உள்ள நூல்
முன்னுரை.
மனிதனுடைய வாழ்க்கை
மூன்று வகைப்படும். அம் மூவகை வாழ்க்கைகளாவன உடல் வாழ்க்கை, உள்ள வாழ்க்கை, உயிர்வாழ்க்கை
என்பன. அவைகளைப் பற்றிக் கூறும் நூல்கள் முறையே, உடல் ஏல்' 'உள்ள நூல்' 'உயிர் நூல்'
எனப்படும். ஆங்கில மொழியில் அவைகள் முறையே 'பிஸியாலஜி' (Physiology), 'ஸைகாலஜி'
(Psychology)
'ஸையன்ஸ் ஆப் ஸ்பிரிசுயாலடி' (Scionce of Spirituality) என்று
சொல்லப்படுகின்றன.
இக்காலத்தில் நம்
தமிழ் மொழியில் இம் மூவகை நூல்களும் தனித்தனியாக வழக்காற்றில் இல்லை. பழைய தமிழ் வைத்திய
நூல்களில் இறந்தவை போக இருப்பன சிலவற்றுள் உடலின் தொழின்முறை பற்றிய சில உண்மைகள் ஆங்காங்கு
இருக்கின்றனவேபொழிபத் தனித்த “உடல் நூல்'' அல்லது ''உடல் தொழில் நூல்" தமிழ் மொழியில்
இல்லை. அவ்வாறே தமிழ்ச் சமய நூல்களில் உள்ளத்தைப் பற்றிய சில குறிப்புக்கள் காணப்படுகின்றன
வேயொழிய தனித்து “உள்ள நூல்" ஒன்றேனும் கிடையாது. உயிரைப் பற்றிய குறிப்புக்கள்
சமய தூல்களில் சிதறிக் கிடக்கின்றனவேனும், தனிப் பட்ட "உயிர் நூல்'" தமிழ்
மொழியில் இல்லை யென்றே தெரிகின்றது.
தமிழ் நாடும் தமிழ்க்
கலையும் சிறந்து விளங்கவேண்டுமானால் இம்மூன்று நூல்களும் தமிழ் மொழியில் அமைக்கப்பட
வேண்டும். எனவே, இம்மூன்று நூல்களில் ஒன்றாகிய உள்ள நூலை, எளிய முறையில் எழுதத் துணிந்
துள்ளேன். இதில் குற்றங்கள் இருப்பின் பெரியோர்கள் அவைகளைப் புறக்கணித்து நலங்களையே
கொள்வார்கள் என்று நம்புகின்றேன. பரம்பொருளாகிய கடவுள் சிறியனாகிய என்னை இப்பணியில்
ஊக்கியருளுமாறு அவரை வழுத்துகின்றேன்.
தோற்றுவாய்
இவ்வுள்ள நூலில்
நாம் கற்கவேண்டிய பொருள்கள் பலவுள். இது சிறுநூலாதலின் இங்கு சில பொருள்களைப் பற்றிய
ஆராய்ச்சியே எடுத்துக்கொள்ளப்படும். ஒவ்வொரு பொருளாராய்ச்சியும் ஒவ்வொரு இயலாக அமைக்கப்படும்.
முதலில் "அறிவியல்" தொடங்கப்படுகின்றது.
அறிவியல் (Intelligence)
அறிவு என்னும் சொல்
இவ்விடத்தில் எப்பொருளில் பயன்படுத்தப்படுறது என்று முதலில் ஆராய வேண்டும். நம் தமிழ்
மொழியில் அறிவு என்னும் சொல் புலனையும் ஆன்மாவையும் பகுத்தறிவையும் கடவுளையும் குறிக்கும்.
'ஓர் அறிவு உயிர்' ஆறு அறிவு உயிர்' என்பன போன்ற சொற்றொடர்களில் அறிவு என்னும் சொல்
புலனறிவைக் குறிக்கும். "அறிவுகாண் ஆன்மாத்தானே'' என்பதுபோன்ற இடங்களில் அச்சொல்
ஆன்மாவைக் குறிக்கும். பொதுப்பட்ட பேச்சு முறையில் அறிவு என்பது பகுத்தறிவைக் குறிக்கும்,
சிற்சில இடங்களில் அறிவு என்னும் சொல் கடவுளையும் குறித்து வழங்கப்பட்டிருக்கின்றது.
எடுத்துக்காட்டாகத் தாயுமானாருடைய "அரும் பொனே'' என்னும் முதற் குறிப்புள்ள பாட்டில்
“அன்பான அறிவே" என்னும் தொடரில் வரும் அறிவு என்னும் சொல் கடவுளைக் குறிக்கின்றது.
ஆனால் இவ்விடத்தில் அது பகுத்தறிவைச் சுட்டுகின்றது. ஆங்கில மொழியில் அது "இண்டெலிஜன்ஸ்''
என்று சொல்லப்படுகின்றது.
எண்ணரிய பல பிறவிகளில்
மானிடப் பிறவி தான் அறிவில் சிறந்தது. அச்சிறப்பு அதனுடைய இயற்கைத் தன்மையால் உண்டானது.
தவளைப் பிறவியை விட எலிப் பிறவிக்கும், எலிப் பிறவியைவிட நாய்ப் பிறவிக்கும், அதனைவிட
குரங்குப் பிறவிக்கும், அதனை விட மானிடப் பிறவிக்கும் அறிவு அதிகம். ஆனால் பிறப்பால்
எலியாக யிருந்தாலும் எல்லா எலிகளுக்கும் அறிவு ஒரே அளவாக இல்லை. அவ்வாறே பிறவியினால்
மக்களாயினும் எல்லா மக்களுக்கும் அறிவு ஒரே அளவில் இருப்பதில்லை ஒரு பிறப்பின்பாற்பட்ட
உயிர்களுள் ஒன்றற்கொன்று அறிவு ஏற்றத் தாழ்வு நேர்வது எக்காரணம் பற்றி? வரன் முறையின்
பயனாகவா? அல்லது சுற்றத்தின் பயனாகவா? என்பதுபோன்ற கேள்விகளுக்கு விடை பொடுக்க நாம்
முயற்சிக்க வேண்டும்.
முதலில் நாம் அறிவை அள4 கும் வழியைத் தெரிந்துகொள்ள வேண்டும். அப்பொழுது அறிவின் உண்மையான
தன்மையையும் நாம் அறிந்தவர்களாவோம்,
அறிவளவை (Intelligence
Test)
ஒருவனுடைய அறிவை
நாம் அளக்க வேண்டுமானால், அவனுடைய அறிவுக்கும், சராசரி அவ்வயது மனிதனுடைய அறிவுக்கும்
உள்ள அளவை அறிய வேண்டும். எடுத்தக்காட்டாக, மூன்று வயதுடைய ஒரு குழந்தையைக் கவனிப்போம்.
அந்தக் குழந்தைக்குச் சில பழக்கமான பொருள்களைக் காட்டி, அவைகளின் பெயர்களைக் கூறு மாறு
நாம் கேட்டால், அக்குழந்தை ஐந்துக்கு மூன்று வீதம் பொருள்களின் பெயர்களைக் கூறினால்
அது றினால் அது சராசரி மூன்று வயதுக் குழந்தையின் அறிவைப் பெற்றிருக்கின்றது என்று
கூறலாம். எப்பொழுதெனில், அவ்வயதுடைய பல குழந்தைகள் அதே பொருள்களில் ஐந்துக்கு மூன்று
வீதம் சரியான பெயர்களைக் கூறி யிருப்பின். அவ்வாறே, பத்து வயதுடைய பிள்ளையின் அறிவை
நாம் அனக்கவேண்டுமாயின் அவ்வயதுடைய பல பிள்ளைகளை நாம் முன்னரே ஆராய்ந்து ஒரு சராசரி
திட்டத்தை அமைத்து வைத்திருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக மேலே, சில திட்டங்களைக்
குறிப்பிடுவோம்.
(1) மூன்று வயதுக்
குழந்தைகள்: பெயர் கூறும் ஆராய்ச்சி - 5- தெரிந்த பொருள்களில் 3 பெயர்களைக் கூறவேண்டும்.
(2) ஆறு வயதுப் பிள்ளைகள்:
படக் குற்றங் கூறும் ஆராய்ச்சி: - 4- குற்றமுள்ள படங்களில் 3 படங்களின் குற்றங்களைக்
காட்டவேண்டும்.
(3) எட்டு வயதுப்
பிள்ளைகள்: உவமை கூறும் ஆராய்ச்சி: - கட்டையும் அதன் கரியும் எவரையில் ஒத்திருக்கின்றன?
என்பதுபோன்ற கேள்வி+ள்-- 4-கேள்விகளுக்கு 2 சரியான விடைகள் கூறவேண்டும்.
(4) பன்னிரண்டு வயதுப்
பிள்ளைகள்: சொற்பொருள் கூறும் ஆராய்ச்சி: -
100 சொற்களில் 40 சொற்களுக்கேனும் சரியான பொருள் கூறவேண்டும்.
உள்ள வயது -
Mental Age
12 வயதுள்ள ஒரு சிறுவனுடைய
அறிவை மேற்காட்டிய அறிவளவைத்திட்டத்தால் ஆராயும் பொழுது, சராசரி 10 வயதுள்ள சிறுவனது
அறிவை ஒத்திருந்தால், அச்சிறுவனுக்கு உள்ள வயது 10 என்று சொல்லப்படும். அவ்வாறே 8 வயதுள்ள
ஒரு சிறுவன் 10 வயதுள்ள சிறுவனுடைய அறிவைப் பெற்றிருந்தால் அவனுடைய உள்ள வயது 10 என்று
10 என்று சொல்லப்படும். முதலில் பேசப்பட்ட சிறுவன் மந்தன் என்றும், இரண்டாவதாகப் பேசப்பட்ட
சிறுவன் கூரியன் என்றும் சொல்லப்படுவார்கள். தன்னுடைய உடல் வயதும் உள்ள வயதும் ஒத்துள்ள
ஒருவன் சராசரி அறிவுள்ளவன் என்று பேசப்படுவான்.
அறிவு எண் — Intelligence
Quotient
ஒருவனுடைய உள்ள வயதை
உடல் வயதால் வகுத்தால், பெறப்படும் எண் அறிவு எண் என்று சொல்லப்படும். இது இங்கிலீஷ்
மொழியில் ண்டெலிஜன்ஸ் கோஷண்ட் (Intelligence Quotient) என்று வழங்கப்படும். 12 உடல்
வயதுள்ளவன் 12 உள்ள வயதுடையவனானால் அவனது அறிவு எண் 12 / 12 =1, 10 உடல் வயதுள்ளவன்
12 உள்ள வயதுடையவனானால் அவனது அறிவு எண் 12 /10 = 6 /5. 12 உடல் வயதுள்ளவன் 10 உள்ள
வயதுடையவனானால் அவனது அறிவு எண் 10 /12 = 5/ 6. இவ்வாறு, ஒருவனுடைய உள்ள வயது அவனுடைய
அறிவின் அளவையும், ஒருவனுடைய அறிவு எண் அவனுடைய சராசரிக்கு மேற்பட்ட அல்லது குறைபட்ட
அறிவின் அளவையும் காட்டுகின்றன.
தொழிலளவை - Performance Tests
ஒரு சிறுவனுடைய அறிவை
தொழிலாலும் அறியலாம். ஒரு மரப் பலகையில் பல தொளைகள் இருக்கின்றன. அவைகள் வட்டமாகவும்,
முக்கோணமாகவும், நாற்கோணமாகவும், ஐங்கோணமாகவும் - இன்னும் பல வடிவங்களாகவும் இருக்கின்றன.
அவைகளுக்கு ஏற்ற மர உருவங்கள் ஒரு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு சிறுவன்
அவ்வுருவங்களைத் தொளைகளில் பொருந்தும்படியாகக் கூறப்படுகிறான், அவ்வாறு அவன் செய்வதற்கு
எவ்வளவு நேரம் ஆகின்றது என்பதையும், அவ்வேலையில் அவன் எவ்வளவு தவறுகள் செய்கின்றான்
என்பதையும் நாம் கவனிக்கவேண்டும்.
தவறுகளாவன, வட்டமான தொளையில் முக்கோணமான பொருளைப் பொருத்த
முயலுதல் முதலியன. இவ்வாறு பல வயதுள்ள பல சிறுவர்களை ஆராய்ந்து ஒவ்வொரு வயதுக்கும்
ஒவ்வொரு கால அளவையும், தவறு எண்ணிக்கை அளவையும் சராசரியாக நாம் அமைத்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது; ஒரு குறிப்பிட்ட சிறுவனை நாம் கவனிக்க வேண்டின், அவனை இவ் வேலை யைச் செய்யுமாறு
கூறவேண்டும். அவனுடைய அளவையும் தவறு எண்ணிக்கையையும் தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு,
நாம் முன்னரே தயாரித்து வைத்துள்ள அமைப்புக்களில், இச்சிறுவனுக்குரிய வயது முறையோடு
இவனது கால அளவையும் தவறு எண்ணிக்கையையும் நாம் ஒப்பிட்டுப் பார்த்து, இவனது அறிவின்
ஏற்றத் தாழ்வுகளை அறியலாம்.
ஆனந்த போதினி – 1933 ௵ - ஏப்ரல் ௴
No comments:
Post a Comment