடுகு தேங்காய்க்
கிருப்பது போல் இருக்கிறதாம். ஆனால் நாம் நமது சூரியனைச் சுற்றும் நக்ஷத்திரங்களையே
கவனிப்போம். சூரியனை உலகம் சுற்றுகிறதென்று குழந்தைகளுக்கும் தெரியும். அதே போல் மற்ற
கிரகங்களாகிய சுக்ரன், குரு, செவ்வாய், புதன், சனி முதலியவும் மற்ற நக்ஷத்திரங்களும்
சூரியனைச் சுற்றுகின்றன. சூரியன் சுற்றுவதில்லையோ? நமது பிரபஞ்சம், அதாவது மேற் சொன்ன
கிரகங்கள் நக்ஷத்திரங்கள் உள்பட எடுத்துக் கொண்டால் சுற்றுவதில்லை. ஆனால் நமது சூரியனும்
வேறு சூரியனைச் சுற்றுகிறது. அச்சூரியன் தன் பரிவாரங்களோடு வேறு சூரியனைச் சுற்றுகிறது.
அப்படியே எல்லாம் சுற்றிக் கொண்டிருக்கின்றன. நமது பூமி எதன்மேல் நிற்கிறது. பூமாதேவி
யென்பவள் தோள் மீதா, அல்லது ஆதிசேஷனின் தலைமீதா, அல்லது கர்மத்தின்மேல் நிற்கும் யானையின்
மீதா? அப்படிக் கொன்று மிருப்பதாகத் தெரியவில்லை. இருந்தால் உலகத்தைச் சுற்றி வரும்
கப்பல்களில் செல்பவர் எவராவது கண்டுபிடித்திருப்பர். அவர்கள் இல்லா விட்டாலும் ஆகாய
விமானங்களில் சென்று உலகத்தைப் படமாகப் பிடிக்கும் எவராவது கண்டு பிடித்திருப்பர்.
இவர்களுக்கெல்லாம் தெரியாமல் இருக்கலாகாதா? தெய்வத்தை மனிதன் பார்க்கமுடியுமாவெனில்
அது விஷயம் எனக்குத் தெரியாது. என் மூளைக்கு அது எட்டவில்லை. உலகத்தின் இரகசியத்தை
அறியவே கண்களும் பூதக் கண்ணாடிகளும் இருக்க இவை யன்னியில் இருக்கக் கூடாதாவென்றால்
என்ன சொல்வது? அப்படியில்லா விட்டால் எப்படி உலகம் நிற்கிறது? அந்தரத்தில் நிற்க முடியுமா?
உலகத்திற்கும் மற்ற கிரகங்களுக்கும் ஒன்றை யொன்று இழுக்கும் சக்தியிருக்கின்றது. இச்சக்தியினாலேயே
அவை விழாமல் நிற்கின்றன. மரத்தினின்றும் விழும் பழம் கீழே விழுவானேன்? மேலே போகலாகாதா?
பூமி சுற்றுகிறதே. நாம் ஏன் கீழே விழுவதில்லை? நம்மைப் பூமி இழுக்கிறது. அதே மாதிரி
நக்ஷத்திரங்களில் ஒன்றாகிய பூமியும் மற்றவற்றை இழுப்பதோடு இழுக்கப்படுகிறது.
நமது பூமிக்கு ஒரு
சந்திரன் இருக்கிறது. சந்திரன் பூமியைச் சுற்றுகிறது. சந்திரன் ஏன் இவ்வளவு குளிர்ச்சி?
ஒருகாலத்தில் சந்திரனும் உஷ்ணமாகவே இருந்தது. இப்போது முழுவதும் பனிக்கட்டியாகி விட்டது.
அதன்மேல் தோன்றும் உருவம் என்ன? மானா, மனிதனா? அன்று, அன்று, மலைகள்! ஒருகாலத்தில்
நமது பூமியும் குளிர்ச்சியாகி ஜீவராசிகளற்றுப் போன பிறகு, வேறு உலகத்தினின்றும் பார்த்தால்
நமது இமயமலையும் அவ்வாறு தோன்றும் போலும்!
குருவுக்கு நான்கு
சந்திரர்களிருக்கின்றன. குரு நமது உலகத்தை விட மிகப் பெரிது. சூரியனுக்கு அடுத்தாற்போல்
அதுவே இப்பிரபஞ்சத்திலுள்ளவற்றில் பெரிய உலகம் சனிக்கு எட்டுச் சந்திரர்களாம்! நஞ்சுடமைதானறிந்து
நாகங்கரந் துறையும் அஞ்சாப் புறங்கிடக்கும் நீர்ப் பாம்பு என்றார்கள். சனி நம் மானிடரைப்
படுத்தும் பாடு நமக்குத் தெரியும், இவ்வளவு துஷ்ட சுபாவமிருந்தும்
இதோ இருக்கிறேன் என்று சொல்லி எட்டு சந்திரளைக் கொண்டு இடைவிடாது தன்னைப் பார்க்கும்படி
செய்கிறது போலும்! இக்கிரகங்களுக்கும் சீதோஷண ஸ்திதி, சமுத்திரங்கள், உயிருள்ள ஜந்துக்கள்
எல்லா முண்டு என்று கண்டு பிடித்திருக்கிறார்கள். ஜோஸியத்தாலல்ல, சாஸ்திர ரீதியாய்
- நமது ஆறு சாஸ்திரங்களாலல்ல, கணித ரஸாயன முதலிய சாஸ்திரங்களால் பல விஷயங்களை நமது
உலகத் தோற்றங்களைக் கொண்டே ஊகித்து அறியலாம். அவ்வுலகங்களிலும் நமது உலகத்திலிருப்பது
போல் இருப்பதால் அவை உலகத்திலுள்ள விஷயங்களைப் பெற்றிருக்க வேண்டுமென நிர்மாணிக்கலாம்.
ஆனால் உயிருள்ள ஜந்துக்கள் யாவும், நமது உலகத்திலிருப்பவை போல் இருக்க வேண்டியதில்லை.
அந்தந்த உலகத்தின் அமைப்பு சீதோஷ்ண ஸ்திதி முதலியவற்றிற்குத் தக்கபடி தேக அமைப்பும்
இருக்கும்.
நிற்க, ஒரு மரத்துண்டை.
ஜலத்தில் படும்படி வைத்திருப்பதாக வைத்துக் கொள்வோம். சில தினங்களில் அக்கட்டையில்
எத்தனை ஆயிரம் வெள்ளை எறும்புகள்! செல்லரிப்பதாகச் சொல்கின்றோம். இஜ்ஜீவ ராசிகள் எப்படி
உற்பத்தியாயின? பிரம்மாவோ வேறு சிருஷ்டிக் கர்த்தாவோ அல்லது விசுவாமித்திரரோ
"என்ன ஐயாயிரம் ஆத்மாக்கள் நிற்கின்றனவே, எப்படி இலைகளை தேகங்களில் நுழைப்பது?
எந்த தேசங்களும் காணோமே?" என்று அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்குங் சாலை “நல்லகாலம்!
அதோ ஜலத்தில் யாரோ கட்டைபோட்டிருக்கிறார்கள். இவற்றைச் செல்லாக மாற்றிவிடலாம்!” என்று
சிருஷ்டித்தார்களா? பூமியில் ஒரு பிணத்தைப் புதைத்து வைக்கின்றோம். சில தினங்களில்
பல்வேறு ஜந்துக்கள் உண்டாகி விடுகின்றன. இவற்ரையார் சிருஷ்டிக்கிறார்கள்? சிருஷ்டிகர்த்தா
எங்கே? எது கிடக்கிறது? யாரைப் புதைத்தார்கள்? எறும்புகள் கணக்குக் குறைந்து விட்டதே!
ஈக்கள் இறந்து விட்டனவே. வேறு ஈக்கள் வேண்டுமே. மழை காலம் நெருங்கி விட்டது. கொசுக்கள்
தயாராக வேண்டும். மூட்டுப்பூச்சிகள் இரண்டு லக்ஷம் தேவை," கணக்குப் பார்த்துக்கொண்டிருக்கிறார்?
அவர் செய்யாவிட்டால் அவருடைய குமஸ்தாக்கள் செய்யலாகாதா? குமஸ்தாக்கள் செய்யும் வேலைக்குத்
தானே எஜமானனுக்குப் புகழ்ச்சி எனலாம்.
ஒவ்வொரு வஸ்துவைக்
காணும் போதும் நமக்கு ஒருவித அனுபவம் உண்டாகிறது. ஒன்றைக் காணும்போது அருவருப்பு, ஒன்றைக்
காணும்போது சந்தோஷம், ஒன்றைக் காணும்போது பயம், ஒன்றைக்காணும் போது ஆச்சரியம், இன்னொன்றைப்
பார்க்கும்போது கோபம் இப்படியாகப் பலவிதமான அனுபவங்கள் உண்டாகின்றன. இவவளவு நாகரிகம்
முதிர்ந்த காலத்தில் இவ்வாறிருப்பின் ஆதிகாலத்தில் அனுபவம் குறைந்திருந்தபோது இவை பன்மடங்காகத்
தோன்றியிருக்கவேண்டு மல்லவா?
மலைகளும், ஆறுகளும்,
சுனைகளும், கடல்களும், அழகான பூஞ்சோலைகளும் மனிதர் மனத்தில் ஒவ்வோர் எண்ணத்தைக் கிளப்பாமலிருக்க
முடியாதல்லவா? மலையைப் பார்த்தால் பயமுண்டாகிறது. அதற்குள் எத்தனை குகைகள்? இக்குகைகளில்
எத்தனை துஷ்டமிருகங்கள்? இம்மரங்களில் என்னவிதமான பூதங்களிருக்கின்றனவோ? இக்கடலில்
என்ன இரைச்சல்? என்று இவ்வாறெல்லாம் தோன்றியிருக்க வேண்டும்.
இப்போது எந்த பொருளுக்கும்
உயிருண்டென்றே சொல்லவேண்டும். உயிரில்லாவிட்டால் அது அசையமுடியாது. கல்லிற்கு உயிரில்லை
யென்றால் என்ன அர்த்தம்? அது போட்ட இடத்தில் இருக்கிறது. ஒருவர் எடுத்தெறிந்தால்தான்
அசையும் மரங்கள் வளர்கின்றன. அவைகளுக்கு உயிரிருக்கவேண்டும், மலைகள் எவ்வளவு பராக்கிரம
முள்ளவைகளாகத் தோன்றுகின்றன? ஆகவே அவைகளுக்கும் உயிருண்டு, ஆறுகள் ஓடுகின்றன, ஆகவே
அவைகளுக்கும் உயிருண்டு. வானத்தில் மின்னலும் இடியும் தோன்றுகின்றன. இவைகளுக்கும் உயிருண்டு.
இம்மாதிரி ஒவ்வொரு இயற்கைத் தோற்றமும்யிருள்ள தென்றே அக்காலத்தில் தோன்றியிருக்கவேண்டும்.
சில நாட்களுக்கு முன்பு ரெயில் வண்டியில் நான் போய்க்கொண்டிருந்தபோது, வண்டி ஒரு ஸ்டேஷனில்
நின்றபோது ஒரு குழந்தை ''என் வண்டி நின்றுவிட்டது? கால்வலிக்கிறதா?" என்று கேட்டது.
குழந்தை யென்பது அனுபவமற்றது என்றர்த்தம். அக்காலத்துப் பெரிய குழந்தைகளும் அனுபவமில்லாததால்
தமக்குத் தோன்றியவற்றிற்கு உயிரைக் கொடுத்துவிட்டனர். இதனாலேயே கங்காதேவி, கோதாவரிதேவி,
கிருஷ்ணாதேவி, சமுத்திர ராஜன், வருணன், இந்திரன், கிரிராஜன் என்று பலவிதமான தேவதைகள்
தோன்றிவிட்டனர். உயிருள்ளவையா யிருந்தால் மனிதரைப் போலவே அங்க அடையாளங்கள் உள்ளவைகளாயிருக்க
வேண்டுமல்லவா? ஆனால் மனிதருக்கு அனேக காரியங்கள் கைகூடாமலிருக்கின்றன. ஆனால் தேவதைகளுக்கு
அவைகள் சாத்தியமாயிருக்க வேண்டும். அவர்களுக்குச் சக்தி அதிகம். ஆட்டிவைக்கும் சக்தியும்
உண்டு.
சில துஷ்ட மிருகங்களிருக்கின்றனவே?
அவைகளும் மனிதனுக்கு இன்னல்கள் உண்டாக்குகின்றன. ஆறுகள் பெருக்கெடுத்துப் பயிர்களைப்
பாழாக்கின் றன. மிருகங்கள் மனிதரைக் கொல்கின்றன. சமுத்திரங்கள் மனிதரை முழுக்கிவிடுகின்றன.
மலைகளில் சில ஆடுகள் காணாமற் போகின்றன. இவைகளெல்லாம் துஷ்ட சுபாவமுள்ளன. துஷ்டனைக்
கண்டால் எல்லோருக்கும் பயமே. இவற்றிற்கு ஏதேனும் சாந்தி செய்தாலொழிய மனிதனைச் சும்மாவிடாது.
சரி, இவைகளைத் தெய்வமாக்கித் தொழுவோம் என்று மனிதன் தனக்குள் யோசித்திருக்கவேண்டும்.
யானையைத் தொழ ஆரம்பித்தான் சிங்கத்தைத் தொழவாரம்பித்தான், மலைகளைத் தொழ ஆரம்பித்தான்,
ஆறுகளைத் தொழ ஆரம்பித்தான், பூமி, அக்னி, ஆகாயம் இவற்றையும் பூஜித்தான். இவைகளுக்கு
மாதந்தோறும், வருஷந்தோறும் பூஜைகள் செய்து வந்தான். இவைகளைத் தொழுவதற்குச் சிறு கோவில்களைக்
கட்டியும் வைத்தான்.
நிற்க, ஒரு மனிதன்
இறந்துவிட்டான் என்று வைத்துக் கொள்வோம். “என்ன! நம்முடன் ஓடியாடித் திரிந்து, உண்டு
உடுத்துவந்த ஒருவன் திடீரென்று கீழே விழுந்து, எழுந்திருக்கவில்லை யென்றால் என்ன ஆச்சரியம்?
இது புதிய அனுபவமாயிருக்கிறதே' என்று யோசித்திருப்பான். இம்மனிதனுடைய தேகம் இங்கேயிருக்கிறது.
ஆனால் நம்மைப்போல் என் ஓடமுடியவில்லை? ஆ! இப்போது தெரிந்தது! மனிதனுடைய தேகத்தை யாட்டி
வைப்பதற்கு ஒரு சக்தியிருக்க வேண்டும். இந்தச் சக்தி அவனிடம் இல்லாவிட்டால் அவன் எதுவும்
செய்யமுடியாது. இச்சக்தி அவனைப் பிரிந்துவிட்டால் அவன் இறக்கிறான் போலும்! சரி, இச்சக்தி
எது? நமது கண்ணிலிருக்கும் மணியா? இருக்கலாம். ஏனெனில் இறந்தவன் கண்கள் மூடிக்கொண்டன-
அதாவது-மணிகள் கிளம்பி விட்டன வென்று சொல்லாம். அல்லது இச்சக்தி மூச்சுக்காற்று என்று
சொல்லலாம். கீழே விழுந்தவுடன் இம்மூச்சுக்காற்று நின்றுவிடுகிறது. அல்லது இச்சக்தி
மனிதனுடைய சாயலாயிருக்கலாம். அது சதா மனிதனுடன் போய்க்கொண்டேயிருக்கிறது. கீழே விழுந்துவிட்டால்
மறைந்துபோகிறது. ஒவ்வொரு தேசத்தின் புராணங்களிலும் பிராணா, ஆத்மா, சாயல், மூச்சுக்காற்று,
கண் மணி இவற்றை ஒரே பொருளுடையனவாய்க் கூறப்பட்டிருக்கிறதென நிபுணர்கள் ஆராய்ச்சி மூலமாகக்
கண்டு பிடித்திருக்கிறார்கள்.
இப்போது இறந்தவனுடைய
பிராணன், எதுவாயிருந்தாலும், எங்குப் போயிருக்கக்கூடும்? இரவு தூங்கும்போது கனவுகளில்
இறந்தோரைக் காண்பது சகஜம். நாம் ஒரு விஷயத்தைப்பற்றியே அதிகமாகச் சிந்தித்துக்கொண்டிருந்தால்
கனவில் அதைப்பற்றி ஏதேனும் தோன்றுவது அனுபவம். இறந்தோர் கனவில் தோன்றியவுடன்,
"இது ஒரு புதிய உலகம் போலிருக்கிறது. இறந்தோருடைய ஆத்மாக்கள் வசிக்கும் உலகம்போலும்.
அவ்வுலகத்தில் நம்முடைய ஆத்மா போனாலொழிய இறந்தோருடைய ஆத்மாக்களுடன் எப்படிச் சம்பாஷிப்பது?
ஆகையால் நாம் தூங்கும்போது நம்முடைய தேகம் படுத்த விடத்திலிருந்தாலும், நம்ம்முடைய
ஆத்மா திரிகிறது'' என்ற முடிவுக்கு வருவது இயற்கை.
ஆத்மாக்கள் வேறு
உலகில் வசித்து வந்தால் அவைகளுக்கு ஆகாராதிகள் யார் கொடுப்பார்கள்? அவ்வுலகில் வேட்டையாடி
உணவு சம்பாதிக்கக்கூடுமோ என்னவோ? எதற்கும் நாம் அவர்களுக்கு வேண்டிய உணவைக் கொடுத்துவிடுவோம்
என்று வருஷத்தில் ஒருதினம் இறந்தோரைக் குறித்து திவசம் படைத்தல் ஏற்பட்டது. சில தேசங்களில்,
சில திறத்தாரில் மனிதன் இறந்து புதைக்கும்போது அவனுடைய விண்ணுலகப் பிரயாணத்திற்கு வேண்டிய
சம்பாரங்கள் அடக்கம் செய்து வருகிறார்கள். இறந்தோர் தெய்வங்கள் என்னும் அபிப்பிராயம்
உண்டாவது சகஜமே.
ஒரு கிராமத்தை
எடுத்துக்கொள்வோம். அதில் அனேக மனிதர்களிருக்கிறார்கள். இருந்தாலும் அதில் எத்தனைபேர்
தலைவராக இருப்பதற்கு யோககியதை யுள்ளவர்கள்? ஒருவனிருப்பதும் துர்லபந்தான். அப்படி பொருவன்
இருந்தாலும் அவனிடங் கீழ்ப்படிந் திருப்பதற்கு மற்றோர் சம்மதிப்பது கஷ்டம். ஒவ்வொரு
மனிதனுக்கும் தான் தலைவனாக இருக்கவேண்டுமென்ற ஆசையிருக்கிறது. இன்னொருவன் தலைவனென்றால்
பொறாமை. ஆகவே எல்லோருக்கும் விருப்பமுள்ளவனா விருந்தால் அவனே அப்பதவிக்குகந்தவன். ஆதிகாலத்திலிருந்த
அரசர்களெல்லோரும் சண்டையிலோ, சூழ்ச்சியிலோ மற்றவர்களை விடக் கெட்டிக்காரராகவிருந்ததால்
தேர்ந்தெடுக்கப்பட்டதாகப் புராணங்களில் கூறப்படுகிறது. இவ்வீரர்கள் தம்முடைய பராக்கிரமத்தால்
எல்லோரையும் அடக்கிவந்தனர். நமது தேசத்தில் புராண அரசர்கள் திக்விஜயஞ் சென்று மற்ற
அரசர்களை யடக்கிவந்ததாகப் படிக்கிறோம். இவ்வரசர்களிடத்தில் குடிகளுக்கு அன்பு, பக்தி,
பயம் முதலியன உண்டாவது இயற்கையே. ரகு வம்சத்தில் திலீபனிடத்தில் வேலைக்காரர்கள் நெருங்கியும்
நெருங்காமலும் ஆதரவுடனும் பயத்துடனும் பழகியதாகப் படிக்கிறோம். எப்படி சமுத்திரத்திலுள்ள
ரத்னங்களால் வசீகரிக்கப்பட்டும், துஷ்ட ஜல ஜந்துக்களால் பயமுறுத்தப்பட்டும் ஜனங்கள்
அதை நெருங்கியும் நெருங்காமலுமிருக்கிறார்களோ அப்படி இவ்வரசனிடம் கடந்து கொண்டார்களாம்!
இக்காலத்தில் கோவில் தர்ம காத்தா, மணியகாரர் முதலியோர் வீடுகளைத் தாண்டிச் செல்லும்போது
கோவில் வேலைக்காரரான மேளக்காரர் முதலியோர் வீட்டிற்கு ஒரு கும்பிடுபோடுவதைப் பார்க்கிறோம்
அவவளவு மரியாதைபோலும்! இக்காலத்திலும் அரசரைக கண்டால் அனேகருக்கு ஓர் உற்சாகம். ராஜதரிசனம்
என்பது தெயவதர்சனத்திற்குச் சற்று குறைவானதாக நினைக்கப்படுகிறது. அரசனுக்காக உயிரையும்
கொடுக்கச் சித்தமாயிருந்த த்தவாகளைப்பற்றிப் படிக்கிறோம். அன்னையும் பிதாவும் முன்னறி
தெய்வம என்றாலும் அரசனிடமுளள பகதியில் கால்பாகமும் அன்னை பிதாவிடமிருக்காது. அதுவும்
முற்காலத்தில் கேட்கவேண்டுமா? அரசனுக்கு ஊர்சமாசாரம் தெரியாமல் ஒவ்வொன்றிறகும் மந்திரி,
நமது ராஜ்யததில் மழைபெய்கிறதா, குடிகள் சுகமா, வேதியர் தமது விதிகளைச் சரிவரச் செய்து
வருகிறார்களா, சிற்றரசர்கள் கப்பங்கட்டி வருகிறார்களா, நமது அரண்மனையில் யாவரும் சுகமா,
நான் தவறாமல் சாப்பிடுகிறேனா?" என்று கேட்டுக்கொண்டிருந்ததாக நாடகங்களில் படிக்கிறோமே
அப்படி யிருந்தால் 'அரசன்' என்றால் மதிப்புக்கான். அதிலும் வாள் தவமாகவே பராக்ரம சாலியாக
விருந்தால் எவ்வளவு அன்பும் பக்தியும் ஜனங்களுக் கிருக்கவேண்டும்? இவ்வரசர்களைப் பற்றிக்
கவிகள் பாடுவதும், சரித்திரங்கள் எழுதுவதும் இயல்பே. அவர்களைப் பல விதமாகப் போற்றுவது
ஆச்சரியமல்ல. அவர்களுடைய செய்கைகளைத் தம் மனம் போனபடி புகழ்ந்து, வியந்து, ஒன்றைப்
பததாக்கிக் கூறுவதும் ஆச்சரியமல்ல. அவ்வாசர்கள் இறந்தபின் இவர்களைத் தெய்வங்களாக்குவது
ஓராச்சரிய மாகாது. அனேக கிராமதேவதைகள் ஒரு காலத்தில் அரசர்களாகவோ அல்லது வேறு முக்கிய
மனிதர்களாகவோ இருந்தவர்கள் என்பதில் சந்தேகமில்லை. சென்ற அக்டோபர் மாதம் 2-ம் தேதி
காந்தியடிகளின் பிறந்த தினக் கொண்டாட்டத்தின் போது அவருடைய படத்திற்கு கோவில் விக்கிரகம்
போல் அலங்காரஞ் செய்து ஊர்வலம் நடத்தியது எல்லோருக்கும் நினைவி லிருக்கலாம். உயிரோ
டிருப்பவருக்கு இவ்வளவு மரியாதை யென்றால் இறந்தோருக்கு, அதுவும் நாட்கள் செல்லச் செல்ல
எவ்வளவு மரியாதையிருக்க வேண்டுமென்பதை யூகித்துக் கொள்ளலாம். தூரவிருக்கும் பொருள்களே
நமக்கு வெகு அதிசயமாகத் தோன்றுகின்றன. ரவீந்திரநாதர் அமெரிக்கா சென்றபோது ஒரு மனிதன்
“நீர் ஏன் இங்கு வந்தீர்? நீர் தூர விருக்கும் வரையில் உமமைப் பிரமாதமாக நினைத்திருந்தேன்.
இப்போது என் அபிப்பிராயம் மாறிவிட்டது'' என்றானாம். காந்தியடிகளைக் கூட அமெரிக்காவிற்குச்
செல்ல வேண்டாமென்று அனேகர் இந்தக் காரணத்திற்காகத் தடுத்து விட்டார்கள். இறந்த பின் அவர்களுடைய
வீரச்செயல்களைப் பற்றிப் பல விதமாகக் கேள்விப்பட்டு ஜனங்கள் அவர்களைப் போற்றித் தெய்வங்களாக்கிவிட்டதால்
அரசர்கள், வீரர்கள், தீரர்கள் முதலியோர் கிராம தேவதைகளாகி விட்டார்கள் என்பது அனேக
நிபுணர்களுடைய ஆராய்ச்சி.
கிராம தேவதைகளுக்குப்
பூஜைகள் செய்வதோடு அவ்வப்போது காலப் போக்கிற்காக, அத் தேவதைகளைப்பற்றிக் கதைகளைச் சொல்வது
இக்காலத்திலும் சகஜமாக விருக்கிறது. ஒரு காலத்தைவிட அடுத்த தலைமுறையில் இன்னும் அதிகமாகச்
சேர்த்து இக் கதைகளைச் சொல்வதும் சாதாரணமே. உதாரணமாக தெய்விக கதையாகிய நாதனார் சரித்திரத்தை
யெடுத்துக்கொள்வோம். இக் கதையினால் நமக்கு என்ன நற்புத்தி புகட்டப்படுகிறது? கடவுளுக்கு
ஜாதி மதம் முதலிய வித்தியாசங்கள் கிடையாது. எவ்வளவு ஈன ஜாதியனாயினும் உண்மை பக்தனாயின்
முக்தி பெறலாமென்று சொல்லவேண்டியது தான். ஆனால் இப்போது இந்நாடகத்தில் எவ்வளவு சேர்த்திருக்கிறார்கள்?
வேதியர் தனியே வந்தால் போதாது. அவருடைய மனைவியும் வரவேண்டும். நகை வாங்கவேண்டும். வீட்டில்
விவாக சமாச்சாரம் பேசவேண்டும். வேதியர் தாயாரோ தமக்கையோ அவருடைய மனைவியோடு மனஸ்தாபப்படவேண்டும்.
இவையெல்லாம் எதற்காக? ஜனங்களுக்கு உற்சாகமும் களிப்பும் உண்டாவதற்கு இதெல்லாம் அவசியமாம்!
நமது தேசத்தில்
மாத்திரமல்ல. இங்கிலாந்திலும் இந்த நாகரிக காலத்திலும் ஒரு வினோத சம்பவம் நடந்தது.
சென்ற வருஷம் இமய மலைமீது ஏறுவதற்காக, ஸ்மித் (Smythe) என்பவர்
வந்திருந்தார். 26000 அடிக்கப்புறம் போக முடியாமல் திரும்பிவிட்டார். ஆனால் தான் பார்த்த
காட்சிகளையும் வினோதங்களையும் படம் பிடித்துக்கொண்டார். இங்கிலாந்து சென்ற தும் சினிமா
படக் காட்சியில் காட்ட விரும்பினார். ஆனால் எக் கம்பெனியாரும் அதைக் காட்ட ஒத்துக்கொள்ளவில்லை.
"இருத மலைகளும் ஆறுகளும், பனிக்கட்டி மலைகளும் அழகாயிருக்கின்றன. ஆனால் இதில்
காதல் விஷயமெதுவுமில்லை. ஆகையால் இதைப் பொது ஜனங்கள் ஆதரிக்கமாட்டார்கள்'' என்று சொல்லிவிட்டார்களாம்.
இயற்கை விநோதங்களைத்தான் எல்லோரும் படம் பிடிப்பார்கள். காதல் விஷயங்களை அவற்றிற்குள்
யார் புகுந்து படம் பிடிக்க முடியும்? பொது ஜனங்களுக்கு அம்மாதிரி எண்ணமில்லாவிட்டாலும்
மற்றவர்கள் செய்யும் ஆர்ப்பாட்டத்தில் எண்ணமுண்டாய் விடும் போலும்! உண்மையோடு கற்பனா
சக்தியையும் கலப்பதால் எவ்வளவு விபரீதங்கள் உண்டாகின்றன யென்பதைக கவனிப்பதில்லை. உண்மையே
அனேக சந்தர்ப்பங்களில் கட்டுக் கதையைவிட வினோதமாக விருககிற தென்பது பிரத்தியக்ஷம்.
இங்கிலாந்தில் அரசு புரிந்த கிராம்வெல் என்னும் போர் வீரனுடைய முகம் பிளவுபட்டும் விகாரமாகவிருக்குமாம்.
அவன் சித்திரத்தை எழுத ஒரு நிபுணன் வந்தபோது “என் உருவம் எப்படியிருக்கிறதோ அப்படியே
எழுதவேண்டும். ஒரு காயத்தையோ நெற்றிக் கோட்டையே. விட்டுவிட்டாயானால் ஒரு பைசாவும் கொடுக்கமாட்டேன்''
என்றானாம்.
புத்தகங்களில் எழுதியிருப்பதையே
மாற்றிவிடுவதென்றால் முன் காலத்தில் வார்த்தையில் மாத்திரம் இருந்தபோது எவ்வளவு மாறுதல்
ஏற்பட்டிருக்கவேண்டும். நமது புராணங்களும் சரித்திரங்களும் இம்மாதிரி கதைகளே. அனேக
அற்புதங்களையும் சோத்து ஒரு கதையாக எழுதிவிட்டிருக்க வேண்டும். இப்போதுகூட, பாகவதர்கள்
புராணங்களை யெடுத்துச் சொல்லும்போது தமக்குத் தோன்றியவாறும், சபையோர்களின் நோக்கத்தை
யொத்தும் கதைகளைச் சொல்கிறார்கள்.
சிறு குழந்தைகள்
தாம் படிக்கும் கதைகளை உண்மையாகவே கருதுகின்றன. அவைகளுக்கு நீதிகள் கற்பிக்கக் கதை
ரூபமாகச் சொல்வது வழக்கம். ஆதிகாலத்திலும், பெரிய விஷயங்களைப் போதிக்க, ககைகளை உண்டு
பண்ணியிருக்க வேண்டும். 'பொய் பேசலாகாது' என்றால் ஞாபகமிருக்காது. ஆனால் ஹரிச்சந்திரன்
கதையைக் கட்டிச் சொன்னால் எல்லோருக்கும் கும். கடவுளிடம் பக்தி யிருந்தால் அவர் கைவிடமாட்டார்
என்பதை ஞாபகத்தில் வைக்க மார்க்கண்டேயர் சரித்திரமும் பிரஹல்லாதன் சரித்திரமும் தேவையாயிருக்கின்றன.
இச்கதைகளெல்லாம் உண்மையா அல்லவா என்பதை இப்போது கருதச் சமயமல்ல. நீதியைச் சுலபமாகப்
புகட்டவே கற்பித்தவைகளாக வைத்துக் கொள்ளலாம். அப்படித் தான் சிற்சில கதைகள் உண்கையாகவே
நடந்திருந்தபோதிலும் கதையைச் சொல்பவருடைய சாமர்த்தியத்தினால் பல விஷயங்கள் சேர்க்கப்பட்டு
வெளிவரும். ஆக வே, சரித்திரம் புராணம் முதலியவற்றை அப்பட்டம் உணமையெனக் கருதல் தவறு.
புத்தகங்களிலிருப்பதனாலேயே இவைகளெல்லாம் உண்மையென்பது சிலருடைய கக்ஷி. இங்கிலாந்தில்
இருஏறு வருஷங்களுக்கு முன் சில வஞ்சனைக்காரரிருந்தார்கள். அவர்கள் பண்டைக் காலத்துக்
கவிகள் எழுதிய பாட்இக்களைப்போல் எழுதிவிட்டு, பழைய பாட்டுக்களைக் கண்டுபிடித்தோம் என்று
எல்லோரிடமும் சொல்லிவிட்டார்கள். அதைக் கேட்டு அனேகர் ஏமாந்து போய் விட்டார்கள். அனேக
வருஷங்கள் கழிந்த பின்னரே உண்மை விளங்கிற்று. இதுபோல் நமது தேசத்திலும் நடந்திருக்கலாம்.
இவ்விஷயத்தில் நிபுணர்கள் ஆராய்ச்சி செய்ய வேண்டியது அவசியம்.
தற்காலம் வழங்கி
வரும் நாடகங்களில் உடைகளும் சாமான்களும் உபயோகிக்கப்படுகின்றன என்று சிலர் குறை கூறுகின்றனர்.
அதாவது நாடகம் எக்காலத்தைக் குறிக்கின்றதோ அக்காலத்தின் நடையுடை பாவனைகளையே அனுசரிக்க
வேண்டுமென்பது அவர்களுடைய கொள்கை, ஆனால் எக்காலத்தில் எப்படி யிருந்ததென்று யாருக்குத்
தெரியும்? புத்தகங்களைக் கொண்டே இவற்றை நிர்ணயிக்க வேண்டும். அல்லது பூமியில் தோண்டி
வெளிப்படுத்தும் சாமான்களைக்கொண்டு கண்டு பிடிக்கலாம். நமது தேசத்தில் அங்கங்கே இம்மாதிரி
பூமியைத் தோண்டி ஏதோ வெளிப்படுத்துகிறார்களென்றாலும் இன்னும் எவ்வளவோ பாக்கியிருக்கிறது. ஆகவே,
இப்படி யிருந்திருக்கவேண்டும், அப்படி யிருந்திருக்க வேண்டும் என்று தமக்குள் ஒருத்தேசஞ்
செய்து கொண்டு நாடகத்தை நடத்தவேண்டி யிருக்கிறது. அதே மாதிரி ஐயாயிரம் வருடங்களுக்கு
முன் நடந்த விஷயங்களைக்குறித்து இரண்டாயிரம் வருஷங்களுக்கு முனனிருந்தவர்கள் தங்கள்
காலத்திலிருக்கும் விஷயங்களையே அக்காலத்திலிருந்ததாக கற்பனை செய்து விட்டிருக்கலாம்.
ஆராய்ச்சி செய்யும் நிபுணர்கள் பழைய புத்தகங்களை யெல்லாம்மே படிக்கும் போது ஒவ்வொரு
விஷயத்தையும் கூர்ந்து கவனித்துப் பக்ஷபாதமில்லாமல் தம்முடைய தொழிலைச் செய்யவேண்டும்.
உண்மையே நமக்கு தாக்ஷண்யத்திற்காகவோ, மதக் கொள்கைக்காகவோ நாம் ஒன்றைச் செய்யப்புகின்,
அநாகரிக முள்ளவர்களென்று பெயர் பெறுவோம். ஏற்கனவே, கீழ்நாட்டு ஜனங்கள் ஒவ்வொன்றையும்
பிரமாதப்படுத்திப் பொய்க்கதைகளையுஞ் சேர்த்து புத்தகங்கள் எழுதியிருக்கிறார்களெனப்
பெயர் வந்திருக்கிறது. நாம் ஆராய்ச்சி செய்யும்போது சிறிதும் பயமில்லாமல் உண்மையென்று
நன்கு புலப்படும் சத்தை மாத்திரம் எடுத்துக் கொண்டு மற்ற குப்பைகளை உதறித் தள்ள வேண்டும்.
உதாரணமாக ஜாதிபேதம்
ஆதிகால முதல் வழங்கி வந்ததென்று சிலர் அபிப்பிராயப்படுகிறார்கள். சிலர் மத்தியில் ஏற்பட்டதே
யொழிய ஆதியிலில்லை யென்கிறார்கள். இவ்விஷயத்தில் ஆராய்ச்சி செய்வதில் தவறில்லை. ஆனால்
ஆராய்ச்சி செய்து முடிவிற்கு வந்தாலும், தற்காலத்திற்கு இவ்வேற்று
மைகள் அவசியமா என்று கருதவேண்டும். மெக்காலே (Macaulay) என்னும் பார்லிமெண்டு அங்கத்தினர்
ஒருவர் சென்ற நூற்றாண்டிலேயே இவ்விஷயத்தைப்பற்றிச் சொல்லியிருக்கிறார். "ஒரு தலைமுறையில்
நல்லதாயிருப்பது அடுத்த தலைமுறையிலும் நல்லதாயிருக்குமென்று ஒருபோதும் சொல்லக்கூடாது.
ஒவ்வொரு தலைமுறையிலும் அபிப்பிராய பேதங்கள் உண்டாகின்றன. இன்றைக்கு உண்மையென நினைத்திருர்
ததை நாளைய தினம் பொய்ப்பித்துவிடலாம். ஆதலால் நாம் விதிக்கும் சட்டங்களைத் தலைமுறை
தலைமுறையாக நம்முடைய பிள்ளைகளும், பேரன்களும், அவர்களுடைய பேரன்களுங்கூட வேண்டுமென்பது
மதியீனம் என்றார். அப்படி ஒரு தலைமுறைக்கும் அடுத்த தலைமுறைக்கும் இவ்வளவு மாறுபாடுகளிருந்தால்
இப்போதைக்கும் ஐயாயிரம் வருஷங்களுக்கும் எவ்வளவு வித்தியாசமிருக்கதேண்டும்? அக்காலத்தில்
நன்மையானது இக்காலத்தில் தீமையாயிருக்கலாம். இக்காலத்தின் நன்மையென்பது அவர்களுக்குத்
தெரியாமலே யிருக்கலாம். அறிவு வளர்கின்றதே யொழிய தேய்வதில்லை.
ஆராய்ச்சி செய்பவர்களுடைய
பொறுப்பைப்பற்றி முன் கட்டுரையில் சொல்லப்பட்டது. தம்முடைய கொள்கைகளைப் பற்றியோ, மத
போதனைக்கு விரோதமாகவோ இருக்கிறதென்று ஒரு விஷயத்தைத் தள்ளிவிடக்கூடாது, அறிவு வளர்ந்து
கொண்டே போகிறறது. அறிவின் மூச்சுக் காற்று உண்மை, தாக்ஷண்யமல்ல. இத்தனை வருஷங்களாக
விருக்கின்றதே அல்லது இத்தனை பேர் உண்மையெனக் கருதுகிறார்களே யென்றாவது ஒரு சங்கதியை
உண்மையென நிர்ணயிக்கக்கூடாது. பூர்வம் உண்மை யென்பது இப்போது உண்மை யில்லை யென்று சொல்வதால்
அக்காலத்தி லிருந்தவர்கள் முட்டாள்க ளென்பதில்லை. அப்படிச் சொல்வதால் நாம் தான் முட்டாள்களாவோம்.
இன்னொன்று இப்போது
ஒரு விஷயத்திற்கு அர்த்தம் அந்தக் காலத்திலும் தெரிந்திருந்ததெனச் சொல்வது
சிலருடைய வழக்கம். இக்காலத்தில் 'ஏரோப்ளேன்' இருக்கிறதென்றால் அக்காலத்திலும் இவையிருந்தன
வென்று இச்சாரார் வற்புறுத்துகின்றனர். இது என்ன மடமை! ஏரோப்ளேன் செய்யும் விதம் அதைப்பற்றிய
இரசாயனம் முதலியவை இருபதாம் நூற்றாண்டில் கண்டு பிடிக்கப்பட்டு இன்னும் சீர்திருத்தமடையவில்லை,
விபத்துக்கள் அடிக்கடி நேருகின்றன. அப்படியிருக்க, பல்லாயிர மாண்டுகளுக்கு முன் விமானங்கள்,
இறக்கைக் குதிரைகள் கட்டிய வண்டிகள் இருந்தன வென்றால் யார் நம்புவார்கள்? அல்லது இவைகளைச்
செய்யும் விதத்தை ஜனங்கள் மறந்துவிட்டனரா? மறந்துவிட்டனராயின், இவைகள் இருந்ததை மாத்திரம்
எப்படி யறிவார்கள்? மாதிரிக்காவது, மியூஸியத்தில் வைப்பதற்கு ஒரு விமான மிருக்கக்கூடாதா?
பிள்ளைகள் தம்முடைய பள்ளிக்கூடங்களைப் பற்றியும், பெற்றோரைப்பற்றியும் பெருமை பேசுவது
வழக்கம். ஆராய்ச்சி செய்பவர்கள் உண்மையை நாடினவர்கள். கேவலம் பிள்ளைகளில்லை யாதலால்
அவர்கள் டம்பமாய்த் தம்முடைய முன்னோர்களைப் பேசலாகாது. புராணங்களெல்லாம் வாசிப்பதற்கு
இன்பகரமா யிருக்கலாமேயன்றி பிரமாண மெனக்கருதலாகாது.
நமது தேசத்தில் சிலருடைய
வழக்கமென்னவெனில் இக்காலத்தை விட முன்காலத்தில் பயிற்சி அதிக மென்பது. உதாரணமாக, இக்காலத்துப்
படிப்பு என்ன பிரயோஜனம்? அக்காலத்தில் இன்னும் எவ்வளவு அரிய விஷயங்கள் தெரியும் தெரியுமா?
என்கிறார்கள். ஆம், அக்காலத்துப் படிப்பு காலத்தை விட மிக மிகக் குறைவாகவே யிருந்தது!
இருபது முப்பது வருஷங்களுக்கு முன்னிருந்த எப்.ஏ., பி. ஏ., வகுப்பு பரீக்ஷைக் கேள்விகளைப்
பார்த்தால் இப்போது நகைப்புத்தான் உண்டாகிறது. அக்காலத்தில் இலக்ககணத்தை மாத்திரம்
வற்புறுத்தி மண்டையை உடைத்து உள்ளே புகுத்துவது போல் கற்பித்து வந்தார்கள். அக்காலத்தில்
பாட அக்காலத்தில் பாட புத்தகங்கள் தவிர வேறு விஷயங்கள் மாணவர்களுக்குத் தெரியாது. அதையே
நெட்டுருப்போட்டு இப்போதும் ஒன்றிரண்டு வரிகளை ஒப்பித்தால் பெரிய பாண்டித்தியமென நினைத்திருக்கிறார்கள்.
பத்திரிகைகள் படித்த மாணவர்கள் நூற்றுக்கு இரண்டு மூன்றுகூட தேறுவது அரிது என்று கேள்வி.
இக்காலத்திலோ அப்படியல்ல. பொதுவிஷங்க ளெத்தனையோ மாணவர்கள் அறிகிறார்கள். உலக அனுபவ
மதிகமாகிறது. இதுவே யல்லவோ கல்வித் தேர்ச்சி. ஒன்றிரண்டு புத்தகங்களைப் படிப்பது உலக
அனுபவத்தில் எப்படிப்போதும். உலகத்தின் மற்ற பாகங்களில் என்ன நடக்கிற தென்பதை யறியாது
வெறும் பழம் புத்தகத்தை ஓதினால் யாதுபயன்? இக் காலத்து பீ. ஏ. அக்காலத்து மெட்ரிக்
குலேஷனுக்குச் சரியென்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். இதை தலைகீழாக்கினால் சரியாயிருக்கலாமெனத்
தோன்றுகிறது.
இதுபோலவே அனேகர்,
நமது முன்னோர்கள் இப்படி, அவர்கள் வானத்தை வில்லாய் வளைப்பார்கள், மணலைக் கயிறாய்த்
திரிப்பார்கள் என்று சொல்வது வழக்கம் சுத்த மடமை. (இதை வாசிக்கும் பெரியோர்கள் என்னை
மன்னிப்பார்களாக. உண்மைக்காக தாக்ஷிண்யத்தைக் கவனிக்காமல் எழுதுகிறேன்.) இக்காலத்திலிருக்கும்
உணர்ச்சியில் நூறில் ஒரு பாகமாவது அப்போதிருந்த தாயின் நமது தேசம் இக்கதிக்கு வந்திராது.
நம்மை ட புத்திசாலிகளாயிருந்தால் ஏன் நாம் இப்படி பரிதவிக்கிறோம்? அன்று, ஜஸ்டிஸ் ராமேஸம்
அவர்கள் ஒரு விசாரணையில் "இம்மாதிரி பால்ய விவாகம் முதலியவற்றால் நமது தேசம் இந்த
நிலைமைக்கு வந்துவிட்டது” என்று கூறினார். அக்காலத்திலிருந்த மூட எண்ணங்களும் மூடக்கொள்கைகளும்
ஒழிந்தால் தான் நமது தேசத்திற்கு விமோசனமுண்டு என்பதை அன்பர்கள் கவனிப்பார்களாக. அக்காலத்தில்
சூரியனின் சாயலைப் பார்த்து மணி சொல்வார்கள். இப்போது கடிகாரத்தைத் தேடுகிறார்கள் என்றார்
ஒரு பெரியார். ஆம், கடிகார மிருக்கும்போது, அதைக் கொண்டு சரியான மணியைக் கூறலாமென்றிருக்கும்
போது என் உத்தேச கணக்குச் செய்ய வேண்டும்? அக் காலத்தில் வானத்தின் நிறத்தைக் கொண்டு
மழைவரும் வராதென்று சொல்வார்கள். இப்போது சொல்வார்களா? என் சொல்லவேண்டும்? அதற்கென்று
தான் பயிற்சி பெற்ற வானசாஸ்திரிகள் தினத்திற்கு தினம் பத்திரிகைகளில் சீதோஷ்ண ஸ்தியைக்
குறித்து எழுதுகிறார்களே! அக்காலத்தில் தாமே எல்லா நல்ல விஷயங்களையும் வைத்துக்கொண்டார்கள்.
மற்றவருக்குக் கொடுத்தால் பலன் போய்விடுமென்று பயமாம். இக்காலத்தில் எத்தனை புத்தகங்கள்,
எத்தனை பத்திரிகைகள், எத்தனை உபன்னியாசங்கள். இதுவல்லவோ நல்ல காலம், அதுவல்லவோ மூடகாலம்.
வைத்தியனென்றால் மருந்தை இன்இன்னொருவருக்குச் சொல்லிக்கொடுப்பது பாபம் என்றிருந்தார்களே
அக்காலத்தில். அதுவோ நியாயம்? சில தினங்களுக்கு முன் ஒரு வைணவர் ஸ்ரீ பாஷ்யத்தை வாசித்துக்கொண்டிருந்தார்.
ஸ்மார்த்தனான நான் போனேன். உடனே படிப்பை நிறுத்திக்கொண்டு புத்தகத்தையும் மூடிவிட்டார்.
என்னவென்றால் ஸ்ரீ பாஷ்யத்தை வைணவால்லாத செவிகளில் கேட்கக்கூடாதாம்! இதுவோ ஸ்ரீ ராமானுஜருடைய
சித்தாந்தம்! அவர் ஒரு சாராருக்கா தமது பாஷ்யத்தை அருளினார்! நன்று நன்று. இப்படிப்
படித்தோர் எனப் பேர் வைத்திருப்பவர்கள் செய்ய, இப்பெரிய கிரந்தங்களை மேனாட்டார் தம்முடைய
பாஷைகளில் மொழிபெயர்த்துப் படித்து ஆனந்திக்கிறார்கள். நம் நிபுணர்கள் அதைத் தடுத்துப்
பார்க்கலாமே! அந்தோ உண்டிக் கழகு விருந்தோடுண்ணல் என்பதும் பொய்யோ! நம்மிடம் அமிருதம்
இருக்குமாயின் அதை பிறரும் அனுபவித்து ஆனந்திக்காவிட்டால் யாது பிரயோஜனம்? வாஸ்தவத்தில்
ஒன்று மேன்மையுள்ள தாயின், அது எல்லோராலும் அனுபவிக்கப்பட்டால் கெடுமா? இது நல்லது,
ஆனால் உனக்காகாது என்றால் அது என்ன படித்ததற்கு அழகா? அல்லது முட்டாள்
தனத்திற்கு ஓர் அத்தாக்ஷியா? நமது தேசம் இவ்வாறு க்ஷணித்து, இலக்கியங்கள் பாழாகி, அரிய
பெரிய நூல்கள் மாசடைந்து இருந்த இடந்தெரியாமற் போனதற்குக் காரணம் யாராயிருந்தாலும்
அவர்கள் பாபிகளென்றே சொல்ல வேண்டும்.
இதன் மூலமாக நான்
ஆனந்தபோதினி பத்திராதிபரைக்கேட்டுக் கொள்வது என்னவெனில், அவர் தன்னுடைய பத்திரிகையில்
தேர்ந்த நிபுணர்களைக்கொண்டு நமது பழைய இதிகாச புராணங்கள், அரிய பெரியகிரந்தங்கள் முதலியவற்றை
மொழிபெயர்ந்தாவது ஆனந்தன் வாயிலாக எழுதுவிக்க வேண்டுமென்பதே. தற்காலத்தில் வட இந்தியாவில்
இம்மாதிரி ஆங்கிலத்தில் செய்து வருகின்றனர். தமிழில் நாமும் செய்வது அத்தியாவசியமாகும்.
இதை இப்போதே ஆரம்பிக்கவும் வேண்டும். மதம் என்பது என்ன என்று இதிலிருந்து நமக்கெல்லோருக்கும்
தெரிய வேண்டும். இப்போது 'இந்து' என்னும் மதஸ்தன் சிதம்பரத்திற்குச் சென்று நடராஜனைக்
கண்டு களிப்புறுகிறான். பெரிய பாளயத்தில் ஆடு கோழியும் வெட்டுகிறான். முனீஸ்வரன், கங்கங்காவென்று
அனேக கிராம தேவதைகளுக்குப் பூஜைகள் படைக்கிறான். இதன் மத்தியில் அல்லா பண்டிகை வந்தால்
ஆலி ஜூலா வென்றும் கத்துகிறான். கத்தோலி திருவிழாவிலும் கலந்து கொள்கிறான். இந்து மதம்
இப்படியா யிருக்கவேண்டும்? கோயில்களில் விபூதி குங்குமம்
வழங்குவதோடு சரியாகிவிடுகிறது. விஷ்ணு ஸ்தலங்களிலும் அனேக சிவ ஸ்தலங்களிலும் வயிற்றுக்கும்
கிடைக்கிறது. செவிக்குணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படுமென்பது ஒரு வழியில்
உண்மையாகிவிடுகிறது. செவிக்கு உணவு தான் கிடையாதே. அதை வட்டியும் முதலும் வயிற்றுக்குக்
கொடுப்போமே யென்பது இவர்களுடைய கொள்கைபோலும்! நமது மதத்தில் இவ்வளவு கசுமலங்களிருக்கின்றன.
இவற்றை விலக்கினாலொழிய நமது மதம் rணித்துவிடுமென்பது நிச்சயம். பண்டித மாளவியாஜி சமீபத்தில்
விடுத்த செய்தியைப் பார்த்திருக்கலாம். அதில் தீண்டாதார் என்று சொல்லப்பட்டவருக்கு
மந்திர தீக்ஷை கொடுக்கும்படியாகக் கேட்டுக்கொண்டிருக்கிறார். கடவுளுடைய திருநாமத்தை
எந்த வாய்தான் உச்சரித்தாலும் அந்த நாமம் கெட்டுப்போகுமா? வால்மீகி யென்னும் வேடனுக்கு
நாரதர் ராமநாமத்தை உபதேசித்ததா லல்லவோ ராமாயணம் கிடைக்கப்பெற்றோம். அம்மாதிரி தீண்டாதவரி
லொருவன் என் அரிய விஷயமொன்றை எடுத்துக் காட்டக்கூடாது?
இந்தத்தீண்டாமைப்
பேயைப் பற்றிச் சிறிது சொல்லலாமெனத்தோன்றுகிறது. சில நூற்றான்டுகளுக்கு முன் 'யூதர்'
என்னும் ஜாதியாரை இம்சிப்பது ஐரோப்பியருக்கு விளையாட்டாயிருந்தது. யூதர்கள் பாலஸ்தீனா
என்னும் இயேசு பிறந்த தேசத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களே இயேசுவைச் சிலுவையிலிட்டுக்கொன்றவர்கள்.
அதன் பிறகு அவர்கள் நாட்டையிழந்து உலகெலாம் சுற்ற ஆரம்பித்தார்கள். வியாபாரத்தில் இவர்களுக்கு
நிகரில்லையெனலாம். இவர்கள் தம்முடைய சாமர்த்தியத்தால் விசேஷ பணம் சம்பாதித்து அரசர்களுக்கும்
பிரபுக்களுக்கும் கடன் கொடுத்து வந்தார்கள். அநேக சந்தர்ப்பங்களில் அரசர்கள் இவர்களைச்
சிறையிட்டுப் பலவித கொடுமைகளுக்குட்படுத்திப் பணத்தைப் பறிப்பார்கள். "நாதனற்று
ஊரூராய்த் திரிவார்கள்'' என்று கடவுள் இவர்களைச் சபித்திருக்கிறார் என்ற வேதவாக்கியத்தைப்
பிரமாணமாகக் கொண்டு இவ்வாறு செய்தார்கள். இந்த யூதரில் ஒருவனான ஷைலாக்' என்பவனே ஷேக்ஸ்பியர்
என்னும் ஆங்கில காளிதாஸர் இயற்றிய 'வெனிஸ் வர்த்தகன்' நாடகத்தில் கடன் கொடுப்பவன்.
இவனே அன்டோனியா என்னும் வர்த்தகனுக்கு 3000 பவுன்கள் கடன் கொடுத்து வட்டிக்குப்பதிலாக,
கடன் மூன்று மாதற்திற்குள் கொடுக்காவிட்டால் அவன் மார்பிலிருந்து ஒரு பவுன் எடை சதையைக்
கொடுக்க வேண்டுமென்றும் பத்திரம் வாங்கிக் கொண்டவன். (இக்கட்டத்தைத் தனியே எழுதினால்
வெகுஸ்வாரஸ்யமாயிருக்கும். கூடிய சீக்கிரத்தில் இந்நாடகத்தினின்றும் முக்கியகளங்களை
மொழிபெயர்த்து எழுத உத்தேசித்திருக்கிறேன். இவன் ஒரு சந்தர்ப்பத்தில் என்ன சொல்லுகிறான்
பாருங்கள். "யூதனுக்குக் கண்ணில்லையா, காதில்லையா. குத்தினால் அடித்தால் நோகாதா?
எங்களுக்கும் உங்களைப் போல் வியாதிகள் உண்டாவதில்லையா? கிறிஸ்தவரைப்போல நானும் மனிதன்தானே.
தீண்டாதார் என்னும்
மாந்தரும் மனிதர்தானே. தீண்டுபவரைப்போல பசி, தாகம், முதலியன உண்டு. மழை பெய்தால் அவர்களுக்கும்
குளிர்உண்டு, தேகம் நனைந்துபோகும். வெய்யிலின் கொடுமை அவர்களுக்கும் தெரிகிறது. ஏன்
அவர்களை மாத்திரம் தனியே வைக்க வேண்டும்? அவர்கள் பரம்பரை வேறெனச் சிலர் அபிப்பிராயப்படலாம்.
இருந்தாலென்ன? வெள்ளைக்காரரும் நாமும் ஒரே பாரம்பரியமா? எனினும் அவர்களைத் தொட நாம்
பின்வாங்குவதில்லை. ஆனால் ஒரு வித்தியாசம். வெள்ளைக்காரருக்கு நாம் அடிமையானதால் அவர்கள்
நம்மைத் தொட அனுமதி கொடுப்பதையே ஒரு பெரும் பதவியாக நாம் நினைக்கிறோம் போலும்! இத்தீண்டாதாரும்
அப்படி ஒருகால்
நமக்கு மேலே போய்விட்டால், ஒன்று அவர்கள் நமது மீது தயை கூர்ந்து நம்மைத் தொடச் சம்மதிக்க
வேண்டும், அல்லது நாம் தற்காலம் அவர்களை பத்தும் முறைக்குப் பிரதியாக நம்மைத் தீண்டாதாரென்று
பாராட்ட வேண்டும்! ஆனால் பின் சொன்ன மாதிரி அவர்கள் நம்மைச் செய்யமாட்டார்களென்பது
திண்ணம். அவர்களுக்குத் தெரியும் தீண்டாமையின் அவஸ்தை. அவர்கள் நம்மை விட மேம்பாடடைவது
அசாத்தியமல்ல. மேற்சொன்ன யூதர்கள் எல்லோராலும் இகழப்பட்டு தாழ்ந்தஸ்திதியில் ஒரு காலத்திலிருந்தது
போக தற்காலத்தில் உன்னத பதவியிலிருக்கின்றனர். உதாரணமாக சில வருஷங்களுக்கு முன் உலகத்தில்
எல்லாரிலும் பணக்காரர் என்று பெயர் பெற்ற மோஸஸ் ராத்ஸ்சைல்ட் (Moses Rothschild) என்பவர்
ஒரு யூதர் தான். நமது தேசத்து ராஜப்பிரதிநிதியாகவிருந்த லார்ட் ரீடிங்கும் ஒரு யூதரே.
நமது சென்னை மாகாண கவர்ன ராயிருந்து ராஜப்பிரதிநிதி பட்டத்தையும் சில காலம் வகித்த
லார்ட் கோஷன் பிரபுவும் யூதர், ஜர்மனி தேசத்தின் பிரபல ரஸாயன சாஸ்திரியும் ஸர். ஐசக்
நியூடன் என்பவர் கண்டுபிடித்த விசேஷ ஆகர்ஷண ஈக்தி' (Gravitation) என்பதைத்தப்பென்று
கண்டுபிடித்தவருமான ஐன்ஸ்டைன் (Einstein) என்பவரும் யூதமே. இன்னும் அனேக யூதர்கள் அமெரிக்காவிலும்
ஐரோப்பாவிலும் விசேஷ செல்வாக்குடனிருக்கிறார்கள். அதே மாதிரி தீண்டாதாரில் பலரும் சமயம்
வந்தால் நல்ல ஸ்திதிக்கு வரலாம். அமெரிக்காவிலிருக்கும் வெள்ளைக்காரர் நீக்கிரோவரை
ஒன்றுந் தெரியாத காட்டுமிராண்டிகளென நினைத்திருந்தனர். ஆனால் தற்காலம் அவர்களிலும்
அனேகர் வெள்ளைக்கார நாகரிகத்தைக் கைக்கொண்டு, உயர்தரக்கல்வியைப் படித்துத் தேர்ச்சி
பெற்றிருக்கிறார்கள். எதற்கும் சமயம் வாய்த்தால் அனுகூலங்கள் உண்டாகும்.
தீண்டாதாரை ஊருக்குள்
விடுவதில்லை. நல்ல ஜலம் கிடையாது. நல்ல உணவு கிடையாது. நல்லஆடைகள் கிடையா. அவர்கள்
சண்டாளர்களென்றும், பாபிகளென்றும் கிட்ட வந்தால் அந்த சண்டாளத் தன்ன நம்மைப் பிடித்துக்கொள்ளும்
என்றும் பயப்படுகிறோம். இவர்கள் பாபிகள் வம்சமென்றே வைத்துக்கொள்வோம். எந்தக் காலத்திலோ
மூதாதைகள் பாபிகளென்றால் இப்போது இவர்களைக் கண்டனம் செய்யலாமா? ஒரு மனிதனைக் குற்றவாளி
யென்றும் பாபியென்றும் தீர்மானிப்பதற்கு முன் எவ்வளவோ விசாரணைகளை நடத்துகிறார்கள்.
இயேசு ஒரு முறை பிரசங்கம் செய்துகொண்டிருந்தபோது அவரைப் பரீக்ஷிக்குமாறு சில பரிசேயர்கள்
ஒரு தாசியை அவர் முன்னிலையில் நிறுத்தி “ஐயா இவள் வியபசாரி. நாங்கள் கண்ணாரக்கண்டோம்.
இவளைக் கல்லாலடிக்க வேண்டாமா" என்றார்கள். இயேசு மறுமொழி பகராமல் கையிலிருந்த
தடியினால் தரையில் கோலம் போட்டுக்கொண்டு “உங்களில் யார் பாவஞ்செய்யாமலிருக்கிறானோ அவன்
இவள் மீது கல்லை யெறியட்டும்" என்று குனிந்த தலை நிமிராமல் சொன்னார். இது சாக்ஷாத்
பாபிகளைப்பற்றியாயின் அவருடைய வம்சத்தார் விஷயத்தில் பொருந்தவே பொருந்தாது. மனிதன்
வெளிக்கு எவ்வளவு பயபக்தியுடனிருப்பதாகத் தோன்றினாலும் அந்தரங்கத்தில் என்ன தீயச் செய்கைகளைக்
மை செய்ய உத்தேசிக்கிறானோ? ‘நான் யோக்கியன்' என்று சொல்லக்கூடிய மனிதர் வெகு வெகு சிலரே
என்பதிற் சந்தேகமில்லை. ஒருவனுடைய பாட்
டன் துரோகி, கள்ளன், கொலை செய்தவன் என்றால் அவனுடைய பேரனைத் தண்டிப்பது நியாயமாகுமா?
எத்தனையோ யுகங்களுக்கு முன் ஒருவன் பாபம் செய்தானோ செய்யவில்லையோ கடவுளுக்குத் தான்
வெளிச்சம்! அப்படியிருக்க அவனுடைய 'தற்காலத்து வம்சத்தவனைப் பழிப்பது நியாயமென்று எந்த
மனிதனும் சொல்லான். ஆதி சங்கரரும் இந்த சண்டாளத் தீண்டாமையைக் கருதின தாகத் தெரிகிறது.
ஒருசமயம் அவரிடம் ஒரு சண்டாளன் போனதாகவும் அவனை விலகிப் போகச் சொன்னதாகவும், அவன்
"என்ன! தேகம் அநித்தியமென்றும் ஆத்மாவே பிரம்மம் என்றும் வாதிக்கும் உமக்கும்
பேதமுண்டோ?" என்றானாம். சங்கரரும் வெட்கமுற்று அவனை ஆதரித்து
ஞானத்தைப் போதித்தாராம். சாக்ஷாத் ஈஸ்வரனே சிருஷ்டிக்குக் காரணமாயின் ஒரு சிருஷ்டிக்கும்
இன்னொன்றுக்கும் எப்படி பேதமிருக்கக் கூடும்? கபிலர் தமது அகவலில் எழுதியிருப்பது போல்
மேல் நான்கு ஜாதிக்குணவு நாட்டிலும் கீழ் நான்கு ஜாதிக்குணவு காட்டிலுமோ? ஒருவனுக்கு
விஷம் இன்னொருவனுக்கு அமிர்தமோ?
அப்படியே பாபிகளாயினும்
அவர்களை நாம் ஆதரிக்காமல் விட்டு விட்டால் இன்னும் அதிகமாகப் பாபத்தொழிலையே செய்வார்கள்
என்பது திண்ணம். மனிதனுடைய நடவடிக்கைகள் அவனுடைய இருப்பிடத்தைப் பொறுத்தன. ஒரு வேடன்
இரண்டு கிளிகளைப் பிடித்தானாம். ஒன்று தப்பி ஓடிவிட்டதாம். இன்னொன்றைக் கசாப்புக் கடையில்
விற்றானாம். முதல் கிளி ரிஷிஸ்வரர்களிருக்குமிடத்தை யடைந்ததாம். சில தினங்கள் சென்றன.
வேடன் காட்டுமார்க்கமாய்ப் போகையில் மரத்தின்மீது ஒரு கிளியைக் கண்டான். அது ரிஷிஸ்வரரிடமிருந்தது.
"ஸ்வாமீ! வாருங்கள். இளைப்பாறுங்கள். சற்றே தாகசாந்தி செய்து கொள்ளும்" என்றது.
ஆச்சர்யத்துடனே வேடன் பின்னும் நடந்தான். அங்கு இன்னொரு கிளியிருந்தது. அது கசாப்புக்
கடைக்காரனது. “யாரடாவன்! போ, போ, மூஞ்சிமேலே அடிப்பேன் போ'' என்று இதுபோல் சொல்லிற்று.
இதெல்லாம் சகவாசதோஷம். துர்நாற்றத்தையே சதா முகந்து கொண்டு, அசுத்த உடையே சதா உபயோகித்துக்
கொண்டு, குளிப்பதற்கும் தண்ணீர் போதுமான தில்லாமல் பட்டணங்களில் சாக்கடையோரங்களிலும்
கிராமங்களில் ஊருக்கு வெளியில் அசுத்தமான இடங்களிலும் வசித்து வந்தால் அவர்களுக்கு
எப்படி கதி மோக்ஷமுண்டு, எப்படி அவர்கள் முன்னேற்றமடைவது, எப்படி மற்றவர்களைப்போல்
"நல்லவர்” களாவது? காட்டு யானைகளைப் பழக்குவதற்கு பழகிய யானையொன்றைத் துணை கொள்ளுகிறார்கள்.
எதற்கும் உபாத்தியாயரும் உதாரணமும் இருக்கவேண்டும். ஒருவனை நல்லவனாக்க நல்லவர்களைக்
காணவும், அவர்களோடு பழகவும் விடவேண்டும். புலியையே பார்த்திராத ஒருவனை "புலியைப்போல்
சித்திரம் எழுது" என்றால் அவனுக்கு எப்படி ராத்தியமாகும்? நல்லவர்களென்று நாம்
கருதுவோரைத் தனியே வைத்து விட்டு தீண்டாதவரை "நல்லவர்கள் ளாய்விடுங்கள்'' என்றால்
எப்படி முடியும்? ஒருவனுக்கு நல்லதென்று தோன்றுவது இன்னொருவனுக்குத் தவறாயிருக்கலாம்.
உதாரணமாக மேனாட்டில் ஒருவரை யொருவர் சந்திக்கும்போது தலையிலிருந்து தொப்பியை எடுத்துவிடுவார்கள்.
நமது தேசத்தில் தலைப்பாகையோ தொப்பியோ போட்டுக்கொண்டிருப்பதே மரியாதை. மேனாட்டில் ஸ்திரீ
புருஷ பேதமின்றி கை குலுக்குதல் சம்பிரதாயமாயிருக்கிறது. நமது நாட்டில் அன்னிய ஸ்திரீயின்
கையைக் குலுக்கினால் பெரிய தவறாய்விடும். ஜப்பானில் முத்தமிடுவது பெரிய தவறாம்! நாம்
'நல்லவனாயிரு' என்று சொல்லிவிட்டால் போதாது. 'நல்லவன்' என்றால் என்ன அர்த்தமென்றும்
நல்லவனாகவும் இருந்து காட்டினால் தான் சரியாகும்.
தற்காலத்தில் கைதிகளை
நடத்துவவதிலும் ஒரு புதிய ஏற்பாடு வந்திருக்கிறது. முன்போல அவர்களைச் சிறையில் அடைத்து
மனிதரைப் பார்க்க வொட்டாமல் வைப்பதில்லை. அவர்களுக்கு ஒரு தொழிலைக் கற்பித்து உபன்னியாசங்கள்
முதலியன கொடுத்து யோக்கியமானவர்களோடு பழகவம் விடுகிறார்கள். பைத்தியம் பிடித்தவர்களைத்
தனியே வைத்தால் பைத்தியம் முற்றிவிடும். ஆகவே அவர்களை அடிக்கடி சமுத்திரக்கரை, முதலிய
ஜன சஞ்சாரமான இடங்களுக்குக் கொண்டு போவதோடு பாட்டு, பத்திரிகை முதலியவற்றையும் வழங்குகிறார்கள்.
இப்படிக் கைதிகளையும் ரோகிகளையும் நடத்தும்போது, ரோகமும் கொடுந்தொழிலும் இல்லாதமனிதரோடு
பழக என்ன ஆக்ஷேப மிருக்கிறது?
யானைக்கொரு காலம்
பூனைக்கொருகாலம் என்பது தீண்டாதார் என்பவர்களுடைய விஷயத்தில் உண்மையாய்விட்டது. மகாத்மா
அவர்கள் விஷயத்தில் எவ்வளவு ஆதரவுடனிருக்கிறார். அவர் இப்போது செய்யவிருக்கும் தியாகமானது,
தீண்டாதாரை உலகப் பிரசித்தமாக்கிவிட்டது. பிரசித்தமாக்குவதற்காக அவர் செய்யவில்லை.
இவர்கள் பரிதாபநிலைமை நம் நாட்டிலேயே அனேகருக்குத் தெரியவில்லை. இவர்களுக்கும் அன்னிய
நாட்டினருக்கும் இவர்களுடைய விஷயத்தில் உணர்ச்சி ஏற்படவேண்டும். நமது தேகத்தில் ஒரு
பாகம் அசுத்தமாகவோ அசௌக்கியமாகவோ விருந்தால் அதை முதலில் சுத்தமோ சிகிச்சையோ செய்ய
வேண்டும். இதை மூடி மூடி வைத்துவிட்டு எல்லாம் சரியாகவிருக்கிறதென்று நெருப்புக்கோழித்
தன்மையாயிருப்போமானால் நாளடைவில் வியாதி பெருகிவிடும். ஏற்கனவே தீண்டாமைப்பேயின் அட்டகாசம்
அதிகமாயிருக்கிறது.
போதாவது இதன் கொட்டத்தை யடக்கிவிடாவிட்டால் வெகு சிரமமாய்விடும். ஆகவே, மகாஜனங்கள்
இவ்விஷயத்தில் கருத்துடன் வேலை செய்து அறியாமையினால் செய்யும் அக்கிரமங்களை ஒழித்து,
தீண்டாதார் என்று ஒரு பிரிவை யுண்டாக்காமல் அவர்களை நமது கோவில்கள் குளங்கள், வீதிகள்,
வீடுகள் முதலிய இடங்களுக்குத் தாராளமாய் வரவிட வேண்டும். நம்மைவிட அவர்கள் எந்தெந்த
விஷயத்தில் தாழ்ந்தவர்களே ளா அவற்றில் புத்தி புகட்டி முன்னுக்குக் கொண்டுவர வேண்டும்.
தீண்டாதவர்கள் வேறு
மதத்திற்குள் புகுந்துவிட்டால் அவர்களோடு சமத்துவம் பாராட்டுகிறோம். ஆதிதிராவிடன் கிறிஸ்
தவனோ மகம்மதியனோ ஆகிவிட்டால் அவன் நம்மோடு தாராளமாய்ப் பழகலாம். இதன் காரணமென்ன? அந்த
மதங்களுக்கிருக்கும் சக்தி நம்முடைய மதத்திற்கில்லையா? அவை புனிதனாக்கும் போது நமது
மதம் என் செய்யமுடியாது? எவ்வளவு பாபங்கள் செய்தாலும் கங்கா, யமுனா முதலிய புண்ணிய
நதிகளில் ஸ்நானஞ் செய்தால் அவை விலகிப் போகுமென்றிருக்கிறதே. இந்ததிகளுக்கும் இத்தீண்டாதாரைப்
புனிதமாக்கச் சக்தியில்லையா? மந்திரமாவது நீறு என்கிறீர்களே. அந்த நீருக்கும் சக்தி
யில்லையா? இவற்றிற்குச் சக்தி யில்லை, நமக்கு இத்தீண்டாதாரை சேர்த்துக்கொள்ள மனமில்லையாவென்பதை
அன்பர்கள் யோசிக்க வேண்டும். இது வரையிலிருந்தது எப்படிப்போனாலும் போகட்டும். இனிமேலாவது
நாம் இவ்வனாதைகளிடம் மனமிரங்கி அவர்களை எற்றுக் கொண்டு ஆதரிக்கவேண்டும்.
கடவுளை நாம் தொழுவதும்
காலையிலும் மாலையிலும் ஜபம் செய்வதும்
எதற்காக? அதில் ஏதோ ஒரு பிரயோஜனமிருக்கிறதென்பதற்காகவே. சிறுவயது முதற்கொண்டே நமக்குக்
கடவுள் இருக்கிறாரென்ற உணர்ச்சி யுண்டாகிறது. ஒவ்வொரு தேசத்திலும் ஒவ்வொரு காலத்திலும்
கடவுளைத் தொழாதவர் கிடையாது. இப்பிரபஞ்சத்திற்கு ஒரு காரணமிருக்க வேண்டுமென்றும் அக்காரணமே
கடவுளெனவும் கூறுகிறார்கள். கடவுளில்லையென்னும் நாஸ்திகரும் இக்காரணத்தை ஒப்புக் கொள்ளுகிறார்கள்.
அவர்கள் அதன் பெயர் கடவுளில்லை இயற்கையென்கிறார்கள். இதுதான் வித்தியாசம். ராமதீர்த்தர்
ஒரு பிரசங்கத்தில் இதற்கு ஒருதாரணம் கூறியிருக்கிறார். முலாம்பழம் ஒன்றை மூன்று சிறுவர்கள்
பார்த்தார்கள் ஆங்கிலேயன்' ஹிந்தி பேசுபவன், தமிழ் பேசுபவன் ஆகிய மூவர். ஆங்கிலேயன்
அது வாடர்மெலன் (Water
Melon) என்றான். ஹிந்தி பேசுபவன் அதை ‘தர்பூஜ்' என்றும், தமிழன் முலாம்பழமென்றும்
சொன்னார்கள். மூவருக்கும் தர்க்கமுண்டாயிற்று. கடைசியில் வேறொருவன் வந்து மூன்று பெயரும்
ஒன்றையே குறிக்கிறதென்று சொல்லி சமாதானப்படுத்தினானாம். அது போல் நாஸ்திகர்கள் “கடவுளில்லை
ஆனால் இயற்கை தான் பிரபஞ்சத்தின் காரண"மென்று கூறுவதால் இயற்கைக்குக் காரணமென்னவென்று
சொல்லக் கடமைப் பட்டவர்களாகிறார்கள். இப்படி போய்க் கொண்டிருந்தால் முடிவேற்படாது.
ஏதோ ஒரு பரம்பொருள் - "ஏகம் சத்; விப்ரா பகுதாவதந்தி" யென்று சொல்வதுபோல்
(சத்து ஒன்றுதான். அதைப் பண்டிதர்கள் பலவாறாகச் சொல்லுகிறார்கள்) - இருக்கிற தென்பதை
எல்லோரும் ஒத்துக் கொள்ளுகிறார்கள். கடவுளுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம் சம்பந்தமிருக்கிறதா
இல்லையா? அவர்நமக்குச் சினேகிதரா எதிரியா?
கடவுளுக்கும் நமக்கும்
சம்பந்தமே இல்லாவிடில் நாம் அவரைப்பற்றிசிந்திக்கவே மாட்டோம். அவர் இருந்தாலும் இல்லாவிட்டாலும்
ஒன்றுதான். ஆகையால் ஒருவிதமான சம்பந்தம் இருக்கத்தான் வேண்டும். அவர் நமக்கு எதிரியா
சினேகிதராவெனில், எதிரியா யிருப்பின் நாம் அவருக்குப் பூஜைகள் செய்வதால் பிரயோஜனப்படாது.
விரோதம் பாராட்டுபவனுக்கு நாம் எவ்வளவு நன்மை செய்தாலும் அவன் மனமிரங்காது. இரங்கினாலும்
நம் மீது அவனுக்கு நம்பிக்கையுண்டாகாது. கடவுளும் அப்படியே நம்மிடம் பராமுகமாயிருப்பார்.
ஆகவே ஆகவே அவர் நம்மிடம் பிரீதியுடையவராயிருத்தல் வேண்டும். ஆனால் அவர் நம்மிடம் ஏதேனும்
எதிர்பார்க்கிறாரா? அன்று அன்று. கீதையில் பகவான் எனக்குச் சித்தியாக வேண்டிய தொன்றுமில்லை.
இருந்தாலும் நான் உழைக்கிறேன். நான் உழைக்காவிட்டால் உலகம் நாசமாய்ப்போய் விடும். ஜனங்கள்
என்னைப் பார்த்துத் தாமும் சும்மாயிருந்து விடுவார்கள்'' என்கிறார். கைம்மாறு எதிர்பார்க்காமலே
அவர் உலகத்திற்காக உழைத்து வருகிறார். நமக்கு வழிகாட்டும் பொருட்டும் உற்சாகப்படுத்தும்
பொருட்டும் அவர் உழைக்கிறார். நாம் ஏன் உழைக்க வேண்டும்? இவ்வளவு உழைத்தும் ஒரு பிரயோசனமுமில்லாமல்
கடைசியில் ஒரு பிடி சாம்பராய் விடுகிறோமே. நாம் உழைப்பது எதற்காக. இவ்வுலகமே மாயை.
அதில் உள்ளயாவும் மாயையாயிற்றே நாம் ஏன் இந்த மாயை யுலகத்தில் பின்னும் பின்னும் மாயைச்
செய்கைகளைச் வேண்டும்? உதாரணமாக, நாம் சும்மா விருப்பதாக வைத்துக்வகாள்வோம். சிறிது
நேரத்தில் பசியெடுக்கிறது. பிச்சையெடுத்தாவது திருடியாவது சாப்பிட வேண்டியிருக்கிறது.
பிச்சையெடுப்பதும் திருடுவதும் தொழிலே. வேலை செய்யாமல் இருக்கமுடியாது. எது மாயையாயினும்
பசிமாத்திரம் மாயையல்ல யென்று சொல்லலாம். அந்தப் பசியை நீக்க நாம் செய்யும் தொழிலும்
மாயையல்ல. வெகு வெகு உண்மையானதே. உண்பதும் மாயையல்ல. ஏனெனில் சமையலில் ஏதேனும் பழுதிருந்தாலும்
நமக்குக் கோபம் வந்து விடுகிறது. இதுவும் மாயையல்ல கோபமும் மாயையல்ல. அச்சமயம் நாம்
செய்வதின்னதென்பதே தெரிவதில்லை. சாப்பிட்ட பின் தூக்கம் வருகிறது. இத்தூக்கம் மாயையா?
அதன் அவசியத்தைத் தூக்கம் வராமல் திண்டாடுபவரைக் கேட்டால் தான் தெரியும். ஓரிரவு ரயில்
பிரயாணஞ்சென்று கூட்டமிருப்பதால் தூங்காமலிருந்தால் அந்த சுகமே வேறு. ஊண் உறக்கம்,
வேலையொன்றும் மாயையல்ல. எல்லாம் உண்மையே. வேலை செய்வது நல்ல உணவிற்கும் உறக்கத்திற்குமே.
நாம் நஷ்டப்பட்டு வேலை வேலை செய்யாவிட்டால் சம்பாதிக்க முடியாது. சம்பாதித்தால் தான்
நல்ல உணவும், வாசஞ்செய்ய, தூங்க நல்ல வீடும் கிடைக்கும். நாம் வேலை செய்யும் உத்தியோக
சாலை அதிலிருக்கும் மற்றைய உத்தியோகஸ்தர்கள் மாயையல்ல. உலகமே மாயையல்ல! இங்கிருக்கும்
பிணியும், அவஸ்தையும், திண்டாட்டமும் மாயையாகுமோ? எல்லாம் உண்மையாகத்தானிருக்க வேண்டும்.
இவையெல்லாம் ''நோகாமல் அடிக்கிறேன். ஓயாமல் அழு'' என்பதுபோல் விளையாட்டல்ல. சாதாரணமாக
வைசூரி, காலரா முதலிய பிணிகள் ஊரில் புகுந்து நூற்றுக்கணக்காக மனிதர் இறக்கும்போது
" அம்மன் விளையாட்டு' என்று சொல்லுவார்களாம். அம்மன் விளையாட்டே இப்படி யிருந்தால்
அம்மனுடைய கோபம் எப்படி இருக்குமோ? இவ்வுலகம் மாயையாயின் உண்மை உலகம் எப்படி இருக்குமோ!
நிற்க, நமக்கும்
(அதாவது உலகமாந்தர்களுக்கும்) உலகத்திற்கும் என்ன சம்பந்தம்? நாம் இவ்வுலக வாசிகளாயிருப்பது
வாஸ்தவந்தான். ஆயினும் இதற்கு முன் நாம் மனித கோஷ்டி எங்கிருந்தது? இவ்வுலகத்திற்கு
வேறு இடத்திலிருந்து வந்தோமா? இவ்வுலகத்திற்கும் நமக்கும் விரோதமா சினேகமா? நாம் வேறு
உலகத்திலிருந்து இங்கு வந்ததாக வைத்துக்கொள்வோம். அல்வுலகத்தை விட இவ்வுலகத்தின் மேல்
நமக்கு அதிக பற்றிருக்க வேண்டும். ராதாரணமாக
நமக்கெதிரே ஒரு வஸ்து இருக்திறதென்றால் என்ன அர்த்தம்? அதை நாம் நம்முடைய கண்களால்
பார்க்கிறோம். அதுபோல் உலகமிருக்கிறதென்றால் நம்மைப்போல் பகுத்தறிவுள்ள பிராணிகளால்
பார்க்கப்படுகிற தென்று அர்த்தம்.
ஆனந்த போதினி – 1932 ௵ -
பிப்ரவரி, மே, ஜுன், ஜுலை, செப்டம்பர், அக்டோபர், ௴
No comments:
Post a Comment